About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, June 28, 2018

186. செண்பகமே, செண்பகமே!

செண்பகமும் ஜகதுவும் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள். ஒவ்வொரு உரையாடலும் அரை மணி நேரமாவது நடக்கும். 

கைபேசி நிறுவனங்கள் வழங்கும் 'எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்' திட்டங்களை இருவரும் அதிக அளவு பயன்படுத்திக் கொண்டனர்.

பேச்சு பெரும்பாலும் அவர்கள் இருவருக்கும் தெரிந்தவர்களைப் பற்றித்தான் இருக்கும்.

மற்றவர்களின் பிரச்னைகள், அவர்கள் செய்த தவறுகள், முட்டாள்தனமான செயல்கள், அவர்கள் பட்ட அவமானங்கள், அவர்களது நியாயமற்ற செயல்பாடுகள் ஆகியவை பற்றித்தான் இருக்கும்.

சில சமயம் ஒருவருக்குத் தெரிந்த விஷயத்தை இன்னொருவரிடம் சொல்வார்கள். சில சமயம் இருவருக்குமே தெரிந்த விஷயத்தை அலசுவார்கள்.

தினசரி தொலைபேசி உரையாடல் தவிர வாரம் ஒருமுறை கோவிலில் சந்தித்துக் கொள்வார்கள். கோவிலில் தரிசனம் முடிந்ததும் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு மணி நேரமாவது பேசுவார்கள். 

அந்த வாரம் தொலைபேசியில் பேசிக்கொண்ட விஷயங்களை அசை போடுவது தவிர, புதிய நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால் அவற்றையும் அலசுவார்கள்.

மற்றவர்களின் குறைகளைப் பற்றிப் பேசி மகிழ்வதே இவர்கள் நட்பைப் பெரும் அளவில் வளப்படுத்தி வந்தது என்று சொல்லலாம்.

"அப்புறம்?" என்றாள் ஜகது.

"புதுசா என்ன இருக்கு? எல்லாம் பழைய கதைதான்" என்று அலுத்துக் கொண்டாள் செண்பகம்.

"ஜானகி வாசல்ல வந்த புடவைக்காரர்கிட்ட ஒரு மட்டமான புடவையைப் பட்டுப் புடவைன்னு நெனச்சு ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வாங்கி ஏமாந்தாளே, அது அவ புருஷனுக்குத் தெரியுமா?" என்று எடுத்துக் கொடுத்தாள் ஜகது.

"ஆம்பிளைங்களுக்கு இதெல்லாம் என்ன தெரியும்? ஏதோ பொண்டாட்டி சீப்பா புடவை வாங்கிட்டான்னு நெனச்சுக்கிட்டிருப்பாரு. நாளைக்கு வேற ஏதாவது பட்டுப்புடவையைக் காட்டி, இதுதான் நான் குறைஞ்ச விலைக்கு வாங்கினதுன்னு சொன்னா கூட அவரால கண்டு பிடிக்க முடியாது."

"நல்ல வேளை, அவ வீட்டில மாமியார், நாத்தனார் யாரும் இல்ல. இருந்திருந்தா அவ சாயம் வெளுத்திருக்கும்!"

"சாயம் வெளுத்தித்திருக்கும்னு நீ சொன்னதும் ஞாபகம் வருது. சுகுணாவோட புருஷன் ரெண்டு மாசமா வேலைக்குப் போகாம வீட்டிலே உக்காந்துக்கிட்டிருக்காரு இல்ல?"

"ஆமாம். அவ கூட, அவரு ஏதோ பரீட்சை எழுதறதுக்காக லீவ் போட்டுட்டுப் படிச்சுக்கிட்டிருக்காருன்னு சொன்னாளே!"

"அதெல்லாம் பொய்யின்னு இப்ப தெரிஞ்சு போச்சு. அவரு ஏதோ தில்லுமுல்லு பண்ணிட்டார்னு அவர் கம்பெனியில அவரை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களாம். திரும்ப எடுத்துப்பாங்களான்னு தெரியல. இதை மறைக்கத்தான், படிக்கிறாரு, பரீட்சை எழுதப் போறாருன்னு கதை விட்டிருக்கா அவ!"

"எப்படிப் புளுகியிருக்கா பாரேன்! நமக்கெல்லாம் இப்படிப் பொய் சொல்ல வருமா?"

இந்த ரீதியில் உரையாடல் இன்னும் சில நிமிடங்கள் இன்னும் சில பெண்களைப் பற்றித் தொடர்ந்தது.

செண்பகத்துக்கு நீண்ட நேரம் ஜகதுவின் கைபேசித் தொடர்பு கிடைக்கவில்லை. 

'வாடிக்கையாளர் வேறொருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்' என்ற அறிவிப்புதான் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.

ஒருவேளை ஜகதுவின் கைபேசியில் ஏதேனும் பிரச்னை இருக்குமோ என்று நினைத்து, செண்பகம் ஜகதுவின் லேண்ட்லைனுக்கு ஃபோன் செய்தாள்.

ஜகதுவின் பெண்தான் ஃபோனை எடுத்தாள். "அம்மா செல்ஃபோன்ல பேசிக்கிட்டிருக்காங்களே. கூப்பிடறேன் இருங்க" என்று சொல்லி விட்டு ரிசீவரை எடுத்து வைத்து விட்டு "அம்மா, ஃபோன்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள்.

தொலைபேசிக்குச் சற்றுத் தொலைவிலிருந்து ஜகது செல்ஃபோனில் யாரிடமோ பேசுவது செண்பகத்துக்குக் கேட்டது. 

முதலில் அசிரத்தையாகக் காத்திருந்த செண்பகம், ஜகது தன் பெயரைக் குறிப்பிட்டது காதில் விழுந்ததும், கூர்ந்து கவனித்தாள். ஜகது பேசிக்கொண்டே தொலைபேசியை நோக்கி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்ததால், அவள் குரல் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் கேட்டது.

"....ஆமாம். நம்ம செண்பகம்தான்! நம்ப முடியல இல்ல? அதான், அவ புருஷனுக்குத் தெரியாம பணத்தை அங்கே இங்கேன்னு நிறைய ஒளிச்சு வச்சிருக்கா. பழைய 500, 1000 ரூபா நோட்டு செல்லாம போனதும், ஒவ்வொரு டப்பாவாத் தேடி ஒளிச்சு வச்சிருந்த பணம் இருபதாயிரம் ரூபாயை மாத்திட்டா...அவ புருஷன்கிட்ட சொல்லிட்டுத்தான். அத்தனை பணத்தை அக்கவுண்ட்டிலதான போடணும்! அவருக்குத் தெரியாம போகுமா?...பின்ன? திட்டாம இருப்பாரா? 'நான் ஆயிரம், ரெண்டாயிரம் ரூபா இல்லாம எத்தனையோ தடவை கஷ்டப்பட்டிருக்கேன். நீ இருபதாயிரம் ரூபாயைப் பதுக்கி வச்சுக்கிட்டு, எனக்கு நெருக்கடியான நேரங்கள்ள கூட உதவி செய்யாம இருந்திருக்கே!'ன்னு சொல்லி காச்சு மூச்சுன்னு கத்தி இருக்காரு. எங்கிட்ட சொல்லி அழுதா...வேடிக்கை என்னன்னா, அவளுக்குத் தெரியாம ஐயாயிரம் ரூபாய்க்கு பழைய நோட்டு வேற ஒரு டப்பால இருந்திருக்கு! அது காலி டப்பா, ரெண்டு நாள் முன்னாலதான் எதேச்சையாத் திறந்து பாத்திருக்கா. அவளுக்கு ரொம்ப ஷாக் ஆயிடுச்சு...இப்ப ஒண்ணுமே பண்ண முடியாதே!...புருஷன்கிட்ட எப்படிச் சொல்லுவா? சொன்னா, கிழி கிழின்னு கிழிச்சுட மாட்டாரு?...இப்படியா ஒத்தி இருப்பா?...நாமெல்லாம் செண்பகம் ரொம்ப கெட்டிக்காரின்னு நெனச்சுக்கிட்டிருக்கோம்...இப்படி அசட்டையா இருந்திருக்கா! என்ன பண்றது?...சரி. லேண்ட்லைன்ல யாரோ கூப்பிடறாங்க. நான் அப்புறம் பேசறேன். ...ஹலோ. யாரு?"

செண்பகம் எதுவும் பேசாமல் இணைப்பைத் துண்டித்தாள்.

இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ  மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)

குறள் 186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் 
திறன்தெரிந்து கூறப் படும்.

பொருள்:  
மற்றவர்கள் மீது புறம் கூறுபவனின் குற்றங்களை மற்றவர்கள் அவன் முதுகுக்குப் பின்னால் பேசும் நிலை ஏற்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














Wednesday, June 27, 2018

185. உதவும் கரங்கள்

சேகர் தன் புதிய தொழிலில் முதலீடு செய்யப் பொருத்தமான ஒரு நபரைத் தேடிக் கொண்டிருந்தபோது, சங்கரலிங்கத்தின் பெயர் அவனுக்கு சிபாரிசு செய்யப்பட்டது.

அவரை நேரில் சந்திக்கும் முன் தன் நண்பன் ரகுவிடம் கலந்தாலோசித்தான்.

"உனக்கு சங்கரலிங்கத்தைப் பத்தி என்ன தெரியும்?" என்றான் ரகு.

"அவர் நாலஞ்சு கம்பெனிகள்ள பார்ட்னரா இருக்காரு. நல்ல தொழிலா இருந்தா, அதில பங்குதாரரா சேருவாரு. பிசினஸ் எப்படி நடக்குதுன்னு கவனிப்பாரு. ஆனா நிர்வாகத்தில தலையிட மாட்டாரு. தர்ம சிந்தனை உள்ளவர். நிறைய நல்ல காரியங்களுக்கு உதவி செஞ்சிருக்காரு. பணம் இல்லாத சில பேருக்குத் தொழில் தொடங்க உதவி இருக்காரு" என்றான் சேகர்.

"இவ்வளவு நல்லவர் உன்னோட பார்ட்னரா இருக்க ஒத்துக்கணுமேடா!" என்றான் ரகு.

"கிண்டல் இருக்கட்டும். உங்கிட்ட கலந்து பேசாம நான் எதுவுமே செய்யறதில்லன்னு உனக்குத் தெரியும். நீ சில விஷயங்களைக் கூர்ந்து கவனிப்ப. சங்கரலிங்கத்தைப் பாத்துப் பேசலாம்னு இருக்கேன். நீயும் என் கூட வரணும்."

"முன்பின் தெரியாத உன்னை அவர் சந்திக்க ஒத்துக்கணுமே?"

"சங்கரலிங்கத்தை எனக்கு சிபாரிசு செஞ்சவரே, நான் அவரைச் சந்திக்கறதுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கார்."

"அப்புறம் என்ன? அவர் வீட்டுக்குப் போய் ஒரு காப்பி குடிச்சுட்டு வந்துடலாம். காப்பி கொடுப்பார் இல்ல?" என்றான் ரகு.

"காப்பி கொடுக்காட்டாப் பரவாயில்ல. பணம் கொடுக்க ஒத்துக்கிட்டாப் போதும்!"

"எவ்வளவு தாராள மனசுடா உனக்கு!"

ண்பர்கள் இருவரும் சங்கரலிங்கத்தை சந்திக்கச் சென்றனர். சங்கரலிங்கம் மிகவும் எளிமையானவராகத் தெரிந்தார். சேகர் சொன்ன விவரங்களைக் கேட்டுக் கொண்டார். அவனுடைய ப்ராஜக்ட் ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு, தன் ஆலோசகரிடம் கலந்தாலோசித்து ஒரு வாரத்தில் தன் முடிவைச் சொல்வதாகச் சொன்னார்.

அவர்கள் கிளம்ப யத்தனித்தபோது, "என்ன அவசரம்? வேலை முடிஞ்சதும் கிளம்பிடணுமா? கொஞ்ச நேரம் உக்காந்து பேசிட்டுப் போகலாமே" என்றார்.

"உங்க நேரத்தை வீணாக்க வேணாம்னுட்டுதான்..." என்றான் சேகர்.
.
"வீணாக்கப்படறதுக்குன்னே படைக்கப்பட்ட ஒரு விஷயம் நேரம்தான்!" என்ற சங்கரலிங்கம் தொடர்ந்து அவர்களிடம் அரசியல், சினிமா, ஆன்மீகம் என்று பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். சில பெரிய மனிதர்களின் அந்தரங்கங்களைப் பற்றியும் பேசினார்.

தன்னுடன் பங்குதாரராகச் சேருவது என்று முடிவு செய்து விட்டாரோ என்று தோன்றியது சேகருக்கு.

"உங்களை எங்கிட்ட அனுப்பினானே ஜெகதீசன், அவனை உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றார் சங்கரலிங்கம்.

"அவரை ஒரு மீட்டிங்கில் பாத்தேன். சும்மா பேசிக்கிட்டிருக்கச்சே என்னோட திட்டத்தைப் பத்திச் சொன்னேன். அப்ப அவரு உங்களைப் பத்திச் சொன்னாரு. நான் உங்களைச் சந்திக்கணும்னு சொன்னேன். அப்புறம்தான் அவர் உங்ககிட்ட பேசி அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்தாரு. மத்தபடி அதிகப் பழக்கமில்லை" என்றான் சேகர். 

சொன்ன பிறகுதான், ஜெகதீசனுக்கு நெருக்கமில்லாதவன் என்றபோது தனக்கு ஏன் உதவ வேண்டும் என்று சங்கரலிங்கம் நினைப்பாரோ என்று தோன்றியது.

"அவனைப் பத்தின உண்மைகளைச் சொன்னா தப்பா நெனச்சுப்பீங்களோன்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். அவன் எனக்கு ரொம்ப வேண்டியவன்தான். பாக்கறதுக்குப் பரம யோக்கியன் மாதிரி இருப்பான். ஆனா, தினமும் தண்ணி போடணும் அவனுக்கு. இல்லாட்டா தூக்கம் வராது. சின்ன வீடு வேற வச்சிருக்கான். ஒரு நாளைக்கு 'இவதான் என் நம்பர் டூ'ன்னு அவளை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கறான்!"

சேகர் மௌனமாக இருந்தான். "நீங்க அவனுக்கு நெருக்கமானவங்க  இல்லேங்கறதாலதான் இதை உங்ககிட்ட சொன்னேன். நான் சொன்னேன்னு அவன்கிட்ட சொல்லிடாதீங்க!" என்றார் சங்கரலிங்கம்.

"சேச்சே! நான் ஏன் சார் அவர்கிட்ட இதைப் போய் சொல்லப் போறேன்?" என்றான் சேகர்.

சற்று நேரம் கழித்து இருவரும் விடைபெற்றனர்.

"ரொம்ப எளிமையானவரா இருக்காரு இல்ல? அவர் ஒத்துக்கிட்டா, எனக்கு அதிர்ஷ்டம்தான்!" என்றான் சேகர்.

ரகு மௌனமாக இருந்தான்.

"என்னடா யோசிக்கிறே?"

"இல்ல. அவரு எந்த அளவுக்கு நல்லவரா இருப்பார்னு யோசிக்கிறேன்."

"ஏன் உனக்கு இந்த சந்தேகம்? அவரைப் பத்தி வெளியில நல்லபடியாதானே  சொல்றாங்க?"

"அவரு தன்னை ரொம்ப நேர்மையானவரா காமிச்சுக்கறாரு. ஆனா உண்மையிலே அப்படி இருப்பாரான்னு எனக்கு சந்தேகமா இருக்கு."

"அதான் ஏன்னு கேட்டேன்."

"தேவையில்லாம மத்தவங்களைப் பத்தி அவதூறு பேசினாரு! அதுவும் உன்னை அவர்கிட்ட அனுப்பின ஜெகதீசனைப் பத்தி உன்கிட்டயே தப்பாப் பேசினாரு. அதுக்கு என்ன அவசியம்? இப்படியெல்லாம் மத்தவங்களைப் பத்தி அவங்க முதுகுக்குப் பின்னால அவதூறாப் பேசறவங்க நேர்மையா நடந்துப்பாங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு!"

"நான் அப்படி நினைக்கல. இது மாதிரி அக்கப்போர் பேசறதெல்லாம் மனித இயல்பு. இதை வச்சு ஒத்தரோட நேர்மையை எடைபோட முடியுமா?" என்றான் சேகர்.

"சரி. முதல்ல, அவர் தன்னோட முடிவைச் சொல்லட்டும். ஆனா நீ அவசரப்பட்டு முடிவு பண்ணிடாதே!"

த்து நாட்கள் கழித்து சேகர் ரகுவுக்கு ஃபோன் செய்தான். "டேய்! சங்கரலிங்கம் என் பிசினஸில் முதலீடு பண்ண ஒத்துக்கிட்டாரு" என்றான்.

"ம்" என்றான் ரகு.

"ஆனா நான் அவரோட சேர்ந்து தொழில் பண்ணப் போறதில்ல."

"ஏன், நான் சொன்னதுக்காகவா?"

"நீ சொன்னபோது அதை நான் ஏத்துக்கல. ஆனா ரெண்டு நாள் முன்னாடி, தற்செயலா நான் ஒத்தரை சந்திச்சேன். அவர் மாடுலர் கிச்சன் எல்லாம் டிசைன் பண்ணி, உருவாக்கறதில அனுபவம் உள்ளவர். அவர் சங்கரலிங்கத்துக்கிட்ட உதவி கேட்டு, அவரும் முதலீடு பண்ண ஒத்துக்கிட்டிருக்காரு. ஆர்டர் பிடிக்கறதிலிருந்து, டிசைன் பண்ணி, ஃபேப்ரிகேட் பண்ணி, இன்ஸ்டால் பண்றது வரை எல்லாம் அவர்தான் செஞ்சிருக்கார். லாபத்தில் பாதின்னு பேச்சு. ஆனா வரவு செலவெல்லாம் சங்கரலிங்கத்தோட பாங்க் அக்கவுண்ட் மூலமாத்தான் நடந்திருக்கு. சங்கரலிங்கம் பொய்க் கணக்கெல்லாம் காட்டி, இவரை நிறைய ஏமாத்திட்டாராம். ஒரு வருஷம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாம இவரு விலகி வந்துட்டாராம். அவர் சொன்னதைக் கேட்டதும்,  நான் போய் மாட்டிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்."

"கங்கிராசுலேஷன்ஸ்! நல்ல வேளை நீ தப்பிப் பிழைச்சுட்டே!"

"மத்தவங்க முதுகுக்குப் பின்னால அவங்களைப் பத்தி மட்டமாப் பேசறவங்க நேர்மையானவங்களா இருக்க மாட்டாங்கங்கற உன்னோட தியரி சரின்னு நிரூபணம் ஆயிடுச்சு" என்றான் சேகர்.

"இது என்னோட தியரி இல்ல. திருவள்ளுவரோட தியரி!" என்றான் ரகு.

இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ  மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)

குறள் 185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் 
புன்மையாற் காணப் படும்

பொருள்:  
ஒருவன் புறம் சொல்லும் இயல்பு உடையவனாக இருந்தால், அவன் அறத்தைப் பற்றிப் பேசினாலும், அவன் அறவழியில் நடப்பவனாக இருக்க மாட்டான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


Tuesday, June 26, 2018

184. லஞ்ச் ரூம்

சி ஈ ஓ ராஜாமணி அலுவலகத்துக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே, மூத்த அதிகாரிகள், மற்ற ஊழியர்கள் என்று சிறு சிறு குழுக்களாக அவர் அறைக்குள் நுழைந்து அவரைப் பாராட்டி விட்டு வந்தனர்.

முதல் நாள் இரவு அவரது பேட்டி ஒரு பிசினஸ் தொலைக்காட்சி சேனலில் வெளியாகியிருந்தது. அதற்குத்தான் பாராட்டுக்கள்.

"பிரமாதம் சார்."

"நம்ப கம்பெனியோட இமேஜை நல்லா ப்ரொஜெக்ட் பண்ணினீங்க."

"இன்டர்வியூ செஞ்ச லேடி கேட்ட கேள்விக்கெல்லாம் கையில் ஒரு பேப்பர் கூட வச்சுக்காம சரளமா பதில் சொன்னீங்க."

"அந்த லேடி உங்களை கார்னர் பண்ண ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினாங்க. ஆனா நீங்க சளைக்காம பதில் சொல்லி அவங்களைத் திணற அடிச்சுட்டீங்க."

இது போன்ற பல பாராட்டுக்களை அலுவலகத்தில் அவரவர் நிலைக்கும், அறிவுக்கும் ஏற்ற விதத்தில் வழங்கி விட்டுப் போனார்கள்.

கண்ணன் மட்டும் போகவில்லை.

சிறிது நேரம் கழித்து கண்ணன் அலுவல் தொடர்பாக சி ஈ ஓ வின் அறைக்குப் போனான். அப்போது அறையில் வேறு யாரும் இல்லை.

அலுவல் முடிந்ததும் சீட்டிலிருந்து எழுந்தபடியே, "சார்! நேத்து உங்க இன்டர்வியூ பாத்தேன், நல்லா இருந்தது" என்றான் கண்ணன்.

"உக்காருங்க" என்றார் ராஜாமணி. "உங்களோட மனம் திறந்த கருத்து எனக்கு வேணும்!"

தயக்கத்துடன் அமர்ந்த கண்ணன், "நல்லாத்தான் சார் இருந்தது" என்றான்.

"இல்ல. உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். நீங்க ஒப்புக்காகப் பேசறவர் இல்ல. சொல்லுங்க!" என்றார் ராஜாமணி விடாமல்.

"ஒண்ணுமில்ல. நீங்க இன்னும் கூட நல்லா பண்ணியிருக்கலாம்கறது என்னோட அபிப்பிராயம்."

"அப்படின்னா?"

"தப்பா நெனச்சுக்காதீங்க. நீங்க இன்டர்வியூவுக்கு உங்களைத் தயார் செஞ்சுக்கலைன்னு எனக்குத் தோணிச்சு. உங்களுக்கு நேரம் இல்லாம இருந்திருக்கும். வேற யாரையாவது விவரங்களைத் தயாரிச்சுக் கொடுக்கச் சொல்லி நீங்க அதை எடுத்துக்கிட்டுப் போயிருக்கலாம். இன்டர்வியூ பண்ணின லேடி நல்லா தயார் பண்ணிக்கிட்டு வந்தாங்க. புள்ளி விவரங்களோடு ரொம்ப ஆழமான கேள்விகள் எல்லாம் கேட்டாங்க. நீங்க பல கேள்விகளுக்குப் பொதுப்படையாத்தான் பதில் சொன்னீங்க. உங்ககிட்டயும் புள்ளி விவரங்கள் இருந்திருந்தா உங்க பதில்கள் இன்னும் ஆழமா இருந்திருக்கும்னு எனக்குத் தோணிச்சு. சாரி எகெய்ன்" என்றான் கண்ணன். தான் கொஞ்சம் அதிகமாகப் பேசி விட்டோமோ என்று அவனுக்குத் தோன்றியது.

"இல்ல, இல்ல. நான் நினச்சதைத்தான் நீங்க சொல்லியிருக்கீங்க. நீங்க சொன்னபடி புள்ளி விவரங்களோடு போகாதது தப்புதான். ஏதோ ஒரு நம்பிக்கையில போயிட்டேன். தாங்க்ஸ் ஃபார் யுவர் ஃபீட்பேக்" என்றார் ராஜாமணி.

ன்று பிற்பகல் உணவருந்த கண்ணன் லஞ்ச் ரூமுக்குப் போனபோது அவனுடைய சக ஊழியர்கள் சிலர் அங்கு அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

"நேத்து நம்ம சி ஈ ஓ இன்டர்வியூ எப்படி இருந்தது?" என்று ஆரம்பித்தார் ஒருவர்.

"அதுதான் காலையில எல்லோரும் போய் அவரைப் பார்த்துப் பாராட்டிட்டு வந்துட்டமே!" என்றார் இன்னொருவர்.

"அது ஒரு ஃபார்மாலிட்டிக்காகத்தானே? உண்மையாவே எப்படி இருந்தது?"

"எனக்கென்னவோ அவ்வளவு திருப்திகரமாக இல்ல."

"கையில ஒரு பேப்பர் கூட இல்லாம அரசியல் கட்சிக் கூட்டத்தில பேசப் போற மாதிரி கையை வீசிக்கிட்டுப் போயிருக்காரு. அந்த லேடி எல்லா விவரங்களையும் கலெக்ட் பண்ணி வச்சுக்கிட்டு கேள்வி மேல கேள்வி கேட்டுத் திணற அடிச்சுட்டாங்க."

"அதான் ஒரு அளவுக்கு சமாளிச்சுட்டாரே!"

"அவர் செஞ்சது சமாளிப்புதான். டிவி பாத்தவங்களுக்கே தெரிஞ்சிருக்கும், இவர்கிட்ட பதில் இல்ல, ஏதோ சொல்லி மழுப்பறார்னு."

"அந்த லேடி விடாக்கண்டன் மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டே இருக்காங்க. இவரும் பதில் சொல்லாம மழுப்பிக்கிட்டே இருக்காரு, நல்ல தமாஷ்தான். பிசினஸ் டிவியில என்டர்டெயின்மென்ட் ப்ரோக்ராம் மாதிரி இருந்தது!"

"மொத்தத்தில் சொதப்பல் இன்டர்வியூ. நம்ப கம்பெனி மட்டும் லிஸ்டட் கம்பெனியா இருந்தா, இந்த மாதிரி இன்டர்வியூவுக்கப்பறம் மார்க்கெட்ல ஷேர் விலை இன்னிக்குக் குறைஞ்சிருக்கும்."

"என்ன கண்ணன், நீங்க எதுவுமே சொல்லல?"

"காலையில சி ஈ ஒவைப் பார்த்தபோது இதையெல்லாம் அவர்கிட்ட யாராவது சொன்னீங்களா?" என்றான் கண்ணன், சாதாரணமாகக் கேட்பது போல்.

"அது எப்படிச் சொல்ல முடியும்?"

'நான் சொல்லியிருக்கேனே!' என்று நினைத்துக் கொண்டான் கண்ணன்.

இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ  மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)

குறள் 184
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
முன்னின்று பின்நோக்காச் சொல்.

பொருள்:  
ஒருவரது குறைகளை அவர் முகத்துக்கு நேரே சொன்னாலும் சொல்லலாம். ஆனால் பின்விளைவுகளைச் சிந்திக்காமல் ஒருவர் இல்லாதபோது அவரைக் குறை கூறக் கூடாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




























Monday, June 25, 2018

183. ஆள்காட்டி!

அது ஒரு சிறிய தொழிற்சாலை, மொத்தமே இருபது தொழிலாளிகள்தான். அதில் ஐந்து பேர் தற்காலிகப் பணியில் இருந்தவர்கள். பல மாதங்களாக அவர்களை நிரந்தரமாக்காமல் நிர்வாகம் காலம் கடத்தி வந்தது.

அன்று மதிய உணவு இடைவேளையில், நான்கு தொழிலாளிகள் தொழிற்சாலைக்கு வெளியே சாலையில் இருந்த மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் மணி மட்டும் நிரந்தரமாக்கப் படாதவன்.

"இந்த மாசக் கடைசியில எல்லாரையும் பர்மனண்ட் பண்ணிடுவாங்கன்னு மானேஜர் சொல்லியிருக்காரே!" என்றான் செல்வம்.

"எனக்கு நம்பிக்கை இல்ல. அந்த மானேஜர் ஒரு ஏமாத்துப் பேர்வழி. முதலாளி சரின்னு சொன்னா கூட அவன் எதையாவது சொல்லிக் கெடுத்துடுவான்" என்றான் மணி.

"நம்மளால என்ன பண்ண முடியும்? இது ஒரு சின்ன ஃபேக்டரி. நமக்கு யூனியன் கூடக் கிடையாது. இங்கே அவங்க வச்சதுதான் சட்டம்" என்றான் முருகன்.

"எனக்கு இந்த மானேஜர் சரவணன் மேலதான் கடுப்பு. சரவணன்ங்கற பேருக்கு பதிலா, ராவணன்னு பேரு வச்சிருக்கலாம். இந்த மாசம் மட்டும் எங்களை பர்மனண்ட் பண்ணாம இருக்கட்டும். நேரா லேபர் ஆஃபீசுக்குப் போய் இங்கே நடக்கற அக்கிரமத்தையெல்லாம் சொல்லத்தான் போறேன்!" என்றான் மணி.

அதன் பிறகு சற்று நேரம் ஒவ்வொருவராக மாற்றி மாற்றி மானேஜர் சரவணனின் அக்கிரமங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

உணவு இடைவேளை முடிந்து எழுந்தபோதுதான் அவர்கள் உட்கார்ந்திருந்த மரத்தடிக்குப் பின்புறத்திலிருந்து சூப்பர்வைசர்கள் சங்கரும், மூர்த்தியும் வேகமாகப் போய்க் கொண்டிருந்ததை கவனித்தனர்.

"இவங்க ரெண்டு பேரும் மரத்துக்குப் பின்னால நின்னுக்கிட்டு சிகரெட் பிடிச்சுக்கிட்டிருந்திருக்காங்க போலிருக்கு. நாம பேசறதைக் கேட்டிருப்பாங்களோ? மானேஜர் கிட்ட போய் வத்தி வச்சிடுவாங்களோ?" என்றான் மணி.

"பார்க்கலாம். இப்ப நாம என்ன பண்ண முடியும்?" என்றான் முருகன்.

ந்த மாத இறுதியில் தற்காலிக ஊழியர்கள் ஐந்து பேரில் நான்கு பேர் நிரந்தரமாக்கப் பட்டனர். மணி மட்டும் நிரந்தரமாக்கப்படவில்லை.

"என்னண்ணே இப்படிப் பண்ணிட்டாங்க? என்னை மட்டும் ஒதுக்கிட்டாங்களே!" என்றான் மணி அதிர்ச்சியுடன்.

"அன்னிக்கு நாம பேசினதைக் கேட்ட சூப்பர்வைசர் ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தன் மானேஜர் கிட்ட போட்டுக் கொடுத்திருக்கான். நாங்க மூணு பேரும் பர்மனன்ட்டுங்கறதால எங்களை ஒண்ணும் பண்ண முடியல. உன்னை மட்டும் பழி வாங்கிட்டான் மானேஜர் சரவணன்" என்றான் முருகன்.

"ரெண்டு பேர்ல யார் சொல்லியிருப்பாங்க? ரெண்டு பேருமே சொல்லியிருப்பாங்களோ?" என்றான் மணி.

"சங்கர் நம்மகிட்டல்லாம் நல்லா பழகறவரு. ஜாலியான ஆளு. அவரு சொல்லியிருக்க மாட்டாரு. மூர்த்திதான் பெரிய ஆஃபீசர் மாதிரி ராங்கியா இருப்பான். நம்பளை மதிச்சுப் பேச மாட்டான். வேலையில குத்தம் இருந்தா மட்டும்தான் கேப்பான். அவன்தான் ஆள்காட்டியா இருந்திருப்பான்."

"அவனை நான் சும்மா விடப் போறதில்ல" என்றான் மணி ஆத்திரத்துடன்.

"அவசரப்பட்டு எதையாவது பண்ணி மாட்டிக்காதே. மூர்த்திக்கு ஏதாவது ஆனா, முதல்ல உன் மேலதான் சந்தேகம் வரும். எனக்குத் தெரிஞ்ச ஒரு வெளி ஆளை வச்சு நான் அவனை ரெண்டு தட்டு தட்டச் சொல்றேன்" என்றான் முருகன்.

"வேணாம் விடுங்கண்ணே!" என்றான் மணி.

"பாத்தியா, பயந்துட்டியே? ரெண்டு நாள் லீவு போட்டுட்டு நீ ஊருக்குப் போயிட்டு வா. அந்த சமயத்தில மூர்த்தியை 'கவனிக்க' நான் ஏற்பாடு பண்றேன். நீ ஊர்ல இல்லாததால உன் மேல சந்தேகம் வராது" என்றான் முருகன்.

ரவு பத்து மணி ஷிஃப்ட் முடிந்து மூர்த்தி ஸ்கூட்டரில் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தபோது இருவர் அவனை வழி மறித்துக் கீழே தள்ளி உருட்டுக் கட்டைகளால் அடித்துப் போட்டு விட்டுப் போய் விட்டார்கள்.

மூர்த்தி குணமாகி மீண்டும் வேலைக்கு வர இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. அவனை அடித்தது யார் என்று போலீசால் கண்டுபிடிக்க முடியவில்லை.

முதலில் தொழிலாளர்கள் மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. ஆனால் மூர்த்திக்கு நினைவு திரும்பியதும், தொழிலாளிகளுக்கும் இதற்கும் தொடர்பு இருக்காது என்று சொல்லி விட்டான். 

மூர்த்தியைத் தாக்க யாருக்கும் எந்த நோக்கமும் இல்லாததால் போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

சில மாதங்கள் கழித்து முருகன் மணியிடம் சொன்னான். "தப்புப் பண்ணிட்டோம்னு தோணுதுடா."

"என்னண்ணே சொல்றீங்க?"

"மூர்த்திதான் நாம பேசினதை மானேஜர் கிட்ட சொல்லியிருப்பாருன்னு நெனச்சு, அவரை ஆள் வச்சு அடிச்சோம். ஆனா, இப்ப சங்கருக்கு அசிஸ்டன்ட் மேனேஜரா புரொமோஷன் கொடுத்திருக்காங்க. மூர்த்திதான் சீனியர். அவருக்குத்தான் முதல்ல புரொமோஷன் கொடுத்திருக்கணும். சங்கர் ஆள்காட்டி வேலை செஞ்சதாலதான் மானேஜர் சரவணன் சிபாரிசு பண்ணி, அவனுக்கு புரொமோஷன் வாங்கிக் கொடுத்திருப்பான்னு நினைக்கறேன்."

"இப்ப என்ன செய்யறது?" என்றான் மணி.

"உண்மை என்னன்னு மூர்த்தி கிட்டயே கேட்டுட வேண்டியதுதான்."

ரவு ஷிஃப்டில் மூர்த்தி தனியாக இருந்தபோது, அவனிடம் முருகனும், மணியும் வந்தனர்.

"சார் உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்" என்றான் முருகன்.

"கேளு" என்றான் மூர்த்தி.

"நாலஞ்சு மாசம் முன்னே லஞ்ச் டயத்தில நானும் இவனும், இன்னும் ரெண்டு பேரும் மரத்தடியில உட்கார்ந்து டெம்பரரி ஒர்க்கர்ஸை பர்மனண்ட் ஆக்காம இழுத்தடிக்கிறாருன்னு மானேஜரைக் குறை சொல்லிப் பேசிக்கிட்டிருந்தோம். அப்ப நீங்களும், சங்கர் சாரும் மரத்தடிக்குப் பின்னால நின்னு சிகரெட் பிடிச்சுக்கிட்டிருந்தீங்க. நாங்க பேசினது கண்டிப்பா உங்க காதில விழுந்திருக்கும்."

"அதுக்கென்ன இப்ப?"

"அதை நீங்க மானேஜர் கிட்ட போய் சொன்னீங்களா?"

"சே, சே! நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கறவன் நான். உங்ககிட்டல்லாம் கூட வேலை சம்பந்தமா பேசறதைத் தவிர வேற எதுவும் பேசறதில்லைங்கறது உங்களுக்குத் தெரியும். நான் ஏன் இப்படிப்பட்ட கேவலான காரியங்கள் எல்லாம் செய்யப் போறேன்? அதுவும், பாவம், பர்மனன்ட் ஆகலேங்கற வருத்தத்தில, இவன் ஏதோ சொல்லி இருப்பான். அதைப் போய், கோள் சொல்ற மாதிரி சொல்றது கொடுமை இல்ல? என்னைப் பத்தி இவ்வளவு மோசமாவா நெனைச்சுட்டீங்க?" என்று பொரிந்து தள்ளினான் மூர்த்தி.

மணிக்கு அழுகை வரும் போல் இருந்தது. முருகன் என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று யோசித்து விட்டு, "சரி. நீங்க சொல்லலேன்னா, சங்கர்தானே சொல்லியிருக்கணும்?" என்றான்.

"அது எனக்குத் தெரியாது" என்றான் மூர்த்தி.

"தெரியாதா, இல்ல சொல்ல மாட்டீங்களா?" என்றான் முருகன் விடாமல்.

மூர்த்தி உடனே பதில் சொல்லவில்லை.

"சொல்லுங்க சார். நான் பாதிக்கப்பட்டிருக்கேன். என்னைக் கெடுத்துட்டு அவர் புரொமோஷன் வாங்கிட்டு சந்தோஷமா இருக்காரு!" என்றான் மணி.

"இங்க பாருங்கப்பா. நீங்க பேசினதை நான் போய் மானேஜர் கிட்ட சொல்லல. அது மாதிரி மானேஜர் கிட்ட சங்கரோ, வேற யாரோ ஏதாவது சொல்லி அது எனக்குத் தெரிஞ்சிருந்தா அதை உங்ககிட்ட சொல்றதும் தப்புதானே? அவ்வளவுதான் சொல்ல முடியும். கவலைப்படாதே மணி. அநேகமா அடுத்த மாசம் உன்னையும் பர்மனண்ட் பண்ணிடுவாங்கன்னு நினைக்கறேன்" என்றான் மூர்த்தி.

ஒரு நல்ல மனிதனை ஆள் வைத்து அடித்து விட்டோமே என்று நினைத்து வருந்திய முருகன், "உங்க உடம்பு எப்படி சார் இருக்கு?" என்றான்.

"காயமெல்லாம் ஆறிடுச்சு. இருந்தாலும் அப்பப்ப அங்கங்க வலிக்குது. யாரு, எதுக்காக என்னை அடிச்சாங்கன்னே தெரியல" என்ற மூர்த்தி "அப்பா!" என்று வலியில் முனகியபடியே உடலை வளைத்துக் கொண்டான்.

இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ  மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)

குறள் 183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் 
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

பொருள்:  
புறம் கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்வதை விட இறந்து போவது, அற நூல்கள் காட்டும் உயர்ந்த நிலையை அளிக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்











Sunday, June 24, 2018

182. பிரியாவுக்குப் புரியாத விஷயம்

பிரியா வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தபோது அவள் அம்மா வள்ளியைப் பார்க்க சாரதா வந்தாள்.

இருவரும் வழக்கம் போல் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அவற்றில் சில பிரியாவின் காதில் விழுந்தன. 

அவள் வீட்டுப்பாடத்தில் கவனமாக இருந்தாலும் காதில் விழுந்த உரையாடல்களில் சில அவள் கவனத்தை ஈர்த்தன.

முதலில் தங்கள் இருவரின் குடும்ப விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்கள், பிறகு அக்கம்பக்கத்தில் இருந்த வேறு சிலர் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

"இந்தத் தங்கம் இருக்காளே அவளை மாதிரி ஒரு பொம்பளையை நான் பார்த்ததில்லை" என்றாள் பிரியாவின் அம்மா வள்ளி.

"எனக்கு அவங்களை அவ்வளவாப் பழக்கம் கிடையாது. ஆனா கொஞ்சம் திமிர் பிடிச்சவங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்" என்றாள் சாரதா.

"திமிர்னா சாதாரணத் திமிரா? அடேங்கப்பா! இத்தனைக்கும் அவ ஒரு சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்தவதான். அவ அப்பா இப்பவும் ஒரு கடையில கணக்கு எழுதித்தான் பொழப்பு நடத்திக்கிட்டிருக்காரு. அவ புருஷனும் சாதாரணமா இருந்தவர்தான். திடீர்னு ஏதோ யோகம் அடிச்சு, அவரு வியாபாரம் பெரிசா வளந்துடுச்சு. இவளைப் புடிக்கவே முடியல. ஏதோ பிறவிப் பணக்காரி மாதிரி அவ போடற ஆட்டம் இருக்கே..." என்றாள் வள்ளி.

"உன் வீட்டுக்கு அப்பப்ப வருவாங்க போலருக்கே!" என்றாள் சாரதா.

"ஆமாம் வருவா. தன் பெருமையை யார் கிட்டயாவது அளக்கணுமே அவளுக்கு!"

"அப்ப என்னை மாதிரி அவங்களும் உனக்கு ஒரு சிநேகிதின்னு சொல்லு" என்றாள் சாரதா.

"அப்படி ஒண்ணும் இல்ல. பிரியாவோட அப்பா அவ புருஷனுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காரு..."

தன் பெயர் அடிபட்டதும், பிரியா பாடத்திலிருந்து கவனத்தைத் திருப்பி அம்மாவின் பேச்சை கவனித்தாள். அப்பாவைப் பற்றிக் குறிப்பிடத்தான் அம்மா தன் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறாள் என்று தெரிந்தது. தொடர்ந்து வீட்டுப்பாடம், அம்மாவின் பேச்சு என்று மாறி மாறி அவள் கவனம் சென்று கொண்டிருந்தது.

"...தங்கத்தோட புருஷனுக்கு இவர் கிட்ட நிறைய நன்றி உண்டு. அதனாலதான் தங்கமும் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் என்னை மதிச்சுப் பேசிக்கிட்டிருக்கா! அவளுக்கு ஜால்ரா போடறத்துக்குன்னே ஒரு கூட்டம் இருக்கு. எப்பவும் அந்தக் கூட்டத்திலதான் இருப்பா. என்னோட பழகறதெல்லாம் அவ புருஷனுக்காகத்தான்."

"ஆமாம், அவங்களுக்கு மாமனார் மாமியார் இருக்காங்க போலருக்கே!"

"அந்தக் கொடுமையை ஏன் கேக்கற? அவங்களைப் பெட்டிப் பாம்பா அடக்கி வச்சிருக்கா. அவங்க ரெண்டு பேரும் அவ போடற சோத்தைத் தின்னுட்டு கப்சிப்னு வீட்டோட அடங்கிக் கிடக்காங்க."

பிரியாவுக்கு இந்தப் பேச்சு தொந்தரவாக இருந்தது. ஆனால் அது காதில் விழாமல் போய் உட்கார அவர்கள் வீட்டில் தனியான இடம் இல்லை. பாடத்திலிருந்து அவ்வப்போது விலகியிருப்பது மனதுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருந்தது!

சற்று நேரம் பேசி விட்டு சாரதா போய் விட்டாள்.

சாரதா போய் சற்று நேரம் கழித்து வாசல் கதவு தட்டப்பட்டது. பிரியாதான் போய்க் கதவைத் திறந்தாள்.

தங்கம் ஆன்ட்டி!

'இவர்களைப் பற்றித்தானே அம்மா இத்தனை நேரம் சாரதா ஆன்ட்டியிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்!'

"வாங்க ஆன்ட்டி" என்றாள் பிரியா. இதற்குள் வள்ளி உள்ளிருந்து வந்து விட்டாள்.

"அடேடே, தங்கமா! வா வா, இதென்ன அத்தி பூத்த மாதிரி!" என்று அவளை  வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள் வள்ளி.

வீட்டுப்பாடத்தைத் தொடர முடியாமல் மறுபடியும் வள்ளி-தங்கம் உரையாடல் பிரியாவின் கவனத்தைத் திசை திருப்பியது.

தங்கம் மெல்லிய குரலில் பேசியதால் அவள் பேசியதில் பெரும் பகுதி பிரியாவுக்குக் கேட்கவில்லை. வள்ளியை அடிக்கொரு முறை 'அக்கா அக்கா' என்று அவள் அழைத்தது மட்டும் கேட்டது.

வள்ளி பேசியது மட்டும் தெளிவாகக் கேட்டது.

"...இப்பதான் சாரதா கிட்ட உன்னைப் பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன். தங்கம் மாதிரி அடக்கமான பெண்ணைப் பார்க்க முடியுமான்னு. உன்னைக் கட்டிக்கிட்ட அதிர்ஷ்டம் உன் புருஷன் வியாபாரம் ஓகோன்னு வளர்ந்து ஊர்லயே பெரிய ஆளாயிட்டாரு. ஆனாலும் புருஷனும் பொண்டாட்டியும் ஊர்ல எல்லாரையும் மதிச்சு எப்படி அடக்கமா, அன்பா, பண்பா நடந்துக்கறாங்க பாருன்னு சொல்லிக் கிட்டிருந்தேன்."

"எப்பவும் இருக்கற மாதிரி இருக்கோம் அக்கா. இதில என்ன இருக்கு?" என்றாள் தங்கம் மெல்லிய குரலில். அவள் பேசியதில் சில வார்த்தைகளை பிரியா ஊகிக்க வேண்டியிருந்தது.

"அதோட மாமனார் மாமியாரை வீட்டோட வச்சு அலுங்காம நலுங்காம கவனிச்சுக்கிட்டிருக்கே! இந்தக் காலத்தில அரைகுறையாப் படிச்ச பெண்களே ஆட்டம் போடறாங்க. நீ காலேஜில படிச்சும் கூட கிராமத்துப் பொண்ணு மாதிரி பதவிசா இருக்கே!"

சற்று நேரம் பேசி விட்டுத் தங்கம் விடைபெற்றாள்.

தங்கம் சென்றதும், பிரியா வள்ளியிடம், "ஏம்மா! இப்பதான் சாரதா ஆன்ட்டிகிட்ட இவங்களைப் பத்தி குறை சொல்லிக்கிட்டிருந்தே. அவங்க நேர்ல வந்ததும் இப்படிப் புகழற!" என்றாள்.

"பின்னே என்ன? ஒருத்தர் மூஞ்சிக்கு நேரா அவங்களைப் பத்தித் தப்பா சொல்ல முடியுமா? உயர்த்திப் பேசறதுதான் முறை!" என்றாள் வள்ளி.

"அப்ப எதுக்கு அவங்க இல்லாதபோது அவங்களைப் பத்தி தப்பாப் பேசணும்?அப்படிப் பேசாம இருந்திருக்கலாமே! இத்தனைக்கும் அவங்களோட உனக்கு சண்டை எதுவும் இல்லியே! நல்லாத்தானே பழகிக்கிட்டிருக்கே! அவங்களைப் பத்தி மத்தவங்க கிட்ட இப்படியெல்லாம் பேசறது தப்பு இல்ல?" என்றாள் பிரியா.

"போடி! இதெல்லாம் உனக்குப் புரியாது. போய் உன் ஹோம்வொர்க்கை முடிக்கிற வழியைப் பாரு!" என்றாள் வள்ளி.

இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ  மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)

குறள் 182
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே 
புறனழீஇப் பொய்த்து நகை.

பொருள்:  
அறம் என்று எதுவும் இல்லை என்று கூறி அறத்துக்குப் புறம்பான செயல்களைச் செய்வதை விட, ஒருவர் இல்லாதபோது அவரைப் பழித்துப் பேசி, அவர் முகத்துக்கு நேரே பொய்யாகச் சிரித்துப் பேசுவது கொடியது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

                                                                         குறள் 183
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
































Wednesday, June 20, 2018

181. சந்திரன் செய்த தவறு

தான் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய கடிதத்தின் விளைவு இப்படி இருக்கும் என்று சந்திரன் நினைக்கவில்லை.

ஒரு அரசு நிறுவனத்தில் இளநிலை அதிகாரியாகப் பணி செய்து வந்த அவன் அலுவலகத்தில் நடக்கும் ஊழல்களையும், முறைகேடுகளையும் அதிர்ச்சியுடனும், வேதனையுடனும், இயலாமையுடனும் பார்த்து வந்தான்.

தன் கவனத்துக்கு வந்த முறைகேடுகளைக் கிளை மேலாளர் சுந்தரவதனத்திடம் அவன் பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறான். ஆனால் அவர் அவற்றைக் கண்டும் காணாதவராக இருந்து வந்தார். முறைகேடுகளில் அவருக்கும் பங்கும் பயனும் உண்டு என்பதை நாளடைவில் சந்திரன் புரிந்து கொண்டான்.

வாடகை இடத்தில் இருந்த அவர்கள் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டு தலைமை அலுவலகத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. பல வருடங்களுக்கு முன்பே அவர்கள் வாங்கிப் போட்டிருந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான டெண்டர்கள் கோரப்பட்டன.

அலுவலகத்தின் பணி ஒதுக்கீட்டின்படி இது தொடர்பான கோப்புகள் சந்திரனுக்கு வந்தன. குறைந்த தொகைக்கு டெண்டர் கேட்டிருந்த ஒரு தரமான கட்டுமான நிறுவனத்தின் டெண்டரை ஏற்க வேண்டும் என்று சிபாரிசு செய்து சந்திரன் கோப்பை கிளை மேலாளருக்கு அனுப்பி வைத்தான்.

கோப்பு அவனுக்குத் திரும்பி வரவில்லை. அந்தக் கோப்பு வேறொரு அதிகாரிக்கு மாற்றப்பட்டு விட்டதாகச் சில நாட்கள் கழித்து அவனுக்குத் தெரிய வந்தது. அத்துடன், அதிகத் தொகை கேட்டிருந்த வேறொரு நிறுவனத்துக்கு கட்டிடப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிந்து கொண்டான்.

தன் அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து தலைமை அலுவலகத்துக்கு இது பற்றி விவரமாக ஒரு கடிதம் அனுப்பினான் சந்திரன்.

அவன் கடிதம் அனுப்பிய சில நாட்களில் நிறுவனத்தின் விதிமுறைகளை  மீறியதற்காக சந்திரன் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தலைமை அலுவலகத்தில் இருந்து அவனுக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் வந்தது!

அதிர்ச்சியுடனும் கோபத்துடனும் சந்திரன் கிளை மேலாளரின் அறைக்குப் போனான்.

"என்ன சார் இது? என்ன தப்பு பண்ணினேன்னு என்னை சஸ்பெண்ட் பண்ணியிருக்கீங்க?" என்றான்.

"நான் பண்ணல. ஹெட் ஆஃபிஸ்ல பண்ணியிருக்காங்க" என்றார் சுந்தரவதனம்.

"சரி. என்ன காரணம்னு கேக்கறேன்."

"சந்திரன்! நீங்க ஹெட் ஆஃபீஸுக்கு எழுதினீங்க. அவங்ககிட்டேயிருந்து உங்களுக்கு பதில் வந்திருக்கு. என்னை ஏன் கேக்கறீங்க?"

"நான் ஹெட் ஆஃபீஸுக்கு எழுதினது உங்களுக்கு எப்படி சார் தெரியும்? அவங்க சொல்லித்தானே!"

"நான் என்ன செய்யணும்னு எதிர்பாக்கறீங்க?"

"ஒரு முறைகேடு நடந்திருக்குன்னு நான் முழு விவரத்தோட எழுதியிருக்கேன். அதைப் பத்தி விசாரிக்கறதுக்கு நடவடிக்கை எடுக்காம, என்னை சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்களே, என்ன சார் இது?"

"மிஸ்டர்! நீங்க பண்ணினது தப்புன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கணும். இது ஒரு அரசாங்க நிறுவனம். இங்கே சில சட்ட திட்டங்கள் உண்டு. நீங்க ஹெட் ஆஃபீஸுக்கு நேரடியா எழுதினது ஒரு விதி மீறல். நீங்க உங்க கடிதத்தை இந்த ஆஃபீஸ் மூலமாத்தான் அனுப்பி இருக்கணும்."

"அதாவது உங்க மூலமா! உங்க பேர்லதானே சார் நான் கம்ப்ளெயின் பண்ணினேன்! அதை எப்படி உங்க மூலமே அனுப்ப முடியும்?"

"அப்படின்னா நம்ம ஆஃபீஸ்ல விஜிலென்ஸ் ஆஃபீசர்னு ஒத்தர் இருக்காரே அவர்கிட்ட புகார் கொடுத்திருக்கணும்!"

"அவரு உங்களுக்குக் கீழ வேலை செய்யறவரு. அதோட அவரு உங்க கூட்டாளின்னு இந்த ஆஃபீசுக்கே தெரியும்!" என்றான் சந்திரன்.

"கூட்டாளிங்கறதெல்லாம் தவறான வார்த்தை. கொஞ்சம் பொறுப்பாப் பேசுங்க" என்றார் சுந்தரவதனம் கோபத்துடன்.

"சரி சார். அடுத்தது என்ன?"

"பொதுவா சஸ்பெண்ட் ஆனவரை ஒரு விசாரணை கமிட்டி போட்டு விசாரிப்பாங்க. விசாரணை முடிய மாசக் கணக்கா ஆகும். ஆனா உங்க அதிர்ஷ்டம் திங்கட்கிழமை அன்னிக்கு ஜி எம் வராரு. அவரே உங்களை விசாரிச்சு முடிவு பண்றதா சொல்லியிருக்காரு" என்றார் சுந்தரவதனம்.

"என்னை சஸ்பெண்ட் பண்ணினதே அவருதான்! அவரு என்னத்தை விசாரணை பண்ணப் போறாரு! நடக்கறதைப் பார்த்தா அவருக்குத் தெரிஞ்சுதான் எல்லா மோசடியும் நடக்கற மாதிரி இருக்கு. அவரும் உங்க கூட்டாளியாத்தான் இருப்பாரு!" என்று பொரிந்து தள்ளினான் சந்திரன்.

"நீங்க மறுபடி மறுபடி தப்பு பண்ணிக்கிட்டே இருக்கீங்க. எங்கிட்ட ஜி எம்மைப் பத்தி மோசமாப் பேசினீங்கன்னு நான் பதிவு செஞ்சு, அதுக்காகக் கூட உங்க மேல நடவடிக்கை எடுக்கலாம்."

"நீங்க என்ன வேணும்னா செய்வீங்க!" என்று சொல்லி விட்டுக் கோபமாக வெளியே வந்தான் சந்திரன்.

'கோபத்தில் ஜி எம்மைப் பற்றி சுந்தரவதனத்திடம் தப்பாகப் பேசி விட்டோமே! அவர் அதை ஜி எம்மிடம் சொன்னால் ஜி எம் என் மேல் கோபப்பட்டு எனக்கு எதிராக முடிவு எடுத்து விடுவாரோ? கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம்' என்று சற்று நேரம் கழித்து அவனுக்குத் தோன்றியது.

செவ்வாய்க்கிழமையன்று சந்திரன் சுந்தரவதனத்தின் அறைக்குச் சென்றான்.

"நேத்திக்கு ஜி எம்மைப் பாத்தீங்களா? என்ன சொன்னாரு?" என்றார் சுந்தரவதனம்.

"ஏன் சார், அன்னிக்கு உங்ககிட்ட பேசச்சே கோபத்தில ஜி எம்மைப் பத்தித் தப்பாப் பேசிட்டேன். அதை நீங்க அவர்கிட்ட சொன்னீங்களா?" என்றான் சந்திரன்.

"ஏன், அவர் இதைப்பத்தி ஏதாவது கேட்டாரா?"

"இல்லை."

"நான் சொல்லியிருந்தாத்தானே அவரு கேட்டிருக்கப் போறாரு!"

"என்ன சார் சொல்றீங்க? நீங்க அவர்கிட்ட எதுவும் சொல்லலியா?"

"இங்க பாருங்க சந்திரன்! உங்க மேல எனக்குக் கோபம் இருக்கலாம். அதுக்காக நீங்க மத்தவங்களைப் பத்தி எங்கிட்ட சொன்னதையெல்லாம் நான் அவங்ககிட்ட போய்ச் சொல்லுவேன்னு நெனச்சீங்களா? நான் அப்படிப்பட்ட ஆளு இல்ல. நான் அப்படிச் சொல்லியிருந்தா அவருக்கு உங்க மேல ஒரு தப்பான அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கும். அது அவரோட விசாரணை முடிவை பாதிக்காதா?"

முதன்முறையாக சந்திரனுக்கு சுந்தரவதனத்தின் மீது மரியாதை ஏற்பட்டது.

"ஜி எம்மோட முடிவு எப்ப சார் தெரியும்?" என்றான் சந்திரன்.

"நீங்க மெயில் செக் பண்ணலியா? உங்களுக்கு வார்னிங் கொடுத்துட்டு உங்க சஸ்பென்ஷனை ரத்து பண்ணிட்டாரு ஜி எம். போய் சீட்டில் உக்காருங்க!" என்றார் சுந்தரவதனம்.

இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ   மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)
குறள் 181
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் 
புறங்கூறான் என்றல் இனிது.

பொருள்:  
ஒருவன் அறவழியில் நடக்காதவனாயிருந்தாலும், மற்றவர் பற்றிப் புறம் கூறாமலிருந்தால் நன்று.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

                                                                         குறள் 182
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

































Monday, June 18, 2018

180. மாறியது கணக்கு!

"நாம இவ்வளவு வருஷமா மார்க்கெட்ல இருக்கோம். அஞ்சு வருஷம் முன்னால தொழில் ஆரம்பிச்சவங்க இவ்வளவு வேகமா வளர்ந்துட்டாங்களே!" என்றான் ஆனந்த் இன்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனர் மதன்.

"லட்சுமி என்டர்ப்ரைசஸைத்தானே சொல்றீங்க? அவங்க ஏதோ சின்ன லெவல்ல பண்ணிக்கிட்டிருக்காங்க. நமக்கு அவங்க போட்டியே இல்லியே!" என்றான், நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர்.

"இல்ல சுந்தர். அவங்களைப் பத்தி மார்க்கெட்ல பேச ஆரம்பிச்சுட்டாங்க. இது நல்லது இல்ல. அவங்களை ஒழிச்சுடணும்."

"என்ன சார் பண்ணலாம்?"

"அவங்களைப் பத்தின விவரங்களை சேகரிப்போம். மெயின் ரோட்ல அவங்க தொழிற்சாலை இருக்கறதே எனக்குக் கண்ணை உறுத்துது. அது வாடகை இடம்தான்னு நினைக்கிறேன். அவங்களை அங்கிருந்து முதல்ல வெளியேற்றணும்."

ரண்டு நாட்கள் கழித்து சுந்தர் நல்ல செய்தியுடன் மதனைச் சந்தித்தான்.

"லட்சுமி என்டர்ப்ரைசஸோட ஃபாக்டரியை அஞ்சு வருஷம் லீஸ்ல எடுத்திருக்காங்க. லீஸ் இன்னும் ரெண்டு மாசத்துல முடியப் போகுது. ரெனியூ பண்றத்துக்கான ஏற்பாடுகளைப் பண்ணிக்கிட்டிருக்காங்க."

"அந்த லீஸ் ரெனியூ ஆகக் கூடாது. அந்த இடத்து சொந்தக்காரர் கிட்ட பேசுங்க. தேவைப்பட்டா அந்த இடத்தை நாம வாங்கிடலாம்."

"சார்! நம்பகிட்ட ஏற்கெனவே இருக்கிற இடத்தையே நாம முழுசாப் பயன்படுத்தலியே!"

"பரவாயில்ல. வேற யாருக்காவது வாடகைக்கு விடலாம். இல்ல, சும்மா பூட்டி வச்சிருந்தாலும் பரவாயில்ல. இன்னும் ஆறு மாசத்துல அவங்களை மார்க்கெட்டை விட்டு விரட்டிட்டு அவங்க பிசினஸ் நமக்கு வர மாதிரி பண்ணணும்" என்றான் மதன்.

"அந்த இடத்துக்கு சொந்தக்காரர் அதை விக்க இஷ்டப்படலேன்னா..."

"மார்க்கெட் ரேட்டுக்கு மேல கொடுக்கறதா சொல்லுங்க. கடன் வாங்கியோ அல்லது வேற எப்படியோ தேவைப்படற பணத்தைத் திரட்டிடலாம்."

"என்ன சார் இது? லீஸ் ரெனியூ பண்ற சமயத்தில முடியாதுன்னு சொல்றாங்களே!" என்றான் லட்சுமி என்டர்பிரைசஸின் பொது மேலாளர் சண்முகம்.

"சரி. என்ன செய்ய முடியும்? நம்ப இடத்தில கட்டிக்கிட்டிருக்கிற ஃபேக்டரி கட்டி முடிய ரெண்டு வருஷம் ஆகும். அதுவரையிலும் வாடகைக்கு வேற இடம் பாக்கணும். இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்ல எனக்குத் தெரிஞ்சவர் ஒத்தரோட ஃபேக்டரி ஆறு மாசமா பூட்டிக் கிடக்கு. அதை வாடகைக்கு விடணும்னு சொல்லிக்கிட்டிருந்தார். நாம அங்க போயிடலாம். இடம் கொஞ்சம் சின்னதுதான். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்" என்றான் நிர்வாக இயக்குனர் லட்சுமிநாராயணன்.

"சார்! ஆனந்த் இன்டஸ்ட்ரீஸ்தான் பிரஷர் கொடுத்து இப்படிப் பண்ண வச்சிருக்காங்க. அந்த இடத்தை அவங்களே வாங்கப் போறாங்களாம்."

"அப்படியா? சரி. யார் வாங்கினா என்ன? நமக்கு வேற இடம் கிடைச்சாச்சு. அவ்வளவுதானே!"

"சார்! அவங்களை சும்மா விடக் கூடாது. அவங்களோட டாப் டெக்னிகல் பீப்பிள் ரெண்டு மூணு பேரை இழுத்துடலாம். அவங்க அங்கே சந்தோஷமா இல்லேன்னு கேள்விப்பட்டேன். அதனால அதே சம்பளம் கொடுத்தா கூட நம்மகிட்ட வந்துடுவாங்க. இன்னும் ரெண்டு வருஷத்திலே நாம எக்ஸ்பாண்ட் பண்ணும்போது நமக்கு ஆளுங்க வேண்டி இருக்கும். இது மாதிரி பதிலடி கொடுத்தாத்தான் சார் மதனுக்கு உறைக்கும்."

"அவங்க பிசினஸ் ரொம்பப் பெரிசு. ஆனா நம்பளோட சின்ன பிசினஸை அபகரிக்கணும்னு பாக்கறாங்க. நாமளும் அவங்களோட சீனியர் ஃஸ்டாபை அபகரிக்க நெனைக்கணுமா என்ன? வேண்டாம். நாம நம்ம பிஸினஸ்ல கவனத்தைச் செலுத்தலாம்" என்றான் லட்சுமிநாராயணன்.

"என்ன இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறீங்க?" என்றான் மதன்.

"ஆமாம் சார். இன்னிக்கு கவர்ன்மென்ட் ஜி ஓ வருதாம். நாம வாங்கின இடத்தை சாலை விரிவாக்கத்துக்காக எடுத்துக்கப் போறாங்க."

"அது அவ்வளவு சீக்கிரம் நடக்காதே. யாராவது கேஸ் போடுவாங்களே!"

"இல்லை சார். இது அஞ்சு வருஷம் முன்னாடியே வந்த திட்டம். சில பேர் கேஸ் போட்டதாலதான் இத்தனை நாள் பெண்டிங்கில இருந்ததாம். இதை எல்லாரும் மறந்தே போயிட்டாங்க. அதனாலதான் ஆறு மாசம் முன்னால நாம அந்த இடத்தை வாங்கினபோது இந்த விஷயம் நம்ப கவனத்துக்கு வரல. நேத்திக்குத்தான் கோர்ட்ல அரசாங்கத்துக்கு சாதகமா தீர்ப்பு வந்திருக்கு. அதனால உடனே வேலையை ஆரம்பிச்சுடுவாங்க."

"காம்பென்சேஷன் கொடுப்பாங்க இல்ல?"

"சார்! கவர்ன்மென்ட் ரேட் எல்லாம் ரொம்பக் கம்மியா இருக்கும். அதுவும் பணம் வரத்துக்குப் பல வருஷங்கள் ஆகும். நாம வேற மார்க்கெட் ரேட்டுக்கு மேல கொடுத்து இடத்தை வாங்கி இருக்கோம். நமக்கு நஷ்டம் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும்" என்றான் சுந்தர் தயங்கியபடி.

நஷ்டம் எவ்வளவு இருக்கும், அது எந்த அளவுக்குத் தன் தொழிலை பாதிக்கும் என்று கணக்குப் போடத் தொடங்கினான் மதன்.

இல்லறவியல் 
             அதிகாரம் 18         
வெஃகாமை   (பிறர் பொருளை விரும்பாமை) 
குறள் 180
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் 
வேண்டாமை என்னுஞ் செருக்கு.

பொருள்:  
விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் பிறர் பொருளை விரும்பினால், அது அழிவைத் தரும். பிறர் பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

                                                                         குறள் 181 
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




























Saturday, June 16, 2018

179. தவற விட்ட பணம்!

"என்னய்யா இது, சுவாரசியமான நியூஸ் எதுவுமே இல்லியே! நாளைக்கு பேப்பர் டல்லடிக்கும் போல இருக்கே!" என்றான் 'செய்தி அலைகள்' பத்திரிகையின் ஆசிரியர் விஸ்வநாதன்,

"சார்! நேத்திக்கு பஸ்ல ஒத்தர் ஒரு பையை விட்டுட்டுப் போயிட்டார். அதில ரெண்டு லட்ச ரூபா பணம் இருந்திருக்கு. அதை ஒரு பயணி கண்டெடுத்து போலீஸ்ல ஒப்படைச்சிருக்கார். இந்த நியூஸை ஃபாலோ பண்ணலாமே!" என்றான் நிருபர் ஆனந்தன்.

"இது மாதிரி அடிக்கடி நடக்குதே! நேர்மையான ஆட்டோ டிரைவர்னு நிறைய நியூஸ் போட்டாச்சே!" என்றான் விஸ்வநாதன் அலுப்புடன்.

"இல்லை சார். ஆட்டோ விஷயம் வேற. பணத்தைத் தொலைச்சவர் புகார் கொடுத்தா, ஆட்டோவை டிரேஸ் பண்ண வாய்ப்பிருக்கு. அதனால பணத்தை எடுத்துக்கிட்டா மாட்டிப்போம்ங்கற பயம் ஆட்டோ டிரைவர்களுக்கு கொஞ்சமாவது இருக்கும். 

"ஆனா பஸ்ல போனவங்களை டிரேஸ் பண்ணவே முடியாது. அவர் பணத்தை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போயிருக்கலாம். போலீசால அவரைக் கண்டு பிடிச்சிருக்கவே முடியாது. 

"அதனால பஸ் பயணி பணத்தைத் திருப்பிக் கொடுத்தது பெரிய விஷயம் இல்லையா? நான் போய் அவரை ஒரு பேட்டி எடுத்துட்டு வரேனே! மக்கள் இதையெல்லாம் ஆர்வமாப் படிப்பாங்க சார்!" என்றான் ஆனந்தன்.

"சரி. செய்யுங்க!" என்றான் விஸ்வநாதன் ஆர்வமில்லாமல்.

காவல் நிலையத்துக்குச் சென்று பணத்தைத் திருப்பிக் கொடுத்த பஸ் பயணியின் விலாசத்தைப் பெற்று, அவர் வீட்டுக்குச் சென்று அவரைப் பேட்டி கண்டு விவரங்களை ஆசிரியரிடம் காட்டினான் ஆனந்தன். 

அவர் பெயர் தண்டபாணி. ஒரு சிறிய தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து ஒய்வு பெற்றவர். ஒய்வு பெற்ற பின், ஒரு நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வாட்ச்மேனாக இருக்கிறார். 

மகன் பி.ஏ படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறான். பள்ளிப்படிப்பு  மட்டுமே முடித்த மகள் ஒரு தொழிற்சாலையில் உதவித் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருக்கிறாள். தண்டபாணியின் மனைவியும் வீட்டு வேலை செய்து சம்பாதிக்கிறாள். 

மூன்று பேர் சம்பாதித்தும் பற்றாக்குறைதான். பையனுக்கு வேலை கிடைத்தால் கொஞ்சம் விடிவு பிறக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் தண்டபாணி.      

அன்று தண்டபாணி இரவுப் பணிக்காக பஸ்ஸில் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார். அவர் இறங்க வேண்டிய இடம் கடைசி நிறுத்தம் என்பதால் பஸ்ஸில் போகும்போது தூங்கிக்கொண்டே போயிருக்கிறார். பக்கத்தில் உட்கார்ந்திருந்தது யார் என்று கூட கவனிக்கவில்லை. 

கடைசி நிறுத்தம் வந்ததும் விழித்துக்கொண்டு இறங்க முற்பட்டபோது பக்கத்தில் ஒரு சிறிய தோல் பை இருந்ததை கவனித்து அதைத் திறந்து பார்த்திருக்கிறார். உள்ளே நோட்டுக்கற்றைகள்!

கண்டக்டர் டிரைவர் எல்லோரும் இறங்கிப் போய் விட்டதால், பையை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த காவல் நிலையத்தில் கொண்டு போய்க் கொடுத்து விட்டு அப்புறம் வேலைக்குப் போயிருக்கிறார். அதனால் வேலைக்குப் போவதில் தாமதம் ஏற்பட்டு, திட்டு வாங்கியிருக்கிறார்.

விஸ்வநாதன் இந்த விவரங்களைப் படித்து விட்டு "உப்புச் சப்பில்லாத நியூஸ்" என்று சொல்லி விட்டு அரைமனத்தோடுதான் அதை வெளியிட்டான். 

செய்தி வெளியான இரண்டு நாட்களில் பல வாசகர்களிடமிருந்து தண்டபாணியைப் பாராட்டிப் பல கடிதங்கள் வந்தன. பலர் தண்டபாணிக்கு உதவும் வகையில் பணம் வேறு அனுப்பியிருந்தார்கள். 

'தின அலைகளி'ல் செய்தி வந்ததைத் தொடர்ந்து, மற்ற பத்திரிகைகளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் தண்டபாணியைப் பேட்டி கண்டு வெளியிட்டன.

ஒரு சில நாட்களில் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவி சேர்ந்திருந்தது.

ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையுடன் ஆனந்தன் தண்டபாணியைப் பார்க்கச் சென்றான். 'தின அலைகளு'க்கும், மற்ற ஊடகங்களுக்கும், தனக்கு உதவ முன்வந்தவர்களுக்கும், தன்னைப் பாராட்டியவர்களுக்கும் நன்றி தெரிவித்த தண்டபாணி நிதி உதவி எதையும் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

"என்னங்க இது? அந்தப் பணத்தை நான் எடுத்துக்கிட்டிருந்தா அது திருட்டு. திருடாம இருந்ததுக்காக இந்தப் பணத்தை நான் வாங்கிக்கணுமா?" என்றார் தண்டபாணி.

தண்டபாணி நிதி உதவி பெற மறுத்ததை 'தின அலைகள்' முதல் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் தண்டபாணிக்கு மேலும் பாராட்டுகள் குவிந்தன.

ஒரு வாரம் கழித்து ஒரு தொழில் அதிபர் தண்டபாணியின் மகனுக்குத் தன் நிறுவனத்தில் வேலை கொடுக்க முன் வந்தார். 

தண்டபாணி அவருக்கும், 'தின அலைகள்' பத்திரிகைக்கும் நன்றி தெரிவித்து விட்டு அந்த உதவியை ஏற்றுக்கொண்டார்.

இல்லறவியல் 
             அதிகாரம் 18         
வெஃகாமை  (பிறர் பொருளை விரும்பாமை) 
குறள் 179
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் 
திறன்அறிந் தாங்கே திரு

பொருள்:  
அறம் எது என்பதை அறிந்து பிறர் பொருளை நாடாமல் இருக்கும் அறிவுடையவர்களின் தகுதியை அறிந்து திருமகள் அவர்களிடம் சேர்வாள்.

                                                                         குறள் 180 
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Friday, June 15, 2018

178. அடகுக்கடை

வஜ்ரவேலு தன் இருக்கையிலிருந்து தலையைத் திருப்பி, பின்புறம் இருந்த கண்ணாடி அலமாரியைப் பார்த்தான்.  

"அலமாரி நிரம்பி இருக்கே! புதுசா எதுவும் வைக்க முடியாது போலருக்கே!" என்றான்.

"எப்படிங்க இடம் இருக்கும்? ஒண்ணு அடகு வச்சவங்க கடனை அடைச்சுட்டுப் பொருட்களை மீட்டுக்கிட்டுப் போகணும், இல்லை, நாமாவது மீட்டுக்கிட்டுப் போகாத பொருட்களை ஏலம் போடணும். இங்கதான் ரெண்டுமே நடக்கறதில்லியே!" என்றான் கணக்காளன் குமரவேல்.

வஜ்ரவேலு சிரித்தான். "யாரும் கடனை அடைக்காமலா பத்து வருஷமா கடையை நடத்திக்கிட்டிருக்கோம்? எல்லாருக்கும் சம்பளம் கொடுத்து, என் குடும்பச் செலவுக்கும் காணற அளவுக்கு வருமானம் வந்துக்கிட்டுத்தானே இருக்கு?"

"என்னங்க நீங்க, ஒண்ணும் தெரியாத மாதிரி பேசறீங்க? இந்த அடகுத் தொழிலை நடத்தறவங்க யாருமே உங்களை மாதிரி அடகு வச்ச பொருட்களை ஏலம் போடாம வச்சுக்கிட்டிருக்க மாட்டாங்க!" என்றான் குமரவேல்.

அப்போது ஒரு வாடிக்கையாளர் வரவே, அவரிடம் கவனத்தைச் செலுத்தினான் குமரவேல். பேரேட்டை எடுத்துப் பார்த்து விட்டு, கால்குலேட்டரில் ஏதோ கணக்குப் போட்டு விட்டு அவர் செலுத்த வேண்டிய தொகையை அவரிடம் சொன்னான். அவர் பணத்தைக் கொடுத்ததும், அதை எண்ணிப் பெட்டியில் வைத்து விட்டு, அலமாரியில் இருந்த ஒரு வெள்ளிக் குத்துவிளக்கை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு, அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டான்.

அவர் வஜ்ரவேலுவைப் பார்த்துக் கைகூப்பி விட்டுச் சென்றார்.  

"புரோநோட்டு காலாவதி ஆகி ஆறு மாசம் ஆச்சு. புதுசா புரோநோட்டு எழுதி வாங்கறதுக்காக நம்ம ஆறுமுகம் ஆறு மாசமா அவரு பின்னால அலைஞ்சுக்கிட்டிருக்காரு. ஆளையே பிடிக்க முடியல. இப்ப வந்து பணத்தைக் கட்டிட்டு அடகு வச்ச வெள்ளிக் குத்து விளக்கை வாங்கிக்கிட்டுப் போறாரு. நாம பொருளை ஏலம் போட்டுடுவோமோங்கற பயம் கொஞ்சம் கூட இல்லாம இருந்திருக்காரு!" என்றான் குமரவேல்.

வஜ்ரவேலு சிரித்தான்.

"நீங்க எப்படி இவ்வளவு நம்பிக்கையா இருக்கீங்கன்னு எனக்குப் புரியலீங்க!" என்றான் குமரவேல்.

"புரியறதுக்கு என்ன இருக்கு? நாம வட்டிக்குக் கடன் கொடுக்கற தொழிலை நடத்திக்கிட்டிருக்கோம். நம்மகிட்ட கடன் வாங்கிட்டுப் போறவங்க குறிப்பட்ட காலத்துக்குள்ள கடனைத் திருப்பிக் கொடுக்கலேன்னா அவங்க அடகு வச்ச பொருளை நாம ஏலம் விட்டு நமக்குச் சேர வேண்டிய பணத்தை எடுத்துக்கலாம். அதுக்கு சட்டப்படி நமக்கு உரிமை இருக்கு. ஆனா நான் அப்படிச் செய்ய விரும்பல. நம்மகிட்ட அடகு வச்சிருந்தாலும் அது அவங்களோட பொருள்தான். அதை நாம எடுத்து வித்து நம்ம கடனை வசூலிக்க எனக்கு இஷ்டமில்லை. எப்படியும் பொருளை அடகு வச்சவங்க அதை மீட்கணும்னுதானே நினைப்பாங்க? அதனால கொஞ்ச நாள் ஆனாலும் பணத்தைக் கட்டிப் பொருளை மீட்டுப்பாங்கன்னு நினைச்சு நாம பொருளை ஏலம் போடாம வச்சிருக்கோம்."

"சில பேரால கடனைத் திருப்பிக் கட்ட முடியாமயே போயிடுமே!"

"அது மாதிரி நடந்திருக்கு. நீங்க வேலைக்கு வந்தப்பறம் அப்படி நடக்காததால உங்களுக்குத் தெரியல. ரொம்ப நாள் ஆச்சுன்னா, நானே அவங்களைக் கூப்பிட்டு அவங்க அடகு வச்ச பொருளை அவங்க கிட்ட கொடுத்து அதை வித்துப் பணத்தைக் கட்டச் சொல்லுவேன். அது மாதிரி சில சமயம் நடந்திருக்கு."

"அப்ப எதுக்கு அடகுப் பொருளை வாங்கணும்? அடகுப் பொருள் இல்லாமயே கடன் கொடுக்கலாமே!"

"கடன் வாங்கறவங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கணுமே அதுக்குத்தான் அடகுப் பொருள் வாங்கறது."

"அப்ப ஏலம் போடறதில என்ன தப்பு?"

"சட்டப்படி தப்பு இல்லதான். மத்தவங்க பொருளை நாம ஏலம் போடறதை விட அவங்களையே வித்துக் கொடுக்கச் சொல்றது நியாயமா இருக்கற மாதிரி எனக்குத் தோணுது."

"ஐயா! உங்களுக்குத் தெரியும். இதுக்கு முன்னாடி நான் இந்த ஊர்ல இருக்கற இன்னொரு அடகுக் கடையில வேலை செஞ்சேன். குறிப்பிட்ட காலத்துக்குள்ள கடனைக் கட்டலேன்னா அவரு நோட்டீஸ் கொடுத்துட்டுப் பொருளை ஏலம் போட்டுடுவாரு. அவருக்கு நிறைய லாபம் வரதை நான் பாத்திருக்கேன். நாமும் லாபத்துக்காகத்தானே தொழில் நடத்தறோம்?"

"அந்தக் கடையை விட்டு ஏன் வந்தீங்க?"

"அதான் சேரும்போதே சொன்னேனே சார்! அங்கே சம்பளம் கொடுக்க ரொம்ப லேட் பண்ணினாங்க. மூணு மாச சம்பளம் பாக்கி. அதனாலதான் அந்த வேலையை விட்டுட்டேன்."

"ஏன் அவங்களால சம்பளம் சரியாக் கொடுக்க முடியல?"

"என்னவோ தெரியலீங்க. லாபம் நிறைய வந்தா கூட அங்கே எப்பவுமே பணத் தட்டுப்பாடுதான். புதுசாக் கடன் கேக்கறவங்களுக்குக் கொடுக்கக் கூடப் பல சமயம் பணம் இருக்காது. அடகு வச்ச பொருளை ஏலம் போட்டதை எதிர்த்து சில பேரு கோர்ட்ல கேஸ் போட்டிருக்காங்க. அந்தக் கேஸ்களை வாதாட வக்கீல்களுக்கு வேற அப்பப்ப பணம் கொடுக்கணும்."

"அவங்க நிறைய லாபம் சம்பாதிக்கறதா சொல்றீங்க. ஆனா அங்க பணத் தட்டுப்பாடு இருக்கு. நான் அதிகம் லாபம் சம்பாதிக்காம இருக்கலாம். ஆனா நான் போட்ட முதல் அழியாம அப்படியேதான் இருக்கு. எப்பவுமே கடன் கேட்டு வரவங்களுக்குக் கொடுக்கப் பணம் இல்லாம போனதில்லை. ஓரளவுக்கு வசதியா வாழற அளவுக்கு எனக்கு இந்தத் தொழில்லேருந்து வருமானம் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. மத்தவங்களுக்குக் கடன் கொடுத்து அவங்க கிட்டேருந்து வர வட்டிதான் என் வருமானம். ஆனா அவங்க அடகு வச்ச பொருளை என் பொருளா நினைக்காம அவங்களோட பொருளாகவே நினைச்சுக்கிட்டுத்தான் இந்தத் தொழிலை நடத்திக்கிட்டு வரேன்."

அப்போது இன்னொரு வாடிக்கையாளர் அங்கே வந்தார். "ரெண்டு மாசம் முன்னால என் பெண்டாட்டியோட சங்கிலியை அடகு வச்சுப் பணம் வாங்கிக்கிட்டுப் போனேன்" என்றார்.

"பணத்தைக் கட்டி அதை மீட்கப் போறீங்களா?" என்றான் குமரவேல்.

"இல்லை" என்று சற்றுத் தயங்கியவர், வஜ்ரவேலுவைப் பார்த்து, "தப்பா நினைச்சுக்காதீங்க. நாளைக்கு ஒரு கல்யாணத்துக்குப் போகணும். என் பெண்டாட்டிக்குக் கழுத்துல போட்டுக்க வேற நகை இல்ல. அந்த சங்கிலியைக் கொடுத்தீங்கன்னா, நாளன்னைக்குத் திரும்பக் கொண்டு வந்து வச்சுடறேன்" என்றார்.

"ஏங்க, இது என்ன அடகுக்கடையா, பாங்க் லாக்கரா?" என்றான் குமரவேல்.

"சங்கிலியைக் கொடுத்தா அதுக்கு பதிலா வேற பொருளை அடகு வைக்க முடியுமா?" என்றான் வஜ்ரவேலு.

"வேற எதுவும் இல்லியே! டிவி பொட்டியை வேணும்னா வச்சுட்டுப் போறேன்"

"பரவாயில்ல. உங்களை நம்பறேன். நகையை வாங்கிக்கிட்டுப் போங்க. சொன்னபடி நாளன்னைக்குத் திரும்பக் கொடுத்துடணும்" என்ற வஜ்ரவேலு, குமரவேலிடம் திரும்பி "கையெழுத்து வாங்கிக்கிட்டு அவரோட நகையைக் கொடுங்க!" என்றான்.

"சந்தேகமே இல்ல. பாங்க் லாக்கர்தான் இது!" என்று முணுமுணுத்தான் குமரவேல்.   

     இல்லறவியல் 
             அதிகாரம் 18         
வெஃகாமை   (பிறர் பொருளை விரும்பாமை) 
குறள் 178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை 
வேண்டும் பிறன்கைப் பொருள்.

பொருள்:  
செல்வம் குறையாமல் இருப்பதற்கான வழி மற்றவர்களின் பொருளை விரும்பாமல் இருப்பதேயாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

                                                                         குறள் 179 
பொருட்பால்                     .                                                                    காமத்துப்பால்


































Tuesday, June 12, 2018

177. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...

ராம்குமாருக்கு நினைவு வந்தபோது தான் மருத்துவமனையில் படுத்திருப்பது தெரிந்தது. உடலில் ஒரு கனமான உணர்வு, அத்துடன் ஒரு ஆழமான வலி.

சற்று நேரம் கழித்து மருத்துவர் வந்து உடலைப் பரிசோதனை செய்து விட்டு, "எப்படி இருக்கீங்க?" என்றார்.

'நான் எப்படி இருக்கிறேன் என்பதை நீங்கள்தானே சொல்ல வேண்டும்!' என்று நினைத்துக் கொண்ட ராம்குமார், "என்ன ஆச்சு எனக்கு?" என்றான்.

"திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டீங்க. நௌ யூ ஆர் ஆல்ரைட். நான் மறுபடியும் வந்து பாக்கறேன்" என்று சொல்லி விட்டு அவர் போய் விட்டார்.

பிறகு அவன் மனைவி கிரிஜாவும், வேறு சில உறவினர்களும், நண்பர்களும் வந்து பார்த்தார்கள்.

அடுத்த சில மணி நேரங்களில், அவன் மனைவியும் மற்றவர்களும் சொன்னதிலிருந்தும், சொல்லாமல் விட்டதிலிருந்தும், தன்னுடைய உடல் உணர்வுகளிலிருந்தும் அவன் புரிந்து கொண்டது இது.

மூன்று நாட்களுக்கு முன்பு அவன் திடீரென்று மயங்கி விழுந்து விட்டான். அவனுக்கு வந்திருப்பது ஸ்ட்ரோக். உடலின் வலது பக்கம் முழுவதும் உணர்வு மரத்து விட்டது. இடது பக்கம் முழுவதும் வலி.

"இன்னிக்கு என்ன தேதி?" என்றான் ராம்குமார்.

"ஏப்ரல் இருபது" என்றாள் கிரிஜா.

"மை காட்! 22ஆம் தேதிதானே நாம் ஸ்விட்ஸர்லாந்துக்குக் கிளம்பறதா இருந்தோம்!" என்றான் ராம்குமார்.

கிரிஜாவிடமிருந்து ஒரு விசும்பல் கேட்டது. அதற்குக் காரணம் தன்னுடைய உடல்நிலையா அல்லது ஸ்விட்ஸர்லாந்துப் பயணம் தடைபட்டு விட்டதே என்ற வருத்தமா என்று அவனுக்குப் புரியவில்லை.

ராம்குமார் பொறியியல் படிப்பை முடித்த நேரத்தில் அவனுக்கு ஒரு லட்சியம் இருந்தது.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்பதுதான் அது.

அவனுடைய அன்றையப் பொருளாதார நிலைக்கு ஏற்ப, குறைந்த முதலீட்டில் ஒரு சிறிய என்ஜினியரிங் தொழிற்சாலையைத் தொடங்கினான். கடினமாக உழைத்து வாடிக்கையாளர்களைப் பிடித்து சில ஆண்டுகளிலேயே தன் நிறுவனத்தைப் பெருமளவுக்கு உயர்த்தி விட்டான்.

அப்போது ஒரு தொழில் ஆலோசகரின் தொடர்பு அவனுக்குக் கிடைத்தது. தன் நிறுவனத்தை ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக வளர்ச்சி அடையச் செய்ய முடியுமா என்பது குறித்து அவரிடம் ஆலோசனை கேட்டான் அவன்.

"ஏன் முடியாது? ஒண்ணுமில்லாதவங்கள்ளாம் வெறும் பேப்பர்களைக் காமிச்சு கம்பெனிகளை புரோமோட் பண்றாங்க. உங்ககிட்ட சாலிடா ஒரு தொழில் இருக்கு. கட்டிடம், இயந்திரங்கள் எல்லாம் இருக்கு. பத்து வருஷத்திலே உங்க தொழில் வேகமா வளர்ந்திருக்கு. விற்பனை, லாபம் எல்லாமே பல மடங்காயிருக்கு. உங்க கம்பெனியை விரிவாக்க ஒரு திட்டம் தயார் பண்ணுங்க. பப்ளிக் இஷ்யூல பங்குகளைப் பொது மக்களுக்கு விற்று உங்க கம்பெனியை ஒரு கார்ப்பரேட் நிறுவனமா மாத்திடலாம்" என்றார் அவர்.

ராம்குமார் உற்சாகத்துடன்,"அப்படியா சொல்றீங்க? எங்கிட்ட பிளான் எல்லாம் இருக்கு. இதுக்கு எவ்வளவு டைம் ஆகும்?" என்றான்.

"ரெண்டு வருஷம்!"

"அவ்வளவு டைம் ஆகுமா?"

"பப்ளிக் இஷ்யூவுக்கு உடனே ஏற்பாடு பண்ணிடலாம். ரெண்டு வருஷம்னு நான் சொன்னது சில அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் எல்லாம் பண்றதுக்கு!"

"என்ன அட்ஜஸ்ட்மெண்ட்ஸ்?"

"நீங்க பத்து லட்ச ரூபாய் முதலீடு செஞ்சிருக்கீங்க. இப்ப உங்க நிறுவனத்தோட மதிப்பு ஒரு கோடி ரூபா இல்லியா?"

"ஆமாம்."

"முதல்ல, இந்த மதிப்பை மூணு கோடி ரூபாய்னு ஆக்கணும்."

"ரெண்டு வருஷத்தில அப்படிச் செய்ய முடியாதே!"

"நான் சொல்றது புக் அட்ஜஸ்ட்மெண்ட்ஸ்! ரெண்டு வருஷத்திலே நீங்க புதுசா கட்டிடங்கள், இயந்திரங்கள் இதிலெல்லாம் முதலீடு பண்ணின மாதிரி காட்டி உங்க நிறுவனத்தோட மதிப்பை அதிகரிக்கணும்."

"அது எப்படி முடியும்? முதலீடு பண்ணப் பணம் எப்படி வந்ததுன்னு காட்ட வேண்டாமா?"

"அதைப் பத்தியெல்லாம் நீங்க ஏன் கவலைப்படறீங்க? அதுக்கெல்லாம் நிறைய வழி இருக்கு! இப்ப உங்களுக்குக் கடன் எதுவும் இல்லை. அதனால கொஞ்சம் கடன் வாங்கின மாதிரியும், கொஞ்சம் முதலீடு உங்ககிட்டேருந்து வந்த மாதிரியும் காமிக்கலாம். 

"தேவைப்பட்டா உங்க சொத்துக்கள் மேல பாங்க்கிலே கடன் வாங்கிட்டு அதைத் தொழில்ல முதலீடு செஞ்ச மாதிரியும் காட்டிக்கலாம். அப்புறம் அடுத்த ரெண்டு வருஷம் உங்க லாபத்தை அதிகரிச்சுக் காட்டி அதை நீங்க முதலீடு பண்ணின மாதிரி காமிக்கலாம். 

"கம்பெனியில 'புதுசா சேர்ந்த' சொத்துக்கள் மேல டிப்ரீஸியேஷன் நிறைய வரும். அதனால அதிக வருமானம் காட்டினாலும் கூடுதல் வரி கட்ட வேண்டி இருக்காது. இதையெல்லாம் எப்படிப் பண்றதுங்கறதை நான் பாத்துக்கறேன். எனக்குக் கொடுக்கற கன்சல்டேஷன் ஃபீஸ் மட்டும்தான் உங்களுக்குக் கூடுதல் செலவு!" என்று சிரித்தார் ஆலோசகர்.

ஆலோசகர் சொன்னபடியே, இரண்டு ஆண்டுகளில் நிறுவனத்தின் சொத்து மதிப்பை 3 கோடியாக 'உயர்த்திய' பிறகு, பங்கு விநியோகத்துக்குப் போனார்கள்.

ராம்குமாரின் விரிவாக்கத் திட்ட மதிப்பை 20 கோடியிலிருந்து 25 கோடி என்று உயர்த்தினார் ஆலோசகர். உயர்த்திக் காட்டப்படும் ஐந்து கோடியில் மற்றவர்களுக்கு கமிஷன் எல்லாம் கொடுத்தது போக 4 கோடி ரூபாய் ராம்குமாருக்குப் பல்வேறு வடிவங்களில் வந்து சேரும் என்று உறுதி கூறினார்.

"இதெல்லாம் தப்பு இல்லையா? ஷேர் வாங்கறவங்களை ஏமாத்தறது இல்லியா?" என்றான் ராம்குமார்.

"ஷேர்களில் முதலீடு பண்றவங்கள்லாம் பெரிய லாபம் சம்பாதிக்கணும்கற நோக்கத்திலதான் முதலீடு பண்றாங்க. ஷேர்கள்ள முதலீடு செய்யும்போது லாபமும் வரலாம், நஷ்டமும் வரலாம்னு தெரிஞ்சுதானே முதலீடு பண்றாங்க? அதனால இப்படியெல்லாம் பண்றதுல ஒண்ணும் தப்பு இல்ல. சொல்லப் போனா, முதலீடு பண்றவங்கள்ள ரொம்பப் பேருக்கு இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியும். தெரிஞ்சுதான், எப்படியும் தங்களுக்கு லாபம் வரும்னு எதிர்பார்த்து முதலீடு பண்றங்க!" என்றார் ஆலோசகர்.

ராம்குமாருக்கு மனம் சமாதானமாகவில்லை. ஏற்கெனவே சொத்து மதிப்பை இரண்டு கோடி ரூபாய் அதிகமாகக் காட்டியாகி விட்டது. மறுபடியும் ஐந்து கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பை உயர்த்துகிறோமே என்ற உறுத்தல் இருந்தது. ஆயினும் முயற்சியில் இறங்கிய பின் இது போன்ற தயக்கங்கள் கூடாது என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

பப்ளிக் இஷ்யூ பெரும் வெற்றி அடைந்து பங்குகள் விநியோகிக்கப்பட்டு ராம்குமாரின் நிறுவனம் லட்சக்கணக்கான பங்குதாரர்களைக் கொண்ட கார்ப்பரேட் நிறுவனமாகியது.

நிறுவனம் பெரிதாகி விட்டதால், ஆலோசகரின் யோசனைப்படி, நிறுவனத்தை நிர்வகிக்க நிர்வாக இயக்குனர் ஒருவரை நியமித்து விட்டு, தலைவர் என்ற பதவியை ஏற்றுக்கொண்டு அன்றாடப் பணிகளிலிருந்து ஒய்வு பெற்று விட்டான் ராம்குமார்.

முதல் முறையாக, பணம், நேரம் இரண்டையுமே எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம் என்ற வசதி ராம்குமாருக்கு ஏற்பட்டது. மனைவி, மகன், மகள் அனைவருடனும் ஒரு மாதம் ஸ்விட்ஸர்லாந்து சென்று வரத் திட்டமிட்டு, பயணம் போக வேண்டிய சில நாட்களுக்கு முன்தான் அவனுக்கு இந்த ஸ்ட்ரோக் வந்து விட்டது.

றைக்கு வெளியே, அவன் மனைவி கிரிஜா டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தது ராம்குமாரின் காதில் விழுந்தது.

"எப்ப டாக்டர் அவருக்கு முழுசா குணமாகும்?"

"சொல்ல முடியாது மேடம். அவரோட உடம்பில ஒரு பக்கம் செயலிழந்து போயிருக்கு. அது சரியாக எவ்வளவு நாள் ஆகும்னு சொல்ல முடியாது. மாசக்கணக்கில ஆகலாம். வருஷக்கணக்கிலயும் ஆகலாம். அதை விட சீரியஸான விஷயம் அவர் உடம்பில இன்னொரு பக்கத்தில இருக்கற வலி. அந்த வலியோடதான் அவர் வாழ்ந்தாகணும். அவரோட வலி கொஞ்சம் குறைஞ்சாலே நீங்க சந்தோஷப்படணும்" என்றார் டாக்டர்.

 ராம்குமாருக்குத் தன் உடல் வலி பன்மடங்காக அதிகரித்து விட்டது போல் இருந்தது.

இல்லறவியல் 
             அதிகாரம் 18         
வெஃகாமை   (பிறர் பொருளை விரும்பாமை) 
குறள் 177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் 
மாண்டற் கரிதாம் பயன்.

பொருள்:  
பிறர் பொருளை அபகரிப்பதனால் கிடைக்கும் செல்வம் தனக்கு வேண்டாம் என்று கருத வேண்டும். அப்படிப் பெற்ற செல்வத்தின் பயனை அனுபவிக்கும் நேரத்தில், அது நன்மை பயப்பதாக இருக்காது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

                                                                         குறள் 178 
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்