About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, June 20, 2018

181. சந்திரன் செய்த தவறு

தான் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய கடிதத்தின் விளைவு இப்படி இருக்கும் என்று சந்திரன் நினைக்கவில்லை.

ஒரு அரசு நிறுவனத்தில் இளநிலை அதிகாரியாகப் பணி செய்து வந்த அவன் அலுவலகத்தில் நடக்கும் ஊழல்களையும், முறைகேடுகளையும் அதிர்ச்சியுடனும், வேதனையுடனும், இயலாமையுடனும் பார்த்து வந்தான்.

தன் கவனத்துக்கு வந்த முறைகேடுகளைக் கிளை மேலாளர் சுந்தரவதனத்திடம் அவன் பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறான். ஆனால் அவர் அவற்றைக் கண்டும் காணாதவராக இருந்து வந்தார். முறைகேடுகளில் அவருக்கும் பங்கும் பயனும் உண்டு என்பதை நாளடைவில் சந்திரன் புரிந்து கொண்டான்.

வாடகை இடத்தில் இருந்த அவர்கள் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டு தலைமை அலுவலகத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. பல வருடங்களுக்கு முன்பே அவர்கள் வாங்கிப் போட்டிருந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான டெண்டர்கள் கோரப்பட்டன.

அலுவலகத்தின் பணி ஒதுக்கீட்டின்படி இது தொடர்பான கோப்புகள் சந்திரனுக்கு வந்தன. குறைந்த தொகைக்கு டெண்டர் கேட்டிருந்த ஒரு தரமான கட்டுமான நிறுவனத்தின் டெண்டரை ஏற்க வேண்டும் என்று சிபாரிசு செய்து சந்திரன் கோப்பை கிளை மேலாளருக்கு அனுப்பி வைத்தான்.

கோப்பு அவனுக்குத் திரும்பி வரவில்லை. அந்தக் கோப்பு வேறொரு அதிகாரிக்கு மாற்றப்பட்டு விட்டதாகச் சில நாட்கள் கழித்து அவனுக்குத் தெரிய வந்தது. அத்துடன், அதிகத் தொகை கேட்டிருந்த வேறொரு நிறுவனத்துக்கு கட்டிடப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிந்து கொண்டான்.

தன் அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து தலைமை அலுவலகத்துக்கு இது பற்றி விவரமாக ஒரு கடிதம் அனுப்பினான் சந்திரன்.

அவன் கடிதம் அனுப்பிய சில நாட்களில் நிறுவனத்தின் விதிமுறைகளை  மீறியதற்காக சந்திரன் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தலைமை அலுவலகத்தில் இருந்து அவனுக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் வந்தது!

அதிர்ச்சியுடனும் கோபத்துடனும் சந்திரன் கிளை மேலாளரின் அறைக்குப் போனான்.

"என்ன சார் இது? என்ன தப்பு பண்ணினேன்னு என்னை சஸ்பெண்ட் பண்ணியிருக்கீங்க?" என்றான்.

"நான் பண்ணல. ஹெட் ஆஃபிஸ்ல பண்ணியிருக்காங்க" என்றார் சுந்தரவதனம்.

"சரி. என்ன காரணம்னு கேக்கறேன்."

"சந்திரன்! நீங்க ஹெட் ஆஃபீஸுக்கு எழுதினீங்க. அவங்ககிட்டேயிருந்து உங்களுக்கு பதில் வந்திருக்கு. என்னை ஏன் கேக்கறீங்க?"

"நான் ஹெட் ஆஃபீஸுக்கு எழுதினது உங்களுக்கு எப்படி சார் தெரியும்? அவங்க சொல்லித்தானே!"

"நான் என்ன செய்யணும்னு எதிர்பாக்கறீங்க?"

"ஒரு முறைகேடு நடந்திருக்குன்னு நான் முழு விவரத்தோட எழுதியிருக்கேன். அதைப் பத்தி விசாரிக்கறதுக்கு நடவடிக்கை எடுக்காம, என்னை சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்களே, என்ன சார் இது?"

"மிஸ்டர்! நீங்க பண்ணினது தப்புன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கணும். இது ஒரு அரசாங்க நிறுவனம். இங்கே சில சட்ட திட்டங்கள் உண்டு. நீங்க ஹெட் ஆஃபீஸுக்கு நேரடியா எழுதினது ஒரு விதி மீறல். நீங்க உங்க கடிதத்தை இந்த ஆஃபீஸ் மூலமாத்தான் அனுப்பி இருக்கணும்."

"அதாவது உங்க மூலமா! உங்க பேர்லதானே சார் நான் கம்ப்ளெயின் பண்ணினேன்! அதை எப்படி உங்க மூலமே அனுப்ப முடியும்?"

"அப்படின்னா நம்ம ஆஃபீஸ்ல விஜிலென்ஸ் ஆஃபீசர்னு ஒத்தர் இருக்காரே அவர்கிட்ட புகார் கொடுத்திருக்கணும்!"

"அவரு உங்களுக்குக் கீழ வேலை செய்யறவரு. அதோட அவரு உங்க கூட்டாளின்னு இந்த ஆஃபீசுக்கே தெரியும்!" என்றான் சந்திரன்.

"கூட்டாளிங்கறதெல்லாம் தவறான வார்த்தை. கொஞ்சம் பொறுப்பாப் பேசுங்க" என்றார் சுந்தரவதனம் கோபத்துடன்.

"சரி சார். அடுத்தது என்ன?"

"பொதுவா சஸ்பெண்ட் ஆனவரை ஒரு விசாரணை கமிட்டி போட்டு விசாரிப்பாங்க. விசாரணை முடிய மாசக் கணக்கா ஆகும். ஆனா உங்க அதிர்ஷ்டம் திங்கட்கிழமை அன்னிக்கு ஜி எம் வராரு. அவரே உங்களை விசாரிச்சு முடிவு பண்றதா சொல்லியிருக்காரு" என்றார் சுந்தரவதனம்.

"என்னை சஸ்பெண்ட் பண்ணினதே அவருதான்! அவரு என்னத்தை விசாரணை பண்ணப் போறாரு! நடக்கறதைப் பார்த்தா அவருக்குத் தெரிஞ்சுதான் எல்லா மோசடியும் நடக்கற மாதிரி இருக்கு. அவரும் உங்க கூட்டாளியாத்தான் இருப்பாரு!" என்று பொரிந்து தள்ளினான் சந்திரன்.

"நீங்க மறுபடி மறுபடி தப்பு பண்ணிக்கிட்டே இருக்கீங்க. எங்கிட்ட ஜி எம்மைப் பத்தி மோசமாப் பேசினீங்கன்னு நான் பதிவு செஞ்சு, அதுக்காகக் கூட உங்க மேல நடவடிக்கை எடுக்கலாம்."

"நீங்க என்ன வேணும்னா செய்வீங்க!" என்று சொல்லி விட்டுக் கோபமாக வெளியே வந்தான் சந்திரன்.

'கோபத்தில் ஜி எம்மைப் பற்றி சுந்தரவதனத்திடம் தப்பாகப் பேசி விட்டோமே! அவர் அதை ஜி எம்மிடம் சொன்னால் ஜி எம் என் மேல் கோபப்பட்டு எனக்கு எதிராக முடிவு எடுத்து விடுவாரோ? கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம்' என்று சற்று நேரம் கழித்து அவனுக்குத் தோன்றியது.

செவ்வாய்க்கிழமையன்று சந்திரன் சுந்தரவதனத்தின் அறைக்குச் சென்றான்.

"நேத்திக்கு ஜி எம்மைப் பாத்தீங்களா? என்ன சொன்னாரு?" என்றார் சுந்தரவதனம்.

"ஏன் சார், அன்னிக்கு உங்ககிட்ட பேசச்சே கோபத்தில ஜி எம்மைப் பத்தித் தப்பாப் பேசிட்டேன். அதை நீங்க அவர்கிட்ட சொன்னீங்களா?" என்றான் சந்திரன்.

"ஏன், அவர் இதைப்பத்தி ஏதாவது கேட்டாரா?"

"இல்லை."

"நான் சொல்லியிருந்தாத்தானே அவரு கேட்டிருக்கப் போறாரு!"

"என்ன சார் சொல்றீங்க? நீங்க அவர்கிட்ட எதுவும் சொல்லலியா?"

"இங்க பாருங்க சந்திரன்! உங்க மேல எனக்குக் கோபம் இருக்கலாம். அதுக்காக நீங்க மத்தவங்களைப் பத்தி எங்கிட்ட சொன்னதையெல்லாம் நான் அவங்ககிட்ட போய்ச் சொல்லுவேன்னு நெனச்சீங்களா? நான் அப்படிப்பட்ட ஆளு இல்ல. நான் அப்படிச் சொல்லியிருந்தா அவருக்கு உங்க மேல ஒரு தப்பான அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கும். அது அவரோட விசாரணை முடிவை பாதிக்காதா?"

முதன்முறையாக சந்திரனுக்கு சுந்தரவதனத்தின் மீது மரியாதை ஏற்பட்டது.

"ஜி எம்மோட முடிவு எப்ப சார் தெரியும்?" என்றான் சந்திரன்.

"நீங்க மெயில் செக் பண்ணலியா? உங்களுக்கு வார்னிங் கொடுத்துட்டு உங்க சஸ்பென்ஷனை ரத்து பண்ணிட்டாரு ஜி எம். போய் சீட்டில் உக்காருங்க!" என்றார் சுந்தரவதனம்.

இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ   மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)
குறள் 181
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் 
புறங்கூறான் என்றல் இனிது.

பொருள்:  
ஒருவன் அறவழியில் நடக்காதவனாயிருந்தாலும், மற்றவர் பற்றிப் புறம் கூறாமலிருந்தால் நன்று.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

                                                                         குறள் 182
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

































No comments:

Post a Comment