About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, November 18, 2016

69. உதவித்தொகை

கணவனை இழந்தபின் அம்முலுவுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவள் மகன் கண்ணன்தான். 

கண்ணனுக்கு மூன்று வயது ஆகியிருந்தபோதே அவள் கணவன் வேலுச்சாமி தண்ணீர் லாரியில் அடிபட்டு இறந்து விட்டான்.

அரசாங்கத்தில் இழப்பீடு என்று ஏதோ ஒரு சிறு தொகை கொடுத்தார்கள். அதை வங்கியில் போட்டு அதிலிருந்து வந்த வட்டியிலும் வீட்டு வேலை செய்து கிடைத்த வருமானத்திலும் மகனை வளர்த்து வந்தாள் அம்முலு.

ஒரு வழியாகக் கண்ணனின் பள்ளிப்படிப்பு முடிந்து அவனைப் பொறியியல் கல்லூரியிலும் சேர்த்து விட்டாள். கண்ணன் பெற்ற நல்ல மதிப்பெண்களால் அவனுக்கு அரசுக் கல்லூரியிலேயே இடம் கிடைத்தது. அரசுக்கல்லூரி என்பதால் கட்டணம் குறைவுதான்.

எப்படியும் நான்கு வருடங்கள் சமாளித்து விடுவாள். அப்புறம் அவன் படிப்பு முடிந்து ஒரு நல்ல வேலையும் கிடைத்து விட்டால் அவள் பட்ட கஷ்டங்களுக்குப் பலன் கிடைத்து விடும்.

கண்ணன் இரண்டாவது ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு செய்தி சொன்னான். ஒரு அறக்கட்டளையில் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறார்களாம். முதல் ஆண்டுப் பரிட்சையில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவன் கல்லூரியிலிருந்து எட்டு பேருக்கு அந்த உதவித்தொகை கிடைக்குமாம்.

கண்ணன் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், அவன் எட்டாவது இடத்தில் இருப்பதால், அவனுக்கு அந்த உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகச் சொன்னான். அந்த உதவித்தொகை கிடைத்து விட்டால், கல்லூரிக்குக் கட்ட வேண்டிய கல்விக் கட்டணத்தை அந்த அறக்கட்டளையே செலுத்தி விடும்.

இதைக் கேட்டதும் அம்முலுவுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்பட்டன. என்னதான் குறைவான கட்டணம் என்றாலும், அதைக் கட்டுவதும் அவளுக்கு சிரமம்தான். தான் வேலை செய்கிற இடங்களில் முன்பணம் கேட்டு வாங்கிக் கல்லூரிக் கட்டணத்தைக் கட்டி வந்தாள். பிறகு மாதாமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்வார்கள்.

முதல் செமிஸ்டர் கட்டணம் கட்டுவதற்காகக் கடன் வாங்கி அந்தக் கடன் தீரும் சமயத்தில் இரண்டாவது செமிஸ்டருக்கான கட்டணம் கட்டும் நேரம் வந்து விட்டது. இனி இந்த சிரமம் இருக்காது. வீட்டுச் செலவுக்குப் பணம் சற்று தாராளமாகவே இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள்.

"சீக்கிரமே அதற்கு மனுப் போட்டு விடு" என்றாள் அம்முலு. "இன்றைக்கே அப்ளை பண்ணி விடுகிறேன்" என்றான் கண்ணன்.

ஆனால் ஒரு மாதம் கழித்து கண்ணன் "அம்மா, அந்த ஸ்காலர்ஷிப் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு ரேங்க் தள்ளிப் போய் விட்டது. எட்டு பேருக்குத்தான் கொடுத்தார்கள். நான் ஒன்பதாவது இடத்தில்தான் இருக்கிறேனாம்" என்றான்.

அம்முலுவுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், "பரவாயில்லை விடு. இதை எதிர்பார்த்தா உன்னை நான் கல்லூரியில் சேர்த்தேன்? நீ கிடைக்கும் என்று சொன்னதால் கொஞ்சம் எதிர்பார்த்தேன். இல்லாவிட்டால் இந்த ஏமாற்றம் கூட இருந்திருக்காது" என்றாள்.

தாய் இந்த ஏமாற்றத்தை இயல்பாக எடுத்துக் கொண்டதைப் பார்த்த கண்ணனின் கண்களில் நீர் முட்டியது.

சில நாட்கள் கழித்து, கண்ணன் தன் தாயிடம் வந்து "அம்மா உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்" என்றான்.

"சொல்லு" என்றாள் அம்முலு, பையன் யாரையாவது காதலிப்பதாகச் சொல்லப் போகிறானோ என்ற கவலையுடன்.

"நான் உன்னிடம் பொய் சொல்லி விட்டேன்."

"பொய்யா? என்ன அது?"

"எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை என்று சொன்னேனே அது பொய். நான் அப்ளை பண்ணவே இல்லை."

"ஏன்? நம் குடும்பம் இருக்கும் நிலை உனக்குத் தெரியாதா? அது கிடைத்திருந்தால் நமக்குப் பெரிய உதவியாக இருந்திருக்குமே!"

"எனக்குத் தெரியும் அம்மா. நான் எட்டாவது இடத்தில்தான் இருந்தேன். நான் அப்ளை பண்ணியிருந்தால் எனக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். எனக்கு அடுத்தபடியாக ஒன்பதாவது இடத்தில் இருந்த பையனுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் விண்ணப்பம் போடாமல் இருந்து விட்டேன்.

"அவன் அப்பா ஒரு குடிகாரர். அவனுக்கு ஃபீஸ் கட்டுவதற்காக அவன் அம்மா யாரிடமாவது கடன் வாங்கி வைத்திருந்த பணத்தைக் கூட எடுத்துக் குடித்து விடுவார். நம்மை விட அவன் மிகவும் கஷ்டப்படுகிறவன். இப்போது இந்த ஸ்காலர்ஷிப் அவனுக்குக் கிடைத்து விட்டதால், ட்ரஸ்டே ஃபீஸ்  கட்டி விடும். அவன் அப்பாவின் தொல்லையால் அவன் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கும். உனக்கும் கஷ்டம்தான். நான் கல்லூரி விட்டு வந்ததும் ஏதாவது கடையில் வேலை செய்து கொஞ்சம் பணம் சம்பாதிக்கப் பார்க்கிறேன்" என்றான் கண்ணன்.

அம்முலு கோபமாகக் கத்துவாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவள் கண்களில் கண்ணீர் மல்க நின்றாள். சற்று நேரம் பேச்சு வரவில்லை.

விசும்பிக்கொண்டே, "ராஜா! ஒன்னை நெனச்சா எனக்குப் பெருமையா இருக்குடா. நாம கஷ்டத்துல இருக்கும்போதும் நம்மளை விட அதிகமா கஷ்டப்படறவங்களுக்காக விட்டுக் கொடுத்திருக்கியே, இந்த மனசு யாருக்குடா வரும்? எத்தனை படிப்புப் படிச்சாலும் இப்படிப்பட்ட சிந்தனை அந்தப் படிப்பினால் வராதுடா.

"நீ வேலையெல்லாம் ஒண்ணும் செய்ய வேண்டாம். இத்தனை நாள் பாத்துக்கிட்ட மாதிரி, இனிமேயும் நான் பாத்துக்கறேன். இன்னும் மூணு வருஷந்தானே? ஓடிடும்! நீ செஞ்சிருக்கிற காரியத்தை மனசில நெனச்சுக்கிட்டிருந்தாலே எனக்குப் பெரிய தெம்பு வந்துடும்" என்று சொல்லித் தன் மகனின் கன்னத்தை அழுந்தக் கிள்ளினாள் அம்முலு.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 69
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய்.

பொருள்:
ஒரு தாய் தன் மகன் ஒரு உயர்ந்த மனிதன் என்று அறியும்போது, அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விட மிக அதிகமான மகிழ்ச்சியை அடைவாள்.  

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்





















Thursday, November 17, 2016

68. மாதவனின் எதிர்காலம்

"நான் பள்ளிக்கூடத்துல படிச்சப்ப நான்தான்  வகுப்பிலேயே முதல் மாணவனா இருந்தேன். ஆனா நம்ப பையன் ஒரு மக்கா இருக்கானே!" என்றான் சங்கரன்.

"ஏங்க, நம்ப பையன் எண்பது மார்க்குக்கு மேலே வாங்கறான். அவனைப் போய் மக்குங்கறீங்களே!" என்றாள் அவன் மனைவி சாந்தா.

"தொண்ணூற்றெட்டு மார்க்கு, நூறு மார்க்கெல்லாம் சாதாரணமாயிட்ட இந்தக்காலத்தில, எண்பது மார்க்குக்கெல்லாம் என்ன மதிப்பு இருக்கு?"

"டியூஷன் வச்சுப் பாக்கலாமா?"

டியூஷன் வைத்தார்கள். பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. டியூஷன் ஆசிரியரிடம் கேட்டபோது "பையன் கொஞ்சம் டல்தான் சார்!" என்றார் அவர். பள்ளி ஆசிரியர்களும் இதே கருத்தைத்தான் தெரிவித்தார்கள்.

'சரி. அவ்வளவுதான். அவன் விதிப்படி நடக்கட்டும்' என்று சங்கரன் விட்டு விட்டான்.

சங்கரன் பொறியியல் படிப்புப் படித்து விட்டு, தானே ஒரு தொழிற்சாலையை உருவாக்கி நடத்திக் கொண்டிருந்தான். தனக்குப் பிறகு தன் பையன் அதை நடத்த வேண்டும் என்ற விருப்பம் அவனுக்கு இருந்தது.

எனவே மாதவனின் பள்ளிப்படிப்பு முடிந்ததும் அவனைப் பொறியியல் படிப்பில் சேர்த்தான். மாதவன் வாங்கிய எண்பது சதவீத மதிப்பெண்களுக்கு அவனுக்கு சுமாரான ஒரு கல்லூரியில்தான் இடம் கிடைத்தது, அதுவும் நன்கொடை கொடுத்து!

பையன் எப்படியோ  பொறியியல் பட்டதாரி ஆகி,ஒரு நல்ல தொழில் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்து விட்டால், அங்கே ஓரளவுக்கு அனுபவம் பெற்ற பிறகு தன்னுடைய நிறுவனத்தை நிர்வகிக்கும் திறமை பெற்று விடுவான் என்பது சங்கரனின் நம்பிக்கை.

முதல் இரண்டு ஆண்டுகளில் மாதவன் சுமாரான மதிப்பெண்கள்தான் வாங்கி வந்தான். ஆனால் மூன்றாம் ஆண்டில் பொறியியல் பாடங்களைக் கற்கத் தொடங்கியபின் அவனுக்குப் படிப்பில் அதிக ஆர்வம் வந்து விட்டதாகத் தோன்றியது. குறிப்பாக பிராஜக்ட் ஒர்க், செமினார் போன்றவற்றில் அவனுக்கு ஈடுபாடு அதிகம் இருந்தது. தன் தந்தையின் தொழிற்சாலைக்கு நான்கைந்து முறை சென்று அதன் நடைமுறைகளை கவனித்து அறிந்து கொண்டான்.

மாதவன் இறுதி ஆண்டுக்கு வந்தபோது அவன் செய்ய வேண்டிய பிராஜக்ட் ஒர்க்குக்குத் தன் தந்தையின் தொழில் நிறுவனத்தையே எடுத்துக் கொள்ள நினைத்தான் மாதவன். இதைப்பற்றி அவன் தன் தந்தையிடம் பேசியபோது, "உன் பிராஜக்டுக்கு எடுத்துக் கொள்ளப் போகும் விஷயம் என்ன?" என்று கேட்டான் சங்கரன்.

"சில தொழில் நுட்ப மாறுதல்களைச் செய்து, செயல்பாடுகளை எளிமையாக்கி, உற்பத்தித் திறனை அதிகமாக்குவது பற்றித்தான்" என்றான் மாதவன்.

"நான் வெளிநாட்டுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி என் தொழிற்சாலையை உருவாக்கியிருக்கிறேன். இப்போது வெளிநாட்டு நிறுவனத்துடனான என்னுடைய ஒப்பந்தம் முடிந்து விட்டது. ஆனாலும் அதே தொழில் நுட்பத்தை நான் தொடர்ந்து பயன்படுத்தலாம். இதில் பெரிய மாறுதல்கள் எதையும் உன்னால் செய்ய முடியாது."

"நீங்களே சொன்னபடி, இது பழைய தொழில்  நுட்பம். அதனாலதான் வெளிநாட்டு நிறுவனம் இதே தொழில் நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்த உங்களை அனுமதித்திருக்கிறது. அவர்கள் வேறு தொழில் நுட்பத்துக்கு மாறியிருப்பார்கள்!"

"அதைப் பற்றி நமக்கென்ன? இந்தத் தொழில் நுட்பம் நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு என்னால் நிற்க முடிகிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்?"

"இதற்கு மேலும் செய்யலாம் அப்பா. எனக்குச் சில யோசனைகளை இருக்கின்றன. அவற்றைச் செயல் படுத்தினால், அதிக முதலீடு செய்யாமல் நம் தொழிற்சாலையை இன்னும் நவீனமாக்கலாம். இதனால் உற்பத்தித்திறன் அதிகரித்து, தயாரிப்புச் செலவு குறையும்."

"உன் பிராஜக்டுக்காக என்ன மாறுதல்களை வேண்டுமானாலும் உன் ரிப்போர்ட்டில் சிபாரிசு செய். ஆனால் அதையெல்லாம் நடைமுறைப் படுத்த முடியும் என்று எதிர்பார்க்காதே!" என்றான் சங்கரன்.

தன் பிராஜக்டுக்காக மாதவன் தன் சகமாணவர்களுடன் பல நாட்கள் தொழிற்சாலைக்கு வந்து, தொழில் நடைமுறைகளை கவனித்து ஆராய்ந்தான். தொழிற்சாலையில் பணிபுரிந்த உயர் அதிகாரிகளிடமும், தொழிலாளர்களிடமும் பல நுணுக்கங்களைக் கேட்டறிந்தான். ஆனால் சங்கரன் இதில் எதிலும் கலந்து கொள்ளவில்லை.

மாதவனின் பிராஜக்ட் தயாரானதும், அதைக் கல்லூரியில் சமர்ப்பித்தான். அப்போதும் சங்கரன் அதைப் படித்துப் பார்க்கவில்லை.

சில வாரங்களுக்குப் பிறகு, மாதவனின் பிராஜக்ட் பல்கலைக்கழக அளவில் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்ததும் சங்கரனுக்கு வியப்பு ஏற்பட்டது.

மாதவனிடம் பிராஜக்ட் ரிப்போர்ட் நகலை வாங்கிப் படித்துப் பார்த்தான். அதில் தெரிவிக்கப்பட்டிருந்த யோசனைகள் சங்கரனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அவை நடைமுறைக்கு ஏற்றதாகவும், லாபகரமானதாகவும்தான் தோன்றின.

மாதவனின் பிராஜக்ட் ரிப்போர்ட்டை ஒரு தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனத்திடம் கொடுத்து ஆராயச் சொன்னான். அவர்கள் அதற்குச் சில மாதங்கள் ஆகும் என்று சொன்னார்கள்.

இதற்கிடையில், மாதவனுக்கு காம்பஸ் இன்டர்வியூவில் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அவனுடைய படிப்பு முடிந்ததும், வெளியூரிலிருந்த அந்த நிறுவனத்துக்கு அவன் வேலைக்குச் சென்று விட்டான்.

ங்கரன் அணுகியிருந்த தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனம் அவன் தொழிற்சாலைக்குப் பொறியியல் வல்லுநர்களை அனுப்பி, மாதவனின் பிராஜக்ட் ரிப்போர்ட் பற்றி ஆய்வு செய்து தனது கருத்தைத் தெரிவிக்க ஆறு மாதங்கள் ஆகி விட்டன.

மாதவனின் பிராஜக்டை நிச்சயம் அமல் படுத்தலாம் என்று கருத்துத் தெரிவித்திருந்த அந்த நிறுவனம், அதை எப்படிச் செயல் படுத்தலாம் என்று சில ஆலோசனைகளையும் கூறியிருந்தது. சில லட்சங்களும், பல மாதங்களும் செலவழிந்திருந்தாலும், நம்பிக்கையுடன் செயல்பட, அந்த ரிப்போர்ட் சங்கரனுக்கு உதவியாக இருந்தது.

சங்கரன் ஒரு முடிவுக்கு வந்தான். மாதவனிடம் தொலைபேசியில் பேசினான். "டேய் மாதவா! ஒன்னோட பிராஜக்ட் பிரமாதமா இருக்குன்னு நம்ப கன்சல்டன்ட் சொல்லிட்டாங்க. அதை நான் உடனே செயல்படுத்தலாம்னு இருக்கேன்"

"ரொம்ப சந்தோஷம் அப்பா. எனக்கு முதலிலிருந்தே நம்பிக்கை இருந்தது."

"கரெக்ட். ஆனா ஒரு பெரிய மாறுதலைப் பண்றதுக்கு முன்னால நிபுணர்கள்கிட்ட ஆலோசனை கேக்கறது அவசியம் இல்லையா? சரி. இப்ப நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். நீ தயாரிச்ச பிராஜக்டை நீயே செயல் படுத்தணும்னு நினைக்கிறேன். நீ வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துடு."

"இல்லைப்பா. இங்கே கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. இப்பதான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். நீங்க முன்னால சொன்னபடி நான் ஒரு பெரிய கம்பெனில நாலைஞ்சு வருஷமாவது வேலை செஞ்சுட்டு அதுக்கப்பறம் நம்ப கம்பெனிக்கு வந்தா என்னோட அனுபவம் நமக்கு உதவியா  இருக்கும்.

"நான் அப்பப்ப லீவுல அங்கே வரும்போது, சும்மா ஃபேக்டரிக்கு வந்து எல்லாம் எப்படி இருக்குன்னு பாத்துட்டுப் போறேன். எப்ப எனக்கு ஓரளவுக்காவது அனுபவம் கெடைச்சிருக்குன்னு எனக்குத் தோணுதோ, அப்ப வந்து நம்ப கம்பெனியில சேந்துக்கறேன்!" என்றான் மாதவன்.

தொலைபேசியை வைத்து விட்டு சங்கரன் சற்று நேரம் யோசனையில் இருந்தான்.

"என்ன யோசிக்கிறீங்க?" என்றாள் மனைவி.

"நான் சொந்தமாத் தொழில் ஆரம்பிச்சு வெற்றிகரமா நடத்திக்கிட்டு வரதால என்னை ஒரு புத்திசாலின்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். ஆனா நம்ப புள்ள என்னை விட ரொம்ப புத்திசாலியா இருக்கான்!" என்றான் சங்கரன்.

"முன்னேயெல்லாம் அவனை மக்குன்னு சொல்லுவீ ங்களே?" என்று குத்திக் காட்டினாள் மனைவி.

"அவன் மக்கு இல்லை. நான்தான் மக்கு" என்றான் சங்கரன் பெருமிதத்துடன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

பொருள்:
தாம் பெற்ற பிள்ளைகள் தங்களை விட அறிவுள்ளவர்களாக இருப்பது இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இனிமை பயக்கக் கூடியது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Saturday, June 25, 2016

67. அம்மா கணக்கு!

சுந்தர் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, ஏகாம்பரத்திடம் அவர் மனைவி சொன்னாள். "என்னங்க, பத்தாவது வரைக்கும் நம்ம பையனை கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிக்க வச்சுட்டீங்க, பைசா செலவு பண்ணாம! லெவன்த்துக்காவது அவனை வேறே நல்ல ஸ்கூல்ல சேக்கப் பாருங்க."

"அதுக்கு நமக்கு வசதியில்லையே! அதோட கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிக்கற பையங்களை பெரிய ஸ்கூல்லல்லாம் சேத்துக்கவும் மாட்டாங்க."

"அப்ப நம்ப பையன் எஞ்சினீரிங் படிக்க முடியாதா?"

"பாக்கலாம். அவன் தலையெழுத்துப்படி நடக்கும்."

"அவன் தலையெழுத்துப்படி  நடக்கணும்னா, அப்பா அம்மான்னு நாம எதுக்கு இருக்கோம்?" என்றாள் வள்ளியம்மை கோபத்துடன்.

"என்னை மாதிரி ஏழை அப்பாவுக்குப் பொறந்ததும் அவன் தலையெழுத்துதான்!"

பதினொன்றாம் வகுப்புக்குப் போனதும், சுந்தர் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தினான். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் நிறைய மதிப்பெண்கள் வாங்கினான்.

"பாரு பையன் நல்லாப் படிக்கறான். ப்ளஸ் டூல நிறைய மார்க் வாங்குவான்" என்றார் ஏகாம்பரம்.

"இதெல்லாம் போதாதுங்க. மாத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரில 198ஆவது வாங்கினாதான்  ஃபீஸ் குறைவா இருக்கற இஞ்சினீரிங் காலேஜில் இடம் கிடைக்கும்" என்றாள் வள்ளியம்மை.

"பரவாயில்லையே. என்னை விட உனக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கே!" என்றார் ஏகாம்பரம்.

"உங்களை விடன்னு சொல்லாதீங்க. உங்களுக்குத்தான் நம்ப பையனோட எதிர்காலத்தைப் பத்தி அக்கறையே இல்லையே!" என்றாள்
வள்ளியம்மை எரிச்சலுடன்.

ஒரு நாள், "என்னங்க, நம்ப பையனை கவனிச்சீங்களா? சாயந்திரம் ஸ்கூல்லேருந்து வந்ததும் எங்கேயோ போயிடறான். ராத்திரி லேட்டாத்தான் வரான். கேட்டா, ஃப்ரண்ட்ஸோட சேர்ந்து படிக்கறேங்கறான். எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு. நீங்க கொஞ்சம் கேளுங்க" என்றாள்  வள்ளியம்மை.

"பொய்யா சொல்லப் போறான்?"

"எனக்கென்னவோ ஃப்ரண்ட்ஸோட எங்கேயாவது சுத்திட்டு வரானோன்னு சந்தேகமா இருக்கு."

"நாம சொன்னா  கேக்கவா போறான்? தனக்கு எது நல்லதுன்னு அவனுக்கே தெரியணும்."

"நீங்க இப்படித்தான் அக்கறை இல்லாம பேசுவீங்க. எல்லாம் என் தலையெழுத்து!" என்றாள் வள்ளியம்மை.

காலம் ஓடியது. ப்ளஸ் டூ தேர்வுகள் முடிந்து ரிசல்ட் வந்ததும் வள்ளியம்மைக்கு இன்ப அதிர்ச்சி. சுந்தர் 200, 198, 198 என்று மதிப்பெண்கள் வாங்கி இருந்தான்.

"எப்படிடா இவ்வளவு மார்க் வாங்கினே?" என்றாள் வள்ளியம்மை  நம்ப முடியாத ஆச்சரியத்துடன்.

"அதுதான் டியூஷன் போனேனே!" என்றான் சுந்தர்.

"டியூஷனா?" என்று வள்ளியம்மை அப்பாவையும் பிள்ளையையும் மாறி  மாறிப் பார்த்தாள்.

"என்னோட ஆஃபிஸ்ல சங்கரன்னு  ஒத்தர் இருக்காரு. அவரு நெறையப்  படிச்சவர். புத்திசாலி. சுந்தருக்கு டியூஷன் எடுக்க முடியுமான்னு  அவர்கிட்ட கேட்டேன். முதல்ல அவர் தனக்கு அனுபவம் இல்லேன்னு சொன்னாரு.

"எனக்குத் தெரிஞ்ச இன்னொரு நண்பரோட பையன் போன வருஷம்தான் ப்ளஸ் டூ முடிச்சான். அவன் டியூஷன் போய்த்தான் படிச்சான். அவன் தான் படிச்ச புஸ்தகம் நோட்ஸ் எல்லாம் வச்சிருந்தான். அதையெல்லாம் வாங்கிக்கிட்டுப் போய் சங்கரன் கிட்ட கொடுத்தேன்.

"அவரும் இண்டர்நெட்ல எல்லாம் பாத்துப் பல விஷயங்களை சேகரிச்சுக்கிட்டு டியூஷன் எடுக்க ஒத்துக்கிட்டாரு. சுந்தரோட படிக்கிற சில பையன்களோட அப்பாக்கள்கிட்ட பேசி அவங்களையும் சங்கரன்கிட்ட டியூஷனுக்கு சேர்த்து விட்டேன்.

"டியூஷன் ஃ பீஸ்னு எங்களால முடிஞ்சதைக் கொடுக்கறேன்னு சொன்னேன். மொதல்ல அவரு ஒத்துக்கலே. பணம் குடுத்துப் படிச்சாத்தான் பையன்களுக்குப் படிக்கணும்கற வேகம் இருக்கும்னு சொல்லி அவரைச் சம்மதிக்க வெச்சேன்.

"பணம் வாங்கினாத்தானே அவருக்கும் பொறுப்பு இருக்கும்? ஆனா அதை
அவர்கிட்ட சொல்லலே! பத்து பையங்க சேர்ந்தததால அவருக்கும் வருமானம். நமக்கும் குறைந்த ஃபீஸ்ல டியூஷன் கிடைச்சது. நல்ல மார்க் வாங்கி ஒங்கிட்ட காட்டற வரையிலும் இதைப் பத்தி உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு நான் சுந்தர்கிட்ட சொல்லியிருந்தேன்.

"அவனும் ஃபிரண்ட்ஸோட படிக்கறேன்னு ஒங்கிட்ட  சொல்லிட்டு டியூஷன் போயிட்டு வந்தான்! கொஞ்சம் பேர்தான் படிச்சதினால சங்கரன் ஒவ்வொரு பையன்கிட்டேயும் அக்கறை காட்டி நல்லா சொல்லிக் கொடுத்தாரு. எல்லாருமே நல்ல மார்க் வாங்கி இருக்காங்க.

"இவங்க ஸ்கூல்ல இதுவரைக்கும் இத்தனை பேரு இவ்வளவு நல்ல மார்க் வாங்கினதே இல்லை. இவங்க வாங்கின மார்க்கைப் பாத்துட்டு, இப்ப  சங்கரன் கிட்ட டியூஷன் படிக்க நிறைய பேரு வந்திருக்காங்க. அவரு வேலையை விட்டுட்டு டியூஷன் சென்ட்டர் ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்காரு!" என்றார் ஏகாம்பரம்.

வள்ளி வாயடைத்து நின்றாள்.

சுந்தரைப் பார்த்து ஏகாம்பரம், "நீ நல்ல மார்க் வாங்கி இருக்கறதால ஃபீஸ் குறைச்சலா உள்ள நல்ல காலேஜில் உனக்கு இடம் கிடைச்சுடும். உன் படிப்பு முடியும் வரை உனக்கு ஃபீஸ் கட்டிப் படிக்க வைக்கறது என் பொறுப்பு. நல்லாப்  படிச்சு, நல்ல மார்க் வாங்கி நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில முன்னுக்கு வர வேண்டியது உன்னோட சாமர்த்தியம்!" என்றார்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 67
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து 
முந்தி இருப்பச் செயல்.

பொருள்:
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யக் கூடிய உதவி, அவனைக் கற்றவர் அவையில் முதன்மையான இடம் பெற வழி செய்து கொடுப்பதுதான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














Monday, June 6, 2016

66. காட்சிகள் மாறும் நாடகம்

 
 யாழ் 

 காட்சி 1                                                                                                            காலம்: 2005

ரமணி இல்லையா?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் சேகர்.

"இன்னும் ஆஃபீஸிலிருந்தே வரலியே!" என்றாள் ரமணியின் தாய்.

"நாளைக்கு நாரத கான சபாவில கச்சேரி இருக்கு. அதுதான் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன். அவன் ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணினேன். ஃபோன் எங்கேஜ்டாவே இருந்தது."

"என்ன கச்சேரி- புல்லாங்குழலா, வீணையா?" என்றாள் ரமணியின் தாய்.

"ஃப்ளூட்தான். சிக்கில் சிஸ்டர்ஸ். அது எப்படி கரெக்டா கேக்கறிங்க? நாங்க பாட்டுக் கச்சேரிக்குப் போறதில்லையா என்ன?"

"போவீங்க. ஆனா அதிகமா போறது ஃப்ளூட்டுக்கும், வீணைக்கும்தானே?"

"ஆமாம் ஆன்ட்டி. என்னதான் சொல்லுங்க, குழலுக்கும், வீணைக்கும் இருக்கிற இனிமையே தனிதான்"

"சரி. ரமணி வந்ததும் சொல்றேன். காப்பி சாப்பிடறயா?"

"வேண்டாம் ஆன்ட்டி."

"ஓ! நீங்கள்ளாம் செவிக்கு உணவு இல்லாதபோதுதான் வயித்துக்கு உணவு கொடுப்பீங்க இல்லே?"

"என்ன ஆன்ட்டி திருக்குறள் எல்லாம் சொல்லி அமர்க்களப்படுத்தறீங்க!"

காட்சி 2                                                                                                            காலம்: 2015

"ரமணி இல்லையா?" என்றான் சேகர்.

"இன்னும் ஆஃபீஸிலிருந்தே வரலியே!" என்றாள் ரஞ்சனி.

"செல்லை ஆஃப் பண்ணி வச்சிருக்கான் போலருக்கு."

"டிரைவ் பண்ணிக்கிட்டிருப்பார்."

"நாளைக்கு ஆர்க்கே கன்வென்ஷன் சென்ட்டர்ல சேஷகோபாலன் வீணை இருக்கு. ரமணி வரானான்னு கேக்கணும்."

"சேஷகோபாலன் வாய்ப்பாட்டுத்தானே பாடுவார்? வீணை கூட வாசிப்பாரா என்ன?"

"எந்த அளவுக்கு அற்புதமாப் பாடுவாரோ, அந்த அளவுக்குப் பிரமாதமா வீணையும் வாசிப்பார். ரமணிக்கு அவர் வீணைன்னா ரொம்பப் பிடிக்கும்."

"அவர் இப்ப வந்துடுவாரு. அவர்கிட்டயே கேட்டுக்கங்களேன். காப்பி சாப்பிடறீங்களா?"

"வேண்டாம். முன்னெல்லாம், காப்பி வேண்டாம்னு சொன்னா, செவிக்கு உணவு இல்லாதபோதுதான் வயித்துக்கு உணவு கொடுப்பீங்களான்னு ரமணியோட அம்மா கிண்டல் பண்ணுவாங்க. ம்ம். அவங்கதான் இப்ப இல்லியே! ஆமாம் ரஞ்சனின்னு கர்நாடக ராகத்தோட பேரை உங்களுக்கு வச்சிருக்காங்க. உங்களுக்கு சங்கீதத்தில இண்ட்ரஸ்ட் இல்லையா?"

"ஏன் இல்லாம? எங்கிட்ட எவ்வளவு மியூஸிக் சிடி, காஸட் எல்லாம் இருக்குன்னு காட்டட்டுமா? எல்லாமே எம் எஸ் வியோட மியூஸிக்தான். என்னைப்  பொருத்த வரையில கர்நாடக சங்கீதம், வெஸ்டர்ன் மியூஸிக், ஹிந்துஸ்தானி மியூஸிக், தமிழ் இசை, வேத காலத்து இசை எல்லாமே எம் எஸ் வி மியூஸிக்ல இருக்கு. என் பேரைப் பத்தி சொன்னீங்களே! ரஞ்சனிங்கற்து 'அபூர்வ ராகங்கள்' ஹீரோயினோட பேரு. அதைத்தான் என் அப்பா அம்மா எனக்கு வச்சிருக்காங்க! இதோ அவரே வந்துட்டாரே!"

"வாடா சேகர்! ரொம்ப நேரமா வெயிட் பண்றியா?" என்றான் ரமணி.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லே! நாளைக்கு சேஷகோபாலனோட வீணைக் கச்சேரி இருக்கு. வரியா?"

"சேஷகோபாலன் வீணை ரொம்ப அற்புதமா இருக்குமே! ஆனா என்னால வர முடியாதே!"

"ஏன்?"

"நான் அங்கே வந்தா, அதை விட முக்கியமான கச்சேரியை மிஸ் பண்ணிடுவேனே!"

"அது என்னடா கச்சேரி?" என்று சேகர் கேட்கும்போதே, அப்போதுதான் தூங்கி எழுந்திருந்த அவர்களின் ஒரு வயதுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தாள் ரஞ்சனி.

ரமணியைப் பார்த்ததும் "ப்பா, ப்பா" என்று சொல்லிக்கொண்டே அவனிடம் தாவியது குழந்தை.

"இந்தக் குழந்தையின் மழலைக் கச்சேரிதான்!" என்று குழந்தையை வாரி அணைத்துக் கொண்டான் ரமணி.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 66
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
மழலைச்சொல் கேளா தவர்.

பொருள்:
தங்கள் குழந்தைகளின் மழலைப் பேச்சைக் கேட்காதவர்கள்தான் குழல், யாழ் போன்ற இசைக்கருவிகளை இனிமையானவை என்று கூறுவர்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















Saturday, May 21, 2016

65. புவனா - ஒரு கேள்விக்குறி!

புவனா சமையல் செய்து கொண்டிருந்தபோது குழந்தை அழும் சத்தம் கேட்டது. அடுப்பை அணைத்து விட்டு வேகமாக ஓடினாள். குழந்தையின் சிறுநீரால் தூளி நனைந்து, கீழே நீர் சொட்டிக்கொண்டிருந்தது.

"அடாடா! டயபர் போட மறந்து விட்டேனே!" என்று சொன்னபடியே குழந்தையைத் தூக்கினாள். துண்டால் குழந்தையின் உடலைத் துடைத்து விட்டுக் கீழே கிடத்தினாள்!

குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்து விட்டுக் கையை உயர்த்தியது. புவனா தன் முகத்தைக் குழந்தைக்கு நெருக்கமாகக் கொண்டு சென்றாள்.

குழந்தையின் பிஞ்சுக் கரம் அவள் மீது பட்டதும் அவளுக்குப் புளகாங்கிதம் ஏற்பட்டது. இரண்டு மூன்று முறை அவளைத் தொட்ட பிறகு திடீரென்று பெரிதாகச் சிரித்தபடியே குழந்தை அவள் கன்னத்தில் ஓங்கி அடிக்க ஆரம்பித்தது.

கரை கடந்த மகிழ்ச்சியில் புவனா குழந்தையை வாரி அணைத்தபடி, "என் செல்லமே!" என்று முகத்தோடு முகம் வைத்து உச்சி முகர்ந்தாள்.

குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தபடியே 'பே பே பே...' என்று ஏதோ பேசியது. "என்னம்மா கண்ணு  சொல்றே? எனக்கு ஒண்ணுமே புரியல்லியே!" என்ற புவனா குழந்தையைத் தோளில் தூக்கிக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.

பெரும்பாலும் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டும், சில சமயம் கீழே விட்டு விட்டும் சமையலை முடித்தாள். குழந்தையைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே சாப்பிட்டு விட்டுப் பிற வேலைகளையும் செய்து முடித்தாள். பிறகு நீண்ட நேரம் குழந்தையுடன் பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தாள்.

குழந்தைக்குப் பால் கொடுத்து அதை மறுபடியும் தூங்க வைத்தபோது மாலை ஆறு மணி ஆகி விட்டது. ஏழு மணிக்கு அவள் கணவன்  ராமகிருஷ்ணன் அலுவலகத்திலிருந்து வந்தான்.

"குழந்தை எங்கே?" என்றான்.

"தூளியில் துங்குகிறது" என்றாள் புவனா. ராமகிருஷ்ணன், தூளிக்குள் தலையை விட்டு, அமைதியாகத் தூங்கும் அந்தப் பிஞ்சு முகத்தைப்  பார்த்து ரசித்தபின், உடை மாற்றிக் கொள்ள உள்ளே சென்றான்.

சற்று நேரத்தில் அழைப்பு மணி அடித்தது. புவனா கதவைத் திறந்தாள்.

செல்வி!

"குழந்தை என்ன செய்கிறது ஆன்ட்டி?" என்றாள் செல்வி.

"தூங்குகிறது" என்றாள் புவனா.

"நான் போய் உடை மாற்றிக்கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு ஏதாவது செய்து விட்டு, இன்னும் அரைமணியில் வந்து குழந்தையை எடுத்துப் போகிறேன். அதற்குள் அது விழித்துக்கொண்டு அழுதால் வந்து எடுத்துக்கொண்டு போகிறேன்" என்றாள் செல்வி.

"மெதுவாகவே வா! குழந்தை விழித்துக்கொள்ள இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்" என்றாள் புவனா.

"ரொம்ப தாங்க்ஸ் ஆன்ட்டி! நீங்கள் இல்லாவிட்டால் என்ன செய்திருப்போம் என்றே தெரியவில்லை!"

"நான் வீட்டில் தனியாகத்தானே இருக்கிறேன்! குழந்தையைப் பார்த்துக் கொள்வதால் எனக்கும் இனிமையாகப் பொழுது போகிறது" என்றாள் புவனா.

செல்வி பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த ராமகிருஷ்ணன் "அவள் ஏன் உன்னை ஆன்ட்டி என்று கூப்பிடுகிறாள்? அக்கா என்று கூப்பிடலாமே! உனக்கும் எனக்கும் அவ்வளவு வயது ஆகி விடவில்லையே!" என்றான்.

"இல்லை. நமக்கு இன்னும் வயதாகி விடவில்லை. நமக்கும் ஒரு குழந்தை பிறக்கும். இப்போது செல்வியின் குழந்தையைக் கொஞ்சுவதைப் போல நம் குழந்தையையும் நான் கொஞ்சுவேன்!' என்று நினைத்துக் கொண்டாள் புவனா.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் 
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

பொருள்:
தம் குழந்தைகளின் உடலைத் தீண்டுவது உடலுக்கு இன்பமளிக்கும். குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்பது காதுக்கு இன்பமளிக்கும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














Friday, May 20, 2016

64. அமுதினும் இனியது!

"நாமும் கோவில் கோவிலாப் போய்க்கிட்டிருக்கோம். கடவுள் இன்னும் நமக்குக் கருணை காட்டலியே!" என்றாள் சுகன்யா.

"கோவிலுக்குள்ள நுழையும்போதே இப்படி அலுத்துக்கிட்டா எப்படி நம்மால அமைதியாக் கடவுள்கிட்ட வேண்டிக்க முடியும்?" என்றான் அவள் கணவன் பலராமன்.

"நான் ஏன் இப்படி அலுத்துக்கறேன்னு கடவுளுக்குத் தெரியாதா? அமைதியா வேண்டிக்கறதை விட, இப்படி மனசு வருத்தப்பட்டு அங்கலாய்க்கும்போதாவது நம்ம வருத்தம் எவ்வளவு ஆழமானதுன்னு கடவுளுக்குப் புரியட்டுமே!"

"சரி வா. சன்னதி கிட்ட வந்துட்டோம். கூட்டம் அதிகமா இல்லை. உள்ள போய் சாமி தரிசனம் பண்ணிட்டு வந்துடலாம்."

கடவுளிடம் இருவருமே மனம் உருகி வேண்டிக் கொண்டார்கள்.

வெளியே வந்து பிரகாரத்தைச் சுற்றும்போது, பலராமன் பிரசாதங்கள் விற்கும் இடத்தை நோக்கிப் போனான்.

"ஒவ்வொரு கோவில்லேயும் தவறாம பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டுடறீங்க. உங்களுக்கு பலராமன் என்பதற்கு பதிலா, சாப்பாட்டு ராமன்னு பேர் வச்சிருக்கலாம்!"

"நான் மட்டுமா சாப்பிடறேன்? உனக்கும்தானே வாங்கிக் கொடுக்கறேன்? நான் தனியாக் கோவிலுக்குப் போனாக் கூட உனக்குப் பிரசாதம் வாங்கிக்கிட்டு வந்து கொடுப்பேனே! இந்தக் கோவில்ல அதிரசம் ரொம்ப நல்லா இருக்கும். அதுதான்."

"எந்தக் கோவில்ல எந்தப் பிரசாதம் விசேஷம்கறது உங்களுக்கு அத்துப்படியாச்சே! நீங்க கோவிலுக்கு வரதே பிரசாதம் வாங்கிச் சாப்பிடத்தானோன்னு தோணுது!"

அவள் பேச்சைப் பொருட்படுத்தாமல் பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்த பலராமன் கோவில் பிரகாரத்தை ஒட்டி இருந்த குளக்கரைக்கு வந்தான். மனைவிக்கு ஒரு அதிரசத்தைக் கொடுத்து விட்டு இன்னொன்றை விண்டு வாயில் போட்டுக் கொள்ளப் போனவன் அப்படியே நின்று விட்டான்.

குளக்கரையில் ஒரு இளம் தம்பதி ஒரு இட்லிப் பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பெண்ணின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை கீழே தாவி மண்ணில் கை வைத்துத் தவழ்ந்து போய், தந்தையின் கையிலிருந்த ஒரு இட்லியைத் தன் கையால் அழுத்திப் பிசைந்து, அதைக் கூழாக்கியது.

குழந்தையின் கையிலிருந்த மண் படிந்த அந்தக் கூழை, குழந்தையின் தந்தை ஆவலுடன் எடுத்து வாயில் போட்டுச் சுவைத்ததைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் பலராமன்.

'என்னங்க, உங்களுக்குப் பிடிச்ச அதிரசத்தைக் கூடச் சாப்பிடாமல் அந்தக் குழந்தையையே பாத்துக்கிட்டிருக்கீங்க?"

"அந்தக் குழந்தையோட அப்பா இடத்தில நான் இருந்தா, இந்த அதிரசத்தை விட அந்தக் குழந்தையோட அழுக்குக் கை பட்ட அந்த இட்லிக்கூழ்தான் எனக்கு அதிக ருசியா இருந்திருக்கும்!" என்றான் பலராமன் ஏக்கத்துடன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 
சிறுகை அளாவிய கூழ்.

பொருள்:
தன் குழந்தையின் சிறு கையால் அளாவப்பட்ட கூழ்தான் ஒருவருக்கு அமிர்தத்தை விட இனிப்பதாக இருக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Thursday, May 19, 2016

63. தென்னையைப் பெத்தா இளநீரு, புள்ளையைப் பெத்தா கண்ணீரு!

நல்லசிவம் தன் நண்பர் தனராஜைப் பார்க்கப் போனபோது, அவர் வெளியில் போயிருப்பதாக அவர் மனைவி சொன்னாள். சற்று நேரம் காத்திருந்தபின் தனராஜ் வந்தார். நல்லசிவத்தைப் பார்த்ததும், அவரை உள்ளே அழைத்துச் சென்றார்.

உள்ளே சென்று கதவைச் சாத்தியதும், தனராஜால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. துண்டில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மினார்.

நல்லசிவம் பதறிப்போய், "என்ன தனராஜ் இது, குழந்தை மாதிரி? என்ன ஆச்சு?"என்றார்.

"எல்லாம் இந்த செந்தில் விஷயம்தான். மொதல்ல ஏகப்பட்ட பணம் செலவழிச்சுப் படிக்க வச்சேன். அப்புறம் படிப்பு சரியா வரலைன்னு பிசினஸ் பண்ணப் போறேன்னான். அதுக்கும் முதலீடு, மாதாந்தர செலவுன்னு நெறையப் பணம் கொடுத்தேன். இப்ப தொழில் நஷ்டமாயிடுச்சு, வேற தொழில் செய்யப்போறேன்னு மறுபடி பணம் கேக்கறான்.

"வேண்டாம், நம்ம ஊருக்கு வந்துடு, கொஞ்ச நாள் நிலத்தைப் பாத்துக்கிட்டுரு, அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்னு சொன்னா கேக்க மாட்டேங்கறான். அண்ணன் துபாய்க்குப் போய் நெறையச் சம்பாதிக்கச்சே, நானும் ஏதாவது செஞ்சு பணம் சம்பாதிக்க வேண்டாமான்னு கேக்கறான்.

"ஏற்கனவே பாதி நிலத்தை வித்தாச்சு. மீதி நிலத்தையும் வித்து மொத்தப் பணத்தையும் அவனுக்குக் கொடுத்துட்டு நானும் என் சம்சாரமும் சாப்பாட்டுக்கே யார்கிட்டயாவது கையேந்தற நிலைமை வந்துடும் போலருக்கே!"

மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் தனராஜ்.

"ஏன் இப்படியெல்லாம் நெனைக்கிறீங்க? செந்திலுக்கு புது பிசினஸ் நல்லா அமையலாம் இல்லே? அதோட, மூத்தவன் பாலுதான் துபாயில வசதியா இருக்கானே, அவன் உங்களைப் பாத்துக்க மாட்டானா?" என்று சமாதானப்படுத்த முயன்றார் நல்லசிவம்.

"நீங்க வேற நல்லசிவம்! துபாயில தனியா இருந்தா சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவானேன்னு அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சேன். இப்ப அவன் குடும்பத்தோட அங்க சந்தோஷமா இருக்கான். செலவுக்குன்னு எங்களுக்கு ஒரு பைசா கூட அனுப்பறதில்ல. கேட்டா, வர வருமானம் எங்களுக்கே சரியா இருக்கு, ஒரு ரூபா கூட சேமிக்க முடியறதில்லன்னு மூக்கால அழறான். இவன் படிப்புக்கு நான் எவ்வளவு செலவழிச்சிருப்பேன்! எனக்கு வாய்ச்ச ரெண்டு புள்ளைங்களும் இப்படியா இருக்கணும்?"

"சரி. நான் கிளம்பறேன்" என்று நல்லசிவம் எழுந்தார்.

"இருங்க. எதுக்கு வந்தீங்க? உடனே கிளம்பறீங்க! என் கஷ்டத்தைச் சொல்லி அழுது, நீங்க வந்த விஷயத்தைப்பத்திக் கேக்காமயே இருந்துட்டேனே!"

"ஒண்ணும் இல்லை. ராத்திரி கிளம்பி சென்னைக்குப் போறேன். அதுதான் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்!"

"ஓ! ரகுவோட கொஞ்ச நாள் இருந்துட்டு வரப் போறீங்களா? ரெண்டு மூணு வாரத்தில வந்துடுவீங்கல்ல?"

"ம்..." என்றார் நல்லசிவம்.

சென்னையில் இருக்கும் அவர் மூத்த மகன் ரகுவும், பெங்களூருவில் இருக்கும் அவர் இளைய மகன் ரவியும், அவரையும் அவர் மனைவியையும் தங்களுடனேயே வந்து நிரந்தரமாக இருக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்ததையும், ஒவ்வொருவர் வீட்டிலும் மூன்று மாதம் இருந்து விட்டு, கிராமத்து வீட்டை நிரந்தரமாகக் காலி செய்து விட்டு மகன்களுடனேயே இருப்பது பற்றி அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்திருப்பதையும், தனராஜ் அப்போது இருந்த மனநிலையில் அவரிடம் சொல்ல விரும்பவில்லை.

சென்னைக்குப் போய் ஓரிரு தினங்கள் கழித்துத் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 
தம்தம் வினையான் வரும்.

பொருள்:
நமது பிள்ளைகளே நமது சொத்துக்கள். அவரவருக்குக் கிடைக்கும் சொத்து எத்தகையது என்பது அவரவர் வினைப்பயனை ஒட்டி அமையும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Thursday, May 12, 2016

62. பாவமூட்டையின் சுமை குறைய வழி

"போன ஜன்மத்தில என்ன பாவம் பண்ணினேனோ தெரியலே, புடிச்சு ஆட்டுது" என்று அலுத்துக்கொண்டார் புண்ணியகோடி.

"புண்ணியகோடின்னு பேரு வச்சுக்கிட்டு நீங்களே இப்படிப் பேசினா, நாங்கள்ளாம் என்ன செய்யறது?" என்றார் நண்பர்களால் செல்லமாகப் பாவி என்று அழைக்கப்பட்ட பா.விஸ்வநாதன்!

"பேரில என்ன இருக்கு? விடாத இருமலோடு ஒத்தன் ஆஸ்பத்திரிக்குப் போனான். டாக்டர் மருந்துச் சீட்டு எழுதறதுக்கு 'உன் பேரு என்ன?'ன்னு கேட்டாரு. 'ஆரோக்கியராஜ்'னு சொன்னான் அவன். ஆரோக்கியத்தில ராஜாவாம்! அது மாதிரிதான். என் பேரு வெற்றிவேல். எனக்கு எல்லாத்திலயும் வெற்றியா கெடச்சுக்கிட்டிருக்கு? இப்ப கூட மூணு சீட்டில முன்னூறு ரூபா தோத்துட்டுத்தான் வரேன்!" என்றார் வெற்றிவேல்!

"அது இருக்கட்டும். இந்தப் பூர்வ ஜன்ம பலன் என்கிறதெல்லாம் உண்மையா? போன ஜன்மத்தில பண்ணின பாவத்துக்கான பலனை இந்த ஜன்மத்தில அனுபவிக்கணுமா?" என்று கேட்டார் புண்ணியகோடி.

"இந்த ஜன்மத்தில மட்டும் இல்ல. அடுத்த பல ஜன்மங்கள்ளேயும் அனுபவிக்க வேண்டி இருக்கும்" என்றார் விஸ்வநாதன்.

"அது ஏன் அப்படி?" என்றார் வெற்றிவேல்.

"ஏன்னா நம்ம பண்ற பாவம் அவ்வளவு! அதற்கான பலன் அத்தனையையும் ஒரே ஜன்மத்தில அனுபவிக்கணும்னா நம்மால தாங்க முடியாதுன்னுதான் கடவுள் அதைப் பிரிச்சு ரெண்டு மூணு ஜன்மங்கள்ள அனுபவிக்கற மாதிரி பண்ணியிருக்காரு" என்று விளக்கினார் விஸ்வநாதன்.

"அப்ப இந்த ஜன்மத்தில பண்ற பாவமெல்லாம் என்ன ஆகும்?" என்று வினவினார் புண்ணியகோடி.

"அதான் பிரச்னையே! பழைய பாவ மூட்டை கொஞ்சம் குறையறதுக்குள்ள, நாம புதுசா பண்ற பாவங்கள்ளாம் சேர்ந்து இன்னும் மூட்டை பெரிசாகிக்கிட்டே போகும்!"

"அப்போ பாவமூட்டை குறையவே குறையாதா? மறுபடி மறுபடி ஜன்மம் எடுத்துக் கஷ்டப்பட்டுக்கிட்டேதான் இருக்கணுமா?"

"ஒரு வழி இருக்கு!" என்ற குரல் கேட்டது. மூவரும் திரும்பிப் பார்த்தனர். பக்கத்தில் இருந்த மரத்தடியில் ஒருவர் அழுக்கு வேட்டியுடன் மண் தரையில் படுத்திருந்தார்.

'யார் இவர்? சாமியாரா? யோகியா இல்லை சித்தரா?' என்று மூவரும் யோசித்துக் கொண்டிருந்தபோதே, அவர் இவர்களைத் திரும்பிப் பார்க்காமலே பேசினார்: "உங்கள் பிள்ளைகள் எந்தப் பழிக்கும் ஆளாகாமல் பண்புள்ளவர்களாக இருந்தால் ஏழு பிறவிக்கும் உங்களை எந்தத் தீமையும் அண்டாது."

"எப்படிச் சொல்றீங்க சாமி?" என்றார் வெற்றிவேல்.

"நான் சொல்லலே. திருவள்ளுவர் சொல்கிறார்" என்று சொல்லி விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் தூக்கத்தைத் தொடர்ந்தார் 'சாமியார்.'

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
பண்புடை மக்கட் பெறின்.

பொருள்: 
பழிச்சொல் எதற்கும் ஆளாகாமல் பண்புடன் வாழும் புதல்வர்களைப் பெற்றவர்களை முன்வினைப் பயனால் அவர்களுக்கு ஏற்படும் ஏழு பிறவிகளிலும் எந்தத் தீமையும் அண்டாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ"

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














Tuesday, March 29, 2016

61. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...

"பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க!"

இவ்வாறு தன்னையும் தான் கைப்பிடித்த நங்கை மீனாட்சியையும் வாழ்த்தியவர்களில் எவ்வளவு பேருக்கு இந்த வாழ்த்தின் பொருள் தெரியும் என்று நினைத்துப் பார்த்தான் சங்கர்.

திருமணத்துக்கு வந்திருந்த அவன் தந்தையின் நண்பர் தமிழ் அறிஞர் சுந்தரமுர்த்திக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்று தோன்றியது.

திருமணச் சடங்குகள் முடிந்து சற்று ஒய்வு கிடைத்தபோது சுந்தரமுர்த்தியிடம் சென்று தன் ஐயத்தைக் கேட்டான் சங்கர்.

"'பதினாறும் பெற்று' என்று வாழ்த்துகிறார்களே, அந்தப் பதினாறு பேறுகள் என்ன என்று தெரிந்து கொள்ள விருப்பம்" என்றான்.

"பலருக்கு இவை என்னவென்று தெரியாது. பலர் இவற்றைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதும் இல்லை. உன்னுடைய ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். இந்தப் பதினாறு பேறுகள் என்னென்ன என்பது பற்றிச் சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டு.

"காளமேகப் புலவரின் ஒரு கவிதையின் அடிப்படையில் சொல்கிறேன். 1.புகழ் 2.கல்வி 3.வீரம் 4.வெற்றி 5.நன்மக்கட்பேறு 6.துணிவு 7.செல்வம் 8.குறைவற்ற (அபரிமிதமான) உணவு  9.எல்லாவிதமான நலன்கள் (சௌபாக்கியம்) 10.சுகங்கள் 11.நல்லறிவு (விவேகம்) 12.அழகு 13.பெருமை (கௌரவம்) 14.அறம்  15.குலம் 16.நீண்ட ஆயுள்.

"இவற்றில் வீரம்-துணிவு, புகழ்-பெருமை போன்றவை ஒரே பொருளைக் குறிப்பதாகத் தோன்றலாம். அதற்குள் நாம் இப்போது போக வேண்டாம். 'குலம்' என்பதற்கு 'குடும்பத்தின் நற்பெயர்' என்று பொருள் கொள்ள வேண்டும். என்ன, பதினாறு பேறுகளைப் பெற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறாயா?"

"உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதத்தால் இந்தப் பேறுகள் எனக்குக் கிடைத்தால் அது என் அதிர்ஷ்டம்" என்றான் சங்கர்.

"நன்றாகப் பேசக் கற்றுக்கொண்டிருக்கிறாய். உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். என் சிறு வயதில், பதினாறு பேறுகள் என்பதற்குப் பதினாறு பிள்ளைகள் என்று விளையாட்டாகப் பொருள் சொல்வார்கள். புதிதாகக் கல்யாணம் ஆனவர்களை 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க' என்று யாராவது வாழ்த்தினால், உடனே கல்யாண மாப்பிள்ளை, 'சார்  அவ்வளவெல்லாம் தாங்காது. ஒன்றிரண்டு பிள்ளைகள் பிறந்தால் போதும்!' என்பார்.

"ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பு பல குடும்பங்களில் 10,12 குழந்தைகள்  பிறப்பது சகஜம் என்பதால் இப்படி. இப்போது கூட நான் என்ன சொல்வேன் என்றால், வரமளிக்கும் கடவுள் உன்னிடம் 'உனக்கு 16 பேறுகள் வேண்டுமா, அல்லது ஒன்றிரண்டு நல்ல பிள்ளைகள் வேண்டுமா?' என்று கேட்டால், ஒன்றிரண்டு நல்ல பிள்ளைகள் வேண்டும் என்று சொல்வதுதான் புத்திசாலித்தனம்.

"நல்ல பிள்ளைகளைப் பெறுவதை விடச் சிறந்த பேறு வேறு ஏதும் இல்லை. சிந்தித்துப் பார்த்தால், நல்ல பிள்ளைகளைப் பெற்றால், அவர்கள் மூலம் மற்ற பேறுகள் தாமே நம்மைத் தேடி வந்தடையும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, நீ கடவுளிடம் எதாவது வேண்டிக் கொள்வதாக இருந்தால், 'நல்ல பிள்ளைகளைக் கொடு' என்றே  வேண்டிக்கொள்." என்று முடித்தார் சுந்தரமூர்த்தி.

ஒரு ஆர்வத்தில் துவங்கிய பேச்சு நல்ல அறிவுரையில் முடிந்தது சங்கருக்கு மிகவும் திருப்தி அளித்தது,
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு 
குறள் 61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

பொருள்:
எனக்குத் தெரிந்த வரையில், எதை அறிய வேண்டுமோ அதை அறிந்து கொள்ளும் இயல்புள்ள நல்ல மக்களைப் பெறுவதை விடச் சிறப்பான பேறு வேறு எதுவும் இல்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்












Friday, March 25, 2016

60. அவள் அப்படித்தான்!

"டேய் ரகு எப்படிடா இருக்கே? உன் கல்யாணத்துக்கு அப்புறம் இப்போதான் பாக்கறேன்! நீதான் என் கல்யாணத்துக்கு வரவே இல்லை!" என்றான் ராஜேஷ்.

"காரணம் உனக்குத் தெரியுமே!  வேலை விஷயமா டில்லிக்குப் போயிருந்தேன்னு! உன் மனைவி வந்திருக்காங்களா?"

"அதோ உன் மனைவியோட பேசிக்கிட்டிருக்கா பாரு! அவங்க ரெண்டு பேரும் ஏற்கெனவே அறிமுகம் ஆனவங்களாம்!"

"அப்ப, நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியதுதான்! அவங்க நம்மளைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன். நாமளும் அவங்களைப் பத்திக் கொஞ்சம் பேசலாம். உன் மனைவி எப்படி?"

"எப்படின்னா? தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருப்பா. கொஞ்சம் நகைப் பைத்தியம். கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்குள்ள  ரெண்டு தடவை என்னை நகை வாங்க வச்சுட்டா!"

"உன்கிட்நிறையப் பணம் இருக்கும் போலிருக்கு!"

"நீ வேற! கடன் வாங்கித்தான் நகை வாங்கிக் கொடுத்தேன். என்ன வயத்தெரிச்சல்னா தங்கத்தோட விலை இப்பக் குறைஞ்சுடுச்சு. ஆனா நான் வாங்கின கடன் வட்டியோட சேர்த்து அதிகமாயிடுச்சு!"

"நீ கடன் வாங்கித்தான் நகை வாங்கினேங்கறது உன் மனைவிக்குத் தெரியுமா?"

"கடன் வாங்கியாவது நகை வாங்கணும்னு பிடிவாதம் பிடிச்சது அவதான்! அது சரி, உன் மனைவி எப்படி?"

"இந்த விஷயத்தில உன் மனைவிக்கு நேர்மாறுன்னுதான் சொல்லணும்! நான் பிசினஸுக்காகக் கொஞ்சம் கடன் வாங்கி அதுக்கு வட்டி கட்டிக்கிட்டிருந்தேன். என் மனைவிக்கு இது தெரிஞ்சதுமே தன்னோட நகை எல்லாத்தையும் கழட்டிக் குடுத்துட்டா. மொதல்ல கடனை அடையுங்க, நகைக்கு என்ன, நம்பகிட்ட பணம் சேர்ந்தப்பறம் வாங்கிக்கலாம்னு சொன்னா. நான் அசந்து போயிட்டேன். இப்ப கடனை அடைச்சுட்டு நிம்மதியா இருக்கேன். வட்டிச் சுமை குறைஞ்சதே பெரிய லாபமா இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா  பணம் சேர்த்து அவளுக்கு ஒரு நகையாவது வாங்கிக் கொடுக்கணும்."

"ரொம்பப் பெரிய விஷயம்டா இது. இப்படிப்பட்ட மனைவி கிடைச்சது உன்னோட அதிர்ஷ்டம்தான். ம்... என் மனைவியும் மனசு மாறினா நல்லா இருக்கும். அது இருக்கட்டும். கல்யாணம் ஆகி ஒரு வருஷமாச்சே, அப்பாவாகிற முயற்சி எல்லாம் எந்த அளவுக்கு இருக்கு?"

"இன்னும் ஆறு மாசத்தில அப்பா ஆகி விடுவேன். உன் கதை எப்படி?"

"வாழ்த்துக்கள். நான் அப்பா ஆறதுக்கு இன்னும் வேளை வரலை."

"ஓ! கவலைப்படாதே! சீக்கிரமே உனக்கும் நல்லது நடக்கும்!"

"எங்கே? என் மனைவிதான் குழந்தைக்கு இப்ப என்ன அவசரம்னு தள்ளிப் போட்டுக்கிட்டே இருக்காளே!"

"ஏண்டி அதுக்குள்ளே என்னடி குழந்தைக்கு அவசரம்?" என்றாள் ரஞ்சனி ராஜேஷ்.

"ஏண்டி, கல்யாணம் ஆகி ஏழெட்டு மாசம் கழிச்சுத்தான் நான் கர்ப்பமானேன். இது உனக்கு அவசரமாப் படுதா?" என்றாள் அஞ்சலி ரகு.

"என்னைப் பாரு. இன்னும் ரெண்டு வருஷத்துக்குக் குழந்தை வேணாம்னு என் கணவர்கிட்ட சொல்லிட்டேன். வாழ்க்கையைக் கொஞ்ச நாள் அனுபவிக்கணும்டி. அது இருக்கட்டும். என்ன  கண்ணாடி வளையலையும் தாலிக்கொடியையும் தவிர வேற நகையையே காணும்?

"எனக்கு நகை போட்டுக்கறதுல அதிகமா ஈடுபாடு கிடையாது" என்றாள் அஞ்சலி.

"கொஞ்சம் கூட ஈடுபாடு கிடையாதுன்னு சொல்லு!" என்றாள் ரஞ்சனி.

அதன் பிறகு அவர்கள் வேறு பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள்.

ரண்டு வருடங்கள் கழித்து இரண்டு ஜோடிகளும் ஒரு திருமணத்தில் சந்தித்துக் கொண்டபோது, ரஞ்சனியின் உடலில் இன்னும் சில நகைகள் ஏறியிருந்தன, ராஜேஷின் கடன் சுமை ஏறி இருந்ததைப் போல்!

அஞ்சலியின் உடலில் நகைகள் எதுவும் இல்லை. அவள் இடுப்பில் ஒன்றரை வயதுக் குழந்தை இருந்தது. ரஞ்சனியின் நகைகளை விட அஞ்சலியின் குழந்தை அதிகம் பேரின் கவனத்தை ஈர்த்தது.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

பொருள்:
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கையின் சிறப்பு. நல்ல குழந்தைகளைப் பெறுவது அத்தகைய வாழ்க்கைக்கு நல்ல அணிகலன் ஆகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Saturday, March 19, 2016

59. ருக்மிணியின் திட்டங்கள்!

நகரத்தில் பிறந்து வளர்ந்து, பட்டப்படிப்பு படித்தவளான ருக்மணி ஒரு கிராமத்தில் சிறிய அளவில் விவசாயம் செய்து வரும் தன்னை மணந்ததில் ஆரம்பத்தில் பாலகிருஷ்ணனுக்குப் பெருமையாகத்தான் இருந்தது. ஆனால் கல்யாணம் ஆன சில நாட்களிலேயே தன் மனைவியின் நாட்டம் பணத்தில்தான் இருந்தது என்பதைப் புரிந்து கொண்டபோது அவனுக்குச் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.

"டவுன்ல பொறந்து வளர்ந்து காலேஜில படிச்சுட்டு ஏன் இந்தப் பட்டிக்காட்டுல வந்து வாழ்க்கைப்பட்டேன் தெரியுமா?" என்று ஒரு நாள் ருக்மிணியே அவனிடம் கேட்டாள்.

"என்னைப் புடிச்சதினாலதான்னு சொல்லிடாதே! சந்தோசம் தாங்காம என் இதயம் நின்னு போயிடப் போகுது!" என்றான் பாலகிருஷ்ணன் விளையாட்டாக. ஆயினும் மனதுக்குள் அவள் அப்படிச் சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் எழுந்தது.

"நான் அப்படியெல்லாம் பொய் சொல்ற ஆளு இல்லே! இது ஒரு பட்டிக்காடா இருந்தாலும், நீங்க ஒரு முதலாளி. சொந்த நிலத்தில பயிர் செஞ்சுக்கிட்டு வாழ்க்கையை நடத்தறவரு. டவுன்ல யாரையாவது நான் கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்தா, மத்தவங்க கிட்ட கை கட்டி வேலை பாக்கற ஒரு ஆளைத்தான் கட்டிக்கிட்டிருக்கணும். அவரு பியூனா இருந்தாலும் ஜெனரல் மானேஜரா இருந்தாலும் அடிமைத் தொழில் பாக்கிறவராத்தான் இருந்திருப்பாரு."

இந்த மட்டும் தன்  தொழிலுக்கு ஒரு மரியாதை கொடுக்கிறாளே என்று நினைத்துக் கொண்டான் பாலகிருஷ்ணன்.

"ஆனா உங்க வருமானம் பத்தாது. விவசாயத் தொழில்ல வருமானம் அதிகரிக்கறத்துக்கும் வாய்ப்பு இல்லே! அதனால நான் ஏதாவது தொழில் செய்யலாம்னு இருக்கேன்."

"தொழிலா? இந்த ஊர்லயா? அதோட, தொழில்ல முதலீடு செய்யறதுக்கெல்லாம் என்கிட்டே பணம் இல்லையே!"

'ஒரு பத்தாயிரம் ரூபா குடுங்க போறும். இன்னும் ஒரு வருஷத்தில வட்டியோட திருப்பித் தரேன். அப்படி உங்களால முடியாதுன்னா எங்க அப்பா கிட்டே வாங்கிக்கறேன். என்ன, வட்டி அவருக்குப் போகும்!"

"பத்தாயிரம் ரூபா என்னால குடுக்க முடியும். நாளைக்கே தரேன். ஆனா என்ன தொழில், எப்படிப் பண்ணப்போறேன்னு ஒண்ணுமே புரியல்லியே!"

"உலகத்திலேயே லாபமான தொழில் வட்டிக்குக் கடன் கொடுக்கறதுதான். இந்த ஊர்ல வட்டிக்குக் கடன் கொடுக்கறவங்க யாரும் இல்லை. வட்டிக்குக் கடன் வாங்க இந்த ஊர் ஜனங்களெல்லாம் பஸ் புடிச்சு டவுனுக்குத்தான் போறாங்கன்னு விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். எங்கிட்ட கடன் வாங்கினா பஸ் கட்டணம் மிச்சம் ஆகும், நேரம் அலைச்சல் எல்லாம் கூட மிச்சம் ஆகும்."

"வட்டித் தொழில் மட்டும் வேண்டாம் ருக்மணி!"

"ஏன்?"

"எங்க பரம்பரையே கொடுத்துப் பழக்கப்பட்ட பரம்பரை. எங்கப்பா, தாத்தா எல்லாரும் மத்தவங்களுக்கு தாரளமா உதவி செஞ்சிருக்காங்க. உதவின்னு கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டதில்லை. அப்படி இருக்கச்சே நீ வட்டிக்குக் கடன் குடுத்தா நம்ப குடும்பப் பெயரே அழிஞ்சுடும்."

"அதானே பார்த்தேன் உங்க பரம்பரையில சொத்துக்கள் எல்லாம் குறைஞ்சுக்கிட்டே வந்திருக்கேன்னு! கொடுத்துக் கொடுத்தே அழிச்சிருக்காங்க உங்க அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா எல்லாரும். அதான் நீங்க ஓட்டாண்டியா நிக்கறீங்க!"

"வாய்க்கு வந்தபடி பேசாதே ருக்மணி. நாம வசதியா வாழற அளவுக்கு நமக்கு சொத்து இருக்கு. அதுக்கும் மேல, இந்த ஊர்ல நம்ப குடும்பத்தும் பேர்ல ஒரு மரியாதை இருக்கு. இப்ப உன்னை யாராவது வழியில பாத்தாக்கூட 'மகராசி'ன்னு வாழ்த்துவாங்க."

"மகராசின்னு வாயால வாழ்த்தினா போதுமா? மகாராணியா வாழணும். அதுக்கு நிறையப் பணம் வேணும். உங்க வருமானம் எல்லாம் ரெண்டு வேளை சாப்பிடறதுக்குத்தான் பத்தும். நமக்குப் பொறக்கப் போற குழந்தைகளை நல்லாப் படிக்க வைக்கணும். அவங்களுக்கு நிறைய சொத்து சேர்த்து வைக்கணும். இதுக்கெல்லாம் ஏத்த வருமானம் வட்டித் தொழிலில்தான் கிடைக்கும்."

"வேண்டாம் ருக்மணி. இந்தத் தொழிலை நான் அனுமதிக்க மாட்டேன்."

"நீங்க அனுமதிக்கலேன்னா எங்க அப்பா கிட்ட பணம் வாங்கி, இந்த ஊர்லேயே எங்கேயாவது ஒரு குடிசையைப் போட்டுக்கிட்டு இந்தத் தொழிலை நடத்தத்தான்போறேன்!"

அதற்கு மேல் பாலகிருஷ்ணனால் எதுவும் பேச முடியவில்லை.

ருக்மிணி தன் அப்பாவிடம் பத்தாயிரம் ரூபாய் கேட்டபோது, அவர் இது போதாது என்று சொல்லி ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க, ருக்மணியின் வட்டித் தொழில் விரைவிலேயே ஜாம் ஜாமென்று துவங்கியது.

ருக்மிணி எதிர்பார்த்தது போல், டவுனுக்குப் போய் கடன் வாங்கிய பலர் அவளிடம் கடன் வாங்கினார்கள். 1000, 2000 என்று சிறிய தொகையை மட்டும் கடனாகக் கொடுத்து, வட்டியும் அசலும் திரும்ப வர வர, அவள் முதலீடு சில மாதங்களிலேயே குட்டி போடத் தொடங்கியது.

வட்டியை ஒழுங்காகக் கொடுக்காதவர்கள், அசலைக் கொடுக்காதவர்கள் எல்லோரையும் ருக்மிணி அவர்கள் வீடு தேடிச் சென்று அவர்கள் மானம் போகும்படி உரத்த குரலில் கடுமையாகப் பேசினாள். அவளுடைய ஏச்சு அருவருக்கும் அளவுக்கு இருந்ததால், அதற்கு பயந்தே கடனாளிகள் பணத்தைக் காலத்தில் செலுத்தத் துவங்கினர்.

பாலகிருஷ்ணன் இதில் பட்டுக் கொள்ளாமல் இருந்தாலும் சிலர் அவனிடம் ருக்மிணி பற்றி அங்கலாய்த்தார்கள். பாலகிருஷ்ணன் பெரும்பாலும் பதிலே சொல்லவில்லை. சில சமயம், "இந்த வியாபாரம் என் பெண்டாட்டி செய்யறது. எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை" என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டான்.

ருநாள் அவன் நண்பன் காளிமுத்து அவனைத் தேடி வந்தான். "நடவுக்கு உங்கிட்ட வாங்கின ஐயாயிரம் ரூபாயைத் திருப்பிக் கொடுக்கலாம்னு வந்தேன்" என்றான்.

"அதுக்கென்ன அவசரம்? இன்னும் அறுவடை ஆகலியே! இப்ப ஏது உன் கிட்ட பணம்?" என்றான் பாலகிருஷ்ணன்.

"என் கிட்ட பணம் இல்லைதான். என் மச்சான் கிட்ட கேட்டு வாங்கிட்டு வந்தேன்."

"எதுக்கு? நான் உன்னைப் பணம் கேட்டேனா?" என்றான் பாலகிருஷ்ணன்.

"நீ கேக்கல்ல. கேக்கவும் மாட்டேன்னு எனக்குத் தெரியும். ஆனா உன் சம்சாரம் வட்டிக்குப் பணம் குடுத்துக்கிட்டு இருக்கறச்சே, நான் வட்டி இல்லாத இந்தக் கடனை ரொம்ப நாள் வச்சுக்கறது நல்லாவா இருக்கும்? உன் சம்சாரத்துக்கு இந்தக் கடன் விஷயம் தெரிஞ்சு ஏதாவது சொல்லிட்டாங்கன்னா என்னால அதைப் பொறுக்க முடியாது" என்றான் காளிமுத்து.

பாலகிருஷ்ணன் தன் இயலாமையை நினைத்து மனம் நொந்தான்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

பொருள்:
குடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை உள்ள மனைவி அமையாதவனால் தன்னை இகழ்ச்சியாகப் பேசுபவர்கள் முன் கம்பீரமாக நடக்க முடியாது.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















58. கேள்வி வரும்போது பதில் ஒன்று வேண்டும்!

சுகுணாவுக்குப் பொதுவாக சாமியார்களிடம் அதிக ஈடுபாடு கிடையாது. அவள் கணவன் கார்த்திக், இதற்கு நேர்மாறாக, காவி உடையைக் கண்டாலே வணங்கி உபதேசம் கேட்பவன்.

ஆயினும் அவளுடைய பகுதிக்கு மெய்யானந்தர் என்ற சாமியார் வந்தபோது அவரைச் சந்திக்க சுகுணா ஆர்வம் காட்டினாள். இதற்குக் காரணம் மெய்யானந்தர் யார் என்ன கேள்வி கேட்டாலும் பொறுமையாகப் பதில் சொல்பவர் என்று பெயர் பெற்றிருந்ததுதான்.

மெய்யானந்தரின் பேச்சு முடிந்ததும், கேள்விகளுக்கு அவர் பதில் சொன்னார். சுகுணாவின் முறை வந்தபோது, அவள் எழுந்து, "சுவாமி, ஆண்களுக்கு பிரம்மச்சரியம், இல்லறம், வனவாசம், துறவறம் என்று நான்கு நிலைகள் வகுக்கப்பட்டிருப்பது போல் பெண்களுக்கு ஏன் வகுக்கப்படவில்லை?" என்று கேட்டாள்.

"இதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் ஆண், பெண் இருவருக்கும் இந்த நிலைகளை வகுத்தால், இருவரும் தனி தனிப் பாதையில் போக விரும்பலாம். கணவன் வனவாசம் போக விரும்பும்போது, மனைவி இல்லறத்தில் தொடர விரும்பலாம்.

"இரண்டாவது காரணம் ஆண்கள் இந்த நான்கு நிலைகளைப் பின்பற்றுவதை எப்போதோ விட்டு விட்டார்கள். பெண்களுக்கு இவை வகுக்கப்பட்டிருந்தால் ,அவர்கள் இதைத் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருப்பார்கள், விரதம் போன்ற விஷயங்களைப் பின்பற்றிக் கொண்டிருப்பது போல். இதை நம் முன்னோர்கள் விரும்பவில்லையோ என்னவோ!

"முன்றாவது காரணம் நம் சமுதாயம் ஒரு ஆண் ஆதிக்க சமுதாயம்! நான் சொன்ன மூன்று காரணங்களில் மூன்றாவது காரணம்தான் முக்கியமானது!"

சாமியாரின் சிரிப்பில் பக்தர்களும் பங்கு கொண்டனர்.

"அப்படியானால் என் போன்ற பெண்களுக்கு வீடுபேறு என்பதே கிடையாதா?" என்றாள்  சுகுணா விடாமல்.

"பெண்களுக்கு மகப்பேறு என்ற பெரிய பேறு இருக்கிறதே, அதை விடவா வீடுபேறு பெரியது?"

கூட்டம் மீண்டும் சிரித்தது.

"இதை நான் சிரிப்பதற்காகச் சொல்லவில்லை" என்றார் மெய்யானந்தர், புன்னகை மாறாமல். "உண்மையிலேயே, பெண்களுக்கு மகப்பேற்றை விடப் பெரிய பேறு எதுவும் இல்லை."

சுகுணா சற்றே ஏமாற்றத்துடன் அமர்ந்தாள்.

"என்னம்மா, நான் சொன்ன பதில் உனக்கு ஏமாற்றம் அளிக்கிறதா?" என்றார் மெய்யானந்தர் அவளைப் பார்த்து.

"ஆமாம்" என்றாள் சுகுணா.

கூட்டம் அதிர்ச்சியான முகபாவத்துடன் அவளை நோக்கியது.

"பெண்களுக்கு மகப்பேறு என்ற பெரும்பேறு இருக்கிறது என்பதற்காக வீடுபேறு அவர்களுக்கு மறுக்கப்படவில்லை. ஆண்களைப் போன்று ஆசிரம நியதிகள் எதுவும் பெண்களுக்கு வகுக்கப்படாததால் பெண்கள் வீடுபேறு அடைவதற்காக எதுவுமே செய்ய வேண்டியதில்லை."

"எதுவுமே செய்ய வேண்டாமா?" என்றாள் சுகுணா வியப்புடன்.

"வேண்டாம். கணவனையும் குடும்பத்தையும் அக்கறையோடு பார்த்துக்கொண்டால் போதும்! என்ன, இதுவே பெரும்பாடு ஆயிற்றே, இதை விடக் காட்டுக்குப் போய்த் தவம் செய்வதே சுலபமாக இருக்குமே என்று சொல்லப் போகிறாயா?"

இதற்குச் சிரிப்பதா வேண்டாமா என்று கூட்டம் யோசித்துக் கொண்டிருந்தபோது, சுகுணா மட்டும் வாய்விட்டுச் சிரித்தாள். அவள் சிரிப்பில் சாமியாரும் சேர்ந்து கொண்டார்.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

பொருள்:
ஒரு பெண் தன் கணவனையும் குடும்பத்தையும் முறையாகப் பேணி வந்தால், அவள் தேவர்கள் வாழும் உலகை அடையும் பெரும் பேற்றைப் பெறுவாள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














Sunday, March 13, 2016

57. வீட்டில் பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர்

ராம்குமாரின் உதவியாளராக ரம்யா வந்து சேர்ந்தபோது அவனுக்குக் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.

நிறுவனத்தில் ஒரு உயர் அதிகாரியாக இருந்த அவனுக்குத் தனி அறை உண்டு. அவன் அறைக்கு வெளியே அவன் உதவியாளரின் இருக்கை. உதவியாளருக்கே ஒரு தனி அறை போல்தான். இதற்கு முன்னால் அவனுக்கு உதவியாளராக இருந்தவர்கள் ஆண்கள்தான். இப்போதுதான்  முதல் முறையாக ஒரு பெண் வந்திருக்கிறாள்.

முதல் நாளே உணவு இடைவேளையின்போது அவன் அறைக்குள் உரிமையோடு வந்து, தான் கொண்டு வந்திருந்த தக்காளி சாதத்தை ராம்குமாரிடம் ரம்யா பகிர்ந்து கொண்டபோது, அவனால் மறுக்கவோ, 'அனுமதி பெறாமல் எப்படி உள்ளே வந்தாய்?' என்று அவளிடம் கோபித்துக் கொள்ளவோ முடியவில்லை.

"யார் செய்தது உங்கள் அம்மாவா?" என்றான் ஒரு பேச்சுக்காக.

"அம்மாவா? நான்தான் சார் செய்தேன். அம்மா அவர்கள் வீட்டில் அல்லவா இருக்கிறார்கள்?"

"அப்படியானால் நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்?"

'இதென்ன கேள்வி?' என்பது போல் அவனை உற்றுப் பார்த்த ரம்யா, "என் கணவர் வீட்டில்தான்! வேறு எங்கே இருப்பேன்? எங்கள் இருவருக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லையே?" என்று சொல்லிச் சிரித்தாள்.

"ஐ ஆம் சாரி" என்று அசடு வழிந்த ராம்குமார் அவளைச் சரியாகப் பார்க்காமல் அவள் இளம் பெண் என்பதை வைத்து அவள் திருமணம் ஆகாதவள் என்று நினைத்து விட்ட தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டான்.

"இப்போது வருத்தப்பட்டு என்ன பயன்? எனக்குக் கல்யாணம் ஆவதற்கு முன்பே நீங்கள் என்னைச் சந்தித்திருக்க வேண்டும்!" என்றாள் ரம்யா.

ராம்குமார் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான். 'என்ன இவள் இப்படிப் பேசுகிறாள்? ஒரு மாதிரியானவளாக இருப்பாளோ? நான் சற்று விலகியே இருப்பது நல்லது' என்று நினைத்துக் கொண்டான்.

"ஒரு பெண்ணைப் பார்த்தால் அவள் கல்யாணம் ஆனவள் என்று சொல்லி விடலாம். அவள் கழுத்தில்தான் விலங்கு இருக்குமே! ஆனால் ஒரு ஆணைப் பார்த்தால் அவர் கல்யாணம் ஆனவரா என்று சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் கல்யாணம் ஆனவராகத்தான் இருக்க வேண்டும்!"

"எப்படிச் சொல்கிறீர்கள்?"

"சொல்ல மாட்டேன். இது பெண்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு டெக்னிக். நீங்கள் வேண்டுமானால் உங்கள் மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்களேன்!"

ன்று மாலை வீட்டுக்கு வந்ததும் அவன் மனைவி கங்காவிடம் இது பற்றிக் கேட்டான். "ஒரு ஆண் திருமணம் ஆனவனா என்பதைக் கண்டு பிடிக்கப்  பெண்களிடம் ஏதோ டெக்னிக் இருக்கிறதாமே, உனக்குத் தெரியுமா?"

"யார் சொன்னார்கள்?"

"ரம்யா என்று எனக்கு உதவியாளராக ஒரு பெண் வந்திருக்கிறாள். அவள் சொன்னாள்."

"எனக்குத் தெரியாது. அவளிடமே கேட்டுக் கொள்ளுங்கள்" என்றாள் கங்கா. அவள் கோபமாகப் பேசுவது போல் தோன்றியது. 'ஒரு வேளை ரம்யாவுடன் எனக்கு ஏதாவது தொடர்பு ஏற்பட்டு விடும் என்று பயப்படுகிறாளோ?'

நாளைக்கு ரம்யா "உங்கள் மனைவி என்ன சொன்னார்கள்?" என்று கேட்டால் என்ன சொல்வது என்று அவன் கவலைப்பட்டான். ஆனால் ரம்யா இதுபற்றி அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

ம்யா அவனுக்கு உதவியாளராக வந்து சேர்ந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகி விட்டது. அவனிடம் இயல்பாகவும், சில சமயம் விளையாட்டாகவும் பேசினாலும், வேலையில் கருத்தாக இருந்தாள்.

அவன் முதலில் பயந்தது போல் அவள் ஆண்களுக்கு வலை வீசும் குணம் கொண்டவள் இல்லை என்று தெரிந்தது. இன்னும் சொல்லப்போனால் அவளிடம் ஒரு அலட்சியம் இருந்ததாகத் தோன்றியது.

'நீ என் மேலதிகாரி. அதனால் நீ சொன்னதை நான் செய்கிறேன். மற்றபடி நீ யாரோ, நான் யாரோ' என்கிற மாதிரிதான் நடந்து கொண்டாள். இதை அலட்சிய மனப்பான்மை என்று சொல்வதை விட சுதந்திர மனப்பான்மை என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று தோன்றியது.

ஒரு முறை அலுவலகத்தில் ஒரு ஊழியர் அவளிடம் ஏதோ தவறாகப் பேசியபோது ரம்யா செருப்பைக் கழற்றியதாகவும், அந்த ஊழியர் பயந்து ஒடி விட்டதாகவும் ஒரு செய்தி அவனுக்கு வந்தது.

ரம்யா இது பற்றி அவனிடம் எதவும் சொல்லவில்லை. அவனும் அவளைக் கேட்கவில்லை. இந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு அவள் மீது அவனுக்கு ஒரு மரியாதை வந்து விட்டதாகத் தோன்றியது.

அன்று மாலை வீட்டுக்குப் போனதும், மனைவியிடம், "கங்கா, உன்னிடம்  ஒன்று கேட்க வேண்டும். உனக்கு வேலைக்குப் போக விருப்பமா?" என்று ஆரம்பித்தான்.

அவள் முகத்தில் உடனடியாக ஒரு மகிழ்ச்சிக் களை வந்து உட்கார்ந்து கொண்டது.

"கல்யாணத்துக்கு முன்பு நான் வேலை பார்த்துக்கொண்டுதானே இருந்தேன்? நீங்கள் வேலைக்குப் போகக் கூடாது என்று சொன்னதால்தானே வேலையை விட்டேன். படித்து விட்டு வீட்டில் வெட்டிப் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறோமே என்று நான் வருந்தாத நாள் இல்லை. நீங்கள் சரி என்று சொன்னால் உடனே ஒரு வேலை தேடிக் கொள்வேன்."

"ஐ ஆம் சாரி கங்கா" என்றான் ராம்குமார். ('ஐ ஆம் சாரி' என்று அவன் சொன்னதற்கு ரம்யா குறும்புத்தனமாக பதில் சொன்னது நினைவுக்கு வந்தது).

"வெளியே வேலைக்குப் போனால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று நினைத்துத்தான் அப்படிச் சொன்னேன். தங்களைப் பாதுகாத்துக் கொள்வது பெண்கள் கையில்தான் இருக்கிறது என்று இப்போது தோன்றுகிறது. அதனால் நீ வேலைக்குப் போவதற்கு இனிமேல் நான் தடை சொல்ல மாட்டேன்."

"தாங்க்ஸ் எ லாட். ஆனால் நான் ரம்யாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவளைப் பார்த்துத்தான் நீங்கள் மனம் மாறி இருக்கிறீர்கள்!"

"அது எப்படி உனக்குத் தெரியும்?"

"ம்? இது பெண்களுக்கு மட்டுமே தெரிந்த டெக்னிக். அது என்ன டெக்னிக் என்று நீங்கள் ரம்யாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!"

சிரித்துக்கொண்டே உள்ளே போனாள் கங்கா.

திருமணத்துக்குப் பிறகு அவள் இத்தனை உற்சாகமாகச் சிரித்ததை ராம்குமார் பார்த்ததில்லை!

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 57
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

பொருள்:
ஒரு பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைப்பதன் மூலம் அவளுடைய கற்பைக்  காப்பாற்ற முடியாது. ஒரு பெண் தன் மனத்திண்மையின் மூலம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதுதான் சிறந்தது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்












56. சுகமான சுமைகள்

அலாரம் அடித்தபோது சுமித்ரா எழுந்திருக்கவில்லை. அதற்கு ஐந்து நிமிடம் முன்பே எழுந்து பல் துலக்கப் போய் விட்டாள். தினமும் அலாரம் வைத்து எழுந்து பழகியதில் தானாகவே விழிப்பு வர ஆரம்பித்து விட்டது.

அலாரம் அடித்த சத்தம் கேட்டதும், இனி அடுத்த நாளிலிருந்து அலாரம் வைக்காமலேயே எழுந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள். 'கடிகாரமே, நீ இனி எனக்காக இரவு முழுவதும் விழித்திருந்து காலையில் என்னை எழுப்ப வேண்டாம்!'

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அவளுக்கு சமையல் அறையில் வேலை இருந்தது. கணவன், மாமியார், குழந்தைகளுக்குக் காலை உணவு, மதிய உணவு செய்து குழந்தைகளுக்கும், தனக்கும் மதிய உணவைக் கட்டி முடித்த பின் மாமியாரை மென்மையாக எழுப்பினாள்.

மாமியார் எழுந்ததும் தான் செய்து வைத்தவற்றை அவரிடம் சொல்லி விட்டு வேலைக்குக் கிளம்பினாள் சுமித்ரா.

"ஏன் இன்னிக்கு சீக்கிரமே கிளம்பிட்டே?" என்றார் மாமியார்.

"இனிமே பஸ்ஸிலதான் போகணும். அதனால கொஞ்சம் சீக்கிரம்தான் கிளம்பணும்."

"ஏன் சரவணன் வர மாட்டானா?"

"அவனுக்கு நேரத்தை மாத்திட்டாங்க. அவன் இனிமே லேட்டாதான் கிளம்புவான். அதனால அவனோட போக முடியாது."

"அடப்பாவமே! ஏற்கனவே நீ நாள் முழுக்க ஒழைக்கறே! உனக்கு இன்னும் கஷ்டம்தான்."

"நீங்க இப்படிச் சொல்றதே ரொம்ப ஆறுதலா இருக்கு அத்தை! எந்த மாமியார் இப்படி மருமகள் கஷ்டப்படறாளேன்னு நெனைப்பாங்க?"

சுமித்ராவால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

"ஏண்டி அழறே? உன் கஷ்டம் எல்லாம் கொஞ்ச நாள்தான். சீக்கிரமே  எல்லாம் சரியாயிடும்" என்றார் மாமியார் அவள் முதுகைத் தட்டிக் கொடுத்து.

'நல்லவேளை! நான் அழுத காரணம் அத்தைக்குத் தெரியாது, சரவணனோடு என்னால் இனிமேல் ஏன் போக முடியாது என்பது தெரியாத மாதிரி!'

சரவணன் அவளுடைய நிறுவனத்தில் வேலை செய்பவன். அவளை விட ஒரு வயது சிறியவன். அவன் அவள் வீட்டு வழியேதான் அலுவலகத்துக்குப் போக வேண்டும் என்பதால் அவள் அவனுடனேயே ஸ்கூட்டரில் வரலாம் என்று சொன்னவன் அவன்தான். முதலில் சுமித்ரா தயங்கினாலும், அவள்  கணவனும், மாமியாரும் வற்புறுத்தியதால் இதற்கு ஒப்புக் கொண்டாள்.

அலுவலகத்தில் சிலர் அவர்களைப் பற்றித் தவறாகப் பேசியதை அவள் பொருட்படுத்தவில்லை. சரவணன் தனது ஒன்று விட்ட சகோதரன் என்றே அவள் மற்றவர்களிடம் சொல்லி இருந்தாள். சரவணனும் அவளை 'அக்கா' என்றே அழைத்து வந்தான்.

ஆனால் பல நாட்களுக்குப் பிறகு, நேற்று இந்த உறவில் ஒரு சிக்கல் விழுந்து விட்டது. அலுவலகத்திலிருந்து வரும்போது சில சமயம் அவர்கள் வழியில் ஒரு சிற்றுண்டி விடுதியில் காப்பி அருந்துவார்கள். நேற்று அதுபோல் காப்பி குடித்துக் கொண்டிருந்தபோது, சரவணன் முதல் முறையாக அவளைப் பெயர் சொல்லி அழைத்தான்.

"சுமித்ரா. நான் உன்னை விட ஒரு வயசுதான் சின்னவன். இந்த அக்கா தம்பி உறவெல்லாம் எதுக்கு?" என்று சொல்லி விட்டு அவளைப் பார்த்தான்.

ஒரு கணம் அவனை முறைத்துப் பார்த்த சுமித்ரா, ஒன்றும் சொல்லாமல் காப்பியைக் குடித்து முடித்து விட்டு எழுந்தாள். பில்லுக்குப் பணம் கொடுத்து விட்டு  விடுவிடுவென்று வெளியேறினாள்.

பின்னாலேயே ஒடி வந்த சரவணன் "அக்கா, தப்பா நெனச்சுக்காதீங்க. ஐ ஆம் சாரி... " என்று பதற்றத்துடன் மன்னிப்புக் கேட்டதைப் பெருட்படுத்தாமல், "நாளையிலேருந்து நான் பஸ்ஸிலேயே போய்க்கறேன். நீ என் வீட்டுக்கு வராதே" என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள்.

'ஏதோ உணர்ச்சி வேகத்தில் பேசி விட்டான். கண்டித்துப் பேசினால் தன் தவறை உணர்ந்து பழையபடி ஆகி விடுவான்' என்று தோன்றினாலும், ஒரு தவறான எண்ணம் அவன் மனதில் உதித்த பிறகு அவனுடன் தொடர்ந்து நட்பாக இருப்பது சரி வராது என்று நினைத்து அவன் உறவைத் துண்டித்து விட்டாள் சுமித்ரா.

இப்போது மாமியார் அவளுக்காகப் பரிதாபப்பட்டுப் பேசியபோது சுமித்ரா அழுதது சரவணன் இப்படி நடந்து கொண்டு ஒரு நல்ல நட்பை அழித்து விட்டானே என்ற ஆற்றாமையால்தான்.

மாலை சுமித்ரா வீட்டுக்குத் திரும்பியபோது பள்ளியிலிருந்து திரும்பியிருந்த குழந்தைகள் அவளை உற்சாகமாக வரவேற்றனர். அவர்களை விசாரித்து விட்டுக் கணவன் படுத்திருந்த அறைக்குச் சென்றாள்.

"சாப்பிட்டீங்களா? உங்களுக்குக் கத்தரிக்கா சாம்பார் புடிக்காது. ஆனா வேற காய் இல்லாததால தனியா கத்தரிக்கா இல்லாம சாம்பார் எடுத்து வச்சிருந்தேன். அத்தை கிட்ட சொல்ல மறந்துட்டேன்."

"அதை விடு. நீ ஏன் சரவணனோட போகலே? அம்மா அவனுக்கு நேரம் மாத்திட்டதா சொன்னாங்க. உங்க கம்பெனியில ஷிஃப்ட் கிடையாதே?"

சுமித்ராவுக்கு மீண்டும் அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு, "எவ்வளவு நாளைக்கு அவனோட போக முடியும்? ஆஃபீஸில வேற சில பேரு தப்பாப் பேசறாங்க. நீங்க அடிக்கடி சொல்லுவீங்க இல்ல,  நாம யாரையும் நம்பி இருக்கக்கூடாதுன்னு! அதனாலதான் இந்த ஏற்பாடு வேண்டாம்னு நிறுத்திட்டேன்."

"என்னவோ நடந்திருக்கு. சரி. எப்படியும் கொஞ்ச நாள் கழிச்சு நீ எங்கிட்ட சொல்லுவ. அப்ப தெரிஞ்சுக்கறேன்" என்றான் அவள் கணவன் ராகவன்.

"சரி. எழுந்திருங்க. என்னைப் புடிச்சுக்கிட்டு நடந்து பழகுங்க."

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு குணமாகிக் கொண்டு வந்த ராகவன் அவள் தோளில் கை வைத்தபடி நடந்தான்.

"நேத்தியை விட இன்னிக்கு நல்லா நடக்கிறீங்க" என்றாள் சுமித்ரா உற்சாகமாக.

"தினமும் காலையில சீக்கிரம் எழுந்து, எங்களுக்கெல்லாம் சமையல் பண்ணி வச்சுட்டு, வேலைக்குப் போய்த் திரும்பிய உடனேயே எனக்கு நடைப் பயிற்சி கொடுக்க வந்துடறியே, உனக்குக் கொஞ்சம் கூடச் சோர்வே இல்லியா? என்றான் ராகவன் வியப்புடன்.

"இல்லை" என்றாள் சுமித்ரா.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 56
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

பொருள்:
தன்னை (தன் கற்பை)க் காப்பாற்றிக்கொண்டு, தன் கணவனை அக்கறையுடன் கவனித்துக்கொண்டு, தன் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் வராமல் பார்த்துக்கொண்டு, மனம் தளராமல் வாழ்பவள் பெண். 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Wednesday, February 24, 2016

55. மழை வருமா?

"ஏண்டி உங்க வீட்டில சாமிக்கு விளக்கேத்தற பழக்கம் எல்லாம் இல்லையா?" என்றாள் பத்மா.

"இருக்கு அத்தை" என்றாள் பிரியா.

'பின்னே ஏன் ஏத்தலே?"

"குளிக்காம விளக்கு ஏத்த வேண்டாம்னுதான்!"

'குளிக்காமயா சமையல் பண்றே?"

"இது அவருக்கு மட்டும் அத்தை. உங்களுக்குக் குளிச்சுட்டு அப்புறமா செய்யறேன்."

"ஒவ்வொருத்தருக்கும் தனித் தனியாவா சமைப்பே? கேஸ், சாமான்கள் எல்லாம் அதிகமா செலவாகாது? உனக்கும்தானே கஷ்டம்?"

அறிந்தோ அறியாமலோ தன் நலத்தில் அக்கறை காட்டிப் பேசிவிட்ட தன் மாமியாருக்கு மனதளவில் நன்றி தெரிவித்தாள் பிரியா.

"என்ன செய்யறது அத்தை? அவரு இன்னிக்கு சீக்கிரமா கிளம்பணுமாம். அதனாலதான் அவருக்கு சாப்பாடு செஞ்சு குடுத்தனுப்பலாம்னுட்டு முதல்ல அவருக்கு மட்டும் கொஞ்சமா செய்யறேன்."

"அவன் இப்படித்தான் சில சமயம் சீக்கிரம் கிளம்புவான். கல்யாணத்துக்கு முன்னே எல்லாம் அவன் தான் வெளியிலே சாப்பிட்டுக்கறேன்னு சொல்லுவான். அதனால நான் எதுவும் செய்ய மாட்டேன்."

"இப்பவும் அப்படித்தான் சொன்னார் அத்தை. நான்தான் வெளியில சாப்பிட்டு அவரு உடம்பைக் கெடுத்துக்கக் கூடாதுன்னு அவரை வற்புறுத்தி சாப்பாடு கொடுத்து அனுப்பறதாச் சொன்னேன்."

'என் பிள்ளை மேல் எனக்கு இல்லாத அக்கறை இவள் புருஷன்  மீது இவளுக்கு இருக்கிறதாக்கும்!' என்ற இயல்பான 'மாமியார் சிந்தனை' பத்மாவின் மனதில் எழுந்தாலும்,  தன் மகனின் உடல் நலத்தில் மருமகள் காட்டும் அக்கறையை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள்.

ஆயினும் மாமியாரின் பந்தாவை விட்டுக் கொடுக்க விரும்பாமல், "எந்த சந்தர்ப்பத்திலும் சாமிக் குத்தம் வர விடக் கூடாது. நம்ப குடும்பத்தில சாமி கும்பிடறது ரொம்ப முக்கியம். குளிச்சுட்டு சாமிக்கு விளக்கேத்திக் கும்பிட்டப்பறம்தான் சமையல், சாப்பாடு எல்லாம். சாமிக்கு அப்புறம்தான் மனுஷங்க. அது அரசனா இருந்தாலும் சரி, புருஷனா இருந்தாலும் சரி" என்று ஒரு சொற்பொழிவு ஆற்றி விட்டுச் சென்றாள்.

'அரசனைக் கவனிக்க ஆயிரம் சேவகர்கள் இருப்பார்கள். என் புருஷனை நான்தானே கவனித்துக் கொள்ள வேண்டும்' என்று நினைத்துக் கொண்டாள் பிரியா.

கணவன் கிளம்பிச் சென்ற பிறகு பிரியா குளித்து விட்டு வந்தபோது, அவள் மாமியார் வற்றல் பிழிவதற்காகக் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.

"என்ன அத்தை, வற்றல் பிழியப் போறோமா  இன்னிக்கு?"

"ஆமாம். சீக்கிரம் வா. இப்பவே பிழிஞ்சு காய வச்சாத்தான் நல்லா காயும்."

"இன்னிக்கு மழை வரும் போல இருக்கே?"

"சித்திரையில ஏதுடி மழை? அதுதான் வெய்யில் காயுதே? வெய்யில் கொஞ்சம் மந்தமா இருக்கறதனால மழை வரும் என்கிறாயா? கண்டிப்பா வராது. கொஞ்ச நேரத்தில வெய்யில் கொளுத்த ஆரம்பிச்சுடும் பாரு."

அவர்கள் இருவரும் மொட்டை மாடிக்குப் போய் வற்றல் பிழிய ஆரம்பித்த பத்து நிமிடங்களில் 'சட சட'வென்ற பெரும் தூற்றலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

பொருள்:
கணவனையே தெய்வமாக நினைத்து வழிபடும் பெண் 'பெய்' என்று சொன்னால் மழை பெய்யும்.

(குறிப்பு: இந்தக் குறளின் பொருளை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் 'கணவனை அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் பெண் ‘மழை பெய்யும்’ என்று சொன்னால் அவள் வாக்கு பலிக்கும் என்ற உட்பொருளின் அடிப்படையில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது.)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்












Thursday, February 4, 2016

54. மாதவியும் கண்ணகிதான்!

புதிதாக வேலையில் சேர்ந்த மாதவிக்கு அவளிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வேலையை விட்டுப் போக இருந்த லக்ஷ்மி வேலைகளை விளக்கினாள். நான்கைந்து நாட்களுக்குப் பிறகு லக்ஷ்மி விலகும் நாள் வந்தது.

மாதவியிடமிருந்து விடைபெறுமுன் லக்ஷ்மி தயங்கியபடியே சொன்னாள். "மாதவி! இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டாம்னுதான் நெனச்சேன். ஆனா இந்த நாலு நாள் பழக்கத்திலேயே எங்கிட்ட இவ்வளவு அன்பா நடந்துக்கிட்ட உங்ககிட்ட சொல்லாம இருக்க மனசில்லை."

"சொல்லுங்க!" என்றாள் மாதவி.

"நம்ப மானேஜர் பெண்கள் கிட்ட வழியறவரு. அவருகிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கிட்டாதான் இங்கே வேலை செய்ய முடியும்!"

"அனுசரணையான்னா?"

"அவரு கொஞ்சம் அசடு வழியப் பேசுவாரு. 'உன்னோட டிரஸ் நல்லா இருக்கு'ம்பாரு. இன்னொரு நாளைக்கு, 'உன் கலருக்கு இந்த டிரஸ் பொருத்தமா இல்லை'ம்பாரு. ஏதாவது அசட்டு ஜோக் சொல்லுவாரு....சில சமயம் தொட்டுப் பேசுவாரு."

"தொட்டுப் பேசுவாரா?"

"தற்செயலாத் தொடற மாதிரி தொடுவாரு."

"இதையெல்லாம் நீங்க சகிச்சுக்கிட்டீங்களா?"

"வேற வழி? நான் மட்டுமா? எனக்கு முன்னால இருந்த பொண்ணு கூட சகிச்சுக்கிட்டாங்க. நானாவது கல்யாணமாகாதவ. பஸ்ஸில சில பேரு வேணும்னே இடிக்கறதில்லையா? அது மாதிரின்னு நெனச்சுப்பேன். ஆனா அவங்க கல்யாணம் ஆனவங்க. அவங்களே பாவம் சகிச்சுக்கிட்டாங்க. வேலையை விட்டுப் போகும்போது என்கிட்டே அவங்க உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்துட்டாங்க. நீங்களும் கல்யாணம் ஆனவங்கதான்..."

"கல்யாணம் ஆனவங்களா இல்லையாங்கறது முக்கியம் இல்லை. சரி. நீங்க சொன்ன தகவலுக்கு நன்றி."

ரவில் கணவனிடம் இதைப் பற்றிச் சொன்னாள். கணவன் தன்னை வேலையை விட்டு விலகி விடச் சொல்லுவானோ என்று நினைத்தாள். ஆனால் அவன் சற்று கூடப் பதட்டம் இல்லாமல் 'உன்னால இதையெல்லாம் மானேஜ் பண்ண முடியும்!' என்று சொல்லி விட்டான். எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று மாதவிக்குப் புரியவில்லை.

லக்ஷ்மி சொன்னது போலவே மானேஜர் அவளிடம் வழிய ஆரம்பித்தார்.

"உங்க பேரு ரொம்ப செ... அட்ராக்டிவா இருக்கு" என்றார்.

மாதவி மௌனமாக இருந்தாள்.

அவள் மௌனத்தினால் துணிவு பெற்று, "நான் கவனிச்சிருக்கேன். எல்லாருக்கும் எல்லா உடையும் பொருந்தறதில்ல. ஆனா உனக்கு எல்லா உடையுமே அழகா இருக்கு" என்றார். தன்னை ஒருமையில் அழைக்கும் உரிமையை அவர் எடுத்துக்கொண்டதை மாதவி கவனித்தாள்.

"சார், ஒரு நிமிஷம். ஃபோன் வந்திருக்கு" என்று மாதவி அவர்  அறைக்கு வெளியே சென்று விட்டுச் சற்று நேரம் கழித்து வந்தாள்.

"யாருகிட்டேயிருந்து ஃபோன்?"

மாதவி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல், "சொல்லுங்க சார்! ஏதோ கடிதங்களுக்கு பதில் எழுதணும்னு சொன்னீங்களே?" என்றாள்.

"இந்தா! இது உனக்கு ஒரு டெஸ்ட். இந்த லெட்டர்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டு வா. உன் திறமை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்."

'உங்களுக்கும் இது ஒரு டெஸ்ட்தான்' என்று  நினைத்துக் கொண்ட மாதவி, சற்று முன்பு வெளியில் போனபோது வீடியோ எடுப்பதற்காக செட் செய்த கைபேசியை வலது கையில் சற்றே பின்புறமாக ஒரு கோணத்தில்  வைத்துக்கொண்டாள். 'இந்தக் கோணத்தில் காட்சி சரியாகப் பதிவாக வேண்டுமே' என்று நினைத்துக்கொண்டாள்.

அவர் கடிதங்களை நீட்டியதும், அவற்றை வாங்க இடது கையை நீட்டினாள்.

"என்ன இடது கையை நீட்டறே! ஆர் யூ லெஃப்ட் ஹேண்டட்?" என்ற மானேஜர், தற்செயலாகக் கை படுவதுபோல் அவள் கையை மணிக்கட்டுக்கு மேல் பற்றினார்.

மாதவி வீடியோ பட்டனை அழுத்தினாள்.

மாதவியிடமிருந்து எதிர்ப்பு வராததால், மானேஜர் அவள் கையை இன்னும் அழுத்தமாகப் பற்றினார்.

"கையை எடுங்க சார். வீடியோ எடுத்தாகி விட்டது!" என்றாள் மாதவி.

மானேஜர் பதறிப் போய்க் கையை உதறி, "வாட் இஸ் திஸ்?" என்றார்.

தன் கைபேசியில் பிடிக்கப்பட்ட காட்சியை அவரிடம் காட்டிய மாதவி, "சில வினாடிகளுக்கு முன்னே நடந்ததை வீடியோ எடுத்திருக்கிறேன். உங்க மனைவிகிட்ட காட்டினா சந்தோஷப்படுவாங்க. இதில என்னோட முகம் விழலை. அதனால  யுடியூபில கூடப் போடலாம். நல்லவேளை!  கீழேயிருந்து ஒரு ஆங்கிள்ள  எடுக்கிறோமே எப்படி வருமோன்னு கவலைப்பட்டேன் நல்லாவே வந்திருக்கு. ஹேட்ஸ் ஆஃப்  டு  மாடர்ன் டெக்னாலஜி!"

"உனக்கு என்ன வேணும்?" என்றார் மானேஜர் கோபமும் பயமும் கலந்த குரலில்.

"முதல்ல இந்த 'வா போ' ங்கறதையெல்லாம் விட்டுட்டு என்னை மரியாதையா அழைக்கணும். அடுத்தது உங்க ஆஃபிஸ்ல வேலை செய்ற பெண்கள் கிட்ட சில்மிஷம் பண்ற வேலையை நிறுத்தணும்."

மானேஜர் என்ன சொல்வதென்று தெரியாமல் பதட்டத்துடன் அமர்ந்திருந்தார்.

"பயப்படாதீங்க. வேற எந்த விதத்திலேயும் உங்களை நான் பிளாக்மெயில் பண்ண  மாட்டேன். உங்க கீழ வேலை செய்யறவள் என்கிற முறையில் உங்க கிட்ட எப்படிப் பணிவோடும் கட்டுப்பாட்டோடும் நடந்துக்கணுமோ அப்படி நடந்துப்பேன்."

அவர் கொடுத்த கடிதங்களை வலது கையில் வாங்கிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள் மாதவி.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

பொருள்:
கற்பு என்னும் உறுதியான பண்பு ஒரு பெண்ணிடம் இருக்குமானால், பெண்ணை  விடப் பெருமை உடையது வேறு என்ன இருக்க முடியும்?

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்