About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, February 28, 2020

315. புதிய பாதை

"ஏங்க, நம்ம பையனும் பெண்ணும் பம்பாய், டில்லின்னு செட்டில் ஆயிட்டாங்க. அவங்க யாரும் இந்த கிராமத்துக்கு  வரப்போறதுல்ல. நமக்கும் வயசாயிக்கிட்டே வருது. இப்ப எதுக்கு இந்தத் தோட்டத்தை வாங்கறீங்க? நமக்கு அப்புறம் யார் இந்த ஊருக்கு வந்து இந்தத் தோட்டத்தைப் பராமரிக்கப் போறாங்க?" என்றாள் அகிலா.

"ஆத்தங்கரைப் பக்கத்தில அமைஞ்சிருக்கிற அருமையான இடம் அது. பெரிய தோட்டம். வாழை மரம், தென்னை மரம், மாமரம், கொய்யா மரம்னு நிறைய மரங்கள் இருக்கு. பொன்னுசாமி உயிரோட இருக்கறப்பவே கேட்டேன். அவர் கொடுக்க மாட்டேன்னுட்டாரு. இப்ப அவர் போனதும், வெளியூர்ல இருக்கற அவர் பையங்க எல்லா சொத்தையும் விக்கப் போறதாகச் சொன்னதால அந்தத் தோட்டத்தை நாம வாங்கலாம்னு நினைச்சேன்" என்றார் கணபதி .

"அதான் எதுக்குன்னு கேக்கறேன். நமக்கு இருக்கிற நிலபுலன்களை நாம பாத்துக்கிட்டா போதாதா/"

"ஒரு நல்ல முதலீடா இருக்கட்டுமேன்னுதான்!" என்றார் கணபதி.

"நீங்க இப்படியெல்லாம் முதலீடு, லாபம்னு அலையற ஆள் இல்லையே?" என்றாள் அகிலா கொஞ்சம் வியப்புடன். 

கணபதி பதில் சொல்லவில்லை.

சில நாட்களில் கணபதி அந்தத் தோட்டத்தை வாங்கி விட்டார்.  

பத்திரப் பதிவு முடிந்த சில நாட்களில், கணபதி தோட்டத்தின் மத்தியில் ஒரு பாதையை அமைத்து இரண்டு புறமும் வேலி கட்டினார். அதற்குப் பிறகு, தோட்டம் மூன்று பகுதிகளாகக் காட்சி அளித்தது - இரண்டு புறமும் வேலிக்குள் தோட்டங்கள், நடுவில் ஒரு பாதை என்று.

"எதுக்கு இப்படிப் பண்றீங்க?" என்றாள் அகிலா.

"தோட்டத்துக்கு நடுவில, ரெண்டு மூணு பேர் நடந்து போற அகலத்துக்கு ஒரு பாதை அமைச்சிருக்கேன்" என்றார் கணபதி.

"அதான் எதுக்குன்னு கேக்கறேன்?"

"அகிலா! தோட்டத்துக்கு ஒரு பக்கம் ரோடு இருக்கு. இன்னொரு பக்கம் ஆத்தங்கரை. நம் ஊர்ப்பெண்கள் ஆத்துக்குத் தண்ணி எடுக்கப் போகறப்ப கிட்டத்தட்ட ஒரு மைல் சுத்திப் போக வேண்டி இருக்கு. இப்ப நம் தோட்டத்துக்கு நடுவில இருக்கற பாதை வழியா அவங்க ஆத்துக்குப் போகலாம். ஒரு மைல் சுத்திப் போக  வேண்டி இருக்காது."

"அது எப்படி? அது நம் நிலமாச்சே! அது வழியா ஊர்க்காரங்கல்லாம் எப்படிப் போக முடியும்?"

"அதுக்குத்தான் தோட்டத்தை மூணாப் பிரிச்சு, ரெண்டு பக்கம் தோட்டம், நடுவில பாதைன்னு உண்டாக்கி இருக்கேன். அந்தப் பாதையை இந்த ஊர்ப் பஞ்சாயத்து பேர்ல பதிவு பண்ணிடப் போறேன். அப்புறம் அது ஊருக்குப் பொது இடமா ஆயிடும். அதில யார் வேணா நடந்து போகலாம்!"

"ஏங்க, நம்ப நிலத்தில, இருநூறு முன்னூறு சதுர அடி பொதுவுக்குப் போயிடுமே! காசு கொடுத்து நிலத்தை வாங்கிட்டு எதுக்கு இப்படி தானம் பண்றீங்க?" என்றாள் அகிலா, சற்று வருத்தத்துடனும், கோபத்துடனும்.

"நம் ஊர் ஜனங்க, குறிப்பா பெண்கள், குளிக்கவும், தண்ணி எடுக்கவும் ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவை ஆத்துக்குப் போறாங்க. ஒவ்வொரு தடவையும் ஒரு மைல் தூரம் சுத்திப் போக வேண்டி இருக்கு. வெயில், மழைன்னு பாக்காம தண்ணிக்  குடத்தைத்  தூக்கிக்கிட்டு சின்னவங்க, பெரியவங்க, வயசானவங்க, உடம்பு சரியில்லாதவங்கன்னு எல்லாரும் கஷ்டப்படறதைப் பாக்க எனக்கு எப்பவுமே மனசுக்குக் கஷ்டமா இருக்கும்.

" பொன்னுசாமி கிட்ட இந்தத் தோட்டம் இருந்தப்ப, தோட்டத்துக்கு நடுவில ஜனங்க ஆத்துக்குப் போக ஒரு பாதை போட்டுக் கொடுக்கச் சொல்லி அவர்கிட்ட கேட்டேன். அவரு ஒத்துக்கல. சரி, நாம தோட்டத்தை விலைக்கு வாங்கி, பாதை அமைச்சுக் கொடுக்கலாம்னு நினைச்சு அவர்கிட்ட தோட்டத்தை விலைக்குக் கேட்டேன். அவரு கொடுக்க மாட்டேன்னுட்டாரு. இப்ப அவர் இறந்ததும், அவர் பசங்க அதை விக்கறாங்கன்னதும், அதை வாங்கி நான் நினைச்ச மாதிரி ஊர் ஜனங்களுக்குப் பாதை போட்டுக் கொடுத்திருக்கேன்!" என்றார் கணபதி.

"நாம நம்ம வீட்டுக் கிணத்துத் தண்ணியைத்தான் பயன்படுத்தறோம். நீங்களோ நானோ தண்ணி எடுக்கவோ, குளிக்கவோ ஆத்துக்குப் போறதில்ல. யாரோ கஷ்டப்படறாங்கங்கறதுக்காகவா இப்படி ஒரு காரியத்தைப் பண்ணி இருக்கீங்க?" என்றாள் அகிலா வியப்புடனும், பிரமிப்புடனும்.

"கஷ்டப்படறது மத்தவங்களா இருந்தா என்ன? அவங்களோட கஷ்டத்தை நம்மால உணர முடியாதா? அதுக்கு நாம எதுவும் செய்யக் கூடாதா?" என்றார் கணபதி.   

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 315
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

பொருள்:
பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல் ஒருவன் உணர்ந்து நடந்து கொள்ளாவிட்டால், அவனுடைய அறிவினால் அவனுக்கு என்ன பயன்?
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்
















Monday, February 24, 2020

314. காணாமல் போன சங்கிலி!

"வாங்க!" 

தன் குடியிருப்பு இருக்கும் அதே தளத்தில் இருந்த ஒரு குடியிருப்பில் வசித்து வந்த உமாபதியை வரவேற்றார் பாலன்.  

ஐந்து வருடங்களாக ஒரே தளத்தில் வசித்ததால் இருவர் குடும்பங்களும் பரிச்சயமானவை என்ற போதும் நெருக்கமானவை என்று கூற முடியாது. முதலில் இருந்த நெருக்கமும் இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியால் குறைந்து விட்டது.

"உக்காருங்க!" என்ற பாலன், உமாபதி சோஃபாவில் உட்கார்ந்ததும், தானும் அவர் எதிரே உட்கார்ந்தார். 

"சொல்லுங்க!" என்றார் பாலன். 

உமாபதி சற்றுத் தயங்கி விட்டு, "சார்! உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். எனக்கு இதைச் சொல்றதுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. மேடம் வெளியில போனதைப் பாத்துட்டுத்தான் வந்தேன். கடைக்குப் போறாங்க போல. இன்னும் பத்து நிமிஷத்துக்கு இங்கே யாரும் வர மாட்டாங்க, இல்ல?" என்றார்.

"வர மாட்டாங்க. சொல்லுங்க" என்றார் பாலன்.

"உங்க வீட்டில ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு நகை காணாமப் போச்சு."

"ஆமாம். என் மனைவி அப்பத்தான் புதுசா வாங்கி இருந்த டாலர் வச்ச ரெட்டை வடம் சங்கிலி. 8 பவுன். கடையில கொடுத்த நகைப்பெட்டியில போட்டு மேஜை மேல வச்சிருந்தா. பீரோவில் எடுத்து வைக்கணும்னு நினைச்சு, அப்புறம் வேற ஏதோ ஞாபகத்தில மறந்து போய் இன்னொரு ரூமுக்குப் போயிட்டா. ரொம்ப நேரம் கழிச்சுத்தான் அவளுக்கு ஞாபகம் வந்திருக்கு. அப்ப போய்ப் பாத்தப்ப, நகைப்பெட்டி மட்டும் இருந்தது. அதுக்குள்ளே இருந்த சங்கிலியைக் காணோம். நாங்களும் உங்களை மாதிரி நடுத்தரக் குடும்பம்தான். அப்ப, 8 பவுன் தொலைஞ்சு போனது எங்களுக்குப் பெரிய இழப்புதான்."

உமாபதி மறுபடியும் தயங்கினார். பிறகு, "நீங்க ஏன் சார் போலீஸ்ல புகார் கொடுக்கல?" என்றார்.

"போலீஸ்ல புகார் கொடுத்திருந்தா சங்கிலியை எடுத்தது யார்னு சுலபமாக் கண்டு பிடிச்சிருப்பாங்க!"

"எப்படி சார்?"

"எனக்கு யார்மேல சந்தேகம்னு போலீஸ்ல சொல்லி இருந்தா போதும். அவங்க அவனை விசாரிச்சு உண்மையை வரவழைச்சிருப்பாங்க. சங்கிலி வச்சிருந்த நகைப்பெட்டி மேலேயும், அதை வச்சிருந்த மேஜையிலேயும் நகையை எடுத்தவனோட கைரேகை பதிஞ்சிருக்கும். அது ஒண்ணே போதுமே! நகையை எங்கே வித்தான் அல்லது அடகு வச்சான்னு கண்டு பிடிச்சு நகையை மீட்டுக் கொடுத்திருப்பாங்க!"

"அப்புறம் நீங்க ஏன் சார் போலீசுக்குப் போகல?"

"அது இருக்கட்டும். நீங்க சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லுங்க" என்றார் பாலன் சிரித்தபடி.

"சார்! அந்த நகையை எடுத்தது என் பையன் ரமேஷ்தான். நீங்களும் அவன் மேல சந்தேகப்படற மாதிரி பேசினீங்க. ஆனா நேரடியா கேக்கல. நான் என் பையன்கிட்ட கேட்டேன். அவன் இல்லைன்னுட்டான். ஆனா எனக்கு சந்தேகமாத்தான் இருந்தது. அவனுக்கு குடிப் பழக்கம் இருந்ததும், குடிக்கறதுக்குப் பணம் வேணும்னுட்டுத்தான் இப்படி செஞ்சிருக்கான்னும் எனக்குக் கொஞ்ச நாள் கழிச்சுத்தான் தெரிஞ்சது. 

"அப்புறம் என்னென்னவெல்லாமோ செஞ்சு அவன் குடிப் பழக்கத்தை நிறுத்திட்டேன். ஆனா, நகை பத்தின உண்மையை உங்க கிட்ட சொல்ற தைரியம் எனக்கு இல்ல. அவன் திருடின நகைக்கு ஈடான பணத்தை உங்ககிட்ட கொடுத்து, உங்க நஷ்டத்தை ஈடு செய்யற அளவுக்கு எனக்கு வசதியும் இல்ல.

"இந்தக் குற்ற உணர்ச்சியாலதான் உங்ககிட்டேந்து கொஞ்சம் ஒதுங்கி இருந்தேன். நீங்க என் பையன் மேல சந்தேகப்பட்டீங்கங்கற கோபத்தினாலதான் அப்படி நடந்து கிட்டதா நீங்க நினைச்சிருக்கலாம். இப்ப சொல்லுங்க. நீங்க ஏன் போலீசுக்குப் போகல?"

"சார்! சங்கிலியை எடுத்தது உங்க பையன்தாங்கறதில எனக்கும் என் மனைவிக்கும் எந்த சந்தேகமும் இல்ல. உங்க பையன் எங்க வீட்டிலேந்து நீங்க இரவல் வாங்கிக்கிட்டுப் போன ஸ்பானரைத் திருப்பிக் கொடுக்க வந்திருக்கான்.

"என் வீட்டு வாசற்கதவு திறந்து இருந்திருக்கு. என் மனைவி அறைக்குள்ள இருந்திருக்கா. ரமேஷ் குரல் கேட்டதும் 'ஸ்பானரை' சோஃபா மேல வச்சிடு'ன்னு என் மனைவி சொல்லி இருக்கா. ஹாலுக்குள்ள வந்த ரமேஷ் இன்னொரு அறையில இருந்த மேஜை மேல இருந்த நகைப் பெட்டியைப் பாத்திருக்கான்.

"இங்கேயிருந்து பாத்தா அந்த மேஜை தெரியுது பாருங்க! அந்த அறைக்குள்ள போய் அந்த நகைப்பெட்டியைத் திறந்து பாத்துட்டு, அதில இருந்த சங்கிலியை எடுத்துக்கிட்டுப் போயிருக்கான். ஸ்பானரை ஹால்ல இருந்த சோஃபா மேல வைக்காம நகைப்பெட்டி இருந்த மேஜை மேல வச்சுட்டுப் போயிருக்கான். என் மனைவி சொன்னபடி ஹால்ல இருக்கற சோஃபா மேல ஸ்பானரை வச்சுட்டுப் போகாம யாரும் இல்லாத அந்த அறைக்குள்ள போய் நகைப்பெட்டி இருந்த மேஜை மேல ஏன் ஸ்பானரை வச்சுட்டுப் போகணும்? அவன்தான் நகையை எடுத்திருக்காங்கறதுக்கு இதுவே ஆதாரம்!

"இன்னொரு அறையில இருந்த என் மனைவி இதை கவனிக்கல. நகைப்பெட்டியை மேஜைமேல் வச்சதும், வாசற்கதவைத் திறந்து வச்சுட்டு இன்னொரு அறையில இருந்ததும் என் மனைவியின் அஜாக்கிரதைதான். ஆனா உங்க பையனைத் தவிர வேற யாரும் எங்க வீட்டுக்கு வரல. 

"போலீஸ்ல புகார் செஞ்சு, எங்க சந்தேகத்தைச் சொல்லியிருந்தா கல்லூரியில படிச்சுக்கிட்டிருந்த உங்க பையனோட எதிர்காலமே பாழாகி இருக்கும்.

"ஒருவேளை எங்க சந்தேகம் தப்பா இருந்து, அவன் நகையை எடுக்கலேன்னா கூட, அப்பவும் அவனுக்கு ஒரு கெட்ட பேர் வந்து அவன் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும். 

"நகை போனாலும் பரவாயில்ல, ஒரு பையனோட எதிர்காலத்தைப் பாழடிக்க வேண்டாம்னுதான் நான் போலீசுக்குப் போகல."

உமாபதி சட்டென்று எழுந்து பாலனின் கைகளைப் பிடித்துக் கொண்டார். 

"சார்! உங்களுக்கு ரொம்பப் பரந்த மனசு. உங்க வீட்டில என் பையன் திருடினதை நினைச்சா எனக்கு அவமானமா இருக்கு. இப்ப நான் வந்த விஷயத்தை நினைச்சா இன்னும் அவமானமா இருக்கு!"

"சொல்லுங்க. என்ன விஷயம்?" என்றார் பாலன்.

"சார்! ரமேஷ் படிப்பை முடிக்கப் போறான். அவனுக்கு ஒரு பெரிய கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு. அவங்க ஒரு நல்ல ரெஃபரன்ஸ் கேட்டிருக்காங்க. நீங்க ஒரு அரசு நிறுவனத்தில அதிகாரியா இருக்கறதால உங்க பேரை அவன் கொடுத்திருக்கான். 

"எனக்கு அது இப்பத்தான் தெரியும். உங்களுக்கு அவன் மேல சந்தேகம் இருக்கறது அவனுக்குத் தெரியாது. எனக்கு முன்னாலேயே தெரிஞ்சிருந்தா நான் உங்க பேரைக் கொடுக்க வேண்டாம்னு அவன்கிட்ட சொல்லி இருப்பேன்.

"இப்ப அந்த கம்பெனியிலேந்து அவனைப் பத்தி விசாரிச்சு உங்களுக்குக் கடிதம் வரும். தயவு செஞ்சு அவன் பண்ணின தப்பை மனசில வச்சுக்கிட்டு நீங்க அவனைப் பத்தித் தப்பா ரிப்போர்ட் கொடுத்துடாதீங்க. 

"இந்த உதவியைக் கேக்கத்தான் நான் வந்தேன். நீங்க ஏற்கெனவே அவன் விஷயத்தில ரொம்பப் பரந்த மனசோட நடந்துக்கிட்டிருக்கீங்க. இப்ப உங்க கிட்ட இன்னொரு உதவி கேக்கறது எனக்கு அவமானமாத்தான் இருக்கு. ஆனா எனக்கு வேற வழி இல்லை."

உமாபதிக்கு அழுகை வந்து விடும் போல் இருந்தது.

"நீங்க கொஞ்சம் லேட்டா வந்திருக்கீங்க சார்! எனக்கு ஏற்கெனவே அந்த கம்பெனியிலேந்து கடிதம் வந்துடுச்சு. நேத்திக்கே நான் பதிலும் அனுப்பிட்டேன்!"

"சார்!" என்றார் உமாபதி என்ன சொல்வதென்று தெரியாமல்.

"ரமேஷை எனக்கு நல்லாத் தெரியும், அவன் நல்ல குணம் உள்ளவன், நேர்மையானவன்னுதான் ரிப்போர்ட் கொடுத்திருக்கேன்!" என்றார் பாலன் சிரித்துக்கொண்டே.

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 314
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

பொருள்:
நமக்கு ஒருவர் துன்பம் செய்தால், அவர் வெட்கப்படும்படி அவருக்கு  நன்மை செய்வதுதான் அவரைத் தண்டிக்கும் வழியாகும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்



















Tuesday, February 18, 2020

313. சிறையில் ஒரு கீதை!

"ஏம்ப்பா, நீ ஜெயிலுக்கு வந்து மூணு மாசம் ஆகப்போகுது. வந்ததிலேந்து ஒதுங்கியே இருக்கியே! என்ன தப்பு பண்ணிட்டு வந்திருக்க?"

நடுத்தர வயதைத் தாண்டி விட்ட அந்தக் கைதியை ஜகன் நிமிர்ந்து பார்த்தான்.

"நான் ஒரு தப்புமே பண்ணலீங்க!" என்றான் ஜகன்.

"அப்படிப் போடு அருவாளை! நானும் 20 வருஷமா பாத்துக்கிட்டிருக்கேன். இந்த ஜெயிலுக்கு வரவங்க எல்லாருமே பொதுவாப் பேசற ஒரே வசனம் இதுதான்!" என்றான் அந்தக் கைதி.

"20 வருஷமாவா? 20 வருஷமாவா ஜெயில்ல இருக்கீங்க?" என்றான் ஜகன் வியப்புடன்.

"பின்னே? ஆயுள் தண்டனையாச்சே!"

"ஆயுள் தண்டனைன்னா, அப்ப..." என்று இழுத்தான் ஜகன்.

"ஆமாம். கொலை பண்ணிட்டுத்தான் உள்ள வந்திருக்கேன். சாதாரண மனுஷனைக் கொலை செஞ்சிருந்தா ஆயுள் தண்டனைன்னா கூட ஏழெட்டு வருஷத்தில வெளியே விட்டிருப்பாங்க. ஆனா, நான் கொலை பண்ணினது ஒரு அரசியல் தலைவரையாச்சே! அதான் வெளியில விட மாட்டேங்கறாங்க. 25 வயசு வாலிபனா உள்ளே வந்தேன். இப்ப இளமையெல்லாம் போய் முதுமை வந்துக்கிட்டிருக்கு!" என்றான் அவன் சிரித்தபடி.

"ஓ! நீங்க... அண்ணாமலையா?" என்றான் ஜகன் அதிர்ச்சியுடன்.

"ஆமாம், பேப்பர்ல என்னைப் பத்திப் படிச்சிருப்பியே! இப்ப கூட என்னை விடுதலை செய்யச் சொல்லி யாரோ வழக்குப் போட்டு அது கோர்ட்ல இருக்கு. இதுல என்ன வேடிக்கைன்னா, யார் சொல்லி நான் இந்தக் கொலையைச் செஞ்சேனோ அவங்க பெரிய பதவிலல்லாம் இருந்து, சில பேரு செத்துக் கூடப் போயிட்டாங்க. ஆனா நான் இன்னும் ஜெயில்லயே இருக்கேன். அது இருக்கட்டும். உன் கதையைச் சொல்லு. நீ செய்யாத எந்தத் தப்புக்காக உன்னை உள்ளே போட்டிருக்காங்க?" என்றான் அண்ணாமலை கேலியுடன்.

சற்று நேரம் தயங்கிய பிறகு ஜகன் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

கன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது நடந்த ஒரு விஷயம் அவன் வாழ்க்கையையே சீரழித்து விட்டது.

அவன் வேலை செய்து வந்த நிறுவனம் ஒரு சிறந்த நிறுவனம். அதில் வேலை செய்தவர்களுக்கு வேலை உறுதி, நல்ல சம்பளம், வேறு பல வசதிகள் எல்லாம் இருந்தன. ஒரு சாதாரண உதவியாளன் என்ற நிலையிலும் ஜகன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். 

ஒருமுறை அந்த நிறுவனத்தின் காஷியர் பத்தாயிரம் ரூபாய் காணாமல் போய் விட்டதாகப் புகார் செய்தார். உடனே நிறுவனத்தின் கதவுகள் மூடப்பட்டு, பாதுகாப்பு அதிகாரி ஒவ்வொரு ஊழியராக அழைத்து விசாரித்தார். ஜகனுடன் பணி புரியும் பாஸ்கர் விசாரிக்கப்பட்டதும், பாதுகாப்பு அதிகாரி நேரே ஜகனிடம் வந்து அவன் மேஜை இழுப்பறையைத் திறந்து பார்த்தார். 

காணாமல் போன பத்தாயிரம் ரூபாய் அங்கே இருந்தது!

ஜகனிடம் பாதுகாப்பு அதிகாரியும், மற்ற அதிகாரிகளும் விசாரித்தபோது அவன் அந்தப் பணம் எப்படித் தன் மேஜை இழுப்பறைக்குள் வந்தது என்று தனக்குத் தெரியாது என்று கதறினான். ஆனால் அவன் பேச்சு எடுபடவில்லை. 

ஜகனை உடனே வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். போலீசுக்குப் போக வேண்டாம் என்று நிறுவனம் முடிவு செய்ததால் ஜகன் சிறைக்குப் போகாமல் தப்பினான். 

ஆயினும் பல மாதங்களுக்கு வேறு வேலை கிடைக்காமல், மனைவி மற்றும் இரண்டு வயதுக் குழந்தை கொண்ட தன் குடும்பத்தைக் காப்பாற்ற அவன் பட்ட பாடு!

காணாமல் போன பணம் தன் மேஜை இழுப்பறைக்குள் எப்படி வந்தது என்பது அவனுக்கு விரைவிலேயே தெரிந்து விட்டது. காஷியர் தன் அறையைப் பூட்டாமல் சில நிமிடங்கள் தன் அறையை விட்டு வெளியே சென்றபோது ஜகன் காஷியர் அறைக்குள் சென்றதைத் தான் பார்த்ததாக பாஸ்கர் பாதுகாப்பு அதிகாரியிடம் கூறியதால்தான் அவர் வந்து ஜகனின் மேஜை இழுப்பறையைச் சோதனை செய்திருக்கிறார். 

தன் மீது அபாண்டமாகப் பழி சுமத்திய பாஸ்கர்தான் பணத்தைத் திருடித் தன் மேஜை இழுப்பறையில் வைத்திருப்பான் என்பதில் ஜகனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

பாஸ்கருக்குச் சூதாடும் பழக்கம் இருந்ததால் அவன்தான் பணத்தைத் திருடியிருக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தில் பணி செய்த அவன்  நண்பர்கள் சிலர் கூட அவனிடம் பிறகு சொன்னார்கள்.

பாஸ்கருக்கு ஒரு சிறிய தொந்தரவு கூடக் கொடுக்காத தனக்கு இவ்வளவு பெரிய தீங்கு செய்து விட்ட பாஸ்கரைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஜகன் மனதில் அப்போதே தோன்றியது.

சில வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் இரவு ஒரு தியேட்டரில் இரண்டாவது காட்சி பார்த்து விட்டு ஜகன் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தபோது தற்செயலாக பாஸ்கரை வழியில் சந்தித்தான். 

அந்த நேரத்தில் அந்த இடத்தில் வேறு எவரும் இல்லாத சூழ்நிலையில் பாஸ்கர் மீது அவனுக்கு இருந்த ஆத்திரத்தில், சாலையோரம் இருந்த ஒரு கட்டையை எடுத்து பாஸ்கரின் தோளில் ஓங்கி அடித்தான் ஜகன். 

ஆனால் எதிர்பாராதவிதமாக அந்தப் பக்கம் சைக்கிளில் வந்த ஒரு நபர் ஜகனைப் பிடித்துக் கொண்டு கூச்சல் போட, இன்னும் சிலர் அங்கே வந்து விட்டனர். 

ஜகனைப் பிடித்து அவர்கள் போலீசில் ஒப்படைக்க, அவன் மீது வழக்கு போடப்பட்டு அவனுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

"ஏம்ப்பா ஒரு ஆளைக் கட்டையால அடிச்சிருக்க. இன்னொத்தர் வந்து உன்னைத் தடுக்கலேன்னா நீ அவனை அடிச்சுக் கொலை கூடப் பண்ணி இருக்கலாம்! தப்பே பண்ணலேன்னு சொல்ற?" என்றான் அண்ணாமலை பெரிதாகச் சிரித்தபடி.

"என்னங்க நீங்க? இவ்வளவு தூரம் விவரமா சொன்னேனே! எனக்கும் அவனுக்கும் ஒரு பிரச்னையும் இல்லாதப்ப என் வாழ்க்கையையே அழிச்சவன் அவன்! அவன் மேல என் கோபத்தைக் காட்ட அவனை நான் ஒரு  அடி அடிச்சதுக்கு எனக்கு ஒரு வருஷம் ஜெயில் தண்டனையா? என்னங்க நியாயம் இது?" என்று குமுறினான் ஜகன்.

"தம்பி! நான் ஒரு கொலைகாரன்தான். ஆனா இந்த ஜெயில்ல 20 வருஷமா பல பேரைப் பாத்த அனுபவத்தில சொல்றேன். ஒத்தருக்குக் கெடுதல் செய்யறது தப்பு. நமக்குக் கெடுதல் செஞ்சவங்களுக்கு பதிலுக்கு கெடுதல் செய்யறது கூட தப்புதான். அப்படி செஞ்சா சட்டப்படி தண்டனை கிடைக்காட்டாலும், வேற விதத்தில தண்டனை கிடைக்கும். இதை நான் எத்தனையோ பேர் விஷயத்தில பாத்திருக்கேன்!" என்றான் அண்ணாமலை.

'கொலைகாரன்! ஆனா பெரிய ஞானி மாதிரி பேசறான்! ஆனா என் விஷயத்தில அவன் சொல்ற மாதிரிதானே நடந்திருக்கு? நான் அடிச்ச பாஸ்கர் ஒரு மாசம் ஆஸ்பத்திரியில இருந்துட்டு வெளியே வந்திருப்பான். ஆனா நான் ஒரு வருஷம் ஜெயில்ல இருக்கணுமே' என்று நினைத்துக் கொண்டான் ஜகன்.  

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 313
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

பொருள்:
நாம் எதுவும் செய்யாதபோது நமக்குத் தீங்கு செய்தவருக்கு (பதிலுக்கு) நாம் தீங்கு செய்தால் கூட மீள முடியாத துன்பம் நமக்கு வந்து சேரும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்


















Saturday, February 8, 2020

312. பதவி உயர்வு

கதிரேசன் அந்த நிறுவனத்தில் ஒரு அதிகாரியாகச் சேர்ந்தபோது, சுகவனம் என்ற மற்றொரு அதிகாரியின் கீழ் பணி செய்யும்படி நியமிக்கப்பட்டான். 

அலுவலகப் பதவிப் படிக்கட்டில் சுகவனமும், கதிரேசனும் ஒரே படியில் இருந்தாலும், சீனியர் என்ற அடிப்படையில் சுகவனம் கதிரேசனுக்கு மேலதிகாரி என்ற நிலையைப் பெற்றார். அத்துடன் வயதிலும் அவர் கதிரேசனை விடப் பதினைந்து வருடங்கள் மூத்தவர்.

கதிரவன் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே சுகவனம் கதிரேசனிடம், "நான் இந்த கம்பெனியில ஒரு உதவியாளரா சேர்ந்து, 10 வருஷம் கழிச்சுத்தான் ஒரு அதிகாரி ஆனேன். நீ ஏதோ அதிகம் படிச்சவங்கறதால உன்னை நேரடியா ஒரு அதிகாரியா ஆக்கிட்டாங்க. உனக்கு வேலை கத்துக் கொடுக்கற பொறுப்பை எங்கிட்ட கொடுத்திருக்காங்க. உழைப்புக்கும், சீனியாரிட்டிக்கும் கிடைக்கிற மரியாதை இதுதான்!" என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

வர் சொன்னது போல் கதிரேசனுக்கு வேலை கற்றுக் கொடுக்க அவர் அதிகம் கஷ்டப்பட வேண்டி இருக்கவில்லை. ஒரு சில வாரங்களிலேயே தன் வேலையைக் கற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கி விட்டான் கதிரேசன். ஆயினும் அவன் தொடர்ந்து அவனுக்கு மூத்த அதிகாரியான சுகவனத்தின் கீழ்தான் செயல்பட வேண்டி இருந்தது 

தன்னைப்போல் அல்லாமல் இளம் வயதிலேயே கதிரேசன் ஒரு அதிகாரியாகி விட்டதை சுகவனத்தால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவன் வேலையில் குற்றம் கண்டு பிடிப்பதும், மற்றவர் முன்பு அவனைக் கடிந்து பேசுவதுமாக அவன் மீது தனக்கிருந்த வெறுப்பை அவர் வெளிக்காட்டிக் கொண்டே இருந்தார்.

மற்ற ஊழியர்களில் சிலர் கதிரேசனிடம், "நீங்க ஏன் சார் இதையெல்லாம் சகிச்சுக்கிட்டிருக்கீங்க? மானேஜர் கிட்ட சொல்லி சுகவனத்தின் கீழ் பணி செய்யாம உங்களுக்குன்னு தனிப் பொறுப்பு வாங்கிக்கங்க. மானேஜருக்கு சுகவனத்தைப் பத்தித் தெரியும் அதனால நீங்க உங்க நிலைமையைச் சொன்னா அவர் புரிஞ்சுப்பாரு" என்று கூறினர்.

"பரவாயில்ல. அவங்களா எப்ப எனக்கு எப்ப தனிப் பொறுப்பு கொடுக்கறாங்களோ அப்ப கொடுக்கட்டும்!"என்றான் கதிரேசன். 

று மாதங்கள் கழித்து கதிரேசனுக்கு தனிப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆயினும் இருவருக்கும் பொதுவாக இருந்த சில விஷயங்களில் சுகவனம் அவன் மீது குற்றம் கண்டு பிடிப்பதும், கிளை மேலாளரிடம் அவனைப் பற்றிப் புகார் செய்வதுமாக இருந்தார். 

ஓரிரு முறை கிளை மேலாளர் கதிரேசனைத் தனியாகக் கூப்பிட்டு விசாரித்து அவன் மீது தவறு இல்லை என்று புரிந்து கொண்டார். ஆயிலும் சுகவனம் ஒரு மூத்த அதிகாரி என்பதால் கிளை மேலாளர் அவரைக் கண்டிக்கவில்லை.

திரேசன் வேலையில் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுடைய கிளை மேலாளர் பதவி உயர்வு பெற்றுத் தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். 

மற்ற அதிகாரிகளுள் ஒருவர் கிளை மேலாளராக நியமிக்கப் படுவார் என்று அறிவிக்கப்பட்டது. மூத்த அதிகாரி என்ற முறையில் கிளை மேலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று சுகவனம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர் பாராமல் கதிரேசன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டான். 

முந்தைய கிளை மேலாளரின் பரிந்துரைதான்  இதற்குக்  காரணம் என்று அலுவலகத்தில் பரவலாக ஒரு கருத்து நிலவியது.

திரேசன் கிளை மேலாளராகப் பதவி ஏற்றுக் கொண்டதும் எல்லா ஊழியர்களும் அவன் அறைக்கு வந்து அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

இறுதியாக சுகவனம் அவன் அறைக்கு வந்தார்.

அவர் உள்ளே நுழைந்ததும் கதிரேசன் தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று, "வாங்க சார்! உக்காருங்க" என்றான். 

சுகவனம் தயக்கத்துடன் அவன் எதிரே அமர்ந்தார்.

"சார்  எதனாலோ உங்களுக்கு என்னைப் பிடிக்கல. எனக்கு நிறைய தொந்தரவு  கொடுத்தீங்க. இப்ப நான் உங்களுக்கு மேலதிகாரியா வந்துட்டதால உங்களைப் பழி வாங்குவேன்னோ, பதிலுக்கு பதில் உங்களுக்குக் கஷ்டம் கொடுப்பேன்னோ நினைக்காதீங்க. பழைய மானேஜர் உங்களை எப்படி மரியாதையா நடத்தினாரோ, அதே மாதிரிதான் நானும் நடத்துவேன். நீங்க எப்பவும் போல உங்க வேலையைச் செய்யுங்க" என்றான் கதிரேசன்.

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 312
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

பொருள்:
ஆத்திரத்துடன் ஒருவர் நமக்குத் துன்பம் செய்தால் கூட, பதிலுக்கு அவருக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாக இருக்கும் .
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்














Saturday, February 1, 2020

311. வேண்டாம் விளம்பரம்!

நிர்வாக இயக்குனர் ரமணனின் அறைக்குள் வந்த பொது மேலாளர் சண்முகம் சற்று நேரம் பொதுவாகப் பேசிய பின், தான் சொல்ல வந்த விஷயத்துக்குத் தயக்கத்துடன் வந்தார். 

"சார்! டிசம்பர் குவார்ட்டர் அக்கவுண்ட்ஸ் முடிஞ்சுடுச்சு. இப்பதான் அக்கவுண்ட்ஸ் மானேஜர் எங்கிட்ட விவரங்களைக் கொடுத்துட்டுப் போனார்."

"சொல்லுங்க!" என்றார் ரமணன், சண்முகம் என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்தவர் போல். 

"இந்த குவார்ட்டர்லயும் நமக்கு நஷ்டம்தான் ஏற்பட்டிருக்கு. போன குவார்ட்டரை விடக் கொஞ்சம் அதிகமாவே நஷ்டம்!"

"ம்..."

"நம்ம பத்திரிகைக்கு நல்ல பேர் இருந்தும், ஓரளவுக்கு நல்ல சர்க்குலேஷன் இருந்தும், நாம இப்படி நஷ்டத்தில் இயங்கறது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு."

"என்ன செய்ய முடியும்? வாசகர்கள் கிட்ட நம்ம நிலைமையை விளக்கிச் சொல்லி, பத்திரிகையோட விலையைக் கொஞ்சம் உயர்த்த வேண்டியதுதான்! அதைத் தவிர விளம்பர வருமானத்தை அதிகரிக்கவும் நாம முயற்சி பண்ணிக்கிட்டுத்தானே இருக்கோம்?" என்றார் ரமணன்.  

"சார்! போன வருஷம்தான் விலையை உயர்த்தினோம். மறுபடி ஏத்தினா அது சர்க்குலேஷனை பாதிக்கலாம். நீங்க சொன்னபடி விளம்பர வருமானத்தை அதிகரிக்கறதிலதான் நாம கவனம் செலுத்தணும்" என்று சொல்லி விட்டுச் சற்றுத் தயக்கத்துடன் நிறுத்தினார் சண்முகம். 

ரமணன் மௌனமாக இருந்தார். 

"சார்! நான் கணக்குப் போட்டுப் பாத்தேன். நம்ப விளம்பரக் கொள்கையில் நாம கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டா பத்திரிகை விலையை உயர்த்தாமலேயே வருமானத்தைக் கூட்டி லாபம் வர அளவுக்குப் பத்திரிகையை நடத்தலாம்" என்ற சண்முகம் தான் தான் தயாரித்திருந்த கணக்குகள் அடங்கிய தாளை ரமணன் முன்பு நீட்டினார்.

"மிஸ்டர் சண்முகம். இதுக்கு கணக்கெல்லாம் தேவையில்லை. அதிக விளம்பரங்கள் வந்தா வருமானம் அதிகரிச்சு லாபம் வரும்கறது எனக்குத் தெரியும். அதனால நாம பத்திரிகையை இன்னும் நல்லா நடத்தி இன்னும் சர்க்குலேஷனை அதிகரிச்சு நல்ல லாபத்தோடயும், மார்க்கெட்ல நல்ல பேரோடயும் இயங்கலாம்கறதும் எனக்குப் புரியுது. ஆனா இந்த காம்ப்ரமைஸை என்னால பண்ண முடியாது. வேற வழியில முயற்சி செஞ்சுதான் நஷ்டத்தைத் தவிர்த்து லாபமா இயங்கற வழியைப் பாக்கணும்!" என்றார் ரமணன்.

"சார்! மது, சிகரெட் விளம்பரங்களை வெளியிடறதில்லைங்கற உங்க கொள்கை உயர்ந்ததுதான். ஆனா இப்படி நினைச்சுப் பாருங்க. நாம இந்த விளம்பரங்களைப் போடாததால யாரும் சிகரெட், மது அருந்தறதை  நிறுத்திடப் போறதில்ல. நமக்கு ஒரு நன்மை கிடைக்கறப்ப அதை ஏன் நாம பயன்படுத்திக்கக் கூடாது? இதில சட்டத்துக்கோ, தர்மத்துக்கோ விரோதமா எதுவும் இல்லையே?" என்றார் சண்முகம்.

"மிஸ்டர் சண்முகம்! பத்திரிகையில் சிகரெட் மது விளம்பரங்களைக் கொடுக்கறவங்க எதுக்காகக் கொடுக்கறாங்க? பத்திரிகைக்கு வருமானம் கிடைக்கணும்கறதுக்காகவா? பத்திரிகையில் வர விளம்பரத்தைப் பாத்துட்டு, வாசகர்கள் அவங்களோட பொருட்களையெல்லாம் வாங்கிப் பயன்படுத்துவங்க, அதனால அவங்களோட விற்பனை அதிகமாகுங்கறதுக்காகத்தானே? நம்ம பத்திரிகையில் வர விளம்பரத்தைப் பார்த்து ஒண்ணு  ரெண்டு பேர் இந்தப் பழக்கங்களுக்கு ஆளாகி,  அதனால அவங்க பாதிக்கப்பட்டாலும் அதில நமக்குத் பொறுப்பு இருக்கு இல்ல? வேண்டாம், மிஸ்டர் சண்முகம்! சிகரெட், மது விளம்பரங்களால் வரக்கூடிய வருமானம், வளர்ச்சி இதெல்லாம் நமக்கு வேண்டாம். நாம கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை!" என்றார் ரமணன் உறுதியாக.

இன்றைய வியாபார உலகில் இப்படி ஒரு மனிதரா என்று தன் நிர்வாக இயக்குனரை வியப்புடனும், பிரமிப்புடனும் பார்த்தார் சண்முகம். 

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 311
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

பொருள்:
மிகுந்த சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும் பிறருக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாக இருக்கும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்