About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, February 28, 2020

315. புதிய பாதை

"ஏங்க, நம்ம பையனும் பெண்ணும் பம்பாய், டில்லின்னு செட்டில் ஆயிட்டாங்க. அவங்க யாரும் இந்த கிராமத்துக்கு  வரப்போறதுல்ல. நமக்கும் வயசாயிக்கிட்டே வருது. இப்ப எதுக்கு இந்தத் தோட்டத்தை வாங்கறீங்க? நமக்கு அப்புறம் யார் இந்த ஊருக்கு வந்து இந்தத் தோட்டத்தைப் பராமரிக்கப் போறாங்க?" என்றாள் அகிலா.

"ஆத்தங்கரைப் பக்கத்தில அமைஞ்சிருக்கிற அருமையான இடம் அது. பெரிய தோட்டம். வாழை மரம், தென்னை மரம், மாமரம், கொய்யா மரம்னு நிறைய மரங்கள் இருக்கு. பொன்னுசாமி உயிரோட இருக்கறப்பவே கேட்டேன். அவர் கொடுக்க மாட்டேன்னுட்டாரு. இப்ப அவர் போனதும், வெளியூர்ல இருக்கற அவர் பையங்க எல்லா சொத்தையும் விக்கப் போறதாகச் சொன்னதால அந்தத் தோட்டத்தை நாம வாங்கலாம்னு நினைச்சேன்" என்றார் கணபதி .

"அதான் எதுக்குன்னு கேக்கறேன். நமக்கு இருக்கிற நிலபுலன்களை நாம பாத்துக்கிட்டா போதாதா/"

"ஒரு நல்ல முதலீடா இருக்கட்டுமேன்னுதான்!" என்றார் கணபதி.

"நீங்க இப்படியெல்லாம் முதலீடு, லாபம்னு அலையற ஆள் இல்லையே?" என்றாள் அகிலா கொஞ்சம் வியப்புடன். 

கணபதி பதில் சொல்லவில்லை.

சில நாட்களில் கணபதி அந்தத் தோட்டத்தை வாங்கி விட்டார்.  

பத்திரப் பதிவு முடிந்த சில நாட்களில், கணபதி தோட்டத்தின் மத்தியில் ஒரு பாதையை அமைத்து இரண்டு புறமும் வேலி கட்டினார். அதற்குப் பிறகு, தோட்டம் மூன்று பகுதிகளாகக் காட்சி அளித்தது - இரண்டு புறமும் வேலிக்குள் தோட்டங்கள், நடுவில் ஒரு பாதை என்று.

"எதுக்கு இப்படிப் பண்றீங்க?" என்றாள் அகிலா.

"தோட்டத்துக்கு நடுவில, ரெண்டு மூணு பேர் நடந்து போற அகலத்துக்கு ஒரு பாதை அமைச்சிருக்கேன்" என்றார் கணபதி.

"அதான் எதுக்குன்னு கேக்கறேன்?"

"அகிலா! தோட்டத்துக்கு ஒரு பக்கம் ரோடு இருக்கு. இன்னொரு பக்கம் ஆத்தங்கரை. நம் ஊர்ப்பெண்கள் ஆத்துக்குத் தண்ணி எடுக்கப் போகறப்ப கிட்டத்தட்ட ஒரு மைல் சுத்திப் போக வேண்டி இருக்கு. இப்ப நம் தோட்டத்துக்கு நடுவில இருக்கற பாதை வழியா அவங்க ஆத்துக்குப் போகலாம். ஒரு மைல் சுத்திப் போக  வேண்டி இருக்காது."

"அது எப்படி? அது நம் நிலமாச்சே! அது வழியா ஊர்க்காரங்கல்லாம் எப்படிப் போக முடியும்?"

"அதுக்குத்தான் தோட்டத்தை மூணாப் பிரிச்சு, ரெண்டு பக்கம் தோட்டம், நடுவில பாதைன்னு உண்டாக்கி இருக்கேன். அந்தப் பாதையை இந்த ஊர்ப் பஞ்சாயத்து பேர்ல பதிவு பண்ணிடப் போறேன். அப்புறம் அது ஊருக்குப் பொது இடமா ஆயிடும். அதில யார் வேணா நடந்து போகலாம்!"

"ஏங்க, நம்ப நிலத்தில, இருநூறு முன்னூறு சதுர அடி பொதுவுக்குப் போயிடுமே! காசு கொடுத்து நிலத்தை வாங்கிட்டு எதுக்கு இப்படி தானம் பண்றீங்க?" என்றாள் அகிலா, சற்று வருத்தத்துடனும், கோபத்துடனும்.

"நம் ஊர் ஜனங்க, குறிப்பா பெண்கள், குளிக்கவும், தண்ணி எடுக்கவும் ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவை ஆத்துக்குப் போறாங்க. ஒவ்வொரு தடவையும் ஒரு மைல் தூரம் சுத்திப் போக வேண்டி இருக்கு. வெயில், மழைன்னு பாக்காம தண்ணிக்  குடத்தைத்  தூக்கிக்கிட்டு சின்னவங்க, பெரியவங்க, வயசானவங்க, உடம்பு சரியில்லாதவங்கன்னு எல்லாரும் கஷ்டப்படறதைப் பாக்க எனக்கு எப்பவுமே மனசுக்குக் கஷ்டமா இருக்கும்.

" பொன்னுசாமி கிட்ட இந்தத் தோட்டம் இருந்தப்ப, தோட்டத்துக்கு நடுவில ஜனங்க ஆத்துக்குப் போக ஒரு பாதை போட்டுக் கொடுக்கச் சொல்லி அவர்கிட்ட கேட்டேன். அவரு ஒத்துக்கல. சரி, நாம தோட்டத்தை விலைக்கு வாங்கி, பாதை அமைச்சுக் கொடுக்கலாம்னு நினைச்சு அவர்கிட்ட தோட்டத்தை விலைக்குக் கேட்டேன். அவரு கொடுக்க மாட்டேன்னுட்டாரு. இப்ப அவர் இறந்ததும், அவர் பசங்க அதை விக்கறாங்கன்னதும், அதை வாங்கி நான் நினைச்ச மாதிரி ஊர் ஜனங்களுக்குப் பாதை போட்டுக் கொடுத்திருக்கேன்!" என்றார் கணபதி.

"நாம நம்ம வீட்டுக் கிணத்துத் தண்ணியைத்தான் பயன்படுத்தறோம். நீங்களோ நானோ தண்ணி எடுக்கவோ, குளிக்கவோ ஆத்துக்குப் போறதில்ல. யாரோ கஷ்டப்படறாங்கங்கறதுக்காகவா இப்படி ஒரு காரியத்தைப் பண்ணி இருக்கீங்க?" என்றாள் அகிலா வியப்புடனும், பிரமிப்புடனும்.

"கஷ்டப்படறது மத்தவங்களா இருந்தா என்ன? அவங்களோட கஷ்டத்தை நம்மால உணர முடியாதா? அதுக்கு நாம எதுவும் செய்யக் கூடாதா?" என்றார் கணபதி.   

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 315
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

பொருள்:
பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல் ஒருவன் உணர்ந்து நடந்து கொள்ளாவிட்டால், அவனுடைய அறிவினால் அவனுக்கு என்ன பயன்?
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்
















No comments:

Post a Comment