About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, March 5, 2020

316. அன்று நடந்தது, ஆவி துடித்தது!


"போன மாசம் எப்படியோ சமாளிச்சுட்டோம். இந்த மாசம் ரொம்ப கஷ்டம்!" என்றார் மணி.

தன் பார்ட்னரைக் கவலையுடன் பார்த்த சாரதி, "இந்த மாசம் புதுசா ஆர்டர் வரும்னு எதிர்பாக்கறோமே!" என்றார்.

"இல்ல சாரதி. நடக்கற மாதிரி தெரியல. மார்க்கெட்ல யாரைப் பாத்தாலும் புலம்பறாங்க. இப்படி ஒரு ரிஸஷன் இதுக்கு முன்னால வந்ததே இல்லைங்கறாங்க. நிறைய பேரு தொழிலையே நிறுத்திட்டாங்க. மீதி இருக்கறவங்களும் தொழிலாளர்கள்ள நிறையப் பேரை வீட்டுக்கு அனுப்பிட்டு ஒரு சில பேரை மட்டும் வச்சிக்கிட்டு சமாளிச்சுக்கிட்டிருக்காங்க. பெரிய நிறுவனங்கள் கூட ஆட்குறைப்பு செஞ்சிருக்காங்க. நீதான் ஒரு தொழிலாளரைக் கூட வீட்டுக்கு அனுப்பக் கூடாதுன்னு உறுதியா இருக்க!" என்றார் மணி.

சாரதி பதில் சொல்லவில்லை. மணியின் பேச்சு அவர் காதில் விழுந்ததா என்று கூடத் தெரியவில்லை. அவர் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சாரதி ஒரு நிறுவனத்தில் உதவியாளராகப் பணி செய்து கொண்டிருந்த நேரம் அது.

நன்றாக நடந்து கொண்டிருந்த அந்த நிறுவனம் சிறிது சிறிதாகத் தொய்வடைந்து ஒரு கட்டத்தில் ஒரேயடியாக இழுத்து மூடப்படும் நிலை வந்தது. 

சாரதி உட்படப் பல ஊழியர்கள் வேலை இழந்தனர். 

அதற்குப் பிறகு வேறொரு நிலையான வேலை கிடைக்கும் வரை சாரதி பட்ட துன்பங்கள்! 

குடும்பத்துக்கு அடுத்த வேளை உணவுக்கு வழி செய்ய முடியுமா என்று தவித்த நாட்கள் எத்தனை!

எத்தனையோ முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்து, அப்படிச் செய்து கொண்டால் தன் குடும்பம் இன்னும் அதிகத் துன்பத்துக்கு ஆளாகும் என்று உணர்ந்து ஒவ்வொரு முறையும் அந்த எண்ணத்தைக் கை விட்டிருக்கிறார்.

மூன்று வருடங்கள் கழித்து ஒரு நிலையான வேலை கிடைத்து, அவர் வாழ்க்கை மீண்டும் துளிர்த்ததும், சில ஆண்டுகள் கழித்துத் தன் நண்பன் மணியுடன் சேர்ந்து சிறிய அளவில் ஒரு தொழில் தொடங்கி அது ஒரு சில ஆண்டுகளில் நன்கு வளர்ச்சி பெற்றதும் வேறு கதை.

ஆயினும், வேலை இழந்த பின் தான் அனுபவித்த வேதனைகளை அவரால் எப்படி மறக்க முடியும்?.

"இல்லை! எனக்கு வந்த மாதிரி கஷ்டம் வேற யாருக்கும் வரக்கூடாது!" என்று கூவினார் சாரதி.

"சாரதி, என்ன ஆச்சு உனக்கு?" என்றார் மணி.

"இல்லை மணி! தொழிலாளர்கள் கிட்ட சீக்கிரம் வேற வேலை தேடிக்கச் சொல்லி சொல்லுவோம். அவங்களா வேற வேலை கிடைச்சுப் போற வரையிலே நாமா யாரையும் வேலையை விட்டு அனுப்ப வேண்டாம். நாம எப்படியாவது சமாளிப்போம்!" என்றார் சாரதி.

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 316
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.

பொருள்:
துன்பமானவை என்று தான் கண்டு உணர்ந்தவற்றை ஒருவன் மற்றவர்களுக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்













No comments:

Post a Comment