About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, August 26, 2020

358. ஏன் இப்படி?

"ஏண்டா பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு இவ்வளவு வருஷம் வேல செஞ்சு உயர்ந்த பதவிக்கு வந்துட்டு ரிடயர் ஆகி இருக்க. ஹாய்யா வீட்டில உக்கந்துக்கிட்டு, உல்லாசப் பயணம் போய்க்கிட்டு வாழ்க்கையை சுகமா அனுபவிக்காம, எதுக்கு இந்த சமூக சேவை சமாசாரம் எல்லாம்?" என்றார் முருகப்பன்.

"இத்தனை வருஷமா எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் வாழ்ந்தாச்சு. மீதி இருக்கிற நாட்கள்ள என்னால முடிஞ்ச உதவியை மத்தவங்களுக்கு செய்யலாமேன்னுதான்" என்றார் தங்கராஜ்.

"மத்தவங்களுக்கு உதவணும்னா நல்ல தொண்டு நிறுவனமாப் பாத்து நன்கொடை கொடு. உன் குடும்ப உறுப்பினர்கள் பிறந்த நாள் அன்னைக்கு ஏதாவது அநாதை இல்லக் குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டுட்டு அவங்களோட ஒரு நாள் இருந்துட்டு வா! நீ எதுக்குப் போய் ஒரு தொழிலாளி மாதிரி களத்தில இறங்கி வேலை செய்யணும்.?

"நமக்கு வசதி இருக்கறப்ப மத்தவங்களுக்குப் பணம் கொடுத்து உதவறது ஒரு விஷயமே இல்ல. நம் உடம்பைக் கொஞ்சமாவது வருத்தி மத்தவங்களுக்கு உதவி செய்யறப்ப கிடைக்கிற மனநிறைவு எவ்வளவு அற்புதமானதுன்னு உணர்ந்து பாத்தாத்தான் தெரியும்."

"என்னவோ எனக்கு உன் மனப்போக்கே புரியல!"

"ஒரு விஷயம் புரியாம இருக்கறது நல்ல ஆரம்பம்தான். எனக்குக் கூட ரொம்ப நாளா வாழ்க்கையோட அர்த்தம் புரியல. படிக்கறது, நல்ல வேலையில இருக்கறது, பணம் சம்பாதிக்கிறது, நம்ம குடும்பத்தை சந்தோஷமா வச்சுக்கறது இதுதான் வாழ்க்கையா, இல்லை இதுக்கு மேல வாழ்க்கையோட உண்மையான அர்த்தம்னு வேற ஏதாவது இருக்கான்னு எனக்கு அடிக்கடி தோணும். 

"இப்ப நான் ரிடயர் ஆனப்பறம் ஒரு தொண்டு நிறுவனத்தில சேர்ந்து அவங்க செய்யற உதவிகள்ள  நானும் பங்கேற்க ஆரம்பிச்சப்பறம் வாழ்க்கையோட அர்த்தம்னு வேற ஏதோ இருக்கும்னு தோண ஆரம்பிச்சிருக்கு. அது எனக்கு முழுமையாப் புரியுமான்னு தெரியல. ஒருவேளை நாளடைவில எனக்கு வாழ்க்கையோட அரத்தம் பரியறதுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமா இருக்கலாம்!" என்று சொல்லிச் சிரித்தார் தங்கராஜ்.

"சரி, வாழ்க்கையோட உண்மையான அர்த்ததைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யப் போற?"

"தெரியல. இந்தப் பிறவியோட அர்த்தம் தெரிஞ்சா இனிமே பிறவி இருக்காதுன்னு சில பெரியவங்க சொல்லி இருக்காங்க. அது மாதிரி கூட நடக்கலாம்!"

முருகப்பன் என்ன சொல்வதென்று  தெரியாமல் மௌனமாகத் தன் நண்பரைப் பார்த்தார். 

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   
குறள் 358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

பொருள்:
பிறவித் துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்கும் வகையில் முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Monday, August 24, 2020

357. குருவின் முடிவு

"ஊருக்குப் போய் உன் பெற்றோரைப் பார்த்து விட்டு ஒரு மாதத்தில் திரும்பி வருவதாகச் சொல்லி விட்டுப் போனாய். ஆனால் ஆறு மாதங்கள் கழித்து வந்திருக்கிறாயே!" என்றார் ரிஷபமுனி கோபத்துடன். 

"மன்னிக்க வேண்டும் ஆசானே! சொன்னபடி வர முடியவில்லை" என்றான் ராமதாசன்.

"உன் பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லையா?"

"இறைவன் அருளால் என் பெற்றோர்கள் நலமாகத்தான் இருக்கிறார்கள்."

"அப்படியானால் நீ வேறு எந்தக் காரணம் கூறினாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. உனக்கு இந்த குருகுலத்தில் இடமில்லை. நீ போகலாம்!" என்றார் குரு.

"ஐயா! நான் கூறுவதைத் தாங்கள் தயவு செய்து கேட்க வேண்டும்."

"இது ஆன்மீகச் சாதனைக்கான குருகுலம். பொதுவான கல்வி அளிக்கும் குருகுலம் என்றால் உன்னை அனுமதித்திருப்பேன். ஆன்மீகச் சாதனையை, விட்டு விட்டுப் பயில முடியாது. 

"உன் வயதான பெற்றோர்கள் தனிமையில் இருப்பது பற்றி நீ கவலை கொண்டிருந்ததால் அவர்களைச் சென்று பார்த்து விட்டு அவர்களை கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்து விட்டு வரச் சொல்லி நானேதான் உன்னை அனுப்பி வைத்தேன். ஒரு மாதத்துக்குள் உன்னால் திரும்பி வர முடியாவிட்டால் நீ மீண்டும் வர வேண்டாம் என்றும் உன்னிடம் கூறி இருந்தேன். 

"ஆன்மீகச் சாதனைகளைப் பயிலுவதற்கான மனப்பக்குவம் இன்னும் உனக்கு வரவில்லை என்று தோன்றுகிறது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து என்னை வந்து பார். உன்னைப் பயிற்சியில் சேர்த்துக் கொள்வது பற்றி அப்போது முடிவு செய்கிறேன்."

ராமதாசனின் பதிலை எதிர்பார்க்காமல் ரிஷபமுனி உள்ளே போய் விட்டார்.

மாலை தன் ஆசிரமத்திலிருந்து ரிஷபமுனி வெளியே வந்தபோது ராமதாசன் அதே இடத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.

"நீ இன்னும் போகவில்லையா? காலையிலிருந்து இங்கேயேவா நின்று கொண்டிருக்கிறாய்?" என்றார் ரிஷபமுனி வியப்புடன்.

ராமதாசன் மௌனமாகத் தலையாட்டினான். 

"என்ன சொல்ல விரும்புகிறாயோ அதைச் சொல்லி விட்டுக் கிளம்பு!" என்றார் ரிஷபமுனி, கடுமை தணியாத குரலில்.

"ஐயா! என் பெற்றோரைப் பார்க்கச் சென்றபோது எங்கள் ஊரில் ஒரு தொற்றுநோய் பரவி இருந்தது. என்னால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன். 

"மருத்துவரை அழைத்து வந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வைப்பது, அவர்களுக்கு உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்வது, வசதி படைத்தவர்களிடம் நிதி பெற்று வறுமையான நோயாளிகளுக்கு உதவுவது போன்று சிறிய அளவில் உதவி செய்து வந்தேன். 

"பிறகு நான் உதவி செய்வது தெரிந்து வேறு பலரும் என் உதவியை நாடினார்கள். பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் கூட எனக்கு அழைப்பு வர ஆரம்பித்தது. அப்புறம் பலரை ஒருங்கிணைத்து இன்னும் அதிகமான நபர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன். 

"தொற்றுநோயின் தீவிரம் குறைந்து இயல்பான நிலைக்கு வர இத்தனை காலம் ஆகி விட்டது. அதனால்தான் நான் திரும்பி வர இத்தனை காலம் ஆகி விட்டது. தாங்கள் என்னைத் தவறாக நினைக்கக் கூடாது, தங்களிடம் நடந்ததைத் தெரிவிக்க வேண்டும் என்றுதான் தங்களைக் காண்பதற்காகக் காத்திருக்கிறேன். 

"தங்களிடம் என் பிரச்னையை இப்போது தெளிவு படுத்தி விட்டேன். தாங்கள் கூறியபடியே ஓரிரு ஆண்டுகள் கழித்துத் தங்களை வந்து சந்திக்கிறேன்."

குருவுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு ராமதாசன் கிளம்ப யத்தனித்தபோது, "நில், ராமதாசா!" என்றார் ரிஷபமுனி.

"உள்ளே வா!" என்று சொல்லி விட்டு ரிஷபமுனி தன் ஆசிரமத்துக்குள் செல்ல, ராமதாசன் அவர் பின்னால் சென்றான். 

ஆசிரமத்துக்குள் நுழைந்து தன் ஆனத்தில் அமர்ந்தார் ரிஷபமுனி. ராமதாசனைப் பார்த்து "உட்கார்!" என்றார்.

ராமதாசன் குருவின் எதிரே தரையில் அமர்ந்தான்.

"நான் இங்கே எல்லோருக்கும் ஆன்மீகப் பயிற்சி அளிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உண்மையான ஆன்மீகச் செயலை நீ ஆர்ப்பாட்டமில்லாமல் செய்து விட்டு வந்திருக்கிறாய். உன்னிடம் விவரம் கேட்காமல் உன்னைத் திருப்பி அனுப்பியது தவறுதான். ஆயினும் உனக்கு ஆன்மீகப் பயிற்சி உகந்ததில்லை என்று நான் கூறியது சரிதான்!" என்றார் ரிஷபமுனி.

"குருவே!"

"மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனைதான் மெய்ப்பொருள் ஞானம். மீண்டும் பிறக்காத நிலையை அடைவதுதான் ஆன்மீகம். மெய்ப்பொருளை உணர்ந்து செயல்பட்ட உனக்கு இனி மறுபிறவி இல்லை. எனவே உனக்கு எந்த ஆன்மீகப் பயிற்சியும் தேவையில்லை!"

ரிஷபமுனி ராமதாசனைப் பார்த்தார்.

ராமதாசன் மௌனமாக இருந்தான்.

"ஆயினும் உன்னைப் போல் மெய்ப்பொருளை உணர்ந்த ஒருவன் உடன் இருந்தால், அதனால் ஆன்மீகப் பயிற்சி பெறும் மற்ற மாணவர்கள் பயன் அடைவார்கள். அதனால் நீ பயிற்சியில் தொடரலாம் - மற்றவர்களின் நலனுக்காக!" என்றார் ரிஷபமுனி சிரித்தபடி.

 அறத்துப்பால் 
துறவறவியல்
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   
குறள் 357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

பொருள்:
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறவி உண்டு என எண்ண வேண்டாம்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Wednesday, August 12, 2020

356. பிறவா வரம் வேண்டும்!

காட்டில் அமர்ந்திருந்த அந்த முனிவரின் முன்பு சிலர் அமர்ந்திருந்தனர். முனிவர் கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

அன்று காலை முனிவர் கண்களை மூடி அமர்ந்திருப்பதைப் பார்த்த ஒருவன், முனிவர் கண் திறந்ததும் அவர் கூறுவதைக் கேட்டு அறிவு பெறலாம் என்று எண்ணி அவர் முன் அமர்ந்தான். அதற்குப் பிறகு அங்கே வந்த மேலும் சிலரும் அங்கே அமர்ந்து கொண்டனர்.

ஆயினும் பல மணி நேரங்கள் ஆகியும் முனிவர் தன் கண்களைத் திறக்கவில்லை. 

மேலும் காத்திருக்க விரும்பாமல் ஒவ்வொருவராக எழுந்து செல்ல ஆரம்பித்தனர்.

மாலையில் முனிவர் தன் கண்களைத் திறந்தபோது அங்கே நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். 

அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்த முனிவர் "காலையிலிருந்து காத்திருக்கிறீர்கள். உங்கள் பொறுமையைப் பாராட்டுகிறேன். என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" என்றார்.

"முனிவரே! நான் தவம் செய்யவேண்டும் என்று இந்தக் காட்டுக்கு வந்தேன். தாங்கள்தான் எனக்கு வழி காட்ட வேண்டும்" என்றான் ஒருவன்.

முனிவர் மற்ற மூவரையும் பார்க்க, அவர்கள் தாங்களும் அதே நோக்கத்துடன்தான் இருப்பதாகச் சொல்வது போல் தலையாட்டினர்.

"எதற்காகத் தவம் செய்யப் போகிறீர்கள்?" என்றார் முனிவர். 

"மீண்டும் பிறவி ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான்" என்றான் இன்னொருவன்.

"மீண்டும் பிறவி வேண்டாம் என்றால், அதற்கு நீங்கள் மெய்ப்பொருளை உணர வேண்டும். கற்க வேண்டியவற்றைக் கற்றால்தான் மெய்ப்பொருளை உணர முடியும்" என்றார் முனிவர்.

"அப்படியானால் நான் உடனேபோய் கற்க வேண்டியவற்றைக் கற்கிறேன். தங்கள் அறிவுரைக்கு நன்றி முனிவரே!" என்று சொல்லி விட்டு ஒருவன் எழுந்து முனிவரின் கால்களில் விழுந்து வணங்கி விட்டு அவரிடம் விடை பெற்றுச் சென்றான்.

அவனைத் தொடர்ந்து இன்னும் இருவரும் அவ்வாறே அவரை வணங்கி விட்டுக் கோளம்பினர்.

ஒருவன் மட்டும் அமர்ந்திருந்தான்.

"ஏனப்பா? நீ கிளம்பவில்லையா?" என்றார் முனிவர்.

அவன் எழுந்து நின்று, "முனிவரே! கற்க வேண்டியவற்றைக் கற்று மெய்ப்பொருளை உணர்ந்தால்தான் பிறவியிலிருந்து விடுதலை பெற முடியும் என்று கூறினீர்கள். கற்க வேண்டியவற்றைக் கற்பிக்க முற்றும் உணர்ந்து முனிவராக வாழும் தங்களை விடப்  பொருத்தமானவர்கள் வேறு யார் இருக்க முடியும்? தங்களுக்குப் பணி விடை செய்து தங்களிடமே கல்வி பெற்று மெய்ப்பொருளை உணரும் நிலையை அடைய விரும்புகிறேன். தாங்கள் என்னைச் சீடனாக ஏற்று எனக்கு அருள் புரிய வேண்டும்!' என்று கூறி முனிவரின் கால்களில் விழுந்து வணங்கினான் அவன். 

அவனை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக முனிவர் அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   
குறள் 356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

பொருள்:
கற்க வேண்டியவற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Thursday, August 6, 2020

355. அனுபவம் தந்த பாடம்

"ஏம்ப்பா ரெண்டு நாளா என் பின்னாலேயே வந்துக்கிட்டிருக்க?" என்றார் கசங்கிய ஆடையும், பரட்டைத் தலையும், புதர் போல் தாடி மீசை படர்ந்திருந்த முகமும் கொண்ட அந்த மனிதர்.

"சாமி! உங்களைப் பாத்தா ஒரு யோகி மாதிரி தெரியுது" என்றான் பரமு.

"நீ புத்திசாலிதான்! என்றார் அவர்.

"அப்படின்னா நான் நினைச்ச மாதிரி நீங்க ஒரு யோகிதானா?"

"யோகின்னு சொல்லாம யோகி மாதிரி தெரியுதுன்னு சொன்னியே அதுக்குத்தான் உன்னை புத்திசாலின்னு சொன்னேன்!" என்றார் அவர் சிரித்தபடி.

"மன்னிச்சுக்கங்க சாமி, உங்க மேல நம்பிக்கை இல்லாம நான் அப்படிச் சொல்லல."

"நீ சொன்னதுதாம்ப்பா சரி. வெளித் தோற்றத்தை வச்சு எதையும், யாரையும் எடை போடக் கூடாது."

"நீங்க சொல்றது சரிதான் சாமி! எனக்கு ஆன்மீக விஷயங்கள்ள ஈடுபாடு உண்டு  ஒரு சாமியாரோட பேச்சால கவரப்பட்டு அவர் மடத்தில சேர்ந்து சேவை செய்யலாம்னு போனேன். ஆனா அங்க சேந்தப்பறம்தான் அவரைப் பத்திப் புரிஞ்சுது. வெளியில புலன்களை அடக்கறதைப் பத்தியும், எளிமையான வாழ்க்கை வாழறதைப் பத்தியும் அற்புதமாப் பேசற அவரு தன் ஆசிரமத்துக்குள்ள ஒரு அரசர் மாதிரி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்காரு! அறுசுவை உணவு என்ன, ஆடம்பரமான ஓய்வறைகள் என்ன! ஒரு நிமிஷம் கூட ஏசி இல்லாம இருக்கக் கூடாதுங்கறதுக்காக மின்சாரம் நின்னு போனா உடனே இயங்கற வசதியோட ஜெனரேட்டர் என்ன! மதுபானமும் அந்தப்புரப் பெண்களும்தான் இல்லேன்னு நினைக்கறேன். அதெல்லாம் கூட எனக்குத் தெரியாம இருந்திருக்கலாம்! கொஞ்ச நாளைக்கப்புறம் சொல்லாம கொள்ளாம ஓடி வந்துட்டேன். ஆன்மீகத்தின் மேலேயே வெறுப்பு வந்துடுச்சு."

"சரி. இப்ப என்ன?"

"உங்களைப் பாத்தப்ப முதல்ல ஒரு சாதாரண..." என்று தயங்கினான் பரமு
.
"பண்டாரம்னு நினைச்சிருப்ப!" என்று சொல்லிச் சிரித்தார் அவர்.

"உண்மையைச் சொல்லணும்னா அப்படித்தான் சாமி. ஆனா உங்க கிட்ட ஏதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டாதில ரெண்டு நாளா உங்களை கவனிச்சுக்கிட்டிருக்கேன்."

"இப்ப என்ன நினைக்கறே?"

"நீங்க பாக்கறதுக்கு சாதாரணமானவரா இருந்தாலும் மனசை அடக்கி வாழற துறவின்னு நினைக்கறேன். உங்க கிட்ட ஆசிரமம் இல்லை, சிஷ்யர்கள் இல்லை. ஆனா நீங்க ஒரு பெரிய யோகிதான். உங்களோட இருந்து உங்களுக்கு சேவை செஞ்சுக்கிட்டிருந்தா எனக்கும் துறவு மனப்பான்மை வரும்னு நினைக்கறேன்."

"எதையுமே வெளித்தோற்றத்தைப் பாத்து அப்படியே ஏத்துக்கக் கூடாது, அதோட உண்மைத்தன்மையை ஆராய்ஞ்சப்பறம்தான்  அதைப்பத்தி முடிவு செய்யணும்னு உன் அனுபவத்திலேந்து நீ புரிஞ்சுக்கிட்டிருக்கிறது நல்ல விஷயம்தான். அதனால என்னோட இருக்கறதைப் பத்தி நீ முடிவு பண்றதுக்கு முன்ன என்னைப் பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுக்க. நீ எதிர் பாக்கற மாதிரி நான் இல்லேன்னா எப்ப வேணும்னாலும் என்னை விட்டுட்டுப் போகலாம். எங்கிட்ட சொல்லிட்டே போகலாம். நான் உன்னைப் பத்தி தப்பா நினைச்சுக்கவும் மாட்டேன், உன்னைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்யவும் மாட்டேன்!" என்றார் அவர் சிரித்தபடி.
அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   
குறள் 355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

பொருள்:
ஒரு பொருள் வெளித் தோற்றத்துக்கு எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதன் உண்மையான தன்மையை அறிந்து கொள்வதுதான் அறிவுடைமை.
குறள் 356 
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Wednesday, August 5, 2020

354. போட்டியில் பங்கேற்காதவர்

"நம் எல்லோருக்கும் ஐந்து புலன்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை முழுமையாகப் பயன்படுத்தும் திறமை நம்மிடம் இருக்கிறதா? அதைச் சோதிக்கத்தான் இந்தப் போட்டி. இந்தப் போட்டியில் உங்கள் ஐந்து புலன்களுக்கும் சவால்கள் இருக்கும்.

"ஓரு படத்தைக் காட்டி அதில இருக்கும் பொருட்களைக் குறிப்பிடச் சொல்வோம். இது சுலபமானதாத் தோன்றலாம். ஆனால் படத்தில இருக்கும் சில நுணுக்கமான விஷயங்களைக் கூர்மையான பார்வை இருப்பவர்களால்தான் கவனிக்க முடியும்.

அது போல் ஒவ்வொரு புலனுக்கும் தனித் தனியாகப் போட்டிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு போட்டியிலும்  ஒருவர் பெற்ற மதிப்பெண்களைக் கூட்டி மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசுகள் கொடுக்கப்படும்."

நூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட போட்டிகள் நிறைவு பெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பரிசு பெற்றவர்கள் பெயர்களை அறிவித்த பின் அறிவிப்பாளர் கூறினார்

"ஒரு முக்கியமான அறிவிப்பு. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட பிறகு ஒரு முக்கியமான அறிவிப்பு இருக்கிறது. எல்லோரும் இருந்து அதைக் கேட்டு விட்டுப் போக வேண்டும்."

பரிசுகள் வழங்கப்பட்ட பிறகு அறிவிப்பாளர் கூறினார்:

"இந்தப் போட்டியில் இன்னொருவரும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் தன் பெயர் பரிசுக்காகப் பரிசீலிக்கப்பட விரும்ப வில்லை. ஆனால் ஒவ்வொரு  புலனுக்கான போட்டியிலும் எல்லோரையும் விட அதிக மதிப்பெண் வாங்கியது அவர்தான். ஒவ்வொரு போட்டியிலுமே அவர் வாங்கிய மதிப்பெண் நூற்றக்கு நூறு! மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசும்படி அவரைக் கேட்டுக் கொள்கிறேன்."

எளிமையான தோற்றம் கொண்ட ஒரு மனிதர் மேடைக்கு வந்தார்.

"பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள். பரிசுக்கு என் பெயர் பரிசீலிக்கப்பட வேண்டாம் என்று கூறி விட்டு நான் ஏன் போட்டியில் கலந்து கொண்டேன் என்ற கேள்வி உங்கள் பலர் மனதிலும் எழலாம். நான் இங்கே வந்தது நான் உணர்ந்து கொண்ட ஒரு உண்மையை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

"ஐம்புலன்களிலும் அதிகக் கூர்மை பெற்று அதை வெளிப்படுத்திய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் - பரிசு பெற்றவர்கள், பெறாதவர்கள் அனைவருக்கும். புலன்கள் எவ்வளவு கூர்மையாக இருந்தாலும் அவற்றுக்கு வரும் விஷயங்கள் இனிமையாக இருந்தால் மட்டுமே அவை நமக்கு இன்பம் அளிக்கும். தொலை தூரத்திலிருந்து ஒலிக்கும் ஒரு நாராசமான ஓசை நம் கூர்மையான செவிப்புலனுக்கு எட்டினாலோ, ஒரு மிக இலேசான துர்நாற்றத்தை துல்லியமான சக்தி கொண்ட நம் நாசி நுகர்ந்தாலோ, அது நமக்கு மகிழ்ச்சி அளிக்குமா?

"நம் ஐம்புலன்களையும் பயன்படுத்தி மெய்ப்பொருளான இறைவனை நாம் உணர்ந்தால் அதுதான் உண்மையான உணர்வாக இருக்கும். இறைவனின் திருவுருவைக் காணும்போதும், இறைவனின் பெருமைகளைக் கேட்கும்போதும், இறைவனின் புகழை நாம் பாடும்போது நம் நாவில் ஊறும் சுவையை உணரும்போதும், இறைவனுக்குச் சூடிய மலர்கள், இறைவனுக்கு அர்ப்பணித்த சந்தனம், கற்பூரம், மலர்கள் போன்றவற்றின் மணத்தை உணரும்போதும், இறைவனின் திருமேனி தொடர்பு பெற்ற மலர்கள், சந்தனம், சடாரி போன்றவை நம் உடலில் படும்போதும் நமக்கு ஏற்படும் உணர்வே உண்மையான உணர்வு என்பது நான் அனுபவித்து உணர்ந்த உண்மை. 

"இந்த உணர்வுகளை நாம் அதிகம் அனுபவிக்கும்போது நாம் யார் என்பது பற்றியும் நாம் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியுமான உணர்வு நம்மிடம் வளரும். இதுதான் மெய்யுணர்வு. இந்த உண்மையை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்காகவே இங்கு வந்தேன். நன்றி!" என்று கூறி விட்டு வணக்கம் செலுத்தி விட்டு மேடையிலிருந்து இறங்கினார் அவர்.


அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   
குறள் 354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

பொருள்:
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்று ப் பெற்ற போதிலும் பயன் இல்லை.
குறள் 355 
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Monday, August 3, 2020

353. ஆளவந்தார்

அரசர் மிகவும் கோபமாக இருக்க, சமையற்காரர் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.

"ஒரு கீரை வாங்க முடியவில்லையா உன்னால்?" என்றார் அரசர்.

"மன்னிக்க வேண்டும் அரசே! நீங்கள் விரும்பி உண்ட அந்த தூதுவளைக் கீரையை ஒருவர் தினமும் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களாக அவர் வரவில்லை. அது போன்ற கீரை வேறு எங்கும் கிடைக்கவில்லை" என்றார் சமையற்காரர்.

"சரி போ. அவரைத் தேடிப் பிடிக்க முடியுமா என்று பார்!"

அடுத்த நாள் அரசரிடம் வந்த சமையற்காரர் "அரசே கீரை கொடுத்து வந்தவர் மீண்டும் வந்திருக்கிறார். ஆனால் அவர் கீரை கொண்டு வரவில்லை. தங்களைப் பார்க்க வேண்டும் என்கிறார்!" என்றார்.

"கீரை கொடுப்பவர் என்னை ஏன் பாரக்க வேண்டும்?" என்ற அரசர், 'கீரை வேண்டுமே' என்ற எண்ணத்தில் "சரி, வரச் சொல்!" என்றார்.

சமையற்காரர் அழைத்து வந்த வைணவப் பெரியாரைப் பார்த்ததும் தன்னை அறியாமலேயே எழுந்து நின்ற அரசர், சமையற்காரனைப் பார்த்து "இவரா கீரை கொடுத்தவர்?' என்றார். 

சமையற்காரன் தலையாட்டியதும் அவனை அனுப்பி விட்டு அந்தப் பெரியவரை அமரச் செய்தார் அரசர்.

"அரசே! என்னை மன்னிக்க வேண்டும். உங்களைச் சந்தித்துப் பேச முயன்றேன். உங்கள் காவலர்கள் என்னை அனுமதிக்கவில்லை. அதனால்தான் உங்கள் சமையற்காரரிடம் கீரை கொடுத்து அந்தக் கீரையின் சுவையை நீங்கள் மிகவும் விரும்பியதை அறிந்து, அதை நிறுத்தி உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை வலிந்து பெற்றேன். என்ன செய்வது, சில சமயம் தலையைச் சுற்றித்தான் மூக்கைத் தொட வேண்டி இருக்கிறது!" என்றார் பெரியவர்.

"மன்னிக்க வேண்டும் பெரியவரே! அரசனான பிறகு எனக்கு ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு இல்லை. இது தெரிந்துதான் என் காவலர்கள் உங்களை அனுமதிக்கவில்லை. உங்களுக்கு என் பூர்வீகம் பற்றித் தெரியாது என்று நினைக்கிறேன்..." என்று ஆரம்பித்தார் அரசர்.

"நன்றாகத் தெரியும் யமுனாமுனி!" என்று இடைமறித்தார் பெரியவர். "நான் உன்னைச் சந்திக்க வந்ததே உன் பூர்வீகம் பற்றி உனக்கு நினைவூட்டத்தான்!"

அந்தப் பெரியவர் தன் பழைய பெயரைச் சொல்லி அழைத்ததுடன் திடீரென்று தன்னை ஒருமையில் அழைக்கவும் துவங்கியதைக் கேட்டு சற்றே அதிர்ச்சி அடைந்த அரசர், "சுவாமி தாங்கள் யார்?" என்றார்.

"சொல்கிறேன். அதற்கு முன் நீ யார் என்பதை உனக்கு நினைவுபடுத்தி விடுகிறேன். உன் தாத்தா நாதமுனி குடும்பத்துடன் வடநாட்டில் தீர்த்த யாத்திரை செய்து கொண்டிருந்தபோது, அங்கே அவருக்கு யமுனை நதிக் கரையில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனாகக் கண்ணனே காட்சி தந்து அவரை உடனே தன் சொந்த ஊரான காட்டுமன்னார் கோவிலுக்குத் திரும்பும்படி பணித்தார்.

"அப்படி அவர் திரும்பிய பிறகுதான் அவருடைய குமாரர் ஈஸ்வர முனிக்கு நீ பிறந்தாய். உன்  குடும்பம் யமுனை தீரத்துக்குச் சென்று திரும்பிய பின் நீ பிறந்ததால் உனக்கு யமுனாமுனி என்று பெயரிட்டனர். 

"உன் தாத்தா பூசை செய்து வந்த காட்டுமன்னார் கோவில் ஆலயத்தில் ஒரு சிறுவன் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழியின் 10 பாசுரங்களைப் பாடியதைக் கேட்ட உன் தாத்தா நாதமுனி, மற்ற பாசுரங்களையும் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு நம்மாழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர  திவ்யப் பிரபந்தங்களையும் மீட்டெடுத்து அவற்றுக்கு இசை வடிவமும் கொடுத்து இந்த உலகுக்கு வழங்கினார்.

"அவர் வழித்தோன்றலான நீ மஹாபாஷ்ய பட்டரிடம் பாடம் கற்று வந்தபோது மன்னரின் அவைப்புலவரான ஆக்கியாழ்வாரின் சவாலை ஏற்று அவரை விவாதத்தில் வென்று, அரசரால் ஆளவந்தார் என்ற பட்டமும் அவருடைய ராஜ்யத்தில் ஒரு பகுதியும் வழங்கப்பட்டு, அரசனாகி இருக்கிறாய். அரசனானதும் பழையவற்றை மறந்து விட்டு அரசப் பதவியின் சுகங்களிலேயே ஈடுபட்டு வந்திருக்கிறாய்!"

"பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்புதானே சுவாமி? அரச வாழ்க்கை என்ற பொக்கிஷம் எனக்குக் கிடைத்திருக்கும்போது அதை நான் அனுபவிப்பதில் என்ன தவறு? அது சரி தாங்கள் யார் என்று இன்னும் கூறவே இல்லையே!"

"உன் தாத்தா நாதமுனியின் சீடர் உய்யக் கொண்டார். அவருடைய சீடன் நான். என் பெயர் ராம மிஸ்ரன். என்னை மணக்கால் நம்பி என்றும் கூறுவார்கள். உன் தந்தை அவர் சீடரான உய்யக் கொண்டார் மூலம் என்னிடம் கொடுத்துச் சென்றுள்ள ஒரு பொக்கிஷத்தை உன்னிடம் ஒப்படைப்பதற்காகவே உன்னைத் தேடி வந்திருக்கிறேன்."

"இந்த அரச போகத்தை விட உயர்வான பொக்கிஷமா அது?"

"அந்தப் பொக்கிஷத்தை நான் உனக்குக் காட்டியதும் நீயே ஒப்புக் கொள்வாய்!"

"அப்படியானால் அதை எனக்குக் காட்டுங்கள்" என்றார் ஆளவந்தார்.

"என்னுடன் வா. அது இருக்கும் இடத்துக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன்" என்றார் மணக்கால் நம்பி.

உடனே மணக்கால் நம்பியுடன் கிளம்பினார் ஆளவந்தார்.

"பொக்கிஷத்தைக் காட்டுவதாகச் சொல்லி இவ்வளவு தூரம் அழைத்து வந்து விட்டீர்கள். எங்கே அந்தப் பொக்கிஷம்?" என்றார் ஆளவந்தார்.

"இதோ திரை விலகியவுடன் நீயே காண்பாய்!" என்று மணக்கால் நம்பி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அர்ச்சகர் திரையை விலக்கி கற்பூர ஆரத்தி காட்ட, கற்பூர ஒளியில் தெரிந்த அரங்கனின் திருவுருவைப் பார்த்து பிரமிப்பில் உறைந்தார் ஆளவந்தார்.

'இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே'

என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடியபோது அவருக்கு இருந்த உணர்வு ஆளவந்தாருக்கு ஏற்பட்டது.

தற்குப் பிறகு ஆளவந்தார் அரச பதவியைத் துறந்து திருவரங்கத்திலேயே இருந்து அரங்கனுக்குச் சேவை செய்தபடி, யமுனாச்சாரியர் என்ற பெயரில் ஒரு வைணவ ஆசானாகி, ராமனுஜரின் ஆசான்களான பெரிய நம்பி, திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி ஆகிய ஆசான்களை உருவாக்கியதுடன், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாறனேரி நம்பியைச் தன் சீடராக ஏற்று அருள் செய்ததும், தன் பூத உடலை நீத்த பிறகும் ராமானுஜருக்கு வழிகாட்டியாக அமைந்ததும் வரலாறு.

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   
குறள் 353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

பொருள்:
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு, அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்