About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, August 26, 2020

358. ஏன் இப்படி?

"ஏண்டா பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு இவ்வளவு வருஷம் வேல செஞ்சு உயர்ந்த பதவிக்கு வந்துட்டு ரிடயர் ஆகி இருக்க. ஹாய்யா வீட்டில உக்கந்துக்கிட்டு, உல்லாசப் பயணம் போய்க்கிட்டு வாழ்க்கையை சுகமா அனுபவிக்காம, எதுக்கு இந்த சமூக சேவை சமாசாரம் எல்லாம்?" என்றார் முருகப்பன்.

"இத்தனை வருஷமா எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் வாழ்ந்தாச்சு. மீதி இருக்கிற நாட்கள்ள என்னால முடிஞ்ச உதவியை மத்தவங்களுக்கு செய்யலாமேன்னுதான்" என்றார் தங்கராஜ்.

"மத்தவங்களுக்கு உதவணும்னா நல்ல தொண்டு நிறுவனமாப் பாத்து நன்கொடை கொடு. உன் குடும்ப உறுப்பினர்கள் பிறந்த நாள் அன்னைக்கு ஏதாவது அநாதை இல்லக் குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டுட்டு அவங்களோட ஒரு நாள் இருந்துட்டு வா! நீ எதுக்குப் போய் ஒரு தொழிலாளி மாதிரி களத்தில இறங்கி வேலை செய்யணும்.?

"நமக்கு வசதி இருக்கறப்ப மத்தவங்களுக்குப் பணம் கொடுத்து உதவறது ஒரு விஷயமே இல்ல. நம் உடம்பைக் கொஞ்சமாவது வருத்தி மத்தவங்களுக்கு உதவி செய்யறப்ப கிடைக்கிற மனநிறைவு எவ்வளவு அற்புதமானதுன்னு உணர்ந்து பாத்தாத்தான் தெரியும்."

"என்னவோ எனக்கு உன் மனப்போக்கே புரியல!"

"ஒரு விஷயம் புரியாம இருக்கறது நல்ல ஆரம்பம்தான். எனக்குக் கூட ரொம்ப நாளா வாழ்க்கையோட அர்த்தம் புரியல. படிக்கறது, நல்ல வேலையில இருக்கறது, பணம் சம்பாதிக்கிறது, நம்ம குடும்பத்தை சந்தோஷமா வச்சுக்கறது இதுதான் வாழ்க்கையா, இல்லை இதுக்கு மேல வாழ்க்கையோட உண்மையான அர்த்தம்னு வேற ஏதாவது இருக்கான்னு எனக்கு அடிக்கடி தோணும். 

"இப்ப நான் ரிடயர் ஆனப்பறம் ஒரு தொண்டு நிறுவனத்தில சேர்ந்து அவங்க செய்யற உதவிகள்ள  நானும் பங்கேற்க ஆரம்பிச்சப்பறம் வாழ்க்கையோட அர்த்தம்னு வேற ஏதோ இருக்கும்னு தோண ஆரம்பிச்சிருக்கு. அது எனக்கு முழுமையாப் புரியுமான்னு தெரியல. ஒருவேளை நாளடைவில எனக்கு வாழ்க்கையோட அரத்தம் பரியறதுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமா இருக்கலாம்!" என்று சொல்லிச் சிரித்தார் தங்கராஜ்.

"சரி, வாழ்க்கையோட உண்மையான அர்த்ததைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யப் போற?"

"தெரியல. இந்தப் பிறவியோட அர்த்தம் தெரிஞ்சா இனிமே பிறவி இருக்காதுன்னு சில பெரியவங்க சொல்லி இருக்காங்க. அது மாதிரி கூட நடக்கலாம்!"

முருகப்பன் என்ன சொல்வதென்று  தெரியாமல் மௌனமாகத் தன் நண்பரைப் பார்த்தார். 

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   
குறள் 358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

பொருள்:
பிறவித் துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்கும் வகையில் முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















No comments:

Post a Comment