About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 13 அடக்கமுடைமை

திருக்குறள் 
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 13
அடக்கமுடைமை 
121.அரசியல் வாரிசு 
முதலமைச்சர் வெற்றிவேல் தான் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்றும், தீவிர அரசியலிலிருந்து ஒய்வு பெறப் போவதாகவும் அறிவித்தது அவர் கட்சிக்குள் மட்டுமின்றி, ஊடகங்களிலும், பொதுமக்களிடையேயும் கூட ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆயினும் வெற்றிவேலின் ஓய்வுக்குப் பிறகு கட்சித் தலைவராகவும், தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகவும் அவர் தம்பி திருமூர்த்திதான் வருவார் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது.

"என்னங்க, தலைவர் அரசியலிலிருந்து ஒய்வு பெறப் போறதாக அறிவிச்சுட்டாரு. இன்னும் தேர்தலுக்கு ஒரு வருஷம்தான் இருக்கு. நாம என்ன பண்ணப் போறோம்?" என்றான் கதிர்.

"என்ன செய்யணும்?" என்றான் நீலவண்ணன்.

"நீங்கதான் அடுத்த தலைவரா வரணும்கறதுதான் தொண்டர்களோட எதிர்பார்ப்பு. உங்க தலைமையில தேர்தலைச் சந்திச்சா நமக்கு வெற்றி நிச்சயம். நீங்கதான் அடுத்த முதல்வர்."

"நீங்க சொல்லிட்டா போதுமா? தலைவர் என்ன நினைக்கிறார்னு தெரியலியே!"

"தலைவர் தன்னோட தம்பிதான் வரணும்னு நினைப்பாரு."

"அப்புறம் நான் எப்படி வர முடியும்?"

"நம்ப கட்சித் தொண்டர்கள் எல்லாம் உங்களைத்தான் விரும்பறாங்க. அவங்க திருமூர்த்தியை ஏத்துக்க மாட்டாங்க. மக்கள்கிட்டயும் உங்களுக்குத்தான் செல்வாக்கு. திருமூர்த்தி தலைமையில நாம தேர்தல்ல போட்டி போட்டா நாம படு மோசமாத் தோப்போம்."

"தலைவர் எல்லாத்தையும் யோசிச்சு முடிவு பண்ணுவாரு. அதுவரையிலும் பொறுமையா இருப்போம்."

"நீங்க இப்படி அடங்கிப் போறதனாலதான் திருமூர்த்தி ஆட்டம் போடறான். உங்களைத்தான் அடுத்த தலைவராக்கணும்னு செயற்குழுவில் நான் பேசப் போறேன். முக்காவாசிப் பேரு உங்களைத்தான் ஆதரிப்பாங்க" என்றான் கதிர்.

"அவசரப்பட்டு ஒண்ணும் செஞ்சுடாதீங்க. பொறுமையா, கட்சி வேலைகளைப் பாத்துக்கிட்டிருப்போம். எனக்குத் தலைவர் ஆகற தகுதி இருக்குன்னு நீங்க நினைக்கிற மாதிரி தலைவரும் மத்தவங்களும் நினைச்சா, அப்ப, தானே எனக்கு வாய்ப்பு வந்துட்டுப் போகுது!" என்றான் நீலவண்ணன்.

"அரசியல்ல அதிரடியாச் செயல்பட்டாத்தான் ஜெயிக்க முடியும். உங்களை மாதிரி அடங்கிப் போறவங்களை, திருமூர்த்தி மாதிரி ஆட்கள் எல்லாம் ஒரேயடியா அமுக்கிடுவாங்க" என்றான் கதிர்.

வெற்றிவேலின் அறிவிப்பைத் தொடர்ந்து, தான் அப்போதே தலைவராகி விட்டது போல் திருமூர்த்தி செயல்பட ஆரம்பித்தான். தலைவரின் தம்பி என்பதால், அவனுடைய அத்துமீறல்களை எதிர்க்க யாருக்கும் துணிவு வரவில்லை. 

ஆட்சியிலோ, கட்சியிலோ எந்தப் பொறுப்பிலும் இல்லாத நிலையிலும் ஆட்சிக்கும் கட்சிக்கும் திருமூர்த்திதான் தலைமை வகிப்பது போன்ற தோற்றம் உருவாகியது. இது கட்சித் தொண்டர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் ஏற்படுத்திய அதிருப்தியையும் கோபத்தையும் பற்றித் திருமூர்த்தி கவலைப்படவில்லை.

தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதமே இருந்த நிலையில் வெற்றிவேல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

"நான் முன்பே அறிவித்தபடி, வரும் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தீவிர அரசியலிலும் இனி ஈடுபடப் போவதில்லை. எதிர்வரும் தேர்தலை நம் கட்சி ஒரு புதிய தலைவரின் தலைமையில் சந்திக்க வேண்டும் என்பது என் விருப்பம். எனவே வரும் பதினைந்தாம் தேதி காலை நான் என் ராஜினாமாவை ஆளுநரிடம் அளிக்க இருக்கிறேன். அன்று முற்பகல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும். அதில் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அன்று மாலையே அவர் புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொள்வார்."

"வரும் தேர்தலில் எப்படியும் இவர்கள் கட்சி  தோற்று விடும். அதனால் தன் தம்பி ஆறு மாதமாகவாவது முதல்வராக இருக்கட்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு!" என்று ஊடகங்கள் விமரிசித்தன.

"கோட்டை விட்டுட்டமே! திருமூர்த்தியைக் கொண்டு வரத்துக்குத் தலைவர் ஏற்பாடு பண்ணிட்டாரே!" என்று புலம்பினான் நீலவண்ணனின் ஆதரவாளனான கதிர். நீலவண்ணன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

ட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்குச் சில மணி நேரங்கள் முன்பு சற்றும் எதிர்பாராத வகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பு வந்தது.

'இது போல் நடந்ததே இல்லையே! ஏதோ நடக்கப்போகிறது!' என்ற எதிர்பார்ப்பில் கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதுமே தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்பு அமர்ந்திருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் வெற்றிவேல் பேசத் தொடங்கினார்:

"இந்தக் கட்சியை எனக்கு முன்பிருந்தவர்களும், நானும் எங்கள் கடின உழைப்பால் வளர்த்திருக்கிறோம். எத்தனையோ சோதனைகளைக் கடந்து நம் கட்சி இன்று ஒரு அசைக்க முடியாத கோட்டையாக இருக்கிறது என்றால் அதற்கு இந்தக் கட்சியை வழி நடத்திய தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் அயராத உழைப்புதான் காரணம். எதிர்காலத்திலும் நமது கட்சியை வழி நடத்திச் செல்லும் திறமையும் தகுதியும் கட்சிக்காகக் கடுமையாக உழைத்தவர்களுக்கே உண்டு. அந்த வகையில் கடந்த பல வருடங்களாக நம் கட்சிக்காகக் கடினமாக உழைத்து உங்கள் எல்லோருடைய அன்பையும் பெற்றிருக்கும் என் அருமைத் தம்பி நீலவண்ணனையே நீங்கள் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என் விருப்பத்தை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்."

அவர் பேச்சை முடிக்கும் முன்பே கரவொலி அரங்கை அதிர வைத்தது.
  
குறள் 121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

பொருள்:  
அடக்கம் நமக்கு உயர்வைத் தரும். அடக்கம் இல்லாமல் நடந்து கொள்வது நமக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும். 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


122."திமிர் பிடித்தவன்"
"இவ்வளவு பெரிய விஞ்ஞானியா இருந்து என்ன பிரயோஜனம்? மத்தவங்களை மதிக்கத் தெரிய வேண்டாம்? திமிர் பிடிச்சவன்" என்று பொரிந்து தள்ளினான் சம்பந்தம்.

"யாரைப் பத்திடா சொல்றே?" என்றான் குணா.

"எல்லாம் நம்ப நண்பன் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் சேகர் என்கிற மாமேதையைப் பத்தித்தான்!"

"ஏன் அவனுக்கென்ன?"

"நம்ப காலேஜில அவனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தணும்னு விரும்பறாங்க. பிரின்சிபாலுக்கு என்னைத் தெரியும் இல்லியா? அவர் எனக்கு ஃபோன் பண்ணி 'சேகர் உங்க கிளாஸ்மேட்தானே? நீங்க அவர்கிட்ட பேசிப் பாராட்டு விழாவில கலந்துக்கறதுக்கு சம்மதம் வாங்குங்க'ன்னு சொன்னாரு. 

"நான் ரொம்ப உற்சாகத்தோட அவன் கிட்ட கேட்டா, அவன் பெரிசா பிகு பண்ணிக்கறான்."

"வர மாட்டேன்னுட்டானா?"

"ஆமாம். அவன் பெரிய விஞ்ஞானி ஆகி இப்ப தேச அளவில அவன் பேரு பரவியிருக்கு. நாம ஏதோ படிச்சுட்டு என்னவோ ஒரு வேலையைப் பாத்துக்கிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கோம். நம்மளைப் பாத்தா அவனுக்கு இளப்பமாத்தான் இருக்கும்!"

"முதல்ல, நாம ஒண்ணும் மோசமான நிலைமையில இல்ல. நீயும் நானும் நல்ல வேலையிலதான் இருக்கோம். ரெண்டாவது, சேகர் இப்படியெல்லாம் நினைக்கிற ஆளு இல்ல!" என்றான் குணா.

"நீ சேகரைப் பாத்து எத்தனையோ வருஷம் ஆச்சு. காலேஜில படிச்சப்ப உன் காலையே சுத்திக்கிட்டு வந்த அந்த சேகர்னு நினைச்சியா? அவன் மாறிட்டாண்டா! இத்தனை வருஷமா அவன் ஏன் நம்மளோட தொடர்பு வச்சுக்கல, சொல்லு?"

"நாம யாருமே ஒருத்தருக்கொருத்தர் அதிகமா தொடர்பு வச்சுக்கலியே! நீயும் நானும் ஒரே கம்பெனியில வேலை பாக்கறோம். அதனால நெருக்கமா இருக்கோம்.

"காலேஜில, நானும் சேகரும் நெருக்கமாத்தான் இருந்தோம். ஆனா அதுக்கப்புறம் நானும் அவனைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யலியே!

"அவன் பெரிய விஞ்ஞானி ஆகிப் பிரபலமானதால அவனைப் பத்தின நியூஸ் நமக்குத் தெரிஞ்சுக்கிட்டிருக்கு. ஆனா அவனைச் சந்திக்கவோ, பேசவோ நான் முயற்சி பண்ணலியே! நீ எப்படிப் பேசின அவன்கிட்ட, ஃபோன்லியா?"

"ஆமாம். அவன் ஹைதராபாத்ல இல்ல இருக்கான்?"

"பல வருஷம் கழிச்சு அவன்கிட்ட ஃபோன்ல பேசியிருக்க. அதை வச்சு அவனை எடை போடக் கூடாது. நான் அடுத்த வாரம் ஹைதராபாத் போறேன். அப்ப அவனைப் பாத்துப் பேசறேன்."

"நீ சொன்னாலாவது ஒத்துக்கறானான்னு பாக்கலாம்!"

ஹைதராபாதில், சேகருக்கு குணா ஃபோன் செய்தபோது, சேகர் மிகவும் உற்சாகமாகப் பேசினான். குணாவைத் தன் வீட்டுக்குச் சாப்பிட அழைத்தான்.

சேகரின் வீட்டுக்கு குணா சென்றதும், பல வருடங்கள் கழித்துச் சந்தித்த மகிழ்ச்சியில் இருவருமே மனம் விட்டு நீண்ட நேரம் பேசினர். 'இவனையா திமிர் பிடித்தவன் என்று சொன்னான் சம்பந்தம்?'

"ஆமாம், நம்ப காலேஜில் உனக்குப் பாராட்டு விழா நடத்தறதுக்கு சம்பந்தம் கூப்பிட்டப்ப நீ வர மாட்டேன்னு சொல்லிட்டியாமே?" என்றான் குணா.

சேகரின் முகம் சட்டென்று மாறியது. "அதைப் பத்திப் பேச வேண்டாமே!" என்றான்.

"ஏன், சம்பந்தம் மேல உனக்கு ஏதாவது கோபமா?"

"சேச்சே! அவனைப் பாத்தே பல வருஷம் ஆச்சு. அவன் மேல எனக்கென்ன கோபம் இருக்க முடியும்?"

"பின்னே? அவனை நீ மதிக்காத மாதிரி பேசினதா அவன் நினைக்கிறானே!"

"ஒருவேளை அவன்கிட்ட நான் கொஞ்சம் கடுமையாப் பேசியிருக்கலாம்."

"ஏன் அப்படிப் பேசின?"

"குணா! நீ என்னைப் புரிஞ்சுப்பேன்னு  நினைக்கிறேன். நான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டி இருக்கு."

"என்ன ஜாக்கிரதை?"

"இப்ப, நான் பாராட்டு விழா வேண்டாம்னு சொன்னா, என்ன ஆகும்? பொதுவா எல்லோரும் சொல்ற மாதிரி, முதல்ல வேண்டாம்னுதான் சொல்லுவான், அப்புறம் வற்புறுத்தினா சரின்னு ஒத்துப்பான்னு நினச்சு, அவன் என்னை வற்புறுத்தி இருப்பான். 

"அப்புறம் அவனை மறுத்துப் பேசறது எனக்குக் கஷ்டமா இருந்திருக்கும். அதனாலதான் முதலிலேயே கொஞ்சம் கடுமையாப் பேசிட்டா அப்புறம் வற்புறுத்த மாட்டான்னு நெனைச்சுத்தான் அப்படிப் பேசினேன். 

"அவன்கிட்ட மட்டும் இல்ல, இது மாதிரி பாராட்டு விழா நடத்தறேன்னு வரவங்க, என்னைப் புகழ்ச்சியாப் பேசறவங்க எல்லார்கிட்டயும் இப்படிக் கடுமையாத்தான் நடந்துக்கறேன். 

"அப்பத்தானே இது மாதிரிப் பாராட்டுக்கள், புகழ்ச்சிகளையெல்லாம் தடுக்க முடியும்?"

"பாராட்டுக்கள், புகழ்ச்சிகளையெல்லாம் தடுக்கணும்னு நீ ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கே? பாராட்டினா, அதைக் கேட்டுத் தலையாட்டிட்டு நன்றி சொல்லிட்டு வர வேண்டியதுதானே?"

"உனக்குப் புரியல குணா! பணம் இருக்கறவங்க பணத்தை பாங்க்கில போட்டு வைக்கறாங்க, நகைகளை லாக்கர்ல கொண்டு வைக்கறாங்க. ஏன்?"

"ஏன்னா? அதெல்லாம் பாதுகாப்பா இருக்கட்டும்னுட்டுத்தான். தங்களோட பொருள், பணம் எதையும் இழந்துடக் கூடாதுங்கறதுக்காகத்தான்."

"அது மாதிரிதான் எங்கிட்ட இருக்கிற சொத்தையும் நான் பாதுகாக்க விரும்பறேன்."

"உங்கிட்ட இருக்கிற சொத்துன்னா, உன் விஞ்ஞான மூளையா? பாராட்டு விழாவில கலந்துக்கறதுனால உன் மூளைக்கு என்ன ஆபத்து வந்துடும்?"

"எங்கிட்ட இருக்கிற சொத்து என் மூளை இல்லை குணா. விலை மதிக்க முடியாத சொத்தா நான் நினைக்கிறது என்னோட அடக்கத்தைத்தான். 'எனக்குத் தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சம்' என்கிற எண்ணம்தான் என்னை இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஊக்குவிக்குது. 

"இது மாதிரி பாராட்டுக்கள், புகழுரைகளையெல்லாம் கேட்டா, என்னை அறியாமலே  நான் ரொம்ப உயர்ந்தவன் என்கிற எண்ணம் ஏற்பட்டு என்னோட அடக்கம் போயிடும். அதுக்கப்பறம் என்னால எதையும் கத்துக்கவும் முடியாது, சிந்திக்கவும் முடியாது. 

"அதனாலதான் அடக்கம் என்கிற என்னோட சொத்தைப் பாதுகாக்கணும் என்பதில நான் ரொம்ப கவனமா இருக்கேன். சம்பந்தத்துக்கு இதைப் புரிய வச்சு, என்னை மன்னிக்கச் சொல்லு!"

சேகரின்அடக்கமே, சம்பந்தத்துக்கு ஆணவமாகத் தோற்றமளித்த விந்தையை நினைத்து வியந்தான் குணா.
    
குறள் 122
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு

பொருள்:  
அடக்கம் என்ற பண்பை ஒரு விலையுயர்ந்த பொருளைப் பாதுகாப்பது போல் காக்க வேண்டும். ஒருவருக்கு அடக்கத்தை விட நன்மை பயக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


123.ஜூனியர் ஜூனியர்!
"இன்னும் சீனியர் வரலையே?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் ராஜேஷ்.

"இல்லை. வழக்கம் போல இன்னிக்கும் லேட்தான் நீ!" என்றான் சிவா.

"நேரத்துக்கு வீட்டுக்குப் போக முடிஞ்சா நேரத்துக்கு வரலாம்.தினமும் வீட்டுக்குப் போக ஒம்பது பத்துன்னு ஆகுது. காதலியோடு ஒரு சினிமாவுக்குப் போகக்  கூட முடியல!"

"உனக்குக் காதலி இருக்காளா என்ன? எங்கிட்ட சொல்லலியே!"

"ஒரு பேச்சுக்குச் சொன்னேன். இனிமேதான் யாரையாவது தேடிப் பிடிக்கணும்! அதுக்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்குது, இந்த வக்கீலுக்கு ஜூனியரா இருக்கற தொழில்ல? 

Kஉன்னை மாதிரி வேலையைக் கட்டிக்கிட்டு அழ என்னால முடியாது. ஏன்தான் இந்த வக்கீலுக்குப் படிச்சமோன்னு இருக்கு. அவன் அவன் படிச்சு முடிச்சதும் ஏதாவது ஒரு வேலைக்குப் போயி, சம்பளம் வாங்கிக்கிட்டு ஹாயா இருக்கான்! 

Kநம்ம வக்கீல் தொழில்லதான் சீனியர் கிட்ட அடிமை சேவகம் பண்ணிட்டு அப்புறம்தான் பிராக்டீஸ் பண்ண முடியும்கற நிலைமை!"

"இரைஞ்சு பேசாதே! சீனியர் வர நேரம். நல்ல வேளையா டைப்பிஸ்ட் சுகந்தி கூட இன்னிக்கு லீவு!" என்றான் சிவா,

அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ராமதுரை உள்ளே நுழைந்தார்.

"உக்காருங்க, உக்காருங்க. என்ன சிவா நான் சொன்ன ப்ரீஃபை ரெடி பண்ணிட்டியா?" என்றார்.

"முடிச்சுட்டேன் சார். உங்க டேபிள்ள வச்சிருக்கேன்" என்றான் சிவா.

"சரி. இப்ப என்ன செஞ்சுக்கிட்டிருக்க?"

"சார்! அடுத்த வாரம் மகாதேவனோட பிராப்பர்டி மேட்டர் ஹியரிங்குக்கு வருது. அதுக்கு ரெஃபரன்ஸ் ஜட்ஜ்மென்ட் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"குட். நம்ப லைப்ரரில சரியா ரெஃபரன்ஸ் கிடைக்கலேன்னா ஹைகோர்ட் லைப்ரரில போய்ப் பாரு. நீ கலெக்ட் பண்ணின ரெஃபரன்ஸை எல்லாம் நாளைக்கு நான் பாத்துட்டு வேற ஏதாவது வேணுமான்னு சொல்றேன். ராஜேஷ், நீ என்ன பண்ணிக்கிட்டிருக்க?"

"சார்! ராமகிருஷ்ணனோட இன்ஷ்யூரன்ஸ் கேஸ் டாகுமெண்ட்ஸை எல்லாம் அரேஞ்ஜ் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"மூணு நாளா இதைத்தான் சொல்லிக்கிட்டிருக்கே! நான் ஆஃபீஸ்ல இல்லாதபோது நீ ஒரு வேலையும் செய்யறதில்ல போலருக்கே!"

"இல்ல சார்! பேப்பர்ஸ் எல்லாம் நிறைய இருக்கு..."

"எனக்குத் தெரியாதா? ரெண்டு மணி நேர வேலை இது. இங்க பாரு. என்னை மாதிரி ஒரு பிஸியான வக்கீல் கிட்ட ஜூனியரா இருக்கறது பெரிய லேர்னிங் ஆப்பர்சூனிட்டி. அதை சரியாப் பயன்படுத்திக்கலேன்னா உனக்குத்தான் நஷ்டம். சரி. நான் கோர்ட்டுக்குப் போகணும். சாயந்திரம் வந்து பாக்கறேன். முக்கியமா யாராவது என்னைப் பாக்க வந்தா எனக்கு ஃபோன் பண்ணுங்க" என்று சொல்லி விட்டு வெளியேறினார் ராமதுரை.

"கொடுக்கறது சுண்டைக்கா சம்பளம். வேலை மட்டும் மலை மாதிரி குவிஞ்சுக்கிட்டே இருக்கும்!" என்றான் ராஜேஷ், அவர் போனவுடன்.

"அவர்தான் சொன்னாரே, இது ஒரு லேர்னிங் ஆப்பர்சூனிட்டின்னு! இதை ஒழுங்காப் பயன்படுத்திக்கிட்டாத்தான் ஏர்னிங் ஆப்பர்ச்சுனிடி வரும்!" என்றான் சிவா.

"இவரை மாதிரி ஆசாமிகள் எல்லாம் உன்னை மாதிரி இளிச்சவாயன் கிடைச்சா அவன் தலையில நல்லா மொளகா அரைப்பாங்க! நாமளும் ஆறு மாசமா இவருகிட்ட ஜூனியரா இருக்கோம். என்னத்தைப் பெரிசாக் கத்துக் கொடுத்துட்டாரு நமக்கு?"

"டேய்! இது காலேஜ் இல்லை, யாராவது நமக்கு சொல்லிக் கொடுக்கறதுக்கு. வேலையை செஞ்சுக்கிட்டேதான் நாம வேலையைக் கத்துக்க முடியும். ரெண்டு வருஷம் பொறுமையா இருந்து அவர் சொல்ற வேலையைச் செஞ்சுக்கிட்டு அவர் செயல்படறதை கவனிச்சுப் பல விஷயங்களைக் கத்துக்கிட்டா அப்புறம் நாம தனியா பிராக்டீஸ் பண்ண முடியும்"

"நெனச்சுக்கிட்டிருக்க நீ! அவர் தொண்ணுறு வயசு வரையிலும் பிராக்டீஸ்  பண்ணுவாரு. அதுவரையிலும் நீ அவர் கிட்ட ஜூனியராத்தான் இருக்கப் போற! அவரும் உன்னை வளர விட மாட்டாரு. நீயும் தைரியமா வெளியில வர மாட்டே!"

"சரி, நீ என்ன பண்ணப் போற?"

"ஆறு மாசம் பாத்தாச்சு. இவரு நமக்கு நல்ல சம்பளமும் கொடுக்க மாட்டாரு. நாம கத்துக்கற அளவுக்கு முக்கியமான வேலையையும் நமக்குக் கொடுக்க மாட்டாரு. கோர்ட்டில போயி அவர் பக்கத்தில உக்காந்துக்கிட்டு அவருக்கு பேப்பர் எடுத்துக் கொடுக்கலாமே தவிர ஒரு நாளும் நீயும் நானும் கோர்ட்டில வாதாட முடியாது. இன்னும் ரெண்டு மாசத்துல பாரு. நானே தனியா கிளையன்ட்டைப் புடிச்சு பிராக்டீஸை ஆரம்பிச்சுடறேன்."

சொன்னபடியே ராஜேஷ் இரண்டு மாதங்களில் ராமதுரையிடமிருந்து விலகித் தனியே பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்தான்.

ரு வருடம் கழித்து ஒரு பொது நிகழ்ச்சியில் ராஜேஷும், சிவாவும் சந்தித்துக் கொண்டனர்.

"உன் பிராக்டீஸ் எப்படிப் போயிக்கிட்டிருக்கு?" என்றான் சிவா.

"நான் எதிர்பார்த்தபடி வரல. அதனால, லாயர் சாமிநாதன் கிட்ட ஜூனியராச் சேந்துட்டேன்."

"நான் கேள்விப்பட்டதில்லையே அவர் பேரை! எப்படிப் போய்க்கிட்டிருக்கு?"

"என்னத்தைச் சொல்றது? அவருக்கு அதிகமா கேஸ் இல்லை. அதனால எனக்கும் வேலை அதிகமா இல்லை. சம்பளமும் ஒழுங்கா வரதில்லை. ராமதுரைகிட்டயே இருந்திருக்கலாம். அவசரப்பட்டுட்டேன். ஆமாம் நீ எப்படி இருக்கே?" என்றான் ராஜேஷ்.

"உனக்குத்தான் தெரியுமே, ராமதுரை சார்கிட்ட வேலை நிறைய இருக்கும். அதனால நிறையக் கத்துக்க முடியுது. அடுத்த வருஷம் நான் தனியே பிராக்டீஸ் பண்ணலாம்னு அவரே சொல்லிட்டாரு. அதனால இப்ப ரெண்டு மாசமா கோர்ட்டில் வாதம் பண்ண எனக்கு அப்பப்ப வாய்ப்புக் கொடுக்கறாரு."

"நீ அதிர்ஷ்டக்காரன்டா!" என்றான் ராஜேஷ்.

"அதிர்ஷ்டக்காரனோ என்னவோ எனக்குத் தெரியாது. பொறுமையா இருந்து, கஷ்டப்பட்டு உழைச்சுத் தொழிலைக் கத்துக்கிட்டா எதிர்காலத்தில் முன்னேறலாம்னு நெனச்சேன். அப்படி நடக்கும்னு நம்பிக்கை இருக்கு."

"நீ தனியா பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சப்பறம் சொல்லு. நான் உன்கிட்டயே ஜூனியரா சேர்ந்துடறேன்" என்றான் ராஜேஷ்.

ராஜேஷ் விளையாட்டுக்குச் சொல்கிறானா இல்லை உண்மையாகச் சொல்கிறானா என்று சிவாவுக்குப் புரியவில்லை.
     
குறள் 123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து 
ஆற்றின் அடங்கப் பெறின்.

பொருள்:  
அறிய வேண்டியவற்றை அறிந்து ஒருவன் அடக்கத்துடன் நடந்து கொண்டால், அந்தப் பண்பு பிறரால் அறிந்து கொள்ளப்பட்டு அவனுக்கு மேன்மையைத் தரும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

124.அரசியல் பிரவேசம் 
"இன்னிக்கு நடிகர் சௌம்யன் தன்னோட அரசியல் பிரவேசத்தைப் பத்தி அறிவிக்கிறதா சொல்லியிருக்காரே! என்ன முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறீங்க?" என்றான் சங்கர்.

"இதில என்ன சந்தேகம்? அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேன்னுதான் அறிவிப்பார். அரசியல்ல இறங்கப் போறதில்லன்னு சொல்றதா இருந்தா சாதாரணமா சொல்லி இருப்பாரே! இது மாதிரி தேதி எல்லாம் கொடுத்து அறிவிக்கிறதுன்னா அரசியல்ல குதிக்கப் போறதாத்தான் அர்த்தம்" என்றான் நடராஜ்.

இருவருமே பத்திரிகை நிருபர்கள். வெவ்வேறு பத்திரிகைகளில் பணியாற்றினாலும் அடிக்கடி சந்தித்துத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

"அவரு அப்படிப் பண்ணினாருன்னா எனக்கு அவர் மேல இருக்கிற மதிப்பு கொஞ்சம் குறைஞ்சுடும்!" என்றான் சங்கர்.

"ஏன் அவர் அரசியலுக்கு வரது உனக்குப் பிடிக்கலியா?" என்றான் நடராஜ்.

"எனக்குப் பிடிக்கிறது, பிடிக்கலைங்கறது விஷயம் இல்ல. இத்தனை வருஷமா அவரு சினிமாவைத் தவிர மத்த விஷயங்கள்ள மூக்கை நுழைக்காம ரொம்ப கண்ணியமா நடந்துக்கிட்டிருக்காரு. 

"சினிமாவில கூட தனக்கு நடிப்பைத் தவிர வேற எதுவும் தெரியாது, நடிப்பில் கூட தான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்குன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு  வந்திருக்காரு. 

"இப்ப சில பேரு அவர் அரசியலுக்கு வரணும்னு சொல்றதுனால அவர் அப்படி ஒரு முடிவை எடுத்தா, அது தன்னோட திறமைகள் என்ன, எல்லைகள் என்னன்னு கவனமா சிந்திச்சு இத்தனை வருஷமா அவர் நடந்துக்கிட்டதுக்கு முரணாக இருக்கும்கறது என்னோட கருத்து."

"பாக்கலாம் என்ன செய்யப் போறார்னு! இன்னும் ஒரு மணி நேரத்தில தெரிஞ்சுடப் போகுது!"

டிகர் சௌம்யனின் ஊடக சந்திப்பு ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பெரிய மண்டபம் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களால் நிரம்பி வழிந்தது.

சரியாகக் காலை 11 மணிக்கு சௌம்யன் பேச ஆரம்பித்தான்.

"உங்களை எல்லாம் இந்த மண்டபத்துக்கு வரவழைச்சதுக்கு நீங்க என்னை மன்னிக்கணும். நான் இந்த அறிவிப்பை என் வீட்டில இருந்துக்கிட்டே ஒரு அறிக்கையா வெளியிட்டிருக்கலாம். ஆனா சில விஷயங்களைத் தெளிவா, விளக்கமா சொல்லணும்னுதான் இந்த ஊடக சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணினேன்.

"நான் அதிகம் படிக்கல. நான் வேலைக்குப் போயிருந்தா, எனக்கு ஏதாவது சின்ன வேலைதான் கிடைச்சிருக்கும். ஏதோ, என்னோட அதிர்ஷ்டம், நண்பர்களோட விளையாட்டா நாடகங்கள்ள நடிச்சுக்கிட்டிருந்தேன். 

"மரியாதைக்குரிய டைரக்டர் நாராயணன், நான் நடிச்ச ஒரு நாடகத்தைப் பாத்துட்டு, எனக்கு சினிமாவில வாய்ப்புக் கொடுத்தார். என்னோட நடிப்பு மக்களுக்குப் புடிச்சதனால நான் ஒரு பெரிய நடிகனாயிட்டேன்! 

"ஆனா இப்பவும், என்னை விட நல்லா நடிக்கக் கூடிய பல நடிகர்களோட நடிப்பைப் பாத்து மனசுக்குள்ள 'இவங்களோட நடிப்புக்கெல்லாம் முன்னே என் நடிப்பு எம்மாத்திரம்!'னு அடிக்கடி நெனச்சுக்கிட்டுத்தான் இருப்பேன். இதை நான் பல தடவை வெளியிலேயும் சொல்லி இருக்கேன்.

"நான் ஒரு கார் தயாரிக்கிற தொழில்ல ஈடுபடப் போறேன்னு சொன்னா, எல்லாரும் என்ன சொல்லுவாங்க? வங்கியில் போயி கடன் கேட்டா, அவங்க என்ன சொல்லுவாங்க? 'உங்களுக்கு இந்தத் தொழில்ல என்ன அனுபவம் இருக்கு?'ன்னு கேக்க மாட்டாங்களா?

"ஆனா நான் ஏதாவது ஒரு காரோட விளம்பரப் படத்தில் நடிச்சு 'இதுதான் மிகச் சிறந்த கார்'னு சொன்னா, என் பேச்சை நம்பி சில பேர் அந்தக் காரை வாங்கலாம்! 'காரைப்பத்தி உனக்கு என்ன தெரியும்?'னு அப்ப யாரும் கேக்க மாட்டாங்க! 
அதுதான் நடிகனா இருக்கிறதில ஒரு அட்வான்ட்டேஜ்! 

ஆட்டோமொபைல் எஞ்சினீரிங் படிச்ச ஒருத்தர், காரைப் பத்தி நல்லா ஆராய்ந்து, இந்தக் காரோட அமைப்பு ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றதை விட, காரைப் பத்தி எதுவுமே தெரியாத நான் சொல்ற கருத்துக்கு அதிக மதிப்பு இருக்கும்! இது தப்பு இல்லியா? அதனாலதான் நான் விளம்பரப் படங்கள்ள நடிக்க ஒத்துக்கறதில்ல.

"எல்லார் மாதிரியும் நானும் அரசியல் நடப்புகளை கவனிச்சுக்கிட்டிருக்கேன். தேர்தல்கள்ள ஓட்டுப் போட்டுக்கிட்டிருக்கேன். ஆனா இதுவரையிலும் எந்த ஒரு நிகழ்வையும் பத்தி நான் கருத்துச் சொன்னதில்லை. எந்த ஒரு கட்சியையோ, தலைவரையோ ஆதரிச்சோ, எதிர்த்தோ பேசினதில்ல.

"அரசியல்ல, பல தலைவர்கள் தொண்டர்களா இருந்துதான் தலைவர்களா ஆகியிருக்காங்க. நான் என்னோட சினிமா பாப்புலாரிட்டியைப் பயன்படுத்தி ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிச்சு ஆட்சியைப் புடிக்கணும்னு நெனைக்கறது ஹெலிகாப்டர்ல வந்து ஒரு வீட்டோட மொட்டை மாடியில இறங்கற மாதிரி!ஒரு வீட்டுக்குள்ள நுழையணும்னா வாசப்படி வழியாத்தான் நுழையணும்னு நான் நினைக்கறேன்.

"ஒரு அரசியல் கட்சித் தலைவரோ, ஒரு பிரபல தொழில் அதிபரோ சினிமாவில சேர்ந்து ஹீரோ ஆகணும்னு யாராவது சொல்லுவீங்களா? ஆனா ஒரு நடிகன் அரசியல் தலைவனாகணும்னு மட்டும் ஏன் சொல்றீங்க? நடிகன்னா அவனுக்கு எல்லாத் தகுதியும் இருக்குன்னு அர்த்தமா?

"எனக்கு எப்பவாவது அரசியல்ல இறங்கணும்னு தோணினா, எந்தக் கட்சியோட செயல்பாடுகள்ள எனக்கு அதிக நம்பிக்கை இருக்கோ, அந்தக் கட்சியில ஒரு தொண்டனா சேருவேன். அப்படி எந்தக் கட்சியும் புடிக்காட்டா, அரசியலுக்கு வராமயே இருப்பேன். இப்ப நான் எந்தக் கட்சியிலேயும் இல்லைங்கறதினால எனக்கு எந்தக் கட்சியையும் பிடிக்காதுன்னு அர்த்தம் இல்லை. அரசியல்ல ஈடுபடறதில இப்ப எனக்கு விருப்பம் இல்லைன்னு அர்த்தம். அவ்வளவுதான்!

"நான் என்னோட வாழ்க்கையில இத்தனை வருஷமா கடைப்பிடிச்சுக்கிட்டிருக்கிற ஒரு விஷயம் என்னோட தகுதி, என்னோட நிலைமை இதெல்லாம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்குத் தகுந்தாப்பல நடந்துக்கறதுதான். ஒரு நடிகனா நான் எந்த ஒரு வேஷமும் போடலாம். ராஜாவா நடிக்கலாம், பிரதமரா நடிக்கலாம், அமெரிக்க ஜனாதிபதியா நடிக்கலாம், மகாத்மா காந்தியா கூட நடிக்கலாம். ஆனா நான் ஒரு நடிகன் என்பதை எப்பவுமே நினைவில் வச்சுக்கிட்டிருப்பேன். நடிப்புத் தொழில்ல எனக்குக் கிடைச்சிருக்கிற அங்கீகாரத்திற்குக் கூட என்னோட இந்த மனப்பான்மைதான் காரணம் என்பது என்னோட கருத்து.

"எனவே, நான் அரசியல் கட்சி எதுவும் தொடங்கப் போவதில்லை. உங்கள் எல்லோரையும் போல அரசியலை கவனித்து தேர்தல்ல என் விருப்பப்படி ஓட்டுப் போட்டுக்கிட்டிருப்பேன். என் மேல நீங்க எல்லோரும் வச்சிருக்கிற நம்பிக்கைக்கு என்னோட நன்றி. இந்த நம்பிக்கையை நான் பெற்றது ஒரு நடிகனாகவும், ஒரு மனிதனாகவும் நான் செயல்பட்ட விதம்தான். அதேபோல் தொடர்ந்து செயல்படுவதுதான் நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்புக்கும், நம்பிக்கைக்கும், நல்லெண்ணத்துக்கும் நான் செய்யக்கூடிய கைம்மாறு."

தன் பேச்சை முடித்து விட்டு, அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்து விட்டு சௌம்யன் வெளியேறினான். செய்தியாளர்களின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.

"சௌம்யன் என்னை ஏமாத்தல. அவர் மேல எனக்கு இருக்கிற மதிப்பு இன்னும் அதிகமாயிடுச்சு" என்று நடராஜிடம் சொல்லிக் கொண்டிருந்தான் சங்கர்.
     
குறள் 124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையினும் மாணப் பெரிது.

பொருள்:  
தன் நிலையிலிருந்து பிறழாமல் அடக்கமாகச் செயல்படுபவனுடைய தோற்றம் மலையை விட உயர்ந்து காணப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

125.காடாறு மாதம் 
"பி.ஈ படிச்சுட்டு அவன் அவன் அம்பதாயிரம், ஒரு லட்சம்னு சம்பளம் வாங்கறான். நமக்கு என்னடான்னா பிச்சை போடற மாதிரி பத்தாயிரம் ரூபா ஸ்டைபெண்ட் கொடுக்கறாங்க. என்ன பொழைப்புடா இது?" என்று அலுத்துக் கொண்டான் சுகுமார்.

"இது ட்ரெயினிங் பீரியட்தானே? தங்க இடம் கொடுத்து, சாப்பாடு போட்டு, அதுக்கு மேல பத்தாயிரம் ரூபா கொடுக்கறாங்களே, அது போதாதா?" என்றான் ராம்குமார்.

"உன்னை மாதிரி பிச்சைக்காரனுக்கெல்லாம் இது பெரிய தொகையா இருக்கலாம். என்னை மாதிரி ராயல் ஃபேமிலில பொறந்து வளர்ந்தவங்களுக்கெல்லாம் இது ஒரு பிச்சைக்காசுதான். தண்ணி அடிக்கறதை விடு, சிகரெட்டுக்குக் கூடப் பத்தாதே இது!" என்றான் சுகுமார்.

"ஆறு மாசத்துக்குத்தானே இந்த ஸ்டைபெண்ட்? அப்புறம்தான் அம்பதாயிரம் சம்பளம் வருமே நமக்கு?" என்றேன் நான் சமாதானமாக, ராம்குமாரைப் பார்த்தபடி.

எங்கெங்கோ படித்து விட்டு, இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபின் அறிமுகம் ஆனவர்கள் நாங்கள். இந்த நிலையில் சுகுமார் ராம்குமாரைப் பிச்சைக்காரன் என்று தூக்கி எறிந்து பேசியது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் ராம்குமார் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதாது போல் மௌனமாக இருந்து விட்டான்.

"இந்தக் காட்டில ஒரு ட்ரெயினிங் ஸ்கூல் கட்டி, அதில நம்மளைத் தங்க வச்சிருக்காங்க. ஆறு மாசம் ஜெயில் வாழ்க்கைதான் நமக்கு. ஞாயித்துக்கிழமை ஒரு நாள்தான் ஜெயில் கைதிகள் பரோல்ல போற மாதிரி வெளியில போயிட்டு வர முடியும்!" என்று புலம்பினான் சிவசு என்கிற சிவசுப்பிரமணியன்.

று மாதங்கள் ஓடி விட்டன. எங்கள் பயிற்சிக் காலம் முடிந்தது. விடுதியில் கடைசி நாள். அனைவரும் ஒன்று கூடி இருந்தோம்.

"ஆறு மாசத்துல அறுபதாயிரம் ரூபா மொத்த சம்பளம்! ஒரே மாசத்துல சம்பாதிக்க வேண்டிய தொகை இது. என்ன செய்யறது? நீங்கள்ளாம் என்ன பண்ணினீங்களோ தெரியாது. நான் மாசா மாசம் எங்கப்பாகிட்டேயிருந்து செலவுக்குப் பத்தாயிரம் ரூபா வாங்கினேன்!" என்றான் சுகுமார்.

"நான் அவ்வளவு மோசம் இல்ல. அறுபதாயிரம் ரூபாயில ஒரு இருபதாயிரம் ரூபாய் மிச்சம் பிடிச்சிருக்கேன்" என்றேன் நான்.

ஒவ்வொருவரும் தாங்கள் சேமித்த தொகை எவ்வளவு என்று சொன்னார்கள். கடைசியாக ராம்குமார் என்ன சொல்லப் போகிறான் என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"நானும் கொஞ்சம் மிச்சம் பிடிச்சிருக்கேன்" என்றான் ராம்குமார்.

"கொஞ்சம்னா, எவ்வளவு?"

"இங்க செலவு என்ன இருக்கு? லாண்டரி கூட ஃப்ரீதானே? மாசம் ஆயிரம் ரூபா செலவானா அதிகம். மீதி சுமார் அம்பத்தஞ்சாயிரம் ரூபா அப்படியே பேங்க் அக்கவுண்ட்டிலதான் இருக்கு!" என்றான் ராம்குமார்.

"கஞ்ச மகாப் பிரபுன்னு உனக்குப் பட்டம் கொடுக்கலாம்டா! உனக்கெல்லாம் எதுக்கு சம்பளம்? சாப்பாடு போட்டுட்டா போதும், நாய் மாதிரி உழைக்கத் தயாரா இருப்ப போலருக்கு!" என்றான் சுகுமார் எரிச்சலுடன்.

"சுகுமார்! திஸ் இஸ் டூ மச்! ராம்குமார் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருக்கலாம். அதனால சிக்கனமா இருக்கறது அவனுக்கு இயல்பா இருக்கலாம். இதுவரையிலும் அவன் தன் குடும்பத்தைப் பத்தி எதுவுமே சொன்னதில்லை. அவனை மட்டமாப் பேசறது தப்பு" என்றேன் நான்.

"நான் ஒண்ணும் தப்பா சொல்லலியே! அவனுக்குப் பணமே அவசியம் இல்லேன்னு சொன்னேன். அவ்வளவுதான்" என்றான் சுகுமார்.

"சரி. ஹாஸ்டல் வாழ்க்கை இன்னியோட முடிஞ்சு போச்சு. இனிமே நாம சென்னையிலதான் தங்கப் போறோம். என் வீடு மாம்பலத்தில இருக்கு. உன் வீடு எங்கே இருக்கு?" என்றேன் ராம்குமாரிடம்.

"எம் ஆர் சி நகர்" என்றான் ராம்குமார்.

"அது மேட்டுக்குடி ஏரியா ஆச்சே! அங்க எங்கே தங்கப் போறே நீ? ஐயப்பன் கோவில் வாசலிலேயா?" என்றான் சுகுமார் இளக்காரமாக.

"உன் அப்பா என்ன செய்யறாரு?" என்றேன் நான்.

"ஒரு கம்பெனியில வேலை செய்யறாரு?"

"என்ன வேலை? எந்தக் கம்பெனி?"

"மேனேஜிங் டைரக்டர். நம்ப கம்பெனியிலதான்!" என்றான் ராம்குமார், அமைதியாக.
   
குறள் 125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பொருள்:  
பணிவு என்பது அனைவருக்கும் ஏற்ற பண்பு. அதிலும் செல்வம் படைத்தவர்களிடம் இருக்கும் பணிவு அவர்களுக்கு இன்னொரு செல்வமாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

126.ஆலய தரிசனம்
"எல்லாம் எடுத்துக்கிட்டியா?" என்றான் சரவணன்.

"எல்லாம்னா?" என்றாள் வனஜா எரிச்சலுடன்.

"நம்ம கடையில வாங்கி வச்ச பிஸ்கட், நொறுக்குத்தீனி வகையறாக்களைத்தான் சொல்றேன்."

"நாம கோவிலுக்குப் போறமா, பிக்னிக்குக்குப் போறமான்னு தெரியல!"

"கோவிலுக்குப் போறோம்கறதுக்காகக் காலி வயத்தோட போக முடியுமா? நாம டூரிஸ்ட் பஸ்ல போறோம். அவன் எப்ப சாப்பாடு  போடறானோ அப்பத்தான். அதுவரையிலும் பசியைத் தாங்கிக்கிட்டு இருக்கணுமா என்ன?"

"இந்த மாத நாவல் எல்லாம் எதுக்கு எடுத்து வச்சிருக்கீங்க?"

"போரடிச்சா படிக்கத்தான்!"

"அதான் செல்ஃபோன்ல பாட்டு, கேக்கறதுக்கு இயர்ஃபோன் எல்லாம் இருக்கே!"

"பாட்டைக் கேட்டுக்கிட்டே படிக்கலாமே! சிப்ஸைக் கொறிச்சுக்கிட்டே பாட்டைக் கேட்டுக்கிட்டு, சுவாரஸ்யமா ஒரு கதையும் படிச்சுக்கிட்டிருந்தா எவ்வளவு ஆனந்தமா இருக்கும்!"

:இன்னும் ரெண்டை விட்டுட்டீங்களே!"

"எதை?"

"காதுக்குப் பாட்டு. கண்ணுக்குப் புத்தகம். வாய்க்கு சிப்ஸ். இன்னும் ரெண்டு புலன் தீனி இல்லாம இருக்கேன்னு கேட்டேன்!"

"சிப்ஸிலியே வாசனை இருக்கு. சொகுசான சீட்ல உக்காந்திருந்தா உடம்புக்கும் சுகம் கிடைச்சுடுது. அப்புறம் என்ன?"

"ஆகக்கூடி, கோவிலுக்குப் போனாக் கூட ஐம்புலனுக்கும் தீனி போடாம இருக்க முடியாது உங்களால!"

"ஐம்புலனுக்கும் தீனி போட்டாத்தான் மனசால நல்ல விஷயங்களைப் பத்தி நினைக்க முடியும்!"

ஸ்ஸில் அவர்களுடன் வந்த பலரும் சரவணனைப் போலவேதான் இருந்தனர். பஸ் கிளம்பியதுமே பலரும் ஹெட்ஃபோன்களை மாட்டிக்கொண்டு, தீனிப் பொட்டலங்களைப் பிரிக்கத் தொடங்கினர்.

அவர்கள் குழுவில் ஒரு இளைஞன் மட்டும் தனியே வந்திருந்தான். அவர்கள் சீட்டுக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி வந்தான்.

தங்கும் விடுதிக்கு வந்ததும், அறை கொடுக்கப்படுவதற்காக விடுதியின் முகப்பில் சற்று நேரம் அனைவரும் அமர்ந்திருந்தனர். அந்த இளைஞன் விடுதி நிர்வாகியிடம், "சார் ஒரு ஃபோன் பண்ணணும். பக்கத்தில பூத் ஏதாவது இருக்கா?" என்றான். 

அவர் "இங்கியே பண்ணிக்கங்க" என்றதும் அங்கிருந்த ஃபோனில் பேசினான். தன் பெற்றோர்களிடம் சுருக்கமாகத் தகவல் சொல்லி விட்டு ஃபோனை வைத்து விட்டான்.

அவன் ஃபோன் பேசி விட்டு வந்ததும், வனஜா அவனிடம், "ஏம்ப்பா, தனியாவா வந்திருக்க?" என்றாள்.

"ஆமாம் ஆன்ட்டி. அப்பா அம்மா ரெண்டு மாசம் முன்னாடி இதே டூருக்குத்தான் போயிட்டு வந்தாங்க. அவங்க சொன்னதனால நானும் போயிட்டு வரலாம்னு வந்திருக்கேன்."

"உன் மொபைல் என்ன ஆச்சு? சார்ஜ் இல்லியா?"

"எடுத்துக்கிட்டு வரல!"

"ஏன்? மறந்துட்டியா?"

"இல்லை. இந்தக் கோவில் டூர் போற ஒரு வாரம் மட்டும் செல்ஃபோன் இல்லாம இருக்கலாம்னு பாத்தேன். செல்ஃபோன் இருந்தா ஏதாவது கால் வரும். அதில இருக்கிற ஃபோட்டோ, வீடியோ, பாட்டுன்னு ஏதாவது பாத்துக்கிட்டு, கேட்டுக்கிட்டு இருக்கத் தோணும். கோவிலுக்குப் போகும்போதாவது மத்த ஈடுபாடுகளைக் குறைச்சுக்கிட்டுக் கடவுள் சிந்தனையோடு இருக்கலாம்னுட்டுத்தான்!"

அவனுடைய சிறிய பையைப் பார்த்து விட்டு, "இவ்வளவுதான் உன் லக்கேஜா?" என்றாள்.

"ஆமாம். ஜாஸ்தி எடுத்துக்கிட்டு வரல, ரெண்டு மூணு வேஷ்டி சட்டைதான். வேஷ்டியை ராத்திரி ரூம்ல தங்கும்போது தோய்ச்சு உலர்த்திட்டுக் காலையில கட்டிக்கலாம்னு இருக்கேன். நிறைய டிரஸ் இருந்தா இதைப் போட்டுக்கலாமா, அதைப் போட்டுக்கலாமான்னு சிந்தனை போகும். அதெல்லாம் எதுக்குன்னுட்டுத்தான்."

வனஜா தன் கணவனைப் பார்த்தாள். அவன் இயர்ஃபோனை மாட்டிக்கொண்டு ஆனந்தமாகப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான்.
  
குறள் 126
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் 
எழுமையும் ஏமாப் புடைத்து.

பொருள்:  
ஆமை தன் உடல் உறுப்புக்களைத் தன் மீதுள்ள ஓட்டுக்குள் அடைத்து வைத்திருப்பது போல், இந்த ஒரு பிறவியில் நம் ஐம்புலன்களையும் அடக்கி வைத்தால், அது நமக்கு ஏழு பிறவிகளுக்கும் நன்மை பயக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


127.பட்டிமன்றப் பேச்சாளன்
தீபாவளியன்று ஒளிபரப்புவதற்காக அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு சிறப்புப் பட்டிமன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

ஒரு மாறுதலுக்காக "கண்ணகியின் மணவாழ்வு குலைந்ததற்குப் பொறுப்பு கோவலனா, மாதவியா?" என்று கொஞ்சம் இலக்கியத்தனமான தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அரங்கம் பார்வையாளர்களால் நிரம்பி வழிய, 'கோவலனே' என்று மூவரும், 'மாதவியே' என்று மூவரும் வாதிட்டனர். இரண்டு தரப்பிலும் ஒரு பெண், இரண்டு ஆண்கள் இடம் பெற்றிருந்தனர்.

'கோவலன்தான் பொறுப்பு' என்று வாதிட்ட அணியின் கடைசிப் பேச்சாளர் பரிமளா செல்வகுமார் "மாதவி கோவலனைத் தவிர வேறு யாரையும் மனத்தால் கூட நினைக்கவில்லை. கணிகைக் குலத்தில் பிறந்தும் அவள் ஒரு கற்புக்கரசியாக வாழ்ந்தாள். ஆனால் மணமான கோவலன் மனைவி இருந்தும் மற்றோர் பெண்ணை நாடினான். கண்ணகி, மாதவி இருவருமே கோவலனால் பாதிக்கப்பட்டவர்கள்தான்" என்றாள். அவள் பேசி முடித்ததும் கைதட்டல் அரங்கை அதிர வைத்தது.

நடுவர், "பரிமளா அவர்கள்  தனது ஆணித்தரமான  வாதங்களால் கோவலன்தான் பொறுப்பு என்று நிலைநாட்டி விட்டார். அவருடைய வாதங்களை முறியடிப்பது மிகக் கடினம். இளங்குமரன் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம்" என்று தனது வழக்கமான பாணியில் பேசிக் கடைசிப் பேச்சாளனான இளங்குமரனைப் பேச அழைத்தார்.

இளங்குமரன் எழுந்ததுமே, பெரும் கைதட்டல் எழுந்தது. பட்டிமன்றங்களில் இளங்குமரன் ஒரு நட்சத்திரப் பேச்சாளன். அந்தத் தொலைக்காட்சிப் பட்டிமன்றங்களில் அவனுக்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. எப்போதும் கடைசிப் பேச்சாளனாக வரும் அவன் மற்ற அணியினரின் எல்லாக் கருத்துக்களையும் தனது புத்திசாலித்தனமான, நகைச்சுவையான பேச்சினால் மறுத்துப் பேசும் பாங்கு அவனுக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்திருந்தது.

அந்தத் தொலைக்காட்சியின் பட்டிமன்றங்களில் அவனுக்குக் கிடைத்த புகழின் விளைவாக பல இலக்கிய, ஆன்மீக மேடைகளில் பேச அவனுக்குத் தொடர்ந்து வாய்ப்புக்கள் வந்ததால், தன் வேலையை உதறி விட்டு முழுநேரப் பேச்சாளனாகி விட்டான் அவன். ஆண்டு முழுவதும் பல நாடுகளிலும் அவனுக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடாயின.

இளங்குமரன் பேச ஆரம்பித்தான்.

"எனக்கு முன்பு பேசிய சகோதரி பரிமளா அவர்கள் மாதவியை ஒரு அப்பாவி போல் வர்ணித்தார். மாதவியை ஆதரித்து அந்த அணியைச் சேர்ந்த மூவரும் பேசியது எனக்கு வியப்பாக இருக்கிறது. மாதவி ஒரு விலைமாது. ஒழுக்கம் கெட்டவர்களால்தான் மாதவி போன்ற ஒரு விலைமாதை ஆதரித்துப் பேச முடியும்!"

திடீரென்று அரங்கம் முழுவதும் அமைதியானது. தனது கூர்மையான பேச்சுக்குப் பெரும் கைதட்டல் எழும்பும் என்று எதிர்பார்த்த இளங்குமரன், குழப்பத்துடன் அனைவரையும் பார்த்தான்.

நடுவர் அவனை முறைத்துப் பார்த்தபடி இருந்தார். பரிமளா தலையைக் குனிந்து கொண்டிருந்தாள். அவள் அணியின் மற்ற இருவரும் அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் அணித்தலைவர் மெதுவாகத் தலையைப் பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டிருக்க, அவன் அணியைச் சேர்ந்த பெண் பேச்சாளர் அவனை எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தான் யோசிக்காமல் தவறாக ஏதாவது பேசி விட்டோமோ என்று அவன் யோசிக்க ஆரம்பித்தபோது, நடுவர் மணியை அடித்து விட்டார். 'இப்போதுதானே பேச ஆரம்பித்தோம்?' என்று குழம்பியபடி அவன் நடுவரைப் பார்க்க, அவர் அவனை உட்காருமாறு சைகை செய்தார்.

அவன் அமர்வதற்கு முன்பே நடுவர் அவசரமாகப் பேச ஆரம்பித்தார். "இப்போது தீர்ப்பு சொல்லும் நேரம். முன்பெல்லாம் தமிழ்நாட்டில் 'கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா?' என்று நிறையப் பட்டிமன்றங்கள்  நடக்கும். அதைப் பற்றிக் கவிஞர் வாலி ஒருமுறை சொன்னார். 'கண்ணகி, மாதவி இருவரில் யார் மேல் என்று கேட்டால், இருவருமே மேல் இல்லை, இருவருமே ஃபீமேல்தான்."

அரங்கில் மெலிதான சிரிப்பலை எழுந்தது. பொதுவாக, இது போன்ற நகைச்சுவைத் துணுக்குகள் அரங்கில் பலரிடமிருந்து பெரிய சிரிப்புகளை வரவழைக்கும். ஆனால் இளங்குமரனின் பேச்சு ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து பலரும் இன்னும் மீளவில்லை என்று தெரிந்தது. இறுக்கத்தைக் குறைக்க நடுவர் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.

தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் இளங்குமரனின் அருகில் வந்து அவனை மேடைக்குப் பின்னே அழைத்துச் சென்றார். தொலைக்காட்சி கேமராக்கள் இந்தக் காட்சி ஒளிப்பதிவு ஆகாதபடி, வேறு புறம் திருப்பப்பட்டன. தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒரு காரில் அவன் உடனே வீட்டில் கொண்டு போய் விடப்பட்டான்.  

அன்று இரவு பட்டிமன்ற நடுவர் இளங்குமரனுக்கு ஃபோன் செய்து "என்ன தம்பி, இப்படிப் பேசிட்டீங்க? கவனமா இருந்திருக்க வேண்டாமா?" என்றார்.

"இல்லீங்கய்யா! நான் விளையாட்டா ஏதோ..."

"எது விளையாட்டு? உங்களுக்கு முன்னால அந்தப் பெண் பரிமளா மாதவியை ஆதரிச்சுப் பேசியிருக்காங்க. ஒழுக்கங்கெட்டவங்கதான் மாதவியை ஆதரிப்பாங்கன்னு நீங்க சொன்னா என்ன அர்த்தம்? அந்தப் பொண்ணை சொல்ற மாதிரி இல்ல இருக்கு? டி வி சேனல் டைரக்டர் ரொம்பக் கோவமா இருக்காரு. தீபாவளி அன்னிக்கு நிகழ்ச்சியை ஒளிபரப்பும்போது, நீங்க பேசினதை கட் பண்ணிடுவாங்க. ஆனா ஆயிரம் பேருக்கு மேல இன்னிக்கு நிகழ்ச்சியைப் பாத்திருக்காங்களே! அவங்க சும்மா இருப்பாங்களா? பத்திரிகைக்காரங்க வேற சில பேரு வந்திருப்பாங்க. அவங்க என்ன பண்ணுவாங்களோ?" என்று தன் கவலையைத் தெரிவித்தார் நடுவர்.

தன் பேச்சின் தீவிரத்தை அப்போதுதான் உணர்ந்த இளங்குமரன் உடனே பரிமளாவுக்கு ஃபோன் செய்து வருத்தம் தெரிவிக்க முடிவு செய்தான். அவள் தொலைபேசி எண்ணைக் கேட்டுப் பெற்று, அவளுக்கு ஃபோன் செய்தான். ஆனால் "நான் இளங்குமரன் பேசறேன்" என்று அவன் ஆரம்பித்ததுமே அவள் இணைப்பைத் துண்டித்து விட்டாள் .

அன்று இரவே, சில தொலைக்காட்சிகளில் இளங்குமரனின் பேச்சு பற்றிய செய்தி வெளியாகியது. நிகழ்ச்சியை நேரில் பார்த்த சிலர் இளங்குமரனின் பேச்சைக் குறிப்பிட்டுத் தாங்கள் அதை நேரில் கேட்டதைப் பதிவு செய்தனர்.

திருட்டுத்தனமாக நிகழ்ச்சியைத் தன் கைபேசியில் பதிவு செய்த ஒருவர் அந்த வீடியோப் பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட, இளங்குமரனின் பேச்சு பற்றிய சர்ச்சை காட்டுத்தீ போல் பரவியது. இளங்குமரன் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தும், அதை யாரும் பொருட்படுத்தவில்லை.

அடுத்த ஒரு வாரத்துக்கு, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் எல்லாவற்றிலும் இளங்குமரனின் பேச்சு பற்றிய சர்ச்சைதான். அவன் வருத்தம் தெரிவித்து விட்டதால் பிரச்னையை இதோடு விட்டு விட வேண்டும் என்று ஒரு சிலர் கூறியதை யாரும் ஏற்கவில்லை.

அவனைக் கைது செய்ய வேண்டும் என்று சிலர் கூறினர். அவன் மீது நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  பெண் உரிமை இயக்கங்கள் அறிக்கைகள் மூலமும், ஆர்ப்பாட்டங்கள் மூலமும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தீபாவளியன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட பட்டிமன்றத்தில் இளங்குமரன் பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தான். சில சமயம் மேடையில் அவன் அமர்ந்திருந்ததைக் காட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை என்பதைத் தவிர, இளங்குமரன் நிகழ்ச்சியில் பங்கேற்பவனாக எந்த ஒரு குறிப்பும் வராத அளவுக்கு நிகழ்ச்சி கவனமாக எடிட் செய்யப்பட்டிருந்தது.

பத்து நாட்களுக்குப் பிறகு சர்ச்சை ஓய்ந்தபோது, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இளங்குமரன் பங்கேற்க வேண்டிய எல்லா நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன.

குறள் 127
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

பொருள்:  
ஒருவர் வேறு எதைக்காக்காவிட்டாலும் தன் நாவைக் காக்க வேண்டும். அவ்வாறு காக்கா விட்டால், கடும் சொற்களால் அவமானப்படுத்தப்பட்டுத் துன்புறுவார்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


128.ஒரு சொல்

"வேற ஏதாவது வேணுமா?" என்றாள் சுமதி.

"வேண்டாம்மா" என்றாள் பார்வதி.

"கொஞ்சம் காலைப் பிடிச்சு விடட்டுமா?"

"அரை மணி நேரம் முன்னாலதானே புடிச்சு விட்ட? எத்தனை நேரம்தான் பிடிச்சு விடுவே பாவம்! எனக்கு ஒரு பொண்ணு இருந்தா கூட இப்படிச் செய்ய மாட்டா!" என்று பார்வதி சொல்லும்போதே அவள் கண்களில் நீர் துளிர்த்தது.

"உடம்பு சரியில்லேன்னா யாராவது உதவி செஞ்சுதானே ஆகணும்? எங்கம்மாவா இருந்தா நான் செய்ய மாட்டேனா?" என்றாள் சுமதி.

பார்வதிக்குத் தன் மருமகளைக் கையெடுத்துக் கும்பிடலாம் போல் இருந்தது. நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவள், பல வருடங்களாகத் தொல்லை கொடுத்து வந்த கால்வலி ஆறு மாதம் முன்பு தீவிரமடைந்ததால் நடக்க முடியாமல் போய்ப் படுத்த படுக்கையாகி விட்டாள்.

மருமகள் சுமதிதான் மாமியாரை எழுந்து உட்கார வைத்துச் சாப்பாடு கொடுப்பது முதல், பலமுறை அவளைக் கையைப் பிடித்து மெல்லத் தாங்கியபடி குளியலறைக்கு அழைத்துச் செல்வது வரை எல்லாற்றையும் முகம் சுளிக்காமல் செய்து வந்தாள். 

பார்வதி தடுத்தும் கேட்காமல், கொஞ்சம் இதமாக இருக்கட்டுமே என்று அவ்வப்போது அவள் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டும் இருந்தாள்.

பார்வதியின் மகன் பூபதி கூட அலுவலகத்திலிருந்து வந்ததும் ஒருமுறை அவளை வந்து பார்த்து விட்டு "என்னம்மா, எப்படி இருக்கு இப்ப?" என்று விசாரித்து விட்டுப் போவதோடு சரி. ஆனால் சுமதி அடிக்கொரு முறை அறைக்குள் வந்து பார்வதியைப் பார்த்து விட்டு, அவளுக்கு வேண்டியவற்றைச் செய்து விட்டுப் போவாள்.

சுமதி வரவேற்பறையில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, அவள் தோழி சகுந்தலா வந்தாள். இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

"உன் மாமியார் எப்படி இருக்காங்க இப்ப?" என்றாள் சகுந்தலா.

"அப்படியேதான் இருக்காங்க. இம்ப்ரூவ்மென்ட் எதுவும் இல்லை."

"நீதான் அவங்களை கவனிச்சுக்கற போலருக்கு?"

"ஆமாம்."

"இப்ப என்ன பண்றாங்க? நான் போய்ப் பாக்கலாமா?" என்றாள் சகுந்தலா.

"தூங்கிக்கிட்டிருக்காங்க. பாக்கறதுன்னா பாரு."

"வேண்டாம். இன்னொரு தடவை வந்து அவங்க முழிச்சுக்கிட்டிருக்கறப்ப, அவங்களைப் பாத்துப் பேசிட்டுப் போறேன். பாவம்! ரொம்பக் கஷ்டப்படறாங்க போலருக்கு!"

"ஆமாம். என்ன பாவம் பண்ணினங்களோ தெரியல, இப்படித் தானும் கஷ்டப்பட்டுக்கிட்டு, மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறாங்க!" என்றாள் சுமதி.

சகுந்தலா விடைபெற்றுப் போன பிறகு சுமதி மாமியாரின் அறைக்குச் சென்றாள். 

கண்ணை மூடிப் படுத்திருந்த மாமியாரின் கால்களை சுமதி பிடித்து விட முயன்றபோது, பார்வதி சட்டென்று காலை இழுத்துக் கொண்டாள். பொதுவாக அவளால் கால்களை அவ்வளவு வேகமாக நகர்த்த முடியாது. அதிகம் வலித்திருக்கும்!

கண்ணை விழித்து சுமதியைப் பார்த்து "வேண்டாம்மா! ஏற்கெனவே நான் நிறைய பாவம் பண்ணியிருக்கேன். நீ வேற உன் கை வலிக்க என் காலைப் புடிச்சு விட்டு, அந்தப் பாவத்தை வேற நான் சம்பாதிச்சுக்க வேண்டாம்" என்றாள்.

தான் சகுந்தலாவிடம் பேசியது மாமியாரின் காதில் விழுந்திருக்குமோ என்ற சிந்தனையுடன் மாமியாரின் முகத்தைப் பார்த்தாள் சுமதி.
  
குறள் 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் 
நன்றாகா தாகி விடும்.

பொருள்:  
ஒருவர் சொல்லும் ஒரு கடிய சொல்லின் விளைவாக அவர் செய்யும் நல்ல  விஷயங்கள் பயனற்றுப் போய் விடும்.

129."நினைவிருக்கிறதா?"
முப்பது வருடங்கள் ஒடி விட்டன. சிறுவனாக அந்த ஊரில் வாழ்ந்த நினைவு கூட தண்டபாணிக்கு எப்போதோ கண்ட கனவு போல் மசமசவென்றுதான் இருந்தது.

அவன் பிறப்பதற்கு இரண்டு மாதம் முன்பே அவன் அப்பா போய் விட்டாராம். அப்பாவின் முகம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஒரு புகைப்படம் கூட இல்லை. 

1960ஆம் ஆண்டில் அவர்கள் இருந்த கிராமத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில்தான் இருந்திருக்கும்! திருமணத்தின்போது புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது நகர்ப்புறங்களில் வசித்த வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரித்தான வழக்கமாக இருந்தது.

"ஒம் மூஞ்சியைக் கண்ணாடில பாத்துக்கடா! அதுதான் ஒன் அப்பன் மூஞ்சி!" என்பாள் அவன் பாட்டி- அவன் அப்பாவின் அம்மா.

ஐந்து வயதுவரை அந்த ஊரில்தான் இருந்தான். கூட்டுக் குடும்பம் என்பதால் அவன் அப்பாவின் இழப்பு அவன் வளர்ப்பைப் பெரிதாக பாதிக்கவில்லை.

அவனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது, தீபாவளியன்று அவன் கம்பி மத்தாப்பு கொளுத்திக்கொண்டிருந்தபோது அவன் சட்டையில் தீப்பற்றிக் கொண்டது. அதை ஓரிரு நிமிடங்களுக்கு யாரும் கவனிக்கவில்லை. யாரோ கவனித்து அவனைத் தரையில் போட்டுப் புரட்டி நெருப்பை அணைப்பதற்குள் அவன் விலாப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு அவன் தன் அம்மாவுடன் சென்னையில் இருந்த தன் மாமாவின் வீட்டுக்குப் போய் விட்டான். படித்து, வேலைக்குப் போய், திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் பெற்று காலப்போக்கில் வாழ்க்கையில் நிலைபெற்றும் விட்டான்.

முப்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கு வர வேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்தது. ஊரில் இருந்த கூட்டுக் குடும்பத்துக்குச் சொந்தமான சொத்துக்களை விற்று விடுவதென்று முடிவு செய்து விலை பேசியும் முடித்து விட்டார்கள். பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அவனும் வந்து கையெழுத்துப் போட வேண்டும் என்பதால் அவன் ஊருக்கு வந்தான்.

தன் உறவினர் வீட்டில் தங்கியபடி ஊரை ஒரு வலம் வந்தபோது எந்த இடமும் பார்த்துப் பழகிய இடம் போல் இல்லை. இத்தனைக்கும் ஊர் ஒன்றும் பெரிதாக மாறி விடவில்லை என்று சொன்னார்கள். அவன் வாழ்ந்த வீட்டுக்குக் கூடப்  போய் வந்தான். அங்கே படுத்துப் புரண்டது, ஒடி விளையாடியது எதுவுமே நினைவில்லை.

அந்த வீட்டு வாசலில் நின்று கம்பி மத்தாப்பைக் கையில் பிடித்தபடி நின்றபோது யாரோ நெருப்பு நெருப்பு என்று கத்தியதும், இரண்டு மூன்று பேர் ஒடி வந்து அவனை மண்ணில் தள்ளிப் புரட்டியதும், தன்னை ஏதோ செய்கிறார்களே என்று அவன் பயந்து நடுங்கியதும் மட்டும்தான் நினைவில் தங்கியிருப்பதாகத் தோன்றியது.

வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி இந்த ஊரில்தான் ஆறு வயது வரை வாழ்ந்தோமா என்று வியப்புடன் அவன் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது அரவம் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.

நெடுநெடுவென்று உயரமாக ஒரு முதியவர் நின்று கொண்டிருந்தார். "என்ன தண்டபாணி! என்னைத் தெரியுதா?" என்றார்.

தண்டபாணி அவரை நிமிர்ந்து பார்த்தான். முப்பது வருடத்துக்கு முன் பார்த்திருக்கக் கூடிய முகம் இப்போது எப்படி நினைவிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு பொறி தட்டியது.

"நீங்க...குலசேகரன் மாமாதானே!"

"அட! ஆச்சரியமா இருக்கே? டக்குனு சொல்லிட்டே! எப்படிடா?" என்றார் குலசேகரன்.

தண்டபாணியின் மனத்திரையில் ஒரு காட்சி வந்தது. திரைப்படக் காட்சி போல் மிகத் தெளிவாக இருந்தது அந்தக் காட்சி. தீக்காயம் பட்டு மருத்துவமனைக்குப் போய் சிகிச்சை பெற்று வந்த பின் அவன் வீட்டில் படுத்துக் கொண்டிருந்தபோது அவனைப் பலர் வந்து பார்த்து விட்டுப் போயினர்.

அவர்களில் ஒருவரை மட்டும் அவனுக்கு நினைவிருந்தது. நெடுநெடுவென்று உயரமாக இருந்த குலசேகரன்! அந்த ஊரில் துடுக்குப் பேச்சுக்குப் பெயர் போனவர். "என்னடா பயலே! நெருப்புக் காயம் பட்டும் பொழச்சுக்கிட்டியா? அம்மா வயத்துல இருக்கும்போதே நீ ஒங்கப்பனை முழுங்கிட்டேன்னாலும் அவன்தான் தெய்வமா இருந்து ஒன்னைக் காப்பாத்தி இருக்கான்" என்று அவர் சொன்னபோது தீக்காயத்தின் வலியை விட மோசமான வலியை அவன் தன் மனதுக்குள் உணர்ந்தான்.

அந்த வலி இப்போது மீண்டும் பீறிட்டு எழுந்தது. தன்னை அறியாமல் நெஞ்சில் கைவைத்துக் கொண்டான் தண்டபாணி.

"உங்களை எப்படி மறக்க முடியும்?" என்றான் தண்டபாணி சிரித்தபடி. அவன் சிரிப்பின் பின்னிருந்த கசப்பைக் குலசேகரன் உணர்ந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை.
   
குறள் 129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
நாவினாற் சுட்ட வடு.

பொருள்:  
நெருப்பினால் ஏற்பட்ட காயத்தின் வடு வெளியில் இருந்தாலும் புண் உள்ளுக்குள் ஆறி விடும். ஆனால் ஒருவர்  நாவிலிருந்து வெளிப்பட்ட கடுஞ்சொற்களால் விளைந்த மனப்புண் ஆறவே ஆறாது.,

130.கற்றதும் பெற்றதும் 
"ஏம்ப்பா பி.ஈ. படிச்சிருக்கேங்கறே, அடிப்படை அறிவு கூட இல்லியே! உனக்கெல்லாம் இந்தக் கம்பெனியில வேலை கொடுத்திருக்காங்க பாரு, அவங்களைச் சொல்லணும்!"

ஃபோர்மேன் துரைசாமியின் பேச்சு கோபியைச் சுள்ளென்று தாக்கியது. ஆனால் பொங்கி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, 'ஒங்கிட்டல்லாம் நான் பேச்சுக் கேக்க வேண்டியிருக்கு பாரு!' என்று மனதுக்குள் நொந்து கொண்டான்.

துரைசாமி பொறியியலில் டிப்ளமா படித்தவர். பல ஆண்டுகள் அனுபவத்துக்குப் பிறகு ஃபோர்மேன் ஆகியிருந்தார். புதிதாக வேலைக்குச் சேர்ந்து பயிற்சி நிலையில் இருக்கும் பொறியியல் பட்டதாரியான கோபியை அவ்வப்போது மட்டம் தட்டித் தன் அதிகாரத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தார்.

புதிதாக வேலைக்குச் சேர்ந்த கோபி போன்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு அந்தத் தொழிற்சாலையின் செயல்முறைகளையும், தொழில் நுட்பத்தையும் புரிந்து கொள்ளச் சிறிது காலம் பிடிக்கும் என்பது துரைசாமிக்குத் தெரியும். 

ஆயினும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு 'பட்டம் வாங்கிய உன்னை விட டிப்ளமா படித்த நான் அதிகம் அறிந்தவன்' என்று காட்டிக் கொள்வது போல் நடந்து கொண்டார்.

இதுபோல் பலமுறை நடந்து விட்டது. ஆயினும் கோபி அவருடைய விமரிசனங்களை மௌனமாகப் பொறுத்துக் கொண்டிருந்தான்.

துரைசாமி அகன்றதும் அருகில் இருந்த மூர்த்தி, "அவரு அப்படித்தான் சார் பேசுவாரு. நீங்க வருத்தப் படாதீங்க!" என்றான்.

கோபி மூர்த்தியை நன்றியுடன் பார்த்தான். மூர்த்தி ஒரு மெஷின் ஆபரேட்டர். பள்ளிப்படிப்புக்குப் பிறகு அந்தத் தொழிற்சாலையில் ஒரு உதவியாளனாகச் சேர்ந்து சிறிது சிறிதாக வேலை கற்றுக்கொண்டு மெஷின் ஆபரேட்டர் என்ற நிலைக்கு வந்திருப்பவன். அவனுக்கு இயல்பாக இருந்த தொழில் நுட்ப அறிவினாலும், ஆர்வத்தினாலும், அனுபவத்தினாலும் இயந்திரங்களின் செயல்முறை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தான். 

அந்தத் தொழிற்சாலையில் எந்த ஒரு இயந்திரக் கோளாறு ஏற்பட்டாலும் மூர்த்தியைத்தான் கூப்பிடுவார்கள்.பெரும்பாலான பிரச்னைகளை அவனே சரி செய்து விடுவான்.

மூர்த்தியைப் பார்த்ததும் கோபிக்கு ஒரு எண்ணம் தோன்றியது. "மூர்த்தி! மெஷின்களைப் பத்தி எனக்கு சில சந்தேகங்கள் எல்லாம் இருக்கு. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது சில விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுங்க" என்றான்.

"என்ன சார் இது? நீங்க எஞ்சினீரிங் காலேஜில படிச்சுட்டு வந்திருக்கீங்க. நான் படிக்காதவன். நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது என்ன இருக்கப் போகுது?" என்றான் மூர்த்தி சங்கடத்துடன்.

"இல்லை மூர்த்தி. உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கு. மெஷின்ல வேலை செஞ்சு மெஷின்களைப் பத்தி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. உங்க கிட்ட நான் நிறையக் கத்துக்கலாம்" என்றான் கோபி.

"அதுக்கென்ன சார்? உங்களுக்கு என்ன தெரியணுமோ கேளுங்க. எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்லிட்டுப் போறேன்" என்றான் மூர்த்தி.

அதற்குப் பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கோபி மூர்த்தியிடம் பேசிப் பல நுணுக்கமான விஷயங்களைத் தெரிந்து கொண்டான். இயந்திரங்களின் செயல்பாடுகள் பற்றி மூர்த்தி சொன்ன பல விஷயங்களைக் கேட்ட பிறகு கோபிக்குக் கல்லூரியில் தான் கற்றது கால்வாசிதான் இருக்கும் என்று தோன்றியது.

ஆயினும் மூர்த்தி சொன்ன பல விஷயங்களைத் தன் கல்வி அறிவுடன் பொருத்திப் பார்த்துப் பல விஷயங்களை ஆழமாக அறிந்து கொண்டான் கோபி. சில நாட்கள் கழித்து மூர்த்திக்கே புதிதாகச் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு அவனிடம் முன்னேற்றம் ஏற்பட்டது.

துரைசாமி அவ்வப்போது அவனை இளக்காரமாகப் பேசிக் கொண்டிருந்தார். கோபி அவர் பேச்சைப் பொருட்படுத்துவதையே விட்டு விட்டான். மூர்த்தியோடு அவன் அதிகம் பேசுவதைப்  பற்றியும் துரைசாமி குறை கூறினார். "ஒர்க்கர்ஸ் கிட்டல்லாம் நெருக்கமாப் பழகாதே! அப்புறம் உன்னை மதிக்க மாட்டாங்க" என்று எச்சரித்தார். கோபி அதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

ல மாதங்கள் கழித்து, ஒருநாள் கோபி மூர்த்தியிடம் "மூர்த்தி எனக்கு ஒரு ஐடியா. அது சரியா வருமான்னு சொல்லுங்களேன்" என்றான்.

அவனுடைய யோசனை பற்றி அவனும் மூர்த்தியும் பல நாட்கள் விரிவாகப் பேசி விவாதித்தார்கள்.

கோபி புரொடக்‌ஷன்  மானேஜரைச் சந்தித்து "சார்! புரொடக்‌ஷன்  லைன்ல ஒரு சின்ன மாற்றம் செஞ்சா உற்பத்தியை அதிகரிக்க முடியும்னு  நினைக்கறேன். நீங்க ஒரு அரைமணி நேரம் கொடுத்தா அதை விளக்கமா சொல்றேன்" என்றான்.

"சொல்லுங்க" என்றார் புரொடக்‌ஷன் மானேஜர்.

தனது யோசனையை வரைபடங்கள், கணக்குகள் ஆகியவற்றின் உதவியுடன் விளக்கினான் கோபி.

"நீங்க சொல்றது ஒர்க் அவுட் ஆகுமான்னு பார்க்கணும். குவாலிட்டி இம்ப்ரூவ்மென்ட் கமிட்டில இந்த புரோபோசலை ஸ்டடி பண்ணச் சொல்றேன்" என்றார் புரொடக்‌ஷன் மானேஜர்.

கமிட்டியில் விரிவாக விவாதிக்கப்பட்டு கோபியின் யோசனை ஏற்கப்பட்டது.

புரொடக்‌ஷன் மானேஜர் கோபியைத் தன் அறைக்கு அழைத்தார். "கங்கிராட்ஸ் கோபி. ஒங்க புரொபோசலை கமிட்டில கிளியர் பண்ணிட்டாங்க. எம் டிகிட்ட பேசிட்டேன். அவரு இதை இம்ப்ளிமென்ட் பண்ணலாம்னு சொல்லிட்டாரு. கம்பெனியில சேர்ந்து பயிற்சிக் காலம் முடியற ஒரு வருஷத்துக்குள்ள இது மாதிரி ஒரு இம்ப்ரூவ்மெண்ட்டை இதுவரை யாரும் புரொபோஸ் பண்ணினதில்ல. ஃபர்ஸ்ட் இயர் அசீவர் என்கிற அவார்டை உங்களுக்குக் கொடுக்கப் போறதா எம் டி சொல்லியிருக்காரு. இன்னும் ஒண்ணு ரெண்டு நாள்ல அவரு ஒங்களைக் கூப்பிட்டுப் பேசுவாரு."

"தாங்க்ஸ் சார்!" என்றான் கோபி. "ஒரு வேண்டுகோள். நீங்க எந்த ரிவார்டு கொடுக்கறதா இருந்தாலும் மூர்த்திங்கற மெஷின் ஆப்ரேட்டருக்கும் சேர்த்துத்தான் கொடுக்கணும். டெக்னிகலா பல விஷயங்களை நான் புரிஞ்சுக்க உதவி பண்ணினவரு அவருதான். அதோட இந்தப் புது  சிஸ்டத்தை டெவலப் பண்ணினதிலேயும் அவருக்குப் பங்கு இருக்கு. அவரோட யோசனைகளையெல்லாம் கணக்கில எடுத்துக்கிட்டுத்தான் நான் இந்த புரொபோசலைத் தயார் பண்ணினேன்" என்றான் கோபி.
     
குறள் 130
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி 
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

பொருள்:  
கோபத்தைக் கட்டுப்படுத்தி, கற்க வேண்டியவற்றைக் கற்று அடக்கமாகச் செயல்படுபவனை, அறம் தேடிச் சென்று சந்திக்கும்.
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்


No comments:

Post a Comment