About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 34 - நிலையாமை

திருக்குறள் 
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 34
நிலையாமை
 

331. நண்பனின் வீடு

"அப்பா! ரமேஷ் அவன் கம்பெனி வேலையா ஆறு மாசம் அமெரிக்கா போயிட்டான். அவன் அப்பா அம்மா டெல்லியில இருக்காங்க. அவங்க இங்க வர மாட்டாங்க. அவன் திரும்பி வர வரை நான்தான் அவன் வீட்டைப் பாத்துக்கணும்னு சொல்லி சாவியை எங்கிட்ட கொடுத்திருக்கான்" என்றான் மூர்த்தி.

"சரி, வீட்டைப் பூட்டிட்டு சாவியை பத்திரமா வச்சுக்க. மாசம் ஒரு தடவை நம்ம வீட்டு வேலைக்காரியை அழைச்சுக்கிட்டுப் போய் வீட்டை சுத்தம் பண்ணச் சொல்லு" என்றார் சபேசன்.

"அப்பா! என் டியூஷன் வகுப்பையெல்லாம் அவன் வீட்டில வச்சுக்கலாம்னு பாக்கறேன். நம்ம வீட்டில இடம் போறல'' என்றான் மூர்த்தி.

'அதெல்லாம் வேண்டாண்டா, நமக்கு இருக்கற இடத்தில அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு நடத்தறதுதான் நல்லது" என்றார் சபேசன்.

"இல்லப்பா! உனக்கு வேணும்னா என் வீட்டைப் பயன்படுத்திக்கன்னு அவன் எங்கிட்ட சொல்லி இருக்கான்."

"ஒரு பேச்சுக்கு சொல்லி இருப்பான். நீ வகுப்பையெல்லாம் அங்க நடத்த ஆரம்பிச்சுட்டா, அப்புறம் அவன் திரும்பி வந்தப்பறம் என்ன செய்வ?"

"அப்ப பாத்துக்கலாம். ஆறு மாசம்கறது ஒரு வருஷம் ரெண்டு வருஷம்னு கூட நீண்டுகிட்டே போகும்" என்றான் மூர்த்தி.

ண்பன் வீட்டில் தன் டியூஷன் வகுப்புகளை நடத்த ஆரம்பித்த மூர்த்தி அங்கே அதிக இடம் இருந்ததால் அதிக மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தான்.

"உன் நண்பன் கிட்ட சொல்லிட்டு வாடகை ஏதாவது கொடுத்துடு" என்றார் சபேசன்.

"அதெல்லாம் வேண்டாம்னுடுவான்.'' 

''நீ டியூஷன் வகுப்பு நடத்தறேன்னு அவன் கிட்ட சொல்லி இருக்கியா இல்லையா?''

''சொன்னேன். அவன் ரெண்டு மூணு பேர்னு நினைச்சுக்கிட்டிருப்பான். 20 பேர் வராங்கன்னு அவனுக்குத் தெரியாது. எத்தனை பேர்னு அவன் கேக்கல, நானும் சொல்லல.''

மூர்த்தி எதிர்பார்த்தபடியே, ரமேஷின் அமெரிக்கப் பணிக்காலம் ஆறு மாதத்துக்கு மேலும் நீடிக்கப்படலாம் என்று தெரிந்தது..

''புதுசா ஒரு ப்ராஜக்ட் கொடுத்திருக்காங்களாம். அதனால இப்போதைக்குத் திரும்பி வர மாட்டானாம். ரெண்டு வருஷம் கூட ஆகலாம்'' என்றான் மூர்த்தி.

''வாடகைன்னு ஒரு சிறிய தொகையாவது கொடுக்கறேன்னு சொல்லிப் பாரு. அதுதான் உனக்கு நல்லது'' என்றார் சபேசன்.

''அதெல்லாம் வேண்டாம்ப்பா. அப்படி நான் சொன்னா நான் டியூஷன்ல நிறைய சம்பாதிக்கறதா நினைச்சுப்பான்'' என்றான் மூர்த்தி.

''அப்பா! ரமேஷ் ஃபோன் பண்ணினான். அடுத்த வாரம் வரானாம்!' என்றான் மூர்த்தி.

''இப்போதைக்கு வர மாட்டான்னு சொன்ன?''

'விசா எக்ஸ்டெண்ட் ஆகலியாம். அதனால திரும்பி வரானாம். அவன் வரத்துக்குள்ள டியூஷனை வேற எங்கேயாவது மாத்தணும்.''

''என்ன செய்யப் போற?'' என்றார் சபேசன்.

''இப்ப டியூஷன்ல 20 பேரு இருக்காங்க. அவங்களை நம்ம வீட்டுல வச்சு டியூஷன் நடத்த நம்ம வீட்டில இடம் போதாது. வெளியில வாடகைக்கு இடம் எடுத்து நடத்தலாம்னா இந்த வருமானத்தில அது கட்டுப்படியாகாது. நான் இதை பார்ட் டைமா செய்யறதால அதிகமா மாணவர்களை சேர்த்து நடத்தவும் முடியாது. அப்படியே செய்ய நினைச்சாலும் நிறைய மாணவர்களை சேர்க்க டைம் ஆகும். அதுவரையிலேயும் நம்ம கையிலேந்து காசு போட்டுத்தான் நடத்தணும். இப்ப இருக்கற 20 பேருக்கும் அவங்க பரீட்சை முடியறவரை வகுப்பு நடத்தியாகணும். என்ன செய்யறதுன்னே தெரியல'' என்றான் மூர்த்தி.

'உன் நண்பன் வீட்டை நிரந்தரமாப் பயன்படுத்தலாம்னு நினைச்சது உன்னோட முட்டாள்தனம். இதெல்லாம் வேண்டாம்னு நான் அப்பவே சொன்னேன்' என்று சபேசன் மனதில் நினைத்துக் கொண்டார். மனதில் தோன்றியதை வெளியே சொல்லி ஏற்கெனவே நொந்திருக்கும் மகனின் வலியை அவர் அதிகப்படுத்த விரும்பவில்லை.  

குறள் 331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

பொருள்:

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

332. வந்ததும் போனதும் 

சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டான் சுப்பு.

கூலி வேலைக்குச் சென்று மகனைக் காப்பாற்றி வந்த அவன் தாயும் அவனுக்குப் பத்து வயதாகும்போது திடீரென்று இறந்து விட்டாள்.

அவன் தாயின் மரணத்துக்கு வந்து போன உறவினர்கள் யாரும் சுப்புவை வளர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. பொருளாதார உதவி செய்யவும் முன் வரவில்லை. 

தனித்து விடப்பட்ட சுப்புவுக்கு அவன் பெற்றோருக்குச் சொந்தமான சிறிய வீடு மட்டும் இருந்தது.

ஊரில் சிலர் அவனுக்கு அவ்வப்போது ஒரு வேளை சாப்பிட ஏதாவது கொடுத்து வந்தனர். சிலர் அதற்கு விலையாக அவனிடம் சிறு வேலைகளையும் வாங்கிக் கொண்டனர். 

விரைவிலேயே உழைத்தால்தான் தனக்கு உணவு கிடைக்கும் என்று புரிந்து கொண்ட சுப்பு தன்னால் முடிந்த சிறு வேலைகளைச் செய்து சிறிதளவு சம்பாதித்துத் தன் வாழ்க்கையை வாழப் பழகிக் கொண்டான். 

அந்த நிலையில்தான் எதிர்பாராத அந்தச் செய்தி வந்தது.

அவன் அம்மாவைத் தேடிக்கொண்டு அந்த ஊருக்கு வந்த ஒரு வக்கீல் சமீபத்தில் காலமான அவன் அம்மாவின் சித்தப்பா ஒருவர் தன் சொத்தை சுப்புவின் அம்மாவுக்கு எழுதி வைத்திருப்பதாகச் சொன்னார். அந்த சித்தப்பா நீண்ட நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவன் அம்மா இறந்தது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை போலும்!  

சுப்புவுக்கு எதுவும் புரியவில்லை. அந்த ஊரிலிருந்த விஷயம் தெரிந்த ஓரிருவர் சுப்புவின் உதவிக்கு வந்தனர். 

வக்கீல் அவனிடம் சில கையெழுத்துக்கள் வாங்கிக் கொண்டார். அவனுக்கு உதவ வந்தவர்களின் ஒப்புதலைப் பெற்று அவன் கையெழுத்துக்களைப் போட்டான். 

சொத்தின் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறிய வக்கீல் நீதிமன்ற ஒப்புதல் பெற்று சொத்துக்கள் சுப்புவின் மேல் மாற்றப்பட சில வாரங்கள் ஆகும் என்றம் தான் தகவல் தெரிவித்ததும் சுப்பு நீதிமன்றத்துக்கு நேரில் வரவேண்டி இருக்கும் என்றும் சொல்லி விட்டுப் போனார்.

வக்கீல் வந்து விட்டுப் போன செய்தி பரவியதும் ஊரில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. 

அவனை யாரும் வேலை செய்ய அனுமதிக்கவில்லை. ''நீ எதுக்குடா வேலை செய்யணும்? இனிமே நீயே வேலைக்கு ஆள் வச்சுக்கலாமே!'' என்றார் கூலி குறைவாகக் கொடுத்தால் போதும் என்பதற்காகவே அவனுக்கு அதிகம் வேலை கொடுத்துக் கொண்டிருந்த அய்யாவு.

அவனுக்கு சாப்பாடு போடப் பலர் முன் வந்தனர். பல சமயம், "இல்ல நான் சாப்பிட்டுட்டேன், மூணாவது தெருவிலேந்து கொடுத்து விட்டாங்க'' என்பது போல் அவன் பதில் சொல்ல வேண்டி இருந்தது. 

சுப்புவுக்குப் புதிதாக சில நண்பர்களும் கிடைத்தனர். அவன் வயதை ஒத்தவர்கள், அவனை விடப் பெரியவர்கள் என்று பலரும் அவன் வீட்டுக்கு வந்து அவனிடம் அன்பாகப் பேசினர். 

''உனக்கு நான் இருக்கேன். உனக்கு எந்த உதவி வேணும்னாலும் தயங்காம எங்கிட்ட கேளு!'' என்பது அவர்களில் பலர் சொன்னது.

இத்தனை நாட்களாக ஏன் யாரும் இப்படிச் சொல்லவில்லை என்று சுப்புவுக்குத் தோன்றினாலும் அதைப் பற்றி அவன் அதிகம் யோசிக்கவில்லை, அப்படி யோசிக்கும் திறனும் அவனிடம் இல்லை.

தனக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை இத்தனை பேர் வந்து பார்ப்பதும், தன்னை மதித்துப் பேசுவதும் சுப்புவுக்கு வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது.

எல்லாவற்றுக்கும் மேல், தான் இனி எடுபிடி வேலை செய்ய வேண்டியதில்லை, தான் கௌரவமாக வாழலாம் என்ற எண்ணமே அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. 

ஒரு மாதத்துக்குப் பிறகும் வக்கீலிடமிருந்து தகவல் ஏதும் வரவில்லை. சுப்புவிடம் புதிதாக அக்கறை காட்டியவர்களில் ஒருவரான துரைசாமி என்பவர், தான் வக்கீலுக்கு ஃபோன் செய்து பார்ப்பதாகச் சொன்னார். 

அடுத்த நாள் சுப்பு ஒரு மாறுதலை உணர்ந்தான். அன்று காலையிலிருந்து அவன் வீட்டுக்கு யாரும் வரவில்லை.

வீட்டுக்கு வெளியே வந்து நின்றான். தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த அய்யாவு அவனைப் பார்த்து, ''டேய் சுப்பு! தோட்டத்தில செடியெல்லாம் வெட்ட வேண்டி இருக்கு. நாளைக்கு வந்து செஞ்சுடு!'' என்றார்.

சுப்பு எதுவும் புரியாமல் அவரைப் பார்க்க, ''ஓ! உனக்குத் தெரியாதா? துரைசாமி ஊர் பூரா சொல்லிட்டான், உங்கிட்ட சொல்லலியா? உன் அம்மாவோட சொந்தக்காரன் யாரோ கோர்ட்ல கேஸ் போட்டு ஸ்டே வாங்கிட்டானாம். கேஸ் முடிய நிறைய வருஷம் ஆகுமாம். சொத்து உனக்குக் கிடைக்கறது கஷ்டம்னு வக்கீல் சொன்னாராம். என்ன, நாளைக்கு வந்துடறியா?'' என்று  சொல்லி விட்டு அவன் பதிலை எதிர்பாரமல் நடந்தார் அய்யாவு.

குறள் 332
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

பொருள்:
பெரிய செல்வம் வந்து சேர்வது கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது. அது நீங்கிப் போவது கூத்து முடிந்ததும் கூட்டம் கலைந்து செல்வதைப் போன்றது.

333. முதல் செலவு!

ஒரு தனியார் நிறுவனத்தில் சுமாரான சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டு அதிக சிரமம் இல்லாமல் வாழ்க்கையை ஒட்டி வந்த சிவராமனின் வாழ்க்கையில் கொரோனாவினால் வந்த ஊரடங்கு ஒரு அடியாக விழுந்தது. 

ஊரடங்கால் மூடப்பட்ட நிலையிலும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் வசதி அவன் வேலை பார்த்த நிறுவனத்துக்கு இல்லை. வேலை பார்த்த நடப்பு மாதத்துக்கான சம்பளம் கூட தாமதமாகதான் வரும் என்று சொல்லி விட்டார்கள். 

அவன் சம்பளம் மாதாந்தரச் செலவுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருந்ததால் அவனிடம் சேமிப்பு என்று பெரிதாக எதுவும் இல்லை. அவன் வசிக்கும் வீடு அவன் அப்பா வழி வந்த சொத்து என்பதால், வீட்டு வாடகைப் பிரச்னை மட்டும் அவனுக்கு இல்லை. 

சிறிது காலத்துக்கு ஓரளவுக்குச் சமாளித்து விடலாம் என்றாலும் மாதச் சம்பளம் ஓரிரு மாதங்களுக்காவது வராது என்ற சூழ்நிலை சிவராமனுக்குக் கவலையை ஏற்படுத்தியது. 

"உங்களுக்கு வர சம்பளமே கொஞ்சம்தான். அதில மாசம் ஐநூறு ரூபா ஒரு அநாதை ஆசிரமத்துக்கு கொடுத்துக்கிட்டிருக்கீங்க. அந்தப் பணத்தை ரெக்கரிங் டெபாசிட் பண்ணியிருந்தீங்கன்னா வட்டியோட சேந்து கிட்டத்தட்ட நாப்பதாயிரம் ரூபா கிடைச்சிருக்கும் இப்ப" என்றாள் அவன் மனைவி ஜானகி.

"இங்க பாரு, ஜானகி இதைப்பத்தி நாம எத்தனையோ தடவை பேசிட்டோம். சம்பாதிக்கறதில ஒரு சின்ன தொகையாவது மத்தவங்களுக்கு உதவி செய்யறதுக்காகக் கொடுக்கறது நம்ப சமுதாயக் கடமைன்னு நான் நினைக்கறேன். வாழ்க்கையில எதுவுமே நிலை இல்லை. நான் ரிடயர் ஆகிற வரையிலும் இந்த கம்பெனியில எனக்கு வேலை இருக்கும், சம்பளம் வந்துக்கிட்டிருக்கும்னுதான் நினைச்சுக்கிட்டிருந்தேன். திடீர்னு இப்படி ஒரு நிலைமை வரும்னு எதிர்பார்த்தோமா? என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்" என்றான் சிவராமன்.

சிவராமன் ஒரு மடிக்கணினியும் இன்டர்நெட் இணைப்பும் வைத்திருந்தான். அவன் மடிக்கணினி வாங்கியபோது "எதுக்கு இந்த தெண்டச் செலவு? மாசா மாசம் இன்டர்நெட்டுக்கு வேற பணம் கட்டணும்!" என்று ஜானகி எதிர்த்தபோது, "உனக்கு டிவி, கேபிள் கட்டணம் மாதிரி, எனக்கு இதுன்னு வச்சுக்கயேன்!" என்று சொல்லி அவள் எதிர்ப்பைச் சமாளித்தான் சிவராமன் . 

தினமும் இரவில் சில மணி நேரம் அவனுக்கு ஆர்வமான விஷயங்களை இன்டர்நெட்டில் பார்த்துக் கொண்டிருப்பதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்தான்.

வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் வீட்டிலிருந்த சமயம் இன்டர்நெட் அவனுக்குக் கை கொடுத்தது. ஒரு ஆன்லைன் கோச்சிங் நிறுவனத்தில் தினம் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. 

"ஓரளவுக்கு வருமானம் வரும். சமாளித்து விடலாம்" என்றான் சிவராமன் மனைவியிடம் உற்சாகமாக. 

"பணம் எப்ப வரும்?" என்றாள் ஜானகி.

"மாசா மாசம் முதல் வாரத்தில் என் பாங்க் அக்கவுண்ட்ல கிரெடிட் பண்ணிடுவாங்க."

"என்னவோ நிரந்தரமா வரும்கற மாதிரி பேசறீங்களே!"

"இப்போதைக்கு ஊரடங்கு முடிஞ்சு என் ஆஃபீஸ் திறக்கற வரையிலும் வந்தா போதுமே!" என்றான் சிவராமன்.

"பணம் கிரெடிட் ஆயிடுச்சு. ஏ டி எம்ல போய் எடுத்துக்கிட்டு வரேன்!" என்று கிளம்பினான் சிவராமன். . 

நீண்ட நாட்கள் கழித்து ஜானகியின் முகத்தில் சிரிப்பு தெரிந்தது.

சிவராமன் பணம் எடுத்து வந்து கொடுத்ததும் எண்ணிப் பார்த்த ஜானகி, "பத்தாயிரம் ரூபா வரும்னு சொன்னீங்களே! எட்டாயிரத்து ஐநூறு ரூபாதான் இருக்கு. பணம் அவ்வளவுதான் எடுத்தீங்களா?" என்றாள் ஜானகி.

"ஆயிரம் ரூபா வருமான வரி பிடிச்சுட்டாங்க. அநேகமா நான் வருமான வரி கட்டும்படி இருக்காது. ஆனாலும், அடுத்த வருஷம்  நான் வருமான வரி ரிடர்ன் தாக்கல் செஞ்சுதான் அந்தப் பணத்தைத் திரும்ப வாங்க முடியும்."

"சரி. மீதி ஐநூறு ரூபா?"

"பணம் என் அக்கவுண்ட்டுக்கு வந்ததுமே ஐநூறு ரூபாயை அந்த அநாதை ஆசிரமத்துக்கு டிரான்ஸ்ஃபர்  பண்ணிட்டேன்" என்றான் சிவராமன் வேறு பக்கம் திரும்பியபடி.

"ஏங்க, இந்த மாதிரி கஷ்டமான சமயத்தில எதிர்பாராம ஏதோ கொஞ்சம் பணம் வந்திருக்கு. அதிலேயும் கொஞ்சம் தானம் பண்ணணுமா?" என்றாள் ஜானகி சற்றுக் கோபத்துடனும், ஏமாற்றத்துடனும்.

"ஜானகி, நீயே சொன்னே, இது எதிர்பாராத வருமானம்னு. முதல்ல ஒரு நிரந்தரமான வேலையில இருக்கேன்னு நம்பிக்கிட்டிருக்கச்சே, இப்படி ரெண்டு மூணு மாசம் சம்பளம் வராம போறது ஒரு எதிர்பாராத விஷயம். இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைச்சு கொஞ்சம் பணம் சம்பாதிச்சதும் எதிர்பாராத விஷயம்தான். அதிலேயும் வருமான வரிக்கு ஆயிரம் ரூபா பிடிச்சுட்டாங்க. அதைத் திரும்ப வாங்க ஒரு வருஷத்துக்கு மேல ஆகும். எதையுமே நம்மால நிச்சயமா எடுத்துக்க முடியல. நமக்குப் பணம்  கிடைக்கறப்ப அதில ஒரு சிறிய தொகையையாவது மத்தவங்களுக்கு உதவறத்துக்காக செலவழிக்கணும்னு நினைக்கிறேன். அது தப்பா?" என்றான் சிவராமன்.  

குறள் 333
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

பொருள்:
செல்வம் நிலையில்லாத இயல்புடையது. செல்வம் கிடைக்கப் பெற்றால், அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

334. நாள் காட்டி

"அப்பா ஏன் தினமும் இதில ஒரு பேப்பரைக் கிழிக்கற?" என்றான் சிறுவன் ஜகன்.

"இது பேரு காலண்டர். இதில இருக்கறது தேதி. உனக்கு தேதின்னா தெரியுமே! பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுத்திருக்காங்க இல்ல?" என்றான் ராகவன். 

"ஆமாம்."

"நேத்திக்கு என்ன தேதி, கிழமை சொல்லு பாக்கலாம்."

"நேத்திக்கு தேதி 8. வியாழக்கிழமை" என்றான் ஜகன். 

"அப்ப இன்னிக்கு தேதி 9 ஆகியிருக்கும் இல்ல? இதில 8 இருந்தது. அதைக் கிழிச்சுட்டேன். இப்ப 9 வந்திருக்கு பாரு" என்று காட்டினான் ராகவன். 

"நாளையிலேந்து இதை நானே கிழிக்கிறேனே!" என்றான் ஜகன்.  

"சரி.காலையில எழுந்ததுமே கிழிச்சுடு."

சில மாதங்கள் கழித்து, "அப்பா! இதில பேப்பர் கொஞ்சம்தான் இருக்கு. எல்லாத்தையும் கிழிச்சு முடிச்சுட்டா, அப்புறம் கிழிக்கறதுக்குத் தேதியே இருக்காதே" என்றான் ஜகன்.   

"எல்லாத் தேதியும் கிழிச்சு முடிச்சுட்டா இந்த வருஷம் முடிஞ்சு போச்சுன்னு அர்த்தம். அடுத்த வருஷம் புது காலண்டர் வந்துடும்."

"எப்ப வரும்?"

"புது காலண்டர் கடையிலேந்து வாங்கிட்டு வந்துட்டேன். இந்த வருஷம் முடிஞ்சு இதில எல்லா தேதியையும் கிழிச்சு முடிச்சப்பறம் புது காலண்டர்ல தேதி கிழிக்கணும்."

"புது காலண்டர் எங்கே? காட்டு" என்று ஜெகன் கேட்க, பீரோவில் வைத்திருந்த புதிய காலண்டரை எடுத்துக் காட்டினான் ராகவன்.

ஆவலுடன் அதைக் கையில் எடுத்துப் பார்த்த ஜகன் தேதிகளின் மீது இருந்த வழவழப்பான பிளாஸ்டிக்கைக் கையால் தடவிப் பார்த்தான்.

"ஏம்ப்பா, இதில தேதிஎல்லாம் இவ்வளவு குண்டா இருக்கு? இந்த காலண்டர்ல மட்டும் இவ்வளவு ஒல்லியா இருக்கே!" 

"இது புது காலண்டர். அதில இன்னும் தேதி கிழிக்கவே ஆரம்பிக்கல. பழைய காலண்டர்ல நிறைய தேதி கிழிச்சுட்டோம் இல்ல?"

"ஆமாம். நான் தேதி கிழிக்க ஆரம்பிக்கறப்ப இது கூட கொஞ்சம் குண்டா இருந்தது. இப்பதான் ரொம்ப ஒல்லி ஆயியிடுச்சு" என்ற ஜகன், "அப்ப, புது காலண்டரும் கொஞ்சம் கொஞ்சமா ஒல்லியாயிடுமா?" என்றான் கவலையுடன்.

"ஆமாம். தினம் கொஞ்சம் கொஞ்சமா ஒல்லி ஆகிக்கிட்டே இருக்கும், தினம் நீ கொஞ்சம் கொஞ்சமா பெரியவனா ஆகிக்கிட்டிருக்கியே, அது மாதிரி!"

ஜகன் சென்றதும் புதிய காலண்டரை பீரோவுக்குள் வைத்து பீரோவை மூடினான் ராகவன். 

கையை உயர்த்தி காலண்டரை மேல் தட்டில் வைத்ததாலோ என்னவோ கை  இலேசாக வலிப்பது போல் இருந்தது. 

'என்ன, இந்தச் சின்ன வேலை செஞ்சதுக்குக் கூட கை வலிக்குது? அவ்வளவு பலவீனமாகவா ஆயிட்டேன்? இருக்கும்! முப்பது வயசு ஆயிடுச்சே! இளமையோட துடிப்பெல்லாம் அடங்க ஆரம்பிச்சுடுச்சோ என்னவோ! ஒவ்வொரு நாளும் இந்த காலண்டர் இளைச்சுக்கிட்டிருக்கிற மாதிரி நானும் கொஞ்சம் கொஞ்சமா பலவீனமாயிட்டிருக்கேனோ என்னவோ!' என்று நினைத்துக் கொண்டான் ராகவன்.  

குறள் 334
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.

பொருள்:
வாழ்க்கையை உணர்ந்து பார்த்தால் ஒரு நாள் என்பது நம் ஆயுளை அறுத்துக் கொண்டே இருக்கும் வாள் என்பது புலப்படும்.

335. செய்ய நினைத்தது
 
கனகசபை பூங்காவில் உட்கார்ந்திருந்தபோது அந்த இளைஞனைப் பார்த்தார்.

அவர் அமர்ந்திருந்த அதே பெஞ்ச்சில் அமர்ந்து ஒரு பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான் அவன். 

"ஏம்ப்பா இங்கே உக்காந்து படிக்கற? இங்கே ஒரே டிஸ்டர்பன்ஸா இருக்கும். வீட்டில உக்காந்து படிக்கலாம் இல்ல?' என்றார் கனகசபை அவனிடம்.

"இல்லை சார். வீட்டில படிக்கறதை விட இங்கே படிக்கறதுதான் வசதியா இருக்கும்" என்றான் அவன்.

அவனுடன் பேசியதில் அவன் ஒரு குடிசைப் பகுதியில் வசிப்பதாகவும், அவன் வீட்டுக்கு அருகே எப்போதும் சத்தமும், சந்தடியும் மிகுந்திருக்கும் என்பதால் பெரும்பாலும் வெளியிடங்களில் அமர்ந்து படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான் என்றும் தெரிந்தது.

அவன் பொறியியல் கல்லூரியில் படிப்பதாக அறிந்தவர் அவன் பெயர், கல்லூரி விவரங்கள் ஆகியவற்றைக் கேட்டறிந்தார். 

அவன் தந்தை ஒரு தொழிற்சாலையில் வேலை செய்பபவர் என்றும், அவர்கள் குடும்பம் வறுமையான குடும்பம் என்றும், அவன் கல்லூரிக் கட்டணத்தை எப்படியோ கஷ்டப்பட்டுதான் அவன் தந்தை சமாளிக்கிறார் என்றும் அறிந்து கொண்டார்.

அவருடைய பேரன் சதீஷ் கூட அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்து விடுவான்.

அந்த மாணவனுக்கு  உதவி செய்யத் தீர்மானித்தார் கனகசபை. அவன் கல்லூரிக்குச் சென்று கல்லூரி முதல்வரைச் சந்தித்து அவனுடைய படிப்புச் செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்து விட்டு உடனே கட்ட வேண்டிய கட்டணம் ஏதாவது இருந்தால் அதைச் செலுத்தி விடுவது என்றும் முடிவு செய்தார்.

ஆனால் அவனிடம் இதை அவர் சொல்லவில்லை. கல்லூரிக்குச் செல்லும்போது அங்கே கல்லூரி முதல்வரின் அறைக்கு அவனை அழைத்து தான் செய்யப் போகும் உதவியைச் சொல்லி அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தலாம் என்று நினைத்துக் கொண்டார் .

அடுத்த நாளே அவன் படிக்கும் கல்லூரிக்குச் செல்வது என்று முடிவு செய்தார் கனகசபை. ஆனால் அடுத்த நாள் அவர் செல்லவில்லை. எதோ ஒரு சோம்பல். 'நாளைக்கு கண்டிப்பாகப் போய் விடலாம்' என்று நினைத்துக் கொண்டார்.

றுநாள் அதிகாலையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மனைவியை அழைத்தார். மனைவி, மகன், மருமகள், பேரன் எல்லோரும் ஓடி வந்தார்கள். 
அவரைப் படுக்க வைத்து ஆசுவாசப்படுத்த முயன்றனர். அவர் மகனை அருகில் அழைத்து அவனிடம் ஏதோ சொல்ல முயன்றார்.

"என்னடா சொல்றாரு?" என்றார் அவர் மனைவி விசும்பிக் கொண்டே.

அவர் வாய்க்கு அருகே தன் காதை வைத்து அவர் சொன்னதைக் கேட்க முயன்ற அவர் மகன், "சரியாப் புரியல. என்னவோ காலேஜ்னு சொல்ற மாதிரி இருக்கு. சரி. நான் ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்றேன்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து அகன்றான்.

"சதீஷ் காலேஜில சேர்ந்து படிக்கறதை பாக்காமயே போயிடப் போறேனேன்னு சொல்றாரோ என்னவோ?" என்றாள் மருமகள்.

"உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. சதீஷ் படிச்சு முடிச்சு கல்யாணம் ஆகி அவனுக்குக் குழந்தை பிறக்கறதையெல்லாம் நீங்க இருந்து பாக்கத்தான் போறீங்க" என்று அவர் மனைவி சொல்லிக் கொண்டிருந்தபோதே, கனகசபையின் உயிர் பிரிந்தது.                                                                                                                 
குறள் 335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

பொருள்:
நாக்கு அடைத்துக்கொண்டு விக்கல் மேலெழுவதற்கு முன் நல்ல செயல்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

336. பிழைத்துக் கிடந்தால்

"பார்வதி அத்தைக்கு உடம்பு சரியில்லையாம். பொழைச்சுக் கெடந்தா நாளைக்கு அவங்களைப் போய்ப் பாத்துட்டு வரணும்" என்றாள் அம்மா.

"நீ  பொழைச்சுக் கிடந்தாலா, பார்வதி அத்தை பொழைச்சுக் கிடந்தாலா?" என்றேன் நான்.

"என்னடா அமங்கலமாப் பேசற? அவங்களுக்கு உடம்பு குணமாகி ரொம்ப நாள் இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கிட்டிருக்கேன் நான்!" என்றாள் அம்மா படபடப்புடன்.

"பொழைச்சுக் கிடந்தான்னு நீதானேம்மா வார்த்தைக்கு வார்த்தை சொல்ற?"

"நான் சொல்றது பழக்கத்தால. எங்கம்மா எப்பவும் அப்படி சொல்லிக்கிட்டிருப்பாங்க. அதைக் கேட்டு எனக்கும் பழக்கமாயிடுச்சு!" என்றார் அம்மா. 

அம்மா சொன்னது போல் அப்படிச் சொல்வது அவருக்கு ஒரு பழக்கமாகத்தான் ஆகி இருந்தது.

"நாளைக்கு வெள்ளிக்கிழமை. பொழைச்சுக் கிடந்தா எண்ணெய் தேச்சுக்கணும்," "பொழைச்சுக் கிடந்தா நாளைக்கு உனக்கு டிஃபன் பாக்ஸ்ல தேங்காய் சாதம் போட்டு அனுப்பறேன்" என்பது போல் அடுத்த நாளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் 'பிழைத்துக் கிடந்தால்' என்ற எச்சரிக்கைச் சொற்றொடரைச் சேர்க்காமல் அவரால் பேசவே முடியாது.  

திடீரென்று அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது. ரத்த அழுத்தம் அதிகமாகி இரண்டு நாட்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.

மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய பிறகும் அவரை கவனமாகப் பார்த்துக் கொள்ள இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

அம்மா அவரை மிகவும் அக்கறையுடனும் கவனத்துடனும் பார்த்துக் கொண்டார்.

ஒருமுறை "பொழைச்சுக் கிடந்தா நாளைக்கு..." என்று ஆரம்பித்தவர் சட்டென்று நிறுத்திக் கொண்டார்.

நான் அம்மாவைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் 'பிழைத்துக் கிடந்தால்' என்ற சொற்றொடர் அச்சானியமாக இருக்கும் என்று அவர் நினைத்தது எனக்குப் புரிந்தது. 

அதற்குப் பிறகு அவர் 'பிழைத்துக் கிடந்தால்' என்று சொல்வதையே விட்டு விட்டார். பேச்சுக்குப் பேச்சுக்கு அப்படிச் சொல்லி வந்தவர் அதை அடியோடு நிறுத்தியது எனக்கு வியப்பாக இருந்தது. அதே சமயம் அவர் அதைச் சொல்லாமல் தவிர்த்ததே என் அப்பாவுக்கு எந்த நேரமும் எதுவும் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தை எனக்கு உள்ளூர ஏற்படுத்தியது.

நான் பொதுவாகக் காலையில் சற்று தாமதமாக எழுபவன். அன்று நான் எழுந்து அப்பாவின் அறைக்குப் போனபோது அப்பா படுக்கையில் அமர்ந்திருந்தார். 

என்னைப் பார்த்ததும்,"உன் அம்மா வாக்கிங் போயிட்டு இன்னும் வரல போலிருக்கு. ம்ம். உன் அம்மா வாக்கிங் போற மாதிரி நான் போயிருந்தா எனக்கு இந்த உடம்பே வந்திருக்காது!" என்றார் அப்பா.

அப்பாவுக்குக் காலையில் எழுந்ததுமே தொண்டையைக் காப்பியால் நனைத்துக் கொள்ள வேண்டும். வாக்கிங் போகுமுன் அம்மா டிகாக்‌ஷன் போட்டு வைத்திருப்பார். அப்பாவுக்கு நானே காப்பி கலந்து எடுத்து வரலாம் என்று நினைத்து சமையலறைக்குப் போனேன். 

அங்கே டிகாக்‌ஷன் போட்டு வைக்கப்படவில்லை. சமையலறை முதல் நாள் இரவு வைக்கப்பட்டிருந்த நிலையில் சுத்தமாக இருந்தது.

ஒருவிதப் பதட்டத்துடன் அம்மா வழக்கமாகப் படுத்திருக்கும் முன்னறைக்குச் சென்று பார்த்தேன். அம்மா இன்னும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை.

அருகில் சென்று அம்மாவைத் தொட்டுப் பார்த்தேன். பிறகு அசைத்துப் பார்த்தேன். அம்மா உயிருடன் இல்லை என்று புரிந்தது. 

குறள் 336
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

பொருள்:
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமையைக் கொண்டது இந்த உலகம்.

337. இனி என்ன ஆகும்?

"சார் இறந்துட்டார்ங்கறதையே நம்ப முடியல. இப்ப கூட அவரு ரூம்ல உக்காந்திருக்கற மாதிரி இருக்கு."

"என்ன செய்யறது? அவரு காலம் முடிஞ்சு போச்சு!"

"எவ்வளவு சுறுசுறுப்பானவரு! நம்ம கம்பெனியில வேலை செய்யறவங்கள்ள பல பேரு அவரை விட வயசில சின்னவங்கதான். ஆனா அவரு வேகத்துக்கு யாராலயும் ஈடு கொடுக்க முடியலியே!"

"இனிமே கம்பெனி என்ன ஆகுமோ!"

"ஏன்? அவரு இவ்வளவு பெரிசா வளர்த்து வச்சிருக்கார், அவர் பையன் பாத்துக்க மாட்டாரா என்ன?"

"பாக்கலாம். என்ன ஆகப் போகுதோ!"

சோமசேகர் இறந்து இரண்டு வாரங்களுக்குப் பின், அவருடைய ஒரே மகன் பூபதி நிறுவனத்தின் ஆடிட்டர் சபாபதியைப் பார்க்கப் போனான்.

"சார்! நான் இப்பதான் படிப்பை முடிச்சிருக்கேன். இத்தனை வருஷமா அப்பாவோட கம்பெனியைப் பத்தி நான் எதையுமே தெரிஞ்சுக்கல. இனிமே கம்பெனியை நடத்த நீங்கதான் எனக்கு உதவி செய்யணும்" என்றான்.

"நிச்சயமா!" என்றார் சபாபதி. "ஆமாம் உங்க அப்பாவோட சொத்து விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். உங்க அம்மா பேர்ல ஏதாவது சொத்து இருக்கா?" என்றார்.

"இல்லையே! எல்லாமே அப்பா பேர்லதான். என் அம்மா கூட விளையாட்டா சொல்லுவாங்க, ஒரு நாள் உங்கப்பா  நம்ப ரெண்டு பேரையும் வீட்டை விட்டு விரட்டிட்டா நாம நடுத்தெருவிலதான் நிக்கணும்னு. ஆமாம் எதுக்குக் கேக்கறீங்க?"

"ஒண்ணுமில்ல. உங்கப்பா ஒரு அருமையான பிசினஸ்மேன். சின்னதா ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு 20 வருஷத்திலே அதை இவ்வளவு பெரிசா ஆக்கினது அவரோட சாதனை. அடுத்த 10 வருஷத்துல என்ன செய்யணும்னு கூட திட்டம் போட்டு வச்சிருக்காரு! பாங்க்ல எல்லாம் அவர் மேல நம்பிக்கை வச்சு அவர் கேட்டபோதெல்லாம் கேட்ட தொகையைக் கடன் கொடுப்பாங்க. அவரும் கடன் வட்டி எல்லாத்தையும் சரியாக் கட்டிடுவாரு."

"கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்!" என்றான் பூபதி.

"ஆனா அவர் மேல அவங்க அவ்வளவு நம்பிக்கை வச்சு ஏராளமாக் கடன் கொடுத்ததே இப்ப ஒரு பிரச்னை ஆயிடுச்சு" என்றார் சபாபதி.

"என்ன சார் சொல்றீங்க?"

"உங்கப்பா நடத்தின நிறுவனத்துக்குத்தான் பாங்க்ல கடன் கொடுத்தாங்கன்னாலும் அவங்க கடன் கொடுத்தது உங்கப்பாவை நம்பித்தான்."

"அதனால?" என்றான் பூபதி சற்றுக் கவலையுடன்.

"இந்த நிறுவனத்தை உன் அப்பா ஒரு தனி ஆளாத்தான் நடத்திக்கிட்டு வந்திருக்காரு. அவருக்கு அடுத்த நிலையில இதை நடத்தறதுக்கு அவர் யாரையும் உருவாக்கல. அதோட நீண்ட காலத் திட்டமெல்லாம் போட்டு நிறையக் கடன் வாங்கி இருக்காரு. அதனால பாங்க்ல இப்ப அந்தக் கடனையெல்லாம் திருப்பிக் கொடுக்கச் சொல்றாங்க. உன் அப்பா இறந்த அடுத்த நாளிலிருந்தே எங்கிட்ட இதை பத்திப் பேச ஆரம்பிச்சுட்டாங்க! நான்தான் அவங்களைக் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னேன்" என்றார் சபாபதி.

"இப்ப நான் இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தறேன்னா கடன்களைத் தொடருவாங்க இல்ல?"

சபாபதி தலையைப் பக்கவாட்டில் ஆட்டினார். "அதைத்தான் சொல்ல வந்தேன்... பாங்க்கைப் பொருத்தவரை  அவங்க கடன் கொடுத்தது உன் அப்பாவுக்குத்தான். அவர் போனப்பறம் அவரோட நிறுவனத்துக்கு அவங்க இந்தக் கடனைத் தொடர விரும்பல" என்றார் தொடர்ந்து.

"பரவாயில்ல சார்! கம்பெனியோட சொத்துக்களை வித்துட்டு கடனையெல்லாம் அடைக்க ஏற்பாடு செஞ்சுடுங்க. நான் ஏதாவது வேலைக்குப் போய்க்கறேன்" என்றான் பூபதி.

சபாபதி ஒரு நிமிடம் மௌனமாக இருந்து விட்டு, "அது அவ்வளவு சுலபம் இல்ல பூபதி. நிறுவனத்துக்குன்னு உன் அப்பா எந்த சொத்தும் வாங்கல. தொழிற்சாலை ஆஃபீஸ் எல்லாம் வாடகைக் கட்டிடத்திலதான் இயங்கிக்கிட்டு இருக்கு. நான் எத்தனையோ தடவை அவர்கிட்ட சொன்னேன் தொழிற்சாலைக்கும் ஆஃபீசுக்கும் சொந்தக் கட்டிடம் வாங்குங்க சார், அதுக்கெல்லாம் விலை மதிப்புக் கூடும்னு. அவரு நிலத்திலேயும் கட்டிடத்திலேயும் முதலீடு செய்யறதைத் தொழில்ல முதலீடு செஞ்சா இன்னும் அதிக லாபம் கிடைக்குமேன்னுட்டாரு"

"அப்ப லாபம்னு நிறைய சம்பாதிச்சிருப்பாரு இல்ல?"

"சம்பாதிச்ச லாபத்தையெல்லாம் மறுபடி தொழில்லேயே முதலீடு செஞ்சு புதுசா இயந்திரங்கள், ஸ்டாக்னு வாங்கிப் போட்டாரு. அதையெல்லாம் வித்தா அதிகமா பணம் வராது."

"அப்படின்னா?'

சபாபதி மீண்டும் சிறிது நேர மௌனத்துக்குப் பின், "நிறுவனத்துக்குன்னு சொத்து எதுவும் இல்லாததால் உன் அப்பா உங்க வீட்டைத்தான் பாங்க்ல செக்யூரிட்டியாக் கொடுத்திருக்காரு" என்றார்.

"சார்! அப்படீன்னா எங்க வீடு கூடப் போயிடுமா?" என்றான் பூபதி அதிர்ச்சியுடன்.

"எனக்கே வருத்தமாத்தான் இருக்கு. அதனாலதான் உங்கம்மாவுக்குன்னு தனியா சொத்து ஏதாவது இருக்கான்னு கேட்டேன். உங்கப்பா இருந்திருந்தார்னா பிசினஸ் சிறப்பாப் போய்க்கிட்டிருக்கும். அவரு அதற்கான திட்டமெல்லாம் பிரமாதமாப் போட்டு வச்சிருந்தாரு. அவரோட திடீர் மரணத்தினால எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. நிறுவனத்துக்காக இவ்வளவு திட்டமெல்லாம் போட்டவர் தன்னோட வாழ்க்கையைப் பத்தி நினைக்காம இருந்துட்டாரு. இன்ஷ்யூரன்ஸ் கூட அதிகமா எடுத்துக்கல. எனக்கு எதுக்கு அதெல்லாம்னுட்டாரு. .."

சபாபதி சொன்ன விஷயத்தின் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் பூபதி உட்கார்ந்திருந்தான்.

குறள் 337
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

பொருள்:
அறியாதவர்கள் தங்கள் வாழ்க்கையின் தன்மை பற்றி ஆராய்ந்து அறிய மாட்டார்கள். ஆனால் அவர்கள் வீணாகச் சிந்திக்கும் விஷயங்களின் எண்ணிக்கை ஒரு கோடி அல்ல, அதற்கு மேல்.

338. புரிந்ததும் புரியாததும் 

வீட்டின் பின்புறம் இருந்த திறந்த அறையின் பரணின் மீது ஒரு ஓரமாகக் கொஞ்சம் வைக்கோல் கிடந்தது. 

வைக்கோல் எப்படி இங்கே வந்தது என்று சங்கரன் அருகில் சென்று பார்த்தபோது, அதில் சில பறவை முட்டைகள் இருந்தன. 

அருகிலிருந்த மாமரத்தை சங்கரன் நிமிர்ந்து பார்த்தபோது, அதில் அமர்ந்திருந்த ஒரு பறவை - குருவி போல் ஆனால் சற்றுப் பெரிதாக இருந்தது அது - அவனைப்  பார்த்தது. 

"என்னுடைய முட்டைகள்தான், ஒன்றும் செய்து விடாதே!" என்று கேட்கிறதா, அல்லது "என் முட்டைகளை ஏதாவது செய்தால் உன் கண்ணைக் கொத்தி விடுவேன் ஜாக்கிரதை!" என்று எச்சரிக்கிறதா என்று தெரியவில்லை!

மரத்தில் ஒரு கூடு இருந்ததை சங்கரன் கவனித்தான். அந்தக் கூட்டில் முட்டையிடாமல், ஏன் அந்தப் பறவை இங்கே வந்து வைக்கோல்களைக் கொண்டு வந்து போட்டு அதன் மீது முட்டை இட்டிருக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை. ஒருவேளை முட்டைகள் இங்கே அதிகப் பாதுகாப்பாக இருக்குமென்று நினைத்தோ?

தன் ஐந்து வயது மகன் ராகுலுக்கு இதைக் காட்ட வேண்டும் என்று நினைத்து, 'ராகுல்' என்று அழைக்க நினைத்தவன், சத்தம் போட்டால் பறவை பயந்து விடக் கூடும் என்று நினைத்து, ராகுலைக் கூட்டி வர உள்ளே போனான்.

அறைக்குள் அவன் அப்பா முனகுவது கேட்டது. அவர் அறைக்குள் சென்று பார்த்தான். நோய்வாய்ப்பட்டு இன்னும் சில தினங்கள்தான் இருப்பார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்டு அவர் மயக்க நிலையிலேயே படுத்திருந்தார். அவ்வப்போது மயக்க நிலையிலேயே ஏதாவது முனகுவார். 

அவன் அப்பாவுக்கு அருகில் அமர்ந்திருந்த அவன் அம்மா "என்னவோ சொல்றாரு. என்ன சொல்றாருன்னுதான் தெரியல!" என்றாள்.

"மயக்கத்திலே ஏதோ முனகறாரும்மா. இதையெல்லாம் அவர் பேசறார்னு எடுத்துக்க முடியாது" என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே வந்தான் சங்கரன். அவன் அம்மா உட்பட வீட்டில் அனைவருமே ஒரு சில நாட்களில் அவருக்கு நிகழப் போகும் மரணத்தை அறிந்து மனதளவில் அதற்குத் தயாராகவே இருந்தனர்.

"டேய், ராகுல்! வீட்டுக்குப் பின்னால ஒரு பறவை முட்டை போட்டிருக்கு. போய்ப் பாக்கலாம், சத்தம் போடாம வா!" என்று ராகுலைப் பின்புறம் அழைத்துப் போய்ச் சற்றுத் தள்ளி நின்று அவனுக்குக் காட்டினான் சங்கரன். 

"ஹே, அழகாயிருக்கே! தொட்டுப் பாக்கணும் போலருக்கு! ஆனா உயரத்தில் இருக்கு. என்னால் தொட முடியாதே!" என்றான் ராகுல் .

"தொட்டெல்லாம் பாக்கக் கூடாது. நம்ப கை பட்டாலே அது உடைஞ்சுடும். தள்ளி நின்னே பாரு!" என்று எச்சரித்தான் சங்கரன். 

அதற்குப் பிறகு ராகுல் அடிக்கடி வந்து முட்டைகளை பார்த்துக் கொண்டிருந்தான். சில சமயம் பறவை அந்த முட்டைகள் மீது உட்கார்ந்திருக்கும். சங்கரன் குடும்பத்தினர் தங்களுக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள் என்று புரிந்து கொண்டதாலோ என்னவோ அது அவர்களைப் பார்த்து பயப்படவில்லை. 

ரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு சங்கரன் அப்பா இறந்து விட்டார். அவர் அருகில் அமர்ந்து சங்கரனின் அம்மா அழுது கொண்டிருக்க, சங்கரனும் அவர் மனைவியும் மௌனமான சோகத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். 

அப்போது அங்கே வந்த ராகுல் என்ன நடக்கிறதென்று புரியாமல் ஒரு நிமிடம் விழித்து விட்டுப் பிறகு சங்கரனின் கையைப் பிடித்து அழுத்தி அப்பா "இங்கே வாயேன்!" என்றான். 

சங்கரன் அவன் பின்னால் சென்றான். 

சங்கரனைப் பின்புறம் அழைத்துச் சென்ற ராகுல், அவனிடம் பரணைக் காட்டி, "அப்பா! ஒரு முட்டை மட்டும் உடைஞ்சிருக்கு பாரு!" என்றான். 

"முட்டைக்குள்ளே இருந்த குஞ்சு முட்டையை உடைச்சுக்கிட்டு வெளியே வந்துடுச்சு. அதோ பக்கத்திலேயே இருக்கு பாரு!" என்று காட்டினான் சங்கரன்.

"எவ்வளவு அழகா இருக்கு அந்தக் குஞ்சு! மீதி இருக்கற முட்டையிலேந்தும் குஞ்சு வருமா?" என்றான் ராகுல். 

"ஆமாம். ஒவ்வொரு முட்டையையும் உடைச்சுக்கிட்டு உள்ளேந்து குஞ்சு வெளியில வரும்."

"ஓ!" என்று வியந்த ராகுல், திடீரென்று நினைத்துக் கொண்டவனாக, "ஆமாம், தாத்தாவுக்கு என்ன ஆச்சு? பாட்டி ஏன் அழறாங்க?" என்றான்.

"தாத்தா இறந்து போயிட்டாரு."

"அப்படின்னா?'

"தாத்தா உடம்பிலேந்து உயிர் வெளியில போயிடுச்சு" என்றான் சங்கரன். சொல்லும்போதே அவனுக்குத் தொண்டை கம்மியது.

ராகுல் தந்தை சொல்வது புரியாமல் அவனைப் பார்த்தான். .
  
குறள் 338
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

பொருள்:
முட்டையைத் தனித்து விட்டு விட்டுப் பறவை பறந்து போவது போல்தான் உடலுக்கும் உறவுக்கும் உள்ள உறவு.

339. இன்று புதிதாய்ப் பிறந்தோம் 


நாங்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போதே என் நான்கு வயதுப் பையன் ரவி தூங்கி விட்டான். 

நாங்கள் பெங்களூரில் ரயில் ஏறி சென்னையில் இறங்கி டாக்சி பிடித்து என் பெற்றோர் வீட்டுக்கு வரும் வரையில் அவன் தூக்கத்தில்தான் இருந்தான். அவ்வப்போது தூக்கத்திலேயே சற்று சிணுங்கியதைத் தவிர இடையில் விழித்துக் கொள்ளவில்லை. 

காலை எட்டு மணிக்கு அவன் கண் வழித்தபோது பக்கத்தில் நாங்கள் யாரும் இல்லை. புதிய இடத்தில் இருப்பதை உணர்ந்தும் அருகில் நாங்கள் யாரும் இல்லாததாலும் பயந்து அழ ஆரம்பித்து விட்டான். 

நானும் என் மனைவியும் அறைக்குள் ஓடி அவன் அருகில் அமர்ந்து அவனை ஆசுவாசப்படுத்திய பிறகுதான் அவன் அமைதியானான். 

"ஏம்மா தூங்கறப்ப நம்ப வீட்டில இருந்தேன். எழுந்திருக்கச்சே வேற வீட்டில இருக்கேனே!" என்றான் ரவி.

"ஆமாம்.பெங்களூர்ல இருக்கற நம்ம வீட்டில தூங்கிட்ட. நீ தூங்கிக்கிட்டு இருக்கும்போதே நாங்க உன்னைத் தூக்கிக்கிட்டு ரயில்ல சென்னைக்கு வந்துட்டோம். இது உன் தாத்தா வீடு" என்று விளக்கினாள் என் மனைவி. 

பெங்களூரில் ஒரு வீட்டில் தூங்கி, சென்னையில் இன்னொரு வீட்டில் விழித்தது ரவிக்கு வியப்பூட்டுவதாகவும் நம்ப முடியாததாகவும் இருந்தது.

ஒரு இடத்தில் தூங்கி இன்னொரு இடத்தில் விழித்துக் கொள்ளும் அனுபவம் எனக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். சினிமாக்களில் மயக்கம் தெளிந்து எழுந்தவர்கள், "நான் எங்கே இருக்கேன்? நீங்கள்ளாம் யாரு?" என்று சுற்றி இருப்பவர்களைப் பார்த்துக் கேட்பது போல் கேட்க வேண்டியதாக இருக்கும்!

அதுவும் விழித்துக் கொள்ளும்போது நான் வேறொரு மனிதனாக இருந்தால் எப்படி இருக்கும்? 'நான் யார்?' என்று இன்னொரு கேள்வியையும் சேர்த்துக் கேட்க வேண்டி இருக்கும்!

சென்னைக்கு வந்தாலே மாலை நேரங்களில் ஏதாவது ஆன்மீக நிகழ்ச்சிக்குச் சென்று விடுவேன் நான். சென்னை இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரம் என்று நேரு சொன்னது  எவ்வளவு உண்மையான வார்த்தை என்பது சென்னைக்கு வெளியே சென்று வசிப்பவர்களுக்கு நன்றாகவே புரியும்! அன்றும்  ஒரு கூட்டத்துக்குச் சென்றேன். 'மறுபிறவி' என்ற தலைப்பில் ஒருவர் பேசினார். 

நமக்குப் பல பிறவிகள் உண்டு என்ற கருத்தைப் பல ஆதாரங்களுடன் நிலைநாட்டிப் பேசினார் அவர்

அவர் பேசி முடித்ததும் அவரிடம் கேள்விகள் கேட்கச் சிறிது நேரம் ஒதுக்கப்பட்டது.

"நாம் இறந்த பிறகு நமக்கு எந்த நினைவும் இருக்காது. அப்படி இருக்கும்போது, நாம் மீண்டும் பிறக்கிறோம் என்பது வெறும் நம்பிக்கை அடிப்படையில்தானே?" என்று கேட்டார் ஒருவர்.

"எனக்கு வயதாகி விட்டது. உங்களுக்கு முன்னாள் நான் இறந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். உங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுங்கள். மீண்டும் பிறந்ததும் உங்களுடன் தொடர்பு கொண்டு பேசுகிறேன் - அதாவது நான் மனிதனாகப் பிறந்தால்!" என்று பேச்சாளர் சொன்னதும் அவையில் சிரிப்பொலி எழுந்தது.

"சரி. சீரியஸான பதிலுக்கு வருகிறேன். நீங்கள் தினமும் தூங்குகிறீர்களே, தூங்கும்போது உங்களுக்கு நினைவு இருக்கிறதா?" என்றார் அவர் சிரிப்பலை அடங்கியதும்.

"இல்லை. ஆனால்..."

"இருங்கள். தூங்கியதும் உங்களுக்கு எந்த நினைவும் இருப்பதில்லை. மறுபடி விழித்ததும்தான் எல்லாம் நினைவுக்கு வருகிறது. அதுபோல்தான் மறு  பிறவியும். மரணம் ஒரு உறக்கம். மறுபிறவி என்பது தூக்கத்திலிருந்து விழிப்பது போல். ஆனால் தூங்கி எழுந்திருக்கும்போது முந்தைய நாள் நமக்கு நினைவிருப்பது போல் மறு பிறவி எடுக்கும்போது முந்தைய பிறவி நமக்கு நினைவு இருப்பதில்லை. அதுதான் வேறுபாடு" என்றார் அவர்.

சற்று நேரம் அங்கே மௌனம் நிலவியது.

"வேறு கேள்விகள் இல்லை என்று நினைக்கிறேன். தத்துவம் என்பது வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். இந்த மறு பிறவி தத்துவம் நம் வாழ்க்கைக்கு எப்படி உதவியாக இருக்க முடியும் என்று பார்க்கலாம். நாம் வாழ்க்கையில் பல விஷயங்களைச் செய்ய நினைக்கிறோம். ஒருவேளை நாம் இறந்து போவதற்குள் நாம் செய்ய நினைத்த சில விஷயங்களைச் செய்ய முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவற்றை அடுத்த பிறவியில் செய்ய முடியுமா? முடியாது. ஒருவன் அடுத்த பிறவியில் தன் முன் பிறவி எதிரி ஒருவனை நினைவு வைத்துக்கொண்டு பழி வாங்குவது என்பது சினிமாவில் வேண்டுமானால் நடக்கலாம்!"  

கூட்டத்தில் மெலிதாகச் சிரிப்பு எழுந்தது.

"இந்தப் பிறவியில் நாம் செய்ய வேண்டியவற்றை அடுத்த பிறவியில் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட முடியாது, இந்தப் பிறவியிலேயேதான் செய்தாக வேண்டும் என்பது போல் நாம் இன்று செய்ய நினைக்கும், செய்ய வேண்டிய விஷயங்களை இன்றே செய்து முடிப்பது என்ற பழக்கத்தை வைத்துக் கொள்ளலாமே! தர்மபுத்திரரிடம் ஒருவர் உதவி கேட்டு வந்தபோது தர்மபுத்திரர் அவரை 'நாளைக்கு வாருங்கள்' என்று சொன்னாராம். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பீமன் அர்ஜுனனிடம், 'தம்பி! நம் அண்ணன் காலனையே வென்று விட்டார். தான் நாளைக்கு உயிரோடு இருப்போம் என்ற நிச்சயத்துடன் உதவி கேட்டவரை நாளைக்கு வரச் சொல்கிறார் பார்!' என்றானாம். எனவே எதையுமே நாளைக்குச் செய்யலாம் என்று நினைக்காமல் நாளை என்பது வேறொரு நாள், இன்று செய்ய வேண்டியவற்றை இன்றே செய்ய வேண்டும், நாளைக்கு ஒத்திப் போடக் கூடாது என்ற மனநிலையை வளர்த்துக் கொள்வோம்" என்று முடித்தார் அவர்.  

குறள் 339
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

பொருள்:
இறப்பு என்பது உறங்குவதைப் போன்றது, பிறப்பு என்பது உறக்கத்துக்குப் பின் விழித்துக் கொள்வது போன்றது.

340. குடும்பத்தினருக்கு ஒரு செய்தி 

ராஜசேகரனுக்கு 60 வயது வரை உடல்நலப் பிரச்னை இருந்ததில்லை. அவர் தன் உடல்நலம் குறித்துச் சற்றுப் பெருமிதம் கூடக் கொண்டிருந்தார். 

ஆனால் அவர் காடராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டி வந்தபோது, அறுவை சிகிச்சைக்கு முன் அவருக்குச் செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்த பிறகுதான் காடராக்ட் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். 

ராஜசேகரன் சர்க்கரை வியாதிக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவருக்குக் கல்லீரலில் பழுது இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கும் மருந்து சாப்பிடத் தொடங்கினார். 

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் உடல்நலக் கோளாறுகளுக்கு ஒரு பட்டியலே போட வேண்டும் போல் சிறிதும் பெரிதுமாக வேறு சில தொந்தரவுகளும் சேர்ந்து கொண்டன. 

60 வருடங்கள் வரை சீராக இருந்த தன் உடல்நிலையில் இரண்டு வருடங்களில் எப்படி இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டன என்பது ராஜசேகருக்கே மலைப்பாக இருந்தது.

அவரும், அவர் மனைவியும்  தங்கள் மகனுடனும், மருமகளுடனும் வசித்து வந்தனர். அவருடைய மகளும், மாப்பிள்ளையும் அடிக்கடி அவரை வந்து பார்த்து விட்டுப் போவார்கள். 

மனைவி, மகன், மருமகள், மகள், மாப்பிள்ளை அனைவரும் தனக்கு ஆதரவாக இருந்து  தன்னை உற்சாகப்படுத்தியது அவருக்கு ஆறுதலாக இருந்தது.

ரு ஞாயிற்றுக்கிழமையன்று அவர் மகளும், மாப்பிள்ளையும் அவரைப் பார்க்க வந்திருந்தபோது ராஜசேகர் எல்லோரையும் தன் அறைக்கு அழைத்தார். தன் மகனிடம் ஒரு சிறிய அட்டையைக் கொடுத்தார்.

"என்னப்பா இது?" என்றான் அவர் மகன்.

"இது ஆர்கன் டொனேஷன் கார்டு. என் உடல் உறுப்புகளை தானம் கொடுப்பதற்காக நான் பதிவு செஞ்சுக்கிட்டிருக்கேன். நான் இறந்தப்பறம் இதில இருக்கற நம்பருக்கு ஃபோன் பண்ணினா அவங்க என் உடம்பை ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போய் பயன்படக் கூடிய உறுப்புகளை எடுத்துப்பாங்க. உங்க எல்லாருக்கும் இது தெரியணும்னுதான் எல்லார் முன்னாலயும் இந்த கார்டை உ ன்கிட்ட கொடுக்கறேன்" என்றார் ராஜசேகர்.

"இப்ப எதுக்குங்க இதெல்லாம்? மருந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கீங்க. உடம்பு குணமாகி ரொம்ப நாள் இருக்கப்போறீங்க, இப்படியெல்லாம் பேசாதீங்க" என்றாள் அவர் மனைவி.

"ஆமாம்ப்பா. இப்பல்லாம் எவ்வளவோ பேரு உடம்பில எவ்வளவோ பிரச்னை இருந்தாலும் மருந்து சாப்பிட்டுக்கிட்டு ரொம்ப நாள் இருக்காங்க, உங்களுக்கு எதுவும் ஆகாது" என்றான் அவர் மகன்.

"நீங்க சொல்றபடியே நடக்கலாம். ஆனா இவ்வளவு வியாதிக்கு மத்தியில என் உடம்பில உயிர் எப்படி ஒட்டிக்கிட்டிருக்குன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஓட்டை உடைசலா இருக்கற வீட்டில நாம ரொம்ப நாள் குடி இருப்போமா? அதனாலதான் நான் தயாரா இருக்கணும்னு நினைக்கறேன். நாம நம்பிக்கையோடயே இருப்போம். ஆனா தயாராகவும் இருக்கணும்ல?" என்றார் ராஜசேகர் சிரித்தபடி.

குறள் 340
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

பொருள்:
நோய்களுக்கு இடமாகிய உடம்பில் ஒரு மூலையில் குடியிருக்கும் உயிருக்கு நிலையாக இருப்பதற்கான வீடு இதுவரை கிடைக்கவில்லையோ?

          பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment