About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 33 - கொல்லாமை

திருக்குறள் 
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 33
கொல்லாமை

321. ஆராய்ச்சி மணி 

"என்ன இந்த இரவு நேரத்தில் ஆராய்ச்சி மணி அடிக்கிறது?" என்று வியந்தபடியே அரசன் திரிவிக்கிரமன் அரசவைக்கு வந்தான்.

அரசன் அவைக்குள் வருவதற்குள் இன்னும் தங்கள் வீடுகளுக்குச் செல்லாமல் அரண்மனையில் பணிகளில் ஈடுபட்டிருந்த சில அமைச்சர்களும் வேறு சில அரசவைப் பிரதானிகளும் அவைக்குள் வந்து குழுமி விட்டனர்.

அரசன் வந்து தன் அரியணையில் அமர்ந்த சில வினாடிகளில், ஆராய்ச்சி மணியை அடித்த பெண்மணியை அழைத்துக் கொண்டு இரண்டு காவலர்கள் அரசவைக்குள் நுழைந்தார்கள்.

அந்தப் பெண்மணி அரசனை வணங்கியதும், "இரவு துவங்கிய இந்த முதல் ஜாமத்தில் ஆராய்ச்சி மணியை அடித்திருக்கிறீர்களே, அவ்வளவு முக்கிய பிரச்னை என்னம்மா உங்களுக்கு?" என்றான் அரசன் திரிவிக்கிரமன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! அவசரம் என்பதால்தான் இந்த நேரத்தில் மணி அடித்தேன்" என்றாள் அந்தப் பெண்.

'சொல்லுங்கள்!" என்றான் அரசன். 

"அரசே! என் பெயர் சாவித்திரி. சில நாட்களுக்கு முன் எங்கள் வீட்டில் ஒரு திருடன் நுழைந்தான். எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு போக விலையுயர்ந்த பொருட்களோ, பொற்காசுகளோ இல்லை. திருட வந்தவன் ஏற்படுத்திய ஓசையால் என் கணவர் விழித்துக் கொண்டு கூச்சல் போட்டார். ஆத்திரப்பட்டு திருடன் என் கணவர் தலையில் கட்டையால் அடித்து விட்டு ஓடப்  பார்த்தான். ஆனால் அதற்குள் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவனைப் பிடித்துக் காவலர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். ஆனால் தலையில் அடிபட்ட என் கணவர் வைத்தியரின் சிகிச்சைக்குப் பலனின்றி அடுத்த நாளே இறந்து விட்டார்."

பேச்சைத் தொடர முடியாமல் சாவித்திரியிடமிருந்து ஒரு விம்மல் வெளிப்பட்டது.

"உங்களுக்கு நேர்ந்த துயரத்துக்கு மிகவும் வருந்துகிறேன் அம்மா. உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா? அதற்கு ஏன் இவ்வளவு அவசரமாக இரவில் ஆராய்ச்சி மணி அடித்தீர்கள்?" என்றான் திரிவிக்கிரமன்.

"அரசே! என் கணவர் அடிக்கடி சொல்லுவார், பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பதுதான் சிறந்த அறம் என்று. ஒரு உயிரைக் கொல்வதைப் போன்ற பாவச்செயல் வேறு எதுவும் இல்லை என்பார் அவர். ஒரு ஈ எறும்புக்குக்கு கூடத் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர் அவர்."

"அப்படிப்பட்ட ஒருவரைக் கொன்றிருக்கிறானே ஒருவன்! அவனைப் பிடித்து விட்டார்கள் என்று சொல்கிறீர்கள். அவனுக்குத் தக்க தண்டனை கிடைக்க வகை செய்கிறேன்!" என்றான் அரசன்.

"அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது என்று கேள்விப்பட்டுதான் இங்கே வந்திருக்கிறேன், அரசே!" என்றாள் அந்தப் பெண்.

"அப்படியா? ஏன் கடுமையான தண்டனை வழங்கப்படவில்லையா அவனுக்கு?  இன்னும் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கேட்க வந்திருக்கிறீர்களா?"

"இல்லை அரசே! அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அறிகிறேன்."

"அப்புறம் என்ன? வேறு என்ன குறை உங்களுக்கு?" என்றான் அரசன் சற்றே எரிச்சலுடன்.

"அரசே! கொல்லாமை என்ற அறத்தைக் கடைப்பிடித்து வந்த என் கணவரின் மரணம் ஒரு மனிதன் கொல்லப்படுவதற்கு காரணமாக அமைந்து விடக் கூடாது என்ற பதைபதைப்பில்தான் ஓடி வந்திருக்கிறேன்."

"நீங்கள் சொல்வது விந்தையாக இருக்கிறது. கொலை செய்தவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது இந்த நாட்டின் சட்டம். அந்தச் சட்டத்தின்படி ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், கொலை செய்யப்பட்ட உங்கள் கணவர் எப்படி அதற்குப் பொறுப்பாவார்?" என்றான் அரசன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! என் கணவர் இதற்குப் பொறுப்பில்லை என்றாலும் அவர் மரணம் ஒரு மனிதன் கொல்லப்படுவதற்கு மறைமுகமாகக் கூடக் காரணமாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று தங்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்வதற்காக ஓடி வந்திருக்கிறேன்."

"சரி. அதற்கு ஏன் இந்த இரவு நேரத்தில் வந்து ஆராய்ச்சி மணியை அடிக்க வேண்டும்?"

"அரசே நாளை அதிகாலை அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படப் போவதாக இன்று மாலைதான் எனக்குத் தெரிந்தது. எனவேதான் இந்த இரவு நேரத்தில் வந்து தங்களைத் தொந்தரவு கொடுக்க வேண்டியதாகி விட்டது. இந்த இரவு நேரத்தில் ஆராய்ச்சி மணியை அடித்து உங்களுக்குத் தொந்தரவு கொடுத்ததற்காக எனக்கு ஏதானும் தண்டனை கொடுப்பதானாலும் கொடுங்கள். ஆனால் தயவு செய்து என் கணவரைக் கொன்றவனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனையை சிறை தண்டனையாகக் குறைத்து விடுங்கள்" என்றாள் சாவித்திரி கையைக் கூப்பியபடி.

திரிவிக்கிரமன் இப்போது சாவித்திரியைப் பார்த்த பார்வையில் ஒரு மரியாதை இருந்தது.

குறள் 321
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்

பொருள்:
ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பதுதான் அறம். கொல்லுதல் எல்லாப் பாவங்களையும் விளைவிக்கும்.

322துறவி கேட்ட கேள்வி

வயலிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய மாணிக்கம் வாசலில் இருந்த வாளியிலிருந்து தண்ணீரை எடுத்துக் கைகால்களைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

"வாங்க. சாப்பிட வரீங்களா?" என்றாள் அவன் மனைவி தங்கம். 

"அஞ்சு நிமிஷம் படுத்துகிட்டு அப்புறம் வரேன். வெய்யில்ல நடந்து வந்தது களைப்பா இருக்கு" என்ற மாணிக்கம், ஆமாம், "பசங்க வந்து சாப்பிட்டுட்டுப் போயிட்டாங்களா?" என்றான். 

பசங்க என்று அவன் குறிப்பிட்டது அவன் வயலில் வேலை செய்த இரண்டு இளைஞர்களை. 

"இப்பதான் போறாங்க" என்ற தங்கம், "ஏன் நீங்க வரதுக்கு மட்டும் இவ்வளவு நேரமாச்சு?" என்றாள்.

"நம்ப தோட்டத்தில அடிபட்டு விழுந்து கிடந்த புறாவை சிகிச்சைக்காக வைத்தியர் வீட்டில விட்டிருந்தேன் இல்ல, அது எப்படி இருக்குன்னு பாத்துட்டு வந்தேன்."

"எப்படி இருக்கு? கால் குணமாயிடுச்சா? சிகிச்சை முடியறதுக்குள்ள பறந்து கிறந்து போயிடப் போகுது!"

"வைத்தியர் பச்சிலை மருந்து போட்டிருக்காரு. ரெண்டு நாள்ள குணமாயிடும்னு சொன்னாரு. அது அங்கேயே பக்கத்துலதான் சுத்திக்கிட்டிருக்கு. அவரு சாப்பாடு போடறதால திரும்ப வது. இன்னிக்குக் காலில மறுபடி மருந்து தடவினாராம். நேத்து முதல்ல மருந்து போடச்சே, பயந்து ஓடப் பாத்துது. நான்தான் புடிச்சுக்கிட்டிருந்தேன். ஆனா இன்னிக்கு மருந்து போடச்சே அழகா காலைக் காட்டிச்சுன்னு வைத்தியர் சொன்னாரு!"

"ஆச்சரியமா இருக்கே!"

"நாம அன்பு காட்டினா பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் புரியும். நம்மைப் பாத்து பயப்படாது!"

"ஆமாம், வயல் வேலை இன்னியோட முடிஞ்சுட்டுதாமே, பையங்க நாளைக்கும் இங்க சாப்பிட வருவாங்களா?" என்றாள் தங்கம்.

"இல்ல. வேற வேலைக்குப் போறாங்களாம். அப்ப கூட மதியம் இங்க வந்து சாப்பிட்டுட்டுப் போங்கன்னு சொன்னேன். அவங்க வேலைக்குப் போகப் போற இடம் ரொம்ப தூரமாம். அதனால வரலைன்னுட்டாங்க" என்றான் மாணிக்கம். 

"தினம் ரெண்டு பேருக்கு சாப்பாடு போடறதுன்னு வச்சிருக்கமே, நாளையிலேந்து வேற யாரு சாப்பிட வருவாங்க?" என்றாள் தங்கம்.

"கோவிலுக்கு வர வெளியூர்க்காரங்க யாரையாவது அழைச்சுக்கிட்டு வரேன்" என்றான் மாணிக்கம். 

சொன்னது போலவே, மறுநாள் கோவிலுக்கு வந்திருந்த வெளியூர்க்காரர்கள் இருவரைத் தன் வீட்டுக்கு சாப்பிட அழைத்து வந்தான் மாணிக்கம். 

இருவரில் ஒருவர் ஒரு துறவி. ஊர் ஊராகச் சுற்றுபவர். அதனால் அவரை மட்டும் அன்று முழுவதும் தன் வீட்டில் தங்கி விட்டு மறுநாள் போகும்படி கேட்டுக் கொண்டான் மாணிக்கம். அவரும் சம்மதித்துத் தங்கினார். மற்றவர் சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விட்டார். 

மாலையில் மாணிக்கத்தின் வீட்டுக்குப் பின்னிருந்த தோட்டத்தைச் சுற்றிப் பார்த்த துறவி, "ஆடு, கோழி எல்லாம் வளக்கற போலருக்கே!" என்றார்.

"ஆமாம் சாமி!" என்றான் மாணிக்கம். 

துறவி சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு, "கேக்கறேன்னு தப்பா நினைக்காதே. தினமும் ரெண்டு பேருக்கு சாப்பாடு போடறதுன்னு ஒரு வழக்கம் வச்சிருக்கே. பறவைகளுக்கு உணவு போடறே, அடிபட்ட பறவைகளுக்கு வைத்தியம் பாக்கற. ஆனா, ஆடு கோழியெல்லாம் வளக்கறியே, இதையெல்லாம் நீ யாருக்கு விப்ப? அதுகளை வெட்டிக் கறிக்கடைகளுக்கு அனுப்பறவங்களுக்குத்தானே? இது பாவம் இல்லையா? இவ்வளவு நல்லது செய்யற நீ இந்தப் பாவத்தைச் செய்யலாமா?"என்றார்.

"சாமி! நீங்க நினைக்கிற மாதிரி இதையெல்லாம் நான் யாருக்கும் விக்கறதில்ல. எங்கேயோ காயம் பட்டுக்கிட்ட அல்லது வியாதி வந்த ஆடு, கோழிகளை அவற்றை வளர்க்கறவங்க வச்சுக்க விரும்பாம சில சமயம் வெளியில விட்டுடுங்க. அதுகளை எடுத்து வந்துதான் நான் வளர்க்கறேன். அதுகளுக்கு வைத்தியம் பண்ணுவேன். சிலது பிழைக்காது. ஆனா சிலது குணமாகி நல்லாயிடும். குணமானப்பறம் சில சமயம் அதை வளர்த்தவங்க எங்கிட்டேந்து திரும்ப வாங்கிட்டுப் போயிடுவாங்க. அப்படி வாங்கிக்கிட்டுப் போகலேன்னா அதெல்லாம் இங்கேயே வளரும். அதுங்க சாகற வரையிலும் அதுங்களைக் காப்பாத்துவேன். ஒரு ஆடு, கோழியைக் கூட வித்ததில்ல!" என்றான் மாணிக்கம். 

"நான் எத்தனையோ அறநூல்களைப் படிச்சிருக்கேன். நீ செய்யறதை விட உயர்ந்த அறம் எதுவும் இல்லை!" என்றார் துறவி.  

குறள் 322
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

பொருள்:
கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்து, தானும் உண்டு, வேறு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அற நூல்களை எழுதியவர்கள் தொகுத்து அளித்துள்ள அறங்கள் எல்லாவற்றிலும் தலையானது ஆகும்.

323.  இரண்டு பேர், இரண்டு குற்றங்கள்!


"வாருங்கள் அமைச்சரே!" என்றான் அரசன் சாரநாதன்.

அமைச்சர் அநிருத்தர் சற்றுப் பதட்டத்துடன் அரசனின் முன் நின்றார். 'மன்னர் எதற்கு என்னிடம் தனியாகப் பேச விரும்புகிறார்?'

"அமைச்சரே! நம் நாடு தனித்தன்மை வாய்ந்த நாடு என்பது உங்களுக்குத் தெரியும்."

"ஆம் அரசே! தங்கள் ஆட்சியில் நம் நாடு பல விஷயங்களில் தனித்தன்மையுடன் சிறந்து விளங்குகிறது."

"நான் சொல்வது நாம் கடைப்பிடித்து வரும் கொல்லாமை என்ற அறத்தைப் பற்றி. நம் முன்னோர்கள் வகுத்த வழிப்படி நம் நாட்டு மக்கள் அனைவரும் மரக்கறி உணவையே உண்கிறார்கள். நம் நாட்டில் கொலைகள் நடப்பதில்லை. அது போல் எந்தப் பெரிய குற்றத்துக்கும் நாம் மரண தண்டனை விதிப்பதில்லை. ஆயுள் தண்டனை அல்லது நாடு கடத்துதல் என்பதுதான் நாம் விதிக்கும் அதிக பட்ச தண்டனை. இவ்வாறு கொல்லாமையைக் கடைப்பிடிக்கும் நாடு உலகிலேயே நம் நாடு மட்டும்தானே?"என்றான் அரசன்.

"ஆமாம் அரசே! இவற்றை நாம் பல தலைமுறைகளாகக் கடைப்பிடிக்கிறோமே!" என்றார் அமைச்சர்.

"ஆயினும் நம் நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கும் காடுகளில் சில விலங்குகள் வேட்டையாடிக் கொல்லப்படுவது என்பது எப்போதாவது நிகழ்கிறது அல்லவா?"

"ஆமாம் அரசே! காட்டில் வாழும் சில ஆதிவாசிகள் இந்தச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் நம் நாட்டு எல்லைக்கு வெளியே வசிப்பவர்கள். அந்தக் காட்டில் ஒரு பகுதிதான் நம் நாட்டுக்குள் வருகிறது என்பதால் நம்மால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை" என்றார் அமைச்சர். 

அரசர் என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தது போல் அவரிடம் ஒரு பதட்டம் இருந்தது.

" உண்மைதான். ஆனால் சமீபத்தில் நம் நாட்டுக் குடிமகன் ஒருவன் அந்தக் காட்டுக்குச் சென்று அங்கே ஒரு புலியை வேட்டையாடி இருக்கிறானாமே, உண்மையா?" என்றான் அரசன், அமைச்சரின் கண்களை நேராகப் பார்த்து.

"எனக்கு அத்தகைய தகவல் எதுவும் வரவில்லை அரசே!" என்றார் அமைச்சர் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு. 

"இளவரசனைக் காப்பாற்ற நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம் அமைச்சரே! எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நான் இளவரசனை விசாரித்து விட்டேன். அவனே என்னிடம் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டான்!" என்றான் அரசன்.

"என்னை மன்னித்து விடுங்கள் அரசே! எனக்கும் இந்தத் தகவல் வந்தது. எல்லைப்புறப் பகுதிகளுக்கு ஒரு வேலையாகச் சென்றபோது, வேட்டையாட வேண்டும் என்ற ஆர்வத்தால் தான் ஒரு புலியின் மீது  அம்பு எய்ததாகவும், இறந்து விட்ட புலியின் உடலைச் சில ஆதிவாசிகள் எடுத்துச் சென்று விட்டதாகவும் இளவரசரே என்னிடம் சொன்னார். தங்களுக்குத் தெரிந்தால் கோபிப்பீர்கள் என்பதால் தங்களுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்றும் அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனால்தான் நீங்கள் கேட்டபோது முதலில் உண்மையைச் சொல்லவில்லை!" என்றார் அமைச்சர்.

"நல்லது அமைச்சரே! நம் நாட்டில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கொல்லாமை என்ற அறத்தை மீறியதற்காக இளவரசன் ஓராண்டு விவசாயத் தொழிலாளியாகப் பணி புரிய வேண்டும் என்று அவனுக்கு தண்டனை விதித்திருக்கிறேன். அவன் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்று அங்கே விவசாயத் தொழிலாளியாகப் பணி செய்ய ஏற்பாடு செய்யுங்கள். இதைச் சொல்லத்தான் உங்களை வரச் சொன்னேன்!" என்று சொல்லி விட்டு  எழுந்தான் அரசன்.

இது பற்றி மேலே பேச அரசன் தயாராயில்லை என்று புரிந்து கொண்ட அமைச்சர், "சரி மன்னா!" என்றார், சுரம் இறங்கிய குரலில். 

அவர் திரும்பி நடக்கத் தொடங்கியபோது, "இன்னொரு விஷயம், அமைச்சரே!" என்றான் அரசன்.

அமைச்சர் திரும்பினார்.  

"கொல்லாமைக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்பட வேண்டியது பொய்யாமை. முதல் அறத்தை இளவரசன் மீறி விட்டான் என்றால், இரண்டாவது அறத்தை நீங்கள் மீறி விட்டீர்கள். இளவரசன் செய்த குற்றத்தை என்னிடம் சொல்லாமல் மறைத்தது மட்டுமின்றி, உண்மை அறிந்து நான் கேட்டபோதும், நீங்கள் உண்மையை மறைத்துப் பொய் கூறினீர்கள். எனவே உங்களுக்கும் தண்டனை உண்டு! ஒரு மாதம் நீங்கள் ஊதியம் பெறாமல் பணியாற்ற வேண்டும். இதைச் சொல்ல எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆயினும் நீதி வழங்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது அல்லவா?"

அமைச்சரின் முகத்தைப் பார்க்க சங்கடப்பட்டு அரசன் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொள்ள, அமைச்சர் அரசன் முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டுத் தன்  தலையைத் தாழ்த்திக் கொண்டார். 
  
குறள் 323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

பொருள்:
அறங்களில் முதன்மையானது பிற உயிர்களைக் கொல்லாமல் இருத்தல். அதற்கு அடுத்ததாக பொய்யாமையைக் கொண்டால் நன்று.

324. புதியதோர் உலகம் செய்வோம் 

"நண்பர்களே! உலக வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியை நாம் உருவாக்க இருக்கிறோம். 

"பல நூறு ஆண்டுகளுக்கு வெறும் காடுகளாக இருந்த இந்தத் தீவு சில மேற்கத்திய நாடுகளால் ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையாகப்  பயன்படுத்தப்பட்டது.

"சிறைச்சாலை என்பதை விட ஒரு கொலைக்களமாகப் பயன்படுத்தப்பட்டது என்று கூறலாம்.

"சாதாரணக் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டனர் அல்லது தூக்கிலிடப்பட்டனர். ஆனால் அரசியல் காரணங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் இந்தத் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.

"அடர்ந்த காடுகள் மிகுந்த இந்தத் தீவில் உணவு கிடைக்காமல் அலைந்து திரிந்தோ, காட்டு விலங்குகளால் கொல்லப்பட்டோ அவர்கள் வலியும், வேதனையும் நிறைந்த சாவைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்படாமல், கப்பல்கள் மூலம் இந்தத் தீவுகளுக்குக் கொண்டு வந்து  விடப்பட்டனர். 

"பல சமயம் குற்றம் சாட்டப்பட்ட அரசியல் கைதிகளுடன் எந்தக் குற்றமும் சாட்டப்படாத அவர்கள் குடும்பத்தினரும் இங்கு கொண்டு வந்து விடப்பட்டனர். இந்தக் கொடுமைக்கு ஆளான சிறு குழந்தைகள் எத்தனையோ பேர்.

"இங்கு கொண்டு வந்து விடப்பட்டோரில் பலர் பட்டினியாலும், காட்டு விலங்குகளால் கொல்லப்பட்டும் இறந்து போனாலும், இன்னும் பலர் தங்கள் மன உறுதியாலும், விடா முயற்சியாலும், கடின உழைப்பினாலும் எப்படியோ உயிர் பிழைத்துத் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கையையும் உருவாக்கிக் கொண்டனர்.  துவக்கத்திலிருந்தே அவர்கள் போராளிகள் அல்லவா? அதனால்தானே அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்? மக்கள் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடியர்களால் தங்கள் உயிருக்காகப் போராட முடியாதா என்ன?

"அவ்வாறெல்லாம் போராடிப் பல இன்னல்களை வென்று இந்தத் தீவில் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டவர்களின் சந்ததிகளாக, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்று நாம் ஒரு லட்சம் பேர் இந்த தீவில் வாழ்கிறோம். இந்த ஒரு லட்சம் பேரும் இந்தத் தீவைத் தங்கள் நாடாக உருவாக்கத் தீர்மானித்து, நாட்டுக்கான ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க ஒரு அரசியல் அமைப்பு சபையை உருவாக்கி, அதற்கு நம் நூறு பேரையும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த சபைக்குத் தலைவராக நீங்கள் அனைவரும் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். அதற்கு என் நன்றி.

"அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட குழு சில பரிந்துரைகளை செய்திருக்கிறது. அவற்றில் ஒரு பரிந்துரை அனைவராலும் ஒருமுகமாக ஏற்கப்பட்டிருக்கிறது.

"நாகரீகம் அடைந்ததாகச் சொல்லிக் கொள்ளும் நாடுகளின் சட்டங்கள் சில குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கின்றன. நம் முன்னோர்களின் அனுபவங்களை அறிந்த நாம் உயிரின் மதிப்பை உணர்ந்திருக்கிறோம். உயிர் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை நம் முன்னோர்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள். ஒரு உயிரைக் கொல்வதைப் போன்ற கொடிய செயல் எதுவுமில்லை. ஒருவர் எத்தகைய கொடிய குற்றத்தைச் செய்திருந்தாலும், அவர் உயிரைப் பறிக்க வேறு எவருக்கோ, இந்தச் சமுதாயத்துக்கோ உரிமை இல்லை. எனவே நம் நாட்டில் எந்தக் குற்றத்துக்கும் மரண தண்டனை கிடையாது. அரசியல் அமைப்புக் குழுவின் இந்த ஒருமனதான பரிந்துரையை இந்த அவை ஒருமனதாக ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

தலைவரின் வேண்டுகோளை ஏற்று 'யெஸ், யெஸ்' என்ற பெரும் கோஷத்துடன் அனைவரும் தங்கள் கரங்களை உயர்த்தினர்.

குறள் 324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

பொருள்:
அற நூல்களால் நல்ல வழி என்று கூறப்படுவது எது என்றால் எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற அறத்தைப் போற்றும் நெறியாகும்.

325. முதல் மரியாதை 

மேல்வளைவு நாட்டின் மன்னன் சிங்கவர்மன் தனக்கு வயதாகி விட்டதால் தன் மூத்த மகன் சூரியவர்மனுக்கு முடிசூடத் தீர்மானித்து, அண்மையிலிருந்த நாடுகள், தொலைவிலிருந்த நாடுகள் என்று பல்வேறு நாடுகளின் அரசர்களையும் முடிசூட்டு விழாவுக்கு அழைத்திருந்தான். 

அத்துடன் பல முனிவர்களையும் அழைத்திருந்தான். 

முடிசூட்டு விழா அரங்கம் முழுவதும் ஒரு புறம் அரசர்கள் மறுபுறம் முனிவர்கள் என்று நிறைந்திருக்க, நாட்டு மக்கள் சற்றுப் பின்னே நின்று விழாவைக் கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.  

முடிசூட்டு விழா முடிந்ததும், விழாவை நடத்திக் கொடுத்த புரோகிதர், "அரசே! இப்போது விழாவுக்கு வந்திருக்கும் விருந்தினர்களை கௌரவிக்க வேண்டும். முதலில் யாரை கௌரவிப்பது என்பதைத் தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

"இதில் முடிவு செய்வதற்கு என்ன இருக்கிறது? முதலில் கௌரவிக்கப்பட வேண்டியவர் இங்கு வந்திருக்கும் முனிவர்களுக்குள் மிக உயர்ந்தவர் என்று அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கௌதம முனிவர்தான்!" என்று சொன்ன சிங்கவர்மன் கௌதம முனிவர் இருக்கும் இடத்துக்கு நடந்து சென்றான். 

அவனைத் தொடர்ந்து அரசியும், அரசியைத் தொடர்ந்து மாலை, மற்ற பரிசுகள் கொண்ட பெரிய தங்கத் தட்டுக்களை ஏந்தியபடி சில ஊழியர்களும் சென்றனர்.

அரசன் கௌதம முனிவர் அருகில் சென்று அவரை வணங்க முற்பட்டபோது அவனைத் தடுத்த முனிவர், "சிங்கவர்மா! ஒரு நிமிடம் இரு! என்னை விடத்  தகுதி வாய்ந்த ஒருவர் இந்த அரங்கில் இருக்கிறார். அவருக்குத்தான் நீ முதல் மரியாதை செய்ய வேண்டும்!" என்றார்.

"தங்களை விடத் தகுதி வாய்ந்தவர்  யார் இருக்க முடியும் முனிவரே!" என்றான் சிங்கவர்மன் வியப்புடன்.

அமர்ந்திருந்த மன்னர்களில் ஒருவரைக் காட்டி, "அதோ அமர்ந்திருக்கிறானே ஆதித்ய வர்மன் அவன்தான் இந்த முதல் மரியாதை பெறத்  தகுதி உடையவன். என்னை விட உயர்ந்தவன்!" என்றார் கௌதமர்.

"மன்னிக்க வேண்டும், முனிவரே!  ஆதித்ய வர்மர் ஒரு சிறிய நாட்டின் மன்னர். நீங்களோ உலகம் போற்றும் ஒரு மாமுனிவர். அவர் எப்படி உங்களை விடச் சிறந்தவராக இருக்க முடியும்?" என்றான் சிங்கவர்மன்.

"சிங்கவர்மா! என் போன்ற முனிவர்கள் இந்த உலக வாழ்வை விரும்பாமல் துறவற வாழ்க்கை மேற்கொண்டிருக்கிறோம். ஆனால் ஆதித்ய வர்மன் உயிர்களைக் கொல்லக் கூடாது என்ற விரதத்தை மேற்கொண்டிருக்கிறான். கொல்லாமை என்னும் அறத்தைப் பின்பற்றுவதால்தான் அவன் போரை விரும்பாமல் தன்னைப் பகைத்த நாடுகளுடன் கூடப் போரிடாமல் சமாதானம் செய்து கொண்டு ஒரு சிறிய நாட்டுக்கு அரசனாக இருப்பதில் திருப்தி அடைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். போரில் மனிதர்களைக் கொல்வது க்ஷத்திரிய தர்மம் என்ற சமாதானத்தைக் கூட ஏற்காமல் மிகக்  கடினமான விதத்தில் கொல்லாமை அறத்தைக் கடைப்பிடித்து வரும் ஆதித்ய வர்மன்தான் துறவு வாழ்க்கை வாழும் என்னை விட மேலானவன்!" என்றார் கௌதமர்.

சிங்கவர்மன் மௌனமாக ஆதித்ய வர்மன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி நடக்க, அரசியும், பரிசுத்தட்டுகள் ஏந்திய ஊழியர்களும் அரசனைப் பின் தொடர்ந்தனர். 

குறள் 325
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

பொருள்:
இவ்வுலக வாழ்க்கை என்னும் நிலையைக் கண்டு அஞ்சிப் பிறவாமை வேண்டித் துறவு பூண்டவர்கள் எல்லோரையும் விட, உயிர்களைக் கொல்வதற்கு அஞ்சி, கொல்லாமை என்ற அறத்தைக் கடைப்பிடிப்பவனே உயர்ந்தவன்.

326. சரவணனுக்கு நேர்ந்த விபத்து 

"என்னங்க நீங்க, எறும்புப் பவுடர், கரப்பான் பூச்சி மருந்தெல்லாம் கூடப் பயன்படுத்தக் கூடாதுங்கறீங்க!" என்று அலுத்துக் கொண்டாள் சகுந்தலா.

"எந்த உயிரையும் கொல்லக் கூடாது சகுந்தலா!" என்றான் சரவணன்.

"நாம என்ன அதுகளைக் கத்தியால குத்தறமா, இல்ல துப்பாக்கியால சுடறமா? மருந்து வைக்கறோம். அதுங்க அதைத் தின்னுட்டு விஷத்தினால செத்துப்போகுதுங்க. அதுங்க செத்துப் போறது கூட நமக்குத் தெரியாது! எங்கேயோ போய் செத்துக் கிடக்கும்!"

"விஷத்தைத் தின்னு அதுங்க செத்துப் போகணுங்கற எண்ணத்திலதானே இந்த மருந்தையெல்லாம் வாங்கிக்கிட்டு வந்து வைக்கறோம்?"

"அப்ப அதுங்களோட சேந்துதான் நாமக் குடித்தனம் பண்ணணுங்கறீங்களா?" என்றாள் சகுந்தலா எரிச்சலுடன். 

"எறும்புங்க ஒண்ணும் செய்யாது. கரப்பு இருந்தா பிடிச்சு ஒரு பேப்பர்ல வச்சு வெளியே தூக்கிப் போட்டுடலாம். எதுக்குக் கொல்லணும்?" என்றான் சரவணன் பொறுமையாக.

பலமுறை நடக்கும் முடிவற்ற உரையாடல் இது என்பதால் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்து சகுந்தலா அதோடு நிறுத்திக் கொண்டாள்.

ரவணன் ஏதோ வேலையாக வெளியில் சென்றிருந்தான். சகுந்தலா வீட்டில் இருந்தாள். சற்று நேரம் கழித்து அவளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சரவணனுக்கு விபத்து நேர்ந்து விட்டதாம்.

மருத்துவ மனைக்குச் சென்றபோதுதான் அவளுக்கு முழு விவரமும் தெரிந்தது. இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சரவணனுக்கு திடீரென்று இதயவலி ஏற்பட்டிருக்கிறது. சில வினாடிகள் அவன் செயலற்று இருந்தபோது கட்டுப்பாட்டை விட்டு விட்டதால் வண்டி கீழே விழுந்து அவனுக்குத் தலையில் அடிபட்டு விட்டது.

தலையில் பட்ட அடி, இதய பாதிப்பு இரண்டுக்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சரவணன் உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்றார்கள் மருத்துவர்கள். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு இதையே சொல்லி வந்தார்கள்.

ரு மாதம் கழித்து சரவணன் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். 

"அவர் பிழைப்பார் என்று ஆரம்பத்தில் எங்களுக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை. அவர் பிழைத்தது அதிசயம்தான். போன பிறவியில் அவர் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும்" என்றார் டாக்டர்.

"போன பிறவியில் அவர் என்ன செய்தாரோ எனக்குத் தெரியாது. இந்தப் பிறவியில் ஒரு சிறு உயிரைக் கூடக்  கொல்லக் கூடாது என்று  அவர் வைராக்கியமாக இருந்ததுதான் எனக்குத் தெரியும். மற்ற உயிர்களைக் கொல்லக் கூடாது என்று இவ்வளவு உறுதியாக இருந்த இவர் உயிரைக் கொடுமையாகப் பறிக்க எமனுக்கு எப்படி மனம் வரும்?' என்று நினைத்துக் கொண்டாள் சகுந்தலா. 

குறள் 326
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

பொருள்:
கொல்லாமை என்ற அறத்தைப் பின்பற்றுபவனின் வாழ்நாளின் மீது உயிரைக் குடிக்கும் எமன் கூடக் குறுக்கிட மாட்டான்.

327. அரியணையில் பாய்ந்த அம்பு 

 "அரசே விராஜ நாட்டு மன்னரிடமிருந்து தூதுவன் வந்திருக்கிறான்" என்றார் அமைச்சர்.

"வரச் சொல்லுங்கள்!" என்றான் அரசன்.

காவலர்களால் அரசவைக்கு அழைத்து வரப்பட்ட தூதன் அரசருக்குத் தலை தாழ்த்தி வணக்கம் செலுத்தி விட்டு, "வணக்கம் அரசே! எங்கள் மன்னர் தங்களுக்கு ஒரு ஓலை அனுப்பி இருக்கிறார்!" என்றான்.

"நல்லது. எங்கள் நாட்டின் மீது போர் தொடுக்கப் போவதாக மிரட்டிக் கொண்டிருந்த உங்கள் மன்னர் ஓலை அனுப்பி இருப்பது குறித்து மகிழ்ச்சி. ஓலையைக் கொடு" என்றான் அரசன்.

தூதனிடமிருந்து ஓலையை  வாங்கி மன்னனிடம் எடுத்துச் செல்ல ஒரு காவலன் தூதனை நோக்கி வந்தான்.

தன் இடுப்புக் கச்சையிலிருந்து ஓலையை எடுத்த தூதன் யாரும் எதிர்பாராத விதத்தில் ஓலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய அம்பை எடுத்து மின்னல் வேகத்தில் அதை அரசனை நோக்கி வீசி விட்டான்.

தூதனையே பார்த்துக் கொண்டிருந்த அரசன் ஏதோ ஒரு உந்துதலில் சட்டென்று அரியணையிலிருந்து பக்கவாட்டில் குதிக்க, தூதன் விட்ட அம்பு அரியணையின் மீது குத்தி நின்றது 

காவலர்கள் உடனே தூதனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டனர். ஒரு வீரன் ஓடிச் சென்று அரியணையில் குத்தியிருந்த அம்பைப் பிடுங்கி அமைச்சரிடம் கொடுத்தான்.

அரசன் மீண்டும் அரியணையில் அமர்ந்து கொண்டான்.

அமைச்சர் எழுந்து  "அரசே! விராஜ நாட்டு மன்னர் தான் ஒரு கோழை என்பதைக் காட்டி விட்டார். இல்லாவிட்டால் ஒரு தூதனைக் கொலையாளியாக அனுப்பி இருப்பாரா? தங்கள் உள்ளுணர்வால் உந்தப் பட்டதால் தாங்கள் உயிர் தப்பினீர்கள். நாங்கள் அனைவருமே உங்களுக்குப் பாதுகாப்புக்கு கொடுக்கத் தவறி விட்டோம்..." என்று உணர்ச்சி பொங்கப் பேச ஆரம்பித்தார்.

அரசன் அமைச்சரைக் கையமர்த்தி விட்டு தூதனைப் பார்த்து, "சொல் தூதா! உன் திட்டம் என்ன? என்னைக் கொன்று விட்டு நீ எப்படித் தப்பிக்கலாம் என்று திட்டம் போட்டிருந்தாய்?" என்றான்.

"அரசே! நான் எங்கள் நாட்டின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவன். என் உயிர் எனக்கு ஒரு பொருட்டல்ல. உங்களைக் கொன்ற பிறகு நான் உயிர் பிழைக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். எங்கள் நாட்டின் எதிரியான உங்களைக் கொன்று விட்டு நானும் மடிந்து போகத் தயாராகத்தான் வந்தேன்" என்றான் தூதன் வீராப்புடன்.   

"பாவம்! உன் இரண்டு நோக்கங்களுமே நிறைவேறப் போவதில்லை!" என்றான் அரசன் சிரித்தபடி.

"அரசே!" என்றான் தூதன் புரியாதவனாக.

"என்னைக் கொல்லும் முயற்சியில் நீ தோற்று விட்டாய். நீயும் உயிர் துறக்கப் போவதில்லை!"

"மன்னிக்க வேண்டும் மன்னரே! தூதனைக் கொல்லக் கூடாது என்ற விதி இந்தக் கொலைகாரனுக்குப் பொருந்தாது. உங்களைக் கொல்ல முயன்ற இவனுக்கு மரண தண்டனை கொடுக்கத்தான் வேண்டும்" என்றார் அமைச்சர்.

"நம் நாட்டில்தான் மரணதண்டனை கிடையாதே அமைச்சரே!"

"அரசே! அந்தப் பொதுவான விதி தூத தர்மத்தை மாறிய இவனைப் போன்ற வேற்று நாட்டுக் கொலையாளிகளுக்குப் பொருந்தாது."

"அமைச்சரே! கொல்லாமை என்பது ஒரு விதி அல்ல, ஒரு அறம். அந்த அறத்தை நாம் பின்பற்றுவதால்தான் விராஜ நாடு நமக்கு எவ்வளவோ தொல்லை கொடுத்தாலும் அவர்கள் மீது படையெடுக்காமல் இருக்கிறோம். ஒருவேளை அவர்கள் நம் மீது படையெடுத்தால் நாமும் போர் செய்யத்தான் வேண்டும். அது வேறு நிலை. அந்த நிலை வரும் வரை நாம் கொல்லாமை அறத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்" என்றான் அரசன்.

"அப்படியானால் இவனுக்கு ஆயுட்கால சிறை தண்டனை விதித்து விடலாம்!" என்றார் அமைச்சர்.

"வேண்டாம் அமைச்சரே. இவனை இவன் நாட்டுக்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவோம். தன் தற்கொலைப்படை வீரன் ஒருவனை பலி கொடுத்தாவது என்னைக் கொல்ல வேண்டும் என்று நினைத்த விராஜ அரசனுக்கு, தன்னைக் கொல்ல வந்தவனையும் கொல்வதில்லை என்ற நம் அறக் கோட்பாடு சென்று சேரட்டும். நம் நாட்டு எல்லையைத் தாண்டி விராஜ நாட்டில் காலெடுத்து வைக்கும் வரை இந்த தூதனுக்கு எதுவும் ஆகக்கூடாது. அதற்கு நீங்கள்தான் பொறுப்பு அமைச்சரே!" என்றான் அரசன். 

குறள் 327
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

பொருள்:
தன் உயிரே போவதாயினும், இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது.

328. எட்டு வழிச் சாலை! 

மக்கள் புரட்சி மையம் என்ற அமைப்பு பல வருடங்களாக இருந்து வந்தாலும், அதன் நடவடிக்கைகள் தீவிரமாகியது கடந்த ஐந்து வருடங்களாகத்தான்.

தேர்தலில் நம்பிக்கை இல்லாமல் மக்கள் புரட்சி மூலம்தான் அரசியல், சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கொள்கையுடன் சுமார் இருபது வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட மக்கள் புரட்சி மையம் ஒரு தலைமறைவு இயக்கமாக இயங்கி வந்தது.

அவ்வப்போது காவல் நிலையங்களைத் தாக்கி துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு போவது, ஏழை மக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதப்பட்ட சில அரசியல் தலைவர்களையும், அதிகாரிகளையும் சுட்டுக் கொல்வது போன்ற செயல்களில் அந்த இயக்கம் ஈடுபட்டு வந்தது.

அவ்வப்போது மக்கள் புரட்சி மையத்தின் ஆதரவாளர்கள் என்று சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டாலும், முக்கியத் தலைவர்களின் பெயர்கள் மட்டுமே தெரிந்த நிலையில், அரசு இயந்திரத்தால் அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்களைக் கைது செய்ய முடியவில்லை.  

மக்கள் ஆதரவுடன் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் தலைமறைவாக இருந்த முக்கியத் தலைவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் எப்படியோ தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டு அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

ந்து ஆண்டுகளுக்கு முன் அந்த இயக்கத்தின் தலைவராக சதீஷ் சந்திரா பொறுப்பேற்றதும், இயக்கத்தின் அணுகுமுறையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. தனி மனிதர்கள் தாக்கப்படுவது அடியோடு நிறுத்தப்பட்டது. 

நாட்டின் சில பகுதிகளில் மக்களிடையே ரகசியமாகப் பிரசாரம் செய்து மக்களைத் தேர்தல்களைப் புறக்கணிக்க வைப்பது, அரசாங்கத்தின் சில சட்டங்களுக்குக் கட்டுப்பட மறுத்து அவற்றை வெளிப்படையாக மீறும்படி மக்களைத் தூண்டுவது, விவசாய நிலங்களில் தொழிற்சாலைகள் துவங்க அனுமதி கொடுத்தால் மக்களைப் போராட்டம் செய்ய வைத்து தொழிற்சாலை வேலைகளைத் துவங்க விடாமல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு தங்கள் உத்தியை மாற்றிக் கொண்டது மக்கள் புரட்சி மையம்.

இந்தப் புதிய அணுகுமுறையால் மக்கள் புரட்சி மையத்துக்கு முன்பு இருந்த வன்முறை இயக்கம் என்ற பெயர் மாறியதுடன், மக்களிடையே நன்மதிப்பு ஏற்படவும் தொடங்கியது. 

க்கள் புரட்சி மையத்தின் முக்கிய நிர்வாகிகளின் ரகசியக் கூட்டம் நடைபெற்றது.

செயல்படுத்த வேண்டிய திட்டங்களைப் பற்றி விரிவாகப் பேசி முடித்ததும், கூட்டம் நிறைவேறும் தருவாயில், "வேறு ஏதாவது விஷயம் உண்டா?" என்றார் சதீஷ் சந்திரா. 

"இருக்கிறது தோழர் சதீஷ்!" என்றார் சோமா என்ற மூத்த உறுப்பினர். துவக்கத்திலிருந்தே இந்த இயக்கத்தில் இருந்தவர் என்ற முறையிலும், முந்தைய தலைவருக்கு நெருக்கமாக இருந்தவர் என்ற முறையிலும், அவர் சதீஷ்சந்திராவைப் பெயர் சொல்லி அழைத்துப் பேசக் கூடியவர்.  

"சொல்லுங்க தோழரே!" என்றார் சதீஷ் சந்திரா. 

"எங்க ஏரியாவில அரசாங்கம் எட்டு வழிச் சாலை போடப் போறேன்னு சொல்லி பல ஊர்ல இருக்கற விவசாய நிலங்களை அழிக்கப் பாக்குது. எல்லா எதிர்ப்பையும் மீறி டெண்டர் விட்டு கான்ட்ராக்ட் கொடுத்துட்டாங்க. கான்ட்ராக்ட் எடுத்திருக்கறவன் பெரிய ரவுடி. மந்திரிக்கு வேண்டியவன். அவனை நாம போட்டுத் தள்ளிட்டா அப்புறம் அந்த வேலைக்கு கான்ட்ராக்ட் எடுக்க யாரும் முன் வர மாட்டாங்க. நிலத்தை இழக்கப் போறமேன்னு கதறிக்கிட்டிருக்கிற விவசாயிகளுக்கு நிம்மதி கிடைக்கும்!" என்றார் சோமா.

"தோழரே! நான் இந்த இயக்கத்துக்குத் தலைமை ஏத்ததிலேந்து யாரையும் கொல்லக் கூடாதுங்கற கொள்கையைப் பின்பற்றிக்கிட்டிருக்கோம். எவ்வளவு மோசமான ஆளா இருந்தாலும் வேற வழிகள்ள போராடி அவனைத் தோக்கடிக்கணுமே தவிர, அவனைக் கொல்லக் கூடாது. வேற வழியில முயற்சி செஞ்சு அந்த நிலங்களை அரசாங்கம் எடுக்க முடியாம பண்ணுவோம்!" என்றார் சதீஷ் சந்திரா.

"இல்லை. தோழர் சதீஷ்! நீங்க அனுமதிக்காட்டாலும் நான் இதைத்தான் செய்யப் போறேன். ஏழை விவசாயிகளைக் காப்பாத்த வேற வழி எனக்குத் தெரியல!" என்றார் சோமா பிடிவாதமாக.

மற்ற தலைவர்கள் அதிர்ச்சியுடன் சதீஷ் சந்திராவைப் பார்க்க, அவர் மௌனமாக இருந்தார்.

"அப்படி செஞ்சா என்ன பண்ணுவீங்க? என்னைக் கொன்னுடுவீங்களா? ஆனா யாரையும் கொல்லக் கூடாதுங்கறது உங்க கொள்கையுமாச்சே!" என்றார் சோமா எகத்தாளமாக.

"தோழர் சோமா! நிச்சயமா உங்களை நான் கொல்ல மாட்டேன். உங்க முடிவைச் செயல்படுத்த நான் அனுமதிக்கவும் மாட்டேன். இந்தப் பிரச்னையை அமைதியான போராட்டங்கள் மூலம் நானே தீர்க்கறேன். அதுவரையில் நீங்க என் விருந்தாளியா இங்கேயே இருங்க!" என்ற சதீஷ் சந்திரா அங்கிருந்த இருவரைப் பார்த்துக் கண்ணசைக்க, அவர்கள் சோமாவைப் பிடித்து அருகில் இருந்த அறைக்குள் தள்ளிக் கதவைப் பூட்டினார்கள்.   
                                                                   
குறள் 328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

பொருள்:
கொலையால் பெரிய நன்மை கிடைக்கும் என்றாலும், சான்றோர்கள், கொல்லும் செயலை இழிவானதாகவே கருதுவார்கள்.

329. அரசியலில் இதெல்லாம் சகஜம் இல்லை!

தமிழ் மக்கள் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராஜரத்தினம் திடீரென்று அந்தக் கட்சியிலிருந்து விலகியது ஒரு பரபப்பான செய்தி ஆயிற்று. அவர் சமூக நீதிக் கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சமூக நீதிக் கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவர் சாமிநாதன் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

"இன்னிக்கு சாயந்திரம் ராஜரத்தினம் என்னை வந்து சந்திக்கப் போறாரு. அவரு அநேகமா நம்ம கட்சியில சேர விருப்பம் தெரிவிப்பார்னு எதிர்பாக்கலாம். அது பத்தி நீங்கல்லாம் என்ன நினைக்கிறீங்க?" என்றார் சாமிநாதன்.

ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் ராஜரத்தினம் தங்கள் கட்சியில் இணைந்தால் அது கட்சிக்கு வலு சேர்க்கும் என்றே எல்லோரும் கருத்துத் தெரிவித்தனர். தங்கள் கட்சிக்கும், தமிழ் மக்கள் கட்சிக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிப்பதால், ஜாதிச் செல்வாக்கு உள்ள ராஜரத்தினத்தின் வரவு தங்கள் கட்சிக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

கட்சியில் ராஜரத்தினம் தனக்கு ஒரு முக்கிய பதவியை எதிர்பார்ப்பார் என்றும் அவர் விரும்பும் பதவியைக் கொடுத்து அவரைக் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அனைவரும் ஒருமித்த குரலில் கூறினர்.

"உங்களோட கருத்துக்களை சொல்லிட்டீங்க. நான் என்ன முடிவு எடுத்தாலும் அதை நீங்க ஏத்துப்பீங்க இல்ல?" என்றார் சாமிநாதன்.

"நிச்சயமா தலைவரே!" என்றனர் அனைவரும்.

ராஜரத்தினம் விரும்பியபடி அவர் சாமிநாதனுடன் பேசும்போது வேறு யாரும் உடன் இருக்கவில்லை.

தான் சமூக நீதிக் கட்சியில் சேர்ந்தால் அந்தக் கட்சிக்கு அது எந்த விதத்தில் பயனளிக்கும் என்பதை பற்றி ராஜரத்தினம் கூறியதைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்ட சாமிநாதன், "ஆமாம், அரசியலுக்கு வரதுக்கு முன்னால நீங்க என்ன செஞ்சுக்கிட்டிருந்தீங்க?" என்றார்.

ராஜரத்தினம் சற்று திடுக்கிட்டவராக," ம்ம்... சொந்தமா தொழில் செஞ்சுக்கிட்டிருந்தேன்" என்றார்.

"என்ன தொழில்?"

"அதைப் பத்தி என்ன? நாம என்ன கூட்டா தொழில் செய்யவா போறோம்?" என்றார் ராஜரத்தினம் சற்று எரிச்சலுடன்.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த சாமிநாதன், "எங்க கட்சியில சேர விரும்பறவங்களோட பின்னணியை விசாரிக்கிறது என்னோட பழக்கம். உங்க பின்னணி பத்தி நான் விசாரிச்சுட்டேன்" என்று சொல்லி நிறுத்தி ராஜரத்தினத்தைப் பார்த்தார்.

ராஜரத்தினம் மௌனமாக இருந்தார்.

"ஆரம்பத்தில  நீங்க கூலிக்குக் கொலை செய்யறவரா இருந்திருக்கீங்க. பெரிய மனுஷங்ககிட்ட பெரிய தொகை வாங்கிக்கிட்டு அவங்க சொல்ற ஆளைக் கொலை செய்யற கான்டராக்ட் கில்லர்!"

"அதனால் என்ன? நீங்க என்ன சாமியார் மடமா நடத்தறீங்க?" என்றார் ராஜரத்தினம் கோபம் பொங்கிய குரலில்.

"நான் நடத்தறது ஒரு அரசியல் கட்சிதான். அரசியல் கட்சிகளைப் பத்திப் பொதுவா எல்லோரும் சொல்ற குற்றச்சாட்டுகளை எங்களைப் பத்தியும் சொல்லலாம். ஆனா ஒரு விஷயத்தில நாங்க உறுதியா இருக்கோம். வன்முறை அறவே கூடாதுங்கறது நாங்க கடுமையாக கடைப்பிடிக்கிற கொள்கை. எங்களோட எந்தப் போராட்டத்திலேயும் கடுகளவு வன்முறை கூட இருந்தது கிடையாது. எங்களைக் கடுமையா விமர்சனம் பண்றவங்க கூட இதை ஒத்துக்கிட்டிருக்காங்க."

"நான் கூலிக்குக் கொலை செஞ்சதெல்லாம் பழங்கதை. அரசியலுக்கு வந்தப்பறம் நான் எந்தக் கொலையும் செஞ்சதில்லை. உங்க கட்சியில சேந்தப்பறம் நானும் முழு அஹிம்சாவாதியா மாறிடறேன்! ஏதாவது உறுதிப் பத்திரம் எழுதிக் கொடுக்கணும்னாலும் எழுதிக் கொடுக்கறேன்" என்றார் ராஜரத்தினம்.

"மன்னிச்சுக்கங்க ராஜரத்தினம். கொலைப் பின்னணி உள்ள உங்களை எங்க கட்சிக்குள்ள சேத்துக்க முடியாது" என்றார் சாமிநாதன் சுருக்கமாக.

சாமிநாதனைச் சந்தித்து விட்டு வெளியே வந்த ராஜரத்தினம் வெளியே காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசாமல் காரில் ஏறிச் செல்ல, சாமிநாதனின் அறைக்கு வெளியே காத்திருந்த அவர் கட்சியின் முக்கியத் தலைவர்கள் என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொள்ள முடியாமல் திகைத்தனர். 

குறள் 329
 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

பொருள்:
கொலைத் தொழில் செய்பபவர்கள் அதன் இழிவை ஆராய்ந்து உணர்ந்தவர்களிடையே கீழ்த்தரமானவர்களாகத்தான் கருதப்படுவர்.

330. இனம் காண முடியாத நோய் 
ஆறு மாதமாக குமரகுரு படுத்த படுக்கையாக இருந்தான். உள்ளூர் மருத்துவர்களால் என்ன பிரச்னை என்று கண்டு பிடிக்க முடியவில்லை.

வெளியூருக்குச் சென்று பெரிய மருத்துவர்களிடம் காட்ட அவன் மனைவி முத்தழகுக்கு வசதியில்லை. 

குடும்பத்தைக் காப்பாற்ற முத்தழகு வயல் வேலை, வீட்டு வேலை என்று நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருந்தது. 

'நல்ல வேளை எனக்குக் குழந்தைகள் இல்லை. இருந்திருந்தால் அவர்களைக் காப்பாற்றுவது பெரும்பாடாக இருந்திருக்கும்' என்று நினைத்துக் கொண்டாள் முத்தழகு. 

இத்தனை காலமாக ஒரு குறையாக இருந்த விஷயம் இப்போது ஒரு ஆறுதலாக அமைந்து விட்டது விசித்திரமாக இருந்தது. 

ன்று முத்தழகு வெளியில் போய் விட்டு வீட்டுக்குத் திரும்பியபோது குமரகுருவின் அருகில் யாரோ அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள் .

"இவன் என் சிநேகிதன் தண்டபாணி. சின்ன வயசில நாங்க ஒண்ணா வேலை செஞ்சோம்!" என்றான் குமரகுரு.

"எங்கே?" என்றாள் குமரகுரு. 

தண்டபாணி என்ன பதில் சொல்லலாம் என்று யோசிப்பது போல் தோன்றியது.

"நான் என்ன கம்பெனியிலேயா வேலை செஞ்சேன்? கூலி வேலை செய்யறப்ப அவனும் நானும் சில சமயம் சேர்ந்து வேலை செஞ்சிருக்கோம்" என்றான் குமரகுரு எரிச்சலுடன்.

"சாதாரணமாத்தான் கேட்டேன். அதுக்கு ஏன் இப்படி வள்ளுன்னு விழற?" என்ற முத்தழகு, தண்டபாணியைப் பார்த்து, "காப்பித் தண்ணி குடிக்கறீங்களா?" என்றாள் குரலில் கனிவை வரவழைத்துக் கொண்டு ..

"அதெல்லாம் வேணாம். நீங்களே வெளியில போயிட்டுக் களைச்சு வந்திருக்கீங்க!" என்றான் தண்டபாணி .

"காப்பி போடு முத்தழகு. நீயும் களைச்சுப் போய் வந்திருக்க. நீயும் கொஞ்சம் குடிச்சுக்க!" என்றான் குமரகுரு, மனைவியைச் சமாதானப்படுத்துவது போல். 

"இதோ போடறேன்" என்று உள்ளே போன முத்தழகு, "காப்பித்தூள் இல்ல. கடையில போய் வாங்கிட்டு வந்துடறேன்" என்று கிளம்பினாள். 

"அதான் வேணாம்னு சொன்னேனே!" என்று தண்டபாணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே முத்தழகு வெளியே போய் விட்டாள்.

முத்தழகு வெளியே சென்றதும் நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். 

"சின்ன வயசில செய்யக் கூடாததெல்லாம் செஞ்சுட்டோம். கூலி வாங்கிக்கிட்டு அடிதடிஎல்லாம் செஞ்சிருக்கோம். ஒரு அப்பாவி மனுஷனைக் கொலை கூட செஞ்சிருக்கோம். அதான் இப்படிப் படுத்துதுன்னு நினைக்கறேன்" என்றான் குமரகுரு.

காப்பி தம்ளருடன் முத்தழகு உள்ளே வந்தாள்.

"நீ கடைக்குப் போயிட்டு எப்ப திரும்பி வந்தே? நீ வந்ததை நான் பாக்கவே இல்லையே!" என்றான் குமரகுரு சற்று அதிர்ச்சியுடன்.

"அப்பவே வந்துட்டேன். நீங்க ரெண்டு பெரும் சேந்து செஞ்ச கொலையைப் பத்திப் பேசிக்கிட்டிருந்ததில நான் வந்ததை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க!" என்றாள் முத்தழகு, தண்டபாணியிடம் காப்பி தம்ளரை நீட்டியபடியே. 

குறள் 330
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

பொருள்:
நோய் மிகுந்த உடலுடன் வறுமையில் வாழ்பவர் முன்பு கொலைகள் செய்தவர்களாக இருப்பார்கள் என்று அறிஞர் கூறுவர்.

அதிகாரம் 32 - இன்னா செய்யாமை

          பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment