About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, December 7, 2020

380. திட்டமிட்ட வாழ்க்கை

ரவீந்திரன் வேலைக்குச் சேர்ந்தபோது அவன் அலுவலகத்தின் ஊழியர் பயிற்சிப் பள்ளியில் அவனுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. 

அந்தப் பயிற்சிப் பள்ளியின் தலைமை அதிகாரியாக இருந்த தயாளன் தன் உற்சாகமான அணுகுமுறையாலும், சிந்தனையைத் தூண்டும் பேச்சுக்களாலும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். 

"திட்டம் போட்டுச் செயல்பட்டா எல்லாத்திலேயுமே வெற்றி கிடைக்கும்" என்று அவர் ஒரு முறை கூறியது ரவீந்திரனின் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது.

அவர் கூறியதை ஒரு கட்டளை போலவே கருதித் தன் வாழ்க்கையின் எல்லாச் செயல்பாடுகளையும் நடத்துவதை ரவீந்திரன் ஒரு பழக்கமாகவே ஆக்கிக் கொண்டான். 

அலுவலகத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சவால்களைச் சந்தித்தபோதும், பிரச்னைகளை எதிர்கொண்டபோதும் இந்த அணுகுமுறை மிகவும் பயனுள்ளதாக இருந்ததை ரவீந்திரன் அனுபவத்தில் கண்டான்.

தயாளனுடன் தனக்கு ஏற்பட்ட அறிமுகத்தைத் தொடர்ந்து நிலை நிறுத்திக் கொள்ள விரும்பி அவருடன் தொடர்பிலேயே இருந்தான் ரவீந்திரன். 

இருவரும் வெவ்வேறு ஊர்களிலும், வெவ்வேறு நிலைகளிலும் பணியாற்றினாலும், தயாளனை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியபோதெல்லாம் அவரிடம் தனிமையில் சிறிது பேசி அவரிடம் ஓரளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான் ரவீந்திரன்.

ஆயினும் தயாளன் வேலையிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு அவருடனான தொடர்பு விட்டுப் போய் விட்டது. ஓய்வு பெற்ற பின் அவர் விஜயவாடாவில் வசிப்பதாக மட்டும் ரவீந்திரன் அறிந்து கொண்டான். 

யாளன் ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருக்கும். ரவீந்திரனுக்கு அலுவலக வேலையாக விஜயவாடா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. விஜயவாடா அலுவலகத்தில் தன் வேலைகள் முடிந்ததும், தயாளனைச் சந்திக்கலாம் என்று நினைத்து அலுவலகத்தின் கிளை மேலாளரிடம் அவரைப் பற்றி விசாரித்தான் அவன்.

"இந்த ஊர்லதான் இருக்காரு. ஆனா நீங்க அவரைப் போய்ப் பாக்கறதை அவரு விரும்புவாரன்னு தெரியல!" என்றார் அவர்.

"ஏன், அவருக்கு உடம்பு  சரியில்லையா?"

"அதெல்லாம் எதுவும் இல்ல. அவர் பையன் ஒரு பிசினஸ் ஆரம்பிச்சான். இவர் தன் சேமிப்பையெல்லாம் கொடுத்து உதவினதோட, தன் வீட்டையும் பாங்க்குக்கு செக்யூரிட்டியாக் கொடுத்தாரு. அவன் பிசினஸ்ல பெரிய நஷ்டம் வந்து, பாங்க்ல நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சாங்க. வேற வழி இல்லாம தயாளன் சார் தன் வீட்டை வித்து பாங்க் கடனையும் மத்த கடன்களையும் அடைச்சாரு. இப்ப எல்லாம் போய் சின்னதா ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கிட்டு அதில இருக்காரு. இப்ப நீங்க அவரைப் போய்ப் பாத்தா அவருக்கு மனசு வருத்தமா இருக்கும் இல்ல?"

"அடப்பாவமே! தயாளன் சார் எல்லாத்தையும் திட்டம் போட்டு கவனமாச் செய்யறவராச்சே!" என்றான் தயாளன் நம்ப முடியாமல்.

"பிள்ளைப் பாசம் அவர் கண்ணை மறைச்சிருக்கும், அல்லது அவர் பையன் அவர் சொன்னதைக் கேக்காம செயல்பட்டிருக்கலாம். ம்... விதி யாரை விட்டது?" என்றார் கிளை மேலாளர். 

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

பொருள்:
விதியை விட வலுவானது வேறென்ன இருக்கிறது? விதியை வெற்றி கொள்ளும் வகையில் வேறு வழி அமைந்தாலும், விதி அதை முந்திக்கொண்டு செயல்படும்.
(அறத்துப்பால் நிறைவுற்றது)
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Sunday, December 6, 2020

379. மாறும் நிலைமைகள்

சுமதி அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது நேரமாகி விட்டது. பஸ் பிடித்து வீட்டுக்குச் செல்வதற்குள் அம்மாவைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ் வீட்டுக்குக் கிளம்ப வேண்டிய நேரம் தாண்டி இருக்கும். நேரமாகி விட்டது என்று அவள் வேறு சிடுசிடுக்கப் போகிறாள்!

சுமதி நினைத்தபடியே நர்ஸ் கிளம்பத் தயாராயிருந்தாள். ஆனால் சுமதி பயந்தது போல் அவள் சிடுசிடுக்கவில்லை. "சாரி, கொஞ்சம் லேட்டாயிடுச்சு" என்று சுமதி சொன்னபோது, "பரவாயில்லை" என்று அவள் சிரித்துக்கொண்டே கூறியது சுமதிக்கு ஆறுதலாக இருந்தது.

அறைக்குள் போய் அம்மாவைப் பார்த்துப் பேசி விட்டு சமையலறைக்குச் சென்று இரவுச் சமையலுக்கான வேலையைத் துவக்கினாள் சுமதி. டியூஷனுக்குப் போய் விட்டு வந்ததும் ரவியும், கலாவும் பசியுடன் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்காக விரைவில் சாலட்களைச் செய்து வைத்தாள். 

சுமதி அவள் பெற்றோர்களுக்கு ஒரே பெண். இரண்டு வருடங்களுக்கு முன் சுமதியின் தந்தை இறந்தவுடன் அவள் அம்மா தங்களுடன் வந்து இருக்க வேண்டும் என்று அவள் கணவன் பரத் கூறினான். அவள் அம்மா முதலில் சற்றுத் தயங்கினாலும், பரத் வற்புறுத்தி அழைத்ததால் ஒப்புக் கொண்டார்.

அம்மா வந்ததிலிருந்து சுமதிக்கு வாழ்க்கை எளிதானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் ஆகி விட்டது. சமையல் வேலையில் பெரும்பகுதி, சுமதியும், பரத்தும் வீட்டில் இல்லாத சமயங்களில் ரவியையும், கலாவையும் பார்த்துக் கொள்வது ஆகிய பொறுப்புக்களை அவள் எடுத்துக் கொண்டது சுமதிக்குத் தன் சுமை அனைத்துமே இறக்கி வைக்கப்பட்ட உணர்வை ஏற்படுத்தியது.

ஆனால் மூன்று மாதங்களுக்கு முன் அவள் அம்மாவுக்கு இதய நோய் ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவர் மூன்று மாதங்கள் முழு ஒய்வில் இருக்க வேண்டுமென்றும் அதற்குப் பிறகும் அவர் அதிகம் தன் உடலை வருத்திக் கொள்ளக் கூடாதென்றும் மருத்துவர்கள் கூறி விட்டனர். 

அதற்குப் பிறகு, சுமதியின் வேலைச்சுமை மிகக் கடுமையாகி விட்டது. வீட்டு வேலைகளைத் தவிர அம்மாவை கவனித்துக் கொள்ளும் கூடுதல் பொறுப்பும் சேர்ந்து கொண்டு விட்டது. 

சுமதி, பரத் இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதால் பகல் வேளையில் மட்டும் அவள் அம்மாவை கவனித்துக் கொள்ள ஒரு நர்ஸை ஏற்பாடு செய்திருந்தார்கள். 

8 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தபோதே, "சுமதி கொஞ்சம் காப்பி கிடைக்குமா?" என்று கேட்டுக்கொண்டே வந்தான் பரத். இது தினசரி வழக்கம் என்றாலும், ஏதோ அன்று மட்டும் கேட்பது போல்தான் அவன் தினமும் கேட்பான். 

'இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பிடணும், 8 மணிக்கு காப்பி என்ன வேண்டிக் கிடக்கிறது!' என்று அலுத்துக்கொண்டே காப்பி கலக்க ஆரம்பித்தாள் சுமதி. 

சுமதி தன் வேலைகளை முடித்து விட்டு, அம்மாவுக்கு வேண்டியவற்றைச் செய்து விட்டு இரவு படுத்துக் கொள்ளச் செல்லும்போது மணி பத்தரை ஆகி விட்டது. 

"உன் அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டதில் உனக்குத்தான் ரொம்பவும் கஷ்டம்" என்றான் பரத் உண்மையான அக்கறையுடன்.

"ஆமாங்க! என்ன செய்யறது! அவங்க பாட்டுக்கு நல்லா ஆரோக்கியமா இருந்தாங்க. என்னை ஒரு வேலையும் செய்ய விடாம எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செஞ்சுக்கிட்டிருந்தாங்க. அவங்களை இப்படிப் படுக்கையில தள்ளிடுச்சு. ரெண்டு வருஷம் நான் ரொம்ப ஜாலியா, சந்தோஷமா, கவலை இல்லாம இருந்தேன். இப்ப பாருங்க, நிலைமை தலைகீழா மாறிடுச்சு. எல்லாம் நம்ம நேரம்!" என்றாள் சுமதி சலிப்புடன்.

"நீயே சொன்னியே இப்ப, ரெண்டு வருஷம் ஒரு கவலையும் இல்லாம இருந்தேன்னு. அதுவும் நம்ம நேரம்தான் - நல்ல நேரம்! உன் அம்மாவும் ஆரோக்கியமா, சந்தோஷமா இருந்தாங்க. எல்லாம் நல்லா நடக்கறச்சே நம்ம நேரம் நல்லா இருக்கேன்னு நாம நினைக்கறதில்ல. கஷ்டம் வரப்பதான் நேரத்தைக் குறை சொல்றோம்!" என்ற பரத், மனைவி தன்னை முறைப்பதைப் பார்த்து விட்டு, "எல்லாரும் அப்படித்தான். நானும் அப்படித்தான்!" என்றான் எச்சரிக்கை உணர்வுடன்.    

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.

பொருள்:
நல்லவை நடக்கும்போது. நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீயவை நடக்கும்போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Saturday, December 5, 2020

378. துறவறம் வேண்டி...

"துறவி ஆகணும்னா உங்க ஊர்லேயே ஆகி இருக்கலாமே! எதுக்கு இவ்வளவு தூரம் வந்தீங்க?" என்றார் சுவாமி சச்சிதானந்தர்.

"என் சொந்தக்காரங்க, நண்பர்கள் யாரும் என் மனசை மாத்த முயற்சி செய்யக் கூடாதுங்கறத்துக்காகத்தான். என் ஊர்லேந்து தொலைவில இருக்கற இந்த ஊருல சந்நியாசியா இருந்தா, நான் இங்கே இருக்கறது யாருக்கும் தெரியாதுன்னுதான்" என்றான் பலராமன்.

"வீட்டில சொல்லிட்டுத்தான் வந்தாதா சொன்னீங்க?" 

"என் மனைவிகிட்ட என் விருப்பதைச் சொல்லி அவ சம்மதம் வாங்கிட்டேன். அவ குழந்தைகளோட தன் பெற்றோர் வீட்டுக்குப் போயிட்டா. என் மனைவியின் பெற்றோர்கள் வசதியானவங்க. அவங்க என் மனைவியையும், குழந்தைகளையும் காப்பத்துவாங்க. என் குழந்தைகளை நல்லா படிக்க வச்சு முன்னுக்குக் கொண்டு வந்துடுவாங்க. என் குடும்பத்துக்கான எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுத்தான் நான் சந்நியாசியா ஆக இங்கே வந்திருக்கேன்."

"எப்படி எங்க மடத்தைத் தேர்ந்தெடுத்து இந்த ஊருக்கு வந்தீங்க?"

"ரெண்டு வருஷம் முன்னால நீங்க என் ஊருக்கு வந்திருந்தீங்க. உங்க சொற்பொழிவுக்கு நான் வந்திருந்தேன். உங்க சொற்பொழிவு பத்திக் கொடுத்த நோட்டீசில உங்க தலைமை மடத்தோட விலாசம் இருந்ததது. உங்க சொற்பொழிவைக் கேட்டதும் அப்பவே உங்ககிட்ட வந்து சேரணும்னு தோணிச்சு. எனக்குச் சில கடமைகள் இருந்ததால அதையெல்லாம் முடிச்சுட்டு வர ரெண்டு வருஷம் ஆயிடுச்சு."

"நான் என்னோட எந்தப் பேச்சிலேயும் யாரும் சந்நியாசம் வாங்கிக்கணும்னு சொன்னதில்லையே! சந்தோஷமா வாழணும்னுதானே சொல்லிக்கிட்டு வந்திருக்கேன்" என்றார் சச்சிதானந்தர் சிரித்தபடி.

பலராமன் மௌனமாக இருந்தான்.

"சரி. உங்களுக்கு சந்நியாசத்தில விருப்பம் இருந்தா, நான் அதைத் தடுக்க மாட்டேன். இப்ப எல்லாத்துக்குமே ஒரு முறை வந்துடுச்சு. அதனால நீங்க ஒரு படிவத்தை நிரப்பிக் கொடுக்கணும்" என்றார் சச்சிதானந்தர்.

"விண்ணப்பப் படிவமா?" என்றான் பலராமன் சிரித்தபடி. 

சச்சிதானந்தர் அவனை சந்நியாசியாக ஏற்றுக் கொள்ள அனேகமாகச் சம்மதித்து விட்டார் என்று தோன்றியதால் அவன் இறுக்கம் சற்றுத் தளர்ந்திருந்தது.

தன்னிடம் கொடுக்கப்பட்ட படிவத்தைப் படித்துப் பார்த்ததும், மீண்டும் சச்சிதானந்தரின் அறைக்குச் சென்ற பலராமன், "இதில என் கடைசி விலாசம், என் பின்னணி விவரங்கள் எல்லாம் கேட்டிருக்கே? நான் இருக்கற இடம் யாருக்கும் தெரியக் கூடாதுன்னு உங்க கிட்ட விளக்கினேனே!" என்றான்.

"கவலைப்படாதீங்க! நீங்க இங்கே இருக்கறதை நாங்க யார் கிட்டேயும் சொல்ல மாட்டோம். ஆனா சந்நியாசியா சேர விரும்பறவங்களோட பின்னணி விவரங்களை வாங்கி வச்சுக்கறது இங்கே இருக்கிற நடைமுறை" என்றார் சச்சிதானந்தர்.

பலராமன் படிவத்தை நிரப்பிக் கொடுத்ததும், அவனை மீண்டும் தன் அறைக்கு அழைத்த சச்சிதானந்தர், "பலராமா! இங்கே சந்நியாசியா சேர விரும்பறவங்களுக்கு ஒரு வாரம் ஒரு பயிற்சி உண்டு. அந்தப் பயிற்சி முடிஞ்சப்பறம் நாங்க மேற்கொண்டு முடிவெடுப்போம்!" என்றார்.

முதல்முறையாக சச்சிதானந்தர் தன்னை ஒருமையில் விளித்ததது அவர் தன்னை ஏற்றுக் கொண்டு விட்டார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், பயிற்சியைத் தான் வெற்றிகரமாக முடிக்க வேண்டுமே என்ற கவலை பலராமனுக்கு ஏற்பட்டது.

அவன் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டது போல், "கவலைப்படாதே! பயிற்சின்னா தியானம், பிராணாயாமம், உணவுக் கட்டுப்பாடு. மௌன விரதம், தனிமையில் இருப்பது இதெல்லாம்தான் இருக்கும். சந்நியாசம் ஆகணுங்கற உறுதி இருக்கறவங்களுக்கு இது ரொம்ப எளிமையாத்தான் இருக்கும்!" என்று சிரித்தபடி கூறினார் சச்சிதானந்தர்.

யிற்சி முடிந்த பிறகு, பலராமனைத் தன் அறைக்கு அழைத்த சச்சிதானந்தர், "நீ எதுக்கு சந்நியாசி ஆக விரும்பின?" என்றார்.

"எனக்கு இல்லறத்தில ஈடுபாடு இல்ல, துறவறத்திலதான் எனக்கு விருப்பம் இருந்தது" என்றான் பலராமன், திடீரென்று இவர் ஏன் இப்படிக் கேட்கிறார் என்று வியந்தபடி.

அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்த சச்சிதானந்தர், "உனக்கு வாழ்க்கையில நிறைய பிரச்னை. உன் தொழில் சரியா நடக்கல. உன் குடும்பத்தைக் காப்பத்த முடியமான்னு உனக்குக் கவலை வந்துடுச்சு. அதனாலதான் பிரச்னைகளிலேந்து தப்பிச்சுக்கறத்துக்காக நீ சந்நியாசி ஆக முடிவு செஞ்சுட்ட!"

"சுவாமி! என்னைப் பத்தி விசாரிச்சீங்களா?" என்றான பலராமன் அதிர்ச்சியுடன்.

"ஆமாம்" என்றார் சச்சிதானந்தர் சிரித்தபடி,

"நான் இருக்கற இடத்தை யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்னு சொன்னீங்களே!"

"சொல்லல. எங்ககளுக்கு அனேகமா எல்லா ஊர்லயுமே தொடர்புகள் இருக்கு. அவங்க மூலமா விசாரிச்சோம். துறவுல ஈடுபாடு ஏற்பட்டுத் துறவு வாங்கிக்கறது சரிதான். ஆனா, துறவியாயிட்டா பிரச்னைகள்ளேந்து தப்பிச்சுடலாம் நினைக்கறது உண்மையான துறவு இல்ல."

"இல்லை சுவாமி! போராடிப் போராடி அலுத்துட்டேன், விதி எப்பவுமே எனக்கு எதிராவே இருக்கற மாதிரி இருக்கு. நான் விலகிப் போயிட்டா என் மனைவி தன் பெற்றோர் உதவியோட குடும்பத்தை எப்படியும் காப்பத்திடுவா, ஆனா நான்  இருக்கும்போது, அவங்க உதவியைக் கேக்கவும் முடியாது, அவங்களா உதவி செஞ்சா அதை ஏத்துக்கவும் முடியாது. அதனாலதான் என் மனைவி கிட்ட பேசி இதுக்கு சம்மதிக்க வச்சேன். சந்நியாசியா ஆகலேன்னா நான் தற்கொலை செஞ்சுக்கற மனநிலைக்குப் போயிடுவேன்னு சொல்லித்தான் அவளை அவளை சம்மதிக்க வச்சேன். அவளையும் என் பிள்ளைங்களையும் அவ பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிட்டு நான் இங்கே கிளம்பி வந்தேன். அவளோட பெற்றோர்கள் கொஞ்ச நாளைக்கு என் மேல கோபமா இருந்தாலும் என் குடும்பத்தை எப்படியும் காப்பாத்திடுவாங்க, என் குடும்பத்தோட விதியை மாத்த இதுதான் வழின்னு நினைச்சேன்" என்றான் பலராமன் இயலாமையுடன்.

"பலராமா! சந்நியாசம் வாங்கிக்கறதன் மூலமா நமக்கு வாழ்க்கையில வரக் கூடிய துன்பங்களைத் தவிர்த்துடலாம்னு எல்லோரும் நினைச்சா, அப்புறம் உலகத்தில சந்நியாசிகள்தான் மிஞ்சுவாங்க. வாழ்க்கையில வர பிரச்னைகளையும், துன்பங்களையும் ஏத்துக்கிட்டு அவற்றை சமாளிச்சுத்தான் ஆகணும், இதைத் தவிர்க்க குறுக்கு வழி எதுவும் கிடையாது. நல்லது நடக்குங்கற நம்பிக்கையோட துன்பங்களை எதிர்கொண்டு வாழறதுதான் வாழ்க்கை. நீ உடனே ஊருக்குத் திரும்பிப் போய் உன் குடும்பத்தோட வாழ்க்கை நடத்து. இந்த ஒரு வாரமா நீ பயிற்சி செஞ்ச விஷயங்கள் உனக்கு உதவியாக இருக்கும். கடவுளோட அருள் உன் குடும்பத்துக்கு முழுமையா இருக்கணும்னு வாழ்த்துகிறேன்" என்றார் சச்சிதானந்தர்.

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.

பொருள்:
வர வேண்டிய துன்பங்கள் வராமல் நீங்குமென்றால், நுகர்வதற்கான பொருட்கள் இல்லாத ஏழைகள் துறவறம் மேற்கொள்வர்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Friday, December 4, 2020

377. "விருந்தினர் மாளிகை"

"என்ன, சாப்பாடு தயாரா?"

"அஞ்சு நிமிஷத்தில ரெடி ஆயிடும் சார்."

"சீக்கிரம் ஆகட்டும். நாங்க வெளியில கிளம்பணும்!" என்றது திருமதி சசிசேகரின் அதிகாரமான குரல்.

சதாசிவம் பல்லைக் கடித்துக் கொண்டு சமையலை முடிப்பதில் கவனம் செலுத்தினான். 

"டேய் ராகவா! வாணலியில எண்ணெய் வச்சு பத்துப் பதினைஞ்சு அப்பளம் பொறிச்சுடு. பொரியல், கூட்டுன்னு வகை வகையாச் செஞ்சிருஞ்சாலும், அப்பளம் பொரிக்கலியான்னு கேப்பாங்க!" என்றான் சதாசிவம், சமையலில் தனக்கு உதவிக் கொண்டிருந்த தன் தம்பி ராகவனிடம்.

சாப்பிட்டு முடித்ததும், குடும்பத்துடன் வெளியே கிளம்பத் தயாரான சசிசேகர், "நாலு மணிக்கு வந்துடுவோம். ஏதாவது ஸ்வீட், அப்புறம் பஜ்ஜி இல்லேன்னா போண்டா செஞ்சு வச்சுடு. சாப்பிட்டுட்டு மறுபடி சைட் சீயிங்குக்குப் போகணும்!" என்றான்.

'மூணு நாளா இதைத்தானே செஞ்சுக்கிட்டிருக்கீங்க? சாப்பிடறது, ஊர் சுத்தறது!' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட சதாசிவம், "சரி சார்!" என்றான். 

மறுநாள் சசிசேகரின் குடும்பம் ஊருக்குக் கிளம்பியது.

அவர்கள் கிளம்பிச் சென்றதும், "அப்பா! ஒழிஞ்சாங்க! நாலு நாளா என்ன பாடு படுத்திட்டாங்க! என்ன ஒரு தீனி, என்ன ஒரு அதிகாரம், ஆர்ப்பாட்டம்!" என்று ராகவனிடம் அலுத்துக் கொண்ட சதாசிவம், "நல்ல வேளை இந்த சமயத்தில நீ ஊரிலேந்து வந்தது நல்லதாப் போச்சு. இல்லேன்னா என் பாடு திண்டாட்டமா ஆகி இருக்கும்!" என்றான்.

"ஏண்ணே! நீ இந்த வீட்டுக்கு வாட்ச்மேன்தானே? சமையல் வேலையையும் நீயேதான் பாக்கணுமா? அதுக்கு வேற ஆளு வைக்க மாட்டாங்களா?" என்றான் ராகவன்.

"யாராவது இங்க வரப்ப, சமையல்காரர் ஒத்தர் வந்து அவங்க இருக்கற வரைக்கும் ரெண்டு மூணு நாள் வேலை செஞ்சுட்டுப் போவாரு. இந்தத் தடவையும் அவர்கிட்ட சொல்லி இருந்தேன். ஆனா அவரு திடீர்னு ஊருக்குப் போயிட்டாரு. அதனாலதான் நானே சமையல் பொறுப்பையும் எடுத்துக்கிட்டேன்" என்றான் சதாசிவம்.

"இது நீயா வரவழைச்சுக்கிட்டதுதானே? சமையலுக்கு ஆள் கிடைக்கலேன்னு சொல்லி ஓட்டல்லேந்து வரவழைக்க ஏற்பாடு செஞ்சிருக்கலாமே!"

"செஞ்சிருக்கலாம். குழந்தைகள்ளாம் இருக்காங்க, அதனால ஓட்டல்லேந்து வரவழைக்க வேண்டாம், உன்னால முடிஞ்ச அளவுக்கு நீயே சமையல் செஞ்சுடுன்னு முதலாளி ஃபோன்ல சொன்னாரு. நான் நல்லா சமைப்பேன்னு அவருக்குத் தெரியும். அதனால சரின்னு ஒத்துக்கிட்டேன், ஆனா இவங்க இப்படி ஒரு தீனிப் பண்டாரங்களா இருப்பாங்கன்னு எதிர்பார்க்கல!" என்றான் சதாசிவம், வந்திருந்தவர்கள் கொடுத்த தொல்லைகள் ஏற்படுத்திய ஆத்திரம் அடங்காதவனாக.

"முதலாளி ஃபோன் பண்ணிச் சொன்னாரா? அப்ப வந்தவங்க உன் முதலாளி இல்லையா?"

"அவரு எங்கே இங்க வராரு? ஊட்டியில இந்த வீட்டை வாங்கினப்பறம் ஒரு வருஷம் முதலாளி அம்மாவோட வந்தவர்தான். அப்புறம் அவங்க வரதில்ல. ஆனா வருஷா வருஷம் சீசன்போது சொந்தக்காரங்க, நண்பர்கள்னு யாராவது வருவாங்க. இப்ப வந்துட்டுப் போனவங்களும் ஏதோ சொந்தம்தான். இது ஒரு விருந்தினர் மாளிகையாவே ஆயிடுச்சு!"

"ஏன், உன் முதலாளியும் அவங்க குடும்பமும் வரதில்ல?"

"என்னத்தைச் சொல்ல? ஊட்டியில சொந்த வீடு இருந்தும், இங்க வந்து கொஞ்சநாள் இருக்க அவங்களுக்குக் கொடுப்பினை இல்ல போலருக்கு. ரெண்டு பேருக்குமே உடம்பு சரியில்ல. அதனால வீட்டை விட்டு எங்கேயும் போறதில்ல. நல்ல சாப்பாடு கூடச் சாப்பிட முடியாதுன்னு நினைக்கறேன். அவங்களோட ரெண்டு பிள்ளைங்களும் எங்கேயோ வெளிநாட்டில இருக்காங்க. இங்கே வரதே இல்லையாம். ஃபோன்ல பேசறதோட சரின்னு கேள்விப்பட்டேன். 

"ஐயா, அம்மா ரெண்டு பேரும் தங்கமானவங்க. பணம் காசு நிறைய இருக்கு. ஆனா எதையும் அனுபவிக்க முடியாம, வாய்க்கு ருசியாச் சாப்பிடக் கூட முடியாம ரெண்டு பேரும் வீட்டோட அடைஞ்சு கிடக்காங்க. 

"இங்கே எல்லாம் சரியா இருக்கான்னு பாக்க வருஷத்துக்கு ஒரு தடவை ஒரு மானேஜர் வருவாரு. அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். யார் யாரோ வந்து அனுபவிச்சுட்டுப் போறாங்க. ஆனா அவங்களால அனுபவிக்க முடியல. இது மாதிரி இன்னும் எத்தனை சொத்து இருக்கோ அவங்களுக்கு!" என்றான் சதாசிவம் உண்மையான வருத்தத்துடன்.  

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

பொருள்:
ஒருவர் கோடிப் பொருள் குவித்தாலும், இறைவன் வகுத்த விதி இருந்தாலொழிய அவற்றை அவரால் அனுபவிக்க முடியாது.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Saturday, November 28, 2020

376. சாய்வு நாற்காலி

"பாத்துப் பாத்துக் கட்டின வீடு. இப்ப நம்ம கையை விட்டுப் போகப் போகுதே!" என்று புலம்பினான் பிரபாகர்.

"இப்ப புலம்பி என்ன பிரயோசனம்? பிசினஸ் எல்லாம் வேண்டாம், இருக்கற வேலையை விட்டுடாதீங்க, வர சம்பளம் போதும். நான் எப்படியோ குடும்பத்தை சமாளிச்சு நடத்திக்கறேன்னு தலை தலையா அடிச்சுக்கிட்டேன். கேட்டீங்களா?" என்றாள் அவன் மனைவி சாரதா.

"நல்லா நடத்தினியே குடும்பத்தை! நகைச்சீட்டு, புடவைச்சீட்டு, பாத்திரச்சீட்டுன்னு நீ செலவழிக்கற பணத்துக்கு என் சம்பளம் போதாதுன்னுதான் பிசினஸ் ஆரம்பிச்சேன். பாங்க்கில செக்யூரிட்டி கொடுத்தாதான் கடன் கொடுப்பேன்னு சொன்னதால வீட்டை அடமானம் வைக்கும்படி ஆயிடுச்சு. அப்ப கூட நீ உன் நகைகளைக் கொடுத்து உதவி செஞ்சிருந்தா வீட்டை அடமானம் வச்சிருக்க வேண்டி இருந்திருக்காது!"

"சும்மாக்கானும் சொல்லாதீங்க. உங்க அகலக்காலுக்கு என் நகைகள் எப்படிப் போதும்?  நீங்க பார்ட்னரா சேத்துக்கிட்டீங்களே ஒரு நண்பர், அவரு ஒர்க்கிங் பார்ட்னர்னு சொல்லிக்கிட்டு ரொம்ப சாமர்த்தியமா ஒரு பைசா கூட முதலீடு செய்யாம, பிசினஸ்ல பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி, உங்களை நடு ரோட்டில நிறுத்திட்டு தான் ஒரு சேதாரமும் இல்லாம தப்பிச்சுக்கிட்டரு. உங்க ஏமாளித்தனத்துக்கு என்னைக் குத்தம் சொல்லாதீங்க!" என்றாள் சாரதா ஆற்றாமையுடன்.

மனைவியின் பேச்சு பிரபாகருக்கு ஆத்திரமூட்டினாலும் அவள் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்து பேசாமல் இருந்தான். 

நண்பனின் யோசனையை ஏற்றுத் தனக்குத் தெரியாத தொழிலில் இறங்கியது முட்டாள்தனம். ஒர்க்கிங் பார்ட்னர் என்று தன்னுடன் தொழிலில் இணைந்த நண்பன் ஒரு பைசா கூட முதலீடு செய்யாதபோது, தனக்கு இருந்த ஒரே சொத்தான வீட்டை அடமானம் வைத்தது இன்னும் பெரிய முட்டாள்தனம். 

தொழில் சரியாக வரவில்லை என்று தெரிந்ததும் சீக்கிரமே அதை மூடி விட்டு வெளியே வராமல் சில நாட்களில் எல்லாம் சரியாகி விடும் என்ற நண்பனின் பேச்சை நம்பித் தொடர்ந்து தொழிலை நடத்தி இழப்பை இன்னும் அதிகரித்து இப்போது வீட்டை விற்றுக் கடனை அடைத்து விட்டு வெளியே வந்தால் போதும் என்ற நிலைமை.

பிரகாகர் வீட்டை விற்றுக் கடனை அடைத்து மீதமிருந்த சிறிதளவு பணத்தைச் சேமிப்பாக வைத்துக் கொண்டு சுமாரான ஒரு வேலையைத் தேடிக் கொண்டு ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினான்.

ழைப்பு மணி அடித்ததும் கதவைத் திறந்தான் பிரபாகர். அவன் வீட்டை விலைக்கு வாங்கியிருந்த மாசிலாமணிதான் வந்திருந்தார்.

"வாங்க சார்!" என்று அவரை வரவேற்று அமர வைத்தான் பிரபாகர்.

"வீடு எப்படி இருக்கு?" என்றான் பிரபாகர்.

"வீடு நல்லாத்தான் இருக்கு. வீட்டை விக்கறப்ப ஒரு பழைய சாய்வு நாற்காலியை விட்டுட்டுப் போனீங்க இல்ல?" என்றார் மாசிலாமணி.

"ஆமாம். அது என் அப்பா பயன்படுத்தியது. அது உங்ககிட்டயே இருக்கட்டும்னு சொன்னேனே!"

"தப்பா நினைச்சுக்காதீங்க. வீட்டை வித்தவங்க பொருள் எதையும் நாங்க வச்சுக்கக் கூடாதுன்னு என் மனைவி சென்ட்டிமென்ட்டலா நினைக்கறாங்க. அதானால அதை உங்ககிட்டயே திருப்பிக் கொடுத்துடறேன். வண்டியில ஏத்தி அனுப்பி இருக்கேன், வந்துக்கிட்டு இருக்கு. உங்ககிட்ட நேரில சொல்லிட்டுப் போலாம்னுதான் வந்தேன்."

பிரபாகர் மௌனமாக இருந்தான். அவன் அப்பா பயன்படுத்திய அந்தப் பெரிய மரச் சாய்வு நாற்காலியை எப்போதுமே அவன் மனைவிக்குப் பிடித்திதல்லை.

"உக்காந்தா ஆளை உள்ளே அழுத்திடுது. எழுந்திருக்கவே கஷ்டமா இருக்கு. யாராவது தூக்கி விடணும் போல இருக்கு! இதை வித்துடுங்க" என்று அவனிடம் பலமுறை அவள் சொல்லி இருக்கிறாள்.

பிரபாகர்தான் தன் தந்தையின் நினைவாக அது இருக்கட்டும் என்று எண்ணி அதை வைத்திருந்தான். ஆயினும் அதை யாரும் பயன்படுயதில்லை. சாரதா சொன்னது போல் அதில் சாய்ந்து உட்கார்ந்து விட்டு எழுந்திருப்பதே ஒரு கடினமான உடற்பயிற்சிதான்!

வீட்டை விற்றபின் தான் செல்லப் போகும் சிறிய வாடகை வீட்டுக்கு அதை எடுத்துச் சென்றால் அது இடத்தை அடைக்கும் என்பதால் அதை விற்க முயன்றான் பிரபாகர். ஆனால் பழைய பொருட்களை வாங்கும் வியாபாரிகள் யாரும் அதை வாங்க ஆர்வம் காட்டவில்லை. எனவே தன் வீட்டை வாங்கிய மாசிலாமணியீடம் அதை அவரே வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு வந்தான் பிரபாகர். அதற்காக அவன் அவரிடம் விலை எதுவும் வாங்கவில்லை.

இப்போது அந்தச் சாய்வு நாற்காலி அவனுடைய சிறிய வாடகை வீட்டில் இருக்கும் சிறு இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு முன்னறையில் ஜம்மென்று அமரப் போகிறது!

பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு கையை விட்டுப் போய் விட்டது. வேண்டாமென்று விட்டு விட்டு வந்த பழைய சாய்வு நாற்காலி அவனிடமே திரும்பி வருகிறது.

வேடிக்கைதான் என்று நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டான் பிரபாகர். 

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

பொருள்:
ஒரு பொருளை எப்படிக் காப்பாற்றினாலும் விதி இல்லையென்றால் அது நம்மை விட்டுப் போய் விடும். நமக்குச் சேர வேண்டிய ஒரு பொருளை நாம் வேண்டாமென்று அகற்றி விட்டாலும் அது நம்மிடம் வந்து சேரும்.
பொருட்பால்                                                                                     காமத்துப்பால்

Thursday, November 26, 2020

375. வாய்ப்பும் இழப்பும்

அறிவழகனுக்கு அவன் அலுவலக வேலை தொடர்பாக ஜெர்மனிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது அவன் மனைவி குமுதா மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தாள்.

"இது ஒரு பெரிய வாய்ப்புதான். ஒரு வருஷம் அங்கே இருக்கணும்னு சொல்றாங்க. நடுவில வர முடியாது. நீ கர்ப்பமா இருக்கறப்ப உன்னை விட்டுட்டுப் போக மனசு வல்ல. அதனால இந்த வாய்ப்பை வேண்டாம்னு சொல்லிடப் போறேன்" என்றான் அறிவழகன். 

"அவசரப்பட்டு முடிவு பண்ணாதீங்க. ஒரு வருஷம் ஜெர்மனியில போய் வேலை செஞ்சா பணம் அதிகமா வரும் இல்ல?" என்றாள் குமுதா.

"ரொம்ப நிறைய வரும். அது மட்டும் இல்ல. இந்த அனுபவத்தினால எனக்கு வேலையில சீக்கிரமே ப்ரமோஷன் கிடைச்சு பெரிய அளவுக்கு மேல வர முடியும். வேற வேலைக்குப் போகவும் வாய்ப்புக் கிடைக்கும்."

"அப்ப இதில யோசிக்கறதுக்கு என்ன இருக்கு? எதிர்காலம் நல்லா இருக்கும்னா கொஞ்ச நாள் கஷ்டப்படறதில தப்பு இல்லையே! எப்படியும் பிரசவத்துக்கு நான் என் அம்மா வீட்டுக்குப் போகணும். கொஞ்சம் முன்னாலேயே போறதா இருக்கட்டும். நீங்க ஜெர்மனிலேந்து வரப்ப என்னோட நம்ம குழந்தையும் உங்களை வரவேற்கத் தயாரா இருக்கும்!" என்றாள் குமுதா மனத்தை திடப்படுத்திக் கொண்டு.

"உன்னை மாதிரி ஒரு மனைவி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்" என்றான் அறிவழகன். 

சென்னை வீட்டைக் காலி செய்து சாமான்களை கிராமத்தில் இருந்த குமுதாவின் வீட்டுக்கு அனுப்பி விட்டு, குமுதாவையும் அவள் வீட்டில் கொண்டு விட்டு விட்டு அறிவழகன் ஜெர்மனிக்குக் கிளம்பிச் சென்றான்.

ஜெர்மனிக்குச் சென்ற பின் வாரம் ஒருமுறை கடிதம் எழுதினான் அறிவழகன். குமுதா இருந்த கிராமத்தில் தொலைபேசி வசதி இல்லை. 

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் கிராமத்துக்கு அருகிலிருந்த நகரத்தில் வசித்த அவர்கள் உறவினரின் நண்பர் வீட்டின் தொலைபேசி இருப்பதை அறிந்து அவர்கள் எண்ணைப் பெற்று அதை அறிவழகனுக்கு எழுதி அவன் தொலைபேசியில் அழைக்கும் நேரத்தை முன்பே முடிவு செய்து கொண்டு , குறிப்பிட்ட நாளில் தன் உறவினர் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து அவர் நண்பர் வீட்டுக்குச் சென்று சில மணி நேரம் காத்திருந்த பின் அறிவழகனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் அவனிடம் சில நிமிஷங்கள் பேசினாள் குமுதா.

ஒரு புறம் கணவனிடம் பேசியது மகிழ்ச்சியை அளித்தாலும், கருவுற்ற நிலையில் அவனைப் பிரிந்திருக்கும் மனவேதனையை அதிகரிப்பதாகவே அமைந்தது அந்தத் தொலைபேசி உரையாடல்.

"உனக்கு எப்ப வேணும்னாலும் இங்க வந்து பேசலாம்மா!" என்று அவள் உறவினரின் நண்பர் பெருந்தன்மையுடன் கூறினாலும், அது நடைமுறைக்கு உகந்தது இல்லை என்பதைக் குமுதா உணர்ந்திருந்தாள்

வாரம் ஒருமுறை கடிதம் எழுதிக் கொண்டிருந்த அறிவழகனிடமிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு சில வாரங்கள் கடிதம் வரவில்லை.

ஒரு மாதம் கழித்து அவன் எழுதிய கடிதத்தில், தனக்கு வேலை அதிகமாக இருந்ததால் எழுத முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்ததோடு, வாராவாரம் எழுத விஷயம் இல்லையன்பதால் இனி  அவ்வப்போது தனக்கு நேரம் கிடைக்கும்போதும், முக்கியமான விஷயம் இருந்தால் மட்டுமே எழுதுவதாகவும் அவன் எழுதி இருந்தது குமுதாவுக்கு ஏமாற்றமளித்தது.

குமுதா எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தபோது அவளுக்கு வலி ஏற்பட்டு அவளை அருகிலிருந்த நகரத்திலிருந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள். குமுதாவுக்குக் குறைப் பிரசவம் ஏற்பட்டு குழந்தை இறந்து பிறந்தது.

கணவனைப் பிரிந்த நிலையில் குழந்தையும் இறந்து பிறந்தது குமுதாவை மனதளவில் பெரிதும் பாதித்து விட்டது. குழந்தை இறந்து பிறந்ததைக் கணவனுக்கு எழுதினாள். தனக்கு அதிர்ச்சியும் துயரமும் ஏற்பட்டதாக அறிவழகனிடமிருந்து உடனே பதில் வந்தது. 

ஆனால் அதற்குப் பிறகு அறிவழகனிடமிருந்து கடிதம் வருவது இன்னும் குறைந்து விட்டது. வந்த கடிதங்களிலும் இயந்திரத்தனமான விசாரிப்புகள் மட்டும்தான் இருந்தன. குழந்தை இறந்த வருத்தத்தில் இருக்கும் தனக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் கணவன் எதுவும் எழுதவில்லையே என்ற ஏக்கம் குமுதாவுக்கு ஏற்பட்டது.

றிவழகன் ஜெர்மனிக்குச் சென்று ஒரு வருடம் முடிவும் தருவாயில் அவன் திரும்பி வரும் தேதியைக் கேட்டுக் குமுதா அவனுக்கு எழுதினாள். ஆனால் அவனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.

றிவழகன் சென்று ஒரு வருடத்த்துக்கு மேல்ஆகி விட்டது. 

"மாப்பிள்ளை இத்தனை நேரம் வந்திருக்கணுமே! அவர்கிட்டேந்து தகவல் வரலை. நான் அவங்க ஆஃபீசுக்குப் போய் விசாரிச்சுட்டு வரேன்" என்று சென்னைக்குக் கிளம்பிச் சென்றார் குமுதாவின் தந்தை.

இரண்டு நாள் கழித்து ஊருக்குத் திரும்பி வந்தவர், குமுதாவிடம், "அந்த அயோக்கியன் ஒரு மாசம் முன்னாடியே இந்தியாவுக்கு வந்துட்டானாம்மா!" என்றார் கோபத்துடன்.

தன் கணவனை எப்போதும் மாப்பிள்ளை என்றே குறிப்பிடும் அப்பா இப்போது அவனை அயோக்கியன் என்று குறிப்பிட்டதிலிருந்தே ஏதோ விபரீதம் நடந்திருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்ட குமுதா, "என்னப்பா சொல்றீங்க?" என்றாள் தன்னைத் தாக்கப் போகும் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ளத் தன்னைத் தயார் செய்து கொண்டவளாக.

"அவனோட வேலை செய்யற ஒரு பெண்ணும் ஜெர்மனிக்கு அவனோட போயிருக்கா. ரெண்டு பேரும் சேர்ந்து ஜெர்மனியில இருக்கறப்ப அவங்களுக்குள்ள நெருக்கம் ஏற்பட்டிருக்கு. இந்தியாவுக்குத் திரும்பறத்துக்கு முன்னாலேயே ரெண்டு பேரும் டெல்லி ஆஃபீசுக்கு மாற்றல் வாங்கிக்கிட்டு ஜெர்மனியிலேந்து நேரா டெல்லிக்கு வந்துட்டாங்களாம்" என்றார் அவள் அப்பா குமுறலுடன்.

"உங்களுக்கு யாருப்பா இதையெல்லாம் சொன்னாங்க?" என்றாள் குமுதா அழுகையை அடக்கிக் கொண்டு.

"அவங்க ஆஃபீஸ்ல எல்லாருக்கும் இது தெரிஞ்சிருக்கும்மா. அங்கே வேலை செய்யற அவன் ஃபிரண்ட் மனோகர்ங்கறவர்தான் இதைச் சொன்னாரு. உனக்கு அவரைத் தெரியுமாமே! உங்க வீட்டுக்கெல்லாம் வந்திருக்காராமே!"

"ஆமாம்ப்பா! அவரு சொன்னா சரியாத்தான் இருக்கும். ஜெர்மனிக்குப் போய் ரெண்டு மூணு மாசத்திலேந்தே அவர்கிட்ட ஒரு மாறுதல் இருக்கறதை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். ஏதோ நடக்கப் போகுதுன்னு பயந்துகிட்டுத்தான் இருந்தேன்..."

பேசிக் கொண்டிருக்கும்போதே அவள் குரல் விம்மியது. அழுகை உடைத்துக்கொண்டு வந்தது.

சற்று நேரம் மௌனமாக மகள் அழுவதை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த அவள் அப்பா, "உன் குழந்தை இறந்து பிறந்தப்ப எல்லாருக்குமே அது ஒரு பெரிய சோகமா இருந்துச்சு. இப்ப நடந்த்தைப் பாப்பறப்ப அது கூட ஒரு விதத்தில நல்லதுதான்னு தோணுது!" என்றார்.

"நான் கர்ப்பமா இருக்கறப்ப என்னைத் தனியா விட்டுட்டு ஜெர்மனிக்குப் போகலைன்னுதான் அவர் சொன்னாரு. நான்தான் பணம் கிடைக்கும், அவருக்குப் பதவி உயர்வு கிடைக்கும், எங்க எதிர்காலத்துக்கு நல்லதுன்னெல்லாம் நினைச்சு அவரைப் போகச் சொன்னேன். எங்க நன்மைக்குன்னு நான் நினைச்சு செஞ்ச காரியம் இப்ப எனக்கே கெடுதலா அமைஞ்சுடுச்சே அப்பா!" என்றாள் குமுதா அழுது கொண்டே.

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

பொருள்:
நாம் செல்வம் ஈட்டும் முயற்சியில், சில சமயம், விதிவசத்தால் நல்லவை தீயவையாகும், தீயவை நல்லவையாகும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Sunday, November 15, 2020

374. பழைய மாணவன்

தன் பள்ளி ஆசிரியர் தாமோதரன் சென்னையில் வசிப்பதாக அறிந்து அவரைப் பார்க்க விரும்பினான் வேலு. நாற்பது வருடங்களுக்கு முன் படித்த தன்னை அவருக்கு நினைவிருக்குமா என்ற ஐயம் அவனுக்கு இருந்தாலும், அவர் மீது அவனுக்கு இருந்த மரியாதையால் அவரைப் பார்க்கச் சென்றான்.

"சார்! நான் உங்க பழைய மாணவன். என் பேர் வேலு" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் வேலு.

கண்ணாடியை எடுத்துத் துடைத்துப் போட்டுக் கொண்டு அவனை உற்றுப் பார்த்த தாமோதரன், "ம்மம்ம்...வேலு... எந்த வருஷம் படிச்ச?" என்றார்.

சொன்னான். 

"உடனே ஞாபகம் வரல. உக்காரு. கொஞ்ச நேரம் பேசினா ஞாபகம் வரதான்னு பாக்கலாம்" என்றார் தாமோதரன்.

ஓரிரு நிமிடங்கள் வேலு அவரிடம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தான்.

திடீரென்று அவனை இடைமறித்த தாமோதரன், "டேய் வேலு! உன்னை எப்படிடா மறந்தேன்! நீ ஒரு ஜீனியஸ்னு சொல்லுவேன் இல்ல?" என்றார் உற்சாகத்துடன்.

"ஆமாம் சார்!" என்றான் வேலு அடக்கமாக. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை அவர் நினைவு கூர்ந்தது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

"சார்! முப்பது பாட்ச்சுக்கு மேல உங்ககிட்ட படிச்சிருப்பாங்க. நான் உங்ககிட்ட படிச்சு 30 வருஷம் ஆச்சு. என்னை நீங்க ஞாபகம் வச்சுக்கிட்டிருக்கறது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு சார்!" என்றான் வேலு உணர்ச்சிப் பெருக்குடன்.

"நான் விஞ்ஞான ஆசிரியர். விஞ்ஞானத்தில உனக்கு இருந்த ஆர்வத்தையும், அறிவுக் கூர்மையையும் பாத்துட்டுத்தான் உன்னை ஒரு ஜீனியஸ்னு வகுப்பில எல்லார் முன்னாலேயும் சொல்லி இருக்கேன். இப்ப என்ன செய்யற?"

எம் எஸ் சி படித்து விட்டு ஒரு சாதாரண வேலையில் சுமாரான சம்பளத்தில் இருப்பதை எந்த அளவுக்கு நாசூக்காகச் சொல்ல முடியுமோ அந்த அளவுக்குச் சொன்னான் வேலு. அவர் புரிந்து கொண்டார்.

அதற்குப் பிறகு அவன் வேலை பற்றி எதுவும் கேட்காமல் குடும்பம், மற்ற விஷயங்கள் பற்றிப் பொதுவாகப் பேசினார் அவர்.

சற்று நேரம் கழித்து அவரிடம் விடை பெற்றான் வேலு.

வேலு விடை பெற்றுச் சென்றதும், "உங்களைப் பார்க்க உங்க பழைய மாணவர்கள் பல பேர் வராங்க. ரொம்ப பேரை உங்களுக்கு நினைவு இருக்கறதில்ல. இவரை நல்லா நினைவு வச்சுக்கிட்டிருக்கீங்களே!" என்றாள் அவர் மனைவி.

"இவனை எப்படி மறக்க முடியும்? இவனோட புத்திசாலித்தனத்தைப் பாத்து நான் அசந்து போயிருக்கேன். பெரிய விஞ்ஞானியா கூட வருவான்னு நினைச்சேன். ஆனா எம் எஸ் ஸி படிச்சும் கூட அவனுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலேன்னு நினைக்கிறேன். சுமாரான ஒரு வேலையிலதான் இருக்கான், பாவம்!" என்றார் தாமோதரன்.

"எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்!" என்றாள் அவர் மனைவி.

"நீ அதிர்ஷ்டம்னு சொன்னதும் ஞாபகம் வருது. கொஞ்ச நாள் முன்னால வெங்கட்ராமன்னு ஒரு பையன் என்னைப் பாக்க வந்தானே, ஞாபகம் இருக்கா? புத்திசாலியா இருக்கற மாணவர்களை எனக்கு ஞாபகம் இருக்கற மாதிரி, ரொம்ப மக்கா இருக்கற மாணவர்களையும் என்னால மறக்க முடியாது! அவன் அப்படிப்பட்ட ஒரு மக்குதான். அவனை நான் எவ்வளவோ திட்டி இருக்கேன். 'நீயெல்லாம் எப்படிடா உருப்படப் போற? உன் பெற்றோர்களை நினைச்சா எனக்கே பரிதாபமா இருக்கு' அப்படியெல்லாம் சொல்லி இருக்கேன். வேடிக்கை என்னன்னா இப்ப அவன் ஒரு பெரிய கம்பெனியில ஜெனரல் மானேஜரா இருக்கான். நிறைய சம்பளம், வருஷத்தில பாதி நாள் வெளிநாட்டுப் பயணம்னு உச்சாணிக் கொம்பில இருக்கான்.  இவனையும் பாரு, அவனையும் பாரு! எல்லாம் நீ சொல்ற மாதிரி அதிர்ஷ்டம்தான் போலருக்கு!" என்றார் தாமோதரன். 

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

பொருள்:
உலகத்தின் இயற்கை இரு வேறு வகையானது. செல்வம் உடையவராக இருப்பது வேறு அறிவு உடையவராக இருப்பது வேறு.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்