About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, December 7, 2020

380. திட்டமிட்ட வாழ்க்கை

ரவீந்திரன் வேலைக்குச் சேர்ந்தபோது அவன் அலுவலகத்தின் ஊழியர் பயிற்சிப் பள்ளியில் அவனுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. 

அந்தப் பயிற்சிப் பள்ளியின் தலைமை அதிகாரியாக இருந்த தயாளன் தன் உற்சாகமான அணுகுமுறையாலும், சிந்தனையைத் தூண்டும் பேச்சுக்களாலும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். 

"திட்டம் போட்டுச் செயல்பட்டா எல்லாத்திலேயுமே வெற்றி கிடைக்கும்" என்று அவர் ஒரு முறை கூறியது ரவீந்திரனின் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது.

அவர் கூறியதை ஒரு கட்டளை போலவே கருதித் தன் வாழ்க்கையின் எல்லாச் செயல்பாடுகளையும் நடத்துவதை ரவீந்திரன் ஒரு பழக்கமாகவே ஆக்கிக் கொண்டான். 

அலுவலகத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சவால்களைச் சந்தித்தபோதும், பிரச்னைகளை எதிர்கொண்டபோதும் இந்த அணுகுமுறை மிகவும் பயனுள்ளதாக இருந்ததை ரவீந்திரன் அனுபவத்தில் கண்டான்.

தயாளனுடன் தனக்கு ஏற்பட்ட அறிமுகத்தைத் தொடர்ந்து நிலை நிறுத்திக் கொள்ள விரும்பி அவருடன் தொடர்பிலேயே இருந்தான் ரவீந்திரன். 

இருவரும் வெவ்வேறு ஊர்களிலும், வெவ்வேறு நிலைகளிலும் பணியாற்றினாலும், தயாளனை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியபோதெல்லாம் அவரிடம் தனிமையில் சிறிது பேசி அவரிடம் ஓரளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான் ரவீந்திரன்.

ஆயினும் தயாளன் வேலையிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு அவருடனான தொடர்பு விட்டுப் போய் விட்டது. ஓய்வு பெற்ற பின் அவர் விஜயவாடாவில் வசிப்பதாக மட்டும் ரவீந்திரன் அறிந்து கொண்டான். 

யாளன் ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருக்கும். ரவீந்திரனுக்கு அலுவலக வேலையாக விஜயவாடா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. விஜயவாடா அலுவலகத்தில் தன் வேலைகள் முடிந்ததும், தயாளனைச் சந்திக்கலாம் என்று நினைத்து அலுவலகத்தின் கிளை மேலாளரிடம் அவரைப் பற்றி விசாரித்தான் அவன்.

"இந்த ஊர்லதான் இருக்காரு. ஆனா நீங்க அவரைப் போய்ப் பாக்கறதை அவரு விரும்புவாரன்னு தெரியல!" என்றார் அவர்.

"ஏன், அவருக்கு உடம்பு  சரியில்லையா?"

"அதெல்லாம் எதுவும் இல்ல. அவர் பையன் ஒரு பிசினஸ் ஆரம்பிச்சான். இவர் தன் சேமிப்பையெல்லாம் கொடுத்து உதவினதோட, தன் வீட்டையும் பாங்க்குக்கு செக்யூரிட்டியாக் கொடுத்தாரு. அவன் பிசினஸ்ல பெரிய நஷ்டம் வந்து, பாங்க்ல நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சாங்க. வேற வழி இல்லாம தயாளன் சார் தன் வீட்டை வித்து பாங்க் கடனையும் மத்த கடன்களையும் அடைச்சாரு. இப்ப எல்லாம் போய் சின்னதா ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கிட்டு அதில இருக்காரு. இப்ப நீங்க அவரைப் போய்ப் பாத்தா அவருக்கு மனசு வருத்தமா இருக்கும் இல்ல?"

"அடப்பாவமே! தயாளன் சார் எல்லாத்தையும் திட்டம் போட்டு கவனமாச் செய்யறவராச்சே!" என்றான் தயாளன் நம்ப முடியாமல்.

"பிள்ளைப் பாசம் அவர் கண்ணை மறைச்சிருக்கும், அல்லது அவர் பையன் அவர் சொன்னதைக் கேக்காம செயல்பட்டிருக்கலாம். ம்... விதி யாரை விட்டது?" என்றார் கிளை மேலாளர். 

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

பொருள்:
விதியை விட வலுவானது வேறென்ன இருக்கிறது? விதியை வெற்றி கொள்ளும் வகையில் வேறு வழி அமைந்தாலும், விதி அதை முந்திக்கொண்டு செயல்படும்.
(அறத்துப்பால் நிறைவுற்றது)
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Sunday, December 6, 2020

379. மாறும் நிலைமைகள்

சுமதி அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது நேரமாகி விட்டது. பஸ் பிடித்து வீட்டுக்குச் செல்வதற்குள் அம்மாவைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ் வீட்டுக்குக் கிளம்ப வேண்டிய நேரம் தாண்டி இருக்கும். நேரமாகி விட்டது என்று அவள் வேறு சிடுசிடுக்கப் போகிறாள்!

சுமதி நினைத்தபடியே நர்ஸ் கிளம்பத் தயாராயிருந்தாள். ஆனால் சுமதி பயந்தது போல் அவள் சிடுசிடுக்கவில்லை. "சாரி, கொஞ்சம் லேட்டாயிடுச்சு" என்று சுமதி சொன்னபோது, "பரவாயில்லை" என்று அவள் சிரித்துக்கொண்டே கூறியது சுமதிக்கு ஆறுதலாக இருந்தது.

அறைக்குள் போய் அம்மாவைப் பார்த்துப் பேசி விட்டு சமையலறைக்குச் சென்று இரவுச் சமையலுக்கான வேலையைத் துவக்கினாள் சுமதி. டியூஷனுக்குப் போய் விட்டு வந்ததும் ரவியும், கலாவும் பசியுடன் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்காக விரைவில் சாலட்களைச் செய்து வைத்தாள். 

சுமதி அவள் பெற்றோர்களுக்கு ஒரே பெண். இரண்டு வருடங்களுக்கு முன் சுமதியின் தந்தை இறந்தவுடன் அவள் அம்மா தங்களுடன் வந்து இருக்க வேண்டும் என்று அவள் கணவன் பரத் கூறினான். அவள் அம்மா முதலில் சற்றுத் தயங்கினாலும், பரத் வற்புறுத்தி அழைத்ததால் ஒப்புக் கொண்டார்.

அம்மா வந்ததிலிருந்து சுமதிக்கு வாழ்க்கை எளிதானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் ஆகி விட்டது. சமையல் வேலையில் பெரும்பகுதி, சுமதியும், பரத்தும் வீட்டில் இல்லாத சமயங்களில் ரவியையும், கலாவையும் பார்த்துக் கொள்வது ஆகிய பொறுப்புக்களை அவள் எடுத்துக் கொண்டது சுமதிக்குத் தன் சுமை அனைத்துமே இறக்கி வைக்கப்பட்ட உணர்வை ஏற்படுத்தியது.

ஆனால் மூன்று மாதங்களுக்கு முன் அவள் அம்மாவுக்கு இதய நோய் ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவர் மூன்று மாதங்கள் முழு ஒய்வில் இருக்க வேண்டுமென்றும் அதற்குப் பிறகும் அவர் அதிகம் தன் உடலை வருத்திக் கொள்ளக் கூடாதென்றும் மருத்துவர்கள் கூறி விட்டனர். 

அதற்குப் பிறகு, சுமதியின் வேலைச்சுமை மிகக் கடுமையாகி விட்டது. வீட்டு வேலைகளைத் தவிர அம்மாவை கவனித்துக் கொள்ளும் கூடுதல் பொறுப்பும் சேர்ந்து கொண்டு விட்டது. 

சுமதி, பரத் இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதால் பகல் வேளையில் மட்டும் அவள் அம்மாவை கவனித்துக் கொள்ள ஒரு நர்ஸை ஏற்பாடு செய்திருந்தார்கள். 

8 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தபோதே, "சுமதி கொஞ்சம் காப்பி கிடைக்குமா?" என்று கேட்டுக்கொண்டே வந்தான் பரத். இது தினசரி வழக்கம் என்றாலும், ஏதோ அன்று மட்டும் கேட்பது போல்தான் அவன் தினமும் கேட்பான். 

'இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பிடணும், 8 மணிக்கு காப்பி என்ன வேண்டிக் கிடக்கிறது!' என்று அலுத்துக்கொண்டே காப்பி கலக்க ஆரம்பித்தாள் சுமதி. 

சுமதி தன் வேலைகளை முடித்து விட்டு, அம்மாவுக்கு வேண்டியவற்றைச் செய்து விட்டு இரவு படுத்துக் கொள்ளச் செல்லும்போது மணி பத்தரை ஆகி விட்டது. 

"உன் அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டதில் உனக்குத்தான் ரொம்பவும் கஷ்டம்" என்றான் பரத் உண்மையான அக்கறையுடன்.

"ஆமாங்க! என்ன செய்யறது! அவங்க பாட்டுக்கு நல்லா ஆரோக்கியமா இருந்தாங்க. என்னை ஒரு வேலையும் செய்ய விடாம எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செஞ்சுக்கிட்டிருந்தாங்க. அவங்களை இப்படிப் படுக்கையில தள்ளிடுச்சு. ரெண்டு வருஷம் நான் ரொம்ப ஜாலியா, சந்தோஷமா, கவலை இல்லாம இருந்தேன். இப்ப பாருங்க, நிலைமை தலைகீழா மாறிடுச்சு. எல்லாம் நம்ம நேரம்!" என்றாள் சுமதி சலிப்புடன்.

"நீயே சொன்னியே இப்ப, ரெண்டு வருஷம் ஒரு கவலையும் இல்லாம இருந்தேன்னு. அதுவும் நம்ம நேரம்தான் - நல்ல நேரம்! உன் அம்மாவும் ஆரோக்கியமா, சந்தோஷமா இருந்தாங்க. எல்லாம் நல்லா நடக்கறச்சே நம்ம நேரம் நல்லா இருக்கேன்னு நாம நினைக்கறதில்ல. கஷ்டம் வரப்பதான் நேரத்தைக் குறை சொல்றோம்!" என்ற பரத், மனைவி தன்னை முறைப்பதைப் பார்த்து விட்டு, "எல்லாரும் அப்படித்தான். நானும் அப்படித்தான்!" என்றான் எச்சரிக்கை உணர்வுடன்.    

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.

பொருள்:
நல்லவை நடக்கும்போது. நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீயவை நடக்கும்போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Saturday, December 5, 2020

378. துறவறம் வேண்டி...

"துறவி ஆகணும்னா உங்க ஊர்லேயே ஆகி இருக்கலாமே! எதுக்கு இவ்வளவு தூரம் வந்தீங்க?" என்றார் சுவாமி சச்சிதானந்தர்.

"என் சொந்தக்காரங்க, நண்பர்கள் யாரும் என் மனசை மாத்த முயற்சி செய்யக் கூடாதுங்கறத்துக்காகத்தான். என் ஊர்லேந்து தொலைவில இருக்கற இந்த ஊருல சந்நியாசியா இருந்தா, நான் இங்கே இருக்கறது யாருக்கும் தெரியாதுன்னுதான்" என்றான் பலராமன்.

"வீட்டில சொல்லிட்டுத்தான் வந்தாதா சொன்னீங்க?" 

"என் மனைவிகிட்ட என் விருப்பதைச் சொல்லி அவ சம்மதம் வாங்கிட்டேன். அவ குழந்தைகளோட தன் பெற்றோர் வீட்டுக்குப் போயிட்டா. என் மனைவியின் பெற்றோர்கள் வசதியானவங்க. அவங்க என் மனைவியையும், குழந்தைகளையும் காப்பத்துவாங்க. என் குழந்தைகளை நல்லா படிக்க வச்சு முன்னுக்குக் கொண்டு வந்துடுவாங்க. என் குடும்பத்துக்கான எல்லா ஏற்பாடும் பண்ணிட்டுத்தான் நான் சந்நியாசியா ஆக இங்கே வந்திருக்கேன்."

"எப்படி எங்க மடத்தைத் தேர்ந்தெடுத்து இந்த ஊருக்கு வந்தீங்க?"

"ரெண்டு வருஷம் முன்னால நீங்க என் ஊருக்கு வந்திருந்தீங்க. உங்க சொற்பொழிவுக்கு நான் வந்திருந்தேன். உங்க சொற்பொழிவு பத்திக் கொடுத்த நோட்டீசில உங்க தலைமை மடத்தோட விலாசம் இருந்ததது. உங்க சொற்பொழிவைக் கேட்டதும் அப்பவே உங்ககிட்ட வந்து சேரணும்னு தோணிச்சு. எனக்குச் சில கடமைகள் இருந்ததால அதையெல்லாம் முடிச்சுட்டு வர ரெண்டு வருஷம் ஆயிடுச்சு."

"நான் என்னோட எந்தப் பேச்சிலேயும் யாரும் சந்நியாசம் வாங்கிக்கணும்னு சொன்னதில்லையே! சந்தோஷமா வாழணும்னுதானே சொல்லிக்கிட்டு வந்திருக்கேன்" என்றார் சச்சிதானந்தர் சிரித்தபடி.

பலராமன் மௌனமாக இருந்தான்.

"சரி. உங்களுக்கு சந்நியாசத்தில விருப்பம் இருந்தா, நான் அதைத் தடுக்க மாட்டேன். இப்ப எல்லாத்துக்குமே ஒரு முறை வந்துடுச்சு. அதனால நீங்க ஒரு படிவத்தை நிரப்பிக் கொடுக்கணும்" என்றார் சச்சிதானந்தர்.

"விண்ணப்பப் படிவமா?" என்றான் பலராமன் சிரித்தபடி. 

சச்சிதானந்தர் அவனை சந்நியாசியாக ஏற்றுக் கொள்ள அனேகமாகச் சம்மதித்து விட்டார் என்று தோன்றியதால் அவன் இறுக்கம் சற்றுத் தளர்ந்திருந்தது.

தன்னிடம் கொடுக்கப்பட்ட படிவத்தைப் படித்துப் பார்த்ததும், மீண்டும் சச்சிதானந்தரின் அறைக்குச் சென்ற பலராமன், "இதில என் கடைசி விலாசம், என் பின்னணி விவரங்கள் எல்லாம் கேட்டிருக்கே? நான் இருக்கற இடம் யாருக்கும் தெரியக் கூடாதுன்னு உங்க கிட்ட விளக்கினேனே!" என்றான்.

"கவலைப்படாதீங்க! நீங்க இங்கே இருக்கறதை நாங்க யார் கிட்டேயும் சொல்ல மாட்டோம். ஆனா சந்நியாசியா சேர விரும்பறவங்களோட பின்னணி விவரங்களை வாங்கி வச்சுக்கறது இங்கே இருக்கிற நடைமுறை" என்றார் சச்சிதானந்தர்.

பலராமன் படிவத்தை நிரப்பிக் கொடுத்ததும், அவனை மீண்டும் தன் அறைக்கு அழைத்த சச்சிதானந்தர், "பலராமா! இங்கே சந்நியாசியா சேர விரும்பறவங்களுக்கு ஒரு வாரம் ஒரு பயிற்சி உண்டு. அந்தப் பயிற்சி முடிஞ்சப்பறம் நாங்க மேற்கொண்டு முடிவெடுப்போம்!" என்றார்.

முதல்முறையாக சச்சிதானந்தர் தன்னை ஒருமையில் விளித்ததது அவர் தன்னை ஏற்றுக் கொண்டு விட்டார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், பயிற்சியைத் தான் வெற்றிகரமாக முடிக்க வேண்டுமே என்ற கவலை பலராமனுக்கு ஏற்பட்டது.

அவன் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டது போல், "கவலைப்படாதே! பயிற்சின்னா தியானம், பிராணாயாமம், உணவுக் கட்டுப்பாடு. மௌன விரதம், தனிமையில் இருப்பது இதெல்லாம்தான் இருக்கும். சந்நியாசம் ஆகணுங்கற உறுதி இருக்கறவங்களுக்கு இது ரொம்ப எளிமையாத்தான் இருக்கும்!" என்று சிரித்தபடி கூறினார் சச்சிதானந்தர்.

யிற்சி முடிந்த பிறகு, பலராமனைத் தன் அறைக்கு அழைத்த சச்சிதானந்தர், "நீ எதுக்கு சந்நியாசி ஆக விரும்பின?" என்றார்.

"எனக்கு இல்லறத்தில ஈடுபாடு இல்ல, துறவறத்திலதான் எனக்கு விருப்பம் இருந்தது" என்றான் பலராமன், திடீரென்று இவர் ஏன் இப்படிக் கேட்கிறார் என்று வியந்தபடி.

அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்த சச்சிதானந்தர், "உனக்கு வாழ்க்கையில நிறைய பிரச்னை. உன் தொழில் சரியா நடக்கல. உன் குடும்பத்தைக் காப்பத்த முடியமான்னு உனக்குக் கவலை வந்துடுச்சு. அதனாலதான் பிரச்னைகளிலேந்து தப்பிச்சுக்கறத்துக்காக நீ சந்நியாசி ஆக முடிவு செஞ்சுட்ட!"

"சுவாமி! என்னைப் பத்தி விசாரிச்சீங்களா?" என்றான பலராமன் அதிர்ச்சியுடன்.

"ஆமாம்" என்றார் சச்சிதானந்தர் சிரித்தபடி,

"நான் இருக்கற இடத்தை யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்னு சொன்னீங்களே!"

"சொல்லல. எங்ககளுக்கு அனேகமா எல்லா ஊர்லயுமே தொடர்புகள் இருக்கு. அவங்க மூலமா விசாரிச்சோம். துறவுல ஈடுபாடு ஏற்பட்டுத் துறவு வாங்கிக்கறது சரிதான். ஆனா, துறவியாயிட்டா பிரச்னைகள்ளேந்து தப்பிச்சுடலாம் நினைக்கறது உண்மையான துறவு இல்ல."

"இல்லை சுவாமி! போராடிப் போராடி அலுத்துட்டேன், விதி எப்பவுமே எனக்கு எதிராவே இருக்கற மாதிரி இருக்கு. நான் விலகிப் போயிட்டா என் மனைவி தன் பெற்றோர் உதவியோட குடும்பத்தை எப்படியும் காப்பத்திடுவா, ஆனா நான்  இருக்கும்போது, அவங்க உதவியைக் கேக்கவும் முடியாது, அவங்களா உதவி செஞ்சா அதை ஏத்துக்கவும் முடியாது. அதனாலதான் என் மனைவி கிட்ட பேசி இதுக்கு சம்மதிக்க வச்சேன். சந்நியாசியா ஆகலேன்னா நான் தற்கொலை செஞ்சுக்கற மனநிலைக்குப் போயிடுவேன்னு சொல்லித்தான் அவளை அவளை சம்மதிக்க வச்சேன். அவளையும் என் பிள்ளைங்களையும் அவ பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிட்டு நான் இங்கே கிளம்பி வந்தேன். அவளோட பெற்றோர்கள் கொஞ்ச நாளைக்கு என் மேல கோபமா இருந்தாலும் என் குடும்பத்தை எப்படியும் காப்பாத்திடுவாங்க, என் குடும்பத்தோட விதியை மாத்த இதுதான் வழின்னு நினைச்சேன்" என்றான் பலராமன் இயலாமையுடன்.

"பலராமா! சந்நியாசம் வாங்கிக்கறதன் மூலமா நமக்கு வாழ்க்கையில வரக் கூடிய துன்பங்களைத் தவிர்த்துடலாம்னு எல்லோரும் நினைச்சா, அப்புறம் உலகத்தில சந்நியாசிகள்தான் மிஞ்சுவாங்க. வாழ்க்கையில வர பிரச்னைகளையும், துன்பங்களையும் ஏத்துக்கிட்டு அவற்றை சமாளிச்சுத்தான் ஆகணும், இதைத் தவிர்க்க குறுக்கு வழி எதுவும் கிடையாது. நல்லது நடக்குங்கற நம்பிக்கையோட துன்பங்களை எதிர்கொண்டு வாழறதுதான் வாழ்க்கை. நீ உடனே ஊருக்குத் திரும்பிப் போய் உன் குடும்பத்தோட வாழ்க்கை நடத்து. இந்த ஒரு வாரமா நீ பயிற்சி செஞ்ச விஷயங்கள் உனக்கு உதவியாக இருக்கும். கடவுளோட அருள் உன் குடும்பத்துக்கு முழுமையா இருக்கணும்னு வாழ்த்துகிறேன்" என்றார் சச்சிதானந்தர்.

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.

பொருள்:
வர வேண்டிய துன்பங்கள் வராமல் நீங்குமென்றால், நுகர்வதற்கான பொருட்கள் இல்லாத ஏழைகள் துறவறம் மேற்கொள்வர்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Friday, December 4, 2020

377. "விருந்தினர் மாளிகை"

"என்ன, சாப்பாடு தயாரா?"

"அஞ்சு நிமிஷத்தில ரெடி ஆயிடும் சார்."

"சீக்கிரம் ஆகட்டும். நாங்க வெளியில கிளம்பணும்!" என்றது திருமதி சசிசேகரின் அதிகாரமான குரல்.

சதாசிவம் பல்லைக் கடித்துக் கொண்டு சமையலை முடிப்பதில் கவனம் செலுத்தினான். 

"டேய் ராகவா! வாணலியில எண்ணெய் வச்சு பத்துப் பதினைஞ்சு அப்பளம் பொறிச்சுடு. பொரியல், கூட்டுன்னு வகை வகையாச் செஞ்சிருஞ்சாலும், அப்பளம் பொரிக்கலியான்னு கேப்பாங்க!" என்றான் சதாசிவம், சமையலில் தனக்கு உதவிக் கொண்டிருந்த தன் தம்பி ராகவனிடம்.

சாப்பிட்டு முடித்ததும், குடும்பத்துடன் வெளியே கிளம்பத் தயாரான சசிசேகர், "நாலு மணிக்கு வந்துடுவோம். ஏதாவது ஸ்வீட், அப்புறம் பஜ்ஜி இல்லேன்னா போண்டா செஞ்சு வச்சுடு. சாப்பிட்டுட்டு மறுபடி சைட் சீயிங்குக்குப் போகணும்!" என்றான்.

'மூணு நாளா இதைத்தானே செஞ்சுக்கிட்டிருக்கீங்க? சாப்பிடறது, ஊர் சுத்தறது!' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட சதாசிவம், "சரி சார்!" என்றான். 

மறுநாள் சசிசேகரின் குடும்பம் ஊருக்குக் கிளம்பியது.

அவர்கள் கிளம்பிச் சென்றதும், "அப்பா! ஒழிஞ்சாங்க! நாலு நாளா என்ன பாடு படுத்திட்டாங்க! என்ன ஒரு தீனி, என்ன ஒரு அதிகாரம், ஆர்ப்பாட்டம்!" என்று ராகவனிடம் அலுத்துக் கொண்ட சதாசிவம், "நல்ல வேளை இந்த சமயத்தில நீ ஊரிலேந்து வந்தது நல்லதாப் போச்சு. இல்லேன்னா என் பாடு திண்டாட்டமா ஆகி இருக்கும்!" என்றான்.

"ஏண்ணே! நீ இந்த வீட்டுக்கு வாட்ச்மேன்தானே? சமையல் வேலையையும் நீயேதான் பாக்கணுமா? அதுக்கு வேற ஆளு வைக்க மாட்டாங்களா?" என்றான் ராகவன்.

"யாராவது இங்க வரப்ப, சமையல்காரர் ஒத்தர் வந்து அவங்க இருக்கற வரைக்கும் ரெண்டு மூணு நாள் வேலை செஞ்சுட்டுப் போவாரு. இந்தத் தடவையும் அவர்கிட்ட சொல்லி இருந்தேன். ஆனா அவரு திடீர்னு ஊருக்குப் போயிட்டாரு. அதனாலதான் நானே சமையல் பொறுப்பையும் எடுத்துக்கிட்டேன்" என்றான் சதாசிவம்.

"இது நீயா வரவழைச்சுக்கிட்டதுதானே? சமையலுக்கு ஆள் கிடைக்கலேன்னு சொல்லி ஓட்டல்லேந்து வரவழைக்க ஏற்பாடு செஞ்சிருக்கலாமே!"

"செஞ்சிருக்கலாம். குழந்தைகள்ளாம் இருக்காங்க, அதனால ஓட்டல்லேந்து வரவழைக்க வேண்டாம், உன்னால முடிஞ்ச அளவுக்கு நீயே சமையல் செஞ்சுடுன்னு முதலாளி ஃபோன்ல சொன்னாரு. நான் நல்லா சமைப்பேன்னு அவருக்குத் தெரியும். அதனால சரின்னு ஒத்துக்கிட்டேன், ஆனா இவங்க இப்படி ஒரு தீனிப் பண்டாரங்களா இருப்பாங்கன்னு எதிர்பார்க்கல!" என்றான் சதாசிவம், வந்திருந்தவர்கள் கொடுத்த தொல்லைகள் ஏற்படுத்திய ஆத்திரம் அடங்காதவனாக.

"முதலாளி ஃபோன் பண்ணிச் சொன்னாரா? அப்ப வந்தவங்க உன் முதலாளி இல்லையா?"

"அவரு எங்கே இங்க வராரு? ஊட்டியில இந்த வீட்டை வாங்கினப்பறம் ஒரு வருஷம் முதலாளி அம்மாவோட வந்தவர்தான். அப்புறம் அவங்க வரதில்ல. ஆனா வருஷா வருஷம் சீசன்போது சொந்தக்காரங்க, நண்பர்கள்னு யாராவது வருவாங்க. இப்ப வந்துட்டுப் போனவங்களும் ஏதோ சொந்தம்தான். இது ஒரு விருந்தினர் மாளிகையாவே ஆயிடுச்சு!"

"ஏன், உன் முதலாளியும் அவங்க குடும்பமும் வரதில்ல?"

"என்னத்தைச் சொல்ல? ஊட்டியில சொந்த வீடு இருந்தும், இங்க வந்து கொஞ்சநாள் இருக்க அவங்களுக்குக் கொடுப்பினை இல்ல போலருக்கு. ரெண்டு பேருக்குமே உடம்பு சரியில்ல. அதனால வீட்டை விட்டு எங்கேயும் போறதில்ல. நல்ல சாப்பாடு கூடச் சாப்பிட முடியாதுன்னு நினைக்கறேன். அவங்களோட ரெண்டு பிள்ளைங்களும் எங்கேயோ வெளிநாட்டில இருக்காங்க. இங்கே வரதே இல்லையாம். ஃபோன்ல பேசறதோட சரின்னு கேள்விப்பட்டேன். 

"ஐயா, அம்மா ரெண்டு பேரும் தங்கமானவங்க. பணம் காசு நிறைய இருக்கு. ஆனா எதையும் அனுபவிக்க முடியாம, வாய்க்கு ருசியாச் சாப்பிடக் கூட முடியாம ரெண்டு பேரும் வீட்டோட அடைஞ்சு கிடக்காங்க. 

"இங்கே எல்லாம் சரியா இருக்கான்னு பாக்க வருஷத்துக்கு ஒரு தடவை ஒரு மானேஜர் வருவாரு. அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். யார் யாரோ வந்து அனுபவிச்சுட்டுப் போறாங்க. ஆனா அவங்களால அனுபவிக்க முடியல. இது மாதிரி இன்னும் எத்தனை சொத்து இருக்கோ அவங்களுக்கு!" என்றான் சதாசிவம் உண்மையான வருத்தத்துடன்.  

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

பொருள்:
ஒருவர் கோடிப் பொருள் குவித்தாலும், இறைவன் வகுத்த விதி இருந்தாலொழிய அவற்றை அவரால் அனுபவிக்க முடியாது.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Saturday, November 28, 2020

376. சாய்வு நாற்காலி

"பாத்துப் பாத்துக் கட்டின வீடு. இப்ப நம்ம கையை விட்டுப் போகப் போகுதே!" என்று புலம்பினான் பிரபாகர்.

"இப்ப புலம்பி என்ன பிரயோசனம்? பிசினஸ் எல்லாம் வேண்டாம், இருக்கற வேலையை விட்டுடாதீங்க, வர சம்பளம் போதும். நான் எப்படியோ குடும்பத்தை சமாளிச்சு நடத்திக்கறேன்னு தலை தலையா அடிச்சுக்கிட்டேன். கேட்டீங்களா?" என்றாள் அவன் மனைவி சாரதா.

"நல்லா நடத்தினியே குடும்பத்தை! நகைச்சீட்டு, புடவைச்சீட்டு, பாத்திரச்சீட்டுன்னு நீ செலவழிக்கற பணத்துக்கு என் சம்பளம் போதாதுன்னுதான் பிசினஸ் ஆரம்பிச்சேன். பாங்க்கில செக்யூரிட்டி கொடுத்தாதான் கடன் கொடுப்பேன்னு சொன்னதால வீட்டை அடமானம் வைக்கும்படி ஆயிடுச்சு. அப்ப கூட நீ உன் நகைகளைக் கொடுத்து உதவி செஞ்சிருந்தா வீட்டை அடமானம் வச்சிருக்க வேண்டி இருந்திருக்காது!"

"சும்மாக்கானும் சொல்லாதீங்க. உங்க அகலக்காலுக்கு என் நகைகள் எப்படிப் போதும்?  நீங்க பார்ட்னரா சேத்துக்கிட்டீங்களே ஒரு நண்பர், அவரு ஒர்க்கிங் பார்ட்னர்னு சொல்லிக்கிட்டு ரொம்ப சாமர்த்தியமா ஒரு பைசா கூட முதலீடு செய்யாம, பிசினஸ்ல பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி, உங்களை நடு ரோட்டில நிறுத்திட்டு தான் ஒரு சேதாரமும் இல்லாம தப்பிச்சுக்கிட்டரு. உங்க ஏமாளித்தனத்துக்கு என்னைக் குத்தம் சொல்லாதீங்க!" என்றாள் சாரதா ஆற்றாமையுடன்.

மனைவியின் பேச்சு பிரபாகருக்கு ஆத்திரமூட்டினாலும் அவள் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்து பேசாமல் இருந்தான். 

நண்பனின் யோசனையை ஏற்றுத் தனக்குத் தெரியாத தொழிலில் இறங்கியது முட்டாள்தனம். ஒர்க்கிங் பார்ட்னர் என்று தன்னுடன் தொழிலில் இணைந்த நண்பன் ஒரு பைசா கூட முதலீடு செய்யாதபோது, தனக்கு இருந்த ஒரே சொத்தான வீட்டை அடமானம் வைத்தது இன்னும் பெரிய முட்டாள்தனம். 

தொழில் சரியாக வரவில்லை என்று தெரிந்ததும் சீக்கிரமே அதை மூடி விட்டு வெளியே வராமல் சில நாட்களில் எல்லாம் சரியாகி விடும் என்ற நண்பனின் பேச்சை நம்பித் தொடர்ந்து தொழிலை நடத்தி இழப்பை இன்னும் அதிகரித்து இப்போது வீட்டை விற்றுக் கடனை அடைத்து விட்டு வெளியே வந்தால் போதும் என்ற நிலைமை.

பிரகாகர் வீட்டை விற்றுக் கடனை அடைத்து மீதமிருந்த சிறிதளவு பணத்தைச் சேமிப்பாக வைத்துக் கொண்டு சுமாரான ஒரு வேலையைத் தேடிக் கொண்டு ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினான்.

ழைப்பு மணி அடித்ததும் கதவைத் திறந்தான் பிரபாகர். அவன் வீட்டை விலைக்கு வாங்கியிருந்த மாசிலாமணிதான் வந்திருந்தார்.

"வாங்க சார்!" என்று அவரை வரவேற்று அமர வைத்தான் பிரபாகர்.

"வீடு எப்படி இருக்கு?" என்றான் பிரபாகர்.

"வீடு நல்லாத்தான் இருக்கு. வீட்டை விக்கறப்ப ஒரு பழைய சாய்வு நாற்காலியை விட்டுட்டுப் போனீங்க இல்ல?" என்றார் மாசிலாமணி.

"ஆமாம். அது என் அப்பா பயன்படுத்தியது. அது உங்ககிட்டயே இருக்கட்டும்னு சொன்னேனே!"

"தப்பா நினைச்சுக்காதீங்க. வீட்டை வித்தவங்க பொருள் எதையும் நாங்க வச்சுக்கக் கூடாதுன்னு என் மனைவி சென்ட்டிமென்ட்டலா நினைக்கறாங்க. அதானால அதை உங்ககிட்டயே திருப்பிக் கொடுத்துடறேன். வண்டியில ஏத்தி அனுப்பி இருக்கேன், வந்துக்கிட்டு இருக்கு. உங்ககிட்ட நேரில சொல்லிட்டுப் போலாம்னுதான் வந்தேன்."

பிரபாகர் மௌனமாக இருந்தான். அவன் அப்பா பயன்படுத்திய அந்தப் பெரிய மரச் சாய்வு நாற்காலியை எப்போதுமே அவன் மனைவிக்குப் பிடித்திதல்லை.

"உக்காந்தா ஆளை உள்ளே அழுத்திடுது. எழுந்திருக்கவே கஷ்டமா இருக்கு. யாராவது தூக்கி விடணும் போல இருக்கு! இதை வித்துடுங்க" என்று அவனிடம் பலமுறை அவள் சொல்லி இருக்கிறாள்.

பிரபாகர்தான் தன் தந்தையின் நினைவாக அது இருக்கட்டும் என்று எண்ணி அதை வைத்திருந்தான். ஆயினும் அதை யாரும் பயன்படுயதில்லை. சாரதா சொன்னது போல் அதில் சாய்ந்து உட்கார்ந்து விட்டு எழுந்திருப்பதே ஒரு கடினமான உடற்பயிற்சிதான்!

வீட்டை விற்றபின் தான் செல்லப் போகும் சிறிய வாடகை வீட்டுக்கு அதை எடுத்துச் சென்றால் அது இடத்தை அடைக்கும் என்பதால் அதை விற்க முயன்றான் பிரபாகர். ஆனால் பழைய பொருட்களை வாங்கும் வியாபாரிகள் யாரும் அதை வாங்க ஆர்வம் காட்டவில்லை. எனவே தன் வீட்டை வாங்கிய மாசிலாமணியீடம் அதை அவரே வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு வந்தான் பிரபாகர். அதற்காக அவன் அவரிடம் விலை எதுவும் வாங்கவில்லை.

இப்போது அந்தச் சாய்வு நாற்காலி அவனுடைய சிறிய வாடகை வீட்டில் இருக்கும் சிறு இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு முன்னறையில் ஜம்மென்று அமரப் போகிறது!

பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு கையை விட்டுப் போய் விட்டது. வேண்டாமென்று விட்டு விட்டு வந்த பழைய சாய்வு நாற்காலி அவனிடமே திரும்பி வருகிறது.

வேடிக்கைதான் என்று நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டான் பிரபாகர். 

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

பொருள்:
ஒரு பொருளை எப்படிக் காப்பாற்றினாலும் விதி இல்லையென்றால் அது நம்மை விட்டுப் போய் விடும். நமக்குச் சேர வேண்டிய ஒரு பொருளை நாம் வேண்டாமென்று அகற்றி விட்டாலும் அது நம்மிடம் வந்து சேரும்.
பொருட்பால்                                                                                     காமத்துப்பால்

Thursday, November 26, 2020

375. வாய்ப்பும் இழப்பும்

அறிவழகனுக்கு அவன் அலுவலக வேலை தொடர்பாக ஜெர்மனிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது அவன் மனைவி குமுதா மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தாள்.

"இது ஒரு பெரிய வாய்ப்புதான். ஒரு வருஷம் அங்கே இருக்கணும்னு சொல்றாங்க. நடுவில வர முடியாது. நீ கர்ப்பமா இருக்கறப்ப உன்னை விட்டுட்டுப் போக மனசு வல்ல. அதனால இந்த வாய்ப்பை வேண்டாம்னு சொல்லிடப் போறேன்" என்றான் அறிவழகன். 

"அவசரப்பட்டு முடிவு பண்ணாதீங்க. ஒரு வருஷம் ஜெர்மனியில போய் வேலை செஞ்சா பணம் அதிகமா வரும் இல்ல?" என்றாள் குமுதா.

"ரொம்ப நிறைய வரும். அது மட்டும் இல்ல. இந்த அனுபவத்தினால எனக்கு வேலையில சீக்கிரமே ப்ரமோஷன் கிடைச்சு பெரிய அளவுக்கு மேல வர முடியும். வேற வேலைக்குப் போகவும் வாய்ப்புக் கிடைக்கும்."

"அப்ப இதில யோசிக்கறதுக்கு என்ன இருக்கு? எதிர்காலம் நல்லா இருக்கும்னா கொஞ்ச நாள் கஷ்டப்படறதில தப்பு இல்லையே! எப்படியும் பிரசவத்துக்கு நான் என் அம்மா வீட்டுக்குப் போகணும். கொஞ்சம் முன்னாலேயே போறதா இருக்கட்டும். நீங்க ஜெர்மனிலேந்து வரப்ப என்னோட நம்ம குழந்தையும் உங்களை வரவேற்கத் தயாரா இருக்கும்!" என்றாள் குமுதா மனத்தை திடப்படுத்திக் கொண்டு.

"உன்னை மாதிரி ஒரு மனைவி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்" என்றான் அறிவழகன். 

சென்னை வீட்டைக் காலி செய்து சாமான்களை கிராமத்தில் இருந்த குமுதாவின் வீட்டுக்கு அனுப்பி விட்டு, குமுதாவையும் அவள் வீட்டில் கொண்டு விட்டு விட்டு அறிவழகன் ஜெர்மனிக்குக் கிளம்பிச் சென்றான்.

ஜெர்மனிக்குச் சென்ற பின் வாரம் ஒருமுறை கடிதம் எழுதினான் அறிவழகன். குமுதா இருந்த கிராமத்தில் தொலைபேசி வசதி இல்லை. 

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் கிராமத்துக்கு அருகிலிருந்த நகரத்தில் வசித்த அவர்கள் உறவினரின் நண்பர் வீட்டின் தொலைபேசி இருப்பதை அறிந்து அவர்கள் எண்ணைப் பெற்று அதை அறிவழகனுக்கு எழுதி அவன் தொலைபேசியில் அழைக்கும் நேரத்தை முன்பே முடிவு செய்து கொண்டு , குறிப்பிட்ட நாளில் தன் உறவினர் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து அவர் நண்பர் வீட்டுக்குச் சென்று சில மணி நேரம் காத்திருந்த பின் அறிவழகனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் அவனிடம் சில நிமிஷங்கள் பேசினாள் குமுதா.

ஒரு புறம் கணவனிடம் பேசியது மகிழ்ச்சியை அளித்தாலும், கருவுற்ற நிலையில் அவனைப் பிரிந்திருக்கும் மனவேதனையை அதிகரிப்பதாகவே அமைந்தது அந்தத் தொலைபேசி உரையாடல்.

"உனக்கு எப்ப வேணும்னாலும் இங்க வந்து பேசலாம்மா!" என்று அவள் உறவினரின் நண்பர் பெருந்தன்மையுடன் கூறினாலும், அது நடைமுறைக்கு உகந்தது இல்லை என்பதைக் குமுதா உணர்ந்திருந்தாள்

வாரம் ஒருமுறை கடிதம் எழுதிக் கொண்டிருந்த அறிவழகனிடமிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு சில வாரங்கள் கடிதம் வரவில்லை.

ஒரு மாதம் கழித்து அவன் எழுதிய கடிதத்தில், தனக்கு வேலை அதிகமாக இருந்ததால் எழுத முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்ததோடு, வாராவாரம் எழுத விஷயம் இல்லையன்பதால் இனி  அவ்வப்போது தனக்கு நேரம் கிடைக்கும்போதும், முக்கியமான விஷயம் இருந்தால் மட்டுமே எழுதுவதாகவும் அவன் எழுதி இருந்தது குமுதாவுக்கு ஏமாற்றமளித்தது.

குமுதா எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தபோது அவளுக்கு வலி ஏற்பட்டு அவளை அருகிலிருந்த நகரத்திலிருந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள். குமுதாவுக்குக் குறைப் பிரசவம் ஏற்பட்டு குழந்தை இறந்து பிறந்தது.

கணவனைப் பிரிந்த நிலையில் குழந்தையும் இறந்து பிறந்தது குமுதாவை மனதளவில் பெரிதும் பாதித்து விட்டது. குழந்தை இறந்து பிறந்ததைக் கணவனுக்கு எழுதினாள். தனக்கு அதிர்ச்சியும் துயரமும் ஏற்பட்டதாக அறிவழகனிடமிருந்து உடனே பதில் வந்தது. 

ஆனால் அதற்குப் பிறகு அறிவழகனிடமிருந்து கடிதம் வருவது இன்னும் குறைந்து விட்டது. வந்த கடிதங்களிலும் இயந்திரத்தனமான விசாரிப்புகள் மட்டும்தான் இருந்தன. குழந்தை இறந்த வருத்தத்தில் இருக்கும் தனக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் கணவன் எதுவும் எழுதவில்லையே என்ற ஏக்கம் குமுதாவுக்கு ஏற்பட்டது.

றிவழகன் ஜெர்மனிக்குச் சென்று ஒரு வருடம் முடிவும் தருவாயில் அவன் திரும்பி வரும் தேதியைக் கேட்டுக் குமுதா அவனுக்கு எழுதினாள். ஆனால் அவனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.

றிவழகன் சென்று ஒரு வருடத்த்துக்கு மேல்ஆகி விட்டது. 

"மாப்பிள்ளை இத்தனை நேரம் வந்திருக்கணுமே! அவர்கிட்டேந்து தகவல் வரலை. நான் அவங்க ஆஃபீசுக்குப் போய் விசாரிச்சுட்டு வரேன்" என்று சென்னைக்குக் கிளம்பிச் சென்றார் குமுதாவின் தந்தை.

இரண்டு நாள் கழித்து ஊருக்குத் திரும்பி வந்தவர், குமுதாவிடம், "அந்த அயோக்கியன் ஒரு மாசம் முன்னாடியே இந்தியாவுக்கு வந்துட்டானாம்மா!" என்றார் கோபத்துடன்.

தன் கணவனை எப்போதும் மாப்பிள்ளை என்றே குறிப்பிடும் அப்பா இப்போது அவனை அயோக்கியன் என்று குறிப்பிட்டதிலிருந்தே ஏதோ விபரீதம் நடந்திருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்ட குமுதா, "என்னப்பா சொல்றீங்க?" என்றாள் தன்னைத் தாக்கப் போகும் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ளத் தன்னைத் தயார் செய்து கொண்டவளாக.

"அவனோட வேலை செய்யற ஒரு பெண்ணும் ஜெர்மனிக்கு அவனோட போயிருக்கா. ரெண்டு பேரும் சேர்ந்து ஜெர்மனியில இருக்கறப்ப அவங்களுக்குள்ள நெருக்கம் ஏற்பட்டிருக்கு. இந்தியாவுக்குத் திரும்பறத்துக்கு முன்னாலேயே ரெண்டு பேரும் டெல்லி ஆஃபீசுக்கு மாற்றல் வாங்கிக்கிட்டு ஜெர்மனியிலேந்து நேரா டெல்லிக்கு வந்துட்டாங்களாம்" என்றார் அவள் அப்பா குமுறலுடன்.

"உங்களுக்கு யாருப்பா இதையெல்லாம் சொன்னாங்க?" என்றாள் குமுதா அழுகையை அடக்கிக் கொண்டு.

"அவங்க ஆஃபீஸ்ல எல்லாருக்கும் இது தெரிஞ்சிருக்கும்மா. அங்கே வேலை செய்யற அவன் ஃபிரண்ட் மனோகர்ங்கறவர்தான் இதைச் சொன்னாரு. உனக்கு அவரைத் தெரியுமாமே! உங்க வீட்டுக்கெல்லாம் வந்திருக்காராமே!"

"ஆமாம்ப்பா! அவரு சொன்னா சரியாத்தான் இருக்கும். ஜெர்மனிக்குப் போய் ரெண்டு மூணு மாசத்திலேந்தே அவர்கிட்ட ஒரு மாறுதல் இருக்கறதை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். ஏதோ நடக்கப் போகுதுன்னு பயந்துகிட்டுத்தான் இருந்தேன்..."

பேசிக் கொண்டிருக்கும்போதே அவள் குரல் விம்மியது. அழுகை உடைத்துக்கொண்டு வந்தது.

சற்று நேரம் மௌனமாக மகள் அழுவதை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த அவள் அப்பா, "உன் குழந்தை இறந்து பிறந்தப்ப எல்லாருக்குமே அது ஒரு பெரிய சோகமா இருந்துச்சு. இப்ப நடந்த்தைப் பாப்பறப்ப அது கூட ஒரு விதத்தில நல்லதுதான்னு தோணுது!" என்றார்.

"நான் கர்ப்பமா இருக்கறப்ப என்னைத் தனியா விட்டுட்டு ஜெர்மனிக்குப் போகலைன்னுதான் அவர் சொன்னாரு. நான்தான் பணம் கிடைக்கும், அவருக்குப் பதவி உயர்வு கிடைக்கும், எங்க எதிர்காலத்துக்கு நல்லதுன்னெல்லாம் நினைச்சு அவரைப் போகச் சொன்னேன். எங்க நன்மைக்குன்னு நான் நினைச்சு செஞ்ச காரியம் இப்ப எனக்கே கெடுதலா அமைஞ்சுடுச்சே அப்பா!" என்றாள் குமுதா அழுது கொண்டே.

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

பொருள்:
நாம் செல்வம் ஈட்டும் முயற்சியில், சில சமயம், விதிவசத்தால் நல்லவை தீயவையாகும், தீயவை நல்லவையாகும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Sunday, November 15, 2020

374. பழைய மாணவன்

தன் பள்ளி ஆசிரியர் தாமோதரன் சென்னையில் வசிப்பதாக அறிந்து அவரைப் பார்க்க விரும்பினான் வேலு. நாற்பது வருடங்களுக்கு முன் படித்த தன்னை அவருக்கு நினைவிருக்குமா என்ற ஐயம் அவனுக்கு இருந்தாலும், அவர் மீது அவனுக்கு இருந்த மரியாதையால் அவரைப் பார்க்கச் சென்றான்.

"சார்! நான் உங்க பழைய மாணவன். என் பேர் வேலு" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் வேலு.

கண்ணாடியை எடுத்துத் துடைத்துப் போட்டுக் கொண்டு அவனை உற்றுப் பார்த்த தாமோதரன், "ம்மம்ம்...வேலு... எந்த வருஷம் படிச்ச?" என்றார்.

சொன்னான். 

"உடனே ஞாபகம் வரல. உக்காரு. கொஞ்ச நேரம் பேசினா ஞாபகம் வரதான்னு பாக்கலாம்" என்றார் தாமோதரன்.

ஓரிரு நிமிடங்கள் வேலு அவரிடம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தான்.

திடீரென்று அவனை இடைமறித்த தாமோதரன், "டேய் வேலு! உன்னை எப்படிடா மறந்தேன்! நீ ஒரு ஜீனியஸ்னு சொல்லுவேன் இல்ல?" என்றார் உற்சாகத்துடன்.

"ஆமாம் சார்!" என்றான் வேலு அடக்கமாக. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை அவர் நினைவு கூர்ந்தது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

"சார்! முப்பது பாட்ச்சுக்கு மேல உங்ககிட்ட படிச்சிருப்பாங்க. நான் உங்ககிட்ட படிச்சு 30 வருஷம் ஆச்சு. என்னை நீங்க ஞாபகம் வச்சுக்கிட்டிருக்கறது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு சார்!" என்றான் வேலு உணர்ச்சிப் பெருக்குடன்.

"நான் விஞ்ஞான ஆசிரியர். விஞ்ஞானத்தில உனக்கு இருந்த ஆர்வத்தையும், அறிவுக் கூர்மையையும் பாத்துட்டுத்தான் உன்னை ஒரு ஜீனியஸ்னு வகுப்பில எல்லார் முன்னாலேயும் சொல்லி இருக்கேன். இப்ப என்ன செய்யற?"

எம் எஸ் சி படித்து விட்டு ஒரு சாதாரண வேலையில் சுமாரான சம்பளத்தில் இருப்பதை எந்த அளவுக்கு நாசூக்காகச் சொல்ல முடியுமோ அந்த அளவுக்குச் சொன்னான் வேலு. அவர் புரிந்து கொண்டார்.

அதற்குப் பிறகு அவன் வேலை பற்றி எதுவும் கேட்காமல் குடும்பம், மற்ற விஷயங்கள் பற்றிப் பொதுவாகப் பேசினார் அவர்.

சற்று நேரம் கழித்து அவரிடம் விடை பெற்றான் வேலு.

வேலு விடை பெற்றுச் சென்றதும், "உங்களைப் பார்க்க உங்க பழைய மாணவர்கள் பல பேர் வராங்க. ரொம்ப பேரை உங்களுக்கு நினைவு இருக்கறதில்ல. இவரை நல்லா நினைவு வச்சுக்கிட்டிருக்கீங்களே!" என்றாள் அவர் மனைவி.

"இவனை எப்படி மறக்க முடியும்? இவனோட புத்திசாலித்தனத்தைப் பாத்து நான் அசந்து போயிருக்கேன். பெரிய விஞ்ஞானியா கூட வருவான்னு நினைச்சேன். ஆனா எம் எஸ் ஸி படிச்சும் கூட அவனுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலேன்னு நினைக்கிறேன். சுமாரான ஒரு வேலையிலதான் இருக்கான், பாவம்!" என்றார் தாமோதரன்.

"எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்!" என்றாள் அவர் மனைவி.

"நீ அதிர்ஷ்டம்னு சொன்னதும் ஞாபகம் வருது. கொஞ்ச நாள் முன்னால வெங்கட்ராமன்னு ஒரு பையன் என்னைப் பாக்க வந்தானே, ஞாபகம் இருக்கா? புத்திசாலியா இருக்கற மாணவர்களை எனக்கு ஞாபகம் இருக்கற மாதிரி, ரொம்ப மக்கா இருக்கற மாணவர்களையும் என்னால மறக்க முடியாது! அவன் அப்படிப்பட்ட ஒரு மக்குதான். அவனை நான் எவ்வளவோ திட்டி இருக்கேன். 'நீயெல்லாம் எப்படிடா உருப்படப் போற? உன் பெற்றோர்களை நினைச்சா எனக்கே பரிதாபமா இருக்கு' அப்படியெல்லாம் சொல்லி இருக்கேன். வேடிக்கை என்னன்னா இப்ப அவன் ஒரு பெரிய கம்பெனியில ஜெனரல் மானேஜரா இருக்கான். நிறைய சம்பளம், வருஷத்தில பாதி நாள் வெளிநாட்டுப் பயணம்னு உச்சாணிக் கொம்பில இருக்கான்.  இவனையும் பாரு, அவனையும் பாரு! எல்லாம் நீ சொல்ற மாதிரி அதிர்ஷ்டம்தான் போலருக்கு!" என்றார் தாமோதரன். 

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

பொருள்:
உலகத்தின் இயற்கை இரு வேறு வகையானது. செல்வம் உடையவராக இருப்பது வேறு அறிவு உடையவராக இருப்பது வேறு.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Thursday, November 12, 2020

373. ஏன் இப்படி நடக்கிறது?

வேணுவின் படிப்பு முடிந்ததுமே அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து விடும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தனர். 

ஆனால் அப்படி நடக்கவில்லை. 

பல நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்ட பிறகும் அவனுக்கு ஒரு வேலை நியமனக் கடிதம் கூட வரவில்லை. சில நிறுவனங்களிலிருந்து 'வருந்துகிறோம்' என்ற செய்தியைத் தாங்கிய கடிதங்கள்தான் வந்தன. மற்ற நிறுவனங்களிலிருந்து அதுவும் வரவில்லை.

அவனுடன் படித்துப் பட்டம் பெற்ற பலருக்கும் வேலை கிடைத்து விட்டது.

"இந்தக் காலத்தில தகுதிக்கு மதிப்பு இல்லை. இன்ஃப்ளூயன்ஸுக்குத்தான் மதிப்பு. நமக்கு அது இல்லையே!" என்றார் அவன் அப்பா.

அவன் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டிய அவன் அம்மா, வேணுவின் ஜாதகத்தில் செவ்வாய் கேடு விளைவிக்கும் இடத்தில் இருப்பதாக அவர் சொன்னதை ஏற்று அவர் யோசனைப்படி ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் முருகனுக்கு அர்ச்சனை செய்யத் தொடங்கினாள்.

"எப்படிடா? எங்க எல்லாரையும் விட நீ புத்திசாலி. நிறைய மார்க் வாங்கி இருக்கே. நிறைய க்விஸ் நிகழ்ச்சிகள்ள கலந்துக்கிட்டுப் பரிசு வாங்கி இருக்கே. அதனால பொது அறிவுக் கேள்விகளுக்கும் டாண் டாண்ணு பதில் சொல்லிடுவ. நீ ஏன் இன்டர்வியூவில செலக்ட் ஆகலேன்னே எனக்குப் புரியலியே!" என்றான் அவன் நண்பன் பாலு.

நண்பன் சொன்ன 'டாண் டாண்ணு பதில் சொல்லிடுவியே' என்ற கருத்து வேணுவின் சிந்தனையைத் தூண்டியது.

தான் கலந்து கொண்ட இன்டர்வியூக்களை மனதில் நினைத்துப் பார்த்தான் வேணு. இன்டர்வியூ முடிந்து வெளியே வரும்போதெல்லாம் அவனுக்கே ஒரு நம்பிக்கை ஏற்பட்டதில்லை. ஒருவித தளர்ச்சியான மனநிலையுடன்தான் வெளியே வருவான் - இந்த வேலை தனக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தது போல்!

அது ஏன் என்று இத்தனை நாட்களாக அவனுக்குப் புரிந்ததில்லை. இப்போது புரிந்து விட்டது போல் தோன்றியது.

அவன் நண்பன் பாலு சொன்னது போல் இன்டர்வியூவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அவன் 'டாண் டாண்' என்று பதில் சொன்னதில்லை. தயங்கித் தயங்கித்தான் பதில் சொல்லி இருக்கிறான்.

நேர்முகத் தேர்வில் கேள்வி கேட்கப்படும்போதே பதில் அவன் மனதில் தோன்றி விடும். ஆனால் அவன் உடனே பதில் சொன்னதில்லை. தன் பதில் சரிதானா என்று மனதுக்குள் யோசித்து உறுதி செய்து கொண்டு பதில் சொல்வது போல் சில விநாடிகள் கழித்துத்தான் பதில் சொல்வான்.

அவன் சொன்ன பதில்கள் சரியானவையாக இருந்தாலும் அவனுடைய தயக்கம் நேர்முகத் தேர்வு நடத்துபவர்கள் மனதில் அவன் தன்னம்பிக்கை இல்லாதவன், அல்லது தனக்குத் தெரிந்த விஷயங்கள் பற்றி உறுதி இல்லாதவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அதனாலேயே அவர்கள் அவனைத் தேர்வு செய்யாமல் இருந்திருக்கலாம். இது தனக்கும் உள்ளூரத் தெரிந்ததுதான் நேர்முகத் தேர்வு முடிந்ததும் தனக்கு ஏற்படும் மனச் சோர்வுக்குக் காரணமாக இருக்கும் என்று அவனுக்கு இப்போது தோன்றியது.

நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் பெற்றுத் தேறி, கூர்மையான அறிவுள்ளவன் என்று தன் நண்பர்களாலும், ஆசிரியர்களாலும் கருதப்பட்ட தான் ஏன் நேர்முகத் தேர்வுகளில் கேள்விகளுக்குத் தனக்கு பதில் தெரிந்தும் அவற்றை தைரியமாக உடனே சொல்லத் தயங்க வேண்டும்? 

அவனுக்குப் புரியவில்லை.

தன் பிரச்னை என்ன வென்று வேணு உணர்ந்து விட்டதால், ஒருவேளை அடுத்த நேர்முகத் தேர்வின் அவனால் இந்தக் குறையைப் போக்கிக் கொள்ள முடியலாம். அல்லது அப்போதும் இதேபோல்தான் நடந்து கொள்வானா?

அடுத்த நேர்முகத் தேர்விலகலந்து கொள்ளும்போதுதான் தெரியும்! 

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

பொருள்:
ஒருவன் நுட்பமான நூல்கள் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள இயல்பான அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Wednesday, November 11, 2020

372. நம்பகமான முதலீடு!

பொதுவாக கோபி பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையானவன். ஒரு நண்பன் கடன் கேட்டால் கூட அவனால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியுமா என்று யோசித்து விட்டுத்தான் கொடுப்பான்.

ஒருமுறை அவன் நெருங்கிய நண்பன் ஒரு பெரிய நெருக்கடியில் இருந்தபோது பல நண்பர்களிடமும் அவர்களால் கொடுக்க முடிந்த தொகையைக் கடனாகப் பெற்று அவன் அந்த நெருக்கடியைச் சமாளித்தான். ஆனால் கோபி அவனுக்குக் கடன் கொடுத்து உதவவில்லை. அன்றைய நிலையில் தன் கையில் நூறு ரூபாய் கூட இல்லை என்று சொல்லிக் கை விரித்து விட்டான்.

"உங்களோட நெருங்கிய நண்பர், அவருக்கு நீங்க உதவி இருக்கலாமே? ஏன் பணம் இல்லைன்னு பொய் சொன்னீங்க?" என்று அவன் மனைவி ராதிகா கேட்டபோது, "அவன் இத்தனை பேர்கிட்ட கடன் வாங்கறான், யாருக்குன்னு கடனைத் திருப்பிக் கொடுப்பான்? அத்தனை பேருக்கும் கடனைத் திருப்பிக் கொடுக்கப் பல வருஷங்கள் ஆகும். நான் நெருங்கின நண்பன்கற உரிமையில எனக்கு மெதுவா கொடுத்துக்கலாம்னு நினைச்சு மத்தவங்க கடனையெல்லாம் முதல்ல தீர்த்துட்டு கடைசியாத்தான் எனக்குக் கொடுப்பான்! அது கூட அவனால முடியுமோ என்னவோ தெரியாது! அதனாலதான் நான் இதில மாட்டிக்க விரும்பல" என்றான் கோபி. 

அலுவலகத்தில் இருந்த ஊழியர் கூட்டுறவு சங்கத்தில் குறைந்த வட்டியில் கடன் கிடைத்தபோது, அதில் கடன் வாங்கித் தங்க நகைகளை வாங்கினான் கோபி. மனைவிக்கு நகை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையினால் அல்ல, அப்போது தங்கத்தின் விலை ஏறிக் கொண்டே வந்ததால், அது ஒரு நல்ல முதலீடு என்று கணக்குப் போட்டு!

ருமுறை வெளியூரிலிருந்த கோபியின் ஒன்று விட்ட சகோதரன் ஜகன் கோபியின் வீட்டுக்கு வந்திருந்தான்.

இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, "பல கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்கள்ள பணத்தை முதலீடு செஞ்சு நான் நிறைய ஏமாந்துட்டேன். நிறைய பணம் போயிடுச்சு" என்றான் ஜகன்.

'"நான் இந்த விஷயத்தில ரொம்ப கவனமா இருப்பேன். நான் நிறைய ஸ்டடி பண்ணிட்டுத்தான் முதலீடு செய்வேன். இதுவரையிலேயும் என் முதலீடு எதுவுமே தப்பாப் போனதில்ல" என்றான் கோபி பெருமையுடன்.

"நல்ல முதலீடு இருந்தா சொல்லு. இனிமே நான் உன்னோட யோசனைப்படியே முதலீடு செய்யறேன்" என்றான் ஜகன்.

"பொதுவா, நான் யாருக்கும், எதையும் சிபாரிசு செய்யறதில்ல. நீ கேக்கறதால சொல்றேன். ஒரு கோழிப்பண்ணை திட்டத்தில நான் முதலீடு செஞ்சிருக்கேன். ஒரு லட்சம் ரூபா முதலீடு. மாசம் அஞ்சாயிரம் ரூபா வருமானம். அஞ்சு வருஷம் கழிச்சு நம்ம முதலீடு செஞ்ச தொகையைத் திருப்பிக் கொடுத்துடுவாங்க" என்றான் கோபி.

"ரொம்ப நல்லா இருக்கே இது! வருஷத்துக்கு அறுபதாயிரம் ரூபான்னா அறுவது சதவீதத்துக்கு மேல ரிடர்ன் வருதே, இது நம்பகமானதா?" என்றான் ஜகன் வியப்புடன்.

"அதான் சொன்னேனே! நான் நல்லா ஸ்ட்டி பண்ணிட்டுத்தான் முதலீடு செய்வேன்னு. கோழிப்பண்ணையில நல்ல வருமானம். இதை நடத்தறவரு அதிக விளம்பரம் பண்ணாம, தெரிஞ்சவங்க மூலமா கொஞ்சம் பேர் கிட்ட மட்டும்தான் முதலீடு வாங்கறாரு. அதனால இதைப் பத்தி நீ எங்கேயும் படிச்சிருக்க மாட்டே! முதல் மாசப் பணம் எனக்கு வந்துடுச்சு. ரெண்டாவது மாசப் பணம் இன்னும் ரெண்டு நாள்ள என் அக்கவுன்ட்ல கிரடிட் ஆயிடும்"

"அப்ப நானும் இதில சேந்துக்கறேன்!" என்று ஜகன் ஆர்வமாகக் கூறியதும், கோபி அவனிடம்அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்தான்.

"இதைப் பூர்த்தி செஞ்சு, ஒரு லட்ச ரூபாய்க்கு செக்கோட கம்பெனி அட்ரசுக்கு அனுப்பிடு. அப்புறம் மாசா மாசம் உன் அக்கவுன்ட்டுக்கு அஞ்சாயிரம் வந்துக்கிட்டே இருக்கும்!" என்றான் கோபி.

கோபி ஜகனிடம் சொன்னது போல், இரண்டாவது மாத வருமானம் கோபியின் வங்கிக் கணக்குக்கு வரவில்லை. நிறுவனத்துக்கு ஃபோன் செய்து கேட்டபோது, இரண்டு நாட்களில் கிரடிட் ஆகி விடும் என்றார்கள். இரண்டு நாட்களிலும் வரவில்லை. மூன்றாம் நாள் அவன் ஃபோன் செய்தபோது ஃபோனை யாரும் எடுக்கவில்லை.

பிறகு நண்பர்களிடம் விசாரித்ததில், அந்த நிறுவன உரிமையாளர் கோழிகளையெல்லாம் மொத்தமாக விற்று விட்டுக் குடும்பத்துடன் எங்கோ தலைமறைவாகி விட்டதாக அறிந்தான். அவருக்குச் சொத்து எதுவும் இல்லை, கோழிப்பண்ணையைக் கூட அவர் வாடகைக்கு எடுத்த இடத்தில்தான் நடத்திக் கொண்டிருந்தார் என்பதால் போலீசில் புகார் செய்தாலும் பணம் கிடைக்க வாய்ப்பில்லை என்று அறிந்து கொண்டான். 

"உங்க பேச்சை நம்பி உங்க தம்பி வேற முதலீடு பண்ணி இருப்பாரே, அவருக்கு விஷயத்தைச் சொல்லுங்க!" என்றாள் ராதிகா.

தான் புத்திசாலித்தனமாக முதலீடு செய்பவன் என்பது போல் பேசித் தன் ஒன்று விட்ட சகோதரனுக்குத் தவறான ஆலோசனை சொல்லி விட்டோமே என்ற குற்ற உணர்வுடன் ஜகனுக்கு ஃபோன் செய்தான் கோபி.

அவன் ஃபோன் பேசி முடித்ததும்,"என்ன சொல்றாரு? உங்க கிட்ட கோவிச்சுக்கிட்டாரா?" என்றாள் ராதிகா..

"இல்ல. அவன் தப்பிச்சுட்டான்!" 

"எப்படி?"

"இவ்வளவு ரிடர்ன் வருமான்னு என்னவோ அவனுக்கு சந்தேகமாகவே இருந்ததாம். அதனால ரெண்டு மூணு மாசம் கழிச்சு எனக்குத் தொடர்ந்து வருமானம் வருதான்னு தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் முதலீடு பண்ணலாம்னு நினைச்சானாம். அதனால அவன் பணம் தப்பிச்சுது!"

"அவரோட நல்ல நேரம்தான்!" என்றாள் ராதிகா. 

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

பொருள்:
இழப்பை ஏற்படுத்தும் விதி அறியாமையை உண்டாக்கும். பொருளை அளிக்கும் விதி அறிவுடன் செயல்பட வைக்கும்.
பொருட்பால்                                                                                        காமத்துப்பால்

Tuesday, November 3, 2020

371. வேலை பறிபோனதும்...

"ஏங்க நடந்தது நடந்து போச்சு. இப்படியே உக்காந்துக்கிட்டிருந்தா எப்படி? வேற ஏதாவது வேலைக்கு முயற்சி பண்ணுங்க" என்றாள் மீனாட்சி.

"20 வருஷமா இந்த கம்பெனிக்கு உழைச்சிருக்கேன். திடீர்னு ஒருநாள் ஆள்குறைப்புன்னு சொல்லி வெளியில அனுப்பிட்டாங்க. இதை என்னால ஜீரணிக்கவே முடியல!" என்றான் சாமிநாதன். 

"உங்க வருத்தமெல்லாம் சரிதான். ஆனா நீங்க சீக்கிரமே வேற வேலை தேடிக்கலேன்னா நாம சாப்பாட்டுக்கே கஷ்டப்பட வேண்டிய நிலைமை வந்துடும். அப்புறம் பிள்ளைங்க படிப்பெல்லாம் வேற இருக்கு."

"வேற வேலைக்கு முயற்சி பண்றேன். ஆனா, நீ கவலைப்பட வேண்டாம். செட்டில்மென்ட் பணம் பி எஃப் பணம் எல்லாம்தான் இருக்கே! இப்போதைக்கு பணப் பிரச்னை எதுவும் இருக்காது."

டுத்த சில வாரங்கள் சாமிநாதன் மும்முரமாக வேலைக்கு முயற்சி செய்தான். பெரும்பாலான நிறுவனங்களிலிருந்து பதிலே வரவில்லை. ஒன்றிரண்டு நிறுவனங்களிலிருந்து நேர்முகத்துக்கான அழைப்பு வந்தது. ஆனால் அவனை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை.

"எல்லாருமே 20 வருஷமா வேலை செய்யற உங்களை ஏன் வேலையை விட்டு அனுப்பிச்சாங்கன்னுதான் கேக்கறாங்க. ஆட்குறைப்புன்னு சொன்னா, உங்களை மாதிரி அனுபவம் உள்ளவங்களை அனுப்ப மாட்டாங்களேன்னு கேக்கறாங்க. என்னை மாதிரி அனுபவம் உள்ள இன்னும் சில பேரையும் வேலையை விட்டு அனுப்பிட்டாங்கன்னு சொன்னா கூட அவங்க அதை ஏத்துக்கற மாதிரி தெரியல. எங்கிட்ட ஏதோ குறை இருக்கும்னு நினைக்கிறாங்க" என்றான் சாமிநாதன் மனைவியிடம்.

"எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்க. உங்க நிலைமையையும், உங்க திறமையையும் புரிஞ்சுக்கிட்டு உங்களுக்கு வேலை கொடுக்கறவங்க யாராவது இல்லாம போக மாட்டாங்க" என்றாள் மீனாட்சி.

"பாக்கலாம்" என்றான் சாமிநாதன். ஆனால் அவன் குரலில் நம்பிக்கை தொனிக்கவில்லை.

அதன் பிறகு வேலைக்கு முயற்சி செய்வதில் சாமிநாதன் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மீனாட்சி சில முறை சொல்லிப் பார்த்து விட்டு ஓய்ந்து விட்டாள்.

ரு வருடம் கழித்து, ஒரு நாள் மீனட்சி அவனிடம் கேட்டாள்: "என்னங்க நீங்க வேலைக்கு முயற்சி செய்யறதையே விட்டுட்டீங்க போலருக்கே!"

"முயற்சி செஞ்சு என்ன பிரயோசனம்? எதுவும் நடக்க மாட்டேங்குது. கையில இருக்கற பணத்தை வச்சுக்கிட்டு இப்படியே காலத்தை ஓட்ட வேண்டியதுதான். நீயும் சிக்கனமாத்தானை குடித்தனம் நடத்திக்கிட்டிருக்கே!" என்றான் சாமிநாதன்.

"'ஏங்க? நம்ம குடும்பத்தில எல்லாருக்கும் தேவையான அளவுக்கு விஷம் வாங்க எவ்வளவு பணம் வேணும்?" என்றாள் மீனாட்சி, பொங்கி வந்த அழுகையையும், ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டு.

"என்ன மீனாட்சி இது?" என்றான் சாமிநாதன் அதிர்ச்சியுடன்.

"இந்த ஒரு வருஷமா நமக்கு வருமானமே இல்லை. ஆனா வீட்டு வாடகை, மளிகைச் சாமான்கள் விலை, பள்ளிக்கூடக் கட்டணம் எல்லாம் ஏகமா ஏறிப்போச்சு. இனிமேயும் ஏறிக்கிட்டேதான் இருக்கும். நம்ம கையில இருக்கற பணம் இன்னும் எவ்வளவு வருஷத்துக்கு அல்லது மாசத்துக்கு வரும்னு தெரியல. பணம் எல்லாம் தீர்ந்து போனப்பறம் எல்லாரும் விஷம் குடிச்சு செத்துடலாம்னா அப்ப விஷம் வாங்கக் கூட நம்ம கிட்ட காசு இல்லேன்னா என்ன செய்யறது? அதுதான் கேட்டேன்!" என்று சொல்லி விட்டுக் கோபத்துடன் உள்ளே போய் விட்டாள் மீனாட்சி.

சாமிநாதன் யோசிக்க ஆரம்பித்தான்.

ரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் வெளியே போய் விட்டு வீட்டுக்குத் திரும்பிய சாமிநாதன், "மீனாட்சி! எனக்கு வேலை கிடைச்சுடுச்சு. நல்ல கம்பெனி, நல்ல சம்பளம்!" என்றான் உற்சாகத்துடன்.

"எனக்குத்தெரியும், உங்க திறமைக்கும், அனுபவத்துக்கும் நல்ல வேலை கிடைக்காம போகாதுன்னு!" என்றாள் மீனாட்சி உற்சாகத்துடன்.

"நீ அன்னிக்கு விஷம் குடிச்சு சாக வேண்டிய நிலைமைதான் வரும்னு பேசினப்ப எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்த்து. அப்புறம் தீவிரமா முயற்சி செஞ்சேன். அதன் பலனா இந்த நல்ல வேலை கிடைச்சுது. முதலிலேயே சோர்ந்து போகாம முயற்சி செஞ்சிருந்தா இன்னும் முன்னாலேயே கூடக் கிடைச்சிருக்கும்" என்றான் சாமிநாதன்.

"விடுங்க! நம்ம விதி எப்படி இருக்கோ அப்படித்தானே நடக்கும்? எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணுமில்ல?" என்றாள் மீனாட்சி.

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 371
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

பொருள்:
நன்மையைக் கொடுக்கும் விதி இருந்தால், சோர்வற்ற முயற்சி ஏற்படும். இழப்பை விளைவிக்கும் விதி இருந்தால், சோம்பல் ஏற்படும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

370. தந்தையும் மகனும்

"ஏண்டா, இப்ப எதுக்கு அந்தப பண்ணை நிலத்தை விக்கணும்னு பாக்கற?" என்றார் வைத்திலிங்கம்.

"நிலத்தை வாங்கறப்ப அந்த கம்பெனியில வருஷத்துக்கு இருபது பர்சன்ட் ரிடர்ன் கொடுக்கறேன்னு சொன்னாங்க. ஆனா மூணு வருஷமா பத்து பர்சன்ட்தான் கொடுக்கறாங்க. கேட்டா 'விளைச்சல் கம்மி, காய்கறிகள், பழங்களோட விலையெல்லாம் குறைஞ்சு போச்சு, நாங்க எதிர்பாத்த வருமானம் வரலைன்னு சாக்கு சொல்றாங்க!" என்றான் அவர் மகன் ராமு.

'நீ வாங்கறப்பவே சொன்னேனே, அவங்க சொல்றபடியெல்லாம் வருமானம் வரும்னு எதிர்பார்க்க முடியாது, இதிலெல்லாம் முதலீடு செய்யாதேன்னு' என்று வைத்திலிங்கம் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

"பத்து பர்சன்ட் ரிடர்ன்.கூடப் பரவாயில்லையே! எதுக்கு இப்ப அதை விக்கற?"

"இல்லப்பா. இதை வாங்கறப்ப இதே மாதிரி ஸ்கீம் இன்னொரு கம்பெனியிலேயும் இருந்தது. அவங்க பன்னிரண்டு பர்சன்ட் ரிடர்ன்தான் கொடுப்பேன்னு சொன்னாங்க. முதலீடு கூட இதை விடக் குறைச்சல்தான். அதிக ரிடர்ன் வரும்னு இதை வாங்கினேன். இப்ப அவங்க பதினைஞ்சு பர்சன்ட் ரிடர்ன் கொடுக்கறாங்க! இவங்க என்னை ஏமாத்திட்டாங்க. அதனாலதான் விக்கணும்னு நினைக்கறேன்" என்றான்.

"இப்ப இதை வித்துட்டு அதை வாங்கப் போறியா?" என்றார் வைத்திலிங்கம்.

"இன்னும் முடிவு பண்ணல. முதல்ல இதை விக்க முடியுமான்னு தெரியல. இப்ப மார்க்கட் டல், விலையெல்லாம் குறைஞ்சு போச்சு, வாங்கறத்துக்கே ஆள் இல்லேன்னு சொல்றாங்க. ஏற்கெனவே ஸ்டாக் மார்க்கெட்ல போட்ட பணமெல்லாம் முடங்கி இருக்கு. அஞ்ச லட்ச ரூபா முதலீடு பண்ணினேன். இப்ப என் பங்குகளோட மதிப்பு 3 லட்ச ரூபாயாக் குறைஞ்சுடுச்சு. ஏன் எல்லாமே இப்படி நஷ்டமாப் போய்க்கிட்டிருக்குன்னு தெரியல! இதையெல்லாம் நினைச்சுப் பாத்தா ஒரே விரக்தியா இருக்கு!" என்று சலித்துக் கொண்டான் ராமு.

'உனக்கு நல்ல வேலை, சம்பளம், அமைதியான குடும்பம் எல்லாம் இருந்தும், உன்னோட அதிகமான ஆசைதான் உன் விரக்திக்குக் காரணம்கறதை நீ எப்ப புரிஞ்சிக்கப் போறியோ!' என்று நினைத்துக் கொண்டார் வைத்தியலிங்கம். 

ஏற்கெனவே மகனிடம் இது பற்றி அவர் பல முறை பேசி மனக்கசப்பில் முடிந்ததில்தான் மிச்சம். அதனால் இப்போதெல்லாம் வைத்திலிங்கம் மகனிடம் எந்தக் கருத்தும் கூறுவதில்லை.

"உங்க காலம் வேறப்பா! நீங்க கிடைச்சது போதும்னு இருந்திட்டீங்க. என்னால அப்படி இருக்கமுடியாது" என்றான் ராமு, தந்தை எதுவும் சொல்லி விடுவாரோ என்று நினைத்து முன்னெச்சரிக்கையாக.  

'அதிகமாக ஆசைப்படாமல் குடும்பத்தை நன்கு பார்த்துக் கொண்டால் போதும் என்று நினைத்து நான் செயல்பட்டதால்தான் உன் அக்காவையும், உன்னையும் நன்றாகப் படிக்க வைத்து, உன் அக்காவுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்து, நீ நல்ல நிலைக்கு வந்த பிறகும் உன்னை எதிர்பார்க்காமல் நானும் உன் அம்மாவும் கடைசி வரை நல்லபடியாகக் குடும்பம் நடத்தும் அளவுக்குக் கையில் சேமிப்பு வைத்துக் கொண்டு என்னால் நிம்மதியாக வாழ முடிகிறது. இதை நீ எப்போது புரிந்து கொள்ளப் போகிறாயோ!' என்று நினைத்துக் கொண்டார் வைத்திலிங்கம்.

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

பொருள்:
எப்போதும் நிரம்பாத தன்மையுடைய ஆசையை ஒழித்து விட்டால், அந்த நிலையே எப்போதும் மாறாத இன்ப நிலையைத் தரும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Wednesday, October 21, 2020

369. அத்தனைக்கும் ஆசைப்படு!

"என்னங்க எக்ஸ்சேஞ்ஞ் ஆஃபர்ல இந்த சங்கிலியைக் கொடுத்துட்டுப் புதுசா ஒரு நெக்லஸ் வாங்கிக்கப் போறேன்!" என்றாள் கார்த்திகா.

அவள் கணவன் ராஜா எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.

"நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலியே நீங்க?"

"நீ எங்கிட்ட எதுவும் கேக்கலியே! நெக்லஸ் வாங்கிக்கப் போறேன்னு சொன்னே. நான் இதில பதில் சொல்றதுக்கு என்ன இருக்கு? தகவல் சொன்னதுக்கு நன்றின்னு வேணும்னா சொல்லலாம்!" என்று சொல்லி விட்டு உடனே சிரித்தான் ராஜா, மனைவி கோபித்துக் கொள்ளப் போகிறாளே என்ற பயத்தில்.

"எனக்குன்னு ஏதாவது வாங்கிக்கிட்டா உங்களுக்குப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். நீங்களாவும் எனக்கு வாங்கிக் கொடுக்க மாட்டீங்க. நானா வாங்கிக்கிட்டாலும் உங்களுக்குப் பிடிக்காது" என்றாள் கார்த்திகா கோபத்துடன்.

'கோபித்துக் கொண்டு 'சரி வேண்டாம்' என்று மட்டும் சொல்ல மாட்டாயே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ராஜா, "இங்க பாரு கார்த்திகா! நீ எதை வாங்கினாலும் நான் வேண்டாம்னு தடுத்ததில்ல. ஆனா நீ நிறைய விஷயங்களுக்கு ஆசைப்படற. தேவையில்லாம குக்கர், மிக்ஸி மாதிரி பொருட்களை அடிக்கடி மாத்தற. வாரத்தில ரெண்டு நாள் மாட்னி ஷோ போற. நமக்கு வசதி இருக்குதான். ஆனா நிறைய விஷயங்களுக்கு ஆசைப்படறது உனக்கே நல்லது இல்லைன்னு எனக்குத் தோணுது. அப்புறம் உன் இஷ்டம்" என்று சொல்லி விட்டு அவள் பதில் சொல்வதற்கு முன் அங்கிருந்து வெளியேறி விட்டான் ராஜா. 

ல பொருட்களை வாங்குவது, வீட்டு உபயோகப் பொருட்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பது போன்ற கார்த்திகாவின் பழக்கம் தொடர்ந்தது. 

அவள் மகனும், மகளும் கூட, "ஏம்மா, சோஃபா, டிவின்னு எல்லாத்தையும் அடிக்கடி மாத்திக்கிட்டே இருக்கே? நாங்களே அந்த அளவுக்குப் புதுசா வர பொருட்களை வாங்க ஆசைப்படறதில்லையே!" என்று அவளிடம் பலமுறை சொன்னார்கள்.

"உங்க சந்தோஷத்துக்காகத்தான் நான் எதையுமே வாங்கறேன். அதைப் புரிஞ்சுக்காம நீங்களும் உங்கப்பா சொல்ற மாதிரியே சொல்றீங்களே!" என்று குறைப்பட்டுக் கொண்டாள் கார்த்திகா.

சில வருடங்களுக்குப் பிறகு, பொருட்களை வாங்குவதைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தாள் கார்த்திகா. சினிமாவுக்குப் போவதையும் விட்டு விட்டாள்.

அவளுடைய மாற்றத்துக்குக் காரணம் ராஜாவுக்குப் புரியவில்லை. யாராவது ஆன்மீகச் சொற்பொழிவாளர் சொன்னதைக் கேட்டு மனம் மாறி இருப்பளோ என்று நினைத்தான்.

ஒருமுறை ராஜாவே அவளிடம் புதிதாக வந்திருக்கும் ஒரு விலை உயர்ந்த கைபேசியை வாங்கிக் கொள்ளச் சொன்னபோது அவள் வேண்டாமென்று சொல்லி விட்டாள். "இந்த ஃபோன்லேயேதான் எல்லாம் இருக்கே! இதுக்கு மேல என்ன வேணும்?" என்றாள் அவள்.

"ரொம்ப ஆச்சரியமா இருக்கே! எப்படி இப்படித் தலைகீழா மாறின?"

"நீங்க சொன்ன மாதிரி எல்லாத்துக்கும் ஆசைப்படற மனநிலைதான் எனக்கு இருந்தது. ஆனா அப்பல்லாம் நான் சந்தோஷமாவே இல்லை. புதுசா ஏதாவது வாங்கினா கூட, அதை சந்தோஷமா அனுபவிக்காம வேற எதுக்காவது ஆசைப்படறது, அதைப் பத்தி நினைக்கறதுன்னு எப்பவும் மனசு அலைபாஞ்சுக்கிட்டே இருந்தது. 

"சினிமா பாக்கறது, கச்சேரிகளுக்குப் போறது, லேடீஸ் கிளப் நிகழ்ச்சிகளுக்குப் போறது எல்லாம் கூட அப்படித்தான். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா யோசிச்சுப் பாத்தேன். எங்கிட்ட ஏதோ குறை இருக்கற மாதிரி தெரிஞ்சுது. 'அத்தனைக்கும் ஆசைப்படு'ன்னு ஒரு சாமியார் சொல்லுவாரே, அது மாதிரிதான் நான் உண்மையிலேயே இருக்கேனோன்னு தோணிச்சு!

"அப்புறம் எனக்கு வந்த ஆசைகளையெல்லாம் அலட்சியப்படுத்த ஆரம்பிச்சேன். அதுக்கப்பறம் எனக்கு ஒரு சந்தோஷம் கிடைக்க ஆரம்பச்சுது. நம்ம பிள்ளைங்களோட படிப்பு, அவங்களோட, தேவைகள், உங்களோட தேவைகள் எல்லாம் என் கவனத்துக்கு வர ஆரம்பச்சுது. அப்புறம் செய்ய வேண்டிய காரியங்கள்ள கவனம் செலுத்திக்கிட்டு இருக்கறப்ப ஒரு அலாதியான திருப்தியும் சந்தோஷமும் கிடைக்குது. இப்பல்லாம் நான் முன்னை விட ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்றாள் கார்த்திகா.

ராஜா அவளை வியப்புடன் பார்த்தான். 

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

பொருள்:
துன்பங்களுக்குள் கொடிய துன்பமான ஆசை என்னும் துன்பத்தை ஒழித்து விட்டால், இடைவிடாத இன்பம் கிட்டும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Sunday, October 11, 2020

368. பாதை மாறிய பின்...

"நமக்கென்ன குறைச்சல்? அரசாங்க வேலை. நாம குடும்பம் நடத்தப் போதுமான அளவுக்கு சம்பளம். அளவா, அருமையா ரெண்டு குழந்தைகள். நாம சந்தோஷமாத்தானே இருக்கோம்?" என்றான் பரசு, தன் மனைவி பிரேமாவிடம்.

அவள் அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டது போல் மௌனமாகத் தலையசைத்தாள்.

ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவள் மனநிலை சற்று மாறி விட்டது.

"நம்ம பிள்ளைங்களை வேற பள்ளிக்கூடத்தில சேக்கணுங்க" என்றாள் ஒரு நாள்.

"ஏன், இந்தப் பள்ளிக்கூடம் நல்லாத்தானே இருக்கு? ரெண்டு பேரும் நல்லாத்தானே படிக்கறாங்க?" என்றான் பரசு.

"படிக்கிறாங்க. ஆனா இப்பல்லாம் படிப்பு மட்டும் இருந்தாப் போதாதுங்க. எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ்னு சொல்றாங்களே, அதெல்லாமும் இருந்தாதான் எதிர்காலத்தில நம்ம பிள்ளைங்களால மத்தவங்களோட போட்டி போட்டு முன்னுக்கு வர முடியும். சில பள்ளிக்கூடங்கள்ள ஐ ஐ டி நுழைவுத் தேர்வுக்கெல்லாம் கூட மாணவர்களை ஆறாம் வகுப்பலேந்தே தயார் செய்யறாங்களாம்!" என்றாள் பிரேமா.

"சரி. விசாரிச்சுப் பாக்கறேன்" என்றான் பரசு.

சில நாட்கள் கழித்து, "நீ சொன்ன மாதிரி ரெண்டு மூணு பள்ளிக்கூடங்கள்ள விசாரிச்சுப் பாத்தேன், பிரேமா! அவங்க வாங்கற கட்டணம் நமக்குக் கட்டுபடியாகாது" என்றன் பரசு.

"அப்படியா?" என்றாள் பிரேமா ஏமாற்றத்துடன். 

சில நாட்களுக்குப் பிறகு "நீ சொன்ன மாதிரி நம்ப பிள்ளைங்களை வேற பள்ளிக்கூடத்தில சேத்துடலாம்!" என்றான் பரசு பிரேமாவிடம்.

"எப்படிங்க? அவங்க வாங்கற ஃபீஸ் நமக்குக் கட்டுப்படி ஆகாதுன்னு சொன்னீங்களே!" என்றாள் பிரேமா மகிழ்ச்சியுடனும், வியப்புடனும்.

லஞ்சம் புழங்கும் அரசு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கக் கூடாது என்று நேர்மையுடன் செயல்பட்டு வந்த சிறுபான்மையருள் ஒருவனாக இருந்த தான் இப்போது பணத்தேவைக்காக மனம் மாறி லஞ்சம் வாங்கும் பெரும்பான்மையினர் கட்சியில் இணைந்து விட்டதை மனைவியிடம் தயக்கத்துடன் தெரிவித்தான் பரசு. 

பிரேமா எதுவும் சொல்லவில்லை.

பரசுவிடம் பணப்புழக்கம் அதிகமானதும் அவர்கள் வீட்டில் பெரிய திரை எல் ஈ டி டிவி முதலிய பல புதிய வசதிகளும் இடம் பெறத் தொடங்கின.

"என்னங்க? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" என்றாள் பிரேமா.

"நான் செய்யறது சரியான்னே தெரியல. ஒரு வருஷம் முன்னால சந்தோஷமா, நிம்மதியா இருந்தேன். இப்ப கொஞ்ச நாளா ஒரே மன உளைச்சல்!"

"ஏன் ஆஃபீஸ்ல ஏதாவது பிரச்னையா?"

"ஆமாம். ஆனா எல்லாம் நானா வர வழைச்சுக்கிட்டதுதான். ஆஃபீஸ்ல நான் ஒரு சின்ன அதிகாரிதான்னா கூட எனக்கு ஒரு மதிப்பு, மரியாதை எல்லாம் இருந்தது.  இப்ப எல்லாம் போயிடுச்சு. மதிப்பு மரியாதையை விடு, அது முக்கியமில்ல. 

"ஆனா இப்பல்லாம் விதிகளுக்கு மீறி சில விஷயங்களைச் செய்யச் சொல்லி எனக்கு அழுத்தம் கொடுக்கறாங்க. தங்களுக்கு வேலை நடக்க வேண்டியவங்க, 'அதான். பணம் வாங்கறியே, அப்புறம் என்ன? அட்ஜஸ்ட் பண்ணி செஞ்சு கொடுக்க வேண்டியதுதானே, ரூல்ஸ் பத்தி எல்லாம் ஏன் பேசறே' ன்னு உரிமையோட கேக்கறாங்க. மேலதிகாரிகள் அவங்க விருப்பப்படி நான் நடந்துக்கணும்னு எதிர்பாக்கறாங்க. 'நீ ஒண்ணும் யோக்கியன் இல்லையே' என்கிற மாதிரி பேசறீங்க.

"எனக்கு வேற எப்ப மாட்டிக்கப் போறோமோன்னு எப்பவும் ஒரு பயம் இருந்துக்கிட்டே இருக்கு. முன்ன மாதிரி இருந்திருந்தா நிம்மதியா சந்தோஷமா இருந்திருக்கலாமேன்னு தோணுது,"

"எல்லாத்தையும் விட்டுடுங்க. பழையபடியே இருங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது, குடும்பத்துக்கும் நல்லது" என்றாள் பிரேமா.

"என்ன சொல்ற பிரேமா? பிள்ளைங்க படிப்பு என்ன ஆறது? அதுக்காகத்தானே இப்படியெல்லாம் செய்யறேன்!" என்றான் பரசு குழப்பத்துடன்.

"நானே உங்ககிட்ட சொல்லணும்னு இருந்தேன். பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் புதுப் பள்ளிக்கூடம் பிடிக்கவே இல்லையாம். 'என்னம்மா இது, எவ்வளவுதான் கத்துக்கறது? நாள் முழுக்க வாட்டி எடுக்கறாங்க. ஏகப்பட்ட ஹோம் ஒர்க் வேற. தூங்கக்கூட நேரமில்ல. வீட்டில பெரிய டி வி வாங்கி இருக்கீங்க. அதை அரை மணி நேரம் கூடப் பாக்க முடியல. சனிக்கிழமை ஸ்பெஷல் கிளாஸ், ஞாயித்துக்கிழமை நாள் பூரா செய்ய வேண்டிய அளவுக்கு ஹோம் ஒர்க். எங்களால முடியல அம்மா. இந்த வருஷம் முடியப் போகுது, அடுத்த வருஷம் எங்களைப் பழைய ஸ்கூலிலேயே சேத்துடுங்க. நாங்க நல்லாப் படிக்கறோம்'னு எங்கிட்ட புலம்பறாங்க. 

"அதிகமா ஆசைப்பட்டது என்னோட தப்புதான். அவங்களைப் பழைய பள்ளிக்கூடத்திலேயே சேத்துடலாம். அவங்களும் சந்தோஷமா இருப்பாங்க. நீங்களும் பழையபடியே நேர்மையானவரா சந்தோஷமா, நிம்மதியா இருக்கலாம்" என்றாள் பிரேமா.

பரசுவுக்கு ஏதோ லாட்டரியில் பெரிய பரிசு கிடைத்து விட்டதுபோல் இருந்தது. 

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 368
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

பொருள்:
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசைகள் இருந்தால் மேலும் மேலும் துன்பங்கள் தொடர்ந்து வரும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Wednesday, October 7, 2020

367. வீடு தேடி அலைந்தபோது

ரகுராமன் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. இத்தனை ஆண்டுகளாக அவன் பணி செய்த பள்ளியில் அவனுக்கு இலவசமாக வீட்டு வசதி செய்து கொடுத்திருந்தார்கள். 
ஓய்வு பெற்ற பிறகும் அவன் வேறு வீடு பார்த்துப் போகும் வரை அவன் மூன்று மாதங்கள் அங்கே தங்கி இருக்க அவர்கள் அனுமதி கொடுத்திருந்தார்கள். அதில் இரண்டு மாதங்கள் முடிந்து விட்டன.

"இத்தனை வருஷமா பள்ளிக்கூடத்தில கொடுத்த வீட்டிலேயே இருந்துட்டோம். நமக்குன்னு சொந்த வீடு இல்ல. வாடகைக்கு வீடு எடுத்து, என்னோட பென்ஷன்ல வாடகையும் கொடுத்து குடும்பத்தையும் நடத்தணும்னா கஷ்டம்தான். அதனாலதான் குறைஞ்ச வாடகையில வீடு கிடைக்குமான்னு பாத்துக்கிட்டிருக்கேன். கிடைக்க மாட்டேங்குது" என்றான் ரகுராமன் கவலையுடன். 

"நீங்க வேலையில இருந்தப்பவே ஒரு சின்ன வீடாவது வாங்கி இருக்கலாம். உங்களுக்கும் அந்த எண்ணம் வரல, எனக்கும் வரல. நான் ஆசைப்பட்டிருந்தேன்னா, நீங்க எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கி இருப்பீங்க!' என்றாள் அவன் மனைவி புவனேஸ்வரி.

"நாம ரெண்டு பேருமே நமக்குன்னு எந்த ஆசையும் வச்சுக்கல. நம்ப ரெண்டு பெண்களையும் படிக்க வச்சுக் கல்யாணம் பண்ணி வைக்கறதுலதான் கவனம் செலுத்தினோம். கடன் வாங்கி வீடு வாங்கியிருந்தா, என்னோட வருமானத்தில கடனுக்கு மாசா மாசம் பணம் கட்டி இருக்க முடியுமாங்கறது சந்தேகம்தான். அதனால நான் அப்படிப்பட்ட ஆசைக்கே இடம் கொடுக்கல. நீயும் என்னை மாதிரியே தனிப்பட்ட ஆசைகள் இல்லாமயே இருந்தது என்னோட அதிர்ஷ்டம்தான். பாக்கலாம். ஏதாவது வழி பிறக்காமயா போயிடும்?"

அன்று வீடு பார்க்க வெளியே அலைந்து விட்டு வீடு திரும்பிய ரகுராமன், "இன்னிக்கு ஒரு வீடு பாத்தேன். ஆனா வீட்டுக்காரர் வேற எங்கேயோ இருக்காரு. அவரு என்னை நேரில பாத்துட்டுத்தான் வீடு கொடுப்பாராம். நாளைக்கு என்னை அவர் வீட்டுக்கு வரச் சொல்லி இருக்காரு. போய்ப் பாத்துட்டு வரேன்" என்றான்.

றுநாள் காலை வீட்டுக்காரரைப் பார்ப்பதற்காக வெளியே சென்ற ரகுராமன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. மதியத்துக்கு மேல் புவனா அவனைத் தொலைபேசியில் அழைத்தபோது அழைப்பு செல்லவில்லை.

மாலை ரகுராமன் வீடு திரும்பியதும் புவனேஸ்வரி, "ஏங்க இவ்வளவு நேரம்? ஃபோன் பண்ணினா கூட நீங்க எடுக்கல. எனக்கு ரொம்பக் கவலையாயிடுச்சு. சாப்பிட்டீங்களா இல்லையா?" என்றாள் படபடப்புடன்.

"சாப்பிட்டுட்டேன். ரொம்ப தூரம் போயிருந்தேன். அங்கே சிக்னல் கிடைக்காம இருந்திருக்கும்" என்றான்.

"அப்படி எங்கே போனீங்க? வீட்டுக்காரரைப் பாத்தீங்களா இல்லையா? வீடு தரேன்னு சொன்னாரா?'

"நான் பாக்கப் போன வீட்டுக்காரர் ஒரு பெரிய புள்ளி. என்னைப் பத்தின விவரங்களைக் கேட்டதும், 'நான் ஒரு இனடர்நேஷனல் ஸ்கூல் ஆரம்பிக்கப் போறேன். அதுக்கு பிரின்சிபல் வேலைக்கு ஒரு நல்ல ஆளைத் தேடிக்கிட்டிருக்கேன். நீங்க வரீங்களா?'ன்னு கேட்டாரு, அப்புறம் கார்ல என்னை அந்த ஸ்கூலுக்கு அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்டினாரு. ஸ்கூல் கட்டிடம் எல்லாம் முடிஞ்சு தயாரா இருக்கு. எல்லா அனுமதியும் வாங்கிட்டாரு."

"வேலையை ஒப்புத்துக்கிட்டீங்களா இல்லையா?" என்றாள் புவனேஸ்வரி பொறுமையின்றி. 

'உன்னைக் கேட்டுக்கிட்டுத்தானே சரின்னு சொல்லணும்?" என்றான் ரகுராமன் சிரித்தபடி.

"என்னை எதுக்குக் கேக்கணும்?"

"சம்பளம் நான் ரிடயர் ஆறப்ப வாங்கினதை விட பத்தாயிரம் ரூபா அதிகம். இப்ப வந்துக்கிட்டிருக்கற பென்ஷனும் வரும். நான் விரும்பற வரை வேலையில இருக்கலாம்னு சொல்லிட்டாரு. ஆனா ஒரு சிக்கல்..."

"அதானே பாத்தேன்? என்ன சிக்கல்?" என்றாள் புவனா சற்று ஏமாற்றத்துடன்.

"நாம அங்கேயேதான் இருக்கணும். இதை விடப் பெரிய வீடு கொடுக்கறாங்க. வாடகை கிடையாது. பரவாயில்லையா?"

"ஏங்க உங்களுக்குப் பைத்தியமா? இவ்வளவு நல்ல வாய்ப்பை உடனே ஒத்துக்காம எங்கிட்ட கேட்டுக்கிட்டுத்தான் ஒத்துப்பேன்னு சொல்லிட்டு வந்திருக்கீங்க! அவரு மனசு மாறிடப் போறாரு!" என்றாள் புவனேஸ்வரி கவலையுடன்.

"கவலைப்படாதே! நான் வேலையைஒத்துக்கிட்டேன். அவர் அப்பாயின்ட்மென் ஆர்டர் கொடுத்துட்டாரு. வீட்டுச் சாவியையும் கொடுத்துட்டாரு. நாம மூட்டை கட்டிக்கிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்!" என்றான் ரகுராமன், பையிலிருந்து சாவிக்கொத்தை எடுத்து ஆட்டியபடியே.

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

பொருள்:
ஒருவன் ஆசையை முழுவதுமாக ஒழித்து விட்டால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய செயல் அவன் விரும்பியபடியே வாய்க்கும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Thursday, October 1, 2020

366. கண்ணன் கேட்ட கீதை!

குருட்சேத்திரப் போரில் வென்ற பிறகு யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுர அரசனாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தபோது, பாண்டவர்களைக் காண துவாரகையிலிருந்து கண்ணன் வந்தார்.  

தன் நண்பன் அர்ஜுனன், அவன் மனைவியும் தன் தங்கையுமான சுபத்ரா, திரௌபதி, யுதிஷ்னிரனின் மற்ற சகோதரர்கள் அனைவரையும் நலம் விசாரித்த பின் யுதிஷ்டிரனைப் பார்க்க வந்தார் கண்ணன்.

"வா கண்ணா! உன் தங்கை, உன் அன்புக்குரிய மைத்துனன், என் மற்ற எல்லா சகோதரர்கள் எல்லோரையும் பார்த்த பின் இப்போதாவது என்னைப் பார்க்க நேரம் கிடைத்ததே உனக்கு!" என்றான் யுதிஷ்டிரன்.

"யுதிஷ்டிரா! நீ அரசன். உன் நேரத்தை நான் வீணாக்கக் கூடாது. அதனால் உன் முக்கியமான பணிகள் பற்றி உன் அமைச்சரிடம் கேட்டறிந்து, உனக்கு வேலைச்சுமை குறைவாக இருக்கும் நேரம் எது என்று கேட்டறிந்து இப்போது வந்திருக்கிறேன்" என்றார் கண்ணன்.

"உன்னைச் சந்தித்து உரையாட என் எந்தப் பணியும் தடையாக இருக்காது கண்ணா!" என்றான் யுதிஷ்டிரன்.

சற்று நேரம் பல விஷயங்களைப் பற்றிப் பேசிய பின், இருவரும் அறத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

"கண்ணா! நீ அர்ஜுனனுக்கு கீதை உரைத்தபோது பல தர்மங்களை எடுத்துச் சொன்னாய். நான் அவற்றை அவனிடம் கேட்டறிந்து உன் அறிவுரையைப் பின்பற்ற முயன்று வருகிறேன்" என்றான் யுதிஷ்டிரன்.

"உனக்குத் தெரியாத தர்மமா யுதிஷ்டிரா? எல்லோரும் உன்னை தர்மபுத்திரன் என்றல்லவா அழைக்கிறார்கள்? காலப்போக்கில் யுதிஷ்டிரன் என்ற உன் பெயரே மறக்கப்பட்டு தர்மபுத்திரன் என்ற பெயர்தான் உனக்கு நிலைத்து நிற்கும் என்று நினைக்கிறேன்."

"இல்லை கண்ணா! அறத்தைப் பற்றிய ஒரு அடிப்படையான உண்மையை நான் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டு விட்டேன். எங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கு அதுதான் முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன்" என்றான் யுதிஷ்டிரன்.

கண்ணன் வியப்புடன், "எந்த உண்மையை நீ புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டு விட்டாய்?" என்றார்.

"ஆசைகளுக்கு அஞ்சி வாழ்வதே அறம் என்ற உண்மையை நான் புரிந்து கொள்ளவில்லை."

"நீ சொல்வது வியப்பாக இருக்கிறது. நீ எதற்கும் ஆசைப்பட்டவன் அல்லவே! உங்களுக்காக துரியோதனனிடம் நான் தூது போனபோது, 'துரியோதனன் எங்களுக்கு உரிய நாட்டைக் கொடுக்க மறுத்தால், ஐந்து கிராமங்களாவது கொடுக்கச் சொல், அதற்கும் அவன் ஒப்புக்கொள்ளாவிட்டால் ஐந்து வீடுகளாவது கொடுக்கச் சொல்' என்று என்னிடம் சொல்லி அனுப்பியவன் அல்லவா நீ? உனக்கு ஆசை என்று ஒன்று எப்போது இருந்ததது?" என்றான் கண்ணன்.

"இருந்தது கண்ணா. எனக்குப் பகடை ஆட்டத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு என்பது எல்லோருக்கும் தெரியுமே!"

கண்ணன் பெரிதாகச் சிரித்து, "இதைத்தான் ஆசை என்று சொல்ல வந்தாயா? பகடை ஆட்டம் ஒரு விளையாட்டு. அதில் ஈடுபாடு இருப்பது பெரிய குற்றம் இல்லையே!" என்றார்.

"ஒரு விளையாட்டு என்ற அளவில் அதில் எனக்கு ஆர்வம் இருந்திருந்தால் நீ சொல்வது சரி. ஆனால் பொருட்களைப் பணயம் வைத்து ஆடும் பகடை ஆட்டம் அறத்துக்கு விரோதமானதல்லவா? பொருளைப் பணயம் வைத்து ஆடப்படும் பகடை ஆட்டத்தில் எனக்குப் பெரிய ஆசை இருந்தது. யாராவது என்னைப் பகடை ஆட்டத்துக்கு அழைத்தால் என் எல்லாப் பணிகளையும் விட்டு விட்டு பகடை விளையாடப் போய் விடுவேன். என்னுடைய இந்த பலவீனத்தைப் புரிந்து கொண்டுதான் சகுனி துரியோதனனுடன் சதி செய்து திருதராஷ்டிரர் மூலம் எனக்கு அழைப்பு விடுத்தான். அதை ஏற்றுக் கொண்டதன் விளைவு நாங்கள் எல்லாவற்றையும் இழந்து காட்டுக்குச் செல்ல நேரிட்டதில் தொடங்கி குருட்சேத்திரப் போருக்கு வழி வகுத்து லட்சணக்கணக்கானோர் போரில் மடியும் வரை நீண்டு விட்டது."

"திருதராஷ்டிரர் அழைப்பை ஏற்காவிட்டால் அவர் மனம் புண்படும், உங்களுக்கும், கௌரவர்களுக்குமான பகை அதிகரிக்கும் என்று கருதித்தானே அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டாய்?"

"நானும் அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அழைப்பை ஏற்றதற்கு உண்மையான காரணம் பகடை ஆட்டத்தின் மீது எனக்கு இருந்த ஆசைதான் என்று இப்போது எனக்குப் புரிகிறது. ஆசையைக் கண்டு அஞ்சும் மனநிலையை அப்போது நான் கொண்டிருந்தால், திருதராஷ்டிரரின் அழைப்பைப் பணிவுடன் மறுத்து, நடந்த விபரீதங்களைத் தவிர்த்திருக்க முடியும். இப்போது அதை நினைத்து அடிக்கடி வருந்துகிறேன்" என்றான் யுதிஷ்டிரன்.

"வருந்தாதே யுதிஷ்டிரா! நடதவற்றை நினைத்து வருந்துவதில் பயனில்லை என்பதை நீ நன்கு அறிவாய். அறம் பற்றிய உன் ஆழ்ந்த அறிவுதான் உன்னை இவ்வாறு சிந்தித்து உன் செயல்களின் பின்னணியை ஆராய வைத்திருக்கிறது. இது உன் எதிர்காலச் செயல்பாடுகளுக்கு உதவும். ஆசைகளுக்கு அஞ்சி வாழ்ந்தால்தான் அறத்தைக் கடைப்பிடிக்க முடியும் என்ற உன் சிந்தனையை எனக்கும் ஒரு பாடமாக நான் எடுத்துக் கொள்கிறன்" என்றார் கண்ணன்.

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 366
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

பொருள்:
ஆசைகளுக்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏனெனில், நம் மனதை மயக்கி நம்மை வஞ்சிப்பது ஆசைகள்தான்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Tuesday, September 29, 2020

365. அடுத்த வாரிசு!

"உங்கள் பிறவியின் நோக்கம் என்ன என்று நான் கேட்டதற்குப் பலரும் பல்வேறு விடைகளைக் கூறினீர்கள். உங்கள் குடும்பத்தினருக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதிலிருந்து மற்றவர்களுக்கு உதவ வேண்டும், உங்கள் பெயர் நிலைத்திருக்கும்படியான சாதனை புரிய வேண்டும் என்று பல நோக்கங்களைக் கூறினீர்கள்.  

"எல்லாமே உயர்ந்த நோக்கங்கள்தான். ஆனால் எல்லாவற்றையும் விட உயர்ந்த நோக்கம் மீண்டும் ஒரு பிறவி ஏற்படாமல் இருக்க வகை செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் பற்றுக்களை விட்டு விட்டால் பிறவிப்பிணி உங்களுக்கு இருக்காது. 

"பற்றுக்களை விடுவது என்றால் என்னைப் போல் துறவியாக வேண்டும் என்று பொருளல்ல. ஆசைகளைத் துறந்து உங்கள் கடமைகளைப் பலனை எதிர் பார்க்காமல் செய்து வர வேண்டும். இதுதான் கீதை காட்டும் வாழ்க்கை நெறி. 

"பற்றை விட்டு விட்டு வாழ்ந்தால் நாம் மீண்டும் பிறக்காமல் இந்தப் பிறவி முடிந்ததும் இறைவனின் திருவடிகளை அடைந்து விடுவோம். இதுதான் வாழ்க்கையின் மிக உயர்ந்த நோக்கமாக இருக்க முடியும்."

ஆனந்தரங்கர் தன் பேச்சை முடித்து விட்டு அவையைத் திருப்தியுடன் பார்த்தார். அவர் சொன்னதை அவர்கள் பின்பற்றுவார்களோ என்னவோ தெரியாது, ஆனால் அவர் பேச்சை ஆர்வத்துடன் கேட்டு அவர் சொன்ன கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

வெளியூர்ப் பயணத்தை முடித்துக் கொண்டு ஆனந்தரங்கர் ஆசிரமத்துக்குத் திரும்பினார். மடத்தின் நலைவர் அனந்தரங்கர் அவரைப் பார்க்க விரும்பியதாக ஒரு துறவி அவரிடம் தெரிவித்திருந்ததால், உடல் சுத்திகரிப்புக்கான நியமங்களைச் செய்து முடித்த பின் அனந்தரங்கரைப் பார்க்கச் சென்றார் ஆனந்தரங்கர். 

அவர் அனந்தரங்கரின் அறைக்கருகில் சென்றபோது அறைக்குள்ளிருந்து சாந்தரங்கர் வந்து கொண்டிருந்தார். சாந்தரங்கர் அந்த மடத்தில் ஆனந்தரங்கருக்கு அடுத்த நிலையில் இருப்பவர். ஆனந்தரங்கரைப் பார்த்து "நாராயணா" என்று சொல்லி வணங்கிய சாந்தரங்கர் "பாராட்டுக்கள்" என்றார் புன்சிரிப்புடன்.

"நாராயணா" என்று இயந்திரமயமாக அவருக்கு பதில் வணக்கம் தெரிவித்த ஆனந்தரங்கர், 'பாராட்டுகள் என்று எதற்குச் சொல்கிறார்?' என்று யோசித்தார். 

'அப்படித்தான் இருக்க வேண்டும். அனந்தரங்கர் என்னைத் தன் வாரிசாக அறிவிக்கப் போகிறார். அதற்குத்தான் என்னை வரச் சொல்லி இருக்கிறார். அனந்தரங்கர், ஆனந்தரங்கர் என்று இருவர் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால் பலரும் என்னை மடத்தின் தலைவர் என்றே நினைத்துக் கொள்கிறார்கள். இனிமேல் அந்தக் குழப்பத்துக்கே அவசியம் இருக்காது!'

அவரை வரவேற்று அவர் சுற்றுப் பயண விவரங்களைக் கேட்டறிந்த பின், அனந்தரங்கர், "நான் உன்னைப் பார்க்க விரும்பியது எதற்கென்று ஊகித்திருப்பாய். எனக்குப் பிறகு இந்த மடத்தின் தலைமைப் பொறுப்பை யாரிடம் கொடுப்பது என்று தீர்மானித்து விட்டேன். அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்ல வேண்டும் இல்லையா?" என்றார்.

"சொல்லுங்கள் குருவே!" என்றார் ஆனந்தரங்கர் எதிர்பார்ப்புடன்.

"தலைமைப் பொறுப்பை சாந்தரங்கருக்குக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். இதில் உனக்கொன்றும் வருத்தமில்லையே!" என்றார் அனந்தரங்கர், அவர் கண்களை நேராகப் பார்த்தபடி.

"இல்லை சுவாமி. எனக்கு மகிழ்ச்சிதான்!" என்றார் ஆனந்தரங்கர், அனந்தரங்கரின் பார்வையைத் தவிர்க்கும் வகையில் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு.

எவ்வளவு முயன்றும் ஆனந்தரங்கரால் தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொள்ள முடியவில்லை. தன்னை அறியாமலேயே தன் ஏமாற்றம் வார்த்தைகளில் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்து, "நான் போய் முதலில் சாந்தரங்கருக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்து விட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு எழுந்தார்.

அப்போதுதான் அவருக்கு சாந்தரங்கர் தன்னைப் பாராட்டியது நினைவுக்கு வந்தது. 'அவர் ஏன் என்னைப் பாராட்டினார்?'

சட்டென்று திரும்பிய ஆனந்தரங்கர், "குருவே! சாந்தரங்கரிடம் இதைச் சொல்லி விட்டீர்களா?" என்றார்.

"சொன்னேன், தலைமைப் பொறுப்பை உனக்குக் கொடுக்கப் போவதாக!" என்றார் அனந்தரங்கர் சிரித்தபடி.

ஆனந்தரங்கர் குழப்பத்துடன் அனந்தரங்கரைப் பார்த்தார்.

"உட்கார்!" என்ற அனந்தரங்கர், "தலைமைப் பொறுப்பை உனக்குக் கொடுக்கப் போவதாக சாந்தரங்கரிடமும், அவனுக்குக் கொடுக்கப் போவதாக உன்னிடமும் சொன்னதற்குக் காரணம் உங்கள் இருவரின் மனநிலையை அறிந்து கொள்ளத்தான். 

"நாம் ஆசைகளை விட வேண்டும் என்று உபதேசிக்கிறோம். ஆனால் ஆசைகள் நம்மை விடுவதில்லை! ஆசைகளை விடுவதற்குக் கடும் பயிற்சியும் மன உறுதியும் வேண்டும். அதற்கு முன், நாம் இன்னும் ஆசைகளிலிருந்து விடுபடவில்லை என்ற புரிதல் நமக்கு வர வேண்டும். 

"எனக்குப் பிறகு யார் என்பதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. அப்படி நான் முடிவு செய்யும் நாள் வருவதற்குள் நீ ஆசைகளை முழுமையாகத் துறந்து பக்குவ நிலைக்கு வந்து விடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் பணிகளை நீ நன்றாகச் செய்து வருகிறாய். தொடர்ந்து சிறப்பாகச் செய்து வா!" என்று அவரை வாழ்த்தினார் ஆனந்தரங்கர்.

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.

பொருள்:
ஆசைகள் ஏதும் இல்லாதவரே பிறவி அற்றவர் (அவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்). மற்றவர்கள் பிறவி அற்றவர்கள் அல்லர். 
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Monday, September 28, 2020

364. சுவாமிஜியின் வருகை

"குளிக்காம பூஜை அறைக்குள்ள போகக் கூடாதுன்னு எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன்?" என்று கூவினார் விஸ்வநாதன்.

"அவ குழந்தைதானே, அவளுக்கென்ன தெரியும்?" என்றாள் அவர் மனைவி சாந்தா.

"பத்து வயசு ஆகுது. இன்னும் குழந்தையா? சொன்னாப் புரிஞ்சுக்கற வயசுதானே? நீதான் சொல்லிப் புரிய வைக்கணும்."

"பாட்டி சொன்னாங்க தாத்தா! ஆனா, பந்து விளையாடச்சே, அது பூஜை அறைக்குள்ள விழுந்துடுச்சு. அதனால அதை எடுக்கப் போனேன். குளிக்காம போகக் கூடாதுங்கறது ஞாபகம் வல்ல. இனிமே போக மாட்டேன். பாட்டியை ஒண்ணும் சொல்லாதே!" என்றாள் அவர்கள் பேத்தி உமா. அவள் பெற்றோர்கள் இருவரும் அலுவலகத்துக்குச் சென்றிருந்தனர்.

"எவ்வளவு புத்திசாலியாப் பேசறா பாருங்க நம்ம பேத்தி!" என்றாள் சாந்தி பெருமையுடன்.

"ஏம்மா, பந்தை வெளியில மண்ல எல்லாம் விளையாடற. அதில எவ்வளவு அழுக்கு இருக்குமோ, அதைத் துக்கிப் பூஜை அறைக்குள்ள போட்டிருக்கியே!" என்றார் விஸ்வநாதன்.

"நான் என்ன வேணும்னா போட்டேன்? அது போய் விழுந்துடுச்சு!"  என்றாள் உமா காயம் பட்டவளாக.

"போதும்! நீங்களும், உங்க சுத்தமும். நீ வாம்மா! உங்க தாத்தா இப்படித்தான் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாரு!" என்று பேத்தியை அணைத்துக் கொண்டாள் சாந்தி.

"நாளைக்கு சுவாமிஜி நம்ம வீட்டுக்கு வராரு. அவரு வரப்ப இப்படி எல்லாம் நடந்துக்கக் கூடாது!" என்றார் விஸ்வநாதன்.

"வேணும்னா சொல்லுங்க. அவரு வரச்சே நாங்க ரெண்டு பேரும் எங்கேயாவது போயிடறோம்! அவ அப்பா அம்மாவையும் ஆஃபீஸ் போகச் சொல்லிடறேன்!" என்றாள் சாந்தி கோபத்துடன்,

விஸ்வநாதன் பதில் சொல்லவில்லை.

டுத்த நாள் சுவாமிஜி அவர்கள் வீட்டுக்கு வந்தபோது, சாந்தியும், உமாவும் குளித்து விட்டு சுத்தமாக இருந்தனர். விஸ்வநாதனின் மகனும், மருமகளும் கூட அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தனர். அவர்களும் குளித்து விட்டு சுத்தமாக இருந்தனர்.

அவர்கள் வீட்டின் உள்ளறை ஒன்றில் தான் கொண்டு வந்திருந்த மான் தோலைத் தரையில் விரித்து அதன் மீது அமர்ந்திருந்தார் சுவாமிஜி.

சுவாமிஜி விஸ்வநாதனுடன் பொதுவாகப் பேசி விட்டு, " பிசினஸ் எல்லாம் நல்லா நடக்குதா?" என்றார்.

"உங்க ஆசீர்வாத்தில நல்லா போயிக்கிட்டிருக்கு சாமி. இன்னும் பெரிய அளவில செய்யணும்னு நினைக்கிறேன். அதுக்கு பாங்க்ல கடன் வாங்கணும். கடன் வாங்கி எல்லாம் பெரிசா நடத்த வேண்டாம், இப்ப இருக்கறதே போதும்னு என் பையன் சொல்றான்!" என்றார் விஸ்வநாதன் மகனை ஓரக் கண்ணால் பார்த்தபடி.

"உன் பையன் விவேகமாத்தான் இருக்கான்" என்றார் சுவாமிஜி சிரித்துக் கொண்டே.

"என்ன சொல்றீங்க சாமி?" என்றார் விஸ்வநாதன்.

"உனக்கு எவ்வளவு வயசு?"

"அறுபத்தாறு முடிஞ்சு போச்சு சாமி!"

"அறுபத்தாறு வயசாச்சு. உன் பையன் படிச்சு வேலைக்குப் போய் கல்யாணம் ஆகி, 10 வயசில உனக்கு ஒரு பேத்தியும் இருக்கா. இனிமே நீ உன் ஆசைகளைக் குறைச்சுக்கிட்டு உண்மையான விஷயங்களைத் தேட ஆரம்பிக்கணும். உண்மையான விஷயம்னா வாழ்க்கையோட அர்த்ததைப் புரிஞ்சுக்க முயற்சி செய்யறது, ஆன்மீகத் தேடல் எல்லாம். உனக்கு இதிலெல்லாம் நாட்டம் இருக்கறதாலதான் என்னை மாதிரி சாமியார்கள் கிட்ட ஈடுபாடு வச்சிருக்க.  அதனால ஆசைகளைக் குறைச்சுக்கிட்டு ஆன்மீக விஷயங்கள்ள அதிகமா ஈடுபட முயற்சி செய்!" என்றார் சுவாமிஜி.

"நான் ஏற்கெனவே பூஜையெல்லாம் பண்ணிக்கிட்டிருக்கேன் சாமி!" 

'தெரியும். அதான் உன் பூஜை அறையைப் பாத்தேனே! சுத்தமா இருக்கறது, பூஜை பண்றது இதுக்கெல்லாம் மேல ஆன்மீகத் தேடல் இருக்கணும். அது இருந்தா, மனசில ஆசைகள் தோணுவது குறைஞ்சு ஒரு பற்றற்ற தன்மை வந்துடும்" என்ற சுவாமிஜி, உமாவைப் பார்த்து, "இங்க வாம்மா!" என்றார்.

"போம்மா!" என்று உமாவைப் பார்த்துக் கூறிய விஸ்வநாதன், சுவாமிஜியிடம் திரும்பி, "அவ குளிச்சுட்டு சுத்தமாத்தான் இருக்கா!" என்றார்.

"அதெல்லாம் முக்கியமில்ல. கோவிலுக்கு வரவங்கள்ளாம் குளிச்சுட்டு சுத்தமா வராங்களான்னு கடவுள் பாக்கறாரா என்ன?" என்றபடியே தன் முன் வந்து நின்ற உமாவின் கையை அன்புடன் தொட்டார் சுவாமிஜி.

உமா தன் தாத்தாவைப் பார்த்துச் சிரித்தாள்.

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்..

பொருள்:
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லாதிருத்தலே ஆகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
    பொருட்பால்                                                                                       காமத்துப்பால்