About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, December 29, 2018

231. சீதக்காதி

கனகலிங்கம் இறந்து இருபது நாட்கள் ஆகி விட்டன.

கனகலிங்கத்தின் வீட்டுக்கு அவர் நண்பர் ராமநாதன் வந்தபோது, வீட்டில் இன்னும் சோகக்களை மாறாமல் இருப்பதை கவனித்தார்.

"வாங்க அங்க்கிள்" என்றான் கனகலிங்கத்தின் மகன் வாசு, சுரத்தில்லாமல்.

"என்னப்பா பண்றது? போனவர் போயிட்டாரு. இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே இருக்கப் போற? காரியம் எல்லாம் முடிஞ்சுடுச்சு இல்ல? இனிமே அடுத்த வேலையைப் பாரு!" என்றார் ராமநாதன்.

"பாக்க வேண்டியதுதான் அங்க்கிள். எங்கப்பா என்ன நாங்க உக்காந்து சாப்பிடற மாதிரி ஏகப்பட்ட சொத்தையா விட்டுட்டுப் போயிருக்காரு? நாங்க எங்க வேலையைப் பாத்துதான் பொழப்பு நடத்தணும்" என்றான் வாசு.

"என்னப்பா இப்படிச் சொல்ற? உங்கப்பா உங்களை நல்லாப் படிக்க வச்சாரு. நீங்கள்ளாம் நல்ல வேலையில இருக்கீங்க? உனக்கு ஏன் இந்தக் குறை?"

"அங்க்கிள்! அப்பா ரிடயர் ஆகிப் பத்து வருஷமாச்சு. ரிடயர் ஆனப்ப அவருக்கு நாப்பது லட்சம் ரூபா வந்ததுன்னு சொன்னாரு. அதில என் தங்கச்சி கல்யாணத்துக்குக் கொஞ்சம் செலவழிச்சாருப்பாரு. மீதி முப்பது லட்சம் ரூபா இருந்திருக்கணும். பாங்க்ல போட்டு வச்சிருந்தா வட்டியோடு சேந்து அம்பது லட்சம் ரூபா ஆகியிருக்கும். அவருக்கு வந்த பென்ஷன் அவருக்கும் அம்மாவுக்கும் குடும்பச் செலவுக்குப் போதும். ஆனா இப்ப பாங்க்ல 10 லட்ச ரூபாதான் இருக்கு. மீதிப் பணம் எல்லாம் என்ன ஆச்சுன்னே தெரியல!"

'ஓ! அதுதான் உன் கவலைக்குக் காரணமா?' என்று மனதுக்குள் நினைத்த ராமநாதன், "ஏம்ப்பா, உனக்கு உன் அப்பாவைப் பத்தித் தெரியாதா? தர்ம காரியங்களுக்குக் கொடுக்கறது, கஷ்டப்படறவங்களுக்கு உதவறது இதெல்லாம் அவர் பழக்கமாச்சே!"

"அதுக்காக இப்படியா மொத்தத்தையும் துடைச்சு வச்சுட்டுப் போறது? பிள்ளைங்களுக்கு ஏதாவது வச்சுட்டுப் போகணும்னு தோணலியே அவருக்கு!" என்றான் வாசு கோபமாக.

"வாசு! அவரைப் பொருத்தவரை உங்களுக்குச்  செய்ய வேண்டிய கடமைகளை அவர் செஞ்சுட்டாரு. அதனால தன்கிட்ட இருக்கற பணத்தில் மத்தவங்களுக்கு உதவ நினைச்சிருக்காரு."

"கொஞ்சமா? முப்பது நாப்பது லட்ச ரூபா போயிருக்கே! யாருக்குக்  கொடுத்தாரு, எதுக்குக் கொடுத்தாரு? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?"

"எனக்குத் தெரியாது. தான் யாருக்கும் எதுவும் கொடுத்தேன்னு மத்தவங்ககிட்ட சொல்லிக்கற பழக்கம் உங்கப்பாவுக்குக் கிடையாது. ஆனா, இதில கொஞ்சம் கடனாவும் கொடுத்திருப்பார். கடன் வாங்கினவங்க கொஞ்ச நாள்ள அவங்க வாங்கின கடனை உங்கிட்ட திருப்பிக் கொடுத்துடுவாங்க."

"பெத்த பிள்ளைங்களுக்குக் கொடுக்காம ஊருக்கெல்லாம் வாரிக் கொடுக்கறதில என்ன பிரயோசனம்?"

"பிரயோசனம் இருக்குன்னு நினைச்சு கனகலிங்கம் இப்படிச் செய்யல. மத்தவங்களுக்கு உதவறது அவரோட இயல்பு. அவர் இறந்து போனதும், எத்தனை பேர் அவரைப் பாக்க வந்தாங்கன்னு கவனிச்சியா? இப்பவும் நிறைய பேரு அவரைப் பத்திப் பெருமையாப் பேசிக்கிட்டிருக்காங்க."

"பெருமை சோறு போடாது அங்க்கிள்!" என்றான் வாசு.

"வாசு, உங்களை அவர்  நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்திருக்காரு. ஏதோ சோத்துக்குத் திண்டாடட வச்சுட்டுப் போயிட்ட மாதிரி பேசறியே!" என்று கோபமாகச் சொல்லி விட்டு ராமநாதன் வெளியே வந்து விட்டார்.

காலிங் பெல் அடித்ததும் கதவைத் திறந்த சங்கரன் "சார்! நீங்களா? வாங்க!" என்றார் ராமநாதனைப் பார்த்து.

உள்ளே வந்து அமர்ந்ததும், ராமநாதன் சங்கரனிடம், "உங்க மனைவிக்கு எப்ப ஆபரேஷன்?" என்றார்.

"தெரியல சார். இன்னும் ஒரு மாசத்துல செய்யலாம்னு டாக்டர் சொல்லி இருக்கார். ஏன் கேக்கறீங்க?"

"ஆபரேஷனுக்கு கனகலிங்கத்துக்கிட்ட பணம் கேட்டிருந்தீங்களா?"

"ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"அவருக்கு உடம்பு சரியில்லாதப்ப, எங்கிட்ட ஒரு லட்ச ரூபாய் கொடுத்து, 'சங்கரன் எங்கிட்ட அவர் மனைவி ஆபரேஷனுக்குப் பணம் கேட்டிருந்தார். ஒரு வேளை நான் அதுக்குள்ளே போயிட்டேன்னா, இந்தப் பணத்தை அவர் மனைவி ஆபரேஷனுக்காகக் கொடுத்துடுங்க'ன்னு சொல்லி எங்கிட்ட கொடுத்தாரு. இதை அவர் பையன்கிட்ட கொடுத்து அவனை விட்டே உங்ககிட்ட கொடுக்கச் சொல்லலாம்னுதான் அவன் வீட்டுக்குப் போனேன். ஆனா அவன் உங்களுக்குக் கொடுப்பான்னு எனக்குத் தோணலை. அதான் நானே உங்ககிட்ட கொடுக்கறேன். இந்தாங்க பணம். உங்களால இதை எப்ப திருப்பிக் கொடுக்க முடியுமோ அப்ப, இதை நீங்க கனகலிங்கத்தோட பையன் கிட்ட திருப்பிக் கொடுத்துடுங்க" என்றார் ராமநாதன்.

"சார்! செத்தும் கொடுத்தார் சீதக்காதின்னு கேள்விப்பட்டிருக்கேன். இறந்தப்பறம் கூட கனகலிங்கம் எனக்கு உதவி செஞ்சிருக்காரே! எப்படிப்பட்ட மனுஷன் சார் அவரு!" என்றார் சங்கரன் உணர்ச்சி பொங்க.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

பொருள்:  
பிறருக்குக் கொடுத்து உதவுதல், அதன் மூலம் கிடைக்கும் புகழுடன் வாழ்தல் இது தவிர ஒருவருக்கு வாழ்க்கையில் ஈட்ட வேண்டிய பொருள் வேறு எதுவும் இல்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                      காமத்துப்பால்















Saturday, December 22, 2018

230. நண்பரின் மரணம்

"என்ன மாசிலாமணி, பொண்ணு கல்யாண வேலையெல்லாம் எப்படி நடந்துக்கிட்டிருக்கு?" என்றார் பெரியசாமி. 

மாசிலாமணி தயங்கியபடியே, "ஐயா, அது விஷயமாத்தான் உங்களைப் பாக்க வந்தேன்" என்றார்.

"சொல்லு." 

"உங்ககிட்ட எப்படிக் கேக்கறதுன்னு தெரியல, உங்க நிலைமை முன்ன மாதிரி இல்லேன்னு தெரியும். ஆனா, எனக்கு உதவி செய்ய, இந்த ஊர்ல உங்களைத் தவிர வேற யாரும் இல்ல."

"சொல்லு, மாசிலாமணி. எங்கிட்ட என்ன தயக்கம்?"

"கல்யாணத்துக்குப் பணம் கொஞ்சம் குறையுது. ஒரு அம்பதாயிரம் கொடுத்து உதவினீங்கன்னா, அறுவடை ஆனதும் வட்டியோட திருப்பிக் கொடுத்துடுவேன்."

"என்னது வட்டியோடயா?"

"தப்பா நினைச்சுக்காதீங்கய்யா. நீங்க எங்கேயாவது புரட்டிக் கொடுக்கறதா இருந்தா, வட்டி கொடுக்க வேண்டி இருக்குமே!"

"ஆக, எங்கிட்ட பணம் இல்லே, நான் யார்கிட்டயாவது வாங்கித்தான் கொடுக்கணும்னு சொல்ற!"

"ஐயா, என்னங்க இது? உங்க பழைய நிலைமையை நினைச்சுப் பாத்து நான் வருத்தப்படாத நாளே இல்ல."

"எனக்குத் தெரியாதா உன்னைப் பத்தி? ஏற்பாடு செய்யறேன். ரெண்டு நாள் கழிச்சு வா" என்றார் பெரியசாமி.

பெரியசாமி ஒரு காலத்தில் நிறைய நிலம் வைத்திருந்தபோது, அவர் நிலங்களை மாசிலாமணி குத்தகை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால், காலப்போக்கில் மனைவிக்கு வைத்தியம், மகன் மகள் படிப்பு, அப்புறம் மகள் கல்யாணம் என்று தெடர்ந்து வந்த செலவுகளுக்காக சிறிது சிறிதாக நிலங்களை விற்று இப்போது மிக நலிந்த நிலைக்கு வந்து விட்டார் பெரியசாமி.

ஆயினும், பெரியசாமியால் தனக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையில் மாசிலாமணி அவரிடம் வந்து கடன் கேட்டிருக்கிறார்.

"என்னங்க, என்னதான் உங்க நெருங்கின நண்பர்னாலும், அவர் போய் 10 நாள் ஆனப்பறம் கூட இப்படி இடிஞ்சு போய் உக்காந்திருக்கீங்களே! மனுஷங்கன்னா ஒரு நாள் போய்த்தானே ஆகணும்?" என்றாள் பெரியசாமியின் மனைவி வள்ளி.

பெரியசாமி மெதுவாகத் தலையை உயர்த்தி மனைவியைப் பார்த்து விட்டு வேறு புறம் பார்வையைத் திருப்பினார். 

தன் நண்பர் வேலாயுதம் திடீரென்று இறந்து போனது பெரியசாமிக்கு அதிர்ச்சிதான். மாசிலாமணிக்குக் கடன் கொடுக்க, அவர் வேலாயுதத்திடம் பணம் கேட்டு, அவரும் தருவதாகச் சொல்லி இருந்தார். ஆனால் பணம் தருவதற்குள் வேலாயுதம் இறந்து விட்டார். 

தன் நண்பர் வேலாயுதம் இறந்து விட்ட துயரத்தை விட, தன்னால் மாசிலாமணிக்கு உதவ முடியாமல் போனதுதான் பெரியசாமிக்கு அதிகத் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது வள்ளிக்குத் தெரியாது. 

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை

பொருள்:  
மரணத்தை விடத் துன்பமானது எதுவும் இல்லை. ஆனால், நம்மிடம் யாசித்தவருக்கு நம்மால் எதுவும் கொடுக்க முடியாத நிலையுடன் ஒப்பிட்டால், மரணமே இனிமையானதாகத் தோன்றும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



















Thursday, December 6, 2018

229. உதவி செய்யலாமா?

"சார்! புயல்ல நம்ப ஊர்ல ரொம்ப பேரு பாதிக்கப்பட்டிருக்காங்க. நிறைய பேருக்கு வீடு இல்ல, சாமான்கள் எல்லாம் போயிடுச்சு. சாப்பாட்டுக்குக் கூட வழியில்ல. நாம எல்லாம் சேந்துதான் அவங்களுக்கு உதவணும். நாங்க எல்லார்கிட்டயும், அரிசி, பணம், உடைகள் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கிட்டிருக்கோம். நீங்க ஏதாவது கொடுங்க சார்" 

ஐந்தாறு பேர் பின் தொடர வந்த கதிர்வேலனைப் பார்த்த மகாலிங்கத்துக்கு எரிச்சல் வந்தது. 'இவங்களுக்கெல்லாம் வேற வேலை கிடையாது. என்னவோ ஊரையே இவங்கதான் காப்பாத்தறதா நினைப்பு!'

"அதான் அரசாங்கத்தில எல்லா உதவியும் செய்யறாங்களேப்பா!" என்றார் மகாலிங்கம்.

"அதெல்லாம் போதாது சார். ஏதோ ரெண்டு நாள் சாப்பாடு போட்டாங்க. மத்த உதவி எல்லாம் வரதுக்கு நாளாகும். அதுவரைக்கும் அவங்க உயிரோட இருக்க வேண்டாமா சார்?"

"எங்கிட்ட பணம் கிடையாதுப்பா. நானே கொஞ்ச நாளா வியாபாரம் சரியில்லாம முடங்கிப் போயிருக்கேன். இந்தப் புயலுக்கப்புறம் என் நிலைமை இன்னும் மோசமாப் போகும். நான் யாருக்கும் உதவற நிலையில இல்ல" என்றார் மகாலிங்கம்.

"கொஞ்சமாவது கொடுங்க சார்! பணம் இல்லாட்டாலும் அரிசி, துணிமணியாவது கொடுக்கலாமே!"

"ஏம்ப்பா! என் நிலத்தில விளைச்சல் இல்லாம நானே கடையில அரிசி வாங்கி சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். ரெண்டு வேஷ்டியை மாத்தி மாத்திக் கட்டிக்கிட்டிருக்கேன். நான் என்னத்தைக் கொடுக்கறது?" என்றார் மகாலிங்கம் 

"சரி சார்! பரவாயில்லை" என்று அவர்கள் போய் விட்டார்கள்.

அவர்கள் சென்றதும், அவர் மனைவி பார்வதி, "ஏங்க? நாம வசதியாத்தானே இருக்கோம்? கஷ்டப்படறவங்களுக்குக் கொஞ்சமாவது உதவியிருக்கலாமே!" என்றாள், குறைப்பட்டுக் கொள்ளும் குரலில்.

"இவ ஒத்தி! இருக்கறதைக் கொடுத்துட்டு நாம என்ன பண்றது? இருக்கறதைப் பெருக்கப் பாப்பாங்களா, இல்ல, அள்ளிக் கொடுத்து அழிக்கப் பாப்பாங்களா?" என்றார் மகாலிங்கம். 

ரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் அவர் வயலில் வேலை செய்யும் தண்டபாணி தயங்கிக் கொண்டே அவர் அருகில் வந்து நின்றான்.

"என்னப்பா?" என்றார் மகாலிங்கம், கடன் எதுவும் கேட்கப் போகிறானோ என்ற பயத்துடன்.

"ஒண்ணுமில்லீங்க. வெள்ளத்தில என் வீடு கொஞ்சம் சேதமாயிடுச்சு..."

"அதான் அரசாங்கத்தில பணம் கொடுத்தாங்களே?"

"ஆமாங்க. ஐயாயிரம் ரூபா கொடுத்தாங்க."

"ஏன், அது பத்தலியாக்கும்? எங்கிட்ட பணம் இல்ல."

"அதான் அன்னிக்கு அவங்ககிட்ட சொன்னீங்களே, உங்களுக்கே பணக்கஷ்டம்னு."

"ஓ, அப்ப நீயும் இருந்தியா? தெரியுதுல்ல? அப்புறம் ஏன் எங்கிட்ட வந்து பணம் கேக்கற?"

"நீங்க தப்பா நினைச்சுக்கக் கூடாது. அரசாங்கத்தில் பணம் கொடுக்கறதுக்கு முன்னாடியே, நான் எங்கிட்ட இருந்த பணத்தைப் போட்டு வீட்டை ரிப்பேர் பண்ணிட்டேன். அரசாங்கம் கொடுத்த ஐயாயிரம் ரூபா நேத்திக்குத்தான் என் கைக்குக் கிடைச்சது. நீங்க தப்பா நினைக்கலேன்னா, நீங்க இதை வாங்கிக்கணும். உங்க பணக் கஷ்டம் தீர்ந்தப்பறம் திருப்பிக் கொடுங்க" என்றான் தண்டபாணி.

மகாலிங்கத்துக்கு உடல் பற்றி எரிவது போல் இருந்தது. உள்ளிருந்து பார்வதி மெதுவாகச் சிரித்த சத்தம் அந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியது போல் இருந்தது.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

பொருள்:  
பிறருக்குக் கொடுத்தால் பொருள் குறைந்து விடுமே என்று நினைத்து, தம்மிடம் இருக்கும் பொருளைத் தாம் மட்டும் அனுபவிப்பது, பிறரிடம் யாசிப்பதை விடக் கொடுமையானதாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்





















228. இரும்பு மனிதர்!

தான் சுயமாக முன்னுக்கு வந்தவர் என்பதில் ஆறுமுகத்துக்கு மிகவும் பெருமை உண்டு.

வறுமையான குடும்பத்தில் பிறந்து, படிப்பு இல்லாமல், பழைய இரும்பு சாமான்களை வாங்கி விற்கும் கடையில் தொழிலாளியாகச் சேர்ந்து, பிறகு தானே சிறிய அளவில் பழைய இரும்பு வியாபாரத்தை ஆரம்பித்து, முதலில் மெதுவாகவும், பிறகு வேகமாகவும் முன்னேறி அந்தஸ்திலும், செல்வத்திலும் உயர்ந்த நிலைக்குப் போனவர் ஆறுமுகம்.

தன் கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவதில் அவருக்கு மிகவும் பெருமை உண்டு. மனைவி தொடங்கி, தொழில் விஷயமாக அவரைச் சந்திப்பவர்கள் வரை அனைவரிடமும் தான் முன்னுக்கு வந்த கதையை அவர்களுக்கு அலுத்துப் போகும் வரை சொல்லிக் கொண்டிருப்பார்.

ஆனால், தன் உறவினர்களையோ, பழைய நண்பர்களையோ அவர் நெருங்க விடுவதில்லை. யாரும் தன்னிடம் உதவி கேட்டு விடுவார்களோ என்று பயம்.

நன்கொடை, கடன் என்று உதவி கேட்டு வருபவர்களையும் அவர் ஊக்குவிப்பதில்லை.

"நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது எல்லாருக்கும் வாரிக் கொடுக்கவா?" என்பார் மனைவியிடம்.

"யாருக்காவது உதவி செஞ்சா, நாம என்ன குறைஞ்சா போயிடுவோம்? இரும்போட பழகிப் பழகி, உங்க மனசும் இரும்பாயிடுச்சு!" என்பாள் அவர் மனைவி கல்யாணி.

"ஆமாம். நான் இரும்பு மனுஷன்தான்!" என்பார் அவர் மனைவியிடம்.

"மத்தவங்களுக்கு உதவி செய்யறதிலயும் ஒரு சந்தோஷம் இருக்கு. அதை நீங்களும் அனுபவிக்கப் போறதில்ல, உங்க மனைவியா இருக்கறதால நானும் அனுபவிக்கப் போறதில்ல!" என்பாள் கல்யாணி.

"உங்களுக்கு இருக்கற வியாபாரம் போதாதா? புதுசா எதுக்கு ஒரு தொழில்ல இறங்கறீங்க?" என்றாள் கல்யாணி

"நான் வெறும் இரும்பு வியாபாரம்தான் பண்ணிக்கிட்டிருக்கேன்! இப்ப இரும்பு தயாரிக்கப் போறேன். ஸ்டீல் ரோலிங் மில் ஆரம்பிக்கப் போறேன்!" என்றார் ஆறுமுகம்.

"உங்களுக்கு அதைப் பத்தி என்ன தெரியும்?"

"அதனாலதான் விஷயம் தெரிஞ்ச ஒத்தரோட சேந்து ஆரம்பிக்கறேன்."

"முன்பின் தெரியாதவங்களோட கூட்டு சேரப் போறதா சொல்றீங்க. யோசிச்சு செய்யுங்க" என்றாள் மனைவி.

"கூட்டுன்னா, வியாபாரத்தில கூட்டு இல்ல. பணம் நான் போடப் போறேன். அவரு மில்லை செட் பண்ணி ஓட வச்சுடுவாரு. அதுக்கப்பறம் லாபத்தில அவருக்குக் கொஞ்சம் பங்கு கொடுத்தா போதும்" என்றார் ஆறுமுகம்.

"என்னவோ செய்யுங்க!" என்றாள் மனைவி.

"எதுக்கு வீட்டை விக்கணுங்கறீங்க?" என்றாள் கல்யாணி.

"மெஷின் வாங்கறேன்னு சொல்லி மட்டமான மெஷின்களை வாங்கி, பொய்யான பில்லையெல்லாம் கொடுத்து என்னை ஏமாத்திட்டு எங்கியோ ஓடிட்டான் அவன். வியாபாரத்தில போட்டிருந்த பணத்தையெல்லாம் எடுத்து அதில போட்டேன். இப்ப வியாபாரம் நடத்தக் கூடப் பணம் இல்ல. கடன் வேற வாங்கி இருக்கேன். வீட்டை வித்துக் கடனையெல்லாம் அடைச்சுட்டு மீதி ஏதாவது இருந்தா அதை வச்சுத்தான் குடும்பமே நடத்தணும் போலருக்கு" என்றார் ஆறுமுகம். 

அழுகையை அடக்கிக் கொண்டு அவர் பேசியதால், அவர் தொண்டை அடைத்ததை கல்யாணி கவனித்தாள்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

பொருள்:  
தங்கள் பொருளை யாருக்கும் கொடுக்காமல் பாதுகாத்து வைத்து ஒரு சந்தர்ப்பத்தில் அதை இழப்பவர்கள், பிறருக்குக் கொடுப்பதால் கிடைக்கும் இன்பத்தை அறிய மாட்டார்கள்.

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Sunday, December 2, 2018

227. மூன்று அடுக்கு டிஃபன் காரியர்

"ரகு! இன்னிக்கு என்ன அயிட்டம் உன் லஞ்ச் பாக்ஸ்ல?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் குமார்.  

"சாம்பார் சாதம்" என்று ரகு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவன் டப்பாவைத் திறந்து ஸ்பூனால் கொஞ்சம் சாம்பார் சாதத்தை எடுத்துத் தன் டிஃபன் பாக்ஸ் மூடியில் போட்டுக் கொண்ட குமார், "நம்ம ஆஃபீஸ்லேயே மத்தவங்களுக்குக் கொடுக்கறதுக்காக ஒரு எக்ஸ்டரா டப்பா எடுத்துக்கிட்டு வரவன் நீ ஒத்தன்தான்!" என்றான். 

"ஆனா மத்தவங்ககிட்டேந்து எதுவும் வாங்கிக்க மாட்டான். அவன் கொண்டு வரதில அவன் சாப்பிடறது கொஞ்சம்தான். அவன் மனைவி பாவம் நமக்கு செஞ்சு கொடுத்தனுப்பறாங்க!" என்ற கதிரேசன் தானும் ஒரு ஸ்பூன் சாம்பார் சாதம் எடுத்துக் கொண்டான். 

"ல்லாரும் ஆஃபீக்கு டிஃபன் பாக்ஸ்தான் எடுத்துக்கிட்டுப் போவாங்க. நீங்க மூணு டப்பா வச்ச காரியர் எடுத்துக்கிட்டுப் போறீங்க - அதுவும் மூணு பாத்திரத்திலேயும் ஒரே அயிட்டத்தை வச்சு! நீங்க சாப்பிடறது ரொம்ப கம்மி. எதுக்கு இவ்வளவு எடுத்துக்கிட்டுப் போறீங்க?"

திருமணம் ஆன புதிதில் சுகந்தி கேட்டதற்கு, "மத்தியானம் பசிக்கும்! அதனால நிறைய சாப்பிடுவேன்" என்றான் ரகு சிரித்தபடி.

ஆனால் ரகு சாப்பிடுவது ஒரு டப்பாவில் பாதிதான் இருக்கும். ஒரு டப்பாவை எடுத்து அப்படியே பியூன் சண்முகத்திடம் கொடுத்து விடுவான் ரகு. சண்முகம் அலுவலகத்துக்குச் சாப்பாடு எடுத்து வருவதில்லை, டீயைக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்வான் என்பது ரகுவுக்குத் தெரியும். 

முதலில் ரகுவிடமிருந்து தினமும் சாப்பாடு வாங்கிக் கொள்ள சண்முகம் கொஞ்சம் சங்கடப்பட்டாலும், நாளடைவில் அவன் அதை ஏற்றுக் கொண்டு விட்டான். 

சில நாட்கள் உரிமையுடன் ரகுவிடம் வந்து, "என்  டப்பாவைக் கொடுத்துடுங்க சார்! நான் இன்னிக்கு சீக்கிரம் சாப்பிட்டுட்டு ஆஃபீஸ் வேலையா வெளியே போகணும்" என்பான் சண்முகம்!

ரகுவின் குணம் தெரிந்து, சுகந்தியும் உற்சாகமாக விதம் விதமாக உணவு செய்து கொடுக்க ஆரம்பித்தாள்.

ன்று ரகுவும், சுகந்தியும் பக்கத்து ஊரில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்குப் போயிருந்தனர். திரும்பும்போது அங்கேயே ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பஸ்ஸில் தங்கள் ஊருக்குத் திரும்புவதாக திட்டம்.  

அவர்கள் ஓட்டலுக்கு அருகே வந்தபோது எல்லாக் கடைகளும் மூடப்பட்டுக் கொண்டிருந்தன.

என்ன விஷயம் என்று ரகு அங்கே ஒருவரை விசாரித்தபோது,"உங்களுக்கு விஷயம் தெரியாதா? தமிழ் உரிமைக் கட்சித் தலைவர் கந்தசாமி இறந்துட்டாராம். அவர் கட்சிக்காரங்க கடையை எல்லாம் மூடச் சொல்லி கலாட்டா பண்ணிக்கிட்டிருக்காங்க. அதனாலதான் எல்லாரும் கடையை மூடறாங்க" என்றார் அவர். சில நிமிடங்களில் எல்லாக் கடைகளும், ஓட்டல்களும் மூடப்பட்டன.

ஊருக்குப் போய் விடலாம் என்று நினைத்து பஸ் நிறுத்தத்துக்குப் போனபோது, பஸ் எதுவும் போகாது என்று சொல்லி விட்டார்கள்.

உறவினர் வீட்டுக்கே திரும்பிப் போய் அங்கே இரவைக் கழித்து விட்டுக் காலையில் பஸ்ஸில் போகலாம் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

"ஆனா அவங்ககிட்ட நாம சாப்பிடலேன்னு சொன்னா, அவங்க நமக்காக ஏதாவது செய்வாங்க. அவங்களுக்கு எதுக்கு சிரமம் கொடுக்கணும்?" என்றான் ரகு.

"அவங்ககிட்ட நாம சாப்பிட்டுட்டோம்னு சொல்லிடலாம்" என்றாள் சுகந்தி.

"இன்னி ராத்திரி சாப்பிடாம இருந்துட வேண்டியதுதான். எனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்ல. உனக்குத்தான் கஷ்டம்" என்றான் ரகு.  

"எனக்கென்ன சக்கரை வியாதியா இருக்கு? ஒரு வேளை சாப்பிடலேன்னா ஒண்ணும் ஆயிடாது" என்றாள் சுகந்தி. 

இருவரும் உறவினர் வீட்டை நோக்கி நடந்தபோது, வழியில் ஒரு கோவில் இருந்ததைப் பார்த்து, கோவிலுக்குப் போய் விட்டுப் போகலாம் என்று முடிவு செய்தார்கள்.

கோவிலில் போய் தரிசனம் செய்து வீட்டுக் கிளம்பும்போது, "ஒரு நிமிஷம் இருங்கோ" என்று அர்ச்சகர் அழைத்தார்.

"புளியோதரை, சக்கரைப் பொங்கல் பிரசாதம் இருக்கு. வெளியில நடக்கற கலாட்டாவினால கோவிலுக்கு நிறைய பேர் வரல. பிரசாதம் நிறைய இருக்கு. நீங்க கொஞ்சம் எடுத்துக்கோங்கோ" என்று கையில் இலைகளுடனும், பக்கத்தில் இரண்டு பிரசாதப் பாத்திரங்களுடனும் அவர்களை அழைத்தார் அர்ச்சகர். 

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

பொருள்:  
தான் உண்ணும் உணவைப் பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீய நோய் தீண்டாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்





















Thursday, November 29, 2018

226. ஐந்து லட்சம்

"ரிடையர் ஆனப்பறம் ரொம்ப பயமா இருக்கு" என்றார் சபாபதி.

"என்ன பயம்?" என்றார் தனபால்.

"பி எஃப், கிராச்சுவிட்டி பணத்தையெல்லாம் எதில முதலீடு செய்யறதுன்னே தெரியல. பாங்க்ல போட்டா, வட்டி கம்மியாதான் வரும். வேற எதிலேயாவது முதலீடு செஞ்சா ரிஸ்க் அதிகம்."

"இப்பல்லாம் பாங்க் கூட ரிஸ்க் ஆகிக்கிட்டு வருது. பேசாம ரிஸ்க் எடுத்து மியூச்சவல் ஃபண்ட்ல கொஞ்சம், ஷேர் மார்க்கெட்ல கொஞ்சம் போடலாம்னு பாக்கறேன்" என்றார் சண்முகம்.

"என் பையன் எனக்கு வந்த அம்பது லட்சத்தையும் வாங்கி அவன் பிஸினஸ்ல போட்டுட்டான். வருஷா வருஷம் லாபத்தில் பங்கு தரேன்னு சொல்லியிருக்கான். இருபது பர்சென்ட்டுக்கு மேல ரிட்டர்ன் வரும்னு சொல்றான். பணத்தைக் கொடுத்துட்டு பக் பக்னு உக்காந்திருக்கேன். அவன் பிசினஸ் எப்படிப் போகுதுன்னு கூடத் தெரியல. வருஷம் முடிஞ்சதும் ரிட்டர்ன் வருமான்னு தெரியல. அதுக்கப்பறம் எல்லா வருஷமும் தொடர்ந்து வருமானம் வருமான்னும் தெரியல" என்று புலம்பினார் நடராஜன்.

"ஏன் எல்லாப் பணத்தையும் பையனோட பிஸினஸுக்குக் கொடுத்தீங்க? பாதிப் பணத்தையாவது பாங்க்ல போட்டிருக்கலாமே!" என்றார் தனபால்.

"பணத்தை நாலு பங்காப் பிரிக்கணும். ஒரு பங்கை பாங்க்ல போடணும். ஒரு பங்குல நகை வாங்கி வச்சுக்கணும். ஒரு பங்கை ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட்ல போடணும். ஒரு பங்கில எங்கேயாவது நிலம் வாங்கிப் போடணும்" என்றார் ராமலிங்கம்.

"நீங்க அப்படித்தான் செஞ்சீங்களா?" என்று கேட்டார் சபாபதி

"இல்ல. ஏதோ அந்த நேரத்தில தோணின மாதிரி செஞ்சேன். இப்படிச் செஞ்சிருந்தா நல்லா இருக்கும்னு அப்புறம் தோணிச்சு" என்றார் ராமலிங்கம்.

"நாமெல்லாம் பேசிக்கிட்டிருக்கோம். வீரராகவன் எதுவுமே சொல்ல மாட்டேங்கறாரே!" என்றார் தனபால்.

"எனக்கு அம்பது லட்ச ரூபா வந்தது. அதில பத்து சதவீதம் அதாவது 5 லட்சத்தைத் தனியா எடுத்து வச்சுட்டு, மீதி 45 லட்சத்தை என் பையன் கிட்ட சொல்லி முதலீடு செய்யச் சொன்னேன். அவன் பாங்க்ல வேலை செய்யறானே! அவன் ரெண்டு மூணு வகையில என் பேர்ல முதலீடு செஞ்சிருக்கான். ஏதோ வருமானம் வந்துக்கிட்டிருக்கு. ஆனா எத்தனை சதவீதம் வருது, அதிகமா, குறைவான்னெல்லாம் நான் கணக்குப் பாக்கல" என்றார் வீரராகவன்.

"சரி. தனியா எடுத்து வச்ச அஞ்சு லட்சத்தை என்ன செஞ்சீங்க?" என்று கேட்டார் சண்முகம்.

"அதைத் தனியா பாங்க்ல டெபாசிட் பண்ணி இருக்கேன். அதிலேந்து வர வருமானத்தை அன்னதானம் பண்றவங்களுக்கு, அநாதை இல்லங்களுக்கு, முதியோர் இல்லங்களுக்குன்னு கொடுத்துக்கிட்டு வரேன்" என்றார் வீரராகவன்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

பொருள்:  
வறியவர்களின் கொடிய பசியைத் தீர்ப்பதே ஒருவன் தான் பெற்ற பொருளைச் சேமித்து வைக்கும் இடமாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


















Sunday, November 25, 2018

225. அழையா விருந்தாளி

பத்து நாள் உபவாசம் முடிந்து இன்று பதினோராவது நாள்.

பிரசன்ன பார்க்கவர் மெல்ல எழுந்தார். பத்து நாள் பட்டினி கிடந்த உடல், சோர்வினால் நிற்க முடியாமல் தள்ளாடியது. 

பிரசன்ன பார்க்கவர் ஒரு காலைத் தூக்கி மடக்கி, மறு காலின் முழங்காலுக்குப் பக்கவாட்டில் வைத்து அழுத்தியபடி, இரு கைகளையும் மேலே தூக்கிக் குவித்தபடி, விருட்சாஸனத்தில் நின்றார். முதலில் தள்ளாட்டம் அதிகமானது போல் தோன்றினாலும், சில வினாடிகளில் உடல் நிலை பெற்று அசையாமல் நின்றது.

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, இயல்பு நிலைக்கு வந்து, மெல்ல நடக்க ஆரம்பித்தார் அவர். சற்றுத் தொலைவு நடந்து ஊருக்குள் வந்ததும், வாசலில் ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்த ஒரு வீட்டை நோக்கி நடந்தார்.

வீட்டின் தாழ்வாரத்தில் இலை போடப்பட்டு சிலர் சாப்பிட அமர்ந்திருந்தது வாசலிலிருந்து தெரிந்தது. உள்ளே சென்று, ஒரு ஓரத்தில் காலியாயிருந்த இலையில் அமர்ந்தார்.

சாப்பிட்டு விட்டு வெளியே வந்து தெருவில் இறங்கியதும், சற்றுத் தொலைவிலிருந்து பரபரப்பாக ஒடி வந்த ஒருவர்,"சாமி" என்று கூவியபடி பிரசன்ன பார்க்கவரின் காலில் விழப் போனார்.

அவரைத் தடுத்த பிரசன்ன பார்க்கவர், "நீங்கள் என்னை விடப் பெரியவர். நீங்கள் என் காலில் விழக் கூடாது" என்றார்.

"நான் வயசில பெரியவனா இருக்கலாம். ஆனா நீங்க ஒரு முனிவர். எத்தனையோ நாள் பசி, தூக்கம் இல்லாம தவம் இருந்திருக்கீங்க. பத்து நாளா நீங்க சாப்பிடாம, இருந்த  இடத்தை விட்டு அசையாம தவம் இருந்தீங்களே, அதுக்கு எவ்வளவு மனவலிமை வேணும்! அதனால நீங்க என்னை விடப் பல விதத்திலும் பெரியவர். நீங்க என் வீட்டுக்கு வருவீங்கன்னு நான் எதிர்பாக்கல. நான் பக்கத்தில கடைக்குப் போயிருந்தேன். நீங்க வந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கிறதா ஒத்தர் வந்து சொன்னதும், ஓடி வந்தேன். நீங்க என் வீட்டில வந்து சாப்பிட்டது என்னோட புண்ணியம்" என்றார் அவர்.

"நீங்க வயசில பெரியவர்ங்கறதுக்காக நான் அப்படிச் சொல்லல. பசியைப் பொறுத்துக்கறதை விட, பசிச்சவங்களுக்குச் சோறு போடறது பெரிய தவம். அதை நீங்க செய்யறீங்க. தினம் பட்டினியா இருக்கற சில பேரைத் தேடிப் பிடிச்சு உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து சாப்பாடு போடறீங்க. உங்களைப் பத்தி நான் கேள்விப்பட்டிருக்கேன். நீங்க அவ்வளவு வசதியானவர் இல்லேன்னும் ஒரு தவம் மாதிரி இதை செஞ்சுக்கிட்டு வரீங்கன்னும் எனக்குத் தெரியும். பத்து நாள் உபவாசம் முடிஞ்சப்பறம், ஒரு உயர்ந்த மனிதர் வீட்டில சாப்பிடணும்னு நினைச்சுத்தான் உங்க வீட்டுக்கு அழையா விருந்தாளியா வந்தேன்" என்றார் பிரசன்ன பார்க்கவர் சிரித்தபடி.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

பொருள்:  
தவ வலிமையினால் பசியைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் பெரிதுதான். ஆனால் பசியால் வாடுபவர்க்கு உணவளித்து, பசியைப் போக்குபவரின் ஆற்றல் இன்னும் மேன்மை பொருந்தியது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













Wednesday, November 21, 2018

224. கவலைக்குக் காரணம்

"ஏன் காலையிலேந்து ஒரு மாதிரி இருக்கீங்க?" என்றாள் செண்பகம்.

"ஒண்ணுமில்லை" என்றார் கமலநாதன்.

"வாக்கிங் போறச்சே நல்லாதானே இருந்தீங்க? திரும்பி வரச்சே முகம் வாடி இருந்தது. ரொம்ப நடந்து சோர்வாயிட்டீங்களோன்னு நினைச்சேன். ஆனா இவ்வளவு நேரம் ஆகியும் முகத்தில தெளிவு வரலே. அதுதான் கேட்டேன்"

கமலநாதன் பதில் சொல்லவில்லை. ஆனால் மனதுக்குள் மனைவியின் நுணுக்கமான கவனத்தை வியந்தார்.

வழக்கமாக ஒன்பது மணிக்கு அலுவலகம் கிளம்பும் கமலநாதன் அன்று கிளம்பவில்லை. 

"என்னங்க ஆஃபீஸ் போகலையா? உடம்பு சரியில்லையா?" என்றாள் செண்பகம்.

"இல்ல. இன்னிக்கு கொஞ்சம் லேட்டா போகப் போறேன்" என்றார் கமலநாதன்.

அதற்குப் பிறகு செண்பகம் எதுவும் பேசவில்லை.

ஒன்பதே முக்கால் மணிக்கு வீட்டை வீட்டுக் கிளம்பிய கமலநாதன், "பாங்க்குக்குப் போயிட்டு வரேன். வந்ததும் ஆஃபீசுக்குக் கிளம்பிடுவேன்" என்று சொல்லி விட்டுப் போனார்.

பதினோரு மணிக்கு கமலநாதன் வீட்டுக்குத் திரும்பியதும், செண்பகம் அவரிடம் கேட்டாள். "இப்ப உங்க முகம் பிரகாசமா இருக்கு. பாங்க்குக்கு ஒரு மைல் தூரம் நடந்து போயிட்டு வந்த களைப்பு கூட இல்லை." 

கமலநாதன் சிரித்தார். 

"அப்பா! காலையிலேந்து முதல் தடவையா முகத்தில சிரிப்பு வந்திருக்கு! என்ன விஷயம்னு சொல்லுங்களேன்" என்றாள் செண்பகம்.

"காலையில வாக்கிங் போகச்சே, வழியில சீதாராமனைப் பாத்தேன். ரொம்ப சோர்வா இருந்தாரு. என்னன்னு கேட்டதுக்கு அழுதுட்டாரு. அவர் மனைவியோட நகைகளை அடகு வச்சுக் கடன் வாங்கி இருக்காரு. அசலும், வட்டியும் கட்ட முடியாம அவர் நகைகள் முழுகப் போற நிலையில இருக்காம். இன்னிக்குள்ள இருபதாயிரம் ரூபாய் கட்டணுமாம். நிறைய இடத்தில கேட்டும் அவருக்குப் பணம் கிடைக்கலியாம். அடகுக் கடைக்காரன் நகைகளை ஏலம் விட்டா, பாதி விலைக்குக் கூடப் போகாதாம். நகையெல்லாம் போயிடுச்சுன்னா, இப்ப இருக்கற விலையில, பொண்ணு கல்யாணத்துக்குப் புது நகை வாங்க முடியுமான்னு அழுதாரு."

"அதான் பாங்க்குக்குப் போய் பணம் எடுத்து அவருக்குக் கொடுத்துட்டு வந்தீங்களாக்கும்!" என்றாள் செண்பகம்.

"உனக்கு எப்படித் தெரியும்?"

"உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா?"

"வெளிநாட்டில எல்லாம் எப்ப வேணும்னாலும் ஏ டி எம்ல போய்ப் பணம் எடுத்துக்கற வசதி இருக்கு. நம் நாட்டில அது வர இன்னும் பத்து வருஷமாவது ஆகும்" என்றார் கமலநாதன்.

"அது சரி. அதுக்கு என் இவ்வளவு நேரம் வருத்தமா இருந்தீங்க?"

"காலையில சீதாராமன் எங்கிட்ட அவர் கஷ்டத்தைச் சொல்லி அழுததும் அவருக்காக வருத்தப்பட்டேன். பாங்க்ல பணம் எடுத்து அவர் கிட்ட கொடுத்ததும், அவர் முகத்தில வந்த சந்தோஷத்தைப் பாத்ததும்தான் என்னோட வருத்தம் போச்சு. அது என் முகத்தில உனக்குத் தெரிஞ்சிருக்கு போலருக்கு" என்றார் கமலநாதன் சிரித்தபடி.


றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.

பொருள்:  
நம்மிடம் உதவி கேட்பவரின் நிலை கண்டு நம் மனதில் ஏற்படும் வருத்தம், அவருக்கு நாம் உதவி செய்தபின் அவர் முகத்தில் தோன்றும் மலர்ச்சியைக் கண்டதும் நீங்கி விடும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Monday, November 19, 2018

223. உதவி செய்ய நிபந்தனை

"ஏண்டா, இன்னும் கொஞ்சம் அதிகமா மார்க் வாங்கி இருக்கக்கூடாது? கவர்ன்மென்ட் எஞ்சினீரிங் காலேஜில் இடம் கிடைச்சிருக்குமே!" என்றான் சாம்பசிவம், தன் மகன் குணசீலனிடம்.

குணசீலன் பதில் சொல்லவில்லை.

ஆனால் சாம்பசிவத்தின் மனைவி நீலா மகனுக்குப் பரிந்து கொண்டு வந்தாள். "நடந்ததைப் பத்திப் பேசி என்ன ஆகப் போகுது? நடக்க வேண்டியதைப் பத்திப் பேசுங்க."

"பேசறதுக்கு என்ன இருக்கு?  வருஷத்துக்கு ஒண்ணரை லட்சம் ரூபா அவன் படிப்புக்குச் செலவழிக்கற  நிலைமையில நான் இல்ல" என்றான் சாம்பசிவம்.

"அப்ப அவனை அம்போன்னு விட்டுடப் போறீங்களா? எஜுகேஷன் லோன் ஏதாவது கிடைக்குமான்னு பாருங்க."

சாம்பசிவம் யோசித்தான்.

நான்கு வருடங்கள் ஓடியதே தெரியவில்லைகுணசீலனின் படிப்பு முடிந்து, அவனுக்கு எஞ்சினீரிங் பட்டம் கிடைத்து விட்டது. காம்பஸ் இன்டர்வியூவில் நல்ல வேலையும் கிடைத்து விட்டது. ஓரிரு மாதங்களில் வேலையில் சேர வேண்டியிருக்கும் என்று சொன்னார்கள்.

"நாலு வருஷமா யாரோ ஒரு நண்பர் கிட்ட கடன் வாங்கிப் படிக்க வச்சதா சொன்னீங்களே தவிர, அது யாருன்னு சொல்லலியே? எனக்குத் தெரியாத அந்த நண்பர் யாரு? பள்ளிக்கூடத்துல உங்களோட படிச்சவர்னு சொன்னீங்களே தவிர அவர் பேரு கூட சொல்லலியே!" என்றாள் நீலா.

"இப்ப சொல்றேன்" என்ற சாம்பசிவம், தன் மகனிடம் திரும்பி, "குணசீலா! இந்தக் கடனுக்கு வட்டி கிடையாது. அசலை மட்டும் மாசா மாசம் உன் சம்பளத்திலேந்து கொடுத்துடணும். உன் சொந்தச் செலவுக்கு வேண்டியது போக மீதியைக் கடனுக்குக் கொடுத்துடு. குடும்பச் செலவுக்கு என் சம்பளப் பணம் போதும். ரெண்டு மூணு வருஷத்திலே கடனை அடைச்சிடணும், சரியா?" என்றான்.

"கண்டிப்பா செய்யறேன் அப்பா. சம்பளம் வாங்கின அன்னிக்கே ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் பண்ணிடறேன். ஆனா அந்த நல்ல மனுஷர் யார்னு சொல்லுங்க" என்றான் குணசீலன்.

"உன் அண்ணன் சிவகுமார்தான் பணம் கொடுத்து உதவினார்" என்றான் சாம்பசிவம், நீலாவிடம்.

"அது எப்படிங்க..." என்றாள் நீலா, நம்ப முடியாதவளாக.

"குணசீலன் படிப்புக்காக என் ஆபீஸ்ல கடன் கேட்டேன். இல்லேன்னுட்டாங்க. பாங்க்ல எஜுகேஷன் லோன் கேட்டப்ப, இல்லேன்னு வெளிப்படையா சொல்லாம, இழுத்தடிச்சாங்க. அப்புறம்தான் உன் அண்ணன் ஞாபகம் வந்தது.

"அவர் வேற ஜாதியில் கல்யாணம் செஞ்சுக்கிட்டார்னு உங்க வீட்டில அவரோட உறவை வெட்டி விட்டுட்டீங்க. நம் கல்யாணத்துக்குக் கூட அவரைக் கூப்பிடல. நான் அவரைப் பாத்தது கூட இல்ல. ஆனா வசதியா இருக்கார்னு நீ சொல்லி இருக்க.

"அவரைப் பாத்து என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு உதவி கேட்டேன். அவர் உடனே சரின்னு சொல்லிட்டார். நான் முதல் வருஷப் படிப்புச் செலவுக்கு மட்டும்தான் பணம் கேட்டேன், அடுத்த வருஷங்களுக்கெல்லாம், வேற எங்கேயாவது முயற்சி பண்ணலாம்னுட்டு. அவர்தான் நாலு வருஷத்துக்கும் தானே பணம் கொடுக்கறதாச் சொன்னார். வட்டி வேண்டாம், அசலை மட்டும், நம் பையன் அவன் சம்பளத்திலேந்து கொஞ்ச கொஞ்சமாத் திருப்பிக் கொடுத்தா போதும்னுட்டாரு. ஒரே ஒரு நிபந்தனைதான் போட்டாரு."

"என்ன நிபந்தனை?"

"அவர் பணம் கொடுத்ததை நான் யார்கிட்டயும் சொல்லக் கூடாது - உன்கிட்டயும், குணசீலன்கிட்டயும் கூட. அவரும் யார்கிட்டயும் சொல்ல மாட்டாரு."

"ஏன் அப்படி?"

"அவரு சொன்னாரு: 'மாப்பிள்ளை, உங்க கிட்ட உங்க பையனைப் படிக்க வைக்கப் பணம் இல்ல, எங்கிட்ட கடன் வாங்கித்தான் படிக்க வச்சீங்கன்னு எதுக்கு நாலு பேருக்குத் தெரியணும்? உங்களுக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்சா போதாதா?' அப்படின்னு. எப்படிப்பட்ட மனுஷன் பாத்தியா?" என்றான் சாம்பசிவம்.

   அறத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள

பொருள்:  
ஒருவரிடம் பொருள் இல்லை என்பதைப்  பிறரிடம் கூறாமல், அவனுக்குக்  கொடுப்பது நல்ல குடியில் பிறந்தோரின் செயல்.

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

















Monday, November 5, 2018

222. கோதானம்

குரு தன் அம்மாவின் இறப்புக்குப் பின் செய்ய வேண்டிய இறுதி நாள் சடங்குகளைச் செய்து கொண்டிருந்தான்.

"இப்ப நீங்க சில தானங்கள் செய்யணும். அந்தக் காலத்தில பசு, பொன் மாதிரி பொருட்களை தானம் பண்ணுவா. இப்ப அதெல்லாம் சரியா வராது. அதனால பணமாவே கொடுக்கலாம். ஒவ்வொரு தானமா பேரு சொல்றேன். அதுக்குத் தகுந்தாப்பல நூறு, ஐநூறு, ஆயிரம், ரெண்டாயிரம்னு நீங்க கொடுக்கலாம்" என்றார் புரோகிதர்.

குரு தலையாட்டினான். தானமாகக் கொடுக்க வேண்டிய பொருட்களின் பெயர்களை புரோகிதர் ஒவ்வொன்றாகச் சொல்ல, சடங்குக்கு வந்திருந்தவர்களில் ஒவ்வொருவராக அழைத்து, கொடுக்கப்பட வேண்டிய பொருளின் மதிப்புக்கேற்ப ஐம்பது ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டு வந்தான் குரு.

"இப்ப கோதானம், அதாவது பசு தானம். உங்க சொந்தக்காரங்களிலேயே யாராவது ஏழையா இருக்கறவாளுக்குக் கொடுக்கலாம். எவ்வளவு கொடுக்கப் போறேள்?" என்றார் புரோகிதர், குருவுக்கு மட்டும் கேட்கும்படி.

"என் மனைவியோட தம்பிக்குக் கொடுக்கலாமா?" என்றான் குரு புரோகிதரின் காதில்.

"பேஷாக் குடுக்கலாம். உங்க தம்பிக்குத்தான் கொடுக்கக் கூடாது! வேற யாராவது ஏழைகளுக்குக் கொடுக்கறதுன்னாலும் கொடுக்கலாம்" என்றார் புரோகிதர்.

"என் மைத்துனன் ரொம்பக் கஷ்டப்படறான். கோதானம்கறதால ஐயாயிரம் ரூபா கொடுக்கலாம்னு இருக்கேன். அவனுக்குக் கொடுத்தா உதவியா இருக்கும்."

"சரி. உங்க விருப்பப்படியே செய்யுங்கோ. அவரைக் கூப்பிடுங்கோ."

"பாலு!" என்று அழைத்தான் குரு.

முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் எழுந்து வந்தான்.

குரு அருகிலிருந்த பணப்பையிலிருந்து ஐயாயிரம் ரூபாயை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டான்.

"கோதானத்தை உங்களுக்குக் கொடுக்கணும்னு பிரியப்படறார். வாங்கிக்கோங்கோ" என்றார் புரோகிதர்.

"மன்னிச்சுக்கங்க. நான் தானம் வாங்கறதில்ல" என்றான் பாலு, புரோகிதர், குரு இருவரையும் பார்த்தபடி.

"வாங்கிக்கோப்பா. இது என் அம்மாவுக்காக செய்யறதுதானே?" என்றான் குரு.

"உங்க அம்மாவுக்காக நான் வேற ஏதாவது செய்யணும்னா சொல்லுங்க, சந்தோஷமா செய்யறேன். தானம் எதுவும் வாங்கக் கூடாதுங்கறது என்னோட கொள்கை" என்றான் பாலு.

"இது மாதிரி யாராவது தானம் கொடுத்தா, அதை வாங்கிக்க மாட்டேன்னு சொல்றது பாவம்ப்பா" என்றார் புரோகிதர்.

"பரவாயில்ல. அந்தப் பாவத்தை நான் ஏத்துக்கறேன்" என்றான் பாலு பிடிவாதமாக.

"வேண்டாம்னா விட்டுடுங்க. அவனை ஏன் வற்புறுத்தறீங்க?" என்றாள் குருவின் மனைவி மாலா.

"சரி. வேற யாருக்காவது கொடுத்துடுங்கோ" என்றார் புரோகிதர். உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவரை அவர் கைகாட்ட அவர் எழுந்து வந்தார்.

"வேற யாராவதுன்னா ஐநூறு, ஆயிரம்தான் கொடுத்திருப்பேன்" என்று முணுமுணுத்தபடியே, கையில் வைத்திருந்த ஐயாயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்தான் குரு.

சற்று நேரம் கழித்து, சுமங்கலிகளுக்குப் புடவை தானம் நடந்தது. பத்து பேருக்கு விலை உயர்ந்த புடவைகளை தானமாகக் கொடுத்துக் கொண்டிருந்தாள் மாலா.

கடைசியாக வந்த பெண்மணியைப் பார்த்து, புரோகிதர், "இருங்கோ! நீங்க சுமங்கலியா?" என்றார் அவள் வெறும் கழுத்தையும் நெற்றியையும் பார்த்து விட்டு.

அந்தப் பெண் இல்லையென்று தலையாட்டினாள். பிறகு, "எங்கிட்ட கட்டிக்க நல்ல புடவை இல்ல. அதான் வந்தேன்" என்றாள்.

மாலா அவளிடம் ஒரு புடவையைக் கொடுக்க வந்தாள்.

"இருங்கோ. சுமங்கலி அல்லாதவாளுக்குக் கொடுக்கக் கூடாது. கொடுத்தா, உங்களுக்குப் பாவம்தான் வந்து சேரும்" என்றார் புரோகிதர்.

"பரவாயில்லை" என்றபடியே புடவையைக் கொடுத்தாள் மாலா.

"வந்து வாய்ச்சிருக்கீங்க பாருங்க அக்காவும் தம்பியும் ஒரே மாதிரியா!" என்று முணுமுணுத்தான் குரு.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

பொருள்:  
பிறர் கொடுக்கும் பொருளைப் பெற்றுக் கொள்வது (மேலுலகம் செல்ல) நல்வழி என்ற நிலையிலும் கொடையைப் பெற்றுக் கொள்வது தீயது. கொடை அளிப்பதால் ஒருவர் மேலுலகத்தை இழக்க நேரிடும் என்ற நிலையிலும் கொடை வழங்குவதே சிறந்தது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Sunday, November 4, 2018

221. பரிசுப் பொருள்

அந்த அலுவலகத்தின் ஊழியர்களின் வீடுகளில் நடக்கும் விழாக்களுக்குப் பரிசுப் பொருள் வாங்கும் பொறுப்பு சந்திரனுடையது.

ஊழியர்கள் அனைவரும் தலைக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படும். அதிகாரிகள், உதவியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று பதவிக்குத் தகுந்தாற்போல் தொகை நிர்ணயிக்கப்படும்.

எல்லோரும் தாங்கள் கொடுக்க வேண்டிய தொகையைச் சந்திரனிடம் கொடுத்து விடுவார்கள். மொத்தத் தொகையில் சந்திரன் ஒரு பரிசுப் பொருள் வாங்கி விடுவான்.

ஆனால் அந்த நிறுவனத்தின் பொது மேலாளரின் மகன் திருமணத்தின்போது பெரும்பாலானோர் தனித் தனியே பரிசுப் பொருள் வாங்கிக் கொடுக்க விரும்பினர். நல்ல பரிசு வாங்கிக் கொடுத்துப் பொது மேலாளரை மகிழச் செய்ய வேண்டும் என்பது பலரின் எண்ணம். இதனால் பரிசுக்காக அதிகப் பணம் கொடுக்க முடியாத ஊழியர்களுக்கு சங்கடமான நிலை ஏற்பட்டது.

சில மாதங்களுக்குப் பிறகு கடைநிலை ஊழியர் ராஜுவின் கிருகப் பிரவேச விழா வந்தது. அதற்கு வழக்கமான முறையில் தொகை நிர்ணயிக்கப்பட்டது.

வசூலான மொத்தப் பணத்தில் என்ன பரிசு வாங்கலாம் என்று சந்திரன் யோசித்தான். எப்போதும் குறிப்பிட்ட சிலரைக் கலந்து கொண்டுதான் அவன் பரிசுத் தொகையைத் தீர்மானிப்பான் - அவர்கள் குறை கூறும் இயல்புள்ளவர்கள் என்பதால்! மற்றவர்கள் என்ன பரிசு என்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

ராஜுவின் கிருகப் பிரவேசத்துக்கு மொத்தம் 10000 ரூபாய் வசூலாகியிருந்தது. பரிசுப் பொருள் பற்றிப் பல்வேறு யோசனைகள் கூறப்பட்டன. இறுதியில், சந்திரன் ராஜுவிடம் கேட்டு, அவனிடம் இல்லாத, அவனுக்குப் பயன்படக் கூடிய ஒரு பொருளை வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

கிருகப் பிரவேசத்தன்று அன்று சந்திரன் கையில் பரிசுப் பொருள் எதுவும் எடுத்து வராததை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

அனைவரும் ராஜூவைச் சென்று வாழ்த்தியபோது சந்திரன் அவனிடம் ஒரு கவரைக் கொடுத்தான்.

வெளியில் வந்ததும் அனைவரும் சந்திரனைச் சூழ்ந்து கொண்டு "கவர்ல என்ன இருந்தது?" என்று கேட்டனர்.

"இன்வர்ட்டருக்கான பில். ராஜு கடைக்கு ஃபோன் பண்ணினா, அவங்க அதைக் கொண்டு வந்து வச்சு கனெக்‌ஷன் கொடுத்துடுவாங்க. இன்வர்ட்டர் கனமா இருக்கும். கையில தூக்கிட்டு வர முடியாதுங்கறதாலதான் நான் வாங்கிட்டு வரலை" என்றான் சந்திரன்.

"இன்வர்ட்டரா?" என்றனர் பலரும்.

"ஆமாம். ராஜுகிட்ட பேசினேன். அவர்கிட்ட டிவி, ஃபிரிட்ஜ் மாதிரி பொருட்கள் எல்லாம் இருக்கு. 10,000 ரூபாய்க்கு உபயோகமான பொருள் எதையும் அவரால சொல்ல முடியல. இந்த ஏரியாவில் பவர்கட் அதிகம். ராஜுவோட ரெண்டு பிள்ளைகளும் ஸ்கூல்ல படிக்கறாங்க. அதனால இன்வர்ட்டர் இருந்தா அவருக்கு உபயோகமா இருக்கும்னு நினைச்சு அவர்கிட்ட கேட்டேன். அவரும் சரின்னாரு. அதான் இன்வர்ட்டர் வாங்கிட்டேன்."

"ஆனா இன்வர்ட்டர் விலை அதிகமா இருக்குமே!"

"ஆமாம். நல்ல இன்வர்ட்டர் 18,000 ரூபாய்க்குத்தான் கிடைச்சது."

"அப்ப மீதி 8,000 ரூபாய்?"

"நான் போட்டுத்தான் வாங்கினேன்."

"எதுக்கு? 10,000 ரூபாயில் ஏதாவது வாங்கியிருக்க வேண்டியதுதானே?" என்றார் ஒரு மூத்த அதிகாரி.

"தப்பா நினைச்சுக்காதீங்க. இங்க ஜி எம் இல்ல. அதனால சொல்றேன். ஜி எம் வசதியானவர். ஆனா அவர் வீட்டுக் கல்யாணத்துக்கு ஒவ்வொத்தரும் ஆயிரம், ரெண்டாயிரம்னு செலவு செஞ்சு பரிசுப் பொருள்கள் வாங்கிக் கொடுத்தோம். ஆனா வசதிக்குறைவான ராஜு வீட்டு விழாவுக்கு, நூறு, இருநூறுக்கு மேல கொடுக்க நமக்கு மனசில்லை. 10000 ரூபாய்க்கு ராஜூவுக்குப் பயன்படாத ஏதாவது ஒரு ஆடம்பரப் பொருளை வாங்கிக் கொடுக்கறதுக்கு பதிலா பயனுள்ளதா ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம்னு நினைச்சேன். உங்க கிட்ட மறுபடி அதிகத் தொகை கேட்டு வசூலிக்க எனக்கு விருப்பமில்லை. அதனாலதான் நான் பணம் போட்டேன். எப்பவாவது ஒரு தடவை செய்யறதுதானே இது? இப்ப நீங்க கேட்டதால, இதை உங்ககிட்ட சொல்ல வேண்டி ஆயிடுச்சு. தப்பா நினைச்சுக்காதீங்க" என்று விளக்கினான் சந்திரன்.

10,000 ரூபாயில் ஏதாவது வாங்கியிருக்க வேண்டியதுதானே என்று சொன்ன மூத்த அதிகாரி, "கிரேட் ஜாப், சந்திரன். நான் இன்னொரு ஐநூறு ரூபா கொடுக்கறேன்" என்று பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து இன்னும் பலரும், நூறு ரூபாய், இருநூறு ரூபாய், ஐநூறு ரூபாய் என்று கொடுத்தார்கள்."

"இருங்க. இப்படிக் கொடுத்தா நான் எப்படிக் கணக்கு வச்சுக்கறது? கொடுக்க விரும்பறவங்க ஆஃபீஸ்ல வந்து கொடுங்க. ஒரு நோட்டில கணக்கு எழுதிக்கறேன்" என்றான் சந்திரன்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 221
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

பொருள்:  
இல்லாதவர்களுக்குக் கொடுப்பதுதான் ஈகை. மற்றவை பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுபவை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Monday, October 29, 2018

220. நகர்ப்புற நக்ஸலைட்!

சண்முகம் ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தபோது, சாலையோரம் கிடந்த மனிதனைப் பார்த்தார். 

"கொஞ்சம் நிறுத்துப்பா!" என்றார் சண்முகம். 

"எதுக்கு சார்? எவனோ குடிச்சுட்டு விழுந்து கிடப்பான். உங்களுக்கு ஏன் சார் வம்பு?" என்று முணுமுணுத்தபடியே ஆட்டோவை நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர். 

சண்முகம் கீழே விழுந்திருந்தவர் அருகில் சென்று பார்த்தார். "குடிச்சிருக்கிற மாதிரி தெரியல. ஏதோ காரணத்தால மயக்கம் போட்டு விழுந்திருக்காரு" என்றவர், அவரது சட்டைப்பையில் துருத்திக் கொண்டிருந்த அடையாள அட்டையை எடுத்துப் பார்த்தார். "யாரோ காலேஜ் புரொஃபஸர். பக்கத்தில இருக்கற அரசாங்க மருத்துவமனையில சேர்த்துடலாம். ஒரு கை பிடிப்பா. தூக்கி ஆட்டோல வச்சு அழைச்சுக்கிட்டுப் போயிடலாம்" என்றார்.

அரை மனதுடன் வந்த ஆட்டோ ஓட்டுநர், "சார்! பேசினத்துக்கு மேல நூறு ரூபா கொடுத்துடுங்க" என்றார்.

சண்முகம் பதில் சொல்லவில்லை. 

ரசு மருத்துவமனையில் முதலில் அவரைப் பரிசோதிக்கத் தயங்கினார்கள். பிறகு  பொறுப்பு மருத்துவர் வந்து பார்த்து விட்டு, "அட்மிட் பண்ண மாட்டோம். லோ பி பியா இருக்கும்னு நினைக்கிறோம். ஓ பியில வச்சு டிரிப்ஸ் ஏத்தறோம். நீங்க விசாரிச்சு அவரை வீட்டில கொண்டு விட்டுடுங்க. உங்க பேரு, அட்ரஸ் ஃபோன் நம்பரை இதில எழுதுங்க" என்றார். 

சண்முகம் ஆட்டோ ஓட்டுனருக்குப் பணம் கொடுத்து அனுப்பி விட்டு, அடையாள அட்டையில் இருந்த கல்லூரியின் தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்துக் கல்லூரியைத் தொலைபேசியில் அழைத்தார். அவர்கள் பேராசிரியரின் வீட்டுத் தொலைபேசி எண்ணைக் கொடுத்தனர். 

பேராசிரியர் வீட்டைத் தொலைபேசியில் அழைத்ததும், அவருடைய மகன் மருத்துவ மனைக்கு வருவதாகச் சொன்னான். சொன்னது போல் சற்று நேரத்தில் வந்து விட்டான். அதன் பிறகு சண்முகம் விடைபெற்று வீட்டுக்குத் திரும்பினார்.

சில நாட்கள் கழித்து அவர் வீட்டுக்கு ஒரு போலீஸ்காரர் வந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அவரை ஸ்டேஷனுக்கு வரச் சொல்வதாகச் சொன்னார்.

போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றதும், இன்ஸ்பெக்டர் அவரிடம், "தெருவில மயங்கிக் கிடந்த புரொஃபசர் சீனிவாசனை மருத்துவ மனையில் சேத்தது நீங்கதானே?" என்றார்.

"ஆமாம்."

"ஏன் அப்படிச் செஞ்சீங்க?"

"இது என்ன சார் கேள்வி? சாலையில ஒத்தர் மயங்கி விழுந்திருக்காரு. அவருக்கு உதவி செய்யணும்னு நினைச்சேன்."

"அவரை உங்களுக்கு முன்னமே தெரியுமா?"

"தெரியாது. அவர்  சட்டைப் பையில இருந்த ஐடியைப் பாத்தப்பறம்தான் அவர் பேரு, வேலை செய்யற காலேஜ் பேரெல்லாம் தெரிஞ்சது. காலேஜுக்கு ஃபோன் பண்ணினேன். அவங்க அவரு வீட்டு நம்பர் கொடுத்தாங்க. அப்புறம் அவர் வீட்டுக்கு ஃபோன் பண்ணினேன்."

"சார்! அவர் ஒரு அர்பன் நக்ஸல்."

"அப்படின்னா?"

"என்ன சார் பேப்பர் படிக்கறதில்லையா? நியூஸ் சானல் கூடவா பாக்க மாட்டீங்க? பல நகரங்கள்ள இவரை மாதிரி படிச்சவங்க சில பேரு அரசாங்கத்துக்கு எதிரா சதி பண்றங்க, இவங்களைத்தான் அர்பன் நக்ஸல்ன்னு சொல்றது. புரொஃபஸர் சீனிவாசனும் அந்த மாதிரி ஆளுதான். அவரைக் கைது பண்ணக் கூடாதுன்னு நீதிமன்றத்தில தடை உத்தரவு வாங்கியிருக்காரு. இல்லேன்னா அவரு ஜாமீன் கூட அப்ளை பண்ண முடியாதபடி ஜெயில்ல இருக்க வேண்டியவரு. இப்படிப்பட்டவங்களுக்கு உதவறதே தப்பு. அப்படி உதவி செஞ்சா, அவங்களையும் ஜாமீன் பெற முடியாத செக்‌ஷன்ல கைது செஞ்சு உள்ள போடணும்னு எங்களுக்கு மேலிடத்திலேந்து உத்தரவு வந்திருக்கு. உங்களுக்கு அவரைத் தெரியாதுங்கறதால உங்களை விடறேன். இனிமேலாவது ஜாக்கிரதையா இருங்க" என்றார் இன்ஸ்பெக்டர்.

'ஒத்தருக்கு உதவி  செஞ்சதுக்காக சிறைக்குப் போகணும்னா, நான் சந்தோஷமாப் போவேன் சார்' என்று சொல்ல நினைத்து அடக்கிக் கொண்டார் சண்முகம்.
றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 220
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

பொருள்:  
பிறருக்கு உதவி செய்வதனால் தனக்கு ஒரு கேடு விளையும் என்றால், தன்னையே விலையாகக் கொடுத்தாவது அந்தக் கேட்டை வாங்கிக் கொள்ளலாம்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


















219. பிறந்த நாள்

"என்னங்க, வர புதன்கிழமை பாபுவுக்குப் பிறந்த நாள்" என்றாள் வனிதா.

"தெரியும்" என்றான் சீதாராமன்.

"என்ன செய்யப் போறீங்க?'

"என்ன செய்யணும்?"

"கேக் வெட்டறதுக்கு என் ஃபிரண்ட்ஸை எல்லாம் கூப்பிடட்டுமா?" என்றான் பாபு.

"பாக்கலாம். சொல்றேன்" என்றான் சீதாராமன்.

"எப்ப சொல்லப் போறீங்க? இன்னும் நாலு நாள்தானே இருக்கு?" என்றாள் வனிதா.

"பாபு சின்னப் பையன். உனக்குமா தெரியாது?" என்றான் சீதாராமன்.

வனிதா பதில் சொல்லவில்லை.

சீதாராமன் சிறிதாக ஒரு துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தான். வியாபாரம் நன்றாக நடந்து ஓரளவுக்கு வசதியாகவும் வாழ்ந்து வந்தான்.

ஆனால் ஒரு வருடம் முன்பு வந்த வெள்ளம் ஊரைப் புரட்டிப் போட்டது போல், அவன் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விட்டது.

வெள்ளத்தில் அவன் கடை முழுவதும் முழுகிப் போய் விட்டது. பெரும்பாலான துணிகள் வெள்ளத்தில் போய் விட்டன. மீதி இருந்தவை நீரில் ஊறிக் குப்பையாகி விட்டன.

துணிகளைப் பெரும்பாலும் கடனுக்கு வாங்கிதான் வியாபாரம் செய்து வந்தான் சீதாராமன். வியாபாரத்தில் வந்த பணத்தில் கடனை அடைப்பது, மீண்டும் கடனில் துணி வாங்குவது என்பதுதான் பல ஆண்டுகளாக இருந்து வந்த நடைமுறை. அவன் குறித்த காலத்தில் பணம் கொடுத்து விடுவான் என்பதால், அவனுக்குத் துணி சப்ளை செய்தவர்கள் அவனுக்கு தாராளமாகக் கடன் கொடுத்தனர்.

கடையில் எப்போதும் சுமார் ஆறு மாத விற்பனை அளவுக்கு சரக்கு இருக்கும். அதில் பெரும் பகுதி கடனில் வாங்கியதுதான்.

திடீரென்று ஒரே நாளில் அவன் நிலைமை மாறி விட்டது. ஒருபுறம் சரக்கு இல்லாமல் கடையை மீண்டும் நடத்த முடியவில்லை. மறுபுறம் துணி சப்ளை  செய்தவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய நெருக்கடி.

மனைவியின் நகைகள், வீடு என்று எல்லாவற்றையும் விற்றுத்தான் கடனை அடைக்க முடிந்தது. மீதி இருந்த பணம் மீண்டும் தொழில் துவங்கப் போதுமானதாக இல்லை.

ஒரு பெரிய துணிக் கடையில் வேலைக்குச் சேர்ந்து, சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஒரு புதிய வாழ்க்கையைத் துவங்கி வாழ்ந்து கொண்டிருந்தான் சீதாராமன்.

பாபுவின் பிறந்த நாள் எளிமையாக நடந்தது. கடையில் வாங்கிய இனிப்பு, பாபுவின் வகுப்பு மாணவர்களுக்கு சாக்லேட் என்று குறைந்த செலவில் நடந்தது. கேக் வெட்டி, நண்பர்களைக் கூப்பிடுவதை அடுத்த வருடம் வைத்துக் கொள்ளலாம் என்று பாபுவிடம் எப்படியோ சொல்லி அவனைச் சமாதானப் படுத்தினர் வனிதாவும், சீதாராமனும்.

இரவு  வேலை முடிந்து சீதாராமன் வீட்டுக்கு வந்ததும், வனிதா சொன்னாள்:

"பாவம்! பாபுவுக்கு ரொம்ப ஏமாத்தம். எனக்குக் கூடத்தான். போன வருஷம் வீடு பூரா அலங்காரம் பண்ணி, பாபுவோட நண்பர்கள், அக்கம்பக்கத்தவர்னு ஒரு அம்பது பேரைக் கூப்பிட்டு கேக் வெட்டி, ஓட்டல்லேந்து இனிப்பு, காரம், சமோசா, தோசைன்னு நிறைய அயிட்டங்கள் வரவழைச்சு எல்லாருக்கும் வயிறு முட்ட டிஃபன் கொடுத்து, சின்னப் பையன்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுத்து அமர்க்களமாக் கொண்டாடின காட்சிதான் என் கண் முன்னே நிக்குது. இந்த வருஷம் அப்படிப் பண்ண முடியலைன்னு எனக்கு ரொம்ப வருத்தம். உங்களுக்கு வருத்தம் இல்லையா?"

"நான் இதைப் பத்தி அதிகம் வருத்தப்படல. வேறொரு விஷயத்தை நினைச்சு வருத்தப்பட்டேன்" என்றான் சீதாராமன்.

"வேற என்ன விஷயம்?'

"இதுக்கு முன்னால ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பாபுவைக் கூட்டிக்கிட்டு ஒரு அநாதை ஆசிரமத்துக்குப் போய் அங்கே இருக்கற அம்பது குழந்தைகளுக்கு உடைகள் வாங்கிக் கொடுத்து, விருந்து வச்சுக் கொண்டாடினோமே. அந்தக் குழந்தைங்க எவ்வளவு சந்தோஷப்பட்டாங்க! இந்தப் பிறந்த நாளுக்கு அது மாதிரி அநாதைக் குழந்தைகளை சந்தோஷப்படுத்த முடியலையேன்னுதான் நான் ரொம்ப வருத்தப்படறேன்!" என்றான் சீதாராமன்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 219
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

பொருள்:  
பிறருக்கு உதவும் பண்புடையவன், பிறருக்கு உதவி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு அதற்காக வருந்தும்போது ஏழையாகிறான்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Saturday, October 27, 2018

218. என்றென்றும் ராஜா

"வரச் சொன்னீங்களாமே?" என்றான் கந்தன்.

"உக்காரு. இதோ வந்துட்டேன்" என்று உள்ளே போனார் ராஜபார்ட் முருகப்பா.

முருகப்பாவின் பெயரோடு ராஜபார்ட் என்ற பட்டம் எப்போது ஒட்டிக் கொண்டது என்பது கந்தனுக்குத் தெரியாது. ஆனால் பத்து வயதுப் பையனாக அவன் அவருடைய நாடகக் குழுவில் சேர்ந்ததிலிருந்து அவருக்கு அந்தப் பெயர் இருந்து வந்திருக்கிறது. 

ஒவ்வொரு நாடகக் குழுவிலும் கதாநாயக வேஷம் போடுபவரை ராஜபார்ட் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அந்த வட்டாரத்தில் ராஜபார்ட் என்றாலே அது முருகப்பாவைத்தான் குறிக்கும்.

ஒரு காலத்தில் ராஜபார்ட் முருகப்பாவை எங்கெங்கிருந்தோ வந்து நாடகம் போட அழைப்பார்கள். ஒரு ஊருக்குப் போய் விட்டுத் திரும்புவதற்குள் இன்னொரு அழைப்பு காத்திருக்கும்.

பத்து நடிகர்கள் அவர் குழுவில் நிரந்தரமாக இருந்தார்கள். அவர்களுக்கு மாதச் சம்பளம் கொடுத்து வைத்திருந்தார் முருகப்பா. சம்பளத்தைத் தவிர இன்னும் பல வசதிகளும், சலுகைகளும் இருந்ததால் அவர் குழுவை விட்டு யாரும் போக விரும்பியதில்லை.

ஆனால், கடந்த பத்து வருடங்களாக நிலைமை மாறி விட்டது. நாடக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. பத்து பேருக்கும் சம்பளம் கொடுக்க முடியாமல், முருகப்பாவே சிலரை வேறு தொழில் பார்த்துக் கொள்ளச் சொல்லி அனுப்பி விட்டார். இன்னும் சிலர் தாங்களாகவே போய் விட்டனர். 

எப்போதாவது நாடக வாய்ப்புகள் வந்தால் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் போய்த் தேடி அலைந்து நடிப்புத் தெரிந்த சிலரை அழைத்து வந்து நாடகம் நடத்தி வந்தார். 

கந்தன் மட்டும் அவரை விட்டுப் போகவில்லை. ஒருமுறை முருகப்பாவிடம் சென்று, "ஐயா! நான் வேற எங்கேயாவது போய் ஏதாவது செஞ்சு பொழைச்சுக்கறேன்யா. நீங்க ஏன் எனக்குக் கஷ்டப்பட்டு சம்பளம் கொடுக்கறீங்க?" என்றான்.

"என்னால உனக்குச் சம்பளம் கொடுக்க முடியலேங்கற நிலைமை வந்தா அப்ப சொல்றேன். அதுவரையிலும் இங்கியே இரு. நாடகம் இருக்கற சமயத்தில நீ என்னோட இருந்தா போதும். மீதி நாட்கள்ள, நீ என்ன வேலை வேணா செஞ்சுக்க. நான் எதுவும் கேக்க மாட்டேன்" என்று சொல்லி விட்டார் முருகப்பா. 

அதற்குப் பிறகு ஏதாவது வேலை இருந்தால் சொல்லி அனுப்புவார். அவனே கூட  இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை அவரைப் பார்த்துப் பேசி விட்டு வருவான்.

இப்போது வரச் சொல்லி இருக்கிறார். எதற்கென்று தெரியவில்லை. 'நாடக வாய்ப்பு ஏதாவது வந்திருக்கிறதா அல்லது இனிமேல் சம்பளம் கொடுக்க முடியாது என்று சொல்லப் போகிறாரா?'

உள்ளிருந்து ராஜபார்ட் வந்தபோது அவர் கையில் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. இனிமேல் தன்னால் சம்பளம் கொடுக்க முடியாது என்று சொல்லிக் கணக்குத் தீர்க்கப் போகிறார் போலிருக்கிறது என்று நினைத்தான் கந்தன்.

"பையனுக்கு ஸ்கூல் திறந்துடுச்சா?" என்றார் ராஜபார்ட்.

"திறந்து ஒரு மாசமாச்சே!" என்றான் கந்தன்.

"அப்புறம் ஏன்...?" என்று அவர் இழுத்தபோதுதான் கந்தனுக்கு அவர் கேட்க நினைத்தது புரிந்தது.

ஆரம்பக் காலம் முதலே தன் குழுவில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடச் செலவுகளைத் தானே ஏற்றுக் கொள்வது என்ற பழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தார் ராஜபார்ட்.

அவர் குழுவில் இருந்த கலைஞர்களின் குழந்தைகள் படித்து வந்த அரசுப் பள்ளிகளில் கல்வி இலவசம்தான் என்றாலும், சீருடை, புத்தகங்கள் ஆகியவற்றுக்கான பணத்தைக் கொடுத்து வந்தார் ராஜபார்ட். நாடக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து, அவர் வருமானம் குறைந்த பின்பும் அவர் இதை நிறுத்தவில்லை.

சென்ற வருடம் கூடக் கொடுத்து விட்டார்.

ஆனால் இந்த வருடம் ராஜபார்ட் இருந்த நிலைமையில் அவரால் இந்த உதவியைச் செய்ய முடியாது என்று நினைத்து கந்தன் அவரிடம் பணம் கேட்கவில்லை.

"ஏன் எங்கிட்ட பள்ளிக்கூடச் செலவுக்குப் பணம் கேட்டு வாங்கிக்கலை?" என்றார் ராஜபார்ட்.

"என்ன ஐயா இது? நீங்க இருக்கற நிலைமையில நான் எப்படி இதை உங்ககிட்ட கேக்க முடியும்? நான் வேற வேலைகளைப் பாக்கலாம்னு சொல்லிட்டீங்க. அதோட, வேலை இருந்தாலும் இல்லாட்டாலும் எனக்குச் சம்பளம் கொடுக்கறீங்க. இதை வேற நான் எப்படிக் கேக்கறது?" என்றான் கந்தன்.

"அன்னிக்கு வசதி இருந்தது. பத்து பேரு என்னோட இருந்தாங்க. பத்து பேருக்கும் எல்லாம் செஞ்சேன். இன்னிக்கு நீ ஒத்தன்தான் இருக்கே. உனக்கு நான் செய்யறதாச் சொன்னதைச் செய்ய வேண்டாமா?" என்ற ராஜபார்ட் "போன வருஷம் கொடுத்த தொகையையே கொடுக்கறேன். கொஞ்சம் கூடக் குறைச்சலா இருந்தா அட்ஜஸ்ட்  பண்ணிக்க" என்றபடியே தன் கையிலிருந்த ரூபாய் நோட்டுகளை அவன் கையில் திணித்தார் ராஜபார்ட் முருகப்பா.

"ஐயா! ராஜபார்ட் வேஷம் போட்டாலும், போடாட்டாலும், என்னிக்குமே நீங்க ராஜாதான் ஐயா!" என்றான் கந்தன்.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 218
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

பொருள்:  
பிறருக்கு உதவுவது தன் கடமை என்று நினைத்துச் செயல்படுபவர், பொருள் வளம் குறைந்த காலத்திலும் பிறருக்கு உதவுவதில் தளர மாட்டார்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்