About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, December 22, 2018

230. நண்பரின் மரணம்

"என்ன மாசிலாமணி, பொண்ணு கல்யாண வேலையெல்லாம் எப்படி நடந்துக்கிட்டிருக்கு?" என்றார் பெரியசாமி. 

மாசிலாமணி தயங்கியபடியே, "ஐயா, அது விஷயமாத்தான் உங்களைப் பாக்க வந்தேன்" என்றார்.

"சொல்லு." 

"உங்ககிட்ட எப்படிக் கேக்கறதுன்னு தெரியல, உங்க நிலைமை முன்ன மாதிரி இல்லேன்னு தெரியும். ஆனா, எனக்கு உதவி செய்ய, இந்த ஊர்ல உங்களைத் தவிர வேற யாரும் இல்ல."

"சொல்லு, மாசிலாமணி. எங்கிட்ட என்ன தயக்கம்?"

"கல்யாணத்துக்குப் பணம் கொஞ்சம் குறையுது. ஒரு அம்பதாயிரம் கொடுத்து உதவினீங்கன்னா, அறுவடை ஆனதும் வட்டியோட திருப்பிக் கொடுத்துடுவேன்."

"என்னது வட்டியோடயா?"

"தப்பா நினைச்சுக்காதீங்கய்யா. நீங்க எங்கேயாவது புரட்டிக் கொடுக்கறதா இருந்தா, வட்டி கொடுக்க வேண்டி இருக்குமே!"

"ஆக, எங்கிட்ட பணம் இல்லே, நான் யார்கிட்டயாவது வாங்கித்தான் கொடுக்கணும்னு சொல்ற!"

"ஐயா, என்னங்க இது? உங்க பழைய நிலைமையை நினைச்சுப் பாத்து நான் வருத்தப்படாத நாளே இல்ல."

"எனக்குத் தெரியாதா உன்னைப் பத்தி? ஏற்பாடு செய்யறேன். ரெண்டு நாள் கழிச்சு வா" என்றார் பெரியசாமி.

பெரியசாமி ஒரு காலத்தில் நிறைய நிலம் வைத்திருந்தபோது, அவர் நிலங்களை மாசிலாமணி குத்தகை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால், காலப்போக்கில் மனைவிக்கு வைத்தியம், மகன் மகள் படிப்பு, அப்புறம் மகள் கல்யாணம் என்று தெடர்ந்து வந்த செலவுகளுக்காக சிறிது சிறிதாக நிலங்களை விற்று இப்போது மிக நலிந்த நிலைக்கு வந்து விட்டார் பெரியசாமி.

ஆயினும், பெரியசாமியால் தனக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையில் மாசிலாமணி அவரிடம் வந்து கடன் கேட்டிருக்கிறார்.

"என்னங்க, என்னதான் உங்க நெருங்கின நண்பர்னாலும், அவர் போய் 10 நாள் ஆனப்பறம் கூட இப்படி இடிஞ்சு போய் உக்காந்திருக்கீங்களே! மனுஷங்கன்னா ஒரு நாள் போய்த்தானே ஆகணும்?" என்றாள் பெரியசாமியின் மனைவி வள்ளி.

பெரியசாமி மெதுவாகத் தலையை உயர்த்தி மனைவியைப் பார்த்து விட்டு வேறு புறம் பார்வையைத் திருப்பினார். 

தன் நண்பர் வேலாயுதம் திடீரென்று இறந்து போனது பெரியசாமிக்கு அதிர்ச்சிதான். மாசிலாமணிக்குக் கடன் கொடுக்க, அவர் வேலாயுதத்திடம் பணம் கேட்டு, அவரும் தருவதாகச் சொல்லி இருந்தார். ஆனால் பணம் தருவதற்குள் வேலாயுதம் இறந்து விட்டார். 

தன் நண்பர் வேலாயுதம் இறந்து விட்ட துயரத்தை விட, தன்னால் மாசிலாமணிக்கு உதவ முடியாமல் போனதுதான் பெரியசாமிக்கு அதிகத் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது வள்ளிக்குத் தெரியாது. 

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை

பொருள்:  
மரணத்தை விடத் துன்பமானது எதுவும் இல்லை. ஆனால், நம்மிடம் யாசித்தவருக்கு நம்மால் எதுவும் கொடுக்க முடியாத நிலையுடன் ஒப்பிட்டால், மரணமே இனிமையானதாகத் தோன்றும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



















No comments:

Post a Comment