About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 15 - பிறனில் விழையாமை

திருக்குறள் 
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 15
பிறனில் விழையாமை 

141.தவற விட்ட பஸ்!  


கடைசி பஸ் போய் விட்டது!

நாட்டியக் கச்சேரியைப் பார்க்க இவ்வளவு தூரம் தனியாக வந்திருக்கக் கூடாது.

கச்சேரியிலிருந்தாவது சற்று முன்பே கிளம்பி வந்திருக்க வேண்டும். ஏதோ ஒரு முட்டாள்தனமான ஆர்வத்திலும், நம்பிக்கையிலும் நிகழ்ச்சி முடியும் வரை உட்கார்ந்திருந்து விட்டாள்.

வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பே கிருஷ் கேட்டான், "வெளியூருக்குப் போய் நாட்டியக் கச்சேரி பாக்கணுமா?" என்று.

"பின்ன, நம்ம ஊர்ல இது மாதிரி கச்சேரில்லாம் நடக்குமா?" என்றாள் ஸ்ருதி. "நீங்களும் வந்தா நல்லா இருக்குமே!" என்றாள் தொடர்ந்து.

"நாளைக்கு கிளாஸுக்குத் தயார் பண்ணிக்கணுமே! அதோட ரெண்டு மணி நேரம் உக்காந்து டான்ஸ் பாக்கறதெல்லாம் என்னால முடியாது. அதான் பஸ் இருக்கே, ஜாக்கிரதையாப் போயிட்டு வந்துடு. கடைசி பஸ் ஒன்பது பத்துக்கு. மிஸ் பண்ணிடாதே!" என்றான் கிருஷ்.

"அப்படி மிஸ் பண்ணிட்டா என் ஃபிரண்ட் வீட்டில தங்கிட்டுக் காலையில வந்துடறேன். கச்சேரிக்கே அவளோடதானே போறேன்? ஃபோன் பண்றதுன்னா பிரின்சிபால் வீட்டுக்குத்தான் ஃபோன் பண்ணி உங்களுக்குத் தகவல் சொல்லச் சொல்லணும். அவங்களுக்குத் தொந்தரவா இருக்கும்! அதனால ஃபோன் வரலைன்னு கவலைப்படாதீங்க" என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் ஸ்ருதி .

கிருஷ் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தான். நகரிலிருந்து இருபது கிலோமீட்டர் தள்ளி இருந்தது அந்தக் கல்லூரி. கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்குக் குடியிருப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

அந்தக் கல்லூரி ஒன்றைத் தவிர வேறு எதுவுமே இல்லாத ஒரு சிற்றூர் அது. சினிமா, ஷாப்பிங் என்று வார இறுதியில் ஸ்ருதி, கிருஷ் இருவரும்  நகரத்துக்கு வருவார்கள். ஆனால் இப்போதுதான் ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஸ்ருதி மட்டும் தனியே கிளம்பி வந்திருக்கிறாள். நகரத்தில் இருந்த அவள் தோழியுடன் நடனக் கச்சேரிக்குப் போய் விட்டுக் கடைசி பஸ்ஸில் ஊருக்குத் திரும்பி விடுவது என்று திட்டம்.

ஆனால் அவள் தோழி எதிர்பாராமல் வேறு ஊருக்குப் போய் விட்டாள். நடனக் கச்சேரிக்கு அவளை அழைத்துப் போக அவள் வீட்டுக்குப் போனபோதுதான் ஸ்ருதிக்கு இது தெரிந்தது.

எனவே தோழி வீட்டில் தங்கும் யோசனையும் செல்லாத நோட்டு போல் பயனற்றதாகி விட்டது.

என்ன செய்வது, தனியாக ஏதாவது ஓட்டலில் சென்று தங்குவது உசிதமா என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது, "என்ன ஸ்ருதி, எப்படி இருக்கே!" என்ற குரல் கேட்டுத் திரும்பினாள்.

சுதாகர்! கல்லூரியில் அவளுடன் படித்தவன்.

"ஊருக்குப் போகணும். பஸ் போயிடுச்சு!" என்றாள் அவள் பதட்டத்துடன்.

"எனக்கும் அதே பிரச்னைதான். கவலைப்படாதே! நான் பாத்துக்கறேன்" என்றான் சுதாகர் சிரித்தபடி.

ஸ்ருதியின் மனதில் பய உணர்வுகள் தோன்றின.

கல்லூரியில் சுதாகர் இவளைத் துரத்தித் துரத்திக் காதலித்தான். தனக்கு இஷ்டமில்லை என்று அவள் பலமுறை சொன்ன பிறகும் கூட அவளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தான். எப்படியும் ஸ்ருதியைத் தன் வசப்படுத்தி விடுவதாகத் தன் நண்பர்கள் சிலரிடம் அவன் சொல்லி வந்ததாக அவளுக்குச் செய்தி கிடைத்தது. 

ஒரு கட்டத்தில் 'போலீசில் புகார் செய்து விடுவேன்' என்று அவள் மிரட்டிய பிறகுதான் அவன் அவளைத் தொந்தரவு செய்வதை நிறுத்திக் கொண்டான்.

"என்ன செய்யலாம்?" என்றாள் அவள் பயத்துடன். "பெண்கள் பாதுகாப்பாத் தங்கறதுக்கு இந்த ஊர்ல நல்ல ஹோட்டல் ஏதாவது இருக்கா?"

"இது சின்ன ஊர். இந்த ஊர்லயே பாதுகாப்பான இடம் இந்த பஸ் ஸ்டாண்ட்தான்! ராத்திரி முழுக்க இங்கேயே உக்காந்துக்கிட்டிருக்கறதுன்னா சொல்லு. நானும் உனக்குக் காவலா இங்கேயே இருக்கேன்" என்றான் சுதாகர்.

இரவு முழுவதும் இங்கு உட்கார்ந்திருக்க முடியுமா என்று யோசித்த ஸ்ருதி தனது முட்டாள்தனமான செய்கையினால் பஸ்ஸைத் தவற விட்டதை நினைத்து மீண்டும் தன்னை நொந்து கொண்டாள்.

"கவலைப்படாதே. இங்கே எனக்குத் தெரிஞ்சவங்க வீடு இருக்கு. அங்கே உன்னைக் கொண்டு விடறேன். நீ அங்கேயே தங்கிக்கலாம்" என்றான் சுதாகர்.

"நீ?" என்றாள் ஸ்ருதி

"நான் எங்கேயாவது ஒதுங்கிப்பேன். லேட் ஆயிடுச்சு வா!" என்றான் சுதாகர்.

போகலாமா, வேண்டாமா என்று கொஞ்சம் குழம்பிய ஸ்ருதி அரை மனதுடன் அவனுடன் கிளம்பினாள்.

ஒரு ரிக்‌ஷாவை அழைத்து  ரிக்‌ஷாக்காரரிடம் போக வேண்டிய இடத்தை சுதாகர் சொன்னான். இருவரும் ரிக்‌ஷாவில் ஏறிக் கொண்டனர்

சற்று தூரம் முக்கிய சாலையில் சென்ற பின் சட்டென்று ஒரு இருண்ட சந்தில் திரும்பியது ரிக்‌ஷா. ஸ்ருதியின் மனதில் மீண்டும் அச்சம் எழுந்தது.

காலை ஐந்து மணிக்கு அந்த வீட்டின் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்த அந்த வயதான பெண்மணி சுதாகரைப் பார்த்துத் தலையசைத்தாள்.

உள்ளே அமர்ந்திருந்த ஸ்ருதி அவனைப் பார்த்ததும் எழுந்தாள். "சீக்கிரமே வந்துட்டியே!" என்றாள்.

"ஆமாம். நீ சீக்கிரம் கிளம்பி ஊருக்குப் போக வேணாமா? கிளம்பு. முதல் பஸ்ஸிலியே ஏத்தி விட்டுடறேன்" என்றான் சுதாகர்.

அந்த வயதான பெண்மணியைப் பார்த்து, "வரேம்மா! ராத்திரி தங்க இடம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி!" என்றாள் ஸ்ருதி.

"இது ரொம்பச் சின்ன வீடும்மா. உன்னை மாதிரி வசதியான குடும்பத்துப் பொண்ணு இங்க வந்து ஒரு ராத்திரி தங்கினதுதான் பெரிய விஷயம்" என்றாள் அந்தப் பெண்மணி.

"வேற வழி? இதை விட்டா அவ ராத்திரி பூரா பஸ் ஸ்டாண்டிலதான் உக்காந்திருக்கும்படியா இருந்திருக்கும்!" என்றான் சுதாகர்.

பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றபோது, ஸ்ருதி "சாரி, சுதாகர்! காலேஜில் நீ எங்கிட்ட நடந்துக்கிட்டதை நினைச்சு ராத்திரி நான் கொஞ்சம் பயந்தேன். ஆனா நீ இவ்வளவு கண்ணியமா நடந்துக்கிட்டு எனக்கு இவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கே. நீ ரொம்ப மாறிட்டே!" என்றாள் ஸ்ருதி.

"நான் மாறல ஸ்ருதி. நீதான் மாறிட்ட!"

"என்ன சொல்றே?"

"அப்ப நீ கல்யாணம் ஆகாத பொண்ணா இருந்தே. இப்ப நீ இன்னொருத்தரோட மனைவியா மாறிட்டே! இன்னொருத்தரோட மனைவி கிட்ட எப்படி நடந்துக்கணுமோ அப்படித்தான் நான் நடந்துக்கிட்டேன்" என்றான் சுதாகர்..
  
குறள் 141
பிறன் பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து 
அறம்பொருள் கண்டார்கண் இல்.

பொருள்:  
ஒருவரால் பின்பற்றப்பட வேண்டிய அறம் என்ன, தேடப்பட வேண்டிய பொருள் எது ஆகியவற்றை உணர்ந்தவர்களிடம், இன்னொருவருடைய மனைவியை விரும்பும் அறியாமை இருக்காது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



142.மனம் போன போக்கிலே  
முதன் முதலில் ஜெயந்தியைப் பார்த்ததும் குருவுக்குத் தோன்றிய எண்ணம் 'இவள் எனக்கு மனைவியாக வந்திருக்கக் கூடாதா?' என்பதுதான். ஜெயந்தி, குருவின் அலுவலக நண்பன் ஜெகதீஸ்வரனின் மனைவி!

திருமணத்துக்குப் பின் ஜெகதீஸ்வரன்  ஜெயந்தியைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு அவனுடைய அலுவலக நண்பர்கள் புதுமண தம்பதிக்கு வாழ்த்துச் சொல்ல அவன் வீட்டுக்குச் சென்றனர். அப்போதுதான் குருவுக்கு இந்த எண்ணம் தோன்றியது. நண்பனின் மனைவியைப் பற்றி இப்படி நினைக்கலாமா என்ற கண்டனம் மனதின் ஒருபுறத்தில் எழுந்தாலும், அந்த எண்ணம் தனக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியதை அவன் உணர்ந்தான்.

அவர்கள் அனைவருக்கும் ஜெயந்தி காப்பி கொடுத்தபோது, காப்பிக் கோப்பைகள் வைக்கப்பட்ட தட்டை அவன் முன்னே நீட்டிய, வளையல் அணிந்த அவள் கரத்தைப் பற்ற வேண்டும் போலிருந்தது.

அதற்குப் பிறகு நண்பனைப் பார்க்கிற சாக்கில், ஜெயந்தியைப் பார்ப்பதற்கென்றே ஜெகதீஸ்வரன் வீட்டுக்கு மூன்று நான்கு முறை சென்று வந்தான் குரு. தவறான சிந்தனை என்று தெரிந்தும் ஜெயந்தியின் மீது அவனுக்கு ஏற்பட்ட ஈர்ப்பை அவனால் விலக்கிக் கொள்ள முடியவில்லை.

லுவலக வேலையாக ஜெகதீஸ்வரன் இரண்டு நாட்கள் வெளியூருக்குப் போக வேண்டி இருந்தது.

"புதுப் பொண்டாட்டியைத் தனியா விட்டுட்டா போகப் போறே?" என்றான் குரு.

"ஆமாம். அதனால என்ன? நாங்க இருக்கறது அபார்ட்மெண்ட்தானே? ஏதாவது உதவி வேணும்னா பக்கத்து ஃபிளாட்கள்ள இருக்கறவங்க செய்வாங்க. அதோட, ஜெயந்தி தைரியமான பொண்ணு" என்றான் ஜெகதீஸ்வரன்.

ஜெகதீஸ்வரன் ஊருக்குச் சென்ற அன்று இரவு குருவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஜெயந்தியைப் போய்ப் பார்த்து விட்டு வந்தால் என்ன என்று தோன்றியது. 'சும்மா போய்ப் பார்த்துப் பேசி விட்டு வரலாம். அவளுடன் நட்பை வளர்த்துக் கொண்டால், அவளுக்கும் என் மீது ஈர்ப்பு ஏற்படலாம்' என்று நினைத்தான்.

ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் ஜெயந்தியின் வீட்டுக்குக் கிளம்பி விட்டான்.

ழைப்பு மணி அடித்ததும் ஜெயந்தி வந்து கதவைத் திறந்தாள். அவள் உடுத்தியிருந்த கருப்பு நிறப் புடவையும், விரித்த கூந்தலும் குருவுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தின.

"நீங்களா?" என்றாள் கதவைப் பிடித்தபடி. கதவைத் திறந்து அவனை உள்ளே வரச் சொல்லவில்லை.

"ஆமாம்" என்றான் குரு, அசட்டுச் சிரிப்புடன். "ஜகத் ஊருக்குப் போயிட்டான் இல்ல?"

"அதான் மத்தியானமே போயிட்டாரே!" என்றாள் ஜெயந்தி, நகராமல் நின்றபடி.

ஜெயந்தி என்ன நினைக்கிறாள் என்பது அவனுக்குப் புரியவில்லை. அவன் வருகையை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறாளா அல்லது சந்தேகப் படுகிறாளா?

அவன் மௌனமாக இருந்ததைப் பார்த்து, "என்ன விஷயம்?" என்றாள் ஜெயந்தி.

என்ன சொல்லப் போகிறோம் என்று நினைத்தபோது அவன் உடல் குப்பென்று வியர்த்தது.

'என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்? இன்னொருவன் மனைவி மீது - அதுவும் நண்பனின் மனைவி மீது - ஆசைப்பட்டு, அவள் வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டிருக்கிறேன்! எவ்வளவு கேவலமான செயல் இது!

'ஜெகதீஸ்வரனுக்கு என் மனதில் இருக்கும் எண்ணம் தெரிந்தால், அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்?

'ஜெயந்தி என் மீது சந்தேகப்பட்டால் என்ன செய்வாள்? ஒருவேளை சத்தம் போட்டுப் பக்கத்து வீட்டுக்காரர்களை வரவழைப்பாளோ? அப்படிச் செய்தால் அவர்களிடம் நான் என்ன சொல்ல  முடியும்?

'நான் தவறான நோக்கத்துடன் இங்கே வந்ததாகக் கருதப்பட்டுப் பலர் முன் நான் அவமானப்பட நேர்ந்தால், என் வாழ்க்கை என்ன ஆகும்?

'அப்படி எதுவும் நடக்காவிட்டாலும், நான் தவறான நோக்கத்துடன் வந்திருப்பதாக ஜெயந்தி நினைத்தால், மறுபடியும் நான் இந்த வீட்டுக்கு வர முடியுமா? ஜெகதீஸ்வரனின் நண்பனாகத் தொடரத்தான் முடியுமா?

'என்ன ஒரு முட்டாள்தனமான காரியம் செய்ய இருந்தேன்!'

குரு ஒரு அடி பின் வைத்துத் தள்ளி நின்றான். "ஜகத் ஊருக்குப் போயிருக்கான். நீங்க தனியா இருக்கீங்க. இங்கே எல்லாம் பாதுகாப்பா இருக்கா, உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமான்னு கேட்டுட்டுப் போகலாம்னுதான் வந்தேன்" என்றான்.

"எனக்கு இங்க ஒண்ணும் பிரச்னை இல்லை. நீங்க என் மேல இத்தனை அக்கறை எடுத்துக்கிட்டு இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி" என்றாள் ஜெயந்தி புன்னகை செய்தபடி.

அவள் சிரிப்பைப் பார்த்ததும் 'எத்தனை பெரிய இழுக்கிலிருந்து கடைசி நிமிடத்தில் என்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்!' என்று நினைத்துக் கொண்டான் குரு.

குறள் 142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை 
நின்றாரின் பேதையார் இல்.

பொருள்:  
அறவழியைப் பின்பற்றாமல் கீழ்மை அடைந்தவர்களில், இன்னொருவர் மனைவி மீது ஆசை வைத்து அவர் வீட்டு வாயிலில் போய் நின்றவரைப் போன்ற அறிவிலிகள் இல்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


143.நடந்ததை நினைத்து... 
                                                                        
"ஏம்ப்பா முப்பது வயசு ஆகப்போகுது. இன்னும் ஏன் பிரம்மச்சாரியா இருக்கே?"

"இன்னும் ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன்னு கேளு? அவன் பிரம்மச்சாரியா இருக்கான்னு உனக்கு எப்படித் தெரியும்?"

"உஸ்ஸ்... மெதுவாப் பேசு. முதலாளி காதுல விழப் போவுது!"

ஊழியர்கள் பேசிக் கொண்டது 'முதலாளி' என்று குறிப்பிடப்பட்ட கணபதியின் காதில் விழுந்தது. 'கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை சரி. ஆனால் நீ பிரம்மச்சாரிதானா?' என்ற கேள்வி தங்கள் முதலாளிக்கும் பொருந்தும் என்பதால்தான் பேசிக் கொண்டவர்களில் ஒருவனுக்கு தங்கள் பேச்சு முதலாளியின் காதில் விழுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது.

"ஏன் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை?" என்று அவனிடம் பலர் பல வருடங்களாகக் கேட்டு வருகிறார்கள். அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பி வந்திருக்கிறான் கணபதி.

ருபத்தைந்து வருடங்களுக்கு முன், அவனுக்கு இருபது வயது இருக்கும்போது மதுரையில் ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான் கணபதி. கடுமையான உழைப்பாலும், நேர்மையான நடத்தையாலும், ஆழமான விசுவாசத்தாலும் முதலாளியின் அன்பைப் பெற்று ஐந்து வருடங்களில் மானேஜர் என்ற நிலைக்கு உயர்ந்தான்.

முதலாளிக்கு அடுத்த நிலை என்பதால் அவனுக்குக் கிடைத்த கௌரவம், மரியாதை எல்லாம் அவனுக்கு பிரமிப்பை ஏற்படுத்தின. இந்தச் சிறிய வயதில் இவ்வளவு உயர்வா என்று மற்ற ஊழியர்களுக்கு வியப்பும், பொறாமையும் ஏற்பட்டன.

தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய முதலாளியை தெய்வமாக மதித்துப் போற்றி வந்தான் கணபதி.

அவனை விடப் பதினைந்து வயது மூத்தவரான அவன் முதலாளி திருமணமாகி ஓரிரு மாதங்களிலேயே மனைவியைப் பறி கொடுத்தவர். இன்னொரு திருமணம் செய்து கொள்ளாமல் வியாபாரத்திலேயே கவனம் செலுத்தி வந்தார்.

அவருடைய நாற்பத்தைந்தாவது வயதில் இருபத்தைந்து வயதுப் பெண் ஒருத்தியை திடீரென்று திருமணம் செய்து கொண்டார்.

முதலாளி தனியாக இருந்தபோது அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் பழக்கம் கொண்டிருந்த கணபதி அவர் திருமணம் செய்து கொண்டதும் அவர் வீட்டுக்குச் செல்வதைக் கூடிய வரையில் தவிர்த்து வந்தான். எப்போதாவது போனாலும் வாசலிலேயே நின்று பேசி விட்டு வந்து விடுவான்.

ஒருநாள் முதலாளி கடையிலிருந்து கிளம்பி அவசரமாகப் பக்கத்து ஊருக்குப் போய் விட்டார். எப்போதும் இரவு ஒன்பது மணிக்குக் கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குப் போகும்போது கடையில் இருக்கும் பணத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டு போய் விடுவார். அன்று வெளியூர் செல்லும்போது "நான் வரத்துக்கு லேட்டாகும். நீ கடையைப் பூட்டிட்டு பணத்தை வீட்டில கொடுத்துட்டுப் போயிடு" என்று சொல்லி விட்டுப் போனார்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் முதலாளியின் வீட்டுக்கு கணபதி பணத்துடன் போனான்.

கதவைத் திறந்த முதலாளியின் இளம் மனைவி "உள்ளே வா" என்றாள்.

"இல்ல. பணத்தைக் கொடுக்கத்தான் வந்தேன். இங்கியே வாங்கி எண்ணிப் பாத்துக்கங்க" என்றான் கணபதி.

"வாசப்படியில நின்னு யாராவது பணத்தை வாங்குவாங்களா, அதுவும் ராத்திரி வேளையில?" என்றாள் முதலாளியின் மனைவி.

கணபதி தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான்.

அதற்குப் பிறகு அந்த விபரீதம் எப்படி நிகழ்ந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை.

அரை மணி நேரம் கழித்து அவன் கிளம்பியபோது "இது மாதிரி அடிக்கடி வா!" என்றாள் அவள்.

அடுத்த நாள் முதலாளியைப் பார்த்தபோது, கணபதியால் அவர் முகத்தைப் பார்த்துப் பேச முடியவில்லை. 'கடையில துணி எடுத்துப் போடற ஒரு சாதாரண ஆளா இருந்த என்னை இவ்வளவு உயரத்தில தூக்கி வச்ச இந்த மனுஷனுக்கு இப்படி ஒரு துரோகத்தைப் பண்ணிட்டேனே!' என்று மனதுக்குள் புலம்பினான்.

அதற்குப் பிறகு அங்கே அவனால் அதிக நாட்கள் வேலை செய்ய முடியவில்லை. ஒரு வாரத்துக்குப் பிறகு திருச்சியில் இருக்கும் தனது தூரத்து உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி நான்கைந்து நாட்கள் விடுமுறை கேட்டு வாங்கிக் கொண்டு கிளம்பினான் கணபதி.

தனி ஆளாக இருந்ததால் அவனிடம் அதிகப் பொருட்கள் இல்லை. இருந்தவற்றை ஒரு பெட்டியில் போட்டுக் கொண்டு கிளம்பினான். அவன் இருந்த அறைக்கு மூன்று மாத வாடகை முன்பணமாகக் கொடுத்திருந்ததால் வாடகை பாக்கி எதுவும் இருக்காது.

பத்து வருடங்கள் வேலை செய்ததில் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தான். திருச்சிக்குப் போய் இரண்டு நாட்கள் ஒரு விடுதியில் தங்கினான். தன் உறவினர் இறந்து விட்டதால் அவர் குடும்பத்துக்கு உதவியாக அங்கேயே இருக்க வேண்டி இருப்பதால் இனி தன்னால் வேலைக்கு வர இயலாது என்று முதலாளிக்குப் பணிவாக ஒரு கடிதம் எழுதிப் போட்டான்.

பிறகு முதலாளி தன்னைத் தேடி வந்தாலும் கண்டு பிடிக்க முடியாதபடி கடலூருக்கு அருகில் இருந்த ஒரு சிறிய ஊரைத் தேர்ந்தெடுத்து அங்கே குடியேறினான். கையில் இருந்த பணத்தை வைத்துச் சிறிய அளவில் துணி வியாபாரத்தைத் தொடங்கினான்.

பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. அவன் வியாபாரம் பெருகிக் கடை பெரிதாகி விட்டது. இந்தப் பதினைந்து வருடங்களில் அவனுக்குப் பெண் கொடுக்கப் பலர் முன்வந்தனர். ஆனால் அவன் பிடி கொடுக்கவில்லை. திருமணம் என்றாலே முதலாளியின் மனைவியும் அவளுடன் ஒரு நாள் அவனுக்கு ஏற்பட்ட தகாத உறவும்தான் நினைவுக்கு வந்தன.

"இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போறே?" என்று பலரும் கேட்டார்கள்.

அவனுக்குத் தெரியவில்லை. சாகும்வரை இப்படியே இருந்துதானே ஆக வேண்டும்?
    
குறள் 143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் 
தீமை புரிந்துதொழுகு வார்.

பொருள்:  
தன்னை முழுவதுமாக நம்பியவரின் மனைவியிடம் தகாத உறவு கொண்டவன் இறந்தவனுக்கு ஒப்பானவன்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


144.பெண்ணே நீ வாழ்க!  
"பி எச் டி பண்றதுன்னா நல்ல கைடு இருக்கணும். அப்பத்தான் உன்னோட ஆராய்ச்சியும் நல்லா அமையும். உன்னோட பி எச் டிக்கும் நல்ல மதிப்பு இருக்கும்" என்று பலரும் அறிவுறுத்தியதால் சங்கீதா டாக்டர் பரமேஸ்வரனை அணுக முடிவு செய்தாள். சரித்திரப் பேராசிரியரான பரமேஸ்வரன் அகில இந்திய அளவில் பெயர் பெற்றவர்.

"நிறைய பேர் அவர் கீழேதான் பி எச் டி பண்ணனும்னு விரும்பறதால, நல்ல அகாடமிக் பேக்ரவுண்ட் இருக்கிற சில பேரை மட்டும் இன்டர்வியூவுக்குக் கூப்பிட்டு அவங்கள்ள சில பேரைத்தான் அவர் தேர்ந்தெடுப்பாரு. நீ ஒரு பிரைட் ஸ்டூடண்ட்ங்கறதால உனக்கு வாய்ப்பு இருக்கு. முயற்சி பண்ணிப்பாரு" என்றார் அவள் படித்த கல்லூரியின் முதல்வர்.

சங்கீதா விண்ணப்பித்த சில நாட்களிலேயே அவளை இன்டர்வியூவுக்கு வரச் சொல்லி பரமேஸ்வரனிடமிருந்து அழைப்பு வந்தது.

ங்கீதாவின் விண்ணப்பத்தை ஒருமுறை வேகமாகப் படித்த பரமேஸ்வரன், "எந்த டாபிக்ல ரிஸர்ச் பண்ணப் போறீங்க?" என்றார்.

" 'சோழர்கள் பல்லவர்களிடையே உள்ள கலாச்சார ஒற்றுமைகளும், வேறுபாடுகளும்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி பண்ணலாம்னு இருக்கேன் சார்!"

"இன்ட்ரஸ்டிங்! இந்த ஐடியா உங்களுக்கு எப்படி வந்தது?"

"காஞ்சிபுரத்தில சில கோவில்களுக்குப் போயிருந்தேன். அந்தக் கோவில்களில் பல்லவ மன்னர்கள், சோழ மன்னர்கள் ரெண்டு பேருமே திருப்பணிகள் செஞ்சிருக்காங்க. அங்கே இருக்கும் கட்டிடங்கள், சிற்பங்கள்ள ரெண்டு கலாச்சாரங்களும் கலந்து இணைஞ்சிருக்கு. அதையெல்லாம் பார்த்தபோது இந்த எண்ணம் தோணிச்சு. இதுல ஆராய்ச்சிக்கு எந்த அளவுக்கு ஸ்கோப் இருக்குன்னு நீங்கதான் என்னை எஜுகேட் பண்ணி எனக்கு வழி காட்டணும்."

"பிரில்லியண்ட்! உங்க அப்ரோச் எனக்குப் புடிச்சிருக்கு. பொதுவா பி எச் டி பண்றவங்க ஏதாவது ஒரு ரொட்டீன் டாபிக்கை எடுத்துக்கிட்டு ஒப்புக்கு ஒரு பேப்பரை எழுதிப் பட்டம் வாங்கிட்டுப் போயிடணும்னு பார்ப்பாங்க. ஆனா நீங்க பார்த்த ஒரு விஷயத்தை நீங்க படிச்ச படிப்போடு தொடர்பு படுத்தி ஆராய்ச்சி பண்ண நினைக்கிறீங்க. உங்களுக்கு கைடா இருக்கறதுக்கு நான் பெருமைப்படணும்."

சங்கீதாவுக்குப் புல்லரித்தது. பரமேஸ்வரன் அவள் அணுகுமுறையைப் புகழ்ந்ததுடன் அவளை மாணவியாக ஏற்கவும் இணங்கி விட்டார்!

"ரொம்ப நன்றி சார்! நீங்க என்னை மாணவியா ஏத்துக்கிட்டது என்னோட அதிர்ஷ்டம்" என்றாள் சங்கீதா மகிழ்ச்சி பொங்க.

"ஆனா சங்கீதா, நீங்க எனக்கு ஒரு குருதட்சிணை கொடுக்கணுமே!" என்றார் பரமேஸ்வரன் சிரித்துக்கொண்டே.

"என்ன சார் அது?" என்றாள் சங்கீதா, பணம் ஏதாவது கேப்பாரோ என்று பயந்தபடி.

"உன்னை மாதிரி அழகான பெண் என் மாதிரி ஆணுக்குக் கொடுக்கறதுக்கு ஒரு விஷயம்தானே இருக்க முடியும்?" என்றார் பரமேஸ்வரன், அவளை உற்றுப் பார்த்தபடி.

சங்கீதாவுக்கு உடல் முழுவதும் சூடு பரவியது. இத்தனை நேரம் மரியாதையாக அழைத்துக் கொண்டிருந்தவர் இப்போது ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டதையும் கவனித்தாள்.

"சார்! வாட் டூ யு மீன்?"

"ரொம்ப சிம்ப்பிள். எங்கிட்ட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கணும். அவ்வளவுதான்!"

"சார்! நீங்க பேசறது சரியில்ல. நான் கல்யாணமானவ."

"அதுதான் அப்ளிகேஷன்லியே சொல்லி இருக்கியே! கவலைப்படாதே! யாருக்கும் தெரியாது."

சங்கீதாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. விருட்டென்று எழுந்தாள்.

"ஒரு நிமிஷம்" என்றார் பரமேஸ்வரன்.

ஆனால் சங்கீதா நிற்கவில்லை.

வேறொரு பேராசிரியரை வழிகாட்டியாகக் கொண்டு சங்கீதா தன் பி எச் டியை முடித்து விட்டாள். ஆயினும் பரமேஸ்வரனிடம் அவளுக்கு ஏற்பட்ட அனுபவம் அவள் மனதின் அடியில் நெருப்புத் துண்டு போல் அமர்ந்து அவளைச் சுட்டுக் கொண்டே இருந்தது.

'இப்படிப்பட்ட அயோக்கியர்கள் சமூகத்தில் மதிப்புடன் நடமாடுகிறார்களே! எத்தனை பெண்கள் வேறு வழியில்லை என்று நினைத்து அவனுடைய விருப்பத்துக்கு இணங்கியிருப்பார்களோ!' என்று நினைத்து மனம் புழுங்கிக் கொண்டே இருந்தாள்.

பரமேஸ்வரன் தன்னிடம் நடந்து கொண்டது பற்றி அவளால் வெளியே சொல்ல முடியாது. ஆனாலும் அவனுடைய சுயரூபத்தை வெளிப்படுத்த வேண்டும்!

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

பல நாட்கள் யோசனை செய்தபிறகு ஒரு எண்ணம் தோன்றியது.

'பெண்ணே நீ வாழ்க' பத்திரிகையின் ஆசிரியை மாலினி, சங்கீதா கொடுத்த கட்டுரையைப் படித்துப் பார்த்தாள்.

"இது உண்மையாகவே நடந்ததா?" என்றாள்.

"ஆமாம்" என்றாள் சங்கீதா.

" 'முனைவர் பட்டம் - ஒரு பெண்ணின் அனுபவம்' என்கிற தலைப்பில நீங்க எழுதியிருக்கிற கட்டுரையை ஒரு உண்மைச் சம்பவம்னு சொல்லி என்னால வெளியிட முடியும். ஆனா இதில பாதிக்கப்பட்ட பெண்ணோட பேரும் இல்லை. அந்தப் பேராசிரியரின் பேரும் இல்லை. இதைப்  பிரசுரிக்கறதனால என்ன பயன் இருக்கும்னு நினைக்கிறீங்க?"

"மேடம். அந்தப் பெண் நான்தான். ஆனால் என் பெயரை வெளியிடுவது எனக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்கறது உங்களுக்குத் தெரியும். அந்தப் பேராசிரியரின் பெயரை நான் குறிப்பிட்டு எழுதினா, அவர் அதை மறுப்பார். உங்க பத்திரிகை மேலயும், என் மேலயும் மான நஷ்ட வழக்குப் போடுவார். எங்கிட்ட இதை உண்மைன்னு நிரூபிக்க ஆதாரம் எதுவும் இல்லை."

"நீங்க சொல்றதெல்லாம் எனக்கும் தெரியும். ஆனா இதை வெளியிடறதனால என்ன பயன்னுதான் யோசிக்கிறேன்."

"மேடம்! நான் குறிப்பிட்டிருக்கிற அந்தப் பேராசிரியர் யார்னு உங்களால ஊகிக்க முடியுமா?"

"பரமேஸ்வரன்ங்கறது என்னோட யூகம்!"

"கரெக்ட். எப்படி ஊகிச்சீங்க?"

"கட்டுரையில நீங்க குறிப்பிட்டிருக்கிற ரெண்டு விஷயங்களை வச்சுத்தான். அவர் அகில இந்திய அளவில பெயர் பெற்றவர்னு சொல்லி இருக்கீங்க. ரெண்டாவது உங்களை ஒரு சரித்திர மாணவின்னு சொல்லி இருக்கீங்க. இந்த ரெண்டு விஷயங்களை வச்சுப் பார்க்கும்போது அவரோட பேருதான் எனக்கு முதல்ல நினைவு வந்தது."

"நீங்க புரிஞ்சுக்கிட்ட மாதிரி, இதைப் படிக்கிற வாசகர்களும் இது யாருன்னு புரிஞ்சுப்பாங்க இல்ல?"

"எஸ். ஐ திங்க் ஸோ! அட் தி ஸேம் டைம் தன்னைப் பத்திதான் எழுதியிருக்கோம்னு அவரால சொல்ல முடியாது. அப்படிச் சொன்னா, அது அவருக்குத்தான் பாதகமா அமையும். ஓகே! நான் இதைப் பிரசுரிக்கிறேன்!"

"தாங்க்ஸ் மேடம்!" என்றாள் சங்கீதா.

ரண்டு வாரங்களுக்குப் பிறகு சங்கீதாவுக்கு 'பெண்ணே நீ வாழ்க' ஆசிரியர் மாலினியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

"மிஸஸ் சங்கீதா! உங்க கட்டுரைக்கு நிறைய ரெஸ்பான்ஸ் வந்திருக்கு. அவரால பாதிக்கப்பட்ட பல பெண்கள் கடிதம் மூலமாகவும் ஃபோன் மூலமாகவும் தங்களோட அனுபவங்களை ஷேர் பண்ணிக்கிட்டிருக்காங்க. நாம அவரோட பேரைக் குறிப்பிடாட்டாலும் அது பரமேஸ்வரன்தான்னு நிறைய பேர் புரிஞ்சுக்கிட்டிருக்காங்க. யூனிவர்சிட்டி வைஸ் சான்சலர் கூட அப்செட் ஆகியிருக்கார்னு கேள்விப்பட்டேன்.  இன்னொரு ஆச்சரியமான விஷயம். இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயம் இந்தியா முழுக்க ரீச் ஆகியிருக்கு. அடுத்த மாசம் டெல்லியில் நடக்கற சரித்திர ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டுக்கு பரமேஸ்வரன் தலைமை வகிக்கிறதா இருந்தது. இப்ப ஒரு காரணமும் சொல்லாம வேற ஒருத்தர் தலைமை வகிக்கப் போறதா அறிவிப்பு வந்திருக்கு. நீங்க அவருக்குக் கொடுத்த அடி அவ்வளவு வலுவா அவர் மேல விழுந்திருக்கு. கங்கிராசுலேஷன்ஸ்!" என்றாள் மாலினி.
      
குறள் 144
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் 
தேரான் பிறனில் புகல்.

பொருள்:  
எவ்வளவு உயர்ந்த நிலையில் இருப்பவரானாலும், சற்றும் ஆராயாமல் பிறர் மனைவியிடம் ஆசை வைத்தால் அவர் நிலை என்னாகும்?

145.உடைந்த கண்ணாடி
"அந்த ஆளு தொந்தரவு ரொம்பத் தாங்கல மச்சான்" என்றாள் பார்வதி.

"என்ன பண்றாரு?" என்றான் சங்கரன்.

"அம்மா இருக்கறப்ப ரொம்ப யோக்கியன் மாதிரி ஒதுங்கி இருப்பான். அம்மா இல்லாதப்ப, நான் வீட்டைப் பெருக்கறப்ப என் பக்கத்தில வந்து இடிக்கிற மாதிரி நின்னுக்கிட்டு 'இங்க ஒரு பேப்பர் கெடக்கு பார்'னு எதையாவது காட்டுவான். நான் திரும்பறப்ப தற்செயலா இடிக்கிற மாதிரி என் மேல இடிப்பான். சமையக்கட்டுல நான் பாத்திரம் விளக்கிக்கிட்டிருக்கச்சே எதையோ எடுக்க வர மாதிரி வந்து கொஞ்ச நேரம் நின்னு என்னை உத்து உத்துப் பாப்பான். இன்னும் இது மாதிரி பல விஷயம். இதையெல்லாம் ஒரு பொம்பளை வெலாவாரியா சொல்ல முடியுமா என்ன?"

"அவரு வீட்டில இல்லாத நேரமாப் பாத்து நீ வேலைக்குப் போக வேண்டியதுதானே?"

"காலையில ஒரு தடவை சாயந்திரம் ஒரு தடவை போக வேண்டியிருக்கு. ஒரு தடவையாவது அவன் வீட்டில இருந்துடறானே!"

"இங்க பாரு பார்வதி. சம்பளம் கம்மியா இருந்தாலும் நான் பாக்கறது கவர்ன்மெண்ட் வேலை. இன்னும் ரெண்டு மூணு வருஷம் போனா இங்கியே குவார்ட்டர்ஸில நமக்கு வீடு கூடக் கிடைக்கும். அவரு என்னோட மேலதிகாரி. அவரை நாம பகைச்சுக்க முடியாது. அவரு மேல புகார் கொடுத்தாக் கூட எடுபடாது. எதையாவது சொல்லி என்னை வேலையை விட்டுத் தூக்கிடுவாங்க. அவரு ரொம்பத் தொந்தரவு கொடுத்தா வேலையிலிருந்து நின்னுடு. வேற எங்கியாவது வேலை பாத்துக்கலாம். அப்படி வேற வேலை கெடைக்காட்டாலும் பரவாயில்லை. என் சம்பளத்தை வச்சுக்கிட்டு நம்மளால குடும்பம் நடத்த முடியாதா என்ன?" என்றான் சங்கரன்.

பார்வதி பதில் சொல்லவில்லை.

த்திய அரசு நிறுவனம் ஒன்றில் கடைநிலை ஊழியனாகப் பணியாற்றுபவன் சங்கரன். அந்த நிறுவனத்தின் குடியிருப்பில் சில வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தாள் பார்வதி. அவற்றுள் உயர் அதிகாரியான ஆறுமுகத்தின் வீடும் ஒன்று. அங்கு தனக்கு ஏற்பட்டு வந்த தொந்தரவுகளைத்தான் அவள் தன் கணவன் சங்கரனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

ன்று மாலை பார்வதி ஆறுமுகம் வீட்டுக்கு வேலைக்குப் போனபோது அங்கே ஆறுமுகம் மட்டும்தான் இருந்தார்.

"அம்மா இல்லீங்களா?" என்றாள் பார்வதி.

"அதான் நான் இருக்கேனே!" என்றார் ஆறுமுகம்.

பார்வதி பதில் பேசாமல் துடைப்பத்தை எடுத்துப் பெருக்க ஆரம்பித்தாள்.

குனிந்து பெருக்கிக் கொண்டிருந்தவள் தன் பின்னால் நிழலாடியதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்.

ஆறுமுகம் அவளுக்குப் பின்னே வந்து நின்று கொண்டிருந்தார்!

"என்னய்யா வேணும்?" என்றாள் பார்வதி.

ஆறுமுகம் பதில் பேசாமல் அவளை இழுத்து அணைக்க முற்பட்டார்.

"விடுங்க" என்றாள் பார்வதி.

"இன்னிக்கு ஒருநாள் மட்டும் என் இஷ்டப்படி நடந்துக்க. அப்புறம் நான் உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன். இங்க பாரு" என்று கையைப் பிரித்துக் காட்டினார். கையில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு இருந்தது.

பார்வதி கீழே கிடந்த துடைப்பத்தை எடுத்து ஆறுமுகத்தின் தலை, முகம், உடல், கை, கால் என்று எல்லா இடங்களிலும் விளாசினாள். அவருடைய மூக்குக் கண்ணாடி கீழே விழுந்து உடைந்து சிதறியது.

"நிறுத்து! என்ன பண்றே நீ? தொலைச்சுடுவேன் ஒன்னை. ஒன் புருஷனுக்கு வேலை போகணுமா?" என்று கத்தினார் ஆறுமுகம், அதிர்ச்சியிலும் வலியிலும் துள்ளிக்கொண்டே.

"ஏண்டா! ஏழைப்பட்டவங்கன்னா என்ன வேணா பண்ணலாம்னு நெனச்சுக்கிட்டிருக்கியா நீ? நான் ஒன்னை என்ன பண்ணப் போறேன் பாரு!" என்ற பார்வதி, "டேய் செந்தில்!" என்றாள்.

"இங்கதான் இருக்கேன் அக்கா!" என்று சொல்லியபடி ஒரு இளைஞன் அருகில் வந்தான்.

"டேய் யார்ரா நீ? எதுக்குடா வந்தே நீ? போலீசைக் கூப்பிடட்டுமா?" என்றார் ஆறுமுகம்.

"கூப்பிடுங்க சார்!" என்றான் செந்தில் சிரித்துக்கொண்டே.

"ஏண்டா பேமானி! என்ன நெனச்சுக்கிட்டிருக்க நீ? போலீசைக்  கூப்பிட்டா நாங்க பயந்துடுவாமா? கூப்பிடு! போலீஸ் வரட்டும். செந்தில் அவங்ககிட்ட அவன் எடுத்த வீடீயோவைப் போட்டுக் காட்டுவான். அப்புறம் யாரை ஸ்டேஷனுக்கு அழைச்சுக்கிட்டுப் போகணும்னு அவங்களே முடிவு பண்ணுவாங்க!" என்றாள் பார்வதி சிரித்துக் கொண்டே.

"என்னது வீடியோவா?" என்றார் ஆறுமுகம் மிரண்டவராக.

"சாயந்தரம் இருக்க மாட்டேன்னு அம்மா காலையிலேயே எங்கிட்ட சொல்லிட்டாங்க. அம்மா இல்லாத நேரத்தில நீ எங்கிட்ட ஏதாவது விஷமம் பண்ணுவேன்னு எனக்குத் தெரியும். அதான் என் பக்கத்து வீட்டுப் பையன் செந்திலை என்னோட கூட்டிக்கிட்டு வந்தேன். வாசல்ல நின்னுக்கிட்டு அவன் கவனிச்சுக்கிட்டே இருந்தான். நீ என் பக்கத்தில வந்ததுமே அவன் உள்ளே வந்து அவனோட ஃபோன்ல வீடியோ எடுக்க ஆரம்பிச்சுட்டான்."

"இங்க பாரும்மா. வீடியோவெல்லாம் வேண்டாம். என்னை விட்டுடு. இனிமே இது மாதிரி நடக்காது" என்றார் ஆறுமுகம், கெஞ்சும் குரலில்.

"இனிமே நான் இங்க வேலை செய்ய முடியாது. அம்மாகிட்ட ஏதாவது காரணம் சொல்லிட்டு வேலையிலிருந்து நின்னுக்கறேன். என்னைப் பழி வாங்கணும்னு நெனைச்சு என் புருஷன் வேலைக்கு உலை வெக்க முயற்சி பண்ணினே, இந்த வீடியோ ஒன்னோட மேலதிகாரிக்குப் போயிடும்! என் புருஷனுக்கு நீ சின்னத் தொந்தரவு கொடுத்தாலும் போச்சு. ஜாக்கிரதை!" என்ற பார்வதி "வாடா போலாம்" என்று செந்திலை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.

கீழே சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகளைப் பார்த்துக் கொண்டே நின்றார் ஆறுமுகம்.

குறள் 145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் 
விளியாது நிற்கும் பழி.

பொருள்:  
இன்னொருவர் மனைவியை அடைவது எளிது என்று நினைத்துச் செயல்படுபவன் எப்போதும் அழியாத பழிக்கு ஆளாவான்.

146.எத்தனை காலம்தான்... 
"அண்ணன் தன் பொண்ணோட கல்யாணத்தை வேற ஊர்ல வச்சுக்கிட்டிருந்திருக்கக் கூடாது?" என்றான் சிவமணி.

"ஏன் அப்படிச் சொல்றீங்க? கிராமத்தில அவரு பெரிய மனுஷர். பெரிய வீடு இருக்கு. ஆள், படை எல்லாம் இருக்கு. அங்க வச்சுக்காம எதுக்கு வெளியூர்ல போய் வச்சுக்கணும்?" என்றாள் அவன் மனைவி சாந்தா.

"பதினஞ்சு வருஷமா ஊர்ப் பக்கமே போவல. இப்ப நான் போனா ஊர்ல எனக்குத் தெரிஞ்சவங்கள்ளாம் இதையே ஒரு குத்தமா சொல்லிப் பேசுவாங்க."

"இது ஒரு விஷயமா? நம்ம கல்யாணத்துக்கப்பறம் எங்கப்பா போயிட்டதனால அவரோட வியாபாரத்தைப் பாத்துக்கிட்டு நீங்க இந்த ஊரிலே தங்கிட்டீங்கங்கறது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே!"

"அது சரிதான். ஆனா இந்தப் பதினஞ்சு வருஷத்தில ஒரு தடவை கூடவா ஊருக்கு வர முடியாம போயிடுச்சுன்னு எல்லோரும் கேப்பாங்களே?"

"எனக்குக் கூட அந்தக் கேள்வி உண்டு! நீங்க ஊருக்குப் போறதையே தவிர்க்கிற மாதிரியில்ல நடந்துக்கிட்டீங்க?"

"அப்படி ஒண்ணும் இல்ல. வியாபாரத்தில இறங்கினப்பறம் ஒரு நிமிஷம் கூட அங்க இங்க நகர முடியல. உனக்கே இது புரியலன்னா ஊர்க்காரங்களுக்கு எங்கே புரியப் போவுது?" என்று அலுத்துக் கொண்டான் சிவமணி.

உண்மையான காரணம் அவனுக்கு மட்டும்தானே தெரியும்!

வனுக்குத் திருமணம் நடப்பதற்கு ஒரு வருடம் முன்பு நடந்த விஷயம் அது. ஊரில் அண்ணன் பெரிய மனிதர். நிறைய நிலங்கள், பெரிய வீடு, ஊருக்குள் செல்வாக்கு எல்லாம் உண்டு.

சிவமணி வாலிப முறுக்கில் கவலையில்லாமல் நண்பர்களுடன் ஊரில் சுற்றிக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் உத்ராபதி என்பவரிடம் அண்ணன் தெரிவிக்கச் சொன்ன செய்தியைத் தெரிவிக்க உத்திராபதியின் வீட்டுக்குச் சிவமணி சென்றபோது உத்ராபதி வீட்டில் இல்லை. உத்திராபதியின் மனைவி சுசீலா மட்டும் தனியே இருந்தாள். ஏதோ ஒரு மயக்கத்தில் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு விட்டது. 

அதன் பிறகும், பலமுறை இருவரும் சந்தித்து உறவாடினர். உத்ராபதிக்கும் ஊரில் மற்றவர்களுக்கும் தெரிந்து விடுமோ என்ற பயம் இருவருக்கும் இருந்தபோதும் இருவரும் தொடர்பை முறித்துக் கொள்ளவில்லை.

விஷயம் யாருக்கோ தெரிந்து ஊரில் பரவ ஆரம்பித்து விட்டது. சிவமணியின் அண்ணனிடம் இதைச் சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. 

ஊரில் இந்தப் பேச்சு எழுந்த விஷயம் சிவமணிக்குத் தெரிந்ததும், அவன்  சுசீலாவைப் பார்ப்பதை நிறுத்திக் கொண்டான்.

ஆயினும் எந்த நேரமும் இது அண்ணனுக்குத் தெரிந்து விடுமோ, உத்ராபதிக்குத் தெரிந்து விடுமோ என்ற பயம் அவனுக்கு இருந்து கொண்டே இருந்தது.

ஒருமுறை சிவமணி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரில் உத்ராபதி கையில் ஒரு அரிவாளுடன் வருவதைப் பார்த்ததும் சிவமணிக்குக் குலை நடுங்கி விட்டது. 

அருகில் வந்ததும் உத்ராபதி அவனைப் பார்த்துச் சிரித்து விட்டுப் போனதும்தான் சிவமணிக்கு உயிர் வந்தது. 

கிராமத்தில் கையில் அரிவாளுடன் யாராவது நடந்து செல்வது ஒரு இயல்பான விஷயம். அது கூடத் தனக்கு ஒரு கிலியை ஏற்படுத்தி விட்டதை நினைத்து ஏன் இப்படி ஒரு தவறைச் செய்தோம் என்று அவன் தன்னை நொந்து கொண்டே இருந்தான்.

ஒருநாள் உத்ராபதி தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து விட்டான். கடன் தொல்லைதான் காரணம் என்று சொன்னார்கள். 

ஆயினும் அவன் மனைவி தன்னிடம் தொடர்பு வைத்திருப்பது தெரிந்துதான் உத்ராபதி தற்கொலை செய்து கொண்டு விட்டானோ என்ற சந்தேகம் சிவமணிக்கு இருந்து கொண்டே இருந்தது.

சில மாதங்களில் சிவமணிக்கு சாந்தாவுடன் கல்யாணம் நடந்தது. கல்யாணம் நடந்த ஒரு மாதத்திலேயே சாந்தாவின் தந்தை காலமாகி விட்டதால் அவருடைய வியாபாரத்தை சிவமணியே கவனித்துக் கொள்வது என்று முடிவானது. அதன் பிறகு சிவமணி ஊருக்குத் திரும்பி வரவே இல்லை.

சாந்தா சொன்னது போல் அவன் ஊருக்குப் போவதைத் தவிர்த்துக்கொண்டுதான் வந்திருக்கிறான். இப்போது அண்ணன் பெண் கல்யாணத்துக்காக ஊருக்குப் போக வேண்டிய கட்டாயம்!

ரில் பலர் அவனை விசாரித்தார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு அவனுக்கும் சுசீலாவுக்கும் இருந்த தொடர்பு பற்றித் தெரியும் என்று தெரியவில்லை.

சிறு வயதில் தன் நெருங்கிய நண்பனாக இருந்த முத்துவிடம் தனிமையில் பேசச் சந்தர்ப்பம் கிடைத்தபோது "உத்ராபதி சம்சாரம் எப்படி இருக்காங்க?" என்று அவனிடம் கேட்டான் சிவமணி.

"புருஷன் போனப்பறம் அவங்க வீட்டை விட்டே வெளியில வரதில்ல. நிலத்தையெல்லாம் குத்தகைக்கு விட்டுட்டு வர வருமானத்தில குடித்தனம் நடத்திக்கிட்டிருக்காங்க. ஆமாம். நீ ஏன் அவங்களைப் பத்திக் கேக்கறே?' என்றான் முத்து.

"இல்லை. ஊர்ல சில பேரு என்னையும் அவங்களையும் தொடர்பு படுத்திப் பேசிக்கிட்டிருந்தாங்க. அதான்..."

"ஆமாம். எனக்கும் அது காதுல விழுந்தது."

"இப்பவும் பேசிக்கிட்டிருக்காங்களா?"

"கிராமத்தில இந்த மாதிரிப் பேச்செல்லாம் அடங்கவே அடங்காது. தலைமுறை தலைமுறையாத் தொடர்ந்துக்கிட்டே இருக்கும்!"

"நீ அதை நம்பறியா?"

"ஒன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?" என்றான் முத்து.

இதற்கு என்ன பொருள் என்று சிவமணிக்கு விளங்கவில்லை.

"அதைப் பத்தி இப்ப என்ன?" என்ற முத்து பேச்சை மாற்ற விரும்பியவனாக, "உத்ராபதிக்கு ஒரு பையன் இருந்தான்ல, அவன் இப்ப பெரிய ஆளாயிட்டான். டவுன் காலேஜில் பி ஏ படிச்சு முடிச்சுட்டான். அவன் கூட ஒன்னைப் பாக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தான்" என்றான்.

"அவன் எதுக்கு என்னைப் பாக்கணும்?" என்றான் சிவமணி திடுக்கிட்டவனாக. 'ஒரு வேளை உண்மை தெரிந்து சினிமாவில் வருவது போல் என்னைப் பழி வாங்க நினைக்கிறானோ?'

"ஏதோ சின்னதா வியாபாரம் பண்ணலாம்னு பாக்கறானாம். 'வியாபார விஷயம்னா சிவமணிட்ட யோசனை கேட்டுக்க. அவனுக்குத்தான் நிறைய அனுபவம் இருக்கு'ன்னு யாரோ அவன்கிட்ட சொல்லி இருக்காங்க."

அவ்வளவுதானா? சிவமணிக்கு நின்று போன மூச்சு மீண்டும் வந்தது போல் இருந்தது.

'எப்போதோ செய்த தவறின் விளைவாக இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படிப் பழிக்கும், பாவத்துக்கும் ஆளாகி, ஏதாவது கெடுதல் நடந்து விடுமோ என்று அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கப் போகிறேன்?'

இந்தக் கேள்விக்கு அவனுக்கு விடை தெரியவில்லை.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும் 
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பொருள்:  
இன்னொருவர் மனைவியை நாடுபவனிடமிருந்து பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு துன்பங்களும் நீங்க மாட்டா.

147.வெள்ளிவிழா  
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் வெள்ளி விழா தம்பதிக்குத் தமிழிலும், ஆங்கிலத்திலும் விதவிதமாக வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தன் அருகில் நின்றிருந்த கணவன் நாகராஜனைப் பெருமையுடன் பார்த்தாள் புவனா.

கல்யாணம் ஆகும்போது அவளுக்கு வயது 20, நாகராஜனுக்கு 25.

கல்யாணம் ஆகி ஒரு வருடத்தில் கார்த்திக்கும், மூன்றாவது வருடத்தில் செல்வியும் பிறந்து விட்டார்கள்.

காலம் வேகமாக ஓடி விட்டது. நாகராஜன் வேலையில் வேகமாக முன்னேறி அவனுடைய நிறுவனத்தின் பொது மேலாளர் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டான்.

சொந்த வீடு, சொகுசுக்கார், வருடம் தவறாமல் உல்லாசப் பயணம் என்று வாழ்க்கை இன்பமாக ஓடியது புவனாவுக்கு.

கார்த்திக் படிப்பை முடித்து வேலைக்குப் போய் விட்டான். செல்வியும் படிப்பை முடித்து விட்டு மேற்படிக்கு அமெரிக்கா செல்லத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தாள்.

நாகராஜனின் நீண்ட நாள் நண்பன் சந்துரு "குடும்ப வாழ்க்கை எப்படி நடத்தணும்கறதுக்கு நீ ஒரு உதாரணமா இருக்கடா!" என்று சொன்னபோது புவனாவுக்குப் பெருமையாக இருந்தது.

டுத்த நாள் நாகராஜன் அலுவலகத்துக்குச் சென்றபோது அவனது உதவியாளர் பிரேமா "என்ன சார்! சில்வர்  ஜூப்லி எல்லாம் அமர்க்களமா நடந்ததா?" என்றாள்.

"ஓ! நீ ஏன் வரல?" என்றான் நாகராஜன்.

"அதான் சொன்னேனே சார்! என் ஹஸ்பெண்ட் நேத்து ராத்திரி ஜெர்மனிக்குக் கிளம்பிப் போனார். அவர் கிளம்பும்போதே மணி பத்து. அதுக்கப்பறம் எங்க வரது?"

"ஐ மிஸ்ட் யூ!" என்றான் நாகராஜன்.

"உண்மையாவா?" என்றாள் பிரேமா சிரித்துக் கொண்டே.

"எனக்கு ஒரு முக்கியமான கால் இருக்கு. அரைமணி நேரத்துக்கு யாரும் என்னைத் தொந்தரவு பண்ண வேண்டாம்னு பியூன் கிட்ட சொல்லிடு" என்றான் நாகராஜன்.

"நான் இருக்கலாமா?"

"நீதானே நோட்ஸ் எடுக்கணும்!"

பிரேமா வெளியில் சென்று பியூனிடம் ஏதோ சொல்லி விட்டு உள்ளே வந்து கதவைப் பூட்டினாள்.

கதவைப் பூட்டி விட்டு அவள் திரும்புவதற்குள் நாகராஜன் அவள் அருகில் வந்து அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் 
பெண்மை நயவா தவன்.

பொருள்:  
பிறன் மனைவியை விரும்பாதவனே அறவழியில் இல்வாழ்க்கை நடத்துவதாகக் கருதப்படுவான்.

148.தேர்தல் முடிவு

அக்கவுண்ட்ஸ் மானேஜர் அரவிந்தும் சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆஃபீஸர் ரேகாவும் பேசிக் கொள்ளும்போது ரேகாதான் அரவிந்துக்கு மேலதிகாரியோ என்று தோன்றும்!

அரவிந்தை விட ரேகா இரண்டு வயது மூத்தவள் என்பதைத் தவிர இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

ஒரு வருடம் முன்பு, ரேகா அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவள் திருமணம் ஆனவள் என்று தெரிந்தும், ஒருமுறை இருவரும் தனிமையில் இருந்தபோது அரவிந்த் அவளிடம் தவறான முறையில் பேச யத்தனித்தபோது, அவனைக் கடுமையாகப் பேசி, தனது முறையற்ற பேச்சுக்கு அவனை மன்னிப்புக் கேட்க வைத்தாள் ரேகா.

அரவிந்த் தன்னிடம் மன்னிப்புக் கேட்ட பிறகு ரேகா அவனிடம் இயல்பாகவே நடந்து வந்தாள். ஆயினும் அவன் செய்த தவறுக்கு தண்டனை கொடுப்பது போல் அவனிடம் சற்று அலட்சியமாகவே நடந்து கொண்டாள்.

ரேகா தன்னைப் பற்றி யாரிடமாவது தவறாகச் சொல்லி விடுவாளோ என்ற பயத்தில் அரவிந்தும் அவளை வயதில் மூத்தவள் என்று கருதி மரியாதையாக நடந்து கொள்வது போல் சற்று அடக்கியே வாசித்து வந்தான். 

அடிக்கடி அவளிடம் விளையாட்டாக ஏதாவது பேசி தனக்கு அவள் மீது தவறான எண்ணம் ஏதும் இல்லை என்று காட்டிக் கொள்ள முயன்று வந்தான்.

"என்ன ரேகா மேடம்! எலக்‌ஷன்ல யாரு ஜெயிப்பாங்க?" என்றான் அரவிந்த்.

"என்ன எலக்‌ஷன்?" என்றாள் ரேகா.

"மறந்துட்டீங்களா? நாளைக்கு நம்ம கம்பெனி ஆண்டு விழாவிலே பெண் ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து ஆண் ஊழியர்கள்ள ஒத்தரை 'பெஸ்ட் மேன்'னு தேர்ந்தெடுக்கப் போறீங்களே, அந்த எலக்‌ஷனைப் பத்திக் கேட்டேன்!"

"ஓ! அதுவா? நிச்சயமா நீ ஜெயிக்கப் போறதில்ல!" என்றாள் ரேகா.

"என்ன ரேகா! இப்படிச் சொல்லிட்டீங்க? நான்தான் ஜெயிப்பேன்னு நம்ம ஆஃபீஸ்ல எல்லாரும் பேசிக்கிறாங்க!"

"பெண்கள் எதை வச்சு ஓட்டுப் போடுவாங்கன்னு ஆண்களுக்கு எப்படித் தெரியும்?"

"சரி. உங்க ஓட்டு யாருக்கு?"

"யாரு ஜெயிக்கப் போறாங்களோ அவங்களுக்குத்தான்!"

"அப்படின்னா நிச்சயமா எனக்கு இல்ல!"

"அடேயப்பா! என்ன ஷார்ப்! அதான் உன்னை மானேஜராப் போட்டிருக்காங்க!" என்றாள் ரேகா.

ண்டு விழா சனியன்று நடந்து முடிந்தது. திங்கட்கிழமையன்று அலுவலகம் வந்ததும் அரவிந்த் ரேகாவைப் பார்த்து, "ஹலோ!" என்றான்.

"ஹலோ பெஸ்ட் மேன்!" என்றாள் ரேகா.

"வெறுப்பேத்தாதீங்க!" என்றான் அரவிந்த். "எப்படிப் பெண்கள் எல்லாம் சேர்ந்து 'பெஸ்ட் மேனா' முரளியைத் தேர்ந்தெடுத்தாங்கன்னு ஆஃபீஸ்ல எல்லாருமே ஆச்சரியப்படறாங்க."

"ஆண்கள் எல்லாம் ஆச்சரியப்படறாங்கன்னு சொல்லு! நான்தான் அன்னிக்கே சொன்னேனே, பெண்கள் யாரைத் தேர்ந்தெடுப்பாங்கன்னு ஆண்களால ஊகிக்க முடியாதுன்னு!"

"இருக்கலாம். ஆனா, முரளியை எப்படித் தேர்ந்தெடுத்தாங்க? அவரு யார்கிட்டயும் சரியாப் பேசக் கூட மாட்டாரே!"

"அரவிந்த்! இப்ப, நம்ம ஆஃபீஸ்ல இருக்கிற ஆண்கள் கிட்ட பெண் ஊழியர்கள்ள 'பெஸ்ட் உமன்' யாருன்னு கேட்டா, யாரைத் தேர்ந்தெடுத்திருப்பீங்க?"

"நிச்சயமா உங்களை இல்ல!" என்றான் அரவிந்த்.

"என்ன, டிட் ஃபார் டேட்டா? அன்னிக்கு நான் சொன்னதுக்கு பதிலுக்கு சொல்லிக் காட்டறியா? என்னைத் தேர்ந்தெடுக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். யாரைத் தேர்ந்தெடுப்பீங்கன்னும் எனக்குத் தெரியும்!"

"அது எப்படி? பெண்கள் மனசில என்ன இருக்குன்னு ஆண்களுக்குத் தெரியாது, ஆண்கள் மனசில என்ன இருக்குன்னு மட்டும் பெண்களுக்குத் தெரியுமா?"

"தெரியும். ஆண்கள்கிட்ட 'பெஸ்ட் வுமன்' யாருன்னு கேட்டா அழகான பொண்ணைத் தேர்ந்தெடுப்பாங்க. ஆனா பெண்கள் கிட்ட 'பெஸ்ட் மேனை'த் தேர்ந்தெடுக்கச் சொன்னா யாரு நல்லவர்னு பார்த்து அவரைத் தேர்ந்தெடுப்பாங்க!"

"ஓ! முரளியை விட நல்லவங்க இந்த ஆஃபீஸ்ல இல்லியா? நான் கூட நல்லவன்தான்!"

"நான் நல்லவர்னு சொல்றது வேற அர்த்தத்தில. பெண்கள் கிட்ட கண்ணியமா நடந்துக்கறவங்களைத்தான் பெண்கள் 'நல்ல ஆண் மகன்'னு நினைப்பாங்க.

"இந்த ஆஃபீஸ்ல இருக்கற பெரும்பாலான ஆண்கள் பெண்களைப் பாத்துப் பல்லிளிக்கறவங்கதான். கல்யாணம் ஆன பொண்ணுன்னு கூடப் பாக்காம அவளை வளைக்க முடியுமான்னு பாப்பாங்க! 

"உங்க எல்லாருக்கும் நீங்க ரொம்ப ஸ்மார்ட், உங்க தோற்றத்திலயும், பேச்சுலயும் பெண்கள் மயங்கிடுவாங்கன்னு எண்ணம்! 

"உங்க மத்தியில, பெண்கள்கிட்ட கண்ணியமா நடந்துக்கற, குறிப்பா கல்யாணம் ஆன பெண்களை மதிச்சு நடந்துக்கற முரளிக்குப் பெண்கள் ஓட்டுப் போட்டதில என்ன ஆச்சரியம் இருக்கு?" என்ற ரேகா அவனைக் காயப்படுத்தி விட்டோமோ என்று நினைத்து "நான் பொதுவா சொன்னேன். தப்பா எடுத்துக்காதே!" என்றாள்.

"அடுத்த எலக்‌ஷன் வரதுக்குள்ள என்னை மாத்திக்கிட்டு உங்க ஓட்டுக்களை வாங்க முடியுமான்னு பாக்கறேன். குறைஞ்சது உங்க ஒத்தரோட ஓட்டையாவது நான் வாங்கணும்!" என்றான் அரவிந்த்

அறத்துப்பால் 
இல்லறவியல்
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு 
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

பொருள்:  
பிறர் மனைவியை ஏறெடுத்தும் பார்க்காத பேராண்மை நல்லவர்கள் பின்பற்ற வேண்டிய அறம். அது ஒரு சிறந்த ஒழுக்க நெறியும் ஆகும்.

149. மூவரில் ஒருவர் 

"நம்ம நிறுவனத்தோட ஜெனரல் மேனேஜர் பதவிக்கு மூணு பேரை ஷார்ட்லிஸ்ட் பண்ணி இருக்கேன். இந்த மூணு பேர்ல யாரை நியமிக்கறதுன்னு நீங்கதான் சார் முடிவு பண்ணணும்!" என்றான் முகுந்தன்

"வெளியிலே இருந்து யாரையாவது எடுக்கறதுன்னா நான் அவங்க பின்னணியைப் பார்க்க வேண்டியதுதான். இவங்கள்ளாம் நம்ப நிறுவனத்தோட மூத்த நிர்வாகிகள்தானே? சி ஈ ஓ என்கிற முறையில உங்களுக்குத்தான் அவங்களைப் பத்தி நல்லாத் தெரியுமே! நீங்களே ஒத்தரை நியமிக்கலாமே! இதை ஏன் என்கிட்ட கொண்டு வரீங்க?" என்றார் நிறுவனத்தின் தலைவர் சங்கரராமன்.

"எனக்கு அடுத்த நிலையில இருக்கப் போறவரை நான் தேர்ந்தெடுக்கறதை விட நீங்க தேர்ந்தெடுத்தா நல்லா இருக்கும்னு நினைக்கறேன்."

"ஐ அப்ரிஷியேட் யுவர் எதிக்ஸ். மூணு பேரோட ப்ரொஃபைலையும் காட்டுங்க. முதல்ல இருக்கற பேருதான் உங்களோட முதல் தேர்வுன்னு வச்சுக்கலாமா?"

"அப்படி இல்ல. மூணு பேருமே இந்தப் பதவிக்கு ரொம்பவும் பொருத்தமானவங்கதான்."

"சரி. முதல் பேரில இருந்து ஆரம்பிக்கலாம். கிரிதரன்..."

ஒரு நிமிடம் அவரது விவரங்களைப் படித்து விட்டு, "இவரோட பின்னணி நல்லாத்தான் இருக்கு. இது என்ன நிறைய பேப்பர்ஸ் அட்டாச் பண்ணியிருக்கீங்க?" என்றார் சங்கரராமன்

"அதெல்லாம் ஹெச் ஆர்ல தயார் பண்ணிக் கொடுத்த அவரோட முழுமையான பின்னணி விவரங்கள். அவர் முன்னால வேலை செஞ்ச கம்பெனிகளோட விவரம் எல்லாத்தையும் தொகுத்துத்தான் சுருக்கமா ஒரு ப்ரொஃபைல் ஷீட் தயார் பண்ணியிருக்கோம். அதைத்தான் நீங்க பாத்தீங்க. உங்ககிட்ட கொடுக்கும்போது இந்த அட்டாச்மெண்ட்டையெல்லாம் நான் ரிமூவ் பண்ணியிருக்கணும். ஐ ஆம் சாரி" என்றான் முகுந்தன்.

"அதனால் என்ன?" என்று சொல்லிக் கொண்டே தாள்களை வேகமாகப் புரட்டிய சங்கரராமன், "இதென்ன, ஏதோ எஃப் ஐ ஆர்னு போட்டிருக்கு?" என்றார்.

"சார்! அது ஒண்ணுமில்ல. அது அவர் முன்னால வேலை செஞ்ச கம்பெனி சம்பந்தப்பட்டது."

"என்ன அது? விவரமா சொல்லுங்க."

"சார்! அவருக்கும் ஒரு லேடி ஸ்டாஃபுக்கும் ஏதோ அ ஃபேர்  இருந்திருக்கு. அந்தப் பொண்ணோட சம்மதத்தோடதான் அது நடந்திருக்கு."

"கான்சென்ஸுவல் ரேப்னு சொல்லுவாங்களே, அது மாதிரியா?" என்றார் சங்கரராமன் சிரித்தபடி .

"சார்! இது ரேப் இல்லை. அந்தப் பொண்ணுக்கும் இவருக்கும் ரொம்ப நாளா தொடர்பு இருந்திருக்கு. அது அந்த நிறுவனத்தில எல்லாருக்கும் தெரியுமாம். ஆனா அந்தப் பொண்ணு அவர் தன்னை பாலியல் வன்முறை செஞ்சதா திடீர்னு போலீஸ்ல புகார் கொடுத்திருக்கா!"

"இன்ட்ரஸ்டிங். அப்புறம்?"

"அவரை மிரட்டிப் பணம் கறக்கறதுக்காக அந்தப் பொண்ணோட புருஷன்தான் அவளை அப்படிப் புகார் கொடுக்க வச்சிருக்கான்!"

"அப்படின்னா அவ புருஷனுக்குத் தெரிஞ்சுதான் இந்த அஃபேர் நடந்திருக்குன்னு சொல்லுங்க. திஸ் இஸ் ரியல் கன்சென்சஸ்!"

"புகார் கொடுத்தா அவரு பயந்துடுவாரு, அவரை மிரட்டிப் பணம் வாங்கலாம்னு அவன் பிளான் பண்ணி இருக்கான். ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல உடனே எஃப் ஐ ஆர் போட்டுட்டாங்க. அப்புறம் ஏதோ ஒரு மாதிரி காம்ப்ரமைஸ் ஆயிடுச்சு. ஆனா கிரிதரன் பேர்ல எஃப்  ஐ ஆர் இருந்ததால அவங்க கம்பெனியில அதை அவரோட பர்சனல் ஃபைல்ல ரிக்கார்ட் பண்ணிட்டாங்க."

"ஆமாம். இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"அவர் நம்ம கம்பெனியில சேர அப்ளிகேஷன் போட்டபோது, அவரோட பழைய கம்பெனியிலிருந்து வந்த கான்ஃபிடென்ஷியல் ரிப்போர்ட்டில் இந்த எஃப்  ஐ ஆர் பத்தி இருந்ததைப் பாத்துட்டு, அந்த கம்பெனி ஹெச் ஆர் மேனேஜருக்கு ஃபோன் பண்ணி விவரம் கேட்டேன். அவர்தான் இந்த விவரம் எல்லாம் சொன்னார். மத்தபடி கிரிதரன் ஒரு திறமையான நிர்வாகின்னும் சொன்னார்."

"நீங்க ரொம்ப தரோவா இருந்திருக்கீங்க. ஆனா செலக்‌ஷன்ல கோட்டை விட்டுட்டீங்க!"

"என்ன சார் சொல்றீங்க?"

"அடுத்தவனோட மனைவியோட உறவு வச்சுக்கறவனுக்கு எதுக்குமே தகுதியில்லை. ஹி டிஸர்வ்ஸ் நத்திங். எனக்கு இது முன்னாலயே தெரிஞ்சிருந்தா, இந்த ஆளை வேலைக்கு எடுக்காதீங்கன்னு அப்பவே சொல்லியிருப்பேன். இப்ப அவரை டிஸ்மிஸ் பண்ண முடியாது. ஆனா அவர் ஜி. எம்மா வராம தடுக்கலாம்."

"சார்! அது எப்பவோ நடந்தது! நம்ம கம்பெனிக்கு வந்தப்பறம் அவர் மேல எந்தப் புகாரும் இல்ல. அவர் ரொம்பத் திறமையானவர். இந்த மூணு பேர்ல அவர்தான் பெஸ்ட்ங்கறதுன்னு என்னோட அபிப்பிராயம்."

"தென் லெட் அஸ் கோ ஃபார் தி செகண்ட் பெஸ்ட்! சாரி முகுந்தன்! நான் முதலிலேயே சொன்ன மாதிரி, அடுத்தவன் மனைவியோட உறவு வச்சுக்கறவன்லாம் மனுஷனே இல்ல. அவனுக்கு எதுக்கும் எந்த அருகதையும் கிடையாது. கிரிதரன் பேரை அடிச்சிடுங்க. மீதி ரெண்டு பேர்ல ஒத்தரை செலக்ட் பண்ணுவோம்" என்றார் சங்கரராமன் உறுதியாக.
  
குறள் 149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் 
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

பொருள்:  
இன்னொருவனின் மனைவியின் தோள்களை அணைக்காதவர்தான் கடல் சூழ்ந்த இவ்வுலகில் எந்த ஒரு நன்மையையும் பெறத் தகுதி உடையவர்.

150. செய்யாத தவறு!
ஜெகன்மூர்த்தி சிறையிலிருந்து வெளியே வந்து ஒரு வாரமாகி விட்டது.

இந்த ஒரு வாரத்தில் அவரை யாரும் வீட்டில் வந்து பார்க்கவில்லை.

சிறையிலிருந்து விடுதலையாகி வரும்போது, தன் மகன் கிட்டு தன்னை அழைத்துப் போக சிறைவாசலில் காத்திருப்பான் என்று ஜெகன்மூர்த்தி எதிர்பார்த்தார். ஆனால் அவன் வரவில்லை. மகனே வராதபோது, மகள் ராதிகாவோ, மாப்பிள்ளை குமாரோ வராததில் வியப்பில்லை. மனைவியால் தனியே வர முடியாது.

வீட்டுக்கு வந்த பிறகுதான் அவருக்கு விவரம் தெரிந்தது. சிறைக்குச் சென்ற அப்பாவுடன் ஒரே வீட்டில் இருக்க விருப்பமில்லாமல், கிட்டு ஒரு வாரம் முன்பு வேறு வீடு பார்த்துக்கொண்டு தனியே போய் விட்டானாம்!

வீட்டில் மனைவி கோகிலா மட்டும்தான் இருந்தாள். வீட்டுக்குள் நுழைந்த ஜெகன்மூர்த்தியைப் பார்த்ததும் அவள் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது.

 "அப்பா வந்துட்டாருடா!" என்று மகனுக்குத் தொலைபேசி மூலம் தகவல் சொன்னாள். அதற்குப் பிறகும் அவன் தந்தையை வந்து பார்க்கவில்லை. மகளுக்கும் சொன்னாள். அவளும் வரவில்லை.

இரண்டு வருடம் சிறையில் கணவனுக்குச் சரியான சாப்பாடு இருந்திருக்காதே என்று தினமும் அவருக்கு வகை வகையாகச் சமைத்துப் போட்டாள் கோகிலா. அவருக்கு ருசிக்கவில்லை.

"இருபது வருஷம் அந்தக் கம்பெனிக்கு மாடா உழைச்சேன். என்னோட செயல்பாட்டையும், சாதனைகளையும் பாராட்டி எனக்கு அவார்டு, ப்ரமோஷன் எல்லாம் கொடுத்தாங்க. ஆனா, நான் ஏதோ மோசடி பண்ணிட்டேன்னு சொல்லி, என்னை வேலையை விட்டுத் தள்ளி, என் மேல வழக்குப் போட்டு ரெண்டு வருஷம் ஜெயிலுக்கு அனுப்பினாங்க.

"விடுதலையாகி வந்தப்பறம் என்னைப் பார்க்க என் பொண்ணு, புள்ளைகளுக்கெல்லாம் கூட விருப்பமில்லை. என் கம்பெனியில என்னோட வேலை செஞ்ச ஒத்தருக்குக் கூட என்னைப் பார்க்க இஷ்டமில்லை. நண்பன்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்சவங்கள்ளாம் எங்கே இருக்காங்கன்னே தெரியல! நீ மட்டும் ஏன் எனக்கு இப்படிப் பாத்துப் பாத்து சமையல் பண்ணிப் போட்டுக்கிட்டிருக்கே? என் மேல உனக்கு வருத்தமில்லையா?" என்றார் அவர் ஒருநாள் மனைவியிடம்.

"வருத்தம், கோபம் எல்லாமே உண்டு. ஆனா..."

"என்ன, பதிபக்தியா?"

"அது மட்டும் இல்ல. அதுக்கு மேல, ஒரு விஷயத்தில உங்க மேல எனக்கு ரொம்ப மதிப்பு இருக்கு!"

"என்ன அது?"

கோகிலா பதில் சொல்வதற்குள் அழைப்பு மணி அடித்தது.

கோகிலா கதவைத் திறந்தாள்.

அவருடைய நிறுவனத்தில் அவருக்கு உதவியாளராக இருந்த பவானி!

உள்ளே வந்த பவானி "சாரி சார்!" என்றாள்.

"என்ன சாரி? எனக்கு எதிரா எல்லா டாகுமெண்ட்டையும் தேடி எடுத்துக் கொடுத்துட்டு, இப்ப நான் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தப்பறம் சாரி சொல்றியா?"

"சார்! ஆஃபீஸ்ல எங்கிட்ட கேட்ட விவரங்களை நான் எப்படிக் கொடுக்காம இருக்க முடியும்? எனக்கு எப்பவுமே உங்க மேல மதிப்பு உண்டு சார்!"

"நான் உனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கேன்! இன்க்ரிமெண்ட் எல்லாம் நிறைய வாங்கிக் கொடுத்திருக்கேன். உனக்கு ப்ரோமோஷன் கொடுக்கணும்னு கூட சிபாரிசு பண்ணியிருக்கேன்."

"சார்! நீங்க எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கீங்க. ஆனா நான் உங்ககிட்ட மதிப்பு வச்சிருக்கறது அதுக்காகல்லாம் இல்ல சார்!"

"வேற எதுக்காக?"

"நீங்க எங்கிட்ட நடந்துக்கிட்ட விதத்துக்காக! இதுக்கு முன்னால நாலைஞ்சு பேர்கிட்ட நான் உதவியாளரா இருந்திருக்கேன். அவங்க எல்லாருமே எங்கிட்ட ஏதாவது ஒரு விதத்தில தப்பா நடந்துக்கப் பாப்பாங்க. தற்செயலா கை படற மாதிரி என்னைத் தொடுவாங்க. மேலே இடிக்கிற மாதிரி வந்து நிப்பாங்க. ரெண்டு அர்த்தம் வச்சுப் பேசுவாங்க. 'உன் கணவரோட நீ சந்தோஷமா இருக்கியா?'ன்னு ஒரு மாதிரி சிரிச்சுக்கிட்டே கேப்பாங்க. மட்டமான ஜோக்கெல்லாம் சொல்லி, நான் அதை ரசிக்கிறேனான்னு பாப்பாங்க. என் டிரஸ்ஸைப் பத்தி, என் நிறத்தைப் பத்தி, நான் ஸ்லிம்மா இருக்கறதைப் பத்தி, இன்னும் பலவித விஷயங்களைப் பத்தி கேஷுவலாப் பேசற மாதிரி மட்டமாப் பேசுவாங்க.

"ஆனா நீங்க மட்டும்தான் ஆஃபீஸ்ல வேலை பார்த்த பெண்களையெல்லாம் கண்ணியமா நடத்தினவரு. தவறிப் போய்க் கூட ஒரு தப்பான வார்த்தை உங்க வாயிலிருந்து வந்ததில்லை. உங்க பார்வை கூட எப்பவும் தப்பா இருந்தததில்லை. எங்களுக்குத் தெரியும், ஒரு ஆணோட பார்வை எப்படிப்பட்டதுன்னு! நீங்க வேற என்ன தப்புப் பண்ணி இருந்தாலும், என்னை மாதிரி பெண்கள் கிட்ட கண்ணியமா நடந்துக்கிட்டதுக்காக எப்பவுமே நாங்க உங்க மேல மரியாதை வச்சிருப்போம். நான் உங்களைப் பார்க்க வந்தது அந்த மரியாதைக்காகத்தான். நம்ம ஆஃபீஸ்ல வேலை செய்யற மத்த பெண்களும் உங்ககிட்ட அவங்க மரியாதையைத் தெரிவிக்கச் சொன்னாங்க. நான் வரேன் சார்!" என்று கிளம்பினாள்.

"உங்களை நான் மதிக்கிறதுக்கு பதிபக்தியைத் தவிர இன்னொரு காரணமும் இருக்குன்னு சொல்லிக்கிட்டிருந்தேனே, அது பவானி சொன்ன காரணம்தான்!" என்றாள் கோகிலா.
    
குறள் 150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் 
பெண்மை நயவாமை நன்று.

பொருள்:  
ஒருவன் அறத்துக்குப் புறம்பான வேறு செயல்களைப் புரிந்திருந்தாலும், இன்னொருவர் மனைவியை நாடாமல் இருந்தால் அது மிகவும் சிறந்த செயல்.
       பொருட்பால்                                                                                      காமத்துப்பால்

3 comments:

  1. All the stories are good. There are realistic also. Good imagination.
    They can be published in Tamil magazines also.

    Soman

    ReplyDelete
  2. அருமை அருமை பதிவு

    ReplyDelete