About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 28 - கூடாவொழுக்கம்

திருக்குறள் 
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 28
கூடாவொழுக்கம்
 

271. உள்ளும் புறமும் 

''உலகத்தில் எல்லாமே திடப்பொருள், திரவப்பொருள், வாயுப்பொருள், வெற்றிடம், வெப்பம் என்ற பஞ்ச பூதங்களால் ஆனது. நம் உடம்பும் அப்படித்தான். நம் உடலில் இருக்கும் பஞ்சபூதங்களும் வெளியில் இருக்கும் பஞ்சபூதங்களும் தொடர்பில் இருக்கின்றன. நம் உடலிலிருந்து தோல் உதிர்ந்தால் அது மண்ணோடு கலந்து விடும். ரத்தம் சிந்தினால் அது பூமியில் இருக்கும் ஈரத்துடன் சேர்ந்து கொள்ளும். காற்று, வெற்றிடம், வெப்பம் இவை கூட அப்படித்தான்..."

சுவாமி ரகுராமசந்திரா தத்துவத்தை விளக்கிச் சொன்னபோது, கூட்டம் ஆர்வத்துடனும் கவனத்துடனும் கேட்டுக் கொண்டிருந்தது. 

அவரே ஒருமுறை, ''நீங்க என் பேச்சைக் கேக்க ஆரம்பிச்சுட்டீங்கன்னா, உங்க கவனம் என் பேச்சிலேந்து ஒரு விநாடி கூட விலகாது'' என்று சொன்னது போல், அவர் பேச்சு கேட்பவர்களைக் கட்டிப் போட்டு விடும். பேச்சில் அத்தனை தெளிவு, சுவாரஸ்யம் இருக்கும்.

அவர் பேச்சு முடிந்ததும் கூட்டம் எழுந்து செல்லத் தொடங்கியது. சிலர் எழுந்து செல்ல மனம் இல்லாதது போல் சற்று நேரம் உட்கார்ந்து விட்டுப் பிறகு அரை மனதுடன் எழுந்தனர்.

தாமதமாக எழுந்த அந்தப் பெண் கழிவறை இருக்கும் பக்கமாகச் சென்றாள். ஆனால், கழிவறைக்குச் செல்லாமல், வழியில் ஒரு இடத்தில் யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு, சட்டென்று அருகிலிருந்த ஒரு அறைக்கதவைத் திறந்து அதற்குள் நுழைந்தாள்.

உள்ளே அமர்ந்திருந்த சுவாமிஜியின் செயலாளர் மூர்த்தி, ''யாரும் பாக்கலியே?'' என்றான் பதட்டத்துடன்.

அவள் இல்லையென்று தலையாட்டினாள். மூர்த்தி அவளை அருகில் இருந்த பெரிய அறைக்கு அழைத்துச் சென்றான்.

''இது எப்படிப்பா நடந்துது?'' என்றார் சுவாமி ரகுராமச்சந்திரா கோபத்துடன்.

''தெரியல குருஜி. யாரோ கண்டுபிடிச்சு வாட்ஸ் ஆப்ல போட்டுட்டான். இன்னி சாயந்திரத்துக்குள்ள உலகம் முழுக்கப் பரவிடும்'' என்றான் மூர்த்தி.

''அயோத்தி அரசரின் பெயர் கொண்ட குருவின் ஆசிரமத்துக்கு அவ்வப்போது ஒரு பெண் வந்து விட்டுப் போகிறாராம். இது குருவுக்கும், இதற்கு ஏற்பாடு செய்யும் அவர் உதவியாளருக்கும் மட்டும்தான் தெரியுமாம். இவரை நம்பி இவர் பேச்சைக் கேட்கப் போகும் மக்களை அந்த ராமச்சந்திர மூர்த்திதான் காப்பாற்ற வேண்டும்!''

''எதுக்கு இப்ப அதை வாய் விட்டுப் படிச்சுக் காட்டற?'' என்றார் ரகுராமச்சந்திரா எரிச்சலுடன். 

''வெளிப்படையா பேர் எழுதியிருக்கான்னு பாத்தேன். அப்படி இருந்தா அவதூறு கேஸ் போடலாம். ஆனா வெளிப்படையா பேர் எழுதாமயே நீங்கதான்னு காட்டிட்டான்! சந்தேகமே இருக்கக் கூடாதுன்னு என் பேரையும் சேத்துட்டான்!'' என்றான் மூர்த்தி.

''அது சரி. இது எப்படி வெளியில வந்தது? அந்தப் பொண்ணு சொல்லியிருப்பாளா?''

''நிச்சயமா மாட்டா. அவளுக்கு இதில என்ன லாபம்? இவ்வளவு பணம் அவளுக்கு வேற யார் கொடுப்பாங்க?''

''நம்ப மூணு பேருக்குத்தானே இது தெரியும்?''

''குருஜி! அந்தப் பொண்ணு சொல்லல. நானும் சொல்லல!''

''அப்படின்னா நானே இதைச் சொல்லயிருப்பேன்னு சொல்றியா?'' என்றார் சுவாமிஜி.

''நேரடியா சொல்லியிருக்க மாட்டீங்க...''

''அப்படின்னா?''

''குருஜி! தப்பா நினைச்சுக்காதீங்க. உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?'' என்றான் மூர்த்தி.

''என்ன?''

''உங்க உபன்யாசத்தில நீங்க சொல்ற விஷயங்கள்ளாம் உண்மையா?''

''இதில உனக்கென்ன சந்தேகம்? நான் சொல்ற விஷயங்கள் எல்லாமே என் குரு எனக்கு சொல்லிக் கொடுத்தது. அவர் பெரிய ஞானி. அவர் கிட்ட கத்துக்கிட்டதை நான் சொல்றதாலதான் எனக்கு இவ்வளவு பேர் கிடைச்சிருக்கு. எனக்கு இந்த பலவீனம் இருக்கறதால நான் சொல்ற விஷயங்களோட பெருமை குறையாது'' என்றார் சுவாமி சற்று வேகத்துடன்.

''நானும் அப்படித்தான் நினைக்கிறேன் குருஜி. நீங்க பஞ்ச பூதங்களைப் பத்தி சொன்னீங்களே?''

''ஆமாம். அதுக்கு என்ன?''

''நீங்க செய்யறது உங்களுக்குள்ள இருக்கற பஞ்ச பூதங்களுக்குத் தெரியும். நம் உடம்பில இருக்கற பஞ்ச பூதங்கள் வெளியில இருக்கற பஞ்ச பூதங்களோட தொடர்பில இருக்கறதா சொன்னீங்க. அப்ப உங்க உடம்பில இருக்கிற பஞ்ச பூதங்கள் மூலமா இந்த விஷயம் வெளி உலகத்துக்குத் தெரிஞ்சிருக்கலாம் இல்லையா?''

இவன் இதை உண்மை என்று நினைத்துச் சொல்கிறானா அல்லது தன்னைக் கிண்டல் செய்கிறானா என்று புரியாமல் சுவாமிஜி மூர்த்தியைப் பார்த்தார். 

குறள் 271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

பொருள்:  
வஞ்ச மனம் உள்ளவனின் பொய்யொழுக்கத்தை அவன் உடலில் கலந்திருக்கும் ஐந்து பூதங்களும் கண்டு தமக்குள் சிரிக்கும்.

272.  பாராட்டு விழா

"இருபத்தஞ்சு வருஷம் முன்னே, ஆதரவு இல்லாதவங்களுக்கு உதவணும்னு நினைச்சு எங்கிட்ட இருந்த 1000 ரூபாயைப் போட்டு இந்த டிரஸ்டை ஆரம்பிச்சேன். இன்னிக்கு உங்களை மாதிரி டிரஸ்ட் உறுப்பினர்கள், லட்சியத்தோட வேலை செய்யற நேர்மையான ஊழியர்கள், உள்நாட்டிலேந்தும், வெளிநாட்டிலேந்தும் நமக்கு நன்கொடை கொடுத்து உதவற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் ஆகிய எல்லோரோட பங்களிப்பினாலயும் இன்னிக்கு இந்த டிரஸ்டுக்கு நூறு கோடி ரூபாய்க்கு மேல நிதி இருக்கு. அதைத் தவிர, சில லட்சங்களுக்கு நாம வாங்கின சொத்துக்களோட மதிப்பு இன்னிக்குப் பல கோடி ரூபாய் ஆகி இருக்கு. அதனால நான் மனத் திருப்தியோட ஒய்வு பெறலாம்னு நினைக்கறேன்" என்றார் நீலகண்டன்.

"நோ! நோ!" என்று பல குரல்கள் எழுந்தன.

"நீங்க இல்லாம இந்த டிரஸ்ட் இருக்கவே முடியாது சார்!" என்றார் ஒரு டிரஸ்ட் போர்ட் உறுப்பினர்.

இணை இயக்குனர் மணிகண்டன் எழுந்து, "இந்த டிரஸ்ட் ஆரம்பிச்சு 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடற  விதமா சிட்டி கிளப்ல அடுத்த மாசம் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தறாங்க அது முடிஞ்சப்புறம் உங்க முடிவைப் பத்தி யோசிக்கலாம்" என்றார்.

டிரஸ்ட் போர்ட் உறுப்பினர்கள் அனைவரும் அதை ஆமோதிக்க, போர்ட் மீட்டிங் முடிந்தது.

பாராட்டு விழா மாநில ஆளுநரின் தலைமையில் நடந்தது. 

நீலகண்டனின் சேவைகளையும், சாதனைகளையும் பாராட்டியும், அரசாங்கத்திடமிருந்து அவருக்குக் கிடைத்த பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகள் பற்றிக் குறிப்பிட்டும் பலரும் பேசினர்.

டிரஸ்ட் சார்பில் பேசிய மணிகண்டன், "இந்த டிரஸ்டின் வளர்ச்சிக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று நீலகண்டன் அவர்களின் நேர்மை. தான் நேர்மையாக இருந்தது மட்டுமின்றி மற்றவர்களும் நேர்மையாக இருக்கும்படி அவர் பார்த்துக் கொண்டார். எந்த மூலையில் எந்த ஒரு சிறிய தவறு நடந்தாலும் அவருக்குத் தெரிந்து விடும். உடனே நடவடிக்கை எடுத்து, தவறு செய்தவரை எச்சரிப்பார். தவறு பெரியதாக இருந்தால் தாட்சண்யம் பார்க்காமல் தவறு செய்தவரைப் பதவி நீக்கம் செய்து விடுவார். நானும் ஒரு டிரஸ்ட் உறுப்பினன் என்றாலும், எனக்கோ மற்றவர்களுக்கோ கண்ணில் படாத விஷயங்களை அவர் எப்படிக் கண்டு பிடித்தார் என்று பல முறை நான் வியந்திருக்கிறேன். இதற்குக் காரணம், சிறிது கூடத் தன்னலமின்றி, இது பொதுச் சேவைக்கான டிரஸ்ட், இங்கே ஒரு சிறிய தவறு கூட நடக்கக் கூடாது என்ற அர்ப்பண உணர்வுடன் அவர் செயல்பட்டதுதான்" என்றார்.

நீலகண்டன் புன்னகை செய்தார். வெளிப்படையாக மணிகண்டன் பேச்சைக் கேட்டு ரசித்து அவர் சிரித்ததாகத் தோன்றினாலும், அவரைப் பொருத்தவரை, 'இவர்களையெல்லாம் எவ்வளவு ஏமாற்றி இருக்கிறேன்!" என்ற பெருமிதத்தில் விளைந்த எகத்தாளச் சிரிப்பு அது.

டிரஸ்டின் நிர்வாகத்தில் பலர் ஈடுபட்டிருந்தும், யாருக்கும் தெரியாமல், டிரஸ்டின் ஆடிட்டரை மட்டும் கையில் போட்டுக் கொண்டு, டிரஸ்டின் நிதியில் எத்தனை கோடிகளை அவர் குடும்பத்தினருக்குச் சொந்தமான போலி நிறுவனங்களுக்கும், அவருடைய வெளி நாட்டு வங்கிக் கணக்குகளுக்கும் சாமர்த்தியமாக மாற்றியிருக்கிறார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.  

டிரஸ்டுகளுக்குச் சொத்து வாங்கும்போது, காய்கறி வாங்கும்போது கொசுறு கேட்டு வாங்குவது போல், இன்னொரு சிறிய சொத்துக்கும் சேர்த்து விலை வைத்து, டிரஸ்ட் வாங்கிய சொத்துக்கு இலவச இணைப்பாக, அந்தச் சிறிய சொத்தைத் தனக்கு நெருங்கியவர்கள் மீது சத்தமில்லாமல் பதிவு செய்து கொண்ட விவகாரங்கள் யாருக்குத் தெரியும்?

எப்போதாவது ஏதாவது சந்தேகம் வரும் போல் தோன்றினால், வேறு ஏதோ தவறு நடந்து விட்டது போல் திசை திருப்பி, யாரோ ஒரு ஊழியரைப் பலிகடா ஆக்கி, தான் எதற்காக தண்டிக்கப்படுகிறோம் என்று அவருக்குப் புரியாமலே அவர் வேலை நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களைத்தான் அவருடைய நேர்மைக்கு எடுத்துக் காட்டாக மணிகண்டன் பறை சாற்றிக் கொண்டிருக்கிறார்!

எல்லோரும் பாராட்டி முடித்த பின், நீலகண்டன் நன்றி சொல்ல எழுந்தார். கூட்டத்தைச் சுற்றிலும் பார்த்தார். தெரிந்த முகங்கள் சில. தெரியாத முகங்கள் பல. கூட்டத்தில் ஒரு முகம் மட்டும் பரிச்சயமானதாகத் தோன்றியது. யார் என்று நினைவுக்கு வரவில்லை. ஆனால் அந்த முகத்தைப் பார்த்ததும், மனதில் சங்கடமான உணர்வு தோன்றியது. ஏன் என்று தெரியவில்லை.

அனைவருக்கும் நன்றி தெரிவித்து நீலகண்டன் பேசினார். ஆனால் அவரால் பேச்சில் முழு கவனமும் செலுத்த முடியவில்லை. புதிதாக மேடையில் பேசும் நபர் போல் நிறுத்தி நிறுத்திப் பேசினார். தான் பார்த்த முகம் கூட்டத்தில் எங்கே இருக்கிறது என்று சுற்றிப் பார்த்துக் கண்டு பிடித்தார். அந்த முகத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார். 

அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, சற்று நேரத்தில் சட்டென்று நினைவு வந்து விட்டது. அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை செய்த செந்தில்!

ஒரு முறை டிரஸ்ட் நன்கொடை பெற்றதற்கான சில ரசீதுகள் கான்சல் செய்யப்பட்டிருந்தன. அவற்றைப் பற்றி அவன் அக்கவுன்ட்ஸ் மேனேஜரிடம் சொன்னபோது, அவர் அவை வேறு கணக்குகளுக்குச் செல்ல வேண்டியவை என்பதால் ஆடிட்டர் அவற்றை கான்சல் செய்து விட்டதாகச் சொன்னார். அவன் கான்சல் செய்த ரசீதுகள் ஃபைல் செய்யப்பட வேண்டும் என்பதால் அவை வேண்டும் என்று கேட்க, அவை ஆடிட்டர் வசம் இருப்பதாகவும், அவர் பார்த்துக் கொள்வார் என்றும் அக்கவுன்ட்ஸ் மானேஜர் சொல்லி விட்டார். 

ஊழியர்கள் பேசிக் கொள்வதை கவனித்துத் தன்னிடம் வந்து சொல்ல வேண்டும் என்பதற்காக ஒற்றனாக அவர் நியமித்திருந்த அவருடைய உறவினன் அவரிடம் வந்து இதைச் சொன்னான்.

சில நாட்களுக்குப் பிறகு செந்தில் பணத்தைக் கையாண்ட முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு வேலையிலிருந்து அனுப்பப்பட்டான். 

சம்பவம் நினைவு வந்ததும், நீலகண்டனுக்கு குப்பென்று வியர்த்தது. இதுவரை அவர் வேலையை விட்டு அனுப்பிய யாரும் நியாயம் கேட்கவோ வேறு எதற்குமோ திரும்ப வந்ததில்லை. தங்களுக்கு அநியாயம் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிந்தும், நிறுவனத்துடன் போராடினால் தங்களுக்கு வேறு இடங்களில் வேலை கிடைக்காமல் போய் விடும் என்று பயந்து நிர்வாகத்திடம் கெஞ்சி ஒரு நன்னடத்தைச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள். 

ஆனால் இவன் ஏன் இங்கே வந்திருக்கிறான்?  

அவனால் எதுவும் செய்ய முடியாது என்று நீலகண்டனுக்குத் தெரிந்தாலும், அவனைப் பார்த்ததால் ஏற்பட்ட பதட்டம் நீலகண்டனுக்கு நீங்கவில்லை. 

நன்றாகப் பேசக் கூடியவர் என்று அறியப்பட்ட நீலகண்டன் அன்று தடுமாற்றத்துடனும், கோர்வையின்றியும் பேசி ஒரு வழியாகப் பேசி முடித்தார்.

"இவருக்கு என்ன ஆயிற்று?" என்று வியந்த மணிகண்டன், "பாவம் ! வயதாகி விட்டது போலிருக்கிறது. அவர் விரும்பியபடி அவரை ஒய்வு பெற அனுமதித்து அடுத்த போர்ட் மீட்டிங்கில் முடிவு செய்து விட வேண்டியதுதான்!" என்று நினைத்துக் கொண்டார்.

குறள் 272
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்

பொருள்:  
தன் மனம் அறிந்து குற்றம் செய்யும்போது, வானம் போல் உயர்ந்த தவக்கோலம் அவனுக்கு என்ன பயன் தரும்?

273. சித்தானந்தா, ஷில்பா மற்றும் பலர்!


"நம் சமுதாயத்தில் பெண்கள் மிகவும் உயர்வாக மதிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் இப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன. ஒவ்வொரு ஆணும் தன் மனைவியைத் தவிர மற்ற பெண்களைத் தாயாகவோ, சகோதரியாகவோ, மகளாகவோ நினைக்க வேண்டும். இப்படி எல்லோரும் நினைக்க ஆரம்பித்து விட்டால், பெண்கள் மீது தவறான ஆசை யாருக்கும் வராது. பக்தி, யோகம், தியானம் போன்றவற்றில் ஈடுபட்டால் இந்த மனநிலையைப் பெறுவது எளிதாக இருக்கும்..."

ஆத்திரத்துடன் ஷில்பா டிவி ரிமோட்டை படக்கென்று அழுத்தி டிவியை நிறுத்தினாள்.

"செய்யறது அயோக்கியத்தனம். பேசறது மட்டும் பெரிய புனிதன் மாதிரி. காவி கட்டிய காலிப் பய!" என்றாள் அவள் கோபத்துடன்.

"உன்னோட அட்மைரரைப் பற்றி அப்படியெல்லாம் பேசாதேடி!" என்றாள் அவள் தோழி நிஷா சிரித்தபடியே.

"இது சிரிக்கிற விஷயம் இல்லடி. இவன் செஞ்ச அயோக்கியத்தனத்தை வெளியில சொல்லாம விட்டது என் மேல தப்பு. பெண்கள் கிட்ட தப்பா நடந்துக்கிட்டு இப்படியெல்லாம் பேசினா ஆத்திரம்தான் வருது."

"என்ன செய்யப் போற? இது நடந்து அஞ்சாறு மாசம் ஆயிடுச்சு. அதோட போலீஸ்ல புகார் கொடுத்தாலும், என்ன ஆதாரம்னு கேப்பாங்க."

"போலீசுக்குப் போகப் போறதில்ல. வேற ஒண்ணு செய்யப் போறேன்."

"என்ன செய்யப் போற?"

"இப்ப 'மீ டூ' ன்னு ட்வீட்டர் டாக் ஒண்ணு வந்திருக்கில்ல அதில என்னோட அனுபவத்தை எழுதப் போறேன். அப்பதான் இவன் ஒரு அயோக்கியன்னு ஊருக்கெல்லாம் தெரியும்."

"யோசிச்சுப் பண்ணுடி. இதனால உனக்கும் பாதிப்பு வரும். உனக்கு எதுவும் நடக்கலேன்னாலும், நாலு பேர் உன்னைப் பத்தியும் தப்பா சொல்லுவாங்க.."

"அதைப் பத்தி நான் கவலைப்படல" என்றாள் ஷில்பா.

"ஆறு மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் என் தாய் தந்தை இருவரும் இறந்து விட்டனர். அப்போது விரக்தி அடைந்து மன அமைதி கிடைக்குமென்று நம்பி சித்தானந்தாவின் ஆசிரமத்துக்குச் சென்றேன். அவரிடம் என் வேதனையைச் சொன்னேன். மன அமைதி பெற ஒரு தியானம் கற்றுக் கொடுப்பதாகச் சொல்லி சித்தானந்தா என்னை ஒரு அறைக்கு அழைத்துப் போனார். அங்கே என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். எப்படியோ நான் தப்பி ஒடி வந்து விட்டேன். இப்போது அவர் பெண்களைத் தாயாகவும், சகோதரியாகவும், மகளாகவும் நினைக்க வேண்டும் என்று தொலைக்காட்சியில் பேசியதைக் கேட்டதும், அவருடைய வேஷத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்று நினைத்து இந்த உண்மையை இப்போது உலகுக்குத் தெரிவிக்கிறேன்."

ஷில்பாவின் 'மீ டூ' பதிவு பெரிய அளவில் பிரபலமாகி சர்ச்சையைக் கிளப்பியது.

சித்தானந்தா ஊடகச் செய்தியாளர்களைத் தன் ஆசிரமத்துக்கு அழைத்து விளக்கம் அளித்தார்.

"அக்கினிப் பிரவேசம் செய்த பிறகு கூட சீதை மீது அவதூறு சொன்னார்கள். கிருஷ்ண பரமாத்மாவின் மீதே ஸ்யமந்தக மணியைத் திருடியதாகக் குற்றம் சாட்டினார்கள். விப்ரநாராயணர் போன்ற பல பக்தர்கள் மீது திருட்டுப் பட்டம் கட்டப்பட்ட வரலாறுகள் உண்டு. இப்போது நானும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். மீ டூ! என் உண்மையான பக்தர்கள் இது போன்ற பொய்களை நம்ப மாட்டார்கள்."  

இதைச் சொல்லி விட்டு, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்து சித்தானந்தா எழுந்து உள்ளே போய் விட்டார். 

சித்தானந்தாவின் மறுப்பு வெளியான இரண்டு நாட்களுக்குப் பிறகு 'மீ டூ' வில் இன்னொரு பதிவு வந்தது. "சித்தானந்தாவின் கற்பழிப்பு முயற்சியிலிருந்து சகோதரி ஷில்பா தப்பி விட்டார். ஆனால் என்னால் தப்பிக்க முடியவில்லை. இதை வெளியில் சொல்ல அவமானப்பட்டு இத்தனை காலம் மௌனமாக இருந்தேன். ஆனால் அவர் தான் பெரிய உத்தமன் என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்றும் சொன்ன பிறகு, எனக்கு அவமானம் நேர்ந்தாலும் பரவாயில்லை, இந்தப் போலிச் சாமியாரின் உண்மை முகத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று முடிவு செய்து இப்போது இதைச் சொல்கிறேன்" என்று இன்னொரு பெண் பதிவு செய்திருந்தாள்.

இதைத் தொடர்ந்து, சீட்டுக்கட்டில் ஒரு சீட்டு கீழே விழுந்ததும் அதைத் தொடர்ந்து இன்னும் பல சீட்டுக்கள் சரிந்து விழுவது போல், மேலும் பல பெண்களிடமிருந்து இது போன்ற பதிவுகள் வெளியாக ஆரம்பித்தன.

சித்தானந்தாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகச் செய்தி வெளியிட்ட பெண்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கைத் தண்டி மூன்று இலக்கங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தது!

"என்னடி, நீ ஒரு பந்தைத் தூக்கிப் போட்டதும் வரிசையா பந்து வந்து விழுந்துக்கிட்டே இருக்கே?" என்றாள் நிஷா.

"அவன் ஒரு வேஷதாரி. சினிமாவில எல்லாம் வருமே! வேஷம் போட்டவனுக்கு ஓரமா மீசை பிஞ்சு வரும், இல்லேன்னா டோப்பா கழன்று விழும். அதை வச்சு அவன் வேஷம் போட்டிருக்கான்னு கண்டு பிடிச்சுடுவாங்க. அது மாதிரிதான் இவன் விஷயத்திலேயும் நடந்திருக்கு. இவன் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி. நான் அந்தப் பசுத்தோலைக் கொஞ்சம் கிழிச்சு உள்ளே இருக்கற புலியோட வரிகளை வெளியில காட்டினேன். இப்ப எல்லாருமா சேர்ந்து அவன் போர்த்தியிருந்த பசுத்தோலை மொத்தமா கிழிச்செறிஞ்சுட்டு அவன் ஒரு புலிதான்னு காட்டிட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்ற ஷில்பா, வாய் விட்டுச் சிரித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

குறள் 273
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

பொருள்:  
 மனத்தை அடக்க முடியாதவன் வலுவாக ஏற்படுத்திக் கொண்ட தவக்கோலம், பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போல் ஆகும்.

274. நல்லவன், எனக்கு நானே நல்லவன்!

சுந்தரேசனுக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். அந்த அலுவலகத்தில் அவன் ஒரு மூத்த ஊழியன். திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருந்ததால் திருமணத்தில் அவனுக்கு ஈடுபாடு இல்லை. அப்பா அம்மாவே உலகம் என்று வாழ்ந்து கொண்டிருந்தான்.

அலுவலகத்தில் நீண்ட காலமாகப் பணி புரிபவன் என்பதாலும், ஒரு முனிவரைப் போல வாழ்ந்து வந்தவன் என்பதாலும், அலுவலகத்தில் அவன் மீது எல்லோருக்கும் மரியாதை உண்டு. 

சுந்தரேசனுக்குப் பதவி உயர்வு வந்தபோது அவன் அதை வேண்டாம் என்று சொல்லி விட்டான். அலுவலகத்தில் அதிகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் அது தன் ஆன்மீகத் தேடலுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று காரணம் சொன்னான். 

அலுவலகத்தில் அவன் ஒரு உதவியாளன்தான் என்றாலும் அவன் மேலதிகாரிகள் கூட அவனிடம் மரியாதையாக நடந்து கொண்டார்கள். அவனுக்கு நெருக்கமான சில நண்பர்கள் மட்டும் அவனை உரிமையுடன் 'டேய் சாமியார்!' என்று கூப்பிடுவார்கள். 

வார இறுதி நாட்களில் மற்ற ஊழியர்கள் சினிமா, மால், ரிஸார்ட், பிக்னிக் என்று உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கும்போது, சுந்தரேசன் பெற்றோருடனோ, தனியாகவோ கோவில், குளம் என்று போய் விடுவான். அல்லது ஏதாவது ஆசிரமத்துக்குப் போய் இரண்டு நாள் இருந்து சேவை செய்து விட்டு வருவான்.

"என்ன சாமியாரே, இந்த வீக் எண்ட்ல எங்கே போயிருந்தீங்க?" என்றான் முருகன். 

"சனிக்கிழமை என் அம்மாவுக்குப் பிறந்த நாள். அதனால வீட்டில ஒரு ஹோமம் பண்ணினோம்" என்றான் சுந்தரேசன். 

"எங்களையெல்லாம் கூப்பிடலியே!" என்றாள் சாந்தி.

"யாரையுமே கூப்பிடல! அப்பா, அம்மா, ஹோமம் செஞ்ச சாஸ்திரிகள், நான் நாலு பேர்தான். வழக்கமான எளிமையான சமையல்தான். அப்பாவுக்கு டயாபிடிஸ் இருக்கறதால பாயசம் கூடப் பண்ணல."

"எங்களைக் கூப்பிட்டிருக்கலாமே சார்! நாங்க உங்கம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருப்போமே!" என்றாள் கிருத்திகா. அவள் அந்த அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள்.

"ரெண்டு மூணு மாசத்துல என் அப்பா பிறந்த நாள் வரும். அப்ப உங்களை மட்டும் கூப்பிடறேன்!" என்றான் சுந்தரேசன் சிரித்தபடி.

மற்றவர்கள் யாரும் எதுவும் சொல்லாதபோது, தான் அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசி விட்டோமோ என்று நினைத்த கிருத்திகா, "சாரி சார்! விளையாட்டுக்குக் கேட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க!" என்றாள் கிருத்திகா.

"நான் எதையுமே தப்பா நினைக்க மாட்டேன். நீங்க சொன்னது நல்ல யோசனைதான். வீட்டில ஹோமம் பண்றப்ப ஆஃபீஸ் நண்பர்களைக் கூப்பிட்டிருக்கலாம். நீங்க சொன்னப்பறம்தான் எனக்கே தோணுது. அடுத்த தடவை எல்லாரையும் கூப்பிடறேன்" என்றான் சுந்தரேசன். 

"தாங்க்ஸ் சார்!" என்றாள் கிருத்திகா.

'எதற்கு?' என்பது போல் சுந்தரேசன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.

ன்று மதிய உணவு இடைவேளையின்போது, தனிமையில் அமர்ந்திருந்த கிருத்திகாவிடம் வந்த ரேவதி, "கிருத்திகா! உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!" என்றாள். அந்த அலுவலகத்தில் கிருத்திகா அதிகம் நெருங்கிப் பழகுவது ரேவதியிடம்தான்.

சுற்றுமுற்றும் பார்த்து யாருமில்லை என்று நிச்சயம் செய்து கொண்ட பின், "சுந்தரேசன் அவ்வளவு நல்லவன் இல்ல. அவன் இன்னிக்கு உன்னைப் பார்த்த பார்வை சரியில்ல. ஜாக்கிரதையா இருந்துக்க" என்றாள் ரேவதி.

"என்ன ரேவதி இப்படிச் சொல்றிங்க? அவரை அவன் இவன்னு வேற பேசறீங்க!" என்றாள் கிருத்திகா.

"நான் சொல்றதை நல்லா கேட்டுக்க. அவன் சாமியார் வேஷத்தை நம்பாதே. ஒரு தடவை நம்ப ஆஃபீஸ்ல வேலை செய்யற ஒரு பெண்ணை அவன் ஏதோ காரணம் சொல்லித் தன் வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கான். வீட்டில அவன் பெற்றோர் இருப்பாங்கன்னு நம்பி அவளும் போயிருக்கா. ஆனா அவன் பெற்றோர் அப்ப வீட்டில இல்ல. அந்தப் பெண்ணை அவன் பலாத்காரம் செஞ்சிருக்கான். அவளால ஒண்ணும் செய்ய முடியல. வெளியில சொல்லவும் முடியல."

"யார் அந்தப் பொண்ணு?" என்றாள் கிருத்திகா.

"அது யார்னு நான் சொல்லக் கூடாது. இந்த ஆஃபீஸ்ல வேலை செய்யற பல பெண்கள்ள ஒரு பெண். நான் உனக்கு ஃபிரண்டுங்கறதால அவங்கதான் இந்த விஷயத்தை எங்கிட்ட சொல்லி உன்னை எச்சரிக்கச் சொன்னாங்க" என்றாள் ரேவதி.

"என்னால இதை நம்ப முடியலே! அவர் அப்படிப்பட்டவரா இருக்க மாட்டாரு!" என்றாள் கிருத்திகா.

'அந்தப் பெண் நான்தாண்டி!' என்று கூவ  வேண்டும் போல் இருந்தது ரேவதிக்கு. "அவங்களுக்கு நடந்த மாதிரி இன்னும் சில பேருக்குக் கூட நடந்திருக்கறதா அவங்க சொன்னாங்க. எல்லாருமே இதை வெளியில சொல்ல முடியாம புழுங்கிக்கிட்டிருக்காங்க. ஜாக்கிரதையா இருந்துக்க. அவன் வீட்டுக்குக்  கூப்பிட்டா போயிடாதே!" என்றாள்

"சரி ரேவதி" என்றாள் கிருத்திகா. ஆனால் அவளால் ரேவதி சொன்னதை நம்ப முடியவில்லை.

வெள்ளிக்கிழமை மாலை கிருத்திகா தன் சீட்டில் தனியே இருந்தபோது அங்கே வந்த சுந்தரேசன், "கிருத்திகா, என் அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கணும்னு நீங்க சொன்னதை என் அம்மா கிட்ட சொன்னேன். இந்தக் காலத்தில இப்படி ஒரு பெண்ணான்னு என் அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. உங்களைப் பாக்கணும்னு சொன்னாங்க. நாளைக்கு லஞ்ச்சுக்கு என் வீட்டுக்கு வரீங்களா? நீங்க விரும்பினபடி என் அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கலாம். உங்க வீட்டிலேந்து கிளம்பறப்ப எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் அட்ரஸ் சொல்றேன். உங்களுக்கு மட்டும்தான் இந்த அழைப்பு. ஆஃபீஸ்ல யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். இந்தாங்க என் ஃபோன் நம்பர்" என்று அவள் கையில் ஒரு துண்டுச் சீட்டை வைத்தான் சுந்தரேசன்.

குறள் 274
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

பொருள்:  
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவத்துக்கு மாறான செயல்களில் ஈடுபடுதல் ஒரு வேடன் புதரில் மறைந்து கொண்டு பறவைகளை வஞ்சமாகப் பிடிப்பதற்கு ஒப்பாகும்.
275. ஐம்பதில் வந்த ஆசை!

முருகானந்தத்துக்குத் தன் ஐம்பதாவது வயதில் அந்த ஆசை வந்தது. ஆசைகளைத் துறக்க வேண்டும் என்ற ஆசை!

தன் மனைவியிடம் சொன்னார். "நான் சந்நியாசி ஆகலாம்னு பாக்கறேன்!"

அவர் மனைவி சரளா பெரிதாகச் சிரித்து விட்டு, "என்னவோ ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்ற மாதிரி சொல்றீங்க!" என்றாள்.  

"இல்ல சரளா. சந்நியாசின்னா உங்களையெல்லாம் விட்டுட்டுக் காட்டுக்குப் போறது இல்ல. அது எப்படி முடியும்? அத்தியாவசியமான விஷயங்களைத் தவிர மத்த விஷயங்கள்ள உள்ள ஈடுபாட்டை விட்டுட்டு, அதிக நேரம் பக்தி, தியானம் மாதிரி விஷயங்கள்ள ஈடுபடலாம்னு நினைக்கிறேன்."

"எதையெல்லாம் விடப் போறீங்க?"

"சாப்பாட்டு ஆசையை விடப் போறேன். குறைவா, எளிமையா, தேவையான அளவுக்கு மட்டும் சாப்பிடப் போறேன். நொறுக்குத் தீனி, காஃபி, டீ, கூல் டிரிங் மாதிரி பானங்கள் எதுவும் கிடையாது. பத்திரிகைகள், புத்தகங்கள் படிக்கிறது, டிவி, சினிமா, டிராமா, கச்சேரி, நண்பர்களோட அரட்டை அடிக்கிறது எல்லாத்தையும் விட்டுடப் போறேன். நியூஸ் பேப்பரை மட்டும் மேலோட்டமாப் படிச்சுட்டு நாட்டு நடப்பைத் தெரிஞ்சுக்கறதோட நிறுத்திக்கப் போறேன்."

"எங்கிட்ட, குழந்தைங்க கிட்டல்லாம் பேசுவீங்க இல்ல?" என்றாள் சரளா, பாதி விளையாட்டாகவும், பாதி கவலையுடனும்.

"சேச்சே! அதான் சொன்னேனே! பழைய காலம் மாதிரி குடும்பத்தை விட்டுட்டு சந்நியாசியாகறதெல்லாம் இப்ப முடியாதுன்னு."

"ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க? எனக்கென்னவோ பயமா இருக்கு!"

"பயப்படறதுக்கெல்லாம் எதுவும் இல்ல. என்னவோ தோணிச்சு, அம்பது வயசாச்சே. எல்லாப் பற்றுக்களையும் விட்டுட்டு, மனசளவிலேயாவது துறவியா இருக்கலாமேன்னு!"

"நாற்பது வயசில நாய் குணம்பாங்க. அம்பது வயசில அரைப் பைத்தியம் பிடிக்கும் போலருக்கு!" என்றாள் சரளா சற்றுக் கோபத்துடன்.

"என்னைக் கோபப்பட வைக்கலாம்னு பாக்கற! ஆனா நீ என்ன சொன்னாலும் நான் கோபப்பட மாட்டேன். பற்றுக்களை விட்டவனுக்குக் கோபதாபமெல்லாம் எப்படி இருக்க முடியும்? கவலைப்படாதே. உன்னையும், குழந்தைகளையும் பொருத்தவரை என் கடமைகளை சரியாச் செய்வேன்" என்றார் முருகானந்தம்.

தற்குப் பிறகு முருகானந்தம் தான் சொன்னபடியே நடந்து கொள்ள ஆரம்பித்தார். சரளாவுக்கே வியப்பாக இருந்தது எப்படி இவர் தன்னை மாற்றிக் கொண்டார் என்று. அவர் அலுவலக நண்பர்களும், பிற நண்பர்களும் கூட அவருடைய மாற்றத்தைக் கண்டு வியந்தனர். 

அலுவலக நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் கோவில்கள், ஆசிரமங்கள் என்று செல்வது, ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்பது என்று வழக்கப்படுத்திக் கொண்டார். 

ஒரு ஆசிரமத்தில் உறுப்பினரான பின், வார இறுதி நாட்கள் முழுவதையும் அவர்கள் ஆசிரமத்தில் கழிப்பது, சில சமயம் ஆசிரமப் பணிக்காக வெளியூர் செல்வது என்ற பழக்கங்கள் ஏற்பட்டன. சரளாவைத் தன்னுடன் வரும்படி அவர் சிலமுறை அழைத்தபோதும், அவள் வர மறுத்து விட்டாள்.

சிரம வேலையாக வெளியூர் சென்றபோதுதான் அவர் விமலாவைச் சந்தித்தார். விவாகரத்தாகித் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்த விமலாவுடன் ஏற்பட்ட  அறிமுகம் நட்பாக மாறி, இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது.

துவக்கத்தில் ஆன்மீக விஷயங்களை மட்டும் பேசிக் கொண்டிருந்தவர்கள், பிறகு மற்ற விஷயங்களையும் பேசத் தொடங்கினர். ஒருமுறை அவர் விமலாவின் வீட்டுக்குச் சென்றபோது, அவள் படுக்கை அறை வரை சென்று விட்டு வந்த அனுபவம் இருவரிடையே இருந்த நட்பை உறவாக மாற்றி விட்டது.

பிறகு விமலாவுடன் இருப்பதற்காகவே ஒவ்வொரு வார இறுதியிலும் முருகானந்தம் வெளியூர் செல்லத் தொடங்கினார். விமலாவின் வீட்டுக்குச் செல்வது அல்லது அவளுடன் சேர்ந்து வேறு ஊருக்குச் செல்வது என்று பழக்கமாயிற்று. 

விமலாவுடன் இருந்தபோது அவர் உணவுக் கட்டுப்பாடு எதையும் பின்பற்றவில்லை என்பதுடன், விமலாவிடம் இருந்த மதுப் பழக்கத்தையும்  பின்பற்றத் தொடங்கினார்!

ரளாவின் கைபேசி ஒலித்தது. ஏதோ புதிய எண்! யாராக இருக்கும் என்று யோசித்தபடியே விமலா அதை எடுத்துப் பேசினாள்.

"நீங்க முருகானந்தத்தின் மனைவியா?"

"ஆமாம், நீங்க யாரு?"

"நாங்க டிராஃபிக் போலீஸ். உங்க கணவர் முருகானந்தம் போன கார் ஒரு மரத்தில மோதி அவர் நினைவில்லாம இருக்காரு. பதட்டப்படாதீங்க. அவருக்கு லேசான அடிதான். கார் ஓட்டின பெண்ணுக்குத்தான் கொஞ்சம் அதிகமா அடிபட்டிருக்கு. அவங்க குடிச்சுட்டு கார் ஒட்டி இருக்காங்க" என்றவர் கொஞ்சம் தயங்கி விட்டு, "உங்க வீட்டுக்காரரும் குடிச்சிருப்பாரு போலருக்கு!" என்றார்.

"என்ன சொல்றீங்க? அவரு அப்படிப்பட்டவர் இல்ல!" என்றாள் சரளா உரத்த குரலில். 

"இல்லம்மா. நான் பாத்ததைத்தான் சொல்றேன். ஆஸ்பத்திரி விலாசத்தை உங்களுக்கு மெஸேஜ் பண்றேன். சீக்கிரம் வாங்க" என்றார் போலீஸ் அதிகாரி. 

"என் நம்பர் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது?" என்றாள் சரளா.

"அவர் ஃபோன்ல ஒயிஃப் என்கிற பேர்ல உங்க நம்பர் இருந்தது. அதான் கூப்பிட்டேன்" என்றவர், "ஆனா எங்களுக்குக் கொஞ்சம் குழப்பமாத்தான் இருந்தது" என்றார்.

"என்ன குழப்பம்?"

"காரை ஓட்டிக்கிட்டு வந்த பெண்மணியோட செல்ஃபோன்ல உங்க கணவரும் அவங்களும் நெருக்கமா இருக்கற ஃபோட்டோல்லாம் இருந்தது. அதனால அவங்கதான் அவர் மனைவின்னு முதல்ல நினைச்சோம். அப்புறம் அவர் ஃபோன்ல மனைவிங்கற பேர்ல உங்க நம்பர் இருந்தது! ஆமாம், அவங்க யாரு?".
குறள் 275
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.

பொருள்:  
தங்களைப் பற்று இல்லாதவர்கள் என்று சொல்லிக் கொண்டு, ஒழுக்கம் தவறி வாழ்பவர்கள் ஏன் இப்படிச் செய்தோம் என்று வருந்தும் நிலை வரும்.

276. பரமகுருவின் மனக்குறைகள் 

பரமகுரு தற்செயலாகக் காலண்டரைப் பார்த்தபோதுதான் அவருக்கு நினைவுக்கு வந்தது. தேதி மூன்று ஆகி விட்டதே! இன்னும் ஏன் கௌதம் பணம் அனுப்பவில்லை?  

கைபேசியை எடுத்துக் குறுஞ்செய்திகளைப்  பார்த்தார். பண வரவு நிகழ்ந்திருப்பதற்கான செய்தி எதுவும் வரவில்லை. 

மணி மாலை 6. நியூஜெர்ஸியில் காலை 8.30 இருக்கும். கௌதம் அநேகமாக வீட்டிலிருந்து அலுவலகத்துக்குக் கிளம்பியிருக்க மாட்டான்.

வாட்ஸ் ஆப்பில் கௌதமை அழைத்தார். முதல் அழைப்பின்போது அவன் ஃபோனை எடுக்கவில்லை. ஒருவேளை காரில் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருப்பானோ?

அரை மணி நேரம் கழித்து மீண்டும் அழைத்தார். ஃபோன் உடனே எடுக்கப்பட்டது.

"என்னப்பா?" என்றான் கௌதம் எரிச்சலுடன். "டிரைவ் பண்ணிக்கிட்டிருக்கேன். 9 மணிக்கு மேல ஃபோன் பண்ணக் கூடாதா?" 

"இந்த மாசம் இன்னும் பணம் அனுப்பலியே நீ?" என்றார் பரமகுரு.

"ஆஃபீசுக்குப் போய்க்கிட்டிருக்கேன். போனதும் உடனே டிரான்ஸ்ஃபர் பண்ணிடறேன். இப்ப டிராஃபிக் சிக்னல்ல நிக்கறேன். இப்ப கிரீன் வந்துடுச்சு" என்று இணைப்பைத் துண்டித்தான் கௌதம்.

'மாசம் 7,000 டாலர் சம்பாதிக்கிறான். 5 லட்சம் ரூபாய்! அப்பாவுக்கு அனுப்பற பிச்சைக்காசு 25,000 ரூபாயை ஒண்ணாம் தேதி அனுப்பினா என்ன? பொறுப்பில்லாத பய!'

"உன் அம்மா போனதும் தனியே இருக்கிறேன். சமையல்காரன் ஏதோ சமைத்துப் போடுவதைக் கடனே என்று தின்று விட்டுக் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது வரும் திடீர்ச் செலவுகளுக்குப் பணம் போதவில்லை. தீர்த்த யாத்திரை எல்லாம் வேறு போக வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். நீ அனுப்பும் 25,000 ரூபாய் போதவில்லை. அடுத்த மாதத்திலிருந்து 50,000 ரூபாய் அனுப்பு!" என்று வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி அனுப்பினார்.

கேட்டதற்கு 5,000 ரூபாயாவது அதிகம் அனுப்புவான். கிடைத்த வரை லாபம்தான்! 

மையற்காரர் மணி வந்தார். "ராத்திரிக்கு டிஃபன் பண்ணி வச்சுட்டேன். வீட்டுக்குக் கிளம்பறேன்" என்றார்.

"என்ன டிஃபன் பண்ணி இருக்கே?"

"நீங்க சொன்னபடி வெஜிடபிள் உப்மா, பெஸரட், சாம்பார்."

"சட்னி அரைக்கலியா?"

"இல்லை" என்றார் மணி தயக்கத்துடன்.

"ஏன்யா நீ என்ன எனக்கு அன்னதானமா செய்யற? என் வீட்டு சாமான்களை வச்சு சமைக்கற. கொஞ்சம் சட்னி அரைச்சா என்ன? ரெண்டு நிமிஷம் கூட ஆகாது. பெண்டாட்டி போனப்பறம் துறவி மாதிரி வாழ்ந்துக்கிட்டிருக்கேன். கொஞ்சம் வாய்க்கு ருசியா சாப்பிடக் கூட முடியல!" என்று அலுத்துக் கொண்டார் பரமகுரு.

"சரி சார். அரைச்சு வச்சுட்டுப் போறேன்."

"சரி. நாளைக்கு என்ன சமைக்கப் போற?"

"காலையில பொங்கல், ரவா தோசை. மத்தியானத்துக்கு பூசணிக்காய் சாம்பார், வாழைக்காய் கறி, புடலங்காய் கூட்டு, மைசூர் ரசம். வழக்கம் போல அப்பளமும் பொரிச்சுடறேன்."

"அதோட கொஞ்சம் கேரட் துருவி தேங்காய் கலந்து வச்சுடு. ஃபிரிட்ஜ்ல பாதி பழுத்த மாங்கா ரெண்டு இருக்கு. அதைத் திருத்தி வெல்லப் பச்சடி செஞ்சுடு."

"சரி சார்!"

"சிப்ஸ், காரா சேவு, ஓமப்பொடியெல்லாம் தீந்து போச்சு. அதெல்லாமும் கொஞ்சம் பண்ணி வச்சுடு. மத்தியானம் பசிக்குது. கொரிக்க ஏதாவது வேண்டியிருக்கு."

"சரி சார்! கிளம்பறேன்" என்றார் சமையற்காரர், நின்று கொண்டிருந்தால் பட்டியல் இன்னும் நீளும் என்று பயந்தபடியே.

ரவு 9 மணிக்கு பரமகுருவைப் பார்க்க அவர் நண்பர் செல்வரங்கம் வந்தார். இருவருக்குமே இரவில் தூக்கம் வராது என்பதால் இருவரும் 11 மணி வரை உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

"என்னப்பா, சாப்பாடு ஆச்சா?" என்றார் செல்வரங்கம்.

"ஆச்சு. எனக்கென்ன, துறவி வாழ்க்கைதானே? சாப்பாடு என்ன சாப்பாடு! கடனேன்னு எதையோ சமைச்சு வச்சுட்டுப் போறான். நானும் பசியைப் போக்கிக்கணுமேன்னு அதைத் தின்னுட்டு வாழ்ந்துக்கிட்டிருக்கேன்!" என்றார் பரமகுரு.

குறள் 276
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

பொருள்:  
மனதுக்குள் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வஞ்சனை செய்து வாழ்பவர் போல் இரக்கமற்றவர் யாருமில்லை.

277. இன்று போய் நாளை வா!

புதிதாக வந்திருக்கும் அதிகாரியைப் பற்றி அனைவரும் அவ்வளவு உயர்வாகப் பேசியதைக் கேட்டதும் வடிவேலுவுக்கு அவரைப் பார்த்துத் தன் கோரிக்கையை வைக்கும் எண்ணம் தோன்றியது. அவரைப் பார்த்து முறையிட அரசு அலுவலகத்துக்குச் சென்றார்.

இதற்கு முன்பு இருந்த அதிகாரியைப் பார்க்க எத்தனையோ முறை அவர் இதே அலுவலகத்துக்கு வந்து அதிகாரியைப் பார்க்க முடியாமலே திரும்பி இருக்கிறார். பின்பு ஒருமுறை மூன்று நாட்கள் தொடர்ந்து வந்த பிறகு அதிகாரியைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.

தன் முதியோர் ஓய்வூதியக் கோரிக்கை பல மாதங்களாகப் பரிசீலிக்கப்படாமல் இருப்பதை அவரிடம் சொல்லி முறையிட்டபோது, "பார்க்கிறேன்" என்று சொன்னார் அவர். அதோடு சரி.

அதற்குப் பிறகு பல மாதங்கள் ஓடி விட்டன. அவர் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பது கூடத் தெரியவில்லை. அதற்குப் பிறகு மறுபடி அவரால் அந்த அதிகாரியைச் சந்திக்க முடியவில்லை.

ப்போது வந்திருக்கும் புதிய அதிகாரி மக்களை மதித்து அக்கறையுடன் செயல்படுபவர் என்று கேள்விப்பட்டு மீண்டும் நம்பிக்கையைத் துளிர்க்க வைத்துக் கொண்டுதான் அவரைப் பார்க்க வந்தார் வடிவேல். 

அரை மணி நேரத்தில் அவரால் அதிகாரியைப் பார்க்க முடிந்தது. இவ்வளவு சுலபமாக, இவ்வளவு விரைவாக அதிகாரியைப் பார்க்க முடிந்ததே வடிவேலுவுக்கு இன்ப அதிர்ச்சி.

வடிவேலு சொன்னதைப் பொறுமையுடன் கேட்ட அதிகாரி மாசிலாமணி, "முதல்ல உங்களுக்கு ஏற்பட்ட கால தாமதத்துக்கும், சிரமத்துக்கும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்" என்றார்.

உதவியாளரைக் கூப்பிட்டு ஃபைலைத் தேடச் சொன்னார் மாசிலாமணி.

"சார்! அது பழைய கேஸ். தேடி எடுக்கப் பல நாள் ஆகும்" என்றார் உதவியாளர்.

மறுபடி கால தாமதம் ஆகப் போகிறது என்று வடிவேலு விரக்தியுடன் நினைத்தபோதே, "என்ன செய்வீங்களோ தெரியாது. நாளைக்குக் காலையில ஃபைல் என் மேஜைக்கு வரணும்!" என்று உதவியாளரிடம் சற்றே கடுமையான குரலில் சொன்ன மாசிலாமணி வடிவேலுவிடம் திரும்பி, "சார்! நீங்க நாளைக்கு பத்து மணிக்கு வாங்க. உங்க ஃபைலைத் தேடி வைக்கிறேன். மறுபடி வரச் சொல்றதுக்கு மன்னிச்சுக்கங்க: என்றார் வடிவேலுவிடம்.

"என்ன சார் இது!" என்றார் வடிவேலு சங்கடத்துடன்.

றுநாள் வடிவேலு அலுவலகத்துக்கு வந்தபோது, அதிகாரியைப் பார்க்கப் பெரிய கூட்டம் காத்திருந்தது. இன்று அவரைப் பார்க்க முடியுமா என்று வடிவேலுவுக்குக் கவலையாக இருந்தது. உதவியாளரிடம் சென்று கேட்டால் சரியான பதில் வரும் என்று அவருக்கு நம்பிக்கையில்லை. 

ஒவ்வொருவராக அதிகாரியின் அறைக்குள் அழைக்கப்பட்டனர். தான் அதிகாரியைப் பார்க்க சில மணி நேரங்களாவது ஆகும் என்று நினைத்து வடிவேலு அமர்ந்திருந்தார். 

ஏதோ வேலையாக தன் அறையை விட்டு வெளியே வந்த மாசிலாமணி வடிவேலுவைப் பார்த்ததும் சற்று நின்றார். பிறகு அவரை அடையாளம் கண்டு கொண்டவராக அவரிடம் வந்து, "உங்க ஃபைல் என் மேஜைக்கு வந்திருக்கான்னு பாத்து சொல்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்றார்.

பிறகு தன் அறைக்குள் போய் விட்டு சில நிமிடங்களில் வெளியே வந்தவர் வடிவேலுவிடம் வந்து, "சார்! உங்க ஃ பைலைத் தேடி எடுத்துட்டாங்க. அரசாங்க நடைமுறைப்படி ஒரு ஃபைலை ப்ராசஸ் பண்ணக் கொஞ்ச நாள் ஆகும். இன்னும் பதினைஞ்சு நாள்ள உங்களுக்கு சாங்ஷன் பண்ற மாதிரி ஏற்பாடு செய்யறேன்" என்று சொல்லி, ஆறுதல் கூறுவது போல் அவர் கைகளைப் பிடித்துச் சொல்லி விட்டுத் தன் அறைக்குள் போனார்.
"இப்படி ஒரு மனிதரா!" என்ற மலைப்பு ஏற்பட்டது வடிவேலுவுக்கு. 

ருபது நாட்கள் ஆகியும் தனக்குக் கடிதம் எதுவும் வராததால் மீண்டும் அந்த அரசு அலுவலகத்துக்குப் போனார் வடிவேலு.

இந்த முறையும் அவரால் மாசிலாமணியை உடனே சந்திக்க முடிந்தது. 

"இன்னுமா உங்களுக்கு சாங்ஷன் ஆகல?" என்று கேட்ட அதிகாரி, உதவியாளரை அழைத்து அவரிடம் ஏதோ கேட்டார். ஆனால் இந்த முறை அவர்கள் மெதுவாகப் பேசிக் கொண்டதால் வடிவேலுவுக்கு அவர்கள் என்ன பேசினார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. 

உதவியாளரை அனுப்பி விட்டு, வடிவேலுவிடம், "சார்! ஒரு சின்ன பிரச்னை. இந்த ஆஃபீஸ்ல இந்த வருஷம் எவ்வளவு ஓய்வூதியம் சாங்ஷன் பண்ணலாம்னு அரசாங்கம் ஒரு தொகை ஒதுக்கி இருக்கு. அந்த கோட்டா முடிஞ்சு போச்சு. கூடுதல் தொகை ஒதுக்கச் சொல்லிக் கேட்டிருக்கோம். அரசாங்கத்திலேந்து சாங்ஷன் வரணும்!" என்றார் மாசிலாமணி. 

"நீங்கதானே சார் அரசாங்கம்?"

"அது சரிதான். ஆனா டிபார்ட்மென்ட்ல எங்களுக்கு ஒத்துக்கற தொகை எவ்வளவோ அவ்வளவுதான் நாங்க சாங்ஷன் பண்ண முடியும்."

"நீங்க கேட்ட கூடுதல் ஒதுக்கீடு எப்ப சார் வரும்?"

"அது அரசாங்கத்தோட நிதி நிலைமையையும், மேல இருக்கறவங்க முடிவையும் பொருத்தது, நாளைக்கே வரலாம். அல்லது இந்த வருஷம் அவ்வளவுதான்னு சொன்னாலும் சொல்லலாம்!"

"அப்ப..."

"கவலைப்படாதீங்க. சீக்கிரமே நல்லது நடக்கும்" என்றார் மாசிலாமணி. 

வடிவேலு வெளியே வந்தார். அலுவலகத்திலிருந்து வெளியே வந்து சாலையில் இறங்கியதும், "ஐயா!" என்று யாரோ கூப்பிட்டார்கள்.

வடிவேலு திரும்பிப் பார்த்தார்.

அலுவலக பியூன்!

வடிவேலு நின்றதும், அவர் அருகில் வந்த பியூன், "சார்! உங்களுக்கு பென்ஷன் கிடைச்சா மாசம் எவ்வளவு கிடைக்கும்?" என்றார்.

"மாசம் ஆயிரம் ரூபாய்."

"ஆயிரம் ரூபாய் கொடுங்க. நாளைக்கே உங்க பென்ஷன் சாங்ஷன் ஆயிடும். நீங்க செலவழிக்கப் போறது ஒரு மாச பென்ஷன் தொகைதான். ஆனா உங்களுக்கு உங்க ஆயுசு முழுக்க மாசா மாசம் ஆயிரம் ரூபா வந்துக்கிட்டிருக்கும்!"

"ஏன்யா இப்படி இருக்கீங்க? உங்க அதிகாரி இவ்வளவு நல்லவரா இருக்காரு. நீங்க இப்படி மோசமானவங்களா இருக்கீங்களே!" என்றார் வடிவேலு கோபத்துடன்.

"புரியாம பேசாதீங்க சார்! என்னால உங்க பென்ஷனை சாங்ஷன் பண்ண முடியுமா? பணம் அவருக்குத்தான் சார்! நீங்க பணம் கொடுத்த அடுத்த நாளே உங்க பென்ஷன் சாங்ஷன் ஆனதும் உண்மையை நீங்களே புரிஞ்சுப்பீங்க!" என்றார் பியூன் சிரித்தபடி. 

குறள் 277
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.

பொருள்:  
வெளித் தோற்றத்துக்குக் குன்றிமணி போல் செம்மையானவராய்க் காணப்பட்டாலும், மனதுக்குள் குன்றிமணியின் மூக்குப் போல் கருத்திருப்பவர்கள் உலகத்தில் உண்டு.

278. காலையில் வந்த இருவர் 

சக்ரபாணியின் கடையின் சர்க்கரை அதிக வெள்ளையா அல்லது அவர் அணிந்திருக்கும் வெள்ளை வேட்டையும், வெள்ளைச் சட்டையும் அதிக வெள்ளையா என்று சிலர் விளையாட்டாகப் பேசிக் கொள்ளும் அளவுக்கு சக்ரபாணி சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம்  கொடுப்பவர்.  

தான் எப்போதும் குளித்து விட்டு, வெள்ளை ஆடை அணிந்து தூய்மையுடன் இருப்பது போல், தன் கடை ஊழியர்களும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் சக்ரபாணி. வேலைக்கு வரும்போது அவர்கள் குளித்து விட்டு, சுத்தமான ஆடை அணிந்து வர வேண்டும் என்பது விதிமுறை.

அவர் நடத்தி வந்தது சிறிய மளிகைக் கடையானாலும், ஊழியர்களுக்குச் சீருடை உண்டு. அதைத் துவைத்துத் தூய்மையாக அணிந்து வர அவர்களுக்கு இலவசமாகத் துணிக்குப் போடும் சோப், சோப் பவுடர் ஆகியவையும் உண்டு (அவர்கள் குளிப்பதற்கான சோப் தவிர!)

கடையில் வேலை செய்யும்போது, வியர்வை வழியும் முகத்துடன் இருக்கக் கூடாது என்பதற்காக ஊழியர்கள் அவ்வப்போது கடைக்குப் பின் உள்ள குளியலறைக்குச் சென்று முகம் கழுவிக் கொண்டு வர வேண்டும் என்பதும் விதிமுறை.

யாராவது ஊழியர் வியர்வை நிறைந்த முகத்துடன் இருந்தால், "ஏண்டா உன் மூஞ்சியில வழியற வியர்வை கடையில இருக்கற எண்ணெயில விழுந்து அதை அசுத்தப் படுத்தணுமா? போய் மூஞ்சி கழுவிக் கிட்டு வா, போ!" என்பார் சக்ரபாணி.

சுத்தத்துக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தினாலேயே, அவர் கடையை நாடிப் பலர் வந்தார்கள். வியாபாரமும் நன்றாக நடந்தது 

தவு தட்டப்பட்ட சத்தம் கேட்டு, சக்ரபாணியின் மனைவி விஜயா 'இந்தக் காலை நேரத்தில யாராக இருக்கும்?' என்று நினைத்தபடி கதவைத் திறந்தாள்.

இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். வெளியூர்க்காரர்கள் போல் இருந்தது. ஒருவர் சற்று வயதானவராகவும், இன்னொருவர் இளைஞராகவும் இருந்தனர். 

"சக்ரபாணி இருக்காரா?" என்றார் வயதில் மூத்தவர்.

"கடைக்குக் கிளம்பிக்கிட்டிருக்காரு. நீங்க யாரு?" என்றாள் விஜயா.

இதற்குள் சக்ரபாணியே உள்ளிருந்து ஹாலுக்குள் வந்து விட்டார். அப்போதுதான் குளித்து விட்டு, புதிய வெள்ளை உடைகளை அணிந்து பளிச்சென்று இருந்தார்.

"வாங்க. உள்ள வந்து உக்காருங்க" என்றார் சக்ரபாணி.

"நீங்க கடைக்குக் கிளம்பிட்டீங்களா, இல்ல, நேரம் ஆகுமா?" என்றார் முதலில் பேசியவர். 

"டிஃபன் சாப்பிட்டுட்டுக் கிளம்ப வேண்டியதுதான். வாங்க, நீங்களும் டிஃபன் சாப்பிடலாம். உள்ள வாங்க. ஏன் அங்கேயே நிக்கறீங்க?" என்றார் சக்ரபாணி.

"சரி. நீங்க சாப்பிட்டுட்டு வாங்க. நாங்க வெயிட் பண்றோம்."

"உள்ள வந்து உக்காருங்க. நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்" என்றார் சக்ரபாணி 

அவர்கள் தயக்கத்துடன் உள்ளே வந்தார்கள்.

"ஆமாம், நீங்க என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே?" என்றார் சக்ரபாணி.

"இல்ல. நீங்க சாப்பிட்டுட்டு வாங்க. அப்புறம் பேசலாம்" என்றார் அவர்.

காலை உணவை முடித்துக்கொண்டு, ஐந்தாறு நிமிடங்களில் வெளியே வந்த சக்ரபாணி அவர்கள் முன் உட்கார்ந்தார். "சொல்லுங்க."

"நாங்க உணவுப் பொருள் வழங்குத் துறையிலேந்து வரோம். நாங்க இன்ஸ்பெக்டர்கள். இது என்னோட ஐடி. உங்க கடையில நீங்க கலப்படக் சரக்கு விக்கறதா எங்களுக்குத் தகவல் வந்திருக்கு. உங்க கடையில உள்ள பொருட்களை செக் பண்ணணும், வரீங்களா? கடைக்குப் போகலாம்!" என்றார் அவர்.  

குறள் 278
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

பொருள்:  
மனத்துக்குள் மாசை வைத்துக்கொண்டு, வெளிப்பார்வைக்கு, நீராடித் தூய்மையானவர் போல் தங்களை வெளிக்காட்டிக் கொண்டு தங்கள் உண்மையான தன்மையை மறைத்து வாழும் மனிதர் பலர் உள்ளனர்.

279. பயிற்சிக்குப் பின்

அந்த நிறுவனத்தில் டிரெயினியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை 
சுந்தர் பெரிய அதிர்ஷ்டமாகக் கருதினான். 

ஊதியம், வசதிகள், வேலையில் முன்னேற வாய்ப்புகள் போன்ற பல விஷயங்களில் முதல் இடத்தில் இருப்பதாகக் கருதப்பட்ட அந்த நிறுவனத்தில் கடும் போட்டிக்கு இடையே சுந்தருக்கு அந்த வேலை கிடைத்தது. 

ஆறு மாதப் பயிற்சிக்குப் பின் டிரெயினிகள் நிரந்தர ஊழியர்களாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்ற பொதுவான நிலை இருந்தாலும், ஒரு சிக்கல் இருந்தது.

ஒருவேளை, பயிற்சியின்போது ஒரு டிரெயினியின் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லாவிட்டால், அவருடைய பயிற்சிக் காலம் இன்னொரு ஆறு மாத காலத்துக்கு நீட்டிக்கப்படும். அதற்குப் பிறகும் அவர் முன்னேற்றம் நிர்வாகத்துக்குத் திருப்தி அளிக்காவிட்டால், அவருக்கு வேலை இல்லை என்ற நிலை ஏற்படும்!

யிற்சியில் சேர்ந்த முதல் நாள் டிரெயினிகளின் எதிர்காலத்தை முடிவு செய்யும் இரண்டு பயிற்சி நிர்வாகிகளின் அறிமுகம் அவர்களுக்குக் கிடைத்தது.

ஒருவர் விஜயகுமார், மற்றவர் ராஜன். 

அவர்களிடம் முதலில் பேசிய விஜயகுமார், இயல்பாகவும், நகைச்சுவையாகவும் பேசினார். "கவலைப்படாதீங்க. நாங்க சொல்றதைக் கேட்டுப் புரிஞ்சுக்கிட்டு வேலை செய்யுங்க. எல்லாரும் பர்மனண்ட் ஆயிடுவீங்க. உற்சாகமா இருங்க!" என்றார்.

இரண்டாவதாக அவர்களிடம் பேசிய இன்னொரு நிர்வாகி ராஜன் சற்றுக் கடுமையாகவும், அச்சுறுத்தும் விதத்திலும் பேசினார். 

"இது காலேஜ் இல்லை. சும்மா ஜாலியா கிளாசுக்குப் போயிட்டோ, கட் அடிச்சுட்டோ எப்படியோ பரீட்சையில் பாஸ் பண்ணி டிகிரி வாங்கற மாதிரி இல்ல. இங்க சொல்லிக் கொடுக்கற விஷயங்களை நல்லாப் புரிஞ்சுக்கிட்டு வேலை செய்யணும். வேலையில கவனமா இருக்கணும். விளையாட்டுத்தனம் கூடாது. அப்புறம் ஆறு மாசம் முடிஞ்சப்பறம் பர்மனண்ட் ஆகலேன்னா அப்ப வருத்தப்பட்டுப் பயனில்லை!" என்றார் அவர். 

ஏன் இவர் துவக்கத்திலேயே இப்படி பயமுறுத்துகிறார், விஜயகுமார் போல் ஊக்கப்படுத்தும் விதத்தில் பேசக் கூடாதா என்று நினைத்துக் கொண்டான் சுந்தர். 

று மாதங்களில் சுந்தருக்கும் மற்ற டிரெயினிகளுக்கும் பல அனுபவங்கள் ஏற்பட்டன, 

இரண்டு நிர்வாகிகளும் வகுப்பில் பாடங்கள் எடுத்தும், செய்முறைப் பயிற்சிகள் அளித்தும் அவர்களுக்குப் பயிற்சி அளித்தனர். விஜயகுமாரின் இனிமையான அணுகுமுறை டிரெயினிகளிடையே அவருக்கு அபிமானத்தையும், ராஜனின் கடுமையான அணுகுமுறை அவர் மீது பயத்தையும், சற்று வெறுப்பையும் கூட ஏற்படுத்தியது.

று மாத முடிவில், இரு பயிற்சி நிர்வாகிகள் மற்றும் பர்சனல் மானேஜர் என்ற மூவர் அடங்கிய குழு டிரெயினிகளில் யார் யார் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதை முடிவு செய்தது. 

பர்சனல் மானேஜர் டிரெயினிகளை ஒவ்வொருவராகத் தன் அறைக்கு அழைத்து அவர்கள் நிலையை அறிவித்தார்.

சுந்தருக்கு முன் பர்சனல் மானேஜரின் அறைக்குச் சென்றவர்கள் அனைவருமே ஓரிரு நிமிடங்களில் முக மலர்ச்சியுடன் வெளியே வந்து தாங்கள் நிரந்தரமாக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

சுந்தர் உள்ளே அழைக்கப்பட்டதும் நம்பிக்கை, பயம் இரண்டும் கலந்த உணர்வுடன் உள்ளே போனான்.

"வா, சுந்தர்! நீ வேலை நல்லாக் கத்துக்கிட்டிருக்கேன்னு ரெண்டு மானேஜர்களுமே சொல்லி இருக்காங்க" என்றார் பர்சனல் மானேஜர்.

"தாங்க் யூ சார்" என்றான் சுந்தர், தான் நிரந்தரமாக்காப்படுவோம் என்ற நம்பிக்கை வலுவடைந்தவனாக.

"ஆனால், டிசிப்ளின் விஷயத்தில்தான் கொஞ்சம் பிரச்னை போலருக்கு!"

"டிசிப்ளின் விஷயத்திலயா? ஏன் சார்? ராஜன் சார் ஏதாவது சொன்னாரா?" என்றான் சுந்தர் அதிர்ச்சியுடன்.

"ராஜன் சாரா? அவரையும் எதிர்த்துப் பேசி இருக்கியா?"  

"அவரையுமா?" என்றான் சுந்தர் குழப்பத்துடன். "நான் யாரையுமே எதிர்த்துப் பேசலியே சார்!"

"ஒரு தடவை விஜயகுமாரை எதிர்த்துப் பேசி வாதாடி இருக்க. அவர்தான் உனக்கு டிசிப்ளின் போதாதுன்னு சொல்லி உன் டிரெயினிங் பீரியடை ஆறு மாசம் எக்ஸ்டெண்ட் பண்ணனும்னு சிபாரிசு பண்ணி இருக்காரு."

சுந்தருக்கு அந்த நிகழ்ச்சி நினைவு வந்தது. 

தொழில் நுட்பம் சம்பந்தமாக வகுப்பறையில் விஜயகுமார் கூறிய ஒரு கருத்து தான் கல்லூரியில் படித்ததிலிருந்து மாறுபட்டதாக இருந்ததால், அதை அவன் சுட்டிக் காட்டினான். தான் சொன்னதுதான் சரியென்று அவர் வாதிட்டார்.

அப்போது அவர் அவருடைய இயல்புக்கு மாறாகச் சற்றுக் கோபமாகக் கூடப் பேசியதாக சுந்தருக்குத் தோன்றியது. 

அன்று இரவே பயிற்சி நிலையத்தில் இருந்த நூலகத்துக்குச் சென்று, குறிப்பிட்ட புத்தகத்தைத் தேடி எடுத்துத் தான் சொன்னது சரியென்று உறுதிப்படுத்திக் கொண்ட சுந்தர், அடுத்த நாள் அந்தப் புத்தகத்தை வகுப்பறைக்கு எடுத்து வந்து விஜயகுமாரிடம் காட்டி, தான் சொன்னது சரியென்று காட்டினான். 

அவரும் சிரித்துக் கொண்டே அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு, "யூ ஆர் ரைட்" என்று அவனிடம் கைகுலுக்கினார்.

அதையா கட்டுப்பாடு இல்லாத செயல் என்று சொல்லி அவன் நிரந்தரமாக்கப்படுவதைத் தடுக்க முயன்றிருக்கிறார் விஜயகுமார்?

நடந்த விஷயத்தை பர்சனல் மேனேஜரிடம் விளக்கினான் சுந்தர்.

"அதான் பிரச்னை! நீ செஞ்சது தப்பு இல்ல. ஆனா அதை விஜயகுமார் நீ தன்னை அவமானப்படுத்திட்டதா நினைச்சிருக்கார்" என்றார் பர்சனல் மானேஜர்.

"அப்படின்னா, என்னோட நிலைமை என்ன சார்?" என்றான் சுந்தர் மனமுடைந்து போனவனாக.

"உன் அதிர்ஷ்டம். ராஜன் உனக்காகக் கடுமையா வாதாடினார். 'ஒரு உற்சாகத்தில அப்படிச் செஞ்சிருப்பான். இதுக்காக வேலையை நல்லா கத்துக்கிட்ட ஒரு திறமையான கேண்டிடேட்டைத் தண்டிக்கக் கூடாது'ன்னு அவர் உனக்கு ஆதரவாப் பேசினார். நானும் அவர் சொன்னதை ஏத்துக்கிட்டேன். அதனால நீ பர்மனண்ட் ஆயிட்டே! கங்கிராசுலேஷன்ஸ்!" என்றார் பர்சனல் மானேஜர்.

"ரொம்ப நன்றி சார்!" என்றான் விஜயகுமார் போன உயிர் திரும்பி வந்தவனாக.

"ஒரு விஷயம். இதையெல்லாம் நான் உன்கிட்ட சொல்லியிருக்கக் கூடாது. ஆர்வக் கோளாறினால நீ இது மாதிரி மறுபடி செய்யக் கூடாதுன்னு உனக்குப் புரிய வைக்கறதுக்குத்தான் இதைச் சொன்னேன். நீ இனிமே வேற டிபார்ட்மெண்டுக்குப் போயிடுவ. அவங்க ரெண்டு பேரும் உனக்கு மேலதிகாரியா வர வாய்ப்பு இல்ல. அதனால உன்கிட்ட இதைச் சொல்றதால பாதிப்பு எதுவும் ஏற்படாதுன்னு நினைச்சேன். இதை உன் மனசுக்குள்ளயே வச்சுக்க. வெளியில யார் கிட்டயும் சொல்லிடாதே. வாழ்த்துக்கள்!" என்று அவனிடம் கைகுலுக்கினார் பர்சனல் மானேஜர்.

பர்சனல் மானேஜரின் ஏசி அறையிலிருந்து வியர்வை கொட்டும் முகத்துடன் வெளியே வந்த சுந்தரைப் பார்த்து, "இவன் பர்மனன்ட் ஆகல போலருக்கு" என்று வெளியில் இருந்தவர்கள் நினைத்திருக்கக் கூடும்!   

குறள் 279
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.

பொருள்:  
நேராக இருக்கும் அம்பு கொடியது, வளைந்திருக்கும் யாழ் இனியது. எனவே ஒருவரை அவரது செயலால்தான் எடை போட வேண்டும், தோற்றத்தால் அல்ல.

280. சாமியார் விஜயம்!

தேவராஜ் வீட்டுக்கு வந்த பழனி, "உன்கிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன்" என்றார்.

"என்னப்பா பெரிய வார்த்தை எல்லாம்? என்ன வேணும் சொல்லு" என்றார் தேவராஜ்.

"பூங்குளம் சாமியைப் பத்தி உனக்குத் தெரியுமில்ல?"

"ஆமாம், நீதான் அவரோட சிஷ்யனாச்சே! அவர் பெரிய சித்தர், மகான்னெல்லாம் நீ சொல்லி இருக்க. அதுக்கு மேல வேற எதுவும் எனக்குத் தெரியாது. சொல்லு."

"அவரு நம்ம ஊருக்கு வரப் போறாரு."

"அப்படியா? சந்தோஷம். சொல்லு."

"உனக்குத் தெரியும். அவரைத் தங்க வைக்க என் வீட்டில வசதி பத்தாது. அதனால உன் வீட்டில அவரைத் தங்க வச்சுக்க முடியுமா?"

"ஓ! அதுக்கென்ன? மாடியில இருக்கற ரூம்ல அவர் தங்கிக்கலாம். ஆனா..."

"என்ன இழுக்கற? ஏதாவது அசௌகரியம் இருந்தா சொல்லிடு!" என்றார் பழனி.

"எனக்கு அசௌகரியம் எதுவும் இல்ல. கோவில், பக்தி இதிலெல்லாம் அதிகமா ஈடுபடற பெரிய மனுஷங்க சில பேரு நம்ம ஊர்ல இருக்காங்க. அவங்க வீடுகள் பெரிசா இருக்கு. அவங்கள்ளாம் இருக்கறப்ப, ஆன்மீக விஷயங்கள்ள அதிக ஈடுபாடு இல்லாத என் வீட்டில அவர் தங்கறது முறையா இருக்குமான்னுதான் யோசிச்சேன்."

"நீ இப்படிக் கேப்பேன்னு தெரியும். இந்த ஊர்ல இருக்கற எல்லாப் பெரிய மனுஷங்களுக்குமே ஊர்ல சில பேர் கிட்ட விரோதம் இருக்கு. அதனால அவங்க யார் வீட்டிலேயாவது சாமி தங்கினார்னா, சாமியைப் பாக்கணும்னு நினைக்கிற சில பேர் அங்கே வர மாட்டாங்க. இந்த ஊரிலேயே யாரோடயும் விரோதமில்லாம எல்லார்கிட்டயும் நல்ல உறவோடு இருக்கறது நீ ஒத்தன்தான். அதோட உனக்கு குடிப் பழக்கமோ, மத்த பழக்கங்களோ கிடையாது. அதனால உன் வீட்டில சாமி தங்கினா எல்லாரும் வந்து பாப்பாங்க. அவரும் சந்தோஷமா இருப்பாரு."

"போதும்ப்பா. விட்டா, என்னையே சாமியாரா ஆக்கிடுவ போலருக்கே!" என்றார் தேவராஜ்.

"அப்படி ஆறதா இருந்தா சொல்லு. நானே உன் முதல் சிஷ்யனா ஆயிடுவேன்" என்றார் பழனி.

பிறகு இருவரும் பூங்குளம் சாமி தங்குவதற்கான ஏற்பாடுகளைப் பற்றிப் பேசினர்.

பழனி விடைபெற்றுக் கிளம்பியபோது, தேவராஜ் அவரிடம், "நான் ஏதாவது சரியா  நடந்துக்காம சாமி மனசு புண்படும்படியா ஆயிடக் கூடாதுங்கறதுதான் என்னோட கவலை" என்றார்.

"அந்தக் கவலை உனக்கு வேண்டாம். சாமி ரொம்ப எளிமையானவரு. அவரு தங்கப் போறது நாலு நாள்தான். எல்லாத்துக்கும் மேல, நீ தப்பா எதுவும் செஞ்சுட மாட்ட!" என்றார் பழனி.

சாமியார் வந்து நான்கு நாட்கள் தேவராஜ் வீட்டில் தங்கி இருந்து விட்டுக் கிளம்பிப் போய் விட்டார். அவரை வழியனுப்பி வைத்த பிறகு, பழனி தேவராஜின் வீட்டுக்கு வந்தார்.

"என்ன பழனி? சாமிக்கு எல்லாம் திருப்தியா இருந்ததா?" என்றார் தேவராஜ்.

"திருப்தியா இருக்கறதாவது? போகச்சே எங்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா?  'என்னை எதுக்கு இந்த ஊருக்கு வரச் சொன்னே?'ன்னு கேட்டார்!" என்றார் பழனி.

தேவராஜ் திடுக்கிட்டவராக, "ஏன், அவரு அப்படிச் சொல்ற அளவுக்கு நான் ஏதாவது தப்புப் பண்ணிட்டேனா என்ன?" என்றார்.

"அவர் சொன்னதை அப்படியே சொல்றேன் கேளு. 'நான் இந்த ஊருக்கு வந்து ஊர்க்காரங்களுக்கு ஏதோ உபதேசம் பண்ணணும்னு நீ என்னை இங்க வரவழைச்சே! ஆனா அதுக்கு அவசியமே இல்லையே! நாலு நாள் இந்த தேவராஜ் வீட்டில தங்கி இருந்து அவர் பேசறது, நடந்துக்கறது இதெல்லாம் பாத்தப்ப, எனக்கு என்ன தோணிச்சு தெரியுமா? இந்த தேவராஜைப் பாத்து இந்த ஊர்க்காரங்க நடந்துக்கிட்டாங்கன்னாலே போதுமே! அதுக்கு மேல அவங்களுக்கு என்ன உபதேசம் வேணும்? நாங்கள்ளாம் தாடி வச்சுக்கிட்டு, முடி வளத்துக்கிட்டு, காவி கட்டிக்கிட்டு சாமியார்னு வாழ்ந்துக்கிட்டிருக்கோம். ஆனா இந்த தேவராஜ் இந்த வேஷங்கள்ளாம் போடாமயே எங்களையெல்லாம் விட உயர்வான குணத்தோடயும் மனப்பக்குவத்தோடயும் இருக்காரு.' இதான் அவர் சொன்னது. நான் ஒரு வார்த்தை கூடக் கூட்டிச் சொல்லல!" என்றார் பழனி.
   
குறள் 280
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

பொருள்:
உலகம் பழிக்கும் தீய ஒழுக்கங்கள் இல்லாமல் ஒருவர் வாழ்ந்தால், அவருக்கு மொட்டை அடித்துக் கொள்ளுதல், நீண்ட முடி வளர்த்தல் போன்ற துறவிகளுக்கான புற அடையாளங்கள் தேவையில்லை.
          பொருட்பால்                                                                                   காமத்துப்பால்

No comments:

Post a Comment