About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 12. நடுவுநிலைமை

திருக்குறள் 
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 12
நடுவுநிலைமை 
111. யுதிஷ்டிரனின் வியூகம்
ராஜசூய யாகத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. பல்வேறு வகை மனிதர்களும் யாகத்தைக் காணவும், அதில் பங்கு கொள்ளவும் வந்த வண்ணம் இருந்தனர்.

வியாசர் முதலான முனிவர்களை வரவேற்று அவர்களை யாக மண்டபத்தில் உரிய ஆசனங்களில் அமர வைத்தான் யுதிஷ்டிரன்.

பிறகு, யுதிஷ்டிரன் தன் சகோதரர்களை அழைத்து, "இனி பீஷ்மர், துரோணர், விதுரர், துரியோதனன், அவனது தம்பிகள், பல நாடுகளைச் சேர்ந்த அரசர்கள் ஆகியோர் வருவார்கள். அரசர்களை அர்ஜுனன் உபசரித்து அழைத்துப் போய் அவர்களை உணவருந்தச் செய்து அவர்களை யாக மண்டபத்தில் அமர்த்த வேண்டும்." என்றான்.

அர்ஜுனன் சரி என்று தலையை ஆட்டினான்.

"பீமா! துரியோதனனையும் அவன் தம்பிகளையும் நீதான் வரவேற்க வேண்டும்"

"நானா?" என்றான் பீமன் அதிருப்தியுடன்.

"ஆமாம். அவர்களை உணவருந்த வைத்தபின், துரியோதனனிடம் கஜானா பொறுப்பைக் கொடுத்து யாகத்துக்கு வருபவர்களுக்கு தானங்கள் அளிக்கும் பணியை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்" என்றான் யுதிஷ்டிரன்.

"நமக்குக் கெடுதல் நினைப்பவன் துரியோதனன். அவனிடம் ஏன் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்?" என்றான் அர்ஜுனன்.

"காரணமாகத்தான்!" என்றான் யுதிஷ்டிரன். "பீஷ்மர், துரோணர், விதுரர், நமது பிற உறவினர்கள் ஆகியோரை நான் வரவேற்று உபசரிக்கிறேன்"

"எனக்கும் சகாதேவனுக்கும் என்ன பணி?" என்றான் நகுலன்.

"நீங்கள் இருவரும் உணவு மண்டபத்தில் இருந்தபடி எல்லோரையும் நன்கு  உபசரித்து உணவருந்த வைத்து அவர்கள் திருப்தி அடையும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். உணவளிக்கும் விஷயத்தில் எந்தப் பாரபட்சமும் இருக்கக் கூடாது. பந்தியில் அமர்ந்திருக்கும் அனைவருமே அதிதிகளாகக் கருதப்பட்டு சமமாகப் போற்றப்பட வேண்டியவர்கள்."

யாகம் முடிந்து அனைவரும் விடைபெற்ற பின், இரவில் பாண்டவர்கள் ஐவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

"யாகம் சிறப்பாக நடந்து முடிந்தது" என்றான் யுதிஷ்டிரன்.

"நீங்கள் செய்த ஏற்பாடுகள்தான் காரணம் அண்ணா!" என்றான் சகாதேவன்.

"உணவு மண்டபத்தில் இருந்தபடி விருந்தினர்களை உபசரித்தது எங்களுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது" என்றான் நகுலன்.

"மன்னர்களை நான் கவனித்துக் கொண்டதில் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி" என்றான் அர்ஜுனன்.

"பீஷ்மர், துரோணர், விதுரர், கிருபர் முதலியோரும் நம் உபசாரத்தினால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்" என்றான் யுதிஷ்டிரன்.

சற்று நேரம் மௌனம் நிலவியது.

"நீ ஒன்றுமே சொல்லவில்லையே. பீமா?" என்றான் யுதிஷ்டிரன்.

"சொல்வதற்கு என்ன இருக்கிறது? துரியோதனனுக்கு மிகவும் மகிழ்ச்சிதான். நம் கஜானாவைக் காலி செய்ய ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் அதைச் சும்மா விடுவானா அவன்? வந்தவர்கள் எல்லோருக்கும் வாரி வாரிக் கொடுத்து நம் கஜானாவையே காலி செய்து விட்டான்" என்றான் பீமன் எரிச்சலுடன்.

"யாகம் செய்வதை விட தானம் செய்வதுதானே சிறந்தது? நம்மில் யாராவது  தானம் செய்திருந்தால் எங்கே கஜானா காலியாகி விடுமோ என்று பயந்து சிறிதளவே தானம் செய்திருப்போம்! துரியோதனன் நம் கஜானாவைக் காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைவருக்கும் வாரிக் கொடுத்தான். அவன் தீய நோக்கத்துடன் செய்தாலும் அவன் செய்த தானத்தின் பயன் நமக்குத்தான் கிடைக்கும்! இதை மனதில் கொண்டுதான் துரியோதனனிடம் தானம் கொடுக்கும் பொறுப்பைக் கொடுக்கச் சொன்னேன்" என்றான் யுதிஷ்டிரன்.

"அண்ணா! யுத்தத்தில் வியூகம் வகுப்பது பற்றி துரோணாச்சாரியர் நம் அனைவருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த யாகத்துக்கே நீங்கள் ஒரு வியூகம் வகுத்துச் செயல்பட்டிருக்கிறீர்கள். உங்கள் வியூகத்தை விளக்க முடியுமா?" என்றான் சகாதேவன்.

"சகாதேவா! நீ அறியாதது இல்லை. நம் ஐவரில் நீயே ஞானத்தில் சிறந்தவன். ஆயினும் ஐவரில் வயதில் சிறியவன் என்பதால் அடக்கத்துடன் ஏதும் அறியாதவன்போல் கேட்கிறாய்! சொல்கிறேன். இன்று யாகத்துக்கு வந்தவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். நண்பர்கள், பகைவர்கள், நடுநிலையாளர்கள்.

"முதல் வகை நம் உறவினர்கள், ஆச்சாரியர்கள் ஆகியோர். இவர்களை, நம் ஐவரில் மூத்தவனான நானே கவனிப்பதுதானே அவர்களுக்கு உகந்ததாக இருக்கும்?

"இரண்டாவதாக நடுநிலையாளர்களான மன்னர்கள். அவர்களில் பலரை ராஜசூய யாகத்துக்காக நாம் போரில் வென்றிருந்தாலும், இது வழிவழியாக வரும் வழக்கம் என்பதால் அவர்கள் நம் மீது விரோதம் பாராட்டியிருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்களுக்கு நம்மிடம் நட்பும் இருக்காது. அவர்களை நண்பர்களாக மாற்றிக் கொள்ள நாம் முயல வேண்டும், குறைந்தது அவர்கள் நமக்கு விரோதிகளாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் அவர்களைப் போரில் வென்ற அர்ஜுனனைக் கொண்டே அவர்களை உபசரித்து மரியாதையாக நடத்தி, அவர்களை மனம் குளிரச் செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.

"மூன்றாவது வகை நம் பகைவர்கள். துரியோதனனையும் அவன் தம்பிகளையும் நாம் பகைவராக நினைக்காவிட்டாலும், அவர்கள் நம்மை அப்படித்தானே நினைக்கிறார்கள்? ஆயினும் நம் விருந்தினர்களாக வந்திருப்பவர்களை நாம் மதித்து நடந்து, அவர்களது கௌரவத்துக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துரியோதனனுக்கு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்ததன் மூலம் நாம் அவனை கௌரவித்தோம். அத்துடன் அவன் அந்தப் பொறுப்பில் இருந்ததால் நமக்கு என்ன தீங்கு செய்யலாம் என்ற சிந்தனையில் ஈடுபட அவனுக்கு நேரமில்லாமல் போய் விட்டது. அவன் தாராளமாக தானம் செய்ததும் நமக்கு நன்மை பயக்கக் கூடிய செயலாக இருந்தது."

"அண்ணா! நீங்கள் என்னை விட வயதில் மட்டும் பெரியவர் இல்லை, அறிவிலும்தான். அத்துடன் அறம் எது என்பதை உங்களை விடச் சிறப்பாக அறிந்தவர் வேறு யார் இருக்க முடியும்?" என்றான் பீமன்.

குறள் 111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

பொருள்:  
பகைவர், அயலார், நண்பர் என்ற மூன்று பிரிவினரிடமும் அவரவர்களுக்கு உரிய முறையில் நடந்து கொள்வதே நடு நிலைமை என்று கருதப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


112. சுந்தரலிங்கத்தின் சொத்து
"ஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி - தான் போய்
விழுமாம் கழனிப் பானையில் துள்ளி!" என்றாள் தனபாக்கியம்.

தன் அம்மா ஆதங்கத்துடன் இப்படிப் பேசுவதை முருகையன் பலமுறை கேட்டிருக்கிறான்.

அவன் அப்பா சுந்தரலிங்கம் ஊரில் பொருளாதார நிலையில் மிகச் சாதாரணமான மனிதர். சிறிதளவு நிலத்தை வைத்துக்கொண்டு அதில் வரும் குறைந்த வருவாயில் எப்படியோ குடும்பத்தை நடத்தி வந்தவர்.

ஆனால் ஊரார் அவரை ஒரு நீதிமான் என்று மதித்தார்கள். அவருடைய ஊர் மக்கள் மட்டுமின்றி, சுற்று வட்டத்தில் இருந்த பல ஊர்களிலிருந்தும் பலர் தங்கள் வழக்குகளை அவரிடம் கொண்டு வருவார்கள். குடும்பப் பிரச்னை, சொத்துத் தகராறு, கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள், கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றத் தவறியது, வரப்புத் தகராறு, தண்ணீர்ப் பங்கீடு என்று பலவிதமான வழக்குகளுக்கும் அவரிடம் நீதி கேட்டு வருவார்கள்.

இரு தரப்பினர் கூறுவதையும் பொறுமையாகக் கேட்டு, அவர்களிடம் கேள்விகள் கேட்டு, விளக்கங்கள் பெற்று, நியாயங்களை எடுத்துச் சொல்லி அவர் கொடுக்கும் தீர்ப்பை அநேகமாக எல்லோருமே ஏற்றுக் கொள்வார்கள். அவருடைய நியாயமான அணுகுமுறையில் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. அவர் தீர்ப்பை ஏற்காமல் நீதிமன்றங்களை நாடியவர்கள் மிகச் சிலரே.

இப்படி ஊருக்கெல்லாம் நியாயம் சொல்பவர், தன் அண்ணன் தன்னை ஏமாற்றித் சொத்தைப் பிடுங்க அனுமதித்து விட்டாரே என்பதுதான் தனபாக்கியத்தின் ஆதங்கம்.

சுந்தரலிங்கம் அவர் பெற்றோருக்கு இரண்டாவது மகன். அவருக்குப் பத்து வயது இருக்கும்போது ஊரில் அவர்களுடைய தூரத்துச் சொந்தக்காரர் ஒருவருக்குக் கொள்ளி போடப் பிள்ளை இல்லை என்பதால் அவர் இறக்கும் தருவாயில் சுந்தரலிங்கத்தை அவருக்குத் தத்துக் கொடுத்தார் அவர் அப்பா.

இது பெயரளவுக்குத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். தத்துக் கொடுத்த பிறகும் சுந்தரலிங்கம் தன் பெற்றோருடன்தான் இருந்தார். அவருடைய சுவீகாரத் தந்தை இறந்ததும் அவருக்குக் கொள்ளி போட்டதுடன் அந்த பந்தம் முடிந்து விட்டது. அவருடைய சுவீகாரத் தந்தைக்கு இருந்த சிறிதளவு நிலமம், ஒரு சிறிய வீடும் அவரது மரணத்துக்குப் பின் சுந்தரலிங்கத்துக்குச் சொந்தம் என்று ஆனது மட்டும்தான் அவருக்குக் கிடைத்த சிறிய நன்மை.

சுந்தரலிங்கத்தின் அண்ணன் குணசேகரன் எஸ் எஸ் எல் சி முடித்த இரண்டு வருடங்களில் அரசாங்க வேலை கிடைத்து தஞ்சாவூருக்குப் போய் விட்டார். சுந்தரலிங்கம் கிராமத்திலேயே இருந்து தன் தந்தையுடன் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டார்.

இருவருக்கும் திருமணம் ஆன சில வருடங்களில் அவர்களுடைய பெற்றோர் இருவரும் ஒருவர் பின் ஒருவராக மறைந்து விட்டனர்.

ஊரில் ஒரு சில பிரச்னைகளை சுந்தரலிங்கம் சுமுகமாகத் தீர்த்து வைத்ததால், பலரும் தங்கள் வழக்குகளை அவரிடம் கொண்டு வர, வழக்குகளை நியாயமாகவும், சமூகமாகவும் தீர்த்து வைக்கக் கூடியவர் என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது. அவரது புகழ் சுற்று வட்டாரங்களிலும் பரவியது.

இதற்காக அவர் பணம் எதுவும் வாங்குவதில்லை. இரு தரப்பினரும் தாங்கள் விரும்பிய தொகையை ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுக்கலாம் என்று அவர் கூறியதை ஏற்றுக்கொண்டு கோயில்களுக்கு அவர்கள் கொடுத்த நன்கொடையால் ஊர்க்கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, பூஜைகள், திருவிழாக்கள் என்று சிறப்பாக இருந்தன..

தஞ்சையிலேயே வாசம் என்று ஆகி விட்ட குணசேகரனுக்கு யாரோ சொல்லிக் கொடுத்த யோசனையின் பேரில் அவர் தன் தம்பிக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். சுந்தரலிங்கம் சுவீகாரம் போய் விட்டதால் அவர்கள் தந்தையின் சொத்துக்களில் அவருக்கு உரிமை கிடையாது என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுந்தரலிங்கம் சிறிது கூடத் தயங்காமல் தன் தந்தையின் சொத்துக்களில் தனக்கு உரிமையில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டார். ஊரில் இருந்த சில விஷயம் அறிந்தவர்கள் "இதெல்லாம் சட்டப்படி செல்லாது. குணசேகரன் கோர்ட்டுக்குப் போனாலும் வழக்கு முடியப் பல வருடங்கள் ஆகும். உங்களுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வரும். ஒருவேளை தீர்ப்பு உங்களுக்கு எதிராக அமைந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்" என்று ஆலோசனை கூறினர்.

ஆனால் சுந்தரலிங்கம் கேட்கவில்லை. "எப்ப என் அண்ணன் இப்படி நினைக்கிறானோ, அதுக்கப்பறம் எனக்கு இந்த சொத்து எதுக்கு?" என்று சொல்லி விட்டார்.

அதற்குப்பிறகு ஊருக்கு வந்த குணசேகரன் சொத்துக்கள் அனைத்தையும் தன் பெயருக்கு மாற்றிக்கொண்டபின் நிலங்களை இன்னொருவரிடம் குத்தகைக்கு விட்டு விட்டார்.

சுந்தரலிங்கத்துக்கு அவருடைய சுவீகாரத் தந்தையின் வீடும், சிறிதளவு நிலமும் மட்டுமே சொந்தம் என்று ஆயிற்று. சுந்தரலிங்கம் தன் தந்தையின் பெரிய வீட்டைக் காலி செய்து விட்டுத் தன் சுவீகாரத் தந்தையின் பழைய, சிறிய, உடைந்த வீட்டுக்குக் குடி பெயர்ந்தார்.

குடும்பத்தை நடத்துவதே சிரமம் என்று ஆகி விட்ட நிலையில், கடன் வாங்கிப் பெண்ணின் திருமணத்தை எப்படியோ நடத்தி விட்டார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவரது மகன் முருகையனின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது.

"ஊர்ச்சாமிக்கெல்லாம் சம்பாதிச்சுக் கொடுப்பாரு ஒங்கப்பா. ஆனா ஊர்ச்சாமிக எல்லாம் ஒங்கப்பாவை ஓட்டாண்டியாத்தான் வச்சிருக்காங்க" என்று முருகையனிடம் அங்கலாய்த்துக் கொள்வாள் தனபாக்கியம்.

"அண்ணனுக்கு டி பி வந்து சிங்கிப்பட்டி டி பி ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்களாம். போய்ப் பாக்கணும்" என்றார் சுந்தரலிங்கம்.

"கண்டிப்பாப் போய்ப் பாக்கத்தான் வேணும்! எவ்வளவு நல்லது பண்ணியிருக்காரு ஒங்களுக்கு!" என்றாள் தனபாக்கியம் எகத்தாளமாக.

அடுத்த சில நாட்களுக்கு வெளியூர்களிலிருந்து சிலர் அவரிடம் மத்தியஸ்தத்துக்கு வருவதாக முன்பே சுந்தரலிங்கத்துக்குத் தகவல் தெரிவித்திருந்ததால், அவரால் உடனே தன் அண்ணனைப் போய்ப் பார்க்க முடியவில்லை.

நான்கு நாட்கள் கழித்துப் போகலாம் என்று அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் எதிர்பாராமல் அவர் அண்ணன் மகன் சண்முகம் அவரைத் தேடிக்கொண்டு ஊருக்கு வந்து விட்டான்.

முதலில் தன் அண்ணனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று சுந்தரலிங்கம் பயந்தார். ஆனால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில்தான் இருப்பதாக சண்முகம் சொன்னான்.

"நான் வந்த விஷயம் வேற..." என்று தயங்கியபடி ஆரம்பித்தான் சண்முகம். "அப்பாதான் என்னை இங்க அனுப்பிச்சாரு... மரணப் படுக்கையில கிடக்கறப்பதான் எங்கப்பாவுக்கு தான் பண்ணின தப்பு புரிஞ்சிருக்கு. ஒங்களுக்குப் பண்ணின துரோகத்தை நினைச்சுப் புலம்பிக்கிட்டே இருக்காரு. ஒங்க சொத்தையெல்லாம் ஒங்க பேரிலே மாத்தி எழுதிக் கொடுக்கறதுக்குத்தான் பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்து என்னை அனுப்பியிருக்காரு. நான் பத்திரமெல்லாம் எழுதிக் கொண்டு வந்திருக்கேன். நாளைக்கே ரிஜிஸ்தர் ஆஃபீஸ் போய் பத்திரத்தை ரிஜிஸ்தர் பண்ணிடறேன். நீங்க அப்பாவை மன்னிச்சாத்தான் அவரு நிம்மதியா சாவாரு" என்றான்.

"என்னப்பா! இப்படியெல்லாம் சொல்றே! என் அண்ணனை நான் எப்பவுமே தப்பா நினைச்சதில்ல" என்றார் சுந்தரலிங்கம்.

'நல்லவேளை, நாங்களும், எங்க புள்ளைங்களும் வறுமையில விழாம கடவுள்  காப்பாத்திட்டாரு' என்று நினைத்துக் கொண்டாள் தனபாக்கியம்.
   
குறள் 112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

பொருள்:  
நடு நிலைமையோடு நடந்து கொள்பவனின் செல்வம் அழியாமல் அவன் வாரிசுகளுக்கும் பயனளிக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
113. பிரேக்கிங் நியூஸ்!

"சொல்லுங்க. எங்கிட்ட தனியாப் பேசணும்னு சொன்னீங்களே!" என்றான் 'தினப்பதிவு' பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் அருண்.

"சார்! தப்பா நெனச்சுக்கலைன்னா ஒண்ணு கேக்கலாமா?" என்றான் ரமணன். சமீபத்தில்தான் பத்திரிகையில் சேர்ந்திருந்த துடிப்பு மிக்க இளைஞன் அவன்.

"தயங்காம கேளுங்க."

"இல்லை, நாம நடுநிலைமை வகிக்கிற பத்திரிகை. ஆனா வரப்போற தேர்தல்ல ஆளுங்கட்சியைத் தோக்கடிக்கணும்னு தலையங்கம் எழுதி இருக்கீங்களே! இது முரண்பாடா இல்லியா?"

"நல்ல கேள்விதான். நீங்க புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கிறதனால உங்களுக்குச் சில விஷயங்களைத் தெளிவு படுத்தணும். நாம நடு நிலை வகிக்கிறோம்னா நாம எந்தக் கட்சிக்கும் ஆதரவான பத்திரிகை இல்லை என்று பொருள். ஒரு செய்தி ஒரு கட்சிக்கு சாதகமா இருக்கலாம், இன்னொரு கட்சிக்கு பாதகமா இருக்கலாம். அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம, நாம செய்தியை அப்படியே கொடுக்கிறோம்.

"ஆனா எடிட்டோரியல் பாலிசி வேற. ஒரு கட்சி அல்லது ஆட்சியோட செயல்கள் நல்லா இருந்தா பாராட்டுவோம், இல்லேன்னா, குறை சொல்லுவோம். அது போல தேர்தல் சமயத்தில இப்ப இருக்கிற ஆட்சி எப்படி இருந்தது, அதை மறுபடியும் தேர்ந்தெடுக்கலாமான்னு நம்ம கருத்தைச் சொல்றோம்.

"இப்ப இருக்கற ஆட்சி ரொம்ப மோசமா இருக்கறதுனால, இதைத் தோக்கடிக்கணும்னு சொல்றோம். இப்படிச் சொல்றதனால மறைமுகமா எதிர்க்கட்சியை நாம ஆதரிக்கிற மாதிரி தெரியலாம். ஆனா அது உண்மை இல்லை.

"போன தேர்தலின் போது, இப்ப எதிர்க்கட்சியா இருக்கறவங்கதான் ஆட்சியில இருந்தாங்க. அப்ப அந்த ஆட்சியைத் தூக்கி எறியணும்னுதான் எழுதினோம். மக்களும் அதே மாதிரி நெனச்சு அவங்களை வீட்டுக்கு அனுப்பிட்டு இவங்களைக் கொண்டு வந்தாங்க.

"இப்ப இவங்க தோத்தா மறுபடி அவங்கதான் வருவாங்க. ஜனநாயகத்தில் வேற வழி இல்லை. சில சமயம் புதுசா சில சக்திகள் பதவிக்கு வரலாம், ஆனா அவங்களும் ஒழுங்கா ஆட்சி நடத்துவாங்கன்னு சொல்ல முடியாது. அதனால ஒரு ஆட்சி மோசமா இருக்கும்போது அதைத் தூக்கி எறியணும்னு சொல்றதுதான் நியாயம். கடமை கூட. அதுதான் நடுநிலைமை."

"நீங்க சொல்றது எனக்குப் புரியுது சார். ஆனாலும் இப்ப ஆட்சியில இருக்கிற 'தமிழ் மண்' கட்சியை நாம கடுமையா எதிர்க்கிறதாகவும் எதிர்க்கட்சியா இருக்கிற 'சமூக முன்னேற்றக் கட்சி'யை பலமா ஆதரிக்கிறதாகவும் நிறைய வாசகர்கள் நினைக்கிறாங்களே!"

"இது மாதிரி கருத்துக்கள் இருக்கிறது சகஜம்தான். புதுசா வர ஆட்சியும் மோசமாத்தான் இருக்கப் போகுது. அதை நாம கடுமையா விமர்சிக்கும்போது ஜனங்க நம்மளைப் புரிஞ்சுப்பாங்க..... சொல்ல முடியாது. அடுத்த தேர்தல்ல அவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்கன்னு எழுதினா, நம்மளை 'தமிழ் மண்'ணுக்கு ஆதரவான பத்திரிகைன்னு சொன்னாலும் சொல்லுவாங்க! நாம அதைப் பத்திக் கவலைப்படக் கூடாது. செய்திகளை உண்மையா வெளியிட்டு, நம்ம கருத்துக்களை நேர்மையா சொல்லிக்கிட்டிருந்தா, நாம வேற எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டாம்."

"சார்! மறுபடியும் இந்தக் கருத்தைச் சொல்றேங்கறதுக்காக நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது. சமீபத்தில நடந்த பத்திரிகையாளர் ரகுவோட கொலையில ஆளுங்கட்சிக்குத் தொடர்பு இருக்குன்னு நாம எழுதிக்கிட்டிருக்கோம்."

"ஆமாம். அப்படி நினைக்கறதுக்கு நிறையக் காரணங்கள் இருக்கே. ஆளுங்கட்சிக்காரங்க அவரை மிரட்டி இருக்காங்க. அவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டும் அவருக்குப் பாதுகாப்புக் கொடுக்கல. இதையெல்லாம் வச்சுதான் ஆளுங்கட்சி மேல சந்தேகம் இருக்குன்னு நாம சொன்னோம். நாம மட்டும் இல்ல, வேற பல பத்திரிகைகளும் அப்படித்தானே எழுதிக்கிட்டிருக்காங்க?"

"ஆனா நம்ம பத்திரிகைக்கு நம்பகத்தன்மை அதிகமாச்சே சார்! நாம அப்படி சந்தேகப்பட்டு எழுதினா அது உண்மையா இருக்கும்னு ஜனங்களும் நம்புவாங்களே சார்!"

"உண்மைதான். ஆனா நாம ஆதாரம் இல்லாம அவதூறா எழுதலியே? நாம சில கேள்விகளை எழுப்பி இருக்கோம். அந்தக் கேள்விகளுக்கு அரசாங்கத்திலிருந்து சரியான பதில் இல்லியே!"

"இது தேர்தல்ல ஆளுங்கட்சிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் இல்லியா?"

"நிச்சயமா... ஏற்கெனவே போட்டி கடுமையா இருக்கும்னுதான் கருத்துக் கணிப்புகள் எல்லாம் சொல்லுது. இந்த விவகாரத்தினால ஆளுங்கட்சிக்கு பெரிய சரிவு ஏற்படலாம்."

"ஒருவேளை இந்தக் கொலையில ஆளும் கட்சிக்கு சம்பந்தம் இல்ல, வேற யாரோ செஞ்சிருக்காங்கன்னு ஒரு ஆதாரம் கிடைச்சா, அதை நம்ம பத்திரிகையிலே வெளியிடுவீங்களா சார்?"

"ஏன், உங்ககிட்ட அப்படி ஏதாவது  ஆதாரம் இருக்கா?" என்றான் அருண் சிரித்தபடி.

"இருக்கு சார்!" என்றான் ரமணன்.

"சொல்லுங்க" என்றான் அருண் சற்று வியப்புடன்.

"சார்! இது ஒரு பெரிய ஸ்கூப். ரகுவைக் கொலை பண்ணின ஆளை போலீஸ்ல புடிச்சுட்டாங்க. ஒரு தொழிலதிபர் சொல்லித்தான் இந்தக் கொலையைச் செஞ்சதா அவன் ஒப்புத்துக்கிட்டிருக்கான். ஆனா இந்த அரசாங்கத்துக்கு எதிரா இருக்கற சில போலீஸ் உயர் அதிகாரிங்க இந்தக் கைதை ரகசியமா வச்சுருக்காங்க. இந்த விஷயம் வெளியானா, அது தேர்தல்ல ஆளும் கட்சிக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும். அதை அவங்க விரும்பல. அதனால அவனை இன்னும் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சுக்கிட்டிருக்காங்க. இன்னும் ரெண்டு நாள்ள தேர்தல் முடிஞ்சுடும். அதுக்கப்பறம் இந்த விஷயத்தை வெளியில சொல்லலாம்னு இருக்காங்க."

"மை காட்! இது மட்டும் உண்மையா இருந்தா தேர்தல் முடிவையே பாதிக்குமே! ஆளுங்கட்சிக்கு எதிரா சதி பண்ணி, எதிர்க்கட்சிங்கதான் இப்படி ஒரு பொய்ப் பிரசாரத்தைப் பண்ணி இருக்காங்கன்னு ஜனங்க நினச்சு ஆளும் கட்சிக்கு ஒட்டுப் போட்டுடுவாங்களே! ஆனா இந்த நியூஸ் உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"சார்! போலீஸ் இலாகாவிலேயே நாலஞ்சு பேருக்குத்தான் இது தெரியும். அவனைக் கைது பண்ணின சப் இன்ஸ்பெக்டருக்கு இதை மறைச்சு வைக்கறது பிடிக்கல. அவர்தான் எங்கிட்ட சொன்னாரு."

"அவ்வளவுதானா? அதை வச்சு நாம நியூஸ் போட முடியாது, ரமணன், உங்களுக்குத்தான் நம்ம பாலிசி தெரியுமே! ஒண்ணு யாராவது வெளிப்படையா பேட்டி கொடுத்திருக்கணும். அல்லது வேற ஏதாவது ஆதாரம் இருக்கணும். 'பெயர் சொல்ல விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி சொன்னார்'னு நாம நியூஸ் போட முடியாது."

"ஆதாரம் இருக்கு சார்."

"என்ன ஆதாரம்?"

"அந்த சப் இன்ஸ்பெக்டர் ரிஸ்க் எடுத்து அந்தக் கைதியைப் பேட்டி எடுக்க என்னை அனுமதிச்சாரு. பேட்டியில அவன் உண்மையை எங்கிட்ட சொல்லியிருக்கான். பேட்டியை ரிக்கார்ட் பண்ணி இருக்கேன். ஃபோட்டோ எடுக்க மட்டும் அந்த சப் இன்ஸ்பெக்டர் என்னை அனுமதிக்கல."

"ரிக்கார்ட் பண்ணினதைப் போட்டுக் காட்டுங்க"

ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேட்டியைப் பத்து நிமிடம் அமைதியாகக் கேட்ட பிறகு, "வெரி குட். பெரிய ஸ்கூப்தான் இது. யூ ஹேவ் டன் எ கிரேட் ஜாப்!" என்று பாராட்டினான் அருண்.

"இந்தச் செய்தியை வெளியிடப் போறீங்களா சார்?" என்றான் ரமணன்.

"நிச்சயமா! ஆனா உங்களோட பாதுகாப்பைக் கருதி, நீங்கதான் பேட்டி எடுத்தீங்கங்கறதை இப்ப சொல்லப் போறதில்ல. போலீஸ் மேல குத்தம் சொல்லாம, அதிக விவரங்கள் கொடுக்காம பேட்டியை மட்டும் அப்படியே வெளியிடுவோம். போலீஸ் தரப்புலேருந்து இது உண்மைதான்னு கன்ஃபர்மேஷன் வந்தப்பறம் உங்க பேரை வெளியிடுவோம். அப்ப நீங்க ஒரு பெரிய ஹீரோவாயிடுவீங்க! கங்கிராசுலேஷன்ஸ்."

"ஆனா இந்தப் பேட்டி வெளியானா அது ஆளும் கட்சிக்கு சாதகமாயிடுமே சார்!"

"உண்மைதான். அதுக்காக நமக்குக் கிடைச்சிருக்கிற செய்தியை நாம வெளியிடாம இருக்க முடியாது."

"ரெண்டு நாள்ள தேர்தல் முடிஞ்சுடும். அதுக்கப்பறம் வெளியிடலாம் சார். ஓட்டுப்பதிவு முடிஞ்ச அடுத்த நிமிஷமே நம்ம வெப்சைட்டில் போட்டுடலாம்."

"நோ! இந்த ஆட்சி போக வேண்டியதுதான். நாம பேட்டியை வெளியிடறதனால இந்த நல்லது நடக்காம போகலாம். ஆனா இதை வெளியிடாம இருந்தா நாம இத்தனை நாளாக கடைப்பிடிச்சுக்கிட்டு வந்த நியாயம், நடுநிலைமை இதையெல்லாம் காத்தில விட்டுட்ட மாதிரி ஆகும். ஐ வில் நெவர் டூ தட். பேட்டியை வெளியிட்டுட்டு, 'ஆளும்கட்சி மீது சுமத்தப்பட்ட கொலைப்பழி உண்மை இல்லைங்கறதனால இந்த ஆட்சி போக வேண்டியதுதாங்கறதுக்கான மத்த காரணங்கள் மாறல, இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டியதுதான்'னு ஒரு தலையங்கம் எழுதிடலாம். அதற்குப் பிறகு மக்களோட முடிவு!" என்றான் அருண்.

தன் முதன்மை ஆசிரியரைக் கூடுதல் மரியாதையுடன் பார்த்தான் ரமணன்.
    
குறள் 113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

பொருள்:  
நடுநிலைமை தவறி நடந்து கொள்வதால் நன்மை ஏற்படும் என்ற நிலையிலும், நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


114. இறப்புக்குப் பின்...
"இவ்வளவு வருஷம் வேலை செஞ்சு என்ன பிரயோசனம்? பிள்ளைகளுக்கு ஒண்ணும் சொத்து சேத்து வைக்க முடியலியே!" என்றான் ராகவன் தன் மனைவியிடம்.

அவன் மனைவி சரளா எதுவும் சொல்லவில்லை. "இத்தனை வருஷமா நான் சொல்லிக்கிட்டிருந்ததை நீங்க இன்னிக்கு சொல்றீங்களாக்கும்!" என்று மனதில் நினைத்துக் கொண்டாள். ஆனால் அந்த சமயத்தில் அப்படிச் சொல்லித் தன் கணவனை அவள் புண்படுத்த விரும்பவில்லை.

ராகவன் வேலையிலிருந்து ஒய்வு பெற்று இரண்டு வருடங்கள் ஆகி விட்டன.

ஒய்வு பெற்ற பின் கடந்த இரண்டு வருடங்களாக அவன் வயதை ஒத்தவர்களைப் பார்த்த பிறகுதான், 30 வருடங்கள் வேலை செய்த பிறகும் தான் பெரிதாக ஒன்றும் சேமித்து வைக்கவில்லை என்று அவனுக்குத் தெரிந்தது.

30 ஆண்டுகளில் ஐந்தாறு நிறுவனங்களில் பணியாற்றிப் பல ஊர்களில் வாழ்ந்து ஒய்வு பெற்ற பிறகு அவனுக்கு மிஞ்சியது ஒரு சிறிய வீடும், பி எஃப், கிராச்சுவிட்டி என்று வந்த பணமும்தான். அந்தப் பணத்திலும் பெரும்பகுதி பெண்ணின் கல்யாணத்துக்குச் செலவழிந்து விட்டது.

மீதமிருந்த பணத்திலிருந்து வந்த வட்டி ஒன்றுதான் அவர்கள் வருமானம். அந்தப் பணம் அவர்களுக்குப் போதுமானதுதான். அதுவும் அவர்கள் மகன், மருமகள், பேரன் என்று ஒரே குடும்பமாக வாழ்ந்து வருவதால் அவர்களுக்கென்று தனிச் செலவு கூட இல்லை. ஆயினும்...

அவன் நண்பர்களில் பலர் குறைந்தது இரண்டு வீடுகளாவது வைத்திருக்கிறார்கள். அது தவிர வருடத்தில் ஒரு வாரம் விடுமுறையைக் கழிக்க ரிசார்ட்டில் முதலீடு, பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், வங்கி வைப்புகள் போன்ற சொத்துக்கள் வேறு.

சிலர் தங்கள் மகன், மகள் ஆகியோர் வீடு வாங்கப் பல லட்ச ரூபாய்கள் கொடுத்து உதவி இருக்கிறார்கள். ராகவனால் அது முடியாது. அவன் பிள்ளை சதீஷ் கடனில் வீடு வாங்கியபோது, ஒரு லட்ச ரூபாய் கூட அவனால் கொடுத்து உதவ முடியவில்லை. சதீஷ் அதை ஒரு குறையாக நினைத்தானோ என்னவோ ராகவனுக்குத் தெரியாது. ஒருவேளை மருமகளோ, சம்பந்தியோ நினைத்திருக்கலாம்!

எல்லோரும் தங்கள் பெண், பிள்ளைகளுக்கென்று எவ்வளவோ சேமித்து வைத்திருக்கும்போது, தான் மட்டும் தன் மகனுக்கு பாரமாக அவன் வீட்டில் இருந்து கொண்டிருக்கிறோமே என்று நினைத்தான்.

இதை அவன் மனைவியிடம் சொன்னபோது, "இப்ப வருத்தப்பட்டு என்ன செய்யறது? சம்பாதிக்கும்போதே நாலு காசு சேத்து வைய்யுங்கன்னு தலை தலையா அடிச்சுக்கிட்டேன். எங்கிட்ட பணத்தைக் கொடுத்திருந்தா நானாவது கொஞ்சம் சேத்து வச்சிருப்பேன்!" என்று அங்கலாய்த்துக் கொண்டாள் அவள்.

சம்பாதித்த பணமெல்லாம் எங்கே போயிற்று? அவன் ஒன்றும் ஊதாரி இல்லை. குடி, சூதாட்டம் போன்ற பழக்கங்கள் அவனுக்கு இல்லை. குடும்பத்துக்காகச் செலவழித்ததைத் தவிர, அவன் தனக்கென்று எதுவும் செய்து கொண்டதில்லை. திட்டமிட்டுச் சேமிக்காமல் வருமானத்தைச் செலவழித்ததுதான் அவன் செய்த தவறு. இன்ஷ்யூரன்ஸ் கூடப் பெரிய அளவுக்கு எடுக்கவில்லை.

'நான் இறந்த பிறகு என்னைப் பற்றி என் மகனும் மருமகளும் என்ன சொல்வார்கள்? 'எனக்கு ஒரு பைசா கூடச் சேர்த்து வைக்கவில்லை என் அப்பா!' என்று குறைப்பட்டுக் கொள்வானா சதீஷ்? நான் இறந்த பிறகு வரும் சிறிதளவு இன்ஷ்யூரன்ஸ் பணமும், என் சேமிப்பும் மட்டுமே என் மனைவியின் மிச்சமிருக்கும் வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்குமா?'

ராகவனின் கவலைகள் உண்மையாகுமா என்று தெரியும் காலம் வந்தது. தூங்கப் போனவன் காலையில் எழுந்திருக்கவில்லை. "தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பார்" என்றார் டாக்டர்.

ராகவன் இறந்த விவரம் தெரிந்ததும் பலர் வந்து பார்த்தனர். ராகவனுக்குத் தெரிந்தவர்கள் இத்தனை பேர் இருப்பார்களா என்று சரளாவுக்கே ஆச்சரியமாக இருந்தது.

"அப்பாவோட ஆபிச்சுவரியை பேப்பர்ல கொடுக்கணும். சென்னை எடிஷன்ல மட்டும் கொடுத்தாப் போதுமா? தமிழ்நாடு எடிஷன்ல கொடுக்கணுமா?" என்று சரளாவைக் கேட்டான் சதீஷ்.

"உங்கப்பா இந்தியா முழுக்கப் பல ஊர்லயும் இருந்திருக்காரு. அதனால ஆல் இந்தியா எடிஷன்லியே கொடுத்துடு" என்றாள் சரளா.

அடுத்த சில நாட்களுக்கு அவர்கள் வீட்டு ஃபோன் அடித்துக் கொண்டே இருந்தது. எங்கெங்கிருந்தோ யார் யாரோ ஃபோன் செய்தார்கள்.

"ராகவன் சார் போயிட்டாரா? ரொம்ப வருத்தமா இருக்கு. அவரை மாதிரி ஒரு மனுஷனைப் பாக்க முடியுமா? எவ்வளவு நல்லவரு!"

"நான் ஒரு சாதாரண பியூன்தான். எனக்கு எவ்வளவு மதிப்புக் கொடுத்து நடத்தினாரு!"

"எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா இருப்பாரு. யாரையும் ஒரு வார்த்தை கூடத்  தப்பாப் பேசினது கிடையாது."

"ஆஃபீஸ்ல அவருக்குக் குழி பறிச்சவங்க கிட்ட கூட அவரு விரோதம் பாராட்டியது இல்லை. இப்படி ஒரு மனுஷனைப் பாக்க முடியுமா?"

"எல்லோருக்கும் உதவி செய்வாரு. ஆனா யார்கிட்டயும் ஒரு உதவி கூடக் கேக்க மாட்டாரு. இப்படி ஒரு ஆத்மா!"

இது போன்ற அனுதாபச் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. சரளாவுக்கே ஆச்சரியமாக இருந்தது. ராகவன் ஒரு நல்ல மனிதன் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் எல்லோரிடமும் இப்படி ஒரு நல்ல பெயரைச் சம்பாதித்திருப்பான் என்று அவளுக்குத் தெரியாது.

நேரிலும் பலர் வந்து அனுதாபம் தெரிவித்தனர். அவர்களும் இதே போன்ற கருத்துக்களைக் கூறினர். அவை உபசாரத்துக்குச் சொன்ன வார்த்தைகள் இல்லை, ஆழ்மனதிலிருந்து வந்தவை என்று சரளாவுக்குப் புரிந்தது.

"உங்கப்பாவைப் பத்தி நிறைய பேர் ஃபோன்ல கேட்டாங்கடா!" என்றாள் சரளா சதீஷிடம்.

"ஆமாம்மா! எனக்கும் செல்ஃபோன்ல நிறைய கால் வந்தது. அப்பா எவ்வளவு பெரிய மனுஷர்! இப்படிப்பட்ட அப்பா கெடச்சதுக்கு நான் ரொம்பப் புண்ணியம் பண்ணி இருக்கணும்" என்றான் சதீஷ்.

அருகிலிருந்த அவன் மனைவி அதை ஆமோதிப்பது போல் புன்னகை செய்தாள்.
     
குறள் 114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.

பொருள்:  
ஒருவர் உயர்ந்தவரா இல்லையா என்பது அவர் இறந்த பின் அவர் விட்டுச் சென்ற பெயரிலிருந்து அறிந்து கொள்ளப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

115. சங்கம்
தன் சொந்த ஊரிலிருந்து வந்தவர்களை வரவேற்று அமர வைத்தார்  ராஜசேகரன்.

சற்று நேரம் பொதுவாகப் பேசிய பின் ஊர் நிலவரங்களைப் பற்றி விசாரித்தார்.

"நீங்கள்ளாம் ஊரை விட்டு வந்து டவுன்ல வேலை பாக்கறீங்க. அப்புறம் ஊரை யார் பாத்துப்பாங்க?" என்றான் மணி என்ற இளைஞன்.

"அதான் உன்னை மாதிரி இளைஞர்கள் எல்லாம் இருக்கீங்களே! நீங்க பாத்துக்க மாட்டீங்க ஊரை?" என்றார் ராஜசேகரன் சிரித்துக்கொண்டே.

"நாங்க இப்ப ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம். அது விஷயமாத்தான் உங்களைப் பாக்க வந்தோம்!" என்றார் இன்னொருவர்.

"சங்கமா? என்ன சங்கம்?"

"தமிழ்நாட்டிலே நம்ம ஜாதிக்காரங்க கணிசமா இருக்காங்க. ஆனா நாம சிதறி இருக்கறதால நம்மளை யாரும் ஒரு பொருட்டா மதிக்கறதில்ல. நாம ஒரு சங்கமா செயல்பட்டா அரசியல் கட்சிங்க நம்மளை மதிச்சு நம்ம கிட்ட வருவாங்க. நாம கேக்கறதைச் செஞ்சு கொடுப்பாங்க" என்றார் மற்றொருவர்.  .

"நம்ம ஊருக்கு ஏதாவது தேவைன்னா ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்கலாமே! எனக்கு ஊர்ல நிலபுலன் எதுவும் இல்லாட்டாலும் ஊர்க்காரியம்னா நானும் உங்களோட வந்து கலெக்டரையோ, மந்திரியையோ, எம் எல் ஏயையோ பாக்கணும்னா பாக்கறேன்" என்றார் ராஜசேகரன்.

"இது ஊர் விஷயம் இல்லீங்க. இது நம்ம ஜாதி விஷயம். நம்ம ஆளுங்களுக்கு நன்மை கிடைக்கணும்கறதுக்காகத்தான் நம்ம ஜாதிக்குன்னு ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம். ஊர் ஊராப் போய் நம்ம ஜாதி ஜனங்களையெல்லாம் உறுப்பினரா சேத்துக்கிட்டு வரோம். அது விஷயமாத்தான் உங்களைப் பாக்க வந்தோம்" என்றான் மணி.

"இங்க பாருங்க. ஏதோ ஒரு ஜாதியில் பொறந்துட்டோம்ங்கறதுக்காக நம்ம ஜாதிப்  பழக்கங்களை பின்பத்திக்கிட்டிருக்கேன். வசதிக்காக ஜாதிக்குள்ளயே கல்யாணம் பண்ணிக்கிறோம். மத்தபடி மனுஷங்க எல்லோரும் ஒண்ணுதானே? ஜாதிச்சங்கம் எல்லாம் ஆரம்பிச்சு மனுஷங்களைப் பிரிக்கிறதில எனக்கு சம்மதமில்லை. எல்லோருக்கும் நியாயம் கிடைக்கணுமனு நெனைக்கறதுதானே மனுஷத்தனம்? நம்ம ஜாதிக்கு மட்டும் சில நன்மைகள் வேணும்னு கேக்கறது எப்படி நியாயமா இருக்கும்?"

வந்தவர்கள் சற்று நேரம் அவருடன் விவாதித்து விட்டுக் கோபமாகக்  கிளம்பிப் போய் விட்டனர்.

அதற்குப் பிறகு அந்த ஜாதிச்சங்கத்தைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது அவர் காதில் விழும். சில சமயம் பத்திரிகைகளிலும் ஏதாவது செய்தி வரும். ராஜசேகரன் அவை பற்றிப் பட்டுக்கொள்ளாமல் இருந்தார்.

"ப்ப உங்களுக்கு உடம்புல தெம்பு இருந்தது. நல்ல வேலையில இருந்தீங்க. ஓரளவுக்கு வசதியா இருந்தோம். அதனால தைரியமா ஜாதிச்சங்கத்தில சேர மாட்டேன்னு உறுதியா இருந்தீங்க. இப்ப அப்படி இருக்க முடியுமா?" என்றாள் அவர் மனைவி பர்வதம்.

"ஏன் இப்ப மட்டும் யாரு ஜாதிச்சங்கத்தில சேரணும்னு  நம்மளை வற்புறுத்தறாங்க?" என்றார் ராஜசேகரன்.

"ஒண்ணும் தெரியாத மாதிரி பேசுங்க! இப்ப நீங்க ரிட்டையர் ஆயிட்டிங்க. நீங்க வேற வேலைக்குப் போனாத்தான் நம்மளால காலத்தை ஓட்ட முடியும். ஒங்களுக்கு வேற வேலை கிடைக்கறது சுலபமா இல்ல, அப்படி இருக்கறப்ப..."

ராஜசேகரன் மௌனமாக இருந்தார்.

அவர் வேலை தேடுவது தெரிந்து அவர் நண்பர் அவரிடம் ஒரு செய்தி சொன்னார். அவருக்குத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் அவருக்கு ஏற்ற வேலை இருக்கிறதாம். ஆனால் அந்த நிறுவன அதிபர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்குத்தான் வேலை கொடுப்பாராம். அதுவும் அவர்கள் ஜாதிச்சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டுமாம்!

"நான் அங்க வேலைக்கு முயற்சி பண்ணினேன். அப்ப எனக்கு கிடைச்ச தகவல் இது. நான் வேற ஜாதிங்கறதால எனக்கு அங்க வேலை கிடைக்காது. ஆனா அந்த நிறுவனத்தோட அதிபர் ஒங்க ஜாதிக்காரர்தானாம். நீங்க முயற்சி பண்ணினா கிடைக்கும்" என்று அவரிடம் சொல்லி விட்டுப் போயிருந்தார்.

அதைத்தான் அவர் மனைவி சொல்லிக் காட்டுகிறாள்!

"யோசிச்சு நல்ல முடிவா எடுங்க. நம்ம நிலைமை சரியில்லாதபோது நாம கொஞ்சம் அனுசரிச்சுத்தான் போகணும்" என்றாள் பர்வதம்.

" என்ன சொல்றே பர்வதம்? ஒரு விஷயம் தப்புன்னா எப்பவுமே தப்புதான்.  நாம சரி தப்புன்னு நெனைக்கற விஷயங்களை நம்ம நிலைமைக்கு ஏத்தபடி மாத்திக்க முடியாது" என்றார் ராஜசேகரன்.

"என்னவோ போங்க! ஒங்களுக்கு யாரு புத்தி சொல்ல முடியும்?" என்று சலித்துக் கொண்டாள் பர்வதம்.
    
குறள் 115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

பொருள்:  
வாழ்வில் உயர்வும் தாழ்வும் வருவது இயற்கைதான். ஆனால் எந்த நிலையிலும் தன மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்வதே சான்றோர்க்கு அழகு.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

116.  மாற்றி எழுதிய தீர்ப்பு
நாளை தீர்ப்பளிப்பதாக அவர் கூறி நீதிமன்ற நோட்டிஸ் போர்டிலும் போட்டு விட்டார்கள்.

பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து யாருடையது என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

தீர்ப்பின் பெரும்பகுதியை அவர் எழுதி விட்டார். இரு தரப்பினரின் வாதங்களைத் தொகுத்து எழுதியாகி விட்டது. அந்த வாதங்கள் பற்றித் தன்னுடைய கருத்தை எழுதி, எந்தத் தரப்பு வாதத்தைத் தான் ஏற்றுக் கொள்கிறேன் என்று எழுதி, அதற்கான காரணங்களைக் குறிப்பிட வேண்டும்.

இன்னும் இருபது பக்கங்கள் எழுத வேண்டி இருக்கலாம்.

இருபது!

அந்த எண் அவர் நினைவை வேறு பக்கம் செலுத்தியது.

ருபது லட்சம்!

அதுதான் அவர்கள் அவருக்குக்  கொடுப்பதாகச் சொன்ன தொகை. - அவர்களுக்குச் சாதகமாக அவர் தீர்ப்பு எழுதினால்!

ஒருநாள் காலையில் அவர் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அவர் பக்கத்தில் நடந்து வந்த முதியவர்தான் முதலில் இதைப் பற்றிப் பேசினார். அவர் உடனே கோபப்பட்டு மறுத்துப் பேச, அமைதியாக இருப்பதுதான் அவருக்கு நல்லது என்று அந்த முதியவர் அறிவுறுத்தினார்.

அதற்குப் பிறகு, பல சமயங்களில் வேறு சிலர் மூலமாக அவருக்கு ஒரு செய்தி சொல்லப்பட்டது. அவர்களுக்குச் சாதகமாக அவர் தீர்ப்பு எழுதினால், அவருக்கு 20 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும். யாரும் கண்டு பிடிக்க முடியாத விதத்தில், பணம் எப்படி, எவ்வாறு கொடுக்கப்படும் என்பதெல்லாம் அவருக்கு விவரமாக விளக்கப்பட்டது. தான் அப்படித் தீர்ப்பளித்தாலும் இன்னொரு தரப்பு மேல்முறையீடு செய்யுமே என்று அவர் சொல்லிப் பார்த்தார்.

அதைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டாம் அன்று அவர்கள் சொல்லி விட்டார்கள். 'கீழே பார்த்துக் கொண்ட எங்களால் மேலே பார்த்துக் கொள்ள முடியாதா?' என்றார்கள்.

இத்தனை வருடங்களில் அவர் நடுநிலை தவறியதில்லை. அவரது நேர்மைக்காக அவர் மிகவும் மதிக்கப்பட்டார். நேர்மையாக இல்லாத அவருடைய மேலதிகாரிகள் கூட அவரை மரியாதையுடன்தான் பார்த்தனர்.

'ஏன் எனக்கு இந்தச் சபலம்? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் என் மனம் ஊசலாடுகிறது? ஒய்வு பெறும் சமயம் ஒரு பெரிய தொகை கிடைத்தால் பிற்காலத்தில் வசதியாக இருக்கலாமே என்றா?'

அவருக்குப் புரியவில்லை. ஆனால் முதல் முறையாக அவருக்கு ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது. அதனால்தான் எப்போதும் இரண்டு நாட்கள் முன்பே தீர்ப்பை எழுதி முடித்து விடும் வழக்கமுடைய அவர் இப்போது கடைசி நாள் வரை எழுதி முடிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.

வர் ஒரு முடிவுக்கு வந்தார்.

இத்தனை ஆண்டுகள் நேர்மையாக இருந்தாகி விட்டது. ஒருமுறை பணத்துக்காக சற்று மாறுபட்டு நடந்து கொண்டால் என்ன?

கிடுகிடுவென்று தீர்ப்பை எழுதி முடித்தார். அவர் எப்போதுமே தீர்ப்பைக் கையால் எழுதி, நீதிமன்றத்தில் படித்த பிறகுதான், டைப் செய்யக் கொடுப்பது வழக்கம். தன் டைப்பிஸ்டுக்குக் கூடத்  தீர்ப்பின் விவரம் தெரியக் கூடாது என்று  கவனமாகச் செயல்பட்டவர் அவர்.

இரவில் திடீரென்று விழிப்பு வந்தது. தலைவலி! எழுந்து மாத்திரையை விழுங்கி விட்டுப் படுத்துக் கொண்டார். வலி போகவில்லை. நேரமாக ஆக வலி அதிகம் ஆகிக்கொண்டே இருப்பது போல் இருந்தது.

அவருக்குப் பழைய நினைவு வந்தது.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென்று ஒற்றைத் தலைவலி வர ஆரம்பித்தது. திடீர் திடீரென்று வரும். வந்தால் பலமணி நேரம்  நீடிக்கும். துளை போடும் இயந்திரத்தினால் யாரோ தலையைக் குடைவது போல் துடிதுடிக்கச் செய்யும் வலி.

பல ஆண்டுகள் இந்தத் தலைவலியால் அவதிப்பட்டார் அவர். பலவகை மருந்துகள் சாப்பிட்டும் வலி குறையவில்லை.

ஒருமுறை தன் குலதெய்வம் கோவிலுக்குப் போயிருந்தார். 'நான் ஒரு சிறிய தவறு கூடச் செய்யாமல் நேர்மையாக வாழ்ந்து வருகிறேன். என்னை ஏன் இப்படி வாட்டி வதைக்கிறாய்?' என்று குலதெய்வத்திடம் முறையிட்டார்.

இதற்குப் பிறகு சில மாதங்களில் அவர் தலைவலி படிப்படியாகக் குறைந்து பிறகு முழுவதுமாக நின்று விட்டது. அவர் சாப்பிட்ட சித்த மருந்துதான் அவரை குணப்படுத்தியது என்று அவர் மனைவி சொன்னாள். ஆனால், தான் குலதெய்வத்திடம் முறையிட்டதால் குலதெய்வம் தன் மீது கருணை காட்டியதாக அவர் நம்பினார்.

அந்த நினைவு இப்போது வந்ததும், அந்தப் பழைய ஒற்றைத் தலைவலிதான் திரும்ப வந்து விட்டதோ என்று தோன்றியது.

தூங்க முடியாமல், வலி பொறுக்க முடியாமல் நீண்ட நேரம் துடித்தார்.

'கடவுளே! என்னை ஏன் இப்படி வாட்டி வதைக்கிறாய்?' என்று அலறத் தோன்றியது. முன்பு தான் குலதெய்வத்திடம் முறையிட்டது நினைவுக்கு வந்தது.

இப்போது அப்படி முறையிட முடியுமா?

வலியையும் மீறி அவர் ஒரு தெளிவைத் தனக்குள் உணர்ந்தார்.

படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து, தான் எழுதி வைத்திருந்த தீர்ப்புக் காகிதங்களை எடுத்தார். கடைசி இருபது பக்கங்களை மாற்றி எழுதினார். ஒருவித வெறி வந்தது போல் கை வேகமாக இயங்கித் தீர்ப்பை எழுதி முடித்தது.

மாற்றி எழுதப்பட்ட தீர்ப்பை எடுத்து உள்ளே வைத்து விட்டு மீண்டும் படுக்கையில் விழுந்தார். வலி இன்னும் குறையவில்லை. ஓருவேளை அவர் தீர்ப்பை நீதிமன்றத்தில் படித்து முடித்த பிறகு குறையலாம்!
   
குறள் 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் 
நடுவொரீஇ அல்ல செயின்..

பொருள்:  
தான் நடுநிலைமை தவறிச் செயல்பட்டால் தனக்கு கெடுதல் வரும் என்பதை ஒருவன் உணர வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


117. விளையாட்டுத் திடல்
அறைக்கதவைத் தயக்கத்துடன் திறந்து உள்ளே வந்த மணவாளனை உட்காரும்படி சைகை காட்டினார் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த வேலாயுதம்.

பேசி முடித்ததும் மணவாளனைப் பார்த்துப் புன்னகை செய்தபடியே "வாங்க. எப்படி இருக்கீங்க?" என்றார்.

"நல்லா இருக்கேன். நீங்க வரச் சொன்னதா ரவி சார் சொன்னாரு."

"ஆமாம். எதுக்குன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே!"

மணவாளன் மௌனமாக இருந்தார்.

"அந்த விளையாட்டுத் திடல் சம்பந்தமாத்தான். அது சும்மா பாழடைஞ்சுதானே  கிடக்கு? அதை யாராவது பயன்படுத்திக்கறதுக்குக் கொடுக்கறதில என்ன தப்பு?"

"சார்! உங்களுக்குத் தெரியாதது இல்ல. அது கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான இடம். அது பொதுமக்களுக்கான விளையாட்டுத் திடல். ஆனா அதை சரியாப் பராமரிக்காததால புதர் மண்டிக் கிடக்கு. மக்கள் அதை பப்ளிக் டாய்லட்டாவும் பயன்படுத்தறாங்க. அந்த இடத்தை கிளீன் பண்ணி, பொதுமக்களுக்குப் பயன்படற மாதிரி செய்யணும்னு நாம கார்ப்பரேஷனுக்குப் பல தடவை லெட்டர் போட்டிருக்கோம்."

"அது சரி. அவங்கதான் ஒண்ணும் செய்யலியே. இதுக்கெல்லாம் செலவழிக்கப் பணம் இல்லைம்பாங்க. மழைக்காலம் வரப் போகுது. மழைத்தண்ணி போற குழாய்களை சுத்தம் பண்ற வேலையையே அவங்க இன்னும் ஆரம்பிக்கல. இதையா செய்யப் போறாங்க?"

"அதுக்காக?"

"அந்த இடம் இன்னும் மோசமாத்தான் போகும். அதனாலதான் அந்த இடத்தில ஒரு ஜிம் கட்டறதுக்காக ஒரு பார்ட்டிக்குக் கொடுக்கலாம்னு அமைச்சர் சொல்றாரு. நாம அதுக்கும் தடை போட்டா எப்படி?"

"சார்!  பக்கத்தில இருக்கற ஒரு தனியார் பள்ளி அந்த இடத்தை சுத்தம் பண்ணி பள்ளிக்கூடத்துக்கு விளையாட்டுத் திடலா மாத்திக்கறோம்னு சொன்னாங்க. சனி ஞாயிறுல அந்த இடத்தைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கறதுக்கும் அனுமதிக்கறேன்னாங்க. அதுக்கே நாம ஒத்துக்கலியே!"

"அரசாங்க இடத்தை இவங்க எடுத்துக்கிட்டு, போனாப் போகுதுன்னு வாரத்தில ரெண்டு நாள் பொதுமக்களுக்கும் அனுமதி கொடுப்பாங்களாம்! அதை எப்படி நாம ஏத்துக்க முடியும்?"

"சரி சார்! அது மாணவர்களுக்குப் பயன்பட்டிருக்கும். அதுக்கே நாம ஒத்துக்கல. அப்படி இருக்கறச்சே தனியாருக்கு அந்த இடத்தை சும்மா கொடுக்கறதுக்கு நாம எப்படி ஒத்துக்க முடியும்?"

"சும்மா கொடுக்கலியே! வாடகைக்குத் தானே கொடுக்கறோம்?"

:சார்! பத்து கோடி ரூபா மதிப்புள்ள இடத்தை 99 வருஷத்துக்கு மாசம் 1000 ரூபா வாடகைக்குக் கொடுக்கறது எப்படி சார் நியாயமாகும்?"

"நியாய அநியாயத்தைப் பத்திப் பேசறதுக்கு நீங்களும் நானும் யாரு? அமைச்சர் தனக்கு வேண்டியவருக்கு அந்த இடத்தைக் கொடுக்க விரும்பறாரு! இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். 'அந்த இடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமா இருக்கு' ன்னு நம்ம இலாக்காவிலிருந்து ஒரு ரிப்போர்ட் வேணும். நீங்கதான் முதல் நிலை அதிகாரி. நீங்கதான் இந்த மாதிரி ரிப்போர்ட் எழுதணும். நாங்க எல்லோரும் அதை அப்படியே ஆமோதிச்சு எழுதிட்டா அதோட அடிப்படையில நிலத்தை அமைச்சரோட நண்பருக்கு 99 வருஷ லீசுக்குக் கொடுக்க செகரெட்டரி உத்தரவு போட்டுடுவாரு. உங்களுக்கு வேணும்னா அந்த ஏரியாவில் இருக்கறவங்க சில பேர் கிட்டேயிருந்து அந்த இடம் சுகாதாரக் குறைவா இருக்கறதுனால அங்கே இருக்கற குழந்தைகளுக்கெல்லாம் அடிக்கடி வியாதி வருதுன்னு ரிப்போர்ட் வாங்கிக் கொடுக்கறேன்."

"அந்த மாதிரி ரிப்போர்ட் எல்லாம் ஏற்கெனவே நிறைய நமக்கு வந்திருக்கு சார்!"

"அப்புறம் என்ன?"

"அதுக்கு நாம செய்ய வேண்டியது அந்த இடத்தை சுத்தம் பண்றதுதான். இதைப் பத்தி நாம ஏற்கெனவே கார்ப்பரேஷனுக்கு நிறைய தடவை எழுதிட்டோம்."

"மணவாளன்! நீங்க போகாத ஊருக்கு வழி சொல்றீங்க! நீங்க நேர்மையானவர்னு எனக்குத் தெரியும். நான் உங்களை லஞ்சம் வாங்கச் சொல்லல. அமைச்சரோட விருப்பத்தை நிறைவேத்தற மாதிரி ஒரு ரிப்போர்ட் கொடுக்கச் சொல்றேன். அவ்வளவுதான். அதுவும் பொய்யான ரிப்போர்ட் இல்ல. அந்த விளையாட்டுத் திடல் பயன்படுத்தப்படாம பாழடைஞ்சு கெடக்குங்கறது உண்மைதானே? அந்த இடத்தில ஜிம் வைக்கறதில தப்பு இல்லேன்னு கூட நீங்க சொல்ல வேண்டாம். அந்த இடத்தை வேற விதமாப் பயன்படுத்தறதை பத்திப் பரிசீலிக்கலாம்னு எழுதினா கூடப் போதும். அதை வச்சு நாங்க மேல எழுதிக்கறோம்" என்றார் வேலாயுதம்,

"ஐ ஆம் சாரி சார்" என்றார் மணவாளன் சுருக்கமாக.

"உங்களுக்குத் தெரியும்னு நினைக்கறேன். பிரமோஷன் லிஸ்ட்ல ஒங்க பேரு இருக்கு. இன்னும் ரெண்டு மூணு மாசத்துல பிரமோஷன் வந்துடும். அதை நீங்க மிஸ் பண்ணப் போறீங்களா?"

"நான் வரேன் சார்" என்று எழுந்தார் மணவாளன்.

"மணவாளன்! நீங்க ஒத்துழைக்காததால் அமைச்சர் இதைக் கைவிட்டுட மாட்டாரு. உங்களை மாத்திட்டு ஒங்க இடத்தில வேற ஆளைப் போட்டு வேலையை முடிச்சுடுவாங்க. நான் எதுவும் செஞ்சுட்டதா நினைக்காதீங்க" என்றார் வேலாயுதம்.

மணவாளன் சிரித்துக்கொண்டே வெளியேறினார்.

அநேகமாக அவரை வேறு ஊருக்கு மாற்றி விடுவார்கள். இது அக்டோபர் மாதம் என்பதால் பிள்ளைகளை வேறு ஊரில் போய்ப் பள்ளியில் சேர்க்க முடியாது. அவர் மட்டும்தான் போக வேண்டும். மனைவியும் குழந்தைகளும் தனியே இங்கே இருக்க வேண்டும். அதிகச் செலவு. அது தவிர இன்னும் பல அசௌகரியங்கள்.

இதுபோல் ஏற்கெனவே சிலமுறைகள் நடந்திருக்கின்றன. இதனால் அவர் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இத்தனை வருடம் அரசாங்க வேலையில் இருந்தும் நாலு காசு சேர்க்கவில்லை. சொந்தமாக வீடு வாங்கவில்லை.

'நாலு பேர் என்னைக் கேலி பேசுவார்களோ?'

அவருக்குத் தெரியவில்லை.
   
குறள் 117
கெடுவாக வையாது உலகம் நடுவாக 
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

பொருள்:  
நடுநிலைமை தவறாமல் செயல்பட்டதால் ஒருவனுக்குக் கேடு  விளைந்தாலும், அதற்காக உலகம் அவனைப் பழிக்காது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

118. அம்ப்பயரின் முடிவு
பிரகாஷ் நகர் கிரிக்கட் குழுவுக்கும் அவ்வை நகர் கிரிக்கட் குழுவுக்கும் இடையே, ஐம்பது ஓவர் கிரிக்கட் மேட்ச் நடத்துவது என்று முடிவு செய்தபின் அம்ப்பயராக யாரைப் போடுவது என்ற கேள்வி எழுந்தது.

இரண்டு கேப்டன்களும் சேர்ந்து பேசி, மாநில அளவுப் போட்டிகளில் விளையாடிய, ஒய்வு பெற்ற கிரிக்கட் வீரர் சேகரை அணுகினர்.

"எனக்கு அம்ப்பயரா இருப்பதில் ஆர்வம் இல்லை. தியாகராஜன்னு என் நண்பர் ஒத்தர் இருக்காரு. வேணும்னா அவர்கிட்ட சொல்றேன்" என்றார் சேகர்.

"நாங்க கேள்விப்பட்டதே இல்லியே! அவரு பெரிய பிளேயரா என்ன?" என்றான் பிரகாஷ் நகர் குழுவின் கேப்டன் முரளி.

"கிரிக்கட் விளையாடறவங்கதான் நல்ல அம்ப்பயரா இருக்கணும்கறது இல்ல. கிரிக்கட் மேட்ச்சைக் கூர்ந்து பாக்கறவங்க கூட நல்ல அம்ப்பயரா இருக்க முடியும். அவரு அப்படிப்பட்டவர்தான். இது மாதிரி லோக்கல் லெவல் மேட்ச்சுகளுக்கெல்லாம் அவர் அம்ப்பயரா இருந்திருக்காரு. அவருக்கு விதிகள் எல்லாம் அத்துப்படி. கூர்மையா கவனிப்பாரு. அவரோட முடிவுகள் எல்லாம் சரியா இருக்கும். தூரத்திலிருந்து பாத்தே எல் பி டபிள்யு எல்லாம் கரெக்டா  சொல்லிடுவாரு. அவரோட ஜட்ஜ்மென்ட் எப்பவுமே தப்பாப் போனதில்லை."

இரண்டு கேப்டன்களும் ஒருவரை ஒருவர் பார்த்துத் தலையாட்டி விட்டு "அவரையே வச்சுக்கறோம் சார்" என்றனர்.

"இருங்க. இப்பவே அவர்கிட்ட ஃபோன் பண்ணிக் கேக்கறேன்" என்று அவருக்கு ஃபோன் செய்தார்.

ஃபோனில் ஒரு நிமிடம் பேசியபின், "அப்படியா? இருங்க. ஃபோனை ஸ்பீக்கர்ல போடறேன். அவங்களும் கேட்கட்டும்" என்றார் சேகர்.

ஸ்பீக்கரில் அவர் சொன்னதைக் கேட்டதும், அவ்வை நகர் குழுவின் கேப்டன் அரவிந்தன், பிரகாஷ் நகர் கேப்டன் முரளியிடம் "நீதான் சொல்லணும்!" என்றான்.

முரளி ஒரு நிமிடம் யோசித்து விட்டு "அவரே இருக்கட்டும் சார்" என்று சொல்லி அரவிந்தனைப் பார்த்தான்.

"உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்" என்றான் அரவிந்தன்.

மேட்ச் துவங்குவதற்குச் சில நிமிடங்கள் இருந்தபோது, பிரகாஷ் நகர் குழுவைச் சேர்ந்த பத்ரி படபடப்புடன் முரளியிடம் வந்தான் "டேய், என்னடா? இவரை அம்ப்பயராப் போட்டிருக்கீங்க? இவர் யாருன்னு தெரியுமா?" என்றான்.

"தெரியும்!" என்றான் முரளி.

"தெரிஞ்சுமா?"

"பார்க்கலாம். சேகர் சார் இவரைப் பத்தி ரொம்ப உயர்வா சொல்லி இருக்காரு."

" அது சரி....ஆனா.." என்று அரவிந்தன் ஆரம்பித்தபோது, அம்ப்பயரின் விசில் கேட்டது.

"வா போகலாம். டாஸ் போடக் கூப்பிடறாங்க" என்று விரைந்தான் முரளி.

டாஸை வென்று பேட்டிங் செய்த பிரகாஷ் நகர் அணி ஐம்பது ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது.

"நாட் பேட்!" என்றான் முரளி.

"அவ்வை நகர் டீம் பேட்டிங்கில சுமார்தான், நம்ம பௌலர்களை அவங்களால சமாளிக்க முடியாது" என்றான் கோகுல். அவன் 3 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனவன்!

"நீ பேட்டிங்கில சொதப்பின மாதிரி ஃபீல்டிங்கிலையும் சொதப்பாம இருந்தா சரிதான்!" என்றான் சாரதி எரிச்சலுடன்.

உணவு இடைவேளைக்குப் பிறகு அவ்வை நகர் அணியின் இன்னிங்ஸ் துவங்கியது.

30 ஓவர்கள் முடிந்தபோது, அவ்வை நகர் அணி 5 விக்கட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆயினும் மூன்றாவதாகக் களமிறங்கிய சந்துரு 30 ரன்கள் எடுத்து கவனமாக, நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

"இவன் ரொம்ப டேஞ்ஜரஸ். ஏற்கெனவே ரெண்டு பவுண்டரி, ஒரு  சிக்ஸர் அடிச்சிருக்கான். நின்னு ஆடினா  நமக்குக் கஷ்டம்தான்" என்றான் முரளி, தேநீர் இடைவேளையின்போது.

40 ஓவர் முடிவில் ஸ்கோர் 7 விக்கட் இழப்பிற்கு 142ஐ எட்டியிருந்தது. சந்துரு 62 ரன்கள் எடுத்திருந்தான்.

"வலுவாக இருந்த பிரகாஷ் நகர் அணியிடமிருந்து போட்டி நழுவி அவ்வை நகர் பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. 'வெற்றியே என் பக்கம் வந்துரு' என்று அழைக்கிறார் சந்துரு" என்றார் வர்ணனையாளர்.

42ஆவது ஓவரில் நிகில் போட்ட பந்து சந்துருவின் பேட்டின் முனையைத் தொட்டது போல் செல்ல, அதைப்  பிடித்த விக்கட் கீப்பர் பத்ரி "ஹே'' என்று கூவிக்கொண்டே கையைத்  தூக்கினான். பேட்டில் பந்து பட்டதா என்பது குறித்து அவனுக்குச் சந்தேகமே! பேட்டில் பந்து படவில்லை என்பது போல் சந்துரு புன்னகையுடன் அசையாமல் நின்றான்.

ஒரு சில வினாடிகளில் அம்ப்பயர் கை தூக்கி 'அவுட்' கொடுத்து விட்டார். சந்துரு நம்ப முடியாமல் அவரை முறைத்துப் பார்த்து விட்டு வெளியேறினான்.

முரளியாலேயே நம்ப முடியவில்லை. எதிர்பாராமல் வந்த அதிர்ஷ்டம் போல் இருந்தது. அம்ப்பயரைப் பற்றி சேகர் சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொண்டான்.

சந்துரு வெளியேறிய பிறகு ஆட்டத்தின் போக்கு மாறி விட்டது. 47 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து அவ்வை நகர் அணி எல்லா விக்கட்டுகளையும் இழந்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் பிரகாஷ் நகர் அணி வென்றது.

"கங்கிராட்ஸ்!" என்று முரளியின் கையைக் குலுக்கினான் அவ்வை நகர் அணியின் கேப்டன் அரவிந்தன். "ஜெயிச்சதுக்கு மட்டும் இல்ல. அம்ப்பயர் விஷயத்தில நீ தைரியமா முடிவு எடுத்ததுக்கும்தான்!" என்றான்.

"ஆமாம். நான் கூட பயந்தேன்" என்றான் பத்ரி.

"என்ன பயம்? என்ன முடிவு எடுத்தே நீ?" என்றான் நிகில்.

"சந்துரு அவுட் ஆனதுதான் மேட்ச்சோட டர்னிங் பாயின்ட். அது ரொம்ப டஃப் டிசிஷன். ஒருவேளை அம்ப்பயர் அவுட் கொடுக்கலைன்னாலும் நாம அவரைக் குத்தம் சொல்லி இருக்க முடியாது" என்றான் முரளி.

"ஆமாம்.  ஹீ  இஸ் எ கிரேட் அம்ப்பயர், நோ டவுட்! ஆனா, இவன் பயந்தேன்னு சொல்றானே, ஏன்?"

"அம்ப்பயர் யாரு தெரியுமா? சந்துருவோட அப்பா!" என்றான் முரளி.
    
குறள் 118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

பொருள்:  
இரண்டு தட்டுக்களையும் சீரான முறையில் எடை போடும் தராசு முள் போல் ஒரு புறமும் சாராமல் நியாயமாக நடந்து கொள்வதே சான்றோர்க்கு அழகாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


119. ஆன்மீகச் சொற்பொழிவு
நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கத்துக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. 

அதனால் பிரச்னையை ஒரு நடுவர் மூலம் தீர்த்துக் கொள்வது என்று இரு தரப்பினரும் முடிவு செய்தனர்.

ஒரு நடுவரை நியமிக்கும்படி இரு தரப்பினரும் தொழிலாளர் ஆணையரைக் கேட்டுக் கொள்ள, அவர் ஒய்வு பெற்ற அரசு அதிகாரி உமாபதியின் பெயரைப் பரிந்துரைத்தார். 

இரு தரப்பினரும் அவரை ஏற்காவிட்டால், ஆணையர்  வேறொரு நபரைப் பரிந்துரைப்பார் என்று ஏற்பாடு.

நிர்வாகத்தினர் அவரை உடனே ஏற்றுக்கொண்டு விட்டனர்.

தொழிற்சங்கத் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

"உமாபதி ஒரு நேர்மையான அதிகாரியா இருந்தவர்னு சொல்றாங்க. ஆனா நம்ம பக்க நியாயத்தைப் புரிஞ்சுப்பாரான்னு சந்தேகமா இருக்கு! பொதுவா இது மாதிரி ஒயிட் காலர் ஆசாமிகளுக்கெல்லாம் தொழிலாளின்னாலே கொஞ்சம் இளப்பம்தான்! நம்ம பக்கத்தில நியாயம் இருக்குன்னு ஒத்துக்குவே மாட்டாங்க" என்றார் செயலாளர் ஜெகதீசன்.

"அப்படி எல்லாரையும் பொதுப்படையா எடை போட்டுடக் கூடாது. அப்படிப் பாத்தா, நம்மளால யாரையுமே ஏத்துக்க முடியாது. இவரு எப்படிப் பட்டவர்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுவோம்" என்றார் தலைவர் செல்வராஜ்.

"தெரிஞ்சுக்கறதுக்கு என்ன இருக்கு? இவர் ஒரு பழமைவாதி. பழமைவாதிங்கள்ளாம் முதலாளிங்களுக்குத்தான் சாதகமா இருப்பாங்க!" என்றார் துணைத்தலைவர் முகுந்தன்.

"இவர் ஒரு பழமைவாதின்னு எப்படிச் சொல்றீங்க?" என்று கேட்டார் செல்வராஜ்.

"அவருதான் ஆன்மீகச் சொற்பொழிவெல்லாம் நிகழ்த்தவராச்சே!"

"அப்படியா? இன்னிக்கு அவரு சொற்பொழிவு ஏதாவது இருக்கான்னு பாருங்க!" என்றார் செல்வராஜ்.

முகுந்தன் அன்றைய பத்திரிகையைப் புரட்டிப் பார்த்து விட்டு "இருக்கு தலைவரே! நங்கநல்லூர்ல இன்னிக்கு சாயந்திரம் ராமாயணச் சொற்பொழிவு இருக்கு."

"அதுக்கு நாம மூணு பேரும் போவோம்" என்றார் செல்வராஜ் சிரித்தபடி.

மூவரும் நங்கநல்லூரில் உமாபதியின் சொற்பொழிவைக் கேட்டு முடித்தபின், செல்வராஜின் வீட்டில் கூடிப் பேசினர்.

"கடவுள் நம்பிக்கை இல்லாத மூணு பேரும் கதாகாலட்சேபத்துக்குப் போயிட்டு  வந்தீங்களே, எப்படி இருந்தது?" என்றாள் அவர்களுக்கு காப்பி கொடுத்து உபசரித்த செல்வராஜின் மனைவி கற்பகம்.

"பொதுவா, புராணக் கதைகள் சொல்றவங்கள்ளாம் புராணங்களில் வருகிற சம்பவங்களை நியாயப்படுத்தித்தான் பேசுவாங்க. ஆனா இவரு ராமர் பண்ணின சில விஷயங்களைத் தன்னால ஒத்துக்க முடியாதுன்னு சொன்னாரு."

"அது என்ன விஷயங்கள்?" என்றாள் கற்பகம் சற்று வியப்புடன்.

"நீயும் உக்காந்து கேளு. உனக்குத்தான் புராணக் கதைகள்ள ஆர்வம் உண்டே!" என்றார் செல்வராஜ்.

"சொல்லுங்க! ராமர் அப்படி என்ன தப்புப் பண்ணிட்டாராம்?" என்றாள் கற்பகம், அருகில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி.

"சுவாரசியமான விஷயம் என்னன்னா, உமாபதி நேத்திக்குத் தன்னோட சொற்பொழிவில, ராமர் வாலியை மறைஞ்சிருந்து கொன்னது தப்புன்னு சொல்லியிருக்காரு. அவர் அப்படிச் சொன்னது புராணங்களை அவமதிக்கிற மாதிரியும், பக்தர்கள் மனசைப் புண்படுத்தற மாதிரியும் இருக்கறதா இன்னிக்கு ஆடியன்ஸில ஒருத்தர் ஆவேசமாப் பேசினாரு. அவருக்கு பதில் சொன்ன உமாபதி, ராமர் இன்னும் சில தப்புகளும் பண்ணியிருக்கறதா சொல்லி அவருக்கு அதிர்ச்சி கொடுத்தாரு!"

"வாலியைக் கொன்னதையே தப்புன்னு பெரியவங்க ஒத்துக்க மாட்டாங்க. இதில இன்னும் சில தப்பு வேறயா? அது என்ன?" என்றாள் கற்பகம்.

"பெரியவங்க ஒத்துக்க மாட்டாங்கன்னு நீ சொல்றே! ஆனா தமிழ்ல ராமாயணத்தை எளிமையா எழுதின ராஜாஜியே, வாலியை ராமர் மறைஞ்சு கொன்னது தப்புன்னு சொல்லியிருக்கார்னு உமாபதி சொன்னாரு."

"அப்படியா? எனக்குத் தெரியாதே இது!" என்றாள் கற்பகம்.

"அதைச் சொல்லிட்டு, 'ராமர் இன்னும் ரெண்டு தப்பு பண்ணியிருக்கறதா நான் நினைக்கிறேன்'னாரு உமாபதி! சீதையை அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னது ஒரு தப்பாம்..."

"இதில என்ன தப்பு? சீதை சுத்தமானவங்கதான்னு உலகத்துக்குக்  காட்டறதுக்காகதானே ராமர் அவங்களை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொன்னாரு?" என்றாள் கற்பகம்.

"அப்படின்னா, தான் சுத்தமானவர்னு காட்டறதுக்கு ராமரும் இல்ல அக்கினிப் பிரவேசம் பண்ணி இருக்கணும்? ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமான்னு கேக்கறாரு உமாபதி!"

"என்னவோ! இப்படிக் கேள்வி கேக்கறதெல்லாம் எனக்கு சரியாப் படலை. சரி. இன்னொரு தப்பு என்ன?"

"கடைசியில சீதையைக் காட்டுக்கு அனுப்பினது!"

"ஏங்க, ஒரு அரசனா, தன்னோட கடமையைத்தானே அவர் செஞ்சாரு? நாட்டு மக்கள்ள ஒருத்தர் சீதையைப் பத்தித் தப்பாப் பேசினதுனாலதானே அப்படிச் செஞ்சாரு?"

"ஊர்ல யாரோ தப்பாப் பேசினா அதுக்காக மனைவிக்கு தண்டனை கொடுக்கறதா? இதை நான் கேக்கல. உமாபதிதான் கேட்டாரு! அதுதான் ஒரு தடவை அக்கினிப் பிரவேசம் செஞ்சு சீதை தன்னோட கற்பை நிரூபிச்சுட்டாங்களே, அதுக்கப்பறமும் யாரோ சொன்னதுக்காக அவங்களைக் காட்டுக்கு அனுப்பியது கொடுமை இல்லையான்னு கேட்டாரு?"

"அதுக்காக, ஒரு அரசர் மக்கள் பேசறதைப் புறக்கணிச்சுட முடியுமா?"

"இந்தக் கேள்விக்கு அவர் சொன்ன பதில்தான் டாப்! ராமர் என்ன செஞ்சிருக்கணும்? 'என் மனைவி குற்றமற்றவள். அவளை நீங்க சந்தேகப்பட்டப்பறம், அவளை நான் ராணியா வச்சுக்க முடியாது. அதுக்காக அவளைக் கைவிடவும் முடியாது. நான் அரசனா இருந்தாத்தானே இப்படியெல்லாம் பேசுவீங்க? நான் அரசனா இருக்கப் போறதில்ல. என் மனைவியோட எங்கியாவது போய் இருந்துக்கறேன், நீங்க வேற ஒரு அரசனைப் பாத்துக்கங்க'ன்னு சொல்லிட்டு ராமர் நாட்டை விட்டே போயிருக்கணும்கறது அவரோட கருத்து."

"அடேயப்பா! இப்படி ஒரு நியாயமா?"

"ஆமாம். கேள்வி கேட்டவருக்கு ஏன் கேட்டோம்னு ஆயிடுச்சு. 'இப்படியெல்லாம் பேசற நீங்க ஏன் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்திறீங்க?'ன்னு அவரு கோபமாக் கத்திப் பேசினாரு. அதுக்கும் உமாபதி பொறுமையா பதில் சொன்னாரு. 'நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான். ராமரை தெய்வமா வணங்கறவன்தான். ராமாயணத்தில் ராமர் என்கிற பாத்திரம் செஞ்ச சில தவறுகளைச் சொன்னேன். அவ்வளவுதான். ஒரு விஷயம் தப்புன்னு தோணிச்சுன்னா அதைத் தப்புன்னுன்னு சொல்றதுதான் நியாயம். நமக்குப் பிடித்தமானவங்க, நமக்கு வேண்டியவங்கங்கறதுக்காக அவங்க செய்யறதையெல்லாம் சரின்னு நியாயப்படுத்த முடியாதுன்னு அவர் கொடுத்த விளக்கம் எனக்குப் பிடிச்சிருந்தது."

"அப்ப என்ன முடிவு எடுக்கப் போறோம்?" என்றார் ஜெகதீசன்

"நீங்களே சொல்லுங்க! நீங்களும்தானே அவர் பேச்சைக் கேட்டீங்க? ஒருத்தர் மனசில இருக்கறதுதான் வார்த்தையிலே வரும். அவர் அடிப்படையில எந்த விஷயத்தையும் நடுநிலையாப் பாக்கறவர்னுதான் எனக்குத் தோணுது. அதனாலதான் ஆன்மீகச் சொற்பொழிவுல கூட தன்னோட ஆடியன்ஸ் விரும்ப மாட்டாங்கன்னு தெரிஞ்சும் தனக்கு சரின்னு பட்டதைச் சொல்லியிருக்காரு. இப்படிப்பட்டவர் நம்ம பக்கத்தில இருக்கிற நியாயத்தை ஒத்துப்பார்ன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?" என்று செல்வராஜ் மற்ற இருவரையும் பார்த்தார்.

"நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்" என்றார் முகுந்தன். ஜெகதீசன் அதை ஆமோதித்துத் தலையாட்டினார்.
   
குறள் 119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

பொருள்:  
சிந்தனை கோணல் இல்லாமல் நேராக இருந்தால், பேச்சும் நேர்மை தவறாமல் இருக்கும். இதுதான் நடுநிலைமை.

120. மர பீரோ 
கிராமத்து வீட்டை விற்று வீட்டுக் கிளம்பியபோது வீட்டிலிருந்த சிறிய பொருட்கள் எல்லாவற்றையும் ஊரில் இருந்தவர்களுக்குப் பெரும்பாலும் இலவசமாகவும், ஒரு சிலவற்றை எடைக்குப் போடுவது போன்ற விலைக்கும் கொடுத்த பிறகு, மூன்று பெரிய மரச் சாமான்கள் மிஞ்சின. ஒரு பீரோ, ஒரு சாய்வு நாற்காலி, ஒரு பெரிய மேஜை.

மூன்று சகோதரர்களும் ஆளுக்கு ஒன்று என்று பிரித்துக் கொண்டோம். என் பங்குக்கு மர பீரோ கிடைத்தது. சாய்வு நாற்காலியையும், பெரிய மேஜையையும் என் சகோதரர்கள் ஊரில் இருந்த ஒரு புதுப்பணக்காரருக்கு நல்ல விலைக்கு விற்று விட்டார்கள். புதுப்பணக்காரர் என்னிடம் பீரோவை விலைக்குக் கேட்டார். ஆனால் நான் அதை விற்க விரும்பவில்லை.

பீரோவைச் சென்னையிலிருந்த என் (வாடகை) வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டேன். 'கொண்டு வந்து விட்டேன்' என்று சாதாரணமாகச் சொல்லி விட்டேனே தவிர, கொண்டு வருவது அவ்வளவு சுலபமாக இல்லை. பீரோ மிகவும் கனம் என்பதால் பல ஆட்களை வைத்து அதை மாட்டு வண்டியில் ஏற்றி, 10 கிலோமீட்டர் தூரத்தில், நகரத்தில் இருந்த லாரி ஆஃபிசுக்குக் கொண்டு வந்தேன்.

லாரி ஆஃபீசில் பீரோவை இறக்கவும் பல ஆட்கள் தேவைப்பட்டனர். முதலில் லாரி ஆஃபீசில் பீரோவை லாரியில் ஏற்றி அனுப்ப முடியாது என்று சொல்லி விட்டார்கள். கெஞ்சிக் கூத்தாடி அவர்களைச் சம்மதிக்க வைத்தேன். அவர்கள் கேட்ட லாரி வாடகைத்தொகையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து பீரோவை அங்கேயே விட்டு விட்டு, அவர்கள் கவனிக்காதபோது நழுவி ஒடி விடலாமா என்று கூட யோசித்தேன். ஆயினும் வேறு வழியின்றி அவர்கள் கேட்ட வாடகையைக் கொடுத்து பீரோவை லாரியில் அனுப்ப ஏற்பாடு செய்தேன். 

சென்னைக்கு பீரோ வந்ததும், அதை லாரி ஆஃபீசிலிருந்து வீட்டுக்குக்  கொண்டு வர நான் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கொள்ளை அடிப்பது போல் என்னிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்ட லாரி நிறுவனமும், கூலி ஆட்களும் ஏதோ எனக்கு இலவச சேவை செய்வது போல் நடந்து கொண்டார்கள். ஒவ்வொருவரிடமும் நான் கெஞ்ச வேண்டியிருந்தது.

"என்ன சார் பீரோ இது? பொணம் கனம் கனக்குது!" என்ற விமரிசனத்தைப்  பலமுறை பலர் வாயிலிருந்தும் கேட்டு விட்டேன். பீரோவைத் தூக்குபவர்கள் கவனமாகத் தூக்காமல் கீழே போட்டு விட்டால் பீரோவுக்குச் சேதம் ஏற்பட்டு விடுமே என்ற பயத்தில் 'பார்த்து மெதுவாத் தூக்குங்க!" என்று அடிக்கடி அவர்களிடம் கெஞ்சிக்கொண்டே இருந்தேன்.

ஒரு வழியாக பீரோ வீட்டுக்கு வந்து சேர்ந்ததுமே, கழுகுக்கு மூக்கில் வியர்த்தது போல் ஒடி வந்த வீட்டுச் சொந்தக்காரர் "என்ன சார் இது? எங்கேருந்து கொண்டு வரீங்க இதை? தரை உடைஞ்சுடப்  போகுது. பார்த்துக்கங்க!" என்று எச்சரித்தார்.

'இரும்பு பீரோவால்தான்யா தரை உடையும், மர பீரோவால் உடையாது, இது கூட உன் மர மண்டைக்குத் தெரியாதா?' என்று மனதில் எழுந்த வார்த்தைகளை விழுங்கி விட்டு அசட்டுத்தனமாகச் சிரித்து விட்டு "நான் பாத்துக்கறேன் சார்! கவலைப்படாதீங்க" என்று பொறுமையாக பதில் சொன்னேன்.

ஒரு வழியாக பீரோ வீட்டுக்குள் வந்து நிலை கொண்டது. பீரோவைக் கொண்டு வந்து சேர்த்ததற்கு ஆன மொத்த செலவைக் கேட்டதும் என் மனைவி மயங்கி விழாத குறையாக "இவ்வளவு செலவழிச்சதுக்கு, நாலு காட்ரேஜ் பீரோ வாங்கி இருக்கலாம் போலிருக்கே!" என்றாள்

15 வருடங்களில் மூன்று முறை வீடு மாறிய போதும் பீரோவை இடம் மாற்ற நிறையச் செலவாயிற்று.

ப்போது சொந்த வீடு வாங்கிக்கொண்டு போகும்போது பீரோவை எடுத்துக்கொண்டு போக முடியவில்லை. என் சொந்த வீட்டில் பீரோவை வைக்க இடம் இல்லை என்று என் குடும்பத்தினர் அனைவரும் (என்னைத்தவிர) சேர்ந்து முடிவு செய்து விட்டனர்.

"இந்த பீரோவுக்காக நீங்க செலவழிச்சதெல்லாம் போதும். இதை வித்துத் தொலையுங்க" என்றாள் என் மனைவி.

வேறு வழியின்றி பீரோவை விற்க முடிவு செய்தேன்.

பத்திரிகை விளம்பரங்களைப் பார்த்தபோது, பழைய பொருட்களை வாங்க இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று வியப்பாக இருந்தது. ஐந்தாறு வியாபாரிகளிடம் காட்டி யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களிடம் விற்று விடலாம் என்று (புத்திசாலித்தனமாக!) நினைத்துக் கொண்டேன்.

ஆனால் பீரோவைப் பார்த்த யாருமே அதற்கு ஒரு சுமாரான விலை கொடுக்கக்கூடத் தயாராயில்லை.

"இதெல்லாம் போகாது சார்! விறகுக்குக் கூட யாரும் வாங்க மாட்டாங்க. வேணும்னா சொல்லுங்க. வண்டியில எடுத்துக்கிட்டுப் போயி எங்கேயாவது போட்டுட்டு வரேன். விலை எதுவும் கிடைக்காது" என்றார் ஒருவர்.

இன்னொருவர் பழைய பேப்பருக்குக் கொடுக்கும் விலையை விடக் குறைவான விலைக்குக் கேட்டார்.

ஐந்தாறு பேர் வந்து பார்த்தபின், ஜனார்த்தனன் என்று ஒருவர் வந்தார்.

பீரோவை நன்கு திறந்து ஒவ்வொரு பகுதியாகத் தொட்டுப் பார்த்து விட்டு, "ரொம்பப் பழைய பீரோவா இருக்கும் போலருக்கே! எவ்வளவு எதிர்பாக்கறீங்க?" என்றார்.

"அஞ்சாயிரம் ரூபாய் கொடுப்பீங்களா?" என்றேன் தயக்கத்துடன்.

ஜனார்த்தனன் சிரித்தார். "சார்! நான் ஒரு வியாபாரி. நான் விற்பனை செய்யற சரக்குக்கு அதுக்கு உரிய விலை கிடைக்கணும்னு எதிர்பார்ப்பேன். அதுபோல மத்தவங்களோட பொருளுக்கும் உரிய விலை அவங்களுக்குக்  கிடைக்கணும்னு நினைக்கறவன் நான்."

"என்ன சொல்ல வரீங்க?" என்றேன் நான் குழப்பத்துடன்.

"சார்! இது மாதிரி பழைய பொருட்களுக்கெல்லாம் நிறைய விலை கொடுக்க சில பேர் தயாரா இருக்காங்க. நான் உங்ககிட்ட அஞ்சாயிரம் ரூபா கொடுத்து இந்த பீரோவை வாங்கிட்டுப் போய் ஒரு ஆன்ட்டிக் டீலர் கிட்ட நிறைய விலைக்கு வித்துடலாம். ஆனா அது உங்களை ஏமாத்தறதா இருக்கும். நான் எனக்குத் தெரிஞ்ச ஆன்ட்டிக் டீலர்கள் சிலரோட ஃபோன் நம்பர் தரேன். அவங்களுக்கு ஃபோன் பண்ணிப் பாருங்க. அவங்க வந்து பார்த்துட்டு என்ன விலைக்கு எடுத்துக்கறோம்னு சொல்லுவாங்க .வேற சில டீலர்கள் கிட்டேயும் கேட்டுப் பாருங்க. யார் நல்ல விலை கொடுக்கறாங்களோ அவங்ககிட்ட வித்துடுங்க"

"இது சுமாரா என்ன விலைக்குப் போகும்னு நினைக்கிறீங்க?" என்றேன் நான் வியப்புடன்.

"என்னால கரெக்ட்டா சொல்ல முடியாது. எப்படியும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல போகும்!" என்றார் ஜனார்த்தனன்.
    
குறள் 120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

பொருள்:  
வியாபாரம் செய்பவர்கள் பிறர் பொருளையும் தங்கள் பொருள் போல் கருதிச் செயல்பட்டால் அதுவே சிறந்த வணிக முறை ஆகும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

No comments:

Post a Comment