About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 8 - அன்புடைமை

திருக்குறள் 
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 

71. அன்பு வந்தது என்னை ஆள வந்தது!

செண்பகத்துக்குத்  திருமணம் ஆனபோது அவளுக்கு  வயது 22. அவள் கணவன் சங்கரன் ஒரு நிறுவனத்தில் உதவியாளனாகப் பணி புரிந்து வந்தான். சுமாரான சம்பளம். இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்பே அவளுக்குத் தெரிந்ததுதான்.

அவளைப் பெண் பார்க்க வந்தபோது அவள்தான் அவனைப் பார்த்தாள். அவன் அவளைப்  பார்த்ததாகவே தெரியவில்லை. ஏதோ சம்பிரதாயத்துக்காக வந்து பெண் பார்ப்பது போல் பார்த்து விட்டுப் போய் விட்டான்.

செண்பகம் நல்ல அழகு என்று பலரும் சொல்வார்கள். அவள் அழகுக்காகவே யாராவது ஒரு பணக்காரப் பையன் அவளைக் கொத்திக்கொண்டு போய் விடுவான் அன்று அவள் அம்மாவுக்கு ஒரு நம்பிக்கை.

சங்கரனைப் போல ஒரு சாதாரணமான நிலையில் இருந்த மாப்பிள்ளையை செண்பகத்தின் அம்மா விரும்பவில்லை. ஆனால் அவள் அப்பா அவளுக்குச் சீக்கிரம் கல்யாணம் செய்து விட வேண்டும் என்ற அவசரத்தில் முதலில் வந்த வரனைப் பேசி முடித்து விட்டார்.

செண்பகத்துக்குத் தனக்கு கணவனாக வரப்போகிறவனைப் பற்றி எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லையென்றாலும், தன் அழகை ஒரு கணம் கூட அவன் ரசிக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அவள் முகத்தைக் கூட அவன் சரியாகப் பார்த்ததாகத் தெரியவில்லை.

கல்யாணத்துக்குப் பிறகும் சங்கரன் அவளை அதிகம் லட்சியம் செய்யவில்லை என்று தோன்றியது. 'நீ அழகாக இருக்கிறாய்' என்றோ, 'உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது' என்றோ பொதுவாக எல்லாக் கணவர்களும் சொல்வது போல் அவன் எதுவும் சொன்னதில்லை.

அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதில்லை; கோபித்துக் கொண்டதில்லை;.அவள் ஏதாவது தவறு செய்தால்  ஒன்றும் சொல்வதில்லை. ஒன்று கோபித்துக் கொள்ள வேண்டும், அல்லது 'பரவாயில்லை' என்றாவது  சொல்ல வேண்டும். சங்கரன் இரண்டையும் செய்வதில்லை. கோபித்துக் கொண்டிருக்கிறானா, அல்லது அவள் செய்த தவறைப்  பொருட்படுத்தவில்லையா என்று அவளால் தீர்மானிக்க முடிவதில்லை.

கல்யாணம் ஆகி ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. பாலுவும், சாந்தியும் பிறந்து விட்டார்கள். இரண்டு குழந்தைகளுக்கு மேல் வேண்டாம் என்றுதான் இரண்டாவது குழந்தைக்கு சாந்தி என்று பெயர் வைத்தான் சங்கரன். (சாந்தி, மங்களம் என்றெல்லாம் பெயர் வைத்தால் அதற்கு மேல் குழந்தை பிறக்காதாமே!)

பாலுவுக்கு நாலு வயது. சாந்திக்கு இரண்டு வயது. குழந்தைகளிடம் சங்கரனுக்கு அதிகப் பாசம் உண்டு. அவர்களும் அப்பா அப்பா என்று அவனிடம்தான் அதிகம் ஒட்டிக் கொள்வார்கள்.

"உங்களுக்கு வேண்டியதையெல்லாம் நான்தான் செய்கிறேன். ஆனால் உங்களுக்கு உங்கள் அப்பாதான் முக்கியம்!" என்று அவள் விளையாட்டாகக் குழந்தைகளைக் கோபித்துக் கொண்டபோது அவர்களுடன் சேர்ந்து சங்கரனும் சிரித்தான். எப்போதோ ஒருமுறை அவன் முகத்தில் வரும் சிரிப்பு அது!

அலுவலக வேலையின் அழுத்தமும், குடும்பப் பொருளாதார நிர்வாகத்தின் சுமையும் அன்பு, பாசம், சிரிப்பு, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை அவன் மனதிலிருந்து வற்றிப் போகச் செய்து விட்டனவோ என்று அவளுக்குத் தோன்றும்.

ஒருநாள் செண்பகம் ஜுரம் என்று படுத்துக்கொண்டு விட்டாள். இந்த ஐந்து வருடங்களில் இதற்கு முன்பு ஒருமுறை கூட உடல்நிலை சரியில்லை என்று படுத்துக் கொண்டவள் இல்லை அவள். இந்த முறை அவளால் முடியவில்லை.

குழந்தைகள் பள்ளிக்குப் போகாமல் அவள் பக்கத்திலேயே இருந்தனர். சங்கரன் பக்கத்தில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவளை ஆட்டோவில் அழைத்துச் சென்றான். ஏதேதோ டெஸ்ட் எல்லாம் எடுத்து விட்டு மருந்துகள் கொடுத்து அனுப்பினார்கள்.

பக்கத்து வீட்டு அலமேலுதான் அவளுக்குக்  கஞ்சி போட்டுக் கொடுத்ததுடன், குழந்தைகளுக்கும் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாள். ஆனால் அவள் எவ்வளவு வற்புறுத்தியும் சங்கரன் அலமேலு கொடுத்த சாப்பாட்டை வாங்க மறுத்து விட்டான்.

"உங்களுக்கு ஏன் சிரமம்? நீங்கள் குழந்தைகளுக்குச் செய்வதே பெரிய விஷயம்! நான் எப்படியாவது பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லி விட்டான்.

"நீங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள்?" என்று அவள் கேட்டதற்கு, "என் நண்பன் முரளி வீட்டில் பார்த்துக்கொள்கிறேன்" என்றான் அவன்.

ஜுரத்திலிருந்து செண்பகம் மீண்டு எழ ஏழு நாட்கள் ஆகி விட்டன. உடல்நிலை சரியானதும், முரளியின் மனைவி கீதா வந்து பார்த்தாள்.

உடல் நலம் பற்றி அவள் விசாரித்த பிறகு, "இந்த ஒரு வாரமும் அவருக்கு உங்கள் வீட்டில் சாப்பாடு போட்டு அவரைப் பார்த்துக் கொண்டதற்கு ரொம்ப நன்றி" என்றாள் செண்பகம்.

"எங்கள் வீட்டில் அவர் எங்கே சாப்பிட்டார்? நாங்கள் எவ்வளவோ வற்புறுத்தியும்  ஓரிரு முறை காப்பி குடித்ததைத் தவிர எங்கள் வீட்டில் வேறு எதுவும் சாப்பிடவில்லையே!" என்றாள் கீதா.

"உங்கள் வீட்டில் சாப்பிடுவதாகத்தானே சொன்னார்?" என்றாள் செண்பகம்.

"சும்மா சொல்லியிருக்கிறார். உங்களுக்கு உடம்பு சரியில்லாததிலிருந்து உங்கள் வீட்டுக்காரர் ஒழுங்காகச் சாப்பிடவே இல்லை. டீக்கடையில் டீயையும் பன்னையும் சாப்பிட்டு வயிற்றைக் கழுவிக் கொண்டிருப்பதாக இவர் சொன்னார். 'சங்கரன் முகத்தில் இப்படி ஒரு சோகத்தை நான் பார்த்ததில்லை. கண் கூடக் கலங்கியிருந்தது. ரகசியமாக அழுதிருக்கிறான் போலிருக்கிறது' என்று இவர் சொன்னார்."

செண்பகம் பிரமிப்புடன் கீதாவைப் பார்த்தாள். சங்கரனால் அழ முடியும் என்று கூட அவள் நினைத்ததில்லை. அதுவும் மனைவிக்காகச் சரியாகச் சாப்பிடாமல், கவலைப்பட்டு அழுதிருக்கிறான் என்றால்...

'அட பைத்தியக்காரரே! உங்களுக்கு என் மீது இவ்வளவு அன்பு இருக்கிறது என்று எனக்கு ஒரு கோடி காட்டியிருந்தால் நான் உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான பெண்ணாக இருந்திருப்பேனே!'

கீதா தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். "...இப்போதுதான் இவர் என்னிடம் சொன்னார். நீங்கள் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டால் உங்கள் உடல் பலவீனமாகி விடும் என்பதற்காக அவர் ஆபரேஷன் செய்து கொண்டாராம்!.... கடவுளே! உங்களுக்கு இது தெரியாது என்று இவர் சொன்னார். நான் உளறி விட்டேனே!"

செண்பகத்தின் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது.

குறள் 71
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும்.

பொருள்:
அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. தான் அன்பு வைத்திருப்பவரின் துன்பத்தைத் தாள முடியாமல் வெளிப்படும் சிறிதளவு கண்ணீர் கூட  உள்ளிருக்கும் அன்பை வெளிப்படுத்தி விடும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:




72. சொத்து யாருக்கு?

"என் சொத்தில அவனுக்கு ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்!" ஆத்திரமாகக் கூவினார் தண்டபாணி.

"அப்படி என்ன தப்புப் பண்ணிட்டான் உங்க பையன்? வேற ஜாதியில கல்யாணம் பண்ணிக்கிட்டது அவ்வளவு பெரிய தப்பா?" என்றார் அவர் நண்பர் சோமசுந்தரம்.

"என் பேச்சை மதிக்காதவனுக்கு என் சொத்து மட்டும் எதுக்கு?"

"உங்களுக்கு இருக்கறது ஒரே பையன். அவனுக்குக் கொடுக்காம வேற யாருக்குக்  கொடுக்கப் போறீங்க?" 

"இன்னொரு  கல்யாணம் பண்ணிக்கறேன். எல்லா சொத்தையும் என் பொண்டாட்டிக்கு எழுதி வைக்கிறேன்."

"இந்த வயசிலயா?..." என்று இழுத்தார் சோமசுந்தரம்.

தண்டபாணி சொன்னபடியே செய்து விட்டார்!

தன் ஐம்பத்தைந்தாவது வயதில், நாற்பது வயதான பரிமளத்தைக் கல்யாணம் செய்து கொண்டார். பரிமளம் பெற்றோர்களை இழந்து, தூரத்து உறவினர்கள் வீட்டில் ஒரு வேலைக்காரி போல் இருந்து வந்தவள்.

யார் மூலமோ பரிமளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவளை "வளர்த்து வந்த" உறவினர்களுக்குக்  கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு அவளை மணந்து கொண்டார்.

கல்யாணம் ஆனதும் தன் சொத்துக்கள் அனைத்தையும் மனைவியின் பெயருக்கு உயில் எழுதி வைத்து விட்டார் தண்டபாணி. அவர் மகன் ராஜு வந்து கத்தி விட்டுப் போனான். கோர்ட்டுக்குப் போவேன் என்றான். "போ!" என்று சொல்லி விட்டார் தண்டபாணி.

போவதற்கு முன்,  ராஜு பரிமளத்தைக் கண்டபடி ஏசினான்."எங்கப்பனை மயக்கி சொத்தெல்லாம் எழுதி வாங்கிக்கிட்டே இல்ல? பாத்துக்கறேண்டி உன்னை!" என்றான்.

"என் பொண்டாட்டியை மரியாதை இல்லாம பேசினா உன்னைக் கொலை பண்ணிடுவேன்!" என்று கத்தியபடி பக்கத்தில் இருந்த ஏதோ ஒரு பொருளை எடுத்து மகன் மீது வீசினார் தண்டபாணி.

ராஜு போனதும், "என்னங்க இப்படிப் பண்ணிட்டீங்க? ஏற்கெனவே, சொத்துக்காகத்தான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு ஊர்ல சில பேரு பேசறாங்க. எனக்கு எதுக்கு உங்க சொத்து? பேசாம உங்க புள்ள பேருக்கே எழுதிடுங்களேன்" என்றாள் பரிமளம்.

"இப்ப சொல்றேன் கேட்டுக்க. நான் செத்துப் போன பிறகும் நீ இந்த சொத்தை ராஜுவுக்குக் கொடுக்கக் கூடாது. வேற யாருக்கு வேணும்னா கொடு. எனக்குக்  கவலையில்லை."

பத்து வருடங்கள் பரிமளத்துடன் வாழ்ந்து விட்டு தண்டபாணி இறந்து போனார்.

ண்டபாணி இறந்த பிறகு ராஜு பரிமளத்திடம் வந்து பேசினான். 

"சித்தி! உங்களுக்குத்தான் யாரும் இல்லையே! அப்பா உங்க பேர்ல எழுதி வச்சிருக்கிற சொத்தை எல்லாம் என் பேருக்கு மாத்திடுங்க. உங்களைக் காலம் முழுக்க வச்சுக் காப்பாத்தறேன். அப்படி உங்களுக்கு என்னோட இருக்க விருப்பம் இல்லேன்னா, உங்க தேவைக்கு மட்டும் கொஞ்ச சொத்தை வச்சுக்கிட்டு மீதியை எனக்குக் கொடுத்துடுங்க.  நீங்க அப்படிப் பண்ணலேன்னா, உங்க காலத்துக்கப்புறம் சொத்தெல்லாம் வேறு யார் கைக்கோ போயிடும்."

பரிமளம் மறுத்து விட்டாள். "உன் பிள்ளை பெரியவனானப்புறம் வா. அவனுக்கு ஏதாவது கொடுக்க முடியுமான்னு பாக்கறேன். உனக்கு எதுவும் கொடுக்கக் கூடாதுன்னு உங்கப்பா சொல்லியிருக்காரு."

ராஜு  மீண்டும் அவளைக் கடும் சொற்களால் ஏசி விட்டுப் போனான். தன் தந்தையை ஏமாற்றிச் சொத்தையெல்லாம் எழுதி வாங்கி விட்டதாக அவள் மீது வழக்குப் போட்டான். ஆனால் தீர்ப்பு அவனுக்குச் சாதகமாக வரவில்லை.

ண்டபாணி இறந்து பன்னிரண்டு வருடங்கள் கழித்துப் பரிமளம் உடல்நிலை சரியில்லாமல் போய்ப் படுத்த படுக்கையானாள். ராஜூவுக்குச் சொல்லி அனுப்பினாள். அவன் வரவில்லை.

சில தினங்கள் கழித்து ராஜூவுக்கு ஒரு கடிதம் வந்தது. பிரித்துப் படித்தான்.

"நான் அதிக நாள் இருக்க மாட்டேன்.சொத்துக்களை உன் பையன் பெயருக்கு எழுதியிருக்கிறேன். உயில் வக்கீலிடம் இருக்கிறது. உன் அப்பா எனக்கு எழுதி வைத்த சொத்துக்களை உனக்கே கொடுத்திருப்பேன். ஆனால் உனக்குக் கொடுக்கக் கூடாது என்று உன் அப்பா சொல்லி விட்டார். அதனால்தான் நீ வந்து கேட்டபோது மறுத்து விட்டேன்.

"உன் பையன் சிறுவன் என்பதால் அவன் பெயருக்குச் சொத்தை எழுதினால் உன்னைத்தான் கார்டியனாகப் போட வேண்டும். அது உன் அப்பாவின் விருப்பத்துக்கு விரோதமாக இருக்கும் என்பதால் அவன் பெரியவன் ஆகும் வரை காத்திருந்தேன்.

"உயில் எழுதுவது பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. நீ என் மீது வழக்குப் போட்டதால் நான் ஒரு வக்கீலைத் தேடிப் போக வேண்டியிருந்தது. அந்த வக்கீலின் உதவியுடன்தான் உயிலை எழுதினேன்.

"உன் அப்பா எனக்கு ஒரு நல்ல கணவராக இருந்தார். அவர் ஏன் உனக்கு ஒரு நல்ல அப்பாவாக இல்லை என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நீ அவரிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொண்டிருந்தால் கொஞ்ச நாளில் அவர் கோபம் குறைந்திருக்கலாம்.

"நீயும், உன் மனைவி மகன் ஆகியோரும் நீண்ட நாட்கள் நலமாக வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்."

கடிதத்தைப் படித்ததும், ராஜு பரிமளத்தின் வீட்டுக்கு ஓடினான். வீட்டின் முன் சிறு கூட்டம் இருந்தது. வக்கீலும் இருந்தார். "சித்திக்கு என்ன சார் ஆச்சு?" என்றான் ராஜு பதட்டத்துடன்.

"இன்னிக்குக் காலையில உயிர் போயிடுச்சு. எனக்கு யாரோ தகவல் சொன்னதால நான் வந்தேன்."

ராஜு உள்ளே போக யத்தனித்தான்.

"நில்லுப்பா. பாடி உள்ளே இல்லை!" என்றார் வக்கீல்.

"அதுக்குள்ளே எடுத்துட்டாங்களா? நான்தானே கொள்ளி  போடணும்?"
என்றான் ராஜு.

'அவங்க உடல் உறுப்புகள் எல்லாத்தையும் தானம் பண்ணியிருக்காங்க. அதனால அவங்க பாடி ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கு. எடுக்கக் கூடிய உடல் உறுப்புகளை எடுத்ததும் மீதி உடம்பு வரும். அதுக்கு நீ கொள்ளி  வைக்கலாம்!" என்றார் வக்கீல்.

குறள் 72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

பொருள்:
அன்பு இல்லாதவர்கள், எல்லாம் தமக்கே வேண்டும் என்ற சுயநல எண்ணத்தில் வாழ்வார்கள். அன்பு உள்ளவர்கள் தங்கள் உடைமைகளை மட்டுமின்றி தங்கள் உடலைக் கூட மற்றவர்களுக்காக அர்ப்பணித்து விடுவார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


73. கண்டேன் கல்யாணியை!

அந்த வீட்டு வாசலில் கூட்டமாக இருந்தது. ஆர்வத்தால் அருகில் சென்று பார்த்தேன். யாரோ இறந்து விட்டார்கள் என்று தெரிந்தது. பல பேர் உள்ளே போய் விட்டு வந்து கொண்டிருந்தனர். இறந்தவர் ஒரு வி.ஐ.பி போலும் என்று நினைத்துக்கொண்டேன்.

சற்றுத் தள்ளிப்போய், தெருவில் நின்றிருந்த ஒருவரிடம் விசாரித்தேன். "இறந்து போனது யார்?"

"கல்யாணி அம்மா!" என்று பதில் வந்தது.

அப்படி ஒருவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. கல்யாணி அம்மா யார் என்று அவரிடம் கேட்கத் தயக்கமாக இருந்தது. 'கல்யாணி அம்மாவைத் தெரியாதா உங்களுக்கு?' என்று பதில் சொல்லுவார் என்று தோன்றியது!

கூட்டமாக நின்றிருந்தவர்களின் அருகில் போய் நின்று கொண்டேன் - அங்கே இருந்தவர்கள் பேசுவதைக் கேட்டு கல்யாணி அம்மாவைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று.

சுமார் பதினைந்து நிமிடம் அங்கே நின்று நான் கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்கள் இவை.

நான் நினைத்தது போல் கல்யாணி என்பவர் ஒரு வி.ஐ.பி. இல்லை. ஒரு நடுத்தரக் குடும்பத்தைச்  சேர்ந்த பெண்மணி. அதிகம் படித்தவர் இல்லை, எந்தப் பதவியிலும் இருந்தவரும் இல்லை. கணவன் மனைவி என்று இரண்டே பேர் கொண்ட குடும்பம். குழந்தைகள் இல்லை.

பின் எப்படி அவரது உடலைப் பார்க்க இத்தனை பேர் வந்து நிற்கிறார்கள்?

இந்தக் கேள்விக்கு விடை காண நான் இன்னும் சற்று நேரம் நின்று மேலும் பலர் பேசியவற்றைக் கேட்க வேண்டியிருந்தது.

"ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது கல்யாணி அம்மா அவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்து, 'ஏம்மா, ரொம்ப சோர்வா இருக்கியே, கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டுப் போ' என்று என்னை வீட்டுக்குள் அழைத்தார்கள். தண்ணீர் கொடுத்து விட்டு பள்ளிக்கூடத்தில் நடந்ததைப் பற்றி விசாரித்தார்கள். அதற்குப் பிறகு தினமும் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நான் கல்யாணி அம்மா வீட்டுக்குப் போய் விட்டுத்தான் என் வீட்டுக்குப் போவேன். நான் சொல்வதையெல்லாம் சிரித்துக் கொண்டே பொறுமையாகக் கேட்டுக் கொள்வார்கள்! என் அம்மா கூட நான் ஏதாவது சொன்னால், 'போதும் போதும். போய் வேலையைப் பாரு' என்று அலுத்துக் கொள்வார்கள். கல்யாணி அம்மா மாதிரி பாசமும், அக்கறையும் கொண்ட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை!"- சொன்னவள் ஒரு சிறுமி.

"ஒருநாள் கோவிலில் உட்கார்ந்து எனக்குத் தெரிந்தவர்களிடம் என் கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். இந்தக் கல்யாணியை யாரென்றே அப்போது எனக்குத் தெரியாது. நான் சொன்னதைத் தற்செயலாகக் கேட்டு விட்டு, 'அதுதான் கோவிலுக்கு வந்து விட்டீர்களே, எல்லாம் சரியாகி விடும்!' என்றாள். அவளுடைய சிரித்த முகத்தைப் பார்த்ததுமே அவளை எனக்குப் பிடித்து விட்டது. அதற்குப் பிறகு அவளிடம் அடிக்கடி பேசியிருக்கிறேன். எனக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறாள். என்னை டாக்டரிடம் செக் அப்புக்கு அழைத்துப் போக என் வீட்டில் யாருக்கும் நேரம் இல்லை என்று சொன்னேன். அவளே என்னை அழைத்துக் கொண்டு போனாள். இது மாதிரி எத்தனையோ உதவிகள். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எல்லோரிடமும் பாசம் காட்டும் வேறொரு பிறவியை நான் பார்த்ததில்லை" - ஒரு வயதான பெண்மணி சொன்னது இது.

"இந்தத் தெருவில யார் வீட்டில இல்லேன்னாலும் அவங்களுக்கு வரும் கடிதங்கள், பார்சல்கள் எல்லாவற்றையும்  கல்யாணி அம்மாவிடம்தான் கொடுப்பேன். என் குடும்பத்தைப் பத்தி அடிக்கடி விசாரிப்பாங்க. 'வெய்யில்ல  அலையிறீங்களே!'ன்னு பரிவாகச் சொல்லி தினமும் தண்ணீர் கொடுப்பார்கள். சில நாட்கள் மோர், காப்பி எல்லாம் கூடக்  கொடுத்திருக்கிறார்கள். பார்ப்பவர்கள் நான் அவர்களுக்கு ஏதோ உறவு என்று நினைத்துக் கொள்வார்கள்.அப்படி ஒரு அன்பு காட்டுவார்கள்." சொன்னவர் ஒரு கூரியர் நிறுவனத்தின் டெலிவரி ஊழியர்.

இன்னும் நிறைய பேர் பேசுவதைக் கேட்டேன். அவற்றிலிருந்தெல்லாம் நான் புரிந்து கொண்டது இதுதான். கல்யாணி என்பவர் மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதையே தன் வாழ்க்கை முறையாகக் கொண்டிருந்திருக்கிறார். எல்லோரையும் நேசித்த அவர் மறைந்ததும், அவர் அன்பைப் பெற்றவர்கள் அவர் வீட்டு வாசலில் குவிந்தத்தில் என்ன வியப்பு?

கல்யாணியின் உயிர் பிரிந்து விட்டதால் அவர் உடல் இனி இந்த உலகில் இல்லாமல் போய் விடும். ஆனால் அவர் நினைவுகள் பலர் மனங்களிலிருந்து என்றுமே நீங்காது என்று எனக்குத் தோன்றியது.

அன்பு நடனமாடிய நெஞ்சம் கொண்ட அந்தப் பெண்மணியின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்த நானும் அவர் வீட்டுக்குள் நுழைந்தேன்.

குறள் 73
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

பொருள்:
உடலோடு எப்படி உயிர் இணைந்திருக்கிறதோ, அது போல் நம் வாழ்க்கையோடு அன்பு இணைந்திருக்க வேண்டும். (அன்பு இல்லாத வாழ்க்கை உயிர் இல்லாத உடலைப் போன்றது.)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



74. சேகரின் நண்பர்கள்

என்னைப் பெண் பார்க்க வந்தபோதே சேகர் சற்று வித்தியாசமாகத்தான் நடந்து கொண்டார். 

பெண் பார்த்ததும்,"ஓரிரு நாட்களில் கடிதம் போடுகிறோம்" என்று சொல்லி விட்டு அவர் அம்மா கிளம்ப யத்தனித்தபோது, அவர் குறுக்கிட்டு, "இதெல்லாம் எதற்கு? எனக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. பெண்ணுக்கும் என்னைப் பிடித்திருந்தால் இப்போதே பேசி முடிவு செய்து விடலாமே!" என்றார்.

அவர் பெற்றோருக்கு இது பிடிக்கவில்லை. "நீ பட்டென்று சொன்னது போல் பெண்ணும் சொல்வாள் என்று எதிர்பார்க்க முடியாது. அவள் தன் விருப்பத்தைத் தன் பெற்றோரிடம் தனியேதான் சொல்லுவாள். அதற்குத்தான் இந்த ஊருக்குப் போய்க் கடிதம் எழுதும் வழக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள் நம் பெரியோர்கள்" என்று ஒரு நீண்ட உரையாற்றி விட்டு அவர் அப்பா கிளம்பி விட்டார்.

ஆனால் சொன்னது போலவே இரண்டு நாட்களில் கடிதம் போட்டு விட்டார்கள். அவர்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதாம்! அந்த நாட்களில் பொதுவாகப் பெண்களுக்கென்று தனியே விருப்பம் கிடையாது. அவரை வேண்டாம் என்று சொல்ல எனக்குக் காரணம் எதுவும் இல்லை என்பதால் நானும் ஒப்புக்கொண்டு விட்டேன்.

கல்யாணம் நிச்சயம் ஆன இரண்டு நாட்களில் சேகர் என் வீட்டுக்கு வந்தார். என்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார் என்று நினைத்து மகிழ்ந்தேன். ஆனால் அவர் பார்க்க வந்தது என் அப்பாவை! கல்யாண மண்டபம் பற்றிச் சில யோசனைகள் சொல்வதற்காகத்தான் வந்தாராம்!

"அவசரப்பட்டு அதிக வாடகை கொடுத்து ஏதாவது மண்டபத்தை ஏற்பாடு செய்து விடாதீர்கள். குறைந்த வாடகைக்கு நல்ல மண்டபங்கள் இருப்பது பலருக்குத் தெரியாது" என்றவர், "என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு இந்த ஊரில் இருக்கும் எல்லா மண்டபங்கள் பற்றியும் தெரியும். அவன் ஆஃபீஸ் ஃபோன் நம்பர் கொடுக்கிறேன். நானும் அவனிடம் சொல்கிறேன். நீங்கள் அவனுக்கு ஃபோன் பண்ணினால் நல்ல மண்டபம் ஏற்பாடு செய்து கொடுப்பான்" என்றார் என் அப்பாவிடம்.

"மாப்பிள்ளைக்குத்தான் நம் மீது எவ்வளவு அக்கறை!" என்று அகமகிழ்ந்து போனார் என் அப்பா.

ல்யாணத்துக்குப் பிறகுதான் அவரது குணம் எனக்குத் தெரிய வந்தது. தனக்கு மாமனார் ஆகப் போகிறார் என்பதற்காக அவர் என் அப்பாவுக்கு உதவ வரவில்லை. சம்பந்தமில்லாதவராக இருந்தாலும் அவர் இந்த உதவியைச் செய்திருப்பார். அவர் சுபாவமே அதுதான்!

முன்பின் தெரியாதவர்கள் விஷயங்களில் கூட அக்கறை காட்டுவார். தானே வலியப்  போய் யோசனை கூறுவார். உதவி செய்வார். இது போன்று செய்து வந்ததால், அவர் உதவி செய்தவர்களில் பலர் அவருக்கு நண்பர்கள் ஆகி விட்டார்கள்.

எங்கள் வீட்டுக்கு இவர் நண்பர்கள் அடிக்கடி வருவது வழக்கமாகி விட்டது. அவர்களுக்குக் காப்பி போட்டுக் கொடுப்பதே எனக்குப் பெரிய வேலையாகி விட்டது.

ஆனால் இதுபற்றி நான் அலுத்துக் கொள்வதில்ல்லை. என் கணவர் மற்றவர்களுக்கு இவ்வளவு உதவி செய்யும்போது, வீட்டுக்கு வரும் அவர் நண்பர்களுக்குக் காப்பி போட்டுக் கொடுக்கும் வேலையைக் கூட நான் செய்யக்கூடாதா என்று நினைத்துக் கொள்வேன்.

ஒருமுறை எங்களுடன் ரயிலில் பயணம் செய்த ஒரு கல்லாரி மாணவி பேச்சுவாக்கில், தான் வெளி நாட்டில் போய் மேல் படிப்புப் படிக்க வேண்டும் என்று சொன்னாள். இவர் அவளிடம் விவரங்களை வாங்கிக் கொண்டார்.

ஊருக்குத் திரும்பியதும், சில நண்பர்களை விசாரித்து வெளிநாடு  சென்று படிக்க என்னென்ன செய்ய வேண்டும், இதற்கு உதவி செய்யக்கூடிய நம்பத்தக்க நிறுவனங்கள் என்ன என்ற விவரம் எல்லாம் சேகரித்து, ஒரு வாரம் கழித்து அந்தப் பெண்ணின் அப்பாவுக்கு ஃபோன் செய்து விவரங்களைச் சொன்னார்.

"என்ன சார், ரயிலில் ஏதோ பேச்சுவாக்கில் என் பெண் சொன்னதற்காக இவ்வளவு விவரங்கள் சேகரித்து எனக்கு ஃபோன் செய்திருக்கிறீர்களே! உங்களைப்  போல் இன்னொரு மனிதரை இந்த உலகத்தில் பார்க்க முடியுமா?" என்று நெகிழ்ந்து போனார் அந்தப் பெண்ணின் தந்தை.

இவர் சொன்ன விவரங்களைப் பயன்படுத்தி அந்தப் பெண் இப்போது அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறாள். வாரத்தில் இரண்டு நாள் விடியற்காலையில் அமெரிக்காவிலிருந்து ஃபோன் செய்து "என்ன அங்க்கிள் எப்படி இருக்கிறீர்கள்?" என்பாள். வாரம் ஒரு முறை அவள் அப்பா உள்ளூரிலிருந்து ஃபோன் செய்து நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார்!

ப்போதுதான் எங்கள் கல்யாணம் நடந்தது போல் இருக்கிறது. ஆனால் வருடங்கள் ஒடி விட்டன. இதோ இன்று இவர் வேலையிலிருந்து ஒய்வு பெறப் போகிறார்.

'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன்  பிள்ளை தானே வளரும்' என்ற பழமொழி உண்மையோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் எங்கள் பையனும் பெண்ணும் படித்து வேலைக்குப் போய்த் திருமணமும் ஆகி வாழ்க்கையில் வேரூன்றி விட்டார்கள்!

வேலையிலிருந்து ஒய்வு பெற்று, மாலை இவர் வீடு வந்தபோது, இவருடன் இவர் நெருங்கிய நண்பர்கள் நாலைந்து பேர் வந்தனர்.

"மேடம், இன்றைக்கு சேகருக்கு நடந்தது போல ஒரு வழியனுப்பு விழா வேறு யாருக்கும் நடந்ததில்லை. போன மாதம் ஒய்வு பெற்ற எங்கள் ஜெனரல் மேனேஜருக்கு நடந்த வழியனுப்பு விழா கூட இத்தனை சிறப்பாக நடக்கவில்லை. இத்தனைக்கும் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அத்தனை ஊழியரிடமும் நெருங்கிப் பழகியவர் எங்கள் ஜி.எம்.

"உங்கள் கணவருக்கு இவ்வளவு பாப்புலாரிடி இருப்பதைப் பார்த்து, அவருடன் இத்தனை வருடங்களாக நெருங்கிப் பழகும் எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. சேகர் என்ற பெயரை விட வசீகரன் என்ற பெயர்தான் இவருக்குப் பொருத்தமாக இருக்கும். ஆஃபிஸில் மட்டும் இல்லை, ஆஃபிசுக்கு வெளியேயும் இவருக்கு எத்தனை நண்பர்கள்! ஒருவர் தன் வாழ்நாளில் இத்தனை நண்பர்களைச் சம்பாதிக்க முடியுமா? என்றார் இவர் நண்பர் சுந்தர்.

'முடியும், மற்றவர்கள் மீது அன்பும் அக்கறையும் இருந்தால்!' என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வந்தவர்களுக்குக் காப்பி போடப் போனேன்.

குறள் 74
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

பொருள்:
மற்றவர்கள் மீது அன்பு இருந்தால் அவர்கள் நலனில் அக்கறை இருக்கும். இந்த அக்கறை நட்பு என்னும் பெரும் செல்வத்தை வழங்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



75.  தம்பியிடம் கற்ற பாடம்!

"என்னங்க, ரொம்ப நாள் கழிச்சு உங்க தம்பி தன் குடும்பத்தோட வராரு. ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு வீட்டில இருங்களேன்" என்றாள் ரேவதி.

"என்ன பொறுப்பு இல்லாம பேசற? நான் எப்படி லீவு போட முடியும்?" என்றான் குரு.

"லீவு போடாட்டாலும் பரவாயில்லை. இப்படி எரிஞ்சு விழாமலாவது இருங்க!" என்று முணுமுணுத்தாள் ரேவதி.

"என்ன முணுமுணுக்கற?"

"ஒண்ணுமில்ல. சீக்கிரமா ஆஃபீசுக்குக் கிளம்புங்க. லேட்டாயிடப் போகுது!"

"ஆமாம். இன்னிக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு. எல்லாரும் எனக்காகக் காத்துக்கிட்டிருப்பாங்க."

ரவு குரு வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் ஒரே உற்சாகம். குருவின் மகள் தீபா, மகன் கார்த்திக் இருவரும் தங்கள் சித்தப்பா குடும்பத்துடன் மிக நெருக்கமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

குருவைப் பார்த்ததும் இருவரும் சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டார்கள்.

தம்பி மனைவி கலாவையும், அவர்கள் மகன்கள் விச்சு, நரேஷ் ஆகிய இருவரையும், விசாரித்து விட்டு, குரு தன் தம்பியிடம் சற்று நேரம் உரையாடினான்.

"இத்தனை நேரம் எல்லாரும் பெரிசா சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்க. உங்க தலையைக் கண்டதும் நம்ப குழந்தைங்க ரெண்டு பேரும் அடங்கிட்டாங்க!" என்றாள் ரேவதி குருவிடம் தனிமையில்.

"நான் என்ன செஞ்சேன்?" என்றான் குரு கோபமாக.

"எதுக்கெடுத்தாலும் இப்படி வள்ளுன்னு விழறீங்களே, அது போதாதா? என்னிக்காவது குழந்தைங்ககிட்டயாவது, எங்கிட்டயாவது அன்பாகப் பேசி இருக்கீங்களா? உங்க தம்பி அவரு மனைவிகிட்டயும் பிள்ளைங்ககிட்டயும் எவ்வளவு அன்பா இருக்காரு!"

"என்ன பேசறே நீ? நான் உங்களுக்கெல்லாம் எவ்வளவு வசதி செஞ்சு கொடுத்திருக்கேன்? என் தம்பிக்கு வருமானம் கம்மி. என்னை மாதிரி அவன் பெண்டு பிள்ளைகளுக்கு செய்ய முடியுமா?"

"நீங்க பணத்தைப்பத்திப் பேசறீங்க! வசதி செஞ்சு குடுத்திருக்கீங்க. இல்லேங்கல. ஆனா எங்ககிட்ட அன்பா நடந்துக்க உங்களுக்கு நேரமும் இல்ல, அப்படி ஒரு சிந்தனையும் இல்ல. உங்களைக் கண்டாலே நம்ப குழந்தைங்க பயப்படறாங்க. உங்க தம்பி புள்ளைங்க அவங்க அப்பாகிட்ட எவ்வளவு நெருக்கமா இருக்காங்கன்னு பாருங்க!"

"நம்ப வீட்டுக்கு வந்திருக்கறதினால என் தம்பி தன் பையன்களைக் கோவிச்சுக்காம இருப்பான். அவன் வீட்டில இருக்கும்போது என்னை மாதிரிதான் இருப்பான்."

"நிச்சயமா இல்ல. அப்படி இருந்திருந்தா உங்க தம்பி குழந்தைகளுக்கு அவர்கிட்ட பயம் இருக்காதா? நீங்க வேணும்னா நாளைக்கு கவனிச்சுப் பாருங்க."

குரு பதில் பேசாமல் மௌனமாக இருந்தான்.

டுத்த நாள் குரு அலுவலகத்துக்குப் போகாமல் வீட்டில் இருந்தான். தம்பி குழந்தைகள் அவர்கள் அப்பாவிடம் பேசுவதை கவனித்தான். 'தீபாவோ, கார்த்திக்கோ என்னிடம் இவ்வளவு சுதந்திரமாகப் பேசுவார்களா? ரேவதி சொல்வது சரிதானோ?'

தற்செயலாக சமையற்கட்டுப் பக்கம் போனபோது தீபா அவள் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தது குருவின் காதில் விழுந்தது. "ஏம்மா, விச்சுகிட்டயும், நரேஷ்கிட்டயும் சித்தப்பா எப்படி ஜாலியா சிரிச்சுப் பேசிக்கிட்டு இருக்காரு! ஏன் அப்பா மட்டும் எங்ககிட்ட எரிஞ்சு விழுந்துகிட்டே  இருக்காரு?"

குருவுக்கு, தன் தலையில் யாரோ ஓங்கி அடித்த மாதிரி இருந்தது.

வசதியான வாழ்க்கையைப் பெற்றிருக்கும் தன் குடும்பத்தை விட, வசதிக் குறைவான தன் தம்பியின் குடும்பம்தான் அதிக மகிழ்ச்சியுடன் வாழ்வதாகத் தோன்றியது. இதற்குக் காரணம் தன் தம்பி தன் குடும்பத்தினரிடம் அன்பாக நடந்து கொள்வதுதானோ?

குடும்பத்தினரிடம் அன்பாக நடந்து கொள்வதைப் பற்றித் தன் தம்பியிடம் தான் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான் குரு.

குறள் 75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

பொருள்:
உலகில் இன்புற்று வாழ்பவர்கள் அடையும்  சிறப்பு அவர்கள் அன்புள்ளம் கொண்டு விளங்குவதன் பலனாக அவர்கள் பெறுவதுதான்..

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


76. நம்ப முடியவில்லை!

குணசேகரன் அந்த அலுவலகத்தில் சேர்ந்து 20 வருடங்கள் ஆகி விட்டன. இதுவரை அவர் மீது யாரும் ஒரு சிறு குறை கூடக் கூறியதில்லை. ஒருபுறம் மேலதிகாரிகளிடம் அவருக்கு நல்ல பெயர் - பொறுப்புள்ளவர், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர், நேர்மையானவர் என்று. மறுபுறம் அவருடனும், அவருக்குக்  கீழேயும் பணிபுரிபவர்களிடம் அன்புடனும், கனிவுடனும், பொறுமையாகவும் நடந்து கொள்பவர் என்றும் பெயர் உண்டு.

அதனால்தான் குணசேகரனைப் பற்றி நிறுவனத்தின் தணிக்கையாளர் சொன்ன விஷயத்தை நிர்வாக இயக்குனர் நம்பிராஜனால் நம்ப முடியவில்லை.

"அப்படி இருக்க வாய்ப்பே இல்லை, சார். குணசேகரன் மிக நேர்மையானவர். அவர் எப்படி கணக்குகளில் மோசடி செய்து பணம் கையாடியிருக்க முடியும்?" என்றார் நம்பிராஜன்.

"எங்கள் அனுபவத்தில் இதுபோல் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறோம், சார். அகப்பட்டுக் கொள்ளும் வரை எல்லோருமே நல்லவர்கள்தான்!" என்றார் தணிக்கையாளர்.

"நீங்கள் சொல்வது அனுமானத்திலா அல்லது ஆதாரத்துடனா? ஏனெனில் இதுபோன்ற சில குற்றச்சாட்டுக்கள் அனுமானத்தின் பேரில் சொல்லப்படுவதை நாம் பார்த்திருக்கிறோமே!"

"நான் சொல்வது சந்தேகத்தின் அடிப்படையில்தான். இது ஒரு திறமையான மோசடி என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வருடமும் சுமார் 2 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். உங்கள் நிறுவனம்  ஆண்டுக்குப் பல லட்சங்கள் லாபம் ஈட்டுவதால் உங்களுக்கு இந்த இழப்பு புலப்படவில்லை."

"குணசேகரன் எளிமையான வாழ்க்கை நடத்துபவர். அவருக்குப் பணத்தாசை ஏற்பட்ட வாய்ப்பு இல்லை."

"பணத்தாசை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. எல்லோருக்கும் பணத்தேவைகள் உண்டு. தேவை ஏற்படும்போது எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே ஏற்படும். நியாயமான வழிகளில் பணம் அதிகம் சம்பாதிக்க முடியாதவர்கள் வழி தவறிப் போவது என்பது நடக்கக் கூடிய ஒன்றுதான். சரி, குணசேகரனின் குடும்பம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற செலவுகளுக்கு அவருக்குப் பணம் தேவைப்பட்டிருக்கலாம்."

"அவருக்கு ஒரே பையன்தான். அவன் நல்ல மதிப்பெண்கள் வாங்கி ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் மெரிட் சீட் கிடைத்துப் படித்துக் கொண்டிருக்கிறான். அதனால் கல்லூரிக் கட்டணம் கூடக் குறைவுதான்."

"நீங்கள் அவரைக் கண்காணிப்பது நல்லது. கண்காணித்து வந்தால், அடுத்த முறை மோசடி செய்யும்போது மாட்டிக் கொள்வார்."

தணிக்கையாளர் சென்றதும் நம்பிராஜன் சற்று நேரம் யோசனை செய்தார்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு, குணசேகரனை நம்பிராஜன் தன் அறைக்கு அழைத்தார். உட்கார வைத்து, அலுவலக வேலை சம்பந்தமாக ஓரிரு கேள்விகள் கேட்ட பிறகு, திடீரென்று. "ஆமாம், உங்கள் பையன் எப்படிப் படிக்கிறான்?" என்றார்.

"நன்றாகப் படிக்கிறான் சார்" என்றார் குணசேகரன். அவர் குரலில் ஒரு நடுக்கம் இருப்பதாக நம்பிராஜனுக்குத் தோன்றியது.

"எந்தக் கல்லூரி?"

குணசேகரன் கல்லூரியின் பெயரைச் சொன்னார்.

"அந்தக் கல்லூரியில் கட்டணம் அதிகம், நன்கொடை என்று வேறு ஒரு பெரிய தொகை வாங்குகிறார்கள் என்று சொல்கிறார்களே!"

"என் பையன் மெரிட் சீட்டில்தானே படிக்கிறான்?" என்றார் குணசேகரன். அவர் குரல் எழும்பாமல் பேசுவது தெளிவாகத் தெரிந்தது.

"ப்ளஸ் டூவில் உங்கள் பையன் மார்க் எவ்வளவு?"

குணசேகரனுக்கு முகம் வியர்த்தது. "..சரியாக நினைவில்லை. நல்ல மார்க்தான்..."

"சாரி குணசேகரன்! உங்களை நான் நம்பினேன். நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள்."

"இல்லை சார். நல்ல மார்க்தான்..."

"உங்கள் மகன் மார்க்கைப் பற்றி நான் சொல்லவில்லை. என்னை ஏமாற்றிப் பணமோசடி செய்து வருகிறீர்களே, அதைச் சொன்னேன்."

"சார், என்ன சொல்கிறீர்கள்? நான் அப்படி எதுவும்..."

"நிறுத்துங்கள். உங்கள் மோசடியை நம் ஆடிட்டர் கண்டுபிடித்து விட்டார். நான் போலீசில் புகார் செய்தால் நீங்கள் சிறைக்குப் போக வேண்டி இருக்கும். உங்களை நல்லவர் என்று நினைத்தேன். என்னை ஏன் ஏமாற்றினீர்கள்?"

சட்டென்று குணசேகரன் குலுங்கக் குலுங்க அழுதார். "எல்லாம் போச்சு.என் மகனுக்கு நல்லது செய்வதாக நினைத்து என் வாழ்க்கையை நானே பாழாக்கிக் கொண்டு விட்டேன்."

"சொல்லுங்கள்! நல்லவராக இருந்த நீங்கள் ஏன் வழி மாறிப் போனீர்கள்?"

"என் பையன் நல்ல மார்க் வாங்கவில்லை. ஆனால் அவனை நல்ல படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் என் சக்திக்கு மீறி அவனை ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்து விட்டேன். அவனுக்கு மெரிட் சீட் கிடைத்திருப்பதாக ஆஃபீசில் சொல்லிக் கொண்டிருந்தேன். இல்லாவிட்டால் என்னால் எப்படி இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்க முடியும் என்று சந்தேகம் வருமே! ஆனால் வெளியில் மற்றவர்களிடம் நீங்கள்தான் பணம் கொடுத்து உதவுவதாகச் சொல்லியிருக்கிறேன். என் மனைவியும் மகனும் கூட அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்."

"அதுதானே உண்மை!"

"சார்?"

"மேலே சொல்லுங்கள்."

அந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னுடைய நகைச்சுவையை நினைத்து நம்பிராஜனுக்குச் சிரிப்பு வந்தது.

"ஆரம்பத்தில் கடன் வாங்கினேன். பிறகு கடன்காரர்கள் நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல்..." மேலே சொல்ல முடியாமல் குணசேகரன் நிறுத்தினார்.

தன் நிலைமையை உணர்ந்தவராக மறுபடியும் அழ ஆரம்பித்தார். "என் வாழ்க்கையுடன் சேர்ந்து என் மகனின் எதிர்காலமும் அழியப் போகிறது."

நம்பிராஜன் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக குணசேகரனிடம் கூறினார்:

"குணசேகரன்! நீங்கள் வழி தவறியதற்குக் காரணம் பணத்தாசை இல்லை. உங்கள் மகன் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு. ஆனாலும் நீங்கள் செய்தது குற்றம்தான். உங்களை போலீசில் ஒப்படைக்க நான் விரும்பவில்லை.

"மீண்டும் நீங்கள் இந்தக் குற்றத்தைச் செய்ய மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், இப்படி ஒரு தப்பைச் செய்த உங்களை நான் வேலையில் தொடர அனுமதிக்க முடியாது. உடல்நிலை சரியில்லை என்று சொல்லி வி ஆர் எஸ் வாங்கிக் கொள்ளுங்கள்.

"இன்னும் இரண்டு வருடங்களில் உங்கள் மகனின் படிப்பு முடிந்து விடும். அதுவரை அவன் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கவும், உங்கள் குடும்பம் நடப்பதற்கும் தேவையான அளவு பணம் உங்களுக்குக் கிடைக்கும்படி நான் பார்த்துக் கொள்கிறேன்.

"நீங்கள் போகலாம் - உங்கள் சீட்டுக்கு இல்லை. வீட்டுக்கு. உங்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் நான்தான் உங்களை மருத்துவரிடம் அனுப்பியதாகவும், அங்கிருந்து நீங்கள் வீட்டுக்குச் சென்று விட்டதாகவும், மருத்துவர் ஆலோசனைப்படி நீங்கள் இனி வேலைக்கு வராமல் வி ஆர் எஸ் வாங்கிக்கொண்டு வீட்டில் இருக்கப் போவதாகவும் நான் அலுவலகத்தில் சொல்லி விடுகிறேன். நீங்களும் உங்கள் வீட்டிலும், உங்கள் அலுவலக நண்பர்களிடமும் அப்படியே சொல்லி விடுங்கள்.

"இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு பெரிய தொகைக்கான செக் உங்கள் வீட்டுக்கு வரும். வி ஆர் எஸ் மூலம் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்குமோ அதை விட அதிகமாகவே கிடைக்கும். இத்தனை வருடங்கள் இந்த நிறுவனத்துக்காக உழைத்ததற்கு என் நன்றி."

"சார்! நான் உங்களுக்குச் செய்தது துரோகம். ஆனால் நீங்கள் இவ்வளவு பெருந்தன்மையாக...என் பையன் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க ஆரம்பித்ததும், நான் எடுத்த பணத்தை உங்களிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். அதைத் தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்?"

இருக்கையிலிருந்து தடுமாறியபடி எழுந்து கைகூப்பி விடைபெற்றார் குணசேகரன்.

குறள் 76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

பொருள்:
அறியாதவர்கள் அறம்தான் அன்பைச் சார்ந்திருக்கும் என்று கூறுவர். ஆனால் மறத்துக்கும் (அறத்துக்கு மாறான செயல்களுக்கும்) அன்பே காரணமாக அமையக் கூடும்.

(குறிப்பு: மறத்தை வீழ்த்தவும் அன்பு துணை நிற்கும்' என்றே பெரும்பாலும் இக்குறளுக்குப் பொருள் கூறப்பட்டு வந்திருக்கிறது. 'மறத்துக்கும் அஃதே துணை' என்ற வரிக்கு 'மறத்தை எதிர்க்க உதவும்' என்று பொருள் கொள்வது சரியாக எனக்குப் படவில்லை. ஆயினும், என்னை அறியாமலேயே, இந்தக் கதை இரண்டு பொருட்களுக்குமே பொருந்துமாறு அமைந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது!)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



77. மங்கள விலாஸ் ஓட்டல்

வாழ்க்கையில் சில சம்பவங்களை மறக்க முடிவதில்லை. பல வருடங்கள் ஆனாலும் வீடியோ பதிவு போல் மனத்துக்குள் பதிந்து விடும் நிகழ்வுகள் உண்டு.

நான் ஒரு அரசு ஊழியன் என்ற முறையில் கிராம, நகர, பஞ்சாயத்து அமைப்புகளைத் தணிக்கை செய்யப் பல ஊர்களுக்குப் போயிருக்கிறேன். அவற்றில் சில ஊர்களுக்குச் சென்ற நினைவுகள்தான் நீண்ட நாள் நினைவில் நிற்கின்றன.

அப்படி ஒரு சம்பவம் ஒரு சிறிய ஊரில் நடந்தது. அந்த ஊரில் எனக்கு மூன்று நாட்கள் வேலை இருந்தது. அந்த ஊர் நகரப் பஞ்சாயத்தின் (பேரூராட்சி என்று சொல்ல வேண்டும். ஆனால் என் போன்ற சிலருக்கு கிராமப் பஞ்சாயத்து, நகரப்  பஞ்சாயத்து என்றே சொல்லிப் பழகி விட்டது!) கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும்.

அது சிறிய ஊர். அந்த ஊரில் தங்கும் விடுதி எதுவும் இல்லை. அந்த நாட்களில், பெரிய நகரங்களிலேயே ஓரிரு விடுதிகள்தான் இருக்கும். அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் என்னைத் தன் வீட்டிலேயே தங்கிக் கொள்ளச் சொன்னார். நான் அதை மறுத்து விட்டு, பஞ்சாயத்து அலுவலகத்திலேயே தங்கிக் கொண்டேன்.

பகலில் தணிக்கை, இரவில் அங்கேயே மர பெஞ்ச்சில் படுக்கை. சாப்பாட்டுக்கு மட்டும் வெளியே போக வேண்டும். அந்த ஊரில் ஓடிய ஆற்றில் குளியல். அதிர்ஷ்டவசமாக அப்போது ஆற்றில் தண்ணீர் இருந்தது.

அந்த ஊரில் நாயன்மார்களால் பாடப்பட்ட ஒரு கோயில் இருந்தது. ஆயினும் அது ஒரு பிரபலமான கோயில் இல்லை. அவ்வப்போது கோயிலுக்குப் பல ஊர்களிலிருந்தும் யாத்திரிகர்கள் வருவார்கள்.

சில சமயம் டூரிஸ்ட் பஸ்கள் வரும். அதனால்தானோ என்னவோ அந்த ஊரில் ஒரு சுமாரான ஓட்டல் இருந்தது. மங்கள விலாஸ் என்று பெயர். சிறிய ஓட்டலாக இருந்தாலும் சுத்தமாக இருக்கும். சாப்பாடு, டிஃபன் ஓரளவுக்கு நன்றாகவும் இருக்கும்.

மூன்று நாட்களும், மூன்று வேளையும் எனக்கு அங்கேதான் சாப்பாடு. பஞ்சாயத்துத் தலைவர் எவ்வளவோ வற்புறுத்தியும், அவர் வீட்டுக்குச் சாப்பிடச் செல்ல நான் மறுத்து விட்டேன்.

பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரே ஒரு ஊழியர்தான் உண்டு. அவர் பெயர் ராமலிங்கம். நான் தணிக்கை செய்ய வேண்டிய கணக்குகளை அவர்தான் எனக்குக் காட்டுவார். ஓட்டலுக்கு என்னுடன் வருவார். நான் எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை.

பஞ்சாயத்துத் தலைவர், ராமலிங்கத்திடம் பணம் கொடுத்து என் சாப்பாட்டுச் செலவைப் பார்த்துக் கொள்ளும்படி அவரிடம் சொல்லியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவரை என் சாப்பாட்டுக்குப் பணம் கொடுக்க நான் அனுமதிப்பதில்லை. அதனால் அவருக்கு என் மீது ஒரு மதிப்பு ஏற்பட்டது. (அவருடைய முந்தைய அனுபவங்கள் வேறு மாதிரி இருந்திருக்கலாம்!)

அந்த ஓட்டலில் கல்லாவில் ஒரு முதியவர் அமர்ந்திருப்பார். அவருடைய மகன் ஆட்களை வேலை வாங்கிக் கொண்டிருப்பான். அவனுக்கு முப்பது  வயது இருக்கலாம். குட்டையாக, பருமனாக, திரைப்படங்களில் வரும் வில்லனின் அடியாள் போல் இருப்பான். ஓட்டல் ஊழியர்களிடம் அவன் கடுமையாகப் பேசுவதை முதல் நாளே கவனித்தேன். சாப்பிட வருபவர்களிடம் மட்டும் சிரித்துக் கொண்டே குழைந்து குழைந்து பேசுவான்.

மூன்றாம் நாள் மதியம் நான் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஏதோ சத்தம் கேட்டு உள்ளே பார்த்தேன். ஒரு கிளீனர் பையன் - அவனுக்குப் பன்னிரண்டு வயதுதான் இருக்கும் - 'வேணாம் முதலாளி' என்று கதறிக் கொண்டிருக்க, முதலாளியின் மகன் அந்த கிளீனர் பையன் வைத்திருந்த துடைப்பத்தையே வாங்கி அவனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தான். ஏழெட்டு அடிகள் அடித்து விட்டுத் துடைப்பத்தைக் கீழே போட்டதும், கிளீனர் பையன் அழுது கொண்டே துடைப்பத்தை எடுத்துக்கொண்டு உள்ளே போனான்.

கல்லாவில் உட்கார்ந்திருந்த முதலாளி நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். 'அடிக்காதே' என்றோ, 'அடித்தது போதும்' என்றோ ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும்  - அவர்களில் பலர் அந்த ஊர்க்காரர்கள் - எதுவும் சொல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

"என்ன சார் இது அக்கிரமம்?" என்றேன், என் பக்கத்தில் இருந்த ராமலிங்கத்திடம்.

"இது அடிக்கடி நடக்கறதுதான் சார். அந்தப் பையன் பாவம் ஒரு அநாதை. இவன்கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படறான்" என்றார் அவர்.

அன்று மாலை என் வேலை முடிந்து விட்டது. அன்று இரவே நான் அந்த ஊரிலிருந்து கிளம்பி விட்டேன்.

எத்தனையோ வருடங்கள் ஆகியும், அந்தச் சிறுவனின் பரிதாபமான ஓலமும், முதலாளியின் மகனின் இரக்கமற்ற செயலும் என் கண் முன் அடிக்கடி வந்து போய் எனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்.

கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் கழித்து மீண்டும் அந்த ஊருக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. வேலை விஷயமாக இல்லை. நான் வேலையிலிருந்து ஒய்வு பெற்றுச் சில வருடங்கள் ஆகி விட்டன. அந்த ஊரில் இருந்த கோயில் பற்றி ஒரு பத்திரிகையில் வந்திருந்த கட்டுரையைப் படித்து விட்டு என் மனைவி அங்கே செல்ல விரும்பினாள்.

முன்பு அலுவலக வேலையாக அந்த ஊருக்குப் போனபோது அந்தக் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்படவில்லை. ஆனால் இப்போது போக வேண்டும் என்று தோன்றியது.

என் உள்மனதில் 'அந்த மங்கள விலாஸ் ஓட்டல் இன்னும் இருக்குமா, அந்தச் சிறுவன் இப்போது எப்படி இருப்பான், முதலாளி இன்னும் உயிரோடு இருப்பாரோ (வாய்ப்பில்லை!), முதலாளியின் மகன் - சிறுவனைப் போட்டு அடித்த அந்த முரடன் - எப்படி இருப்பான்' என்றெல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்திருக்கலாம்!

த்தனை வருடங்களில் ஊர் அதிகம் மாறி விடவில்லை. கோயிலுக்கு வரும் யாத்திரிகர்கள் எண்ணிக்கை மட்டும் சற்று அதிகமாகி இருப்பதாகத் தோன்றியது.

கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்ததும், மங்கள விலாஸ் ஓட்டல் பற்றி யாரிடமாவது விசாரிக்கலாமா என்று யோசித்தேன்.

ராமலிங்கத்தின்  நினைவு வந்தது. அவர் இந்த ஊர்க்காரர்தானே? என்னுடன் மூன்று நாட்கள் உடன் இருந்த அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைக்காமல், அற்பத்தனமான ஆர்வத்தால் மங்கள விலாஸ் ஒட்டலையும், அங்கிருந்த மனிதர்களையும் பற்றியே   நினைத்துக் கொண்டிருந்ததை எண்ணிச் சற்று அவமானமாக உணர்ந்தேன். அர்த்தமில்லாத ஆர்வங்கள் நம்மை எப்படிக் கட்டுப்படுத்துகின்றன!

அவரைப் பற்றி விசாரித்தபோது, அவர் வீடு அருகில்தான் இருப்பதாகச் சொன்னார்கள். தேடிக் கொண்டு போனேன். என் மனைவிக்கு இதில் சற்றும் விருப்பமில்லை. "அவர் என்ன உங்களுக்கு நண்பரா? சாமி தரிசனம் முடிஞ்சு போச்சு. பஸ்ஸைப்  பிடிச்சு ஊருக்குப் போகிற வழியைப் பார்க்காமல்..." என்று தன் அதிருப்தியைத் தெரிவித்தாள்.

வீட்டில் ஒரு முதியவர் இருந்தார். அவரிடம் ராமலிங்கத்தைப் பற்றி விசாரித்ததும், "சார் நீங்களா? வாங்க!" என்று உற்சாகமாக வரவேற்றார். அட! இவர்தான் ராமலிங்கமா! அடையாளமே தெரியவில்லையே!

"எனக்கு உங்களை அடையாளம் தெரியலியே! உங்களுக்கு என்னை எப்படி ஞாபகம் இருக்கு?" என்றேன்.

"நான் பார்த்த இருபது, முப்பது ஆடிட்டர்களில் நாங்கள் சாப்பாடு வாங்கிக் கொடுப்பதைக் கூட ஏத்துக்காத ஒரே ஆள் நீங்கதான். என்னை ஞாபகம் வச்சுக்கிட்டு என் வீட்டைத் தேடி வந்திருக்கீங்களே!" என்றார் ராமலிங்கம், நெகிழ்ச்சியுடன்.

சற்று நேரம் பொதுவாகப் பேசி விட்டு, "ஆமாம் மங்கள விலாஸ் ஓட்டல் எப்படி இருக்கு?" என்றேன்.

"அதை மூடிட்டாங்களே!" என்றார் சுருக்கமாக.

"அங்கே ஒரு சின்னப் பையன் இருந்தானே, அந்த முதலாளி மகன் கூட அவனைத் துடைப்பக் கட்டையால அடிச்சானே..."

"அவனா? கொஞ்ச நாள்ள அந்தப் பையன் எங்கியோ ஓடிட்டான். அப்புறம் அவங்களுக்குச் சரியான ஆள் கிடைக்கலே! பெரியவர் போய்ச் சேர்ந்துட்டாரு. சண்முகத்தால - அதான் கட்டையா குட்டையா இருப்பானே, பெரியவரோட பையன் -  ஓட்டலை நடத்த முடியல. புதுசா இன்னொரு ஓட்டல் வேற வந்துடுச்சு. நஷ்டத்தைத் தாங்க முடியாம ஓட்டலை மூடிட்டான்."

"அப்புறம்?"

'இந்தக் கதையெல்லாம் உங்களுக்கு எதற்கு?' என்ற பாவனையுடன் என் மனைவி என்னை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். "பஸ் போயிடப் போகுது!" என்றாள் சூசகமாக.

"பஸ் நிறைய இருக்கு, கவலைப்படாதீங்க!" என்றார் ராமலிங்கம், என் மனைவியின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல்!

"அப்புறம் சண்முகம் ரொம்பக் கஷ்டப்பட்டான். கூலி வேலை செஞ்சுதான் பொழப்பை நடத்த வேண்டியிருந்தது. முதலாளியா இருந்து ஆளுங்களை அதட்டி மிரட்டிக்கிட்டிருந்தவன், முதலாளிங்ககிட்டப் பணிஞ்சு நடக்க வேண்டிய நிலைமை! அவனுக்கு ரெண்டு பசங்க. அவங்க பெரியவங்களானதும் ஓட்டல் இருந்த இடத்தை வித்துட்டு அந்தப் பணத்தில் தொழில் செய்யப் போறோம்னு சொன்னாங்க.

"சண்முகமும் நிலத்தை வித்து அவங்களுக்குப் பணத்தைக் கொடுத்தான். பணத்தை வாங்கிக்கிட்டுப்  போனவங்கதான்! பெத்தவங்க எப்படி இருக்காங்கன்னு கூடக் கவலைப்படல. சண்முகத்தோட பொண்டாட்டியும் போய்ச் சேந்துட்டா. இப்ப வேலை செய்ய உடம்புல தெம்பு இல்லாம, வீடு வாசல் இல்லாம, கோயில் வாசல்ல உக்காந்துக்கிட்டுப் பிச்சை எடுத்துக்கிட்டு, அங்கியே படுத்துத் தூங்கிக்கிட்டிருக்கான்."

"அடப்பாவமே!" என்றேன் நான்.

ராமலிங்கத்திடம் விடைபெற்றுக் கிளம்பினோம். வெளியே வந்ததும் "அந்த சண்முகம் கோயில்ல இருக்கானான்னு பாக்கறதுக்காக மறுபடியும் கோயிலுக்குப் போகணும்னு கெளம்பாதீங்க. என்னால நடக்க முடியாது. பஸ்ஸுக்கும் நேரமாயிடுச்சு!" என்றாள் என் மனைவி.

முரடனாக, அதிகாரம் செய்து கொண்டு இருந்தவனாக நான் பார்த்த சண்முகத்தை, 'ஐயா சாமி!' என்று கெஞ்சும் பிச்சைக்காரனாகப் பார்க்க எனக்கும் விருப்பமில்லை.

குறள் 77
என்பி லதனை வெயில்போலக் காயுமே 
அன்பி லதனை அறம்.

பொருள்:
எலும்பு இல்லாத புழு போன்ற உயிரினங்களை வெய்யில் வாட்டுவது போல், அன்பு இல்லாதவர்களை அறம் வாட்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



78. சேதுவின் கோபம்

சேது ஒரு தனிமரம் - பெண்டாட்டி, பிள்ளைகள் எல்லோரும் இருந்தும்! பணம், வசதிகள், உறவுகள் எல்லாம் இருந்தும்!

வனஜா அவனைக் கல்யாணம் செய்து கொண்டபோது, தான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவள் என்று நினைத்தாள். வசதியான இடம், பெற்றோருக்கு ஒரே பிள்ளை. வேறு என்ன வேண்டும் என்று நினைத்தாள்.

திருமணம் ஆகிப் புகுந்த வீட்டுக்கு வந்ததுமே மாமியார் அவளிடம் தனியே கிசுகிசுத்தாள். "இங்க பாரும்மா. சேது கொஞ்சம் கோவக்காரன். நீதான் அனுசரிச்சு நடந்துக்கணும்."

இது பொதுவாகச் சொல்லப்படுவது என்றுதான் வனஜா முதலில் நினைத்தாள். அப்படியே கோபக்காரராக இருந்தால்தான் என்ன? தன்னால் சமாளிக்க முடியாதா?

முடியவில்லை.

மாமியார் சொன்னபடி 'கொஞ்சம்' கோபக்காரனாக இருந்திருந்தால் சமாளித்திருப்பாள். நிறையக் கோபம் இருந்திருந்தாலும் கஷ்டப்பட்டாவது சமாளித்திருப்பாள். கோபத்தைத் தவிர வேறு உணர்ச்சிகளே இல்லாதவனை எப்படிச் சமாளிப்பாள்?

"என்ன அத்தை இவரு இப்படி இருக்காரு? எதுக்கு கோவப்படறாருன்னு தெரியாம எல்லாத்துக்கும் கோவப்பட்டா நான் என்னதான் செய்யறது?"

"என்கிட்டயும் இப்படித்தான் எரிஞ்சு விழுவான். என்ன எதிர்பாக்கறான்னே புரியாது. முன்னெல்லாம் அவன் அப்பாகிட்ட கொஞ்சம் பயப்படுவான். இப்ப அவரையும் தூக்கி எறிஞ்சு பேச ஆரம்பிச்சுட்டான். அவரு அவன்கிட்ட பேசறதையே விட்டுட்டாரு."

'இப்படிப்பட்ட மனிதனுக்கு ஏன் கல்யாணம் செய்து வைத்தீர்கள்?' என்று கேட்க நினைத்துக் கேட்காமல் விட்டாள் வனஜா.

வாழ்க்கை எப்படியோ ஓடி மூன்று குழந்தைகள் பிறந்து விட்டனர். இரண்டு பையன்கள், கடைசியாக ஒரு பெண்.

குழந்தைகள் பிறந்த பின்பாவது சேது மாறுவான் என்று நினைத்தாள் வனஜா. ஆனால் குழந்தைகளிடமும் அதே சிடுசிடுப்புத்தான். குழந்தைகளாக இருந்தபோதே அவர்களைத் தூக்கிக் கொஞ்சி விளையாடியதில்லை சேது. அவர்கள் ஏதோ பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்பது போல் கண்டும் காணாமல் இருப்பான்.

குழந்தைகள் வளர்ந்ததும் தந்தையின் கோபத்தை உணர்ந்து அவன் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு மனிதன் என்று விரைவிலேயே புரிந்து கொண்டார்கள். இதனாலேயே குழந்தைகள் மூவருக்கும் அம்மாவின் மீது அளவு கடந்த பாசம் ஏற்பட்டு  விட்டது.

கால ஓட்டத்தில் சேதுவின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக மறைந்தனர். சேதுவுக்குச் சிறிதும் வருத்தம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. "வயசானா, போகத்தான் வேணும்! உனக்கும் எனக்கும் கூட இதே கதிதானே?" என்று வனஜாவிடம் தத்துவ ஞானி போல் பேசினான்.

குழந்தைகள் வேகமாக வளர்ந்து வந்தனர்.

பெரியவன் படித்து முடித்ததும் அவனுக்கு வெளியூரில் வேலை கிடைத்தது. வனஜா அவனிடம், "நாங்க மூணு பேரும் உன்னோடயே வந்துடறோம். உன் தம்பியும், தங்கையும் அங்கே வந்து படிக்கட்டும்!" என்றாள்.

"அப்பா?" என்றான் மகன்.

"அவரு இங்கேயே இருக்கட்டும். அவர்கிட்டேயிருந்து விடுதலை கிடைக்கணும்னுதானே நாம நாலு பேரும் தனியாப்  போயிடலாம்னு சொல்றேன்!"

"ஹை ஜாலி!" என்றாள் கடைக்குட்டியான அவள் பெண்.

சேதுவிடம் வனஜா தன் முடிவைச் சொன்னபோது. "எதுக்கு?" என்றான்.

"எங்களால உங்க கோவத்தையும், அதட்டல் மிரட்டலையும் தாங்கிக்கிட்டு இருக்க முடியல!"

"அப்புறம் எனக்கு யாரு வடிச்சுக் கொட்டுவா?"

"செல்லியிடம் சொல்லிட்டுப் போறேன். அவ சமைச்சுப் போடுவா. ஆனா எங்கிட்ட நடந்துக்கற மாதிரி அவகிட்டயும் சிடுசிடுத்தீங்கன்னா அவ போயிடுவா. சம்பளம் எவ்வளவுன்னு நீங்களே பேசிக்கங்க."

னஜாவும் குழந்தைகளும் போய் மூன்று வருடங்கள் ஆகி விட்டன. வனஜா மாதம் ஒருமுறை கடிதம் போடத்  தவறுவதில்லை..

சேது கடிதங்களைப் படித்து வீட்டுக் கிழித்துப் போட்டு விடுவான். ஒருமுறை கூட பதில் போட்டதில்லை.

சின்னவனும் படித்து வேலைக்குப் போய் விட்டானாம். பெண்ணுக்கும் படிப்பு முடியப் போகிறதாம். அதற்குள் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறாளாம்.

சேது எரிச்சலுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். தெருவில் சில சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பந்து சேதுவின் வீட்டுக்குள் போய் விழுந்தது.

ஒரு சிறுவன் ஒடி வந்து "தாத்தா! பந்து வீட்டுக்குள்ள விழுந்துடுச்சு. போய் எடுத்துக்கலாமா?" என்றான்.

"அதெல்லாம் முடியாது. போங்கடா!" என்று எரிந்து விழுந்தான் சேது. "பந்தை ரோட்டில வெளையாடணும். என் வீட்டுக்குள்ள ஏன் தூக்கிப் போட்டீங்க?"

சிறுவர்கள் சற்று நேரம் கெஞ்சி விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பினார்.

ஒரு சிறுவன் தெருவில் இருந்த ஒரு சிறிய கூழாங்கல்லை எடுத்து சேது மேல் வீசினான்.

வலித்தது.

குறள் 78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 
வற்றல் மரந்தளிர்த் தற்று.

பொருள்:
மனத்தில் அன்பு இல்லாதவனுடைய வாழ்க்கை பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போல் பயனற்றதாகும். (இந்தக் குறளின் பொருள் சற்று நெருடலானது. பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தால் நல்லதுதானே என்று தோன்றும். இந்தக் குறளுக்கு உரையாசிரியர்கள் கூறியுள்ள பொருட்கள்  (எனக்கு) சற்றுக்  குழப்பமாகவே இருக்கின்றன.  பாலைவனத்தில் அந்த மரம் வளர்ந்து பலனளிக்க முடியாது. அதுபோல்தான் மனதில் அன்பில்லாதவரின் வாழ்க்கையும் பயனற்றதாகி விடும் என்று நான் பொருள் கொள்கிறேன். திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கும் உதாரணம் சற்றே விசித்திரமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது!)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


79. இதற்குத்தானே ஆசைப்பட்டாய்?

ரகுவுக்குப் பெண் பார்த்து நிச்சயம் செய்வதற்குள் அவன் அம்மா சரளாவுக்குப் போதும் போதும் என்று ஆகி விட்டது.

எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஏதாவது ஒரு குறை சொன்னான் - மூக்கு நீளம், குட்டை, பருமன், பல் பெரிதாக இருக்கிறது, வாய் கோணலாக இருக்கிறது என்று.

"ஏண்டா எத்தனையோ பேர் உடம்பில ஊனம் இருக்கிற பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கறாங்க. நீ இப்படி மாட்டைப் பல்லை புடிச்சுப் பாக்கற மாதிரி பெண்களைப் பாக்கறியே!" என்று அலுத்துக்கொண்டாள் சரளா.

"நான் என்ன சாமுத்திரிகா லட்சணமா பாக்கறேன்? உடல் உறுப்புகள் எல்லாம் ஒழுங்கா இருக்கணும்னு பாக்கறேன். அது தப்பா?" என்றான் ரகு.

ஒருவழியாக அவனுக்கு வனிதாவைப் பிடித்து விட்டது. ரகுவால் அவள் தோற்றத்தில் எந்தக் குறையையும் காண முடியவில்லை.

திருமணம் ஆகிச் சில நாட்கள் கழித்து ரகு தனியே இருக்கையில் அவன் அம்மா சரளா அவனிடம் வந்தாள். 

"ரகு, வனிதா தனக்கு வேணும்கறதைத்தான் பாத்துக்கறா. எங்களைப் பத்திக் கவலைப்படறதே இல்லை" என்று ஆரம்பித்தாள்.

"சும்மா ஏதாவது குறை சொல்லாதே!" என்றான் ரகு.

"சும்மா சொல்லலைடா. எங்களுக்கு அவ சாப்பாடு கூடப் போடறதில்லை. சாப்பிட்டீங்களான்னு கேக்கறதும் இல்லை. அவ சாப்பிட்டுட்டுப் போனப்பறம் மீதி என்ன இருக்கோ அதைத்தான் நாங்க சாப்பிட வேண்டி இருக்கு. சிலநாள் சாம்பார் இருக்காது, சில நாள் ரசம் இருக்காது, சிலநாள் காய்கறி இருக்காது. சிலநாள் சாதம் கூடக் கொஞ்சம்தான் மீதியிருக்கும்..."

சரளாவுக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. 

"ராஜா மாதிரி இருந்தவரு  உங்கப்பா. இப்ப அவரு ஒரு பிச்சைக்காரர் மாதிரி மிச்சம் மீதியைச் சாப்பிட்டுட்டுப் போறாரு. ஏன், எல்லோரும் தாராளமா சாப்பிடற மாதிரி கொஞ்சம் அதிகமா செய்யக் கூடாதா? நமக்கு என்ன வசதியா இல்லை?"

"இதை நீ அவகிட்டயே கேட்டிருக்கலாமே!"

"கேட்டேன். வயசானவங்க கொஞ்சமாத்தான் சாப்பிடணுமாம். அதுதான் அவங்க உடம்புக்கு நல்லதாம். அதோட சாப்பாட்டுக்கு அதிகம் பணம் செலவு பண்ணக் கூடாதுன்னு எங்களுக்கு உபதேசம் பண்றா!"

"சரி. நான் அவகிட்ட பேசறேன்" என்றான் ரகு.

அவனுக்கே இதுபோன்ற பிரச்னைகள் இருந்தன. வீட்டில் அவனுக்கும் சரியாகச் சாப்பாடு கிடைப்பதில்லை. கேட்டால், "நாக்கைக் கொஞ்சம் அடக்கிக்கங்க," "உங்களுக்குத் தொந்தி போடக்கூடாதுன்னுதான் இப்படிப் பண்றேன்!" என்பது போன்ற அலட்சியமான பதில்கள் வரும்.

இருப்பினும் அம்மாவின் வேதனையைப் பொறுக்காமல், வனிதாவிடம் பேசினான். "வயசான காலத்தில் அப்பா அம்மாவுக்கு வயிறு நிறையச் சாப்பாடு போடக் கூடாதா?" என்றான்.

"இப்ப என்ன அவங்க பட்டினியா கெடக்கறாங்க? உங்க குடும்பத்தில எல்லோருக்குமே நாக்கு நீளம், வயிறு பெரிசு. நான் செஞ்சு வைக்கறது பத்தலைன்னா உங்கம்மாவைத் தனியா ஏதாவது பண்ணிக்கச் சொல்லுங்க. அவங்க உடம்பு தெம்பாத்தானே இருக்காங்க?" என்றாள்.

ரகுவுக்கு ஏன் அவளிடம் கேட்டோம் என்று ஆகி விட்டது.

சில சமயம் அவள் தனக்கு மட்டும் ஏதாவது தனியாகச் சமைத்துத் தான் மட்டும் சாப்பிடுவதையும் அவன் கவனித்திருக்கிறான். ஏன் இப்படிச் செய்கிறாள்? சுயநலமாக இருந்து விட்டுப் போகட்டும். இப்படியா வீட்டில் இருப்பவர்கள் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இருப்பாள்?

சில மாதங்களில் அவன் பெற்றோர்கள் தங்கள் கிராமத்து வீட்டுக்குப் போய் விட்டார்கள்.

தங்களுக்குக் குழந்தை பிறந்தால் அதனிடமாவது பாசமாக இருப்பாளா என்ற பயம் ரகுவுக்கு வந்து விட்டது.

ருநாள் "என்னங்க, நாள் தள்ளிப் போயிருக்கு. நான் டாக்டர்கிட்ட போயிட்டு வரேன்" என்றாள் வனிதா.

ரகுவுக்கு மகிழ்ச்சியில் புல்லரித்தது. "இவ்வளவு சந்தோஷமான விஷயத்தை சாதாரணமா சொல்றயே! நானும் வரேன் டாக்டர்கிட்ட" என்றான்.

"நீங்க ஆஃபீசுக்குப் போங்க. நான் மட்டும் டாக்டர்கிட்ட போயிட்டு வரேன்" என்றாள் அவள்.

"டாக்டரைப் பாத்துட்டு ஃபோன் பண்ணு!" என்றான் ரகு.

ஆனால் அவன் அலுவலகத்திலிருந்து திரும்பும் வரை அவளிடமிருந்து ஃபோன் வரவில்லை.

மாலை அவன் வீட்டுக்குப் போனபோது வனிதா கட்டிலில் சோர்ந்து படுத்துக் கொண்டிருந்தாள்.

"என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா? டாக்டர் என்ன சொன்னார்?" என்றான் ரகு.

"கலைச்சுட்டேன்" என்றாள் அவள்.

"என்னது!" என்றான் ரகு அதிர்ச்சியுடன். "ஏன்?"

"எனக்குப் பிடிக்கல" என்றாள் சுருக்கமாக.

"உனக்குப் பிடிக்கலேன்னா? எங்கிட்ட கேக்க வேண்டாமா?"

"குழந்தை பெத்துக்கப் போறது நானா, நீங்களா?"

"எவ்வளவோ பேரு குழந்தை பொறக்காதான்னு ஏங்கறாங்க. நீ இப்படிச் செஞ்சுட்டியே!"

"எனக்கு குழந்தைகளைப் பெத்துக்கிட்டு அதுங்களோட போராடறதெல்லாம் ஒத்து வராது. சுதந்திரமா ஹாயா இருக்கணும்."

"அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட?"

"ம்? சுதந்திரமா ஹாயா இருக்கணும்னுதான்! நாம ஒரு குழந்தையைப் பெத்துக் கொடுக்காததால நாட்டுக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை" என்றாள் வனிதா அலட்சியமாக.

ரகு பரிதாபத்துடன் அவளைப் பார்த்தான். அவள் தோற்றம் அவன் கன்னத்தில் அறைவது போல் இருந்தது. நீண்ட அழகான கண்கள், செதுக்கி வைத்ததைப்  போன்ற மூக்கு, அழகான பல்வரிசை, ஒல்லியான உடல்வாகு, இன்னும்....

'இந்த அழகைத்தானே தேடிப் போனோம்?' என்று நினைத்தான் ரகு.

குறள் 79
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

பொருள்:
மனதில் அன்பு என்ற உறுப்பு இல்லாதவருக்கு மற்ற உறுப்புகள் எல்லாம் இருந்து என்ன பயன்?

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



80. ஆனந்தின் சந்தேகம்!

ஆனந்த் மானேஜருக்கு ஃபோன் செய்தான்.

"சார் வேலையெல்லாம் முடிஞ்சு போச்சு!"

"வேலையெல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நீயே எப்படித் தீர்மானிக்க முடியும்?"

"சார்! நீங்க சொன்ன வேலையெல்லாம் முடிச்சுட்டேன்னு சொல்ல வந்தேன்."

"அப்படிச் சொல்லு. நீ இனிமே ஆஃபீசுக்கு வந்தா லேட்டாயிடும். அங்கேயே இன்னொரு வேலை இருக்கு..."

"சார். மணி ஆறு ஆயிடுச்சு."

"மணி ஆறுதானே ஆகுது? நீ தினமும் ஆஃபீசிலேருந்து ஏழரை மணிக்கு மேலதானே வீட்டுக்குக் கிளம்புவே? அங்க ஒரு கலெக்‌ஷன் இருக்கு. ஆறுமுகசாமி இன்னிக்கு செக் தரேன்னு சொல்லியிருக்காரு. அதை வாங்கிக்கிட்டு அப்பிடியே வீட்டுக்குப் போயிடு."

"சார் அது இங்கேயிருந்து ரொம்ப தூரம் சார்!"

"நடந்தா போகப் போற? பஸ்ஸிலதானே போகப் போற?"

"அதில்ல சார். எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லே. டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போகணும். அதனால இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்னு  காலையிலேயே உங்ககிட்ட சொல்லியிருந்தேன்!"

"ஆமாம். வேலையை முடிச்சுட்டுப் போன்னு சொன்னேன். இப்பவும் அதைத்தான் சொல்றேன்!"

"சார்! டாக்டர் எட்டு மணி வரையிலும்தான் சார் இருப்பாரு. நான் இப்பவே கிளம்பினாத்தான் எங்கம்மாவை அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்ட முடியும்."

"உங்கம்மாவுக்கு என்ன ஜுரம்தானே? இதெல்லாம் ஒரு உடம்பா?"

"சார்! அவங்க வயசானவங்க. மூணு நாளா ஜுரம் குறையவே இல்லை."

"ஏம்ப்பா? உங்கம்மா ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லையே? ஒரு ஆட்டோவைப் புடிச்சுக்கிட்டு அவங்களால போயிட்டு வர முடியாது? வேணும்னா அக்கம்பக்கத்தில் யாரையாவது துணைக்குக் கூப்பிட்டா, வந்துட்டுப் போறாங்க!"

"சரி சார்."

அம்மாவுக்கு ஃபோன் செய்து பக்கத்து வீட்டு அம்மாளை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் போகும்படி சொன்னான் ஆனந்த். 

'நல்லவேளை! மொபைல் ஃபோன் என்ற ஒன்று இருக்கிறது. அது இல்லாவிட்டால் இந்த மானேஜர் போன்ற அரக்க ஜென்மங்களின் இரக்கமற்ற செயல்களைச் சமாளிப்பது இயலாத காரியமாக இருந்திருக்கும்!'

வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது மணி ஒன்பது ஆகி விட்டது. அம்மா இன்னும் வரவில்லை. டாக்டரின் நேரம் எட்டு வரைதான் என்றாலும் எட்டு மணி வரை வரும் நோயாளிகளுக்கு டோக்கன் கொடுத்து பத்து மணிக்கு மேல் ஆனாலும் எல்லோரையும் பார்த்து விட்டுத்தான் போவார். அவர் பணத்துக்காக இதைச் செய்கிறார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் வாங்குவது மிகக் குறைந்த கட்டணம்தான்.

அவன் மானேஜரைப் போன்றவர்கள் இருக்கும் உலகத்தில்தான் இந்த டாக்டர் போன்றவர்களும் இருக்கிறார்கள்!

பக்கத்து வீட்டில் சாவி வாங்கப் போனபோது பக்கத்து வீட்டுக்காரர் தொலைக்காட்சியில் ஒரு ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

"சார்! உங்களுக்கும் ஆன்ட்டிக்கும் என்னால் நிறையத் தொந்தரவு" என்றான் ஆனந்த் வருத்தத்துடன்.

"என்னப்பா இது? இது மாதிரி சின்ன உதவி கூடச் செய்யலேன்னா எப்படி? கவலைப்படாதே. நம்ம டாக்டர் மருந்து கொடுத்தா உங்கம்மாவுக்கு ஜுரம் சட்டுனு குறைஞ்சுடும்."

தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருந்தவர் 'ஆத்மா' என்று அடிக்கடி சொல்வதை ஆனந்த் கவனித்தான்.

"ஏன் சார் ஆத்மான்னு ஒண்ணு இருக்கா?"

"அதில என்ன சந்தேகம்? நம்ம உடம்புக்குள்ள அடுக்கடுக்காய்ப் பல விஷயங்கள் இருக்கு. தோல், அப்புறம் சதை, அப்புறம் எலும்புகள், நரம்புகள், ரத்தக்குழாய்கள்னு. அதுபோல இதயம் நுரையீரல்னு பல உறுப்புகள். எல்லாத்துக்கும் உள்ளே ஆத்மான்னு ஒரு சக்தி இருக்கு."

"நீங்க சொல்றது சரியா இருக்கலாம் சார். எனக்கென்ன தெரியும்? ஆனா சில பேருக்கு தோல், எலும்பு இதையெல்லாம் தாண்டி இதயம்னு ஒண்ணு  இருக்கான்னே சந்தேகமா இருக்கு!"

அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் அவர் அவனைப் பார்த்தார்.

குறள் 80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 
என்புதோல் போர்த்த உடம்பு.

பொருள்:
அன்புவழி நடப்பதே உயிர் உள்ள உடலின் இயல்பு. அன்பு இல்லாதவரின் உடல் எலும்பாலும் தோலாலும் போர்த்தப்பட்ட (உயிரற்ற) வெற்றுடம்புதான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













No comments:

Post a Comment