About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 9 - விருந்தோம்பல்

திருக்குறள் 
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 9
விருந்தோம்பல்  
81எதிர்பாராத விருந்தாளி
தங்களைப் பார்க்க வந்த முனிவர்களை உபசரித்து, உணவளித்து, அவர்கள் விடைபெற்றுச் சென்றதும், பாண்டவர்கள் உணவருந்த அமர்ந்தனர்.

"திரௌபதி! இன்று என்ன சமையல்?" என்றான் பீமன் சிரித்துக்கொண்டே.

"அட்சய பாத்திரம் நமக்கு இன்று என்ன வழங்குகிறதோ அதைத்தானே நாம் உண்ண முடியும்?" என்றான் யுதிஷ்டிரன்.

அட்சய பாத்திரத்திலிருந்து திரௌபதி அனைவருக்கும் உணவு பரிமாறினாள்.

"சூரிய பகவான் நமக்கு இந்த அட்சய பாத்திரத்தை வழங்காமல் இருந்திருந்தால் நம்மால் இந்த வனவாசத்தைச் சமாளித்திருக்க முடியுமா?" என்றான் நகுலன்.

"நாம் வனவாசத்தைச் சமாளிப்பதில் ஒரு சிரமும் இருந்திருக்காது. ஆனால் நாளும் நம்மைக் காண முனிவர்களும் மற்றவர்களும் வருகிறார்களே, அவர்களுக்கு நம்மால் விருந்தளிக்க முடியாமல் போயிருக்கும்" என்றான் அர்ஜுனன்.

"அள்ள அள்ளக் குறையாத இந்த அட்சய பாத்திரத்தை யுதிஷ்டிரரின் வேண்டுகோளை ஏற்று சூரியன் நமக்கு வழங்கியிருக்கிருக்கிறார். இதற்காக சூரியனிடம் பிரார்த்தனை செய்யும்படி நமக்கு யோசனை சொன்ன தௌம்யருக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்" என்றாள் திரௌபதி.

"ஆனால் அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்து விட்டால் அதற்குப் பிறகு அடுத்த நாள்தான் அதிலிருந்து உணவு வரும் என்பதுதான் சிக்கல். இதனால்தானே நாம் எல்லோரும் சாப்பிட்ட பிறகு திரௌபதி பாத்திரத்தைக் கழுவி வைத்த பின் தன் சீடர்களுடன் வந்த துர்வாசருக்கு உணவளிக்க முடியாமல் அவருடைய சாபத்துக்கு ஆளாக இருந்தோம்!" என்றான் பீமன்.

"கண்ணனின் கருணையினால் அன்று நாம் தப்பித்தோம்" என்றான் அர்ஜுனன்.

"சகாதேவா, நீ ஏன் எதுவுமே சொல்லவில்லை?" என்றான் யுதிஷ்டிரன்.

"அண்ணா! நாம் கானகத்தில் இருந்தாலும் நாம் 'கிருஹஸ்தாஸ்ரமம்' என்று சொல்லப்படும் இல்லற தர்மத்தைத்தானே கடைப்பிடிக்கிறோம்?" என்றான் சகாதேவன்.

"ஆமாம்" என்றான் யுதிஷ்டிரன்.

"இல்லறத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான கடமை என்ன?"

"விருந்தினர்களை உபசரிப்பது" என்றான் யுதிஷ்டிரன்.

"அதை நாம் செய்து கொண்டிருக்கிறோமா?"

"இதென்ன கேள்வி சகாதேவா? நாள்தோறும் பல முனிவர்களும் இந்தக் காட்டில் வசிக்கும் மக்களும் நம்மைப் பார்க்க வருவதையும், நாம் அவர்களுக்கு விருந்தளிப்பதையும் நீ பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்?" என்றான் அர்ஜுனன் சற்றே கோபத்துடன்.

"பொறு அர்ஜுனா? சகாதேவன் என்ன சொல்ல வருகிறான் என்பது எனக்குப் புரிகிறது. அதை அவன் வாயாலேயே சொல்லட்டும்" என்றான் யுதிஷ்டிரன்.

"உங்கள் மனதில் இருப்பதை என் வாயிலிருந்து வரவழைக்க விரும்புகிறீர்கள்! சொல்கிறேன். நாம் விருந்தினரை உபசரிப்பது உண்மைதான். ஆனால் அட்சய பாத்திரத்தை வைத்துக்கொண்டுதான் அனைவருக்கும் உணவளிக்கிறோம்? இதில் நமது முயற்சி, நமது பங்கு என்ன இருக்கிறது?"

"அட்சய பாத்திரத்தைத் தூக்கிப் போட்டு விட வேண்டும் என்கிறாயா?" என்றான் பீமன்.

ஆனால் யுதிஷ்டிரன் தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.

"எல்லோரும் சீக்கிரம் சாப்பிட்டு முடியுங்கள். நானும் சாப்பிட்டு விட்டுப் பாத்திரத்தைக் கழுவி வைக்க வேண்டும்" என்றாள் திரௌபதி.

"பாத்திரத்தைக் கழுவி வைத்த பிறகு அன்று துர்வாசர் வந்தது போல், இன்று வேறொருவர் வந்தால் நாம் என்ன செய்யப் போகிறோம்?" என்றான் சகாதேவன்.

"அப்படி ஒருவர் வந்து, அட்சய பாத்திரத்தின் உதவி இல்லாமலே நாம் அவருக்கு உணவு படைத்தால் அதுதான் உண்மையான விருந்தோம்பல் என்று தம்பி சகாதேவன் சொல்ல வருகிறான்" என்றான் யுதிஷ்டிரன் புன்னகையுடன்.

மற்ற மூன்று சகோதரர்களும் வியப்புடன் சகாதேவனைப் பார்த்தனர்.

காதேவன் சுட்டிக் காட்டிய நிலை ஒருநாள் வந்தது. விருந்தினர்களுக்கு உணவளித்துப் பாண்டவர்கள் உண்ட பின் தானும் உண்டு விட்டு திரௌபதி பாத்திரத்தைக் கழுவி வைத்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்களைத் தேடி ஒரு முனிவர் வந்தார்.

"நீண்ட தொலைவிலிருந்து வருகிறேன்" என்று அவர் கூறியதிலிருந்தும்  அவருடைய வாடிய முகத்திலிருந்தும், அவருடைய உடல் சோர்விலிருந்தும் அவர் உணவருந்தி வெகு நேரம் (அல்லது பல நாட்கள் கூட) ஆகியிருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.

"இப்போது என்ன செய்யப் போகிறோம்? கிருஷ்ணன் தானே வருவானா அல்லது அர்ஜுனனோ, திரௌபதியோ அவனை தியானம் செய்து வரவழைக்கப் போகிறார்களா?" என்றான் பீமன் விளையாட்டாக.

"அன்று துர்வாசர் வந்தபோது அட்சய பாத்திரத்தின் அடியில் ஒரு கீரைத்துண்டு ஒட்டிக் கொண்டிருந்தது. கிருஷ்ணன் அதை உண்டதும் துர்வாசருக்கும் அவர் சீடர்களுக்கும் வயிறு நிரம்பி விட்டது. அதற்குப் பிறகு பாத்திரத்தை மிகவும் கவனமாகக் கழுவுகிறேன். அதனால் இப்போது கிருஷ்ணன் வந்தால் கூடப் பாத்திரத்திலிருந்து எடுத்து உண்ண ஒரு துகள் கூட இருக்காது!" என்றாள் திரௌபதி.

"ஒவ்வொரு முறையும் கிருஷ்ணன் வந்து உதவுவான் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. இந்த முறை அண்ணன் பீமனே நமக்கு உதவலாம்" என்றான் சகாதேவன்.

"ஆமாம். பீமா! உன்னால்தான் விரைந்து செயல்பட முடியும். இந்தக் காட்டில் விரைந்து தேடி முனிவர் உண்ணச் சில பழங்களையும் காய்களையும் பறித்து வா. நாங்கள் முனிவரை உபசரித்து, அவரது கால்களைக் கழுவி, அவரை வணங்கி நலம் விசாரிப்பதற்குள் நீ திரும்பி வர வேண்டும்" என்றான் யுதிஷ்டிரன்.

"விருந்தினருக்குக் காய்கனிகளை மட்டும் உணவாக அளிப்பது பொருத்தமாக இருக்குமா? அவற்றை அவரே மரங்களிலிருந்து பறித்துக் கொண்டிருப்பாரே!" என்றான் அர்ஜுனன்.

"நம் வீட்டுக்கு வரும் விருந்தினர் எவரும் தன்னால் உணவைத் தேடிக்கொள்ள முடியவில்லை என்பதற்காக வரவில்லை. நம்மிடம் உள்ள அன்பு காரணமாக வருகிறார்கள். நம்மிடம் என்ன இருக்கிறதோ அதைக் கொடுத்து உபசரிப்பதுதான் விருந்தோம்பல். ஒரு ஏழையின் வீட்டுக்கு ஒரு செல்வந்தன்  வந்தால் அந்த ஏழை தன் வீட்டில் என்ன உணவு இருக்கிறதோ அதைத்தானே அந்த செல்வந்தனுக்குக் கொடுக்க முடியும்?

"ராமபிரான் சபரியின் குடிலுக்கு வந்தபோது, சபரி அவருக்குப் பழங்களையும், புலாலையும்தான் கொடுத்தாள். அதுவும் அவை நன்றாக இருக்கின்றனவா  என்று சுவைத்துப் பார்த்து விட்டுக் கொடுத்தாள். அந்த எச்சில் பட்ட உணவை ராமபிரான் மனமுவந்து ஏற்கவில்லையா?" என்றான் யுதிஷ்டிரன்.

"ஆனால் முனிவர் நாம் கொடுக்கும் பழங்களினால் திருப்தி அடையாமல் நம்மைக் கோபித்துக் கொண்டால்?" என்றாள் திரௌபதி.

"நல்லவேளை இந்த முனிவர் துர்வாசர் இல்லை!" என்றான் சகாதேவன் சிரித்தபடி.

பீமன் கொண்டு வந்த காய்கனிகளை நறுக்கி இலையில் வைத்து முனிவருக்குப் பரிமாறினார்கள். முனிவர் எதுவுமே சொல்லாமல் அவற்றை உண்டார்.

உண்டு முடித்ததும் அவர்களிடம் விடைபெற்றார்.

யுதிஷ்டிரன் பணிவுடன் "முனிவர்பிரானே! இந்த நேரத்தில் எங்களால் உங்களுக்குச் சமைத்த உணவை அளிக்க முடியவில்லை, அதனால்தான் காய்கனிகளைப் பரிமாறினோம்.எங்களை மன்னிக்க வேண்டும்" என்றான்.

"யுதிஷ்டிரா! நான் இப்போது சமைத்த உணவை உண்பதில்லை என்ற ஒரு விரதத்தை மேற்கொண்டிருக்கிறேன். பச்சைக் காய்களையும், பழங்களையும்தான் உண்கிறேன். எங்கே நீங்கள் சமைத்த உணவைப்  படைத்து விடுவீர்களா என்று பயந்தேன்.

"ஒரு விருந்தினர் தனக்கு இந்த உணவைத்தான் அளிக்க வேண்டும் என்று விருந்தளிப்பவரிடம் கேட்கக்கூடாது. அதனால்தான் எனக்குக் காய்கனிகளையே கொடுங்கள் என்று நான் முன்பே உங்களிடம் சொல்லவில்லை.

"ஒருவேளை நீங்கள் எனக்குச் சமைத்த உணவை அளித்திருந்தால் அதன் மீது நீர் தெளித்து ஏற்றுக்கொண்டு விட்டு அதை வெளியே உள்ள மிருகங்களுக்கோ பறவைகளுக்கோ அளித்திருப்பேன். என் பசி அடங்காவிட்டாலும் எனக்குத் திருப்தி ஏற்பட்டிருக்கும் என்றாலும் உங்களுக்கு மனம் வருத்தம் ஏற்பட்டிருக்கும்.

"இறைவன் அருளால் நான் உண்ணக்கூடிய உணவையே எனக்கு அளித்து என் மனத்தையும் வயிறையும் ஒருங்கே நிறையச் செய்ததுடன்  உங்களுக்கும் மனத்திருப்தி ஏற்படும் வகையில் செயல்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லா நலன்களும் விளையட்டும்!" என்று வாழ்த்தி விடைபெற்றார் முனிவர்.

குறள் 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
வேளாண்மை செய்தற் பொருட்டு.

பொருள்:
மனைவியுடன் கூடி இல்லறம்  நடத்துவதன் நோக்கம் விருந்தினர்களைப் போற்றி அவர்களுக்கு நன்மை செய்வதே ஆகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

82. பால் பாயசம்
"ஏங்க, ஒரு நிமிஷம் உள்ள வந்துட்டுப் போறீங்களா?"

முன்னறையில் அமர்ந்து நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த சிவராமன் உள்ளிருந்து மனைவி அழைத்ததும், "ஒரு நிமிஷம்" என்று நண்பரிடம் சொல்லி விட்டு, "என்ன?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே போனான்.

மனைவி வாயில் ஆள்காட்டி விரலை வைத்து, 'பேச வேண்டாம்' என்று சமிக்ஞை செய்தபடியே, சமையல் மேடை மீது வைக்கப்பட்டிருந்த காப்பி தம்ளரைச் சுட்டிக்  காட்டினாள்.

தான் காப்பியை உறிஞ்சும் சத்தம் கூட முன்னறையில் அமர்ந்திருக்கும் நண்பருக்குக் கேட்டு விடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் காப்பியை அருந்தி விட்டு வாயைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்து நண்பருடன் பேச்சைத் தொடர்ந்தான் சிவராமன்.

நண்பர் போனதும், "இனிமேல் காப்பி குடிக்கற நேரத்தில யாராவது வந்தா அவங்களை அனுப்பற வழியைப் பாருங்க. உங்களைத் தனியா உள்ளே கூப்பிட்டு, உங்களுக்கு மட்டும் காப்பி கொடுக்கறது எனக்குக் கஷ்டமா இருக்கு!" என்றாள் மனைவி.

"அவருக்கும் கொஞ்சம் காப்பி கொடுத்திருக்கலாமே?" என்றான் சிவராமன்.

"காலையில போடற டிகாக்‌ஷன்ல இருக்கிற மிச்சம் சாயந்திரம் நம்ப ரெண்டு பேருக்கும் காப்பி போடறதுக்கே போறும் போறாததா இருக்கு. இதில வீட்டுக்கு வரவங்களுக்கெல்லாம் வேற எப்படி காப்பி கொடுக்க முடியும்?" என்றாள் மனைவி.

ன்னொரு நாள், சிவராமன் அவனுடைய இன்னொரு நண்பர் நடராஜன் வீட்டுக்குப் போயிருந்தான். சிவராமனிடம் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென்று குரலை உயர்த்தி, "தங்கம்! சிவராமனுக்குக் கொஞ்சம் பால் பாயசம் கொண்டு வாயேன்!" என்றார்.

"வேண்டாம் நடராஜன்!" என்று மறுத்த சிவராமன், "இன்னிக்கு என்ன விசேஷம்?" என்றான்.

"தங்கம் அடிக்கடி ஏதாவது பூஜை பண்ணுவா! பூஜைன்னா பிரசாதம் இல்லாமயா? பாயசம், சுண்டல், சக்கரைப் பொங்கல்னு ஏதாவது பண்ணுவா. குறிப்பா, அவ பண்ற பால் பாயசம் ரொம்ப அற்புதமா இருக்கும். சாப்பிட்டுப் பாத்தப்பறம் நீங்களே சொல்லுவீங்க!" என்றார்.

அவர் மனைவி ஒரு தம்ளரில் பால் பாயசம் கொண்டு வைத்தாள். சிவராமன் சங்கடத்துடன், "உங்களுக்கு ஏன் சிரமம்?" என்றான்.

"சும்மா சாப்பிடுங்க. உங்க நண்பர் சொன்ன மாதிரி நல்லா இருக்கா, இல்லை, அவர் சும்மா என்னைப் புகழறரான்னு சொல்லுங்க."

சிவராமன் பாயசத்தை அருந்தினான். உண்மையாகவே அற்புதமாகத்தான் இருந்தது.

"ரொம்ப அற்புதம். நடராஜன் கொஞ்சம் குறைச்சுத்தான் சொல்லியிருக்காரு!" என்றான்.

சற்று நேரம் கழித்து சிவராமன் விடைபெற்றான். தெருவில் இறங்கிச் சில அடிகள் நடந்ததும்தான் கையில் வைத்திருந்த சாவிக்கொத்தை நடராஜன் வீட்டிலேயே விட்டு விட்டு வந்ததை உணர்ந்தான். கையிலேயே வைத்திருந்த சாவிக்கொத்தைப் பாயசம் அருந்தும்போது கீழே வைத்தவன் மறுபடியும் அதை எடுத்துக்கொள்ள மறந்து விட்டான்.

வாசற்கதவு திறந்துதான் இருந்தது. ஆனால் முன்னறையில் யாரும் இல்லை. அழைப்பு மணியை அழுத்தலாமா என்று யோசித்தபோது உள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்டது. நடராஜன் குரலும் அவர் மனைவியின் குரலும்தான்.

"பால் பாயசம் கொஞ்சம்தான் இருந்ததோ? நான் முன்னாடியே சாப்பிட்டுட்டேன். உனக்குக் கொஞ்சம்தான் மீதி இருந்திருக்கும். யோசிக்காமல் அதை சிவராமனுக்குக் கொடுக்கச் சொல்லிட்டேனோ?" என்றார் நடராஜன்

"அப்படி இல்லை. நீங்க அவருக்குக் கொடுக்கச் சொன்னது சரிதான். நீங்க சொல்லாட்டாலும் நானே கொடுத்திருப்பேன். இருந்த பாயசத்தை அவருக்குக் கொஞ்சம் கொடுத்துட்டு, மீதியை நான் சாப்பிட்டேன். வீட்டுக்கு வந்தவங்களுக்குக் கொடுத்துட்டுச் சாப்பிட்டா, அது ஒரு தனித் திருப்திதான்" என்றாள் தங்கம்.

தன் மனைவி இந்த உரையாடலைக் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டான் சிவராமன்.

குறள் 82
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா 
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

பொருள்:
இறப்பற்ற நிலையைக் கொடுக்கக்கூடிய அமிர்தமாகவே இருந்தாலும், விருந்தினரை வெளியே அமர வைத்து விட்டுத் தான் மட்டும் அதை அருந்துவது விரும்பத்தகாத செயல்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



83. தினமும் ஒரு விருந்தினர்
நான் ஒருமுறை ஈரோட்டுக்குச் சென்றபோது, என் நண்பனின் அலுவலகத்தில்தான் முத்துசாமியைச் சந்தித்தேன்.

என் நண்பன் ஒரு வங்கியில் மேலாளராக இருந்தான். வங்கியில் அவன் அறையில் அமர்ந்து அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவனைப் பார்க்க வந்த முத்துசாமியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். அந்த வங்கியின் வாடிக்கையாளரான அவர் சிறிய அளவில் ஜவுளித் தொழில் செய்து வருவதாக அறிந்து கொண்டேன்.

நான் சென்னையில் பணி புரிவதையும், அலுவலக வேலையாக ஈரோட்டுக்கு வந்திருப்பதையும், அங்கே ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதையும் அவரிடம் சொன்னான் என் நண்பன்.

சற்று நேரம் பொதுவாகப் பேசியபின் முத்துசாமி என்னிடம் "சார், நீங்கள் இன்று மதியம் என் வீட்டுக்குச் சாப்பிட வாருங்களேன்" என்றார்.

சில நிமிடங்களுக்கு முன்பே அறிமுகமான என்னை அவர் தன் வீட்டுக்குச் சாப்பிட அழைத்தது எனக்கு வியப்பாக இருந்தது. அவர் அழைப்பை ஏற்று அவர் வீட்டுக்குச் செல்லவும் தயக்கமாக இருந்தது.

"இல்லை சார். இன்னொரு சமயம் பார்க்கலாம்" என்றேன்.

"போயிட்டு வாடா. அவரைப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும்" என்றான் நண்பன்.

"சார், உங்க மனைவிதான் ஊர்ல இல்லியே, நீங்களும் வாங்க" என்று என் நண்பனையும் அழைத்தார் முத்துசாமி.

"இல்லை சார். எனக்கு ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு. என் நண்பன் மிஸ்டர் தண்டச்சோறு வருவான்" என்று என்னை மாட்டி விட்டான் நண்பன்.

"இல்லை சார்" என்று நான் மறுக்க முயன்றேன்.

"டேய்! மிஸ்டர் முத்துசாமி பல வருஷங்களாக ஒரு பழக்கம் வச்சிருக்காரு. தினமும் யாராவது ஒத்தரை அழைத்துச் சாப்பாடு போடணும்கறதுதான் அது. என்னிக்காவது ஒருநாள் விருந்தினர் யாரும் கிடைக்காட்டா, தானும் சாப்பிடக்கூடாது என்பது அவரோட கொள்கை. ஆனா இதுவரை அப்படி நேரவில்லை. என்ன சார், சரிதானே?" என்றான் நண்பன்.

"நல்ல கொள்கைதான். எத்தனையோ ஏழைகள் இருக்காங்க. அவங்க யாருக்காவது சாப்பாடு போடலாமே! என்னை மாதிரி ஆளுங்களுக்கு எதுக்குச் சாப்பாடு போடணும்?" என்றேன் நான்.

"சார்! நான் செய்யறது அன்னதானம் இல்லை. அதுக்கு எனக்கு வசதியும் இல்லை. நான் செய்யறதெல்லாம் நான் சாப்பிடற எளிய உணவை தினமும் யாராவது ஒத்தரோட பகிர்ந்துக்கறதுதான்."

"இருக்கட்டுமே சார்! யாருக்குத் தேவையோ அவங்களுக்குச் சாப்பாடு போடலாமே? அதை விட்டுட்டு..."

"டேய் முட்டாள்! அவர் செய்யறது  அன்னதானம் இல்லை, அதிதிக்கு உணவு படைக்கிறது" என்றான் நண்பன்.

"சார்! நான் அதிகம் படிச்சவன் இல்லை. நாம சாப்பிடற சாப்பாட்டை தினமும்  யாராவது ஒத்தரோட பகிர்ந்துக்கணும்னு ஒரு வழக்கம் வச்சுக்கிட்டிருக்கேன். நீங்க சொல்ற மாதிரி ஒரு ஏழைக்குச் சாப்பாடு போடறது நல்லதுதான். ஆனா எத்தனையோ ஏழைகள்ள தினமும் ஒத்தரை நான் எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?

"ஏழைகளுக்குச் சாப்பாடு போடறதுன்னா நிறைய பேருக்குப் போடணும். ஒரு தனி மனுஷனால அதுவும் என்னை மாதிரி அதிக வசதி இல்லாதவனால இதைச் செய்ய முடியாது. ஒரு ஏழைக்கு நான் சாப்பாடு போட்டா அது நான் அவனுக்குச் செய்யற உதவி. ஆனா உங்களை மாதிரி ஒருத்தர் என் வீட்டுக்கு விருந்தாளியா வந்து சாப்பிட்டீங்கன்னா அது நீங்க எனக்குச் செய்யற உதவி" என்றார் முத்துசாமி.

"அது எப்படி?" என்றேன்.

"நீங்க ஒரு நல்ல ஓட்டல்ல போய் உங்களுக்கு விருப்பமானத்தைச் சாப்பிடலாம். ஆனா நீங்க அதை விட்டுட்டு என் வீட்டுக்கு வந்து நான் சாப்பிடற எளிய உணவைப் பகிர்ந்துக்கிட்டீங்கன்னா அது எனக்குச் செய்யற உதவிதானே!" என்றார்.

அதற்குப் பிறகு அவர் வீட்டுக்குச் சென்று உணவருந்தினேன். அவர் சொன்னபடி உணவு எளிமையாகத்தான் இருந்தது. தினமும் சாதாரணமாக அவர்கள் வீட்டுக்குச் சமைக்கும் உணவை யாராவது ஒருவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதானே அவர் கொள்கை?

"தினமும் யாராவது ஒருவரைத் தேடி அழைச்சிக்கிட்டு வரது உங்களுக்கு சிரமமாக இல்லையா?" என்றேன்.

"அது கஷ்டமான வேலைதான். ஆனால் இதுவரை தினமும் எனக்கு யாராவது கிடைச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. இன்னிக்கு பாங்க்குக்குப் போனபோது அங்கே உங்களைச் சந்திப்பேன்னு எதிர்பார்த்திருப்பேனா?" என்றார் முத்துசாமி.

"எங்களுக்கெல்லாம் எப்பவாவது விருந்தாளிகள் வந்து ரெண்டு மூணு நாள் தங்கினாலே முழி பிதுங்கி விடுகிறதே, நீங்கள் எப்படி தினமும் ஒரு விருந்தாளியைச் சமாளிக்கிறீர்கள்?" என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. ஆனால் நான் அதைக் கேட்கவில்லை!

தற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு என் நண்பனைச் சென்னையில் சந்தித்தபோது முத்துசாமியைப் பற்றி விசாரித்தேன்.

"அவர் இன்னும் தன்னோட யாகத்தைத் தொடர்ந்து பண்ணிக்கிட்டிருக்காரா?" என்றேன் பாதி விளையாட்டாகவும், பாதி சீரியஸாகவும்.

"அவர் செய்யறதை யாகம்னுதான் சொல்லணும். போன வருஷம் ஒரு பொருளாதாரப் பிரச்னையால ஜவுளித் தொழில் செய்யறவங்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுச்சு. உனக்குத் தெரிஞ்சிருக்குமே! முத்துசாமி மாதிரியான சிறிய வியாபாரிகளுக்கு பலமான அடி. நிறைய பேரு வியாபாரத்தையே நிறுத்திட்டு வேலை ஏதாவது கிடைக்குமான்னு பாக்க ஆரம்பிச்சுட்டாங்க."

"முத்துசாமி?"

"அவரு மாதிரி ஒண்ணு ரெண்டு பேருதான் இந்த அடியிலிருந்து மீண்டு எழுந்து வந்தாங்க. நடுவில சில காலம் ரொம்பக் கஷ்டப்பட்டாரு. அப்பவும் தினமும் யாருக்காவது சாப்பாடு போடணும்கிற தன்னோட கொள்கையை அவர் விடல."

"எப்படி சமாளிச்சாரு?"

"நான் கேட்டதுக்கு அவரு என்ன சொன்னாரு தெரியுமா? 'சார் எங்க வீட்டில நாலு பேரு இருக்கோம். இந்தக் கஷ்டத்திலேயும் நாங்க நாலு பேரும் ஒரு நாள் கூட சாப்பிடாம இருந்தது இல்லை. நாலு பேருக்கு பதிலா அஞ்சு பேரு இருந்தாலும் அப்படியேதானே இருந்திருப்போம்? அஞ்சாவது நபரா விருந்தாளி இருக்காரு, அவ்வளவுதானே?' அப்படின்னாரு. அதிர்ஷ்ட வசமா நிலைமை முன்னேறி இப்ப மறுபடி கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைக்கு வந்துக்கிட்டிருக்காரு."

"இன்னொருத்தருக்குச் சாப்பாடு போட்டுட்டுத்தான் தான் சாப்பிடணும்கிற உறுதி இருக்கிறவரைக்கும், எந்தப் பிரச்னையும் அவரை பாதிக்காதுன்னு நினைக்கிறேன்."

ஒரு நல்லெண்ணத்தில் நான் இப்படிச் சொன்னாலும் அப்படித்தான் நடக்கும் என்ற நம்பிக்கை என் மனதில் ஆழமாக நிலைபெற்றிருந்தது.

குறள் 83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
பருவந்து பாழ்படுதல் இன்று.

பொருள்:
விருந்தினரை நாள்தோறும் உபசரித்து வருபவன் வாழ்க்கையில் துன்பம் வந்து அதனால் அவன் வாழ்வு சிதையும் நிலை ஏற்படாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


84. விடுமுறை அனுபவம்
கோடை விடுமுறைக்கு எங்காவது போக வேண்டும் என்று அவளுடைய மகன், மகள் இருவரும் வற்புறுத்தியதால் சென்னைக்குப் போகத் தீர்மானித்தாள் செல்வி.

அவளுடைய இரண்டு அண்ணன்களும் சென்னையில்தான் இருந்தனர். சிறு வயதிலிருந்தே இருவருக்கும் அவள் செல்லக் குழந்தை. அவர்கள் தந்தை வேறு சிறு வயதிலேயே இறந்து விட்டதால், அண்ணன்களுக்கு அவள் மீது பாசம் இன்னும் அதிகம் ஆகி விட்டது.

அண்ணன்கள் இருவரும் படித்து முடித்ததும் சென்னைக்கு வேலைக்குப் போய் விட்டனர். செல்விக்குத் திருமணம் செய்து வைத்து விட்டு அவர்களும் திருமணம் செய்து கொண்டு, ஒவ்வொருவரும் ஒரு குழந்தைக்குத் தந்தையாகவும் ஆகி விட்டனர்.

மூன்று பேருக்கும் குடும்பம் என்று ஏற்பட்டு விட்ட பிறகு, அவர்கள் தாயும் மறைந்து விட்ட பிறகு, பழைய நெருக்கம் குறைந்து விட்டதுதான். ஆயினும் அண்ணன்கள் இருவரும் அடிக்கடி அவளுடன் தொலைபேசியில் பேசி அவள் நலம் பற்றி விசாரித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

தொலைபேசியில் அண்ணன்கள் பேசும்போது, அண்ணிகளும் அவ்வப்போது அவளிடம் பேசுவார்கள். குடும்பத்தோடு தங்கள் வீட்டில் வந்து தங்கி விட்டுப் போகும்படி அவளிடம் அடிக்கடி சொல்வார்கள்.

இப்போதுதான் அதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது.

இரண்டு அண்ணன்களில் குமார் அதிக வசதி படைத்தவன். அதனால் அவன் வீட்டுக்கு முதலில் போனாள்.

அண்ணன் அண்ணி இருவருமே வேலைக்குப் போவதால் சமையலுக்கும், சிறுவன் வருணைப் பார்த்துக் கொள்வதற்கும் கோமதி என்ற பெண்ணை முழு நேரம் வீட்டில் வேலைக்கு வைத்திருந்தார்கள்.

செல்வியும், குழந்தைகளும் வந்ததும் '"எப்படி  இருக்கே?' என்று அண்ணனும் அண்ணியும் கேட்டதோடு சரி. "'உனக்கு எது வேணும்னாலும் கோமதி கிட்ட கேட்டுக்க" என்று சொல்லி விட்டு அண்ணி தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டாள்.

கோமதி அவர்களை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டாள்.

மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் அண்ணனும் அண்ணியும் தன்னிடமும் குழந்தைகளுடனும் பேசுவார்கள் என்று செல்வி நினைத்தாள்.

ஆனால் இருவருமே மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும் செல்வியைப் பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டுத் தங்கள் அறைக்குள் போய் விட்டார்கள். சாப்பிட மட்டும் வெளியே வந்தனர். அப்போதும் செல்வியையும் குழந்தைகளையும் 'சாப்பிட்டீங்களா?' என்று கேட்கவில்லை. கோமதி அவர்களுக்குச் சாப்பாடு போட்டிருப்பாள் என்ற நம்பிக்கை போலும்!

இரவில் அவர்கள் படுக்கை அறையைக் கூட கோமதிதான் காட்டினாள். கட்டில், மெத்தை ஏ சி என்று படுக்கை அறை வசதியாகவே இருந்தது. ஏ சி ரிமோட்டை எப்படி இயக்க வேண்டும் என்பதை கோமதி அவளுக்குச் செய்து காட்டினாள்.

தூங்கப் போகுமுன் அவள் குழந்தைகள் இருவரும் "அம்மா! இங்க ரொம்ப போர் அடிக்குது. வருண் கூட எப்பவும் அவன் ரூம்லயே இருக்கான். எங்களோட விளையாடறதில்ல" என்றனர்.

மறுநாள் காலையிலேயே, தான் சுரேஷ் அண்ணன் வீட்டுக்குப் போவதாக செல்வி குமாரிடம் கூறினாள்.

"ஏன் குழந்தைகளுக்கு போர் அடிக்குதாமா?" என்றான் குமார். "சுரேஷ் வீட்டிலேயும் இப்படித்தான் இருக்கும்!"

"ரெண்டு மூணு நாள் இருப்பேன்னு பார்த்தேன்" என்றாள் அண்ணி.

ஆனால் அதற்கு மேல் இருவரும் எதுவும் சொல்லவில்லை.

சுரேஷுக்கு ஃபோன் செய்ததும், அவன் மாலை அலுவலகத்திலிருந்து கொஞ்சம் சீக்கிரமே கிளம்பி வந்து அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னான்.

மாலையில் சுரேஷுடன் அவன் வீட்டுக்குச் சென்றபோது சுரேஷின் மனைவி ப்ரியாவும், குழந்தை  தீப்தியும் வீட்டில் இருந்தனர்.

"என்ன அண்ணி ஆஃபீஸ் போகலையா?" என்றாள் செல்வி.

"நீ வரப்ப வீட்ல இருக்கணும்னுதான் பர்மிஷன் போட்டுட்டு வந்துட்டேன்" என்றாள் ப்ரியா.

இரண்டு வாரங்கள் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை. எல்லா நாளும் ஒரே சிரிப்பும் கலகலப்பும்தான். இந்த இரண்டு வாரத்தில் சுரேஷ், ப்ரியா இருவருமே நாலைந்து நாட்கள் பர்மிஷன் போட்டு விட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்தனர். தினமும் அலுவலகத்திலிருந்து ஒருமுறையாவது ஃபோன் செய்து ப்ரியா செல்வியிடம் பேசுவாள்.

வழக்கமாகப் பள்ளி விட்டு வந்ததும் மாலை ப்ரியா வீட்டுக்கு வரும்வரை பக்கத்து வீட்டில் இருந்து வந்த தீப்தி, இந்த இரண்டு வாரங்களும் செல்வி இருந்ததால் தன் வீட்டிலேயே இருந்தாள். அதில் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி. "நீங்க இங்கியே இருந்துடுங்களேன். அத்தை. எனக்கு ரொம்ப ஜாலியா இருக்கும்" என்றாள்.

இடையில் வந்த வார இறுதி விடுமுறை நாட்களில் சுரேஷும் ப்ரியாவும் அவர்களைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள்/

செல்வி ஊர் திரும்பும் நாள் வந்தது.

"குழந்தைகளுக்குக் கோடை விடுமுறை ரெண்டு மாசம் இருக்கு, அதில ஒரு மாசமாவது இங்க தங்கும்படி நீ வந்திருக்கலாம்" என்றாள்  ப்ரியா. "இனிமே எல்லா லீவுக்கும் இங்க வரணும், என்ன?" என்றாள் குழந்தைகளிடம்.

"அடுத்த லீவுக்கு நீங்கதான் எங்க ஊருக்கு வரணும்" என்றாள் செல்வி.

"கண்டிப்பா!" என்றாள்  ப்ரியா.

"ப்ரியாவோட சொந்தக்காரங்க ரெண்டு மூணு பேர் அப்பப்ப இங்க வந்துட்டுப் போவாங்க. எனக்குச் சொந்தம்னு சொல்லிக்க நீயும் குமாரும்தான். உள்ளூர்லயே இருந்தாலும் குமாரும் நானும் பாத்துக்கிட்டு மாசக்கணக்கா ஆச்சு. நம்ப சொந்தக்காரங்க யாரும் வரதில்லைன்னு ப்ரியாவுக்கு ஒரு குறை. இப்ப அந்தக் குறை தீர்ந்திருக்கும்!" என்றான் சுரேஷ் ப்ரியாவைப் பார்த்தபடி.

"அடிக்கடி வந்துட்டுப் போனாதான் குறை இல்லாம இருக்கும்!" என்றாள் ப்ரியா.

"இங்க பாரு செல்வி. குமார் மாதிரி நாங்க அவ்வளவு வசதியானவங்க இல்ல. ஆனா யாராவது வந்து போய்க்கிட்டு இருந்தாத்தான் எங்களுக்கு சந்தோஷமா இருக்கும். அதிக நாள் தங்கினா எங்களுக்குக் கஷ்டமா இருக்கும்னு நீ யோசிக்க வேணாம். உங்க அண்ணி சொன்ன மாதிரி எல்லா லீவுக்கும் நீங்க எல்லாரும் இங்க வந்து நிறைய நாள் இருந்துட்டுப் போங்க. அடுத்த தடவை வரும்போது உன் வீட்டுக்காரரையும் கூட்டிக்கிட்டு வரணும்."

குமார் சொன்னதை ப்ரியா சிரித்துக்கொண்டே தலையாட்டி ஆமோதித்தபோது 'மகாலக்ஷ்மி மாதிரி இந்த அண்ணி இருக்கும்போது அண்ணனுக்கு என்ன குறை இருக்க முடியும்?' என்று நினைத்தாள் செல்வி.

குறள் 84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல்.

பொருள்:
தன் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியுடன் உபசரித்து வருபவன் வீட்டில் மனமகிழ்ச்சியுடன் திருமகள் குடியிருப்பாள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


85. தண்ணீர் 
பொன்னம்பலம் காலையில் வீட்டிலிருந்து கிளம்பி வயலுக்குப் போகும் முன்பு, தன் வீட்டு முற்றத்தில் கோட்டை அடுப்பு மூட்டப் பட்டிருக்கிறதா என்று பார்த்து விட்டுத்தான் போவார்.

கோட்டை அடுப்பில் தினமும் இருபது பேர் சாப்பிடும் அளவுக்குச் சோறு சமைப்பார்கள். அவர்கள் வீட்டில் இருந்தது மொத்தம் ஐந்து பேர்தான். வேலையாட்கள் மூன்று பேரைச் சேர்த்தாலும், சுமார் பன்னிரண்டு வெளி மனிதர்கள் சாப்பிடும் அளவுக்குச் சமைப்பது அவர் வழக்கம்.

இரண்டு கோட்டை அடுப்புகள் இருக்கும். பெரியதில் சோறு, சிறியதில் குழம்பு. குழம்பில் போடக் காய்களை நறுக்கி மேடாகக் குவித்து வைத்திருப்பார்கள்.  

சரியாகப் பதினோரு மணிக்கு அவர் வீட்டு வாசல் திண்ணையில் இலை போட்டு விடுவார்கள். யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம். உள்ளூர்க்காரர்கள், வெளியூர்க்காரர்கள் என்று இரண்டு சாராருமே அங்கே சாப்பிட வருவதுண்டு.

பொன்னம்பலம் பன்னிரண்டு மணிக்கு மேல் வயற்காட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்புவார். அநேகமாக அவர் திரும்பி வரும்போது ஒரு சிலராவது அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

பொன்னம்பலம் சாப்பிடுபவர்களைப் பார்த்துக் கைகூப்பி விட்டு உள்ளே போவார். உள்ளூர்க்காரர்கள் சிலருக்கு - அவரை விட வயதில் குறைந்தவர்கள், அல்லது சமுதாய அந்தஸ்தில் குறைந்தவர்களுக்கு - இது சங்கடமாக இருக்கும். எச்சில் கையால் அவரை பதிலுக்குக்  கும்பிடவும் முடியாது. .

எல்லோரும் சாப்பிட்டு முடிந்தபின்தான் பொன்னம்பலம் சாப்பிட உட்காருவார். சில நாட்கள் அதிகமான நபர்கள் சாப்பிட வந்து விட்டால், மீண்டும் உலை வைத்துச் சோறு வடித்துக் குழம்பும் செய்வார்கள். அந்த நாட்களில் பந்தி முடிய கிட்டத்தட்ட இரண்டு மணி கூட ஆகி விடும். ஆனால் பந்தி முடிந்ததும்தான் சாப்பிடுவது என்பதில் உறுதியாக இருப்பார் பொன்னம்பலம்.

"ஏன் இப்படிச் செய்யறீங்க?" என்று அவரிடம் நண்பர் ஒருவர் கேட்டதற்கு "ஆண்டவன் புண்ணியத்தில என்னோட வயல்ல எங்க குடும்பத்துக்குத் தேவையானதை விட அதிகமாவே அரிசி விளையுது. அதில கொஞ்சம் அரிசியை மத்தவங்களுக்கு சாப்பாடு போடறதுக்காகப் பயன்படுத்தினா என்னன்னு தோணிச்சு" என்றார் பொன்னம்பலம்.

ந்த ஆண்டு மழை பொய்த்ததால் எங்கும் வறட்சி மிகுந்திருந்தது. பல பேர் ஆழ்கிணறு (போர்வெல்) தோண்டிப் பார்த்தார்கள். ஆனால் ஆழ்கிணற்றிலும்   தண்ணீர் வராததால் அந்த வருடம் பயிர் செய்வதையே நிறுத்தி விட முடிவு செய்தார்கள்.

நீண்ட யோசனைக்குப் பிறகு, பொன்னம்பலம் தன் நிலத்தில் ஆழ்கிணறு தோண்டிப் பார்க்க முடிவு செய்தார். அவருடைய நிலத்துக்குப் பக்கத்து நிலங்களில் போடப்பட்ட ஆழ்கிணறுகளில் தண்ணீர் வரவில்லை. அதனால் பொன்னம்பலம் இந்த முயற்சியில் ஈடுபடுவது வீண் செலவில்தான் முடியும் என்று பலரும் நினைத்தனர். அவரிடமே சிலர் சொல்லவும் செய்தனர்.

ஆனால் பொன்னம்பலம் தன் முயற்சியிலிருந்து பின் வாங்கவில்லை.

யாரும் எதிர்பாராத வகையில் அவர் நிலத்தில் தோண்டப்பட்ட ஆழ்கிணற்றிலிருந்து தண்ணீர் வெளி வந்தது.

பொன்னம்பலம் சாகுபடி செய்யத் தீர்மானித்தார். அவருடைய நண்பர் ஒருவர் சொன்னார் "இங்க பாரு பொன்னம்பலம். போரை நம்பி சாகுபடியில் இறங்காதே. போர்ல எப்ப வேணும்னாலும் தண்ணி வரது நின்னு போகலாம். அப்ப என்ன செய்வே?"

"போர்ல தண்ணி வராதுன்னுதான் எல்லோரும் சொன்னாங்க. எனக்கும் அந்த பயம் இருந்தது. ஆனாலும் முயற்சி பண்ணிப் பாக்கலாம்னு இறங்கினேன். கடவுள் புண்ணியத்தில தண்ணி வந்திருக்கு. நீங்க சொல்ற மாதிரி ஒருவேளை போர் வத்திப் போற நிலைமை வந்தாலும், அப்ப மழை பெஞ்சு பயிரைக் காப்பாத்தலாம் இல்ல? அதனால நான் நம்பிக்கையோட சாகுபடியைத் தொடங்கத்தான் போறேன். தினமும் பத்து பேருக்கு சாப்பாடு போட எனக்கு அரிசி வேணும் இல்ல?" என்றார் பொன்னம்பலம்.

"நீ நெனைக்கறது நடக்கும்யா! நீ போடற பயிர் தண்ணி இல்லாமையே நல்லா வளர்ந்தாலும் ஆச்சரியம் இல்ல!" என்றார் நண்பர்.  
  
குறள் 85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 
மிச்சில் மிசைவான் புலம்.

பொருள்:
விருந்தினருக்கு முதலில் உணவளித்து மீதம் இருக்கும் உணவைத் தான் உண்ணும் பழக்கம் உள்ளவன் நிலத்தில் விதை விதைக்க வேண்டுமா என்ன? (விதை விதைக்காமலே கூட அவன் நிலத்தில் பயிர் வளரும்.)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


86. கேட்காத கேள்விக்கு பதில்!
"ஏம்ப்பா சென்னைக்குப் போகப் போறியா?"

"ஆமாண்ணே."

"எங்கே தங்கப் போறே? செந்தில் வீட்டிலியா?"

"இல்லை. ஒரு நண்பர் வீட்ல தங்கப் போறேன். ஆனா செந்தில் வீட்டுக்குப் போவேன். ஏதாச்சும் சொல்லணுமா?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நம்ம ஊர்லேயிருந்து யார் சென்னைக்குப் போனாலும் செந்தில் வீட்டுக்குப் போய் ஒரு காப்பியாவது குடிக்காம வர மாட்டாங்களே! அதுதான் கேட்டேன்."

"ஆமாண்ணே! அதனாலதான் நானும் வேற இடத்தில தங்கினாலும், அவன் வீட்டுக்குப் போயிட்டு வராதா இருக்கேன்."

"எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. செந்தில் நம்ம ஊர்க்காரன்தான்னாலும், நிலபுலன்களை வித்துட்டு ஒரேயடியா சென்னைக்குப் போயிட்டான். அவங்க அப்பா அம்மா எல்லாம் எப்பவோ போய்ச் சேர்ந்துட்டாங்க. அவனுக்குச் சொந்தம்னு கூட இந்த ஊர்ல யாரும் இல்லை.

"அப்படி இருக்கறச்சே நம் ஊர்லேயிருந்து யார் சென்னைக்குப் போனாலும் அவன் வீட்டுலதான் தங்கணும், அப்படி வேற இடத்தில தங்கினாலும் அவன் வீட்டுக்கு வந்து ஒருவேளையாவது சாப்பிட்டுட்டுப் போகணும்னு அவன் பிடிவாதம் பிடிக்கிறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு!"

"ஆரம்பத்தில நம்ம ஊர்லேருந்து சென்னைக்குப் போனவன் அவன் ஒருத்தன்தான். அதுக்கப்பறம் இங்கேயிருந்து சென்னைக்குப் போன நம்ம ஊர்க்காரங்க ஒண்ணு ரெண்டு பேரு அவன் வீட்டில போய் இறங்கி இருக்காங்க. அதிலிருந்து நம்ம ஊர்லேயிருந்து யாரு சென்னைக்குப் போனாலும் அவனோட வீட்டுலதான் தங்கணும்னு அவன் ஒரு சட்டமே போட்டுட்டான்!"

செந்தில் சென்னையில் போய் செட்டில் ஆகி இந்தப் பத்து வருஷத்திலே நம்ம ஊர்லேருந்து இன்னும் நாலஞ்சு பேரு சென்னைக்குப் போய் செட்டில் ஆயிட்டாங்க. ஆனா நம்ம ஊர்க்காரங்க எல்லாம் இப்பவும் செந்தில் வீட்டுக்குத்தான் போறாங்க."

"நல்ல வேளையா, நம்ம ஊர்லேருந்து மாசத்துக்கு நாலஞ்சு பேருதான் சென்னைக்குப் போறாங்க. இல்லேன்னா அவனால தாக்குப் பிடிக்க முடியுமா?"

"எத்தனை பேரு போறாங்கன்னு நீங்கதான் கணக்குப் பாக்கறீங்க. செந்தில் இதையெல்லாம் பாக்கற மாதிரி தெரியலை. நான் எப்ப போனாலும், 'மறுபடி எப்ப வருவீங்க மாமா?'ன்னுதான் கேப்பான்.

"அவன் பொண்டாட்டி அதுக்கு மேல. 'ஒவ்வொரு தடவையும் நீங்க மட்டும்தானே வரீங்க? அடுத்த தடவை வரச்சே அம்மாவையும் கூட்டிக்கிட்டு வாங்க'ன்னு சொல்றா. சும்மா வாய் வார்த்தைக்குச் சொல்றதில்ல இது, மனசார சொல்றான்னு அவ சொல்றதைக் கேக்கும்போது நமக்கே தோணும்!"

"அவனுக்கேத்த மாதிரி ஒரு பொண்டாட்டி வந்து வாச்சாளே அதைச் சொல்லுங்க. எங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தா, என் சம்சாரம் உடம்பு முடியலைன்னு படுத்துடுவா!"

செந்தில் அலுவலகத்திலிருந்து வந்ததும், "ருக்கு. இன்னிக்கு ரத்தினவேல் மாமா வரதா சொல்லியிருக்காரு. சாப்பாடு தயார் பண்ணிடு" என்றான்.

"அவரு போன தடவை வந்தபோதே அவரு சுத்த சைவம்னு சொல்லி இருக்கீங்களே. அதனால சைவச்  சமையல் செய்யத்தான் தயார் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"ருக்கு, ஒண்ணு கேட்டா தப்பா நெனச்சுக்க மாட்டியே"

"நீங்க என்ன கேக்கப் போறீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் கேளுங்க" என்றாள் ருக்மிணி  சிரித்துக்கொண்டே.

"உனக்குத்தான் கேள்வி என்னன்னு தெரியுமே, பதில் சொல்லிடு" என்றான் செந்தில்.

"உண்மையைச் சொல்லட்டுமா? உங்க ஊர்க்காரங்க இங்கே சாப்பிட வரும்போது எனக்கு மனசுக்கு நிறைவா இருக்கு. நான் சொன்னா நீங்க நம்புவீங்களான்னு தெரியாது. ஒவ்வொரு தடவையும் யாராவது வந்துட்டுப் போகும்போது, அடுத்தாப்பல யாரும் வர மாட்டங்களான்னுதான் எதிர்பாத்துக்கிட்டிருப்பேன்."
  
குறள் 86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்வருந்து வானத் தவர்க்கு.

பொருள்:
வந்த விருந்தினரை நன்கு உபசரித்து அடுத்த விருந்தினருக்காகக் காத்திருப்பவனை விண்ணுலகில் உள்ள தேவர்கள் சிறப்பாக வரவேற்று உபசரிப்பார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:




87. அனுபவம் புதுமை

ஜகந்நாதன் எப்போதுமே தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் பழக்கம் உடையவன்.

அதனால்தான் அந்தக் கோயில் வாசலில் நின்று கொண்டிருந்த அந்த நடுத்தர வயது ஆசாமியை அவன் கவனிக்க நேர்ந்தது.

ஜகந்நாதன் கோயிலிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, அந்த ஆள் கோயில் வாசலுக்குச் சில அடிகள் தள்ளி நின்று கொண்டு கோயிலிலிருந்து வெளியில் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒருவேளை, அவனுடன் வந்தவர்கள் கோயிலிலிருந்து வெளியே வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறானோ என்று ஜகந்நாதன் முதலில் நினைத்தான். ஆனால் அவன் குறிப்பாகச் சிலரை உற்றுக் கவனித்ததைப் பார்த்தபோது, ஏதோ நோட்டம் பார்க்கிறான் என்று ஜகந்நாதனுக்குத் தோன்றியது.

என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று நினைத்து ஜகந்நாதன் வேறொரு பக்கமாகப் போய் நின்று கொண்டான்.

கோயிலில் அப்படி ஒன்றும் கூட்டமில்லை. ஆயினும் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் வெளியூரிலிருந்து யாத்திரிகர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். சற்று இடைவெளி விட்டாவது சிலர் கோயிலிலிருந்து வெளியே வந்து கொண்டுதான் இருந்தார்கள்.

நாலைந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் வெளியே வந்தது. அப்போது அந்த ஆள் அவர்கள் பின்னால் போனான். ஆனால் அவர்கள் அருகில் செல்லாமல் சற்றுப் பின்னாலேயே நின்றான். சில நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்து பழைய இடத்திலேயே நின்று கொண்டான்.

இது போல் இரண்டு மூன்று முறை நடந்தது.

அதன் பிறகு ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் வெளியே வந்தது. அவன் அவர்களைப் பின்தொடர்ந்து போனான். பிறகு அவர்களுக்கு முன்னால் போய் நின்று ஏதோ சொன்னான். அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர். பிறகு அவனிடம் ஏதோ கேட்க அவனும் பதில் சொல்ல அவர்களுக்கிடையே ஒரு சுருக்கமான உரையாடல் நடந்தது.

பிறகு அவர்கள் அவன் பின்னால் சென்றனர்.

அவன்  அவர்களிடம் ஏதோ சொல்லி அவர்களை ஏமாற்றி எங்கோ அழைத்துச் செல்கிறானோ என்ற சந்தேகம் ஜகந்நாதனுக்கு ஏற்பட்டது. எங்கே அழைத்துப் போகிறான் என்று பார்க்கலாம் என்று கருதி ஜகந்நாதன் அவர்கள் பின்னால் சென்றான்.

சற்றுத் தள்ளியிருந்த ஒரு ஓட்டலுக்குள் அவர்கள் நுழைந்தனர். அவர்களைப் பார்த்ததும் கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் செலுத்தி விட்டு "வாங்க" என்றார். பிறகு அவர் உள்ளே போகும்படி கைகாட்டியதும், அவர்களை அழைத்து வந்த ஆள் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றேன்.

ஜகந்நாதன் ஓட்டலுக்குள் போனான். எங்கே உட்காரலாம் என்று பார்ப்பது போல் சுற்று முற்றும் பார்த்தான். அந்த ஐந்து பேரையும் அந்த ஆள் ஃபேமிலி ரூமுக்குள் அழைத்துச் சென்று அவர்களை அங்கே உட்கார வைப்பதைப் பார்த்தான்.

ஜகந்நாதன் அந்த அறையைப் பார்த்தபடி ஒரு மேஜையில் உட்கார்ந்தான். தன்னை விசாரித்த சர்வரிடம் காப்பி கொண்டு வரச் சொல்லி விட்டு அறையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களுக்கு இலை போடப்பட்டு உணவு பரிமாறப்பட்டது.

ஜகந்நாதன் காப்பி குடித்து விட்டு வெளியே வந்தான். கல்லாவில் அமர்ந்திருந்தவனிடம் பில்லுக்குப் பணம் கொடுத்து விட்டு "உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா? நீங்கதானே முதலாளி? என்றான்.

"ஆமாம். இதைத்தான் கேக்க வந்தீங்களா?" என்றான் அவன் சிரித்தபடி.

"இல்லை. உங்க கடை ஆளு ஒருத்தர் கோயிலிலிருந்து ஒரு குடும்பத்தை அழைச்சுக்கிட்டு வந்து உள்ள சாப்பிட அழைச்சுட்டுப் போறதைப் பாத்தேன்."

"ஓ! அதுவா? ஓட்டல் தொழிலை இங்கிலீஷிலே ஹாஸ்பிடாலிட்டி இண்டஸ்ட்ரின்னு சொல்லுவாங்க. தமிழ்ல விருந்தோம்பல் தொழில்னு சொல்லலாம். ஆனா விருந்தோம்பல்னா, நாம யாரையாவது கூப்பிட்டு வந்து சாப்பாடு போடணும் இல்ல? அதுதான் தினமும் கோயிலுக்கு வரவங்கள்ள ஒரு குடும்பத்தை அழைச்சுக்கிட்டு வந்து அவங்களுக்கு சாப்பாடு போடறதுன்னு ஒரு வழக்கத்தை வச்சுக்கிட்டிருக்கேன்."

"ஓ  அதுதான் உங்க ஆள் கோயிலிலிருந்து வெளியில வரவங்களைப் பாத்துக்கிட்டிருந்தாரா? ஆமாம், எப்படி நீங்க ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கிறீங்க?"

"யாரை வேணா கூப்பிட்டு வந்து சாப்பாடு போடலாம் சார். ஆனா, கோயிலுக்கு வரவங்கள்ள கொஞ்சம் வசதிக் குறைவானவங்களாப் பார்த்துத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு சாப்பாடு போட்டா நாம செய்யற காரியம் இன்னும் பயனுள்ளதா இருக்கும்னு நெனைக்கிறேன். அதனால என்னோட ஆளை கோயிலிலிருந்து வெளியே வர குடும்பங்களைக் கவனிக்கச் சொல்லுவேன்.

"சில பேரு எங்க சாப்பிடலாம்கிறதைப் பத்தித் தங்களுக்குள்ள பேசிப்பாங்க. அவங்க பேசிக்கிறதிலேருந்து அவங்க வசதியானவங்களா, வசதிக் குறைவானவங்களான்னு தெரியும். வசதிக் குறைவானங்களாத் தெரிஞ்சா, எங்க ஆளு அவங்ககிட்ட போயி, கோயிலுக்குப் போயிட்டு வரவங்கள்ள ஒரு குடும்பத்துக்கு எங்க ஓட்டல்ல சாப்பாடு போடறது வழக்கம்னு சொல்லி அவங்களைக் கூப்பிடுவார். சில பேரு ஒத்துப்பாங்க. சில பேரு தயங்குவாங்க. அவங்களுக்கு விருப்பம் இல்லேன்னா வேற ஒரு குடும்பத்தைக் கேப்பாரு."

"ரொம்ப நல்ல காரியம் செய்யறீங்க சார். பாராட்டுக்கள்." என்று சொல்லி விடைபெற்றான் ஜகந்நாதன்.
  
குறள் 87
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் 
துணைத்துணை வேள்விப் பயன்.

பொருள்:
விருந்தோம்பல் என்ற வேள்வியின் பயன் எவ்வளவு என்று கூற முடியாது. அது விருந்தினரின் தகுதியின் அளவைப் பொறுத்தது. 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


88. இந்த நாள் அன்று போல் இல்லையே!
மணிமாறன் தன் அறுபதாவது வயது நிறைவைக் கொண்டாடியபோது அவன் உறவினர்கள் அதிகம் பேர் வரவில்லை. அவன் மனைவி வழி உறவினர்களும்தான். ஏனெனில், அவன் அழைத்ததே மிகச் சிலரைத்தான். அழைத்தவர்களிலும் பலர் வரவில்லை!

அந்த விழாவைக் கொண்டாடுவதிலேயே அவனுக்கு விருப்பம் இல்லை. அவன் மனைவி வள்ளி விருப்பப்பட்டதால்தான் அவன் இதற்கு ஒப்புக் கொண்டான்.

அவர்களுக்கு ஒரு மகள் மட்டும்தான். ஒருவேளை மகன் இருந்திருந்தால் தன் பெற்றோர்களுக்கான இந்த விழாவை அவன் விமரிசையாகக் கொண்டாடியிருப்பான். திருமணம் ஆகிவிட்ட மகள் தன் கணவனுடன் வந்து விழாவில் கலந்து கொள்ளும் ஒரு விருந்தாளியாகத்தானே இருக்க முடியும்? எனவே மணிமாறன் தானே செலவு செய்து தன் அறுபது ஆண்டு நிறைவு வைபவத்தை நடத்த வேண்டிய நிலை.

மணிமாறன் இருந்த நிலையில் அவனால் அதிகம் செலவு செய்ய முடியவில்லை.

பத்து வருடம் முன்பென்றால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். சொந்தத் தொழில் செய்து வசதியோடு வாழ்ந்த காலம் அது!

அவன் வழி உறவினர்களும் சரி, அவன் மனைவி வழி உறவினர்களும் சரி, மிகச் சாதாரணமான நிலையில்தான் இருந்தார்கள். மணிமாறனும் ஆரம்பத்தில் வசதிக் குறைவானவனாகத்தான்  இருந்தான்.

ஆனால் சொந்தத் தொழில் செய்வது என்று முடிவு செய்து அவன் இறங்கிய பிறகு அவன் பொருளாதார நிலை வேகமாக வளர்ந்து விட்டது.

ஆனால் உறவினர்கள் யாரையும் அவன் தன்னிடம் அண்ட விடவில்லை. உறவினர்கள் தன் வீட்டுக்கு அதிகம் வருவதை அவன் விரும்பவில்லை.

வள்ளி அவனிடம் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறாள். "என்னங்க, சொந்தக்காரங்களையெல்லாம் அவ்வப்போது வீட்டுக்கு வரச் சொல்லி சாப்பாடு போடணுங்க. அப்பத்தான் அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும், நமக்கும் சந்தோஷமாயிருக்கும்."

"சொந்தக்காரங்களையெல்லாம் கல்யாணம் கச்சேரிகள்ள பாக்கறோமே, அது போதாதா? அவங்களை வீட்டுக்குக் கூப்பிட்டு சாப்பிடச் சொல்றதெல்லாம் எதுக்கு?  யாராவது வீட்டுக்கு வந்தா, கொஞ்ச நேரம் பேசிட்டு, காப்பி கொடுத்து அனுப்பிடணும். அதுதான் நமக்கு நல்லது. இல்லேன்னா, நம்மகிட்டதான்  வசதி இருக்கேன்னுட்டு ஒத்தர் மாத்தி ஒத்தர் வந்து டேரா போட்டுக்கிட்டே இருப்பாங்க. இவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடவா நான் சம்பாதிக்கிறேன்?"

உறவினர்கள் அவன் மனநிலையைப் புரிந்து கொண்டு ஒதுங்கியே இருந்தார்கள்.

சில காரணங்களால் அவன் தொழிலில் சறுக்கல் ஏற்படத் தொடங்கியது. மிகக் குறுகிய காலத்திலேயே அவன் தொழிலில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டு, அவன் பொருளாதார நிலை சரிந்து, குடும்பம் நடத்துவதே கஷ்டம் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.

எப்படியோ காலத்தை ஒட்டி அறுபது வயது வரை கடந்து வந்து விட்டான். மனைவியின் விருப்பத்துக்கு ஏற்ப அறுபதாம் கல்யாணமும் செய்து கொண்டு விட்டான்.

எல்லோரையும் கூப்பிட்டு விமரிசையாக நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், குறைந்த பட்ஜெட்டில் நடந்த விழா என்பதால் மிக நெருங்கிய உறவினர்களையும், நண்பர்களையும் மட்டுமே அழைக்க முடிந்தது.

"கூட்டம் ரொம்பக் குறைச்சலா இருக்கே! நாம கூப்பிட்டவங்கள்ள நிறைய பேரு வரவே இல்லை. இன்னும் கொஞ்ச பேரைக் கூப்பிட்டிருக்கலாமோ?" என்றான் மணிமாறன் பக்கத்தில் இருந்த மனைவி வள்ளியிடம்.

"வசதி இருந்த காலத்தில யாரையும் கூப்பிட்டு ஒருவேளை சாப்பாடு போடறதுக்குக் கூட உங்களுக்கு மனசு இல்ல. இப்ப ஒங்க வருமானம் குறைஞ்சு போய் நாம ரெண்டு பேர் குடும்பம் நடத்தறதுக்கே பத்தாக்குறையா இருக்கும்போது நிறைய பேரைக் கூப்பிட்டு விருந்து கொடுக்க முடியலியேன்னு வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? நம்ப உறவுக்காரங்க உற்சாகமா வந்து விழாவிலே கலந்துப்பாங்கன்னும் எப்படி எதிர்பார்க்க முடியும்?" என்றாள் வள்ளி.
  
குறள் 88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி 
வேள்வி தலைப்படா தார்.

பொருள்:
விருந்தோம்பல் என்ற வேள்வியில் பொருளைச் செலவழிக்காமல் பொருளைச் சேமித்தவர்கள், அந்தப் பொருள் அழிந்தபின் பற்றுக்கோட்டை (ஆதரவை) இழந்து விட்டோமே என்று வருந்துவர். 

இந்தக் கதையின் காணொளியின் வடிவம் இதோ:
89. டைனிங் டேபிள்!
"கடைக்குப் போய் புதுசா ஒரு டைனிங் டேபிள் வாங்கிட்டு வரலாம் வா" என்று அழைத்தான் முத்து.

"எதுக்குப் புதுசா வாங்கணும்? நம்ப டைனிங் டேபிள் நல்லாத்தானே இருக்கு?" என்றாள் அவன் மனைவி லட்சுமி.

"அதை வாங்கி அஞ்சு வருஷம் ஆச்சு இல்ல? அதைக் கொடுத்துட்டுப் புதுசா வாங்கிக்கலாம். எதுக்குப் பழசை வச்சுக்கிட்டு? நமக்கென்ன வசதியா இல்ல?"

இருவரும் நகரிலேயே மிகப் பெரிய ஃபர்னிச்சர் கடைக்குச் சென்றனர்.

கடையில் பல மாடல்களை பார்த்துப் பெரிய டைனிங் டேபிள் ஒன்றைத் தேர்வு செய்தான் முத்து. "இது நல்லா இருக்கு இல்ல?" என்றான்.

"நல்லாத்தான் இருக்கு."

"அப்ப இதையே வாங்கிடலாமா?"

"இருங்க. நான் ஒண்ணு காட்டறேன், அதையும் பாருங்க."

"இதை விட நல்லதாவா காட்டிடப் போறே? இந்தக் கடையிலேயே இதுதான் விலை அதிகம். வேற கடைக்குப் போனாலும் இதைவிட நல்லதாக் கிடைக்காது."

"நான் காட்டறதையும் பாருங்களேன்!"

லட்சுமி காட்டிய டைனிங் டேபிளைப் பார்த்த முத்து, "இதையா வாங்கணுங்கற? இது ரொம்பச் சின்னதா இருக்கே? வசதி இல்லாதவங்க எது விலை குறைவுன்னு பாத்து வாங்குவாங்களே, அது மாதிரி இருக்கு இது!" என்றான்.

"நமக்கு இது போதுமே!"

"ஏன் இப்படிச் சொல்ற?"

"நம்ப வீட்டில நாம ரெண்டு பேர்தான் இருக்கோம். நாம ரெண்டு பேருதான் உக்காந்து சாப்பிடப் போறோம். உங்க சொந்தக்காரங்களோ, என்னோட சொந்தக்காரங்களோ, உங்க நண்பர்களோ யாரும் நம்ம வீட்டுக்கு வந்து ஒரு வேளை கூடச் சாப்பிடப் போறதில்ல. யாராவது நம்ம வீட்டுக்கு வந்தா கொஞ்ச நேரம் சோஃபாவில உக்காந்துட்டுப் போயிடப் போறாங்க! நமக்கு எதுக்கு பெரிய டைனிங் டேபிள்?"

மனைவி சொன்னதன் உட்பொருளை உணர்ந்தவனாக முத்து மௌனமாக இருந்தான்.

குறள் 89 
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா 
மடமை மடவார்கண் உண்டு.

பொருள்:
விருந்தோம்பலில் ஈடுபடாமால் இருப்பது செல்வங்கள் இருந்தும் வறுமை என்ற நிலை. இந்த நிலை அறிவிலிகளுக்கு ஏற்படும்.

இந்தக் கதையின் காணொளியின் வடிவம் இதோ:


90. பெரியம்மா பெண்
ராஜுவுக்கு அவன் பிசினஸ் விஷயமாக பெங்களூர் போக வேண்டி இருந்தது. ஒரு வாடிக்கையாளரைப் பார்த்துப் பேச வேண்டும். வேலை சில மணி நேரங்கள்தான்.

மனைவியையும் அழைத்துப் போய் இரண்டு மூன்று நாட்கள் தங்கி, அவளுக்கு பெங்களூரைச் சுற்றிக் காட்டி விட்டு வரலாம் என்று நினைத்தான். அவன் மனைவி கிரிஜாவும் உற்சாகமாக ஒப்புக்கொண்டாள்.

பெங்களூரில் இருக்கும் அவன் நண்பன் கோபால் பெங்களூர் வந்து தன் வீட்டில் சில நாட்கள் தங்கி விட்டுப் போகும்படி அவனை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். அதனால் இருவரும் கோபால் வீட்டில் தங்கலாம் என்று ராஜு சொன்னபோது, கிரிஜா கொஞ்சம் தயங்கினாள்.

"நீங்க ரெண்டு பேரும் நண்பர்கள்தான். ஆனா நான் உங்க நண்பரோட மனைவியைப் பார்த்தது கூட இல்லியே! நான் எப்படி அங்கே வந்து தங்க முடியும்?" என்றாள் கிரிஜா.

"நான் கூட அவன் மனைவியைக் கல்யாணத்துல பார்த்ததுதான். எனக்கும் அவங்களைத் தெரியாது. இப்ப போய்ப் பார்த்துப் பழகிக்கப் போறோம்!" என்றான் ராஜு.

"எனக்கென்னவோ தயக்கமா இருக்கு."

"இங்க பாரு. நாம அங்கே போய் இறங்கப் போறோம். அதுக்கப்புறம் ஊரைச் சுத்திப் பார்க்க வெளியில போகப் போறோம். அவங்க வீட்டில இருக்கப் போறது கொஞ்ச நேரம்தானே? நாம வேற எங்கேயாவது தங்கினா அவன் தப்பா நினைச்சுப்பான்."

கிரிஜா அரை மனதாகச் சம்மதித்தாள்.

பெங்களூரில் கோபால் வீட்டில் வந்து இறங்கிச் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு விட்டுக் குளித்து டிஃபன் சாப்பிட்டு விட்டு இருவரும் வெளியே கிளம்பத் தயாரானார்கள்.

"என்னங்க? நாம பெட்டியை எடுத்துட்டுப் போயிடலாம். பாக்க வேண்டிய இடங்களைப் பாத்துட்டு, அப்படியே என் பெரியம்மா பொண்ணு வீட்டுக்குப் போயிடலாம்" என்றாள்  கிரிஜா.

"ஏன், நீங்க இங்கியே தங்கலாமே? இங்க ரெண்டு மூணு நாள் இருக்கப் போறதாத்தானே ராஜு சொன்னான்? என்னடா?" என்றான் கோபால்.

ராஜு பதில் சொல்வதற்குள், கிரிஜா "ரெண்டு நாள் பெங்களூர்ல இருக்கறதாத்தான் பிளான். ஆனா சாயந்திரம் என் பெரியம்மா பொண்ணு வீட்டுக்கு வராதா சொல்லியிருக்கேன். அவளும் நானும் சின்ன வயசிலிருந்தே ரொம்ப க்ளோஸ்" என்றாள்.

"சரி. அதுக்கு ஏன் பெட்டியைத்  தூக்கிக்கிட்டுச் சுத்தணும்? சாயந்திரம் இங்கே வந்துட்டு சாப்பிட்டுட்டு அப்புறம் பெட்டியை எடுத்துக்கிட்டுப் போகலாமே?" என்றான் கோபால்.

"இல்லை. சாயந்திரம் இவ்வளவு தூரம் வரணும். அவ வீடு லால் பாக் பக்கத்துலதான் இருக்கு. மொதல்ல அவ வீட்டுக்குப் போய்ப் பெட்டியை வச்சுட்டு அப்புறம் லால் பாக் போயிட்டு அப்புறம் வேற எடங்களுக்குப் போறோம்" என்றாள் கிரிஜா.

கோபால் ராஜூவைப் பார்க்க, அவன் பதில் சொல்லாமல் கிரிஜாவைப் பார்த்தான். "ஏங்க இதுதானே நம்ப பிளான்? நீங்க உங்க ஃபிரண்டுகிட்ட சரியா சொல்லலியா?" என்றாள் கிரிஜா.

விடை பெற்றுப் பெட்டியை எடுத்துக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.

வெளியே வந்ததும், "உன் பெரியம்மா பெண் நாக்பூர்ல இல்ல இருக்கறதாச் சொல்லியிருக்க? இப்ப அவ பெங்களூருக்கு வந்துட்டாளா என்ன? எங்கிட்ட இதுக்கு முன்னால சொல்லவே இல்லையே! கோபால் முன்னால கேக்க வேண்டாம்னு பேசாம இருந்துட்டேன்" என்றான் ராஜு.

"அவ நாக்பூர்லதான் இருக்கா!"

"பின்னே? இப்ப எங்கே போகப் போறோம்?"

"ஏதாவது நல்ல ஹோட்டல் இருந்தா பாருங்க. அங்கே தங்கிக்கலாம்."

"ஏன்? கோபால் வீட்டில எல்லாம் வசதியாத்தானே இருந்தது?அவங்களும் நம்மளை நல்லாத்தானே கவனிச்சுக்கிட்டாங்க?"

"நல்லாத்தான் கவனிச்சுக்கிட்டாங்க. இல்லைன்னு சொல்லலே. ஆனா நாம வீட்டுக்குள்ள நுழைஞ்சப்ப, உங்க ஃபிரண்டோட மனைவி முகத்தில சந்தோஷம் இல்ல. வாங்கன்னு கூப்பிட்டாங்களே தவிர, நாம அங்கே வந்து தங்கறதை அவங்க அசௌகரியமான நினைச்சாங்கன்னு தோணிச்சு."

"சே! சே! எவ்வளவு நல்ல பொண்ணு அவங்க! நமக்கு டிஃபன் எல்லாம் நல்லாப் பண்ணிக் குடுத்து உபசரிக்கல?"

"உபசரிச்சாங்க. அவங்க நல்லவங்கதான். அவங்களை நான் குறை சொல்லல. ஆனா நாம அவங்க வீட்டில வந்து தங்கறதில அவங்களுக்கு ஏதாவது அசௌகரியம் இருந்திருக்கலாம். அது அவங்களை அறியாம அவங்க முகத்தில வெளிப்பட்டிருக்கும்."

"நீ ஏதோ கற்பனை பண்ணிக்கறேன்னு நினைக்கிறேன்."

"கற்பனை இல்லீங்க. அவங்களோட அதிருப்தி அவங்க முகத்தில தெரிஞ்சது. நாம மூணு நாள் அங்கே தங்கினாலும் நம்மளை நல்லபடியாதான் கவனிச்சுப்பாங்க. ஆனா அவங்க முகத்தில அந்த அதிருப்தியைப் பாத்தப்பறம் எனக்கு அங்கே தங்கப் புடிக்கல. அதனாலதான் பெரியம்மா பொண்ணு வீட்டுக்குப் போறதாப் பொய் சொல்லிட்டு வந்துட்டேன்."
  
குறள் 90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து 
நோக்கக் குழையும் விருந்து.

பொருள்:
அனிச்சம்பூவை முகர்ந்து பார்த்தாலே அது வாடி விடும். அதுபோல் விருந்தினர்களைச் சற்று முகமாற்றத்துடன் பார்த்தாலே அவர்கள் மனம் வருந்துவர்.

இந்தக் கதையின் காணொளியின் வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்






















No comments:

Post a Comment