About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, January 27, 2016

53. மனைவி செய்யும் மாயம்!

"அண்ணன் இல்லையா அண்ணி?" என்று வாயிற்படியில் நின்றபடியே கேட்டான் சண்முகம்.

"உங்க அண்ணன் எப்ப நேரத்தோட வீட்டுக்கு வந்திருக்காரு? ஏன் ஏதாவது கடன் கேக்கப் போறீங்களா?" என்றாள் சிவகாமி.

"நான் எப்ப அண்ணன்கிட்ட கடன் கேட்டிருக்கேன்?" என்றான் சண்முகம் அடிபட்டவனாக.

"எனக்கு எப்படித் தெரியும் உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற விவகாரம்? உங்களுக்குக் கடன் கொடுத்தா எங்கிட்ட சொல்லவா போறாரு உங்க அண்ணன்?"

இதற்குள் பழனி வந்து விட்டான். "ஏண்டா வாசல்லேயே நிக்கறே?... ஏம்மா வந்தவங்களை உள்ள கூப்பிடறதுல்ல?"

"அவரு என்ன வெளி ஆளா என்ன? உங்க தம்பிதானே? நான் கூப்பிட்டாத்தான் உள்ளே வருவாரா?" 

சிவகாமி உள்ளே போய் விட்டாள்.

"தம்பிக்கும் எனக்கும் காப்பி கொண்டா" என்றான் பழனி இரைந்து.

பழனியும், சண்முகமும் முன்னறையில் வந்து உட்கார்ந்தார்கள்.

"ஒண்ணுமில்ல அண்ணே! சங்கருக்குக் கல்யாணப் பத்திரிகை அடிக்கணும். அதுல நம்ம குடும்பப் பேரு, தாத்தா பேரு எல்லாம் போடணும் இல்லை? எனக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாதே! அதுதான் உன்கிட்ட விவரம் கேட்டுக்கிட்டுப் போகலாம்னு வந்தேன்."

"சொல்றேன். ஆனா ஒரு விஷயம் உறுத்திக்கிட்டே இருக்கு. உன்  பையன் நல்லாப் படிச்சிருக்கான். அவனுக்கு வசதியான இடத்திலேருந்தெல்லாம் பொண்ணு கொடுக்கப் போட்டி போட்டுக்கிட்டு வருவாங்களே, நீ ஏன் ஒரு சாதாரணக் குடும்பத்திலேருந்து பொண்ணு எடுக்கற? பொண்ணுக்குப் படிப்பு, வேலை எல்லாம் கூட இல்லை!"

"அண்ணே! நான் கூட அவ்வளவா வசதி இல்லாதவன்தான். என் பொண்டாட்டி வடிவும் ஏழைக் குடும்பத்திலேந்து வந்தவதான். நாங்க சந்தோஷமாத்தானே இருக்கோம்? இன்னும் சொல்லப் போனா சங்கர் வெளியூர்ல தங்கி இஞ்சினியரிங் படிச்சு இப்ப நல்ல வேலைக்குப் போயிருக்கான்னா அதுக்கு வடிவுதான் காரணம்.

"என்னோட குறைஞ்ச வருமானத்தில குடும்பத்தையும் நடத்தி, நாலு காசு சேத்து, போதாததுக்குக் கடனை உடனை வாங்கி சங்கரைப் படிக்க வச்சது அவதான். அதனாலதான் சங்கருக்குப் பொண்ணு பாக்கும்போதே வசதியான இடமான்னு பாக்கறதை விட, பொண்ணு குடும்பப் பாங்கானவளான்னுதான் பாத்துத் தேர்ந்தெடுத்தோம்.

"சங்கருக்கும் பொண்ணைப் புடிச்சிருக்கு. பொண்ணுக்கும் சங்கரைப் புடிச்சிருக்கு. இப்பல்லாம் நம்ம காலம் மாதிரி இல்ல. சங்கரும் அந்தப் பொண்ணும் கல்யாணத்துக்கு முன்னயே அடிக்கடி சந்திச்சுப் பேசி ஒத்தரை ஒத்தரு நல்லாப் புரிஞ்சுக்கிட்டிருக்காங்க. வசதியா அண்ணே முக்கியம்? மனசுதானே முக்கியம்!" என்றான் சண்முகம்.

பழனி மனது புண்படக் கூடாதே என்று சண்முகம் சொல்லிக் காட்டாத விஷயங்கள் பழனியின் மனதில் அலை மோதின. பழனி வசதியானவன்தான். ஆனால் சிவகாமியின் பொறுப்பற்ற, யாரையும் மதிக்காத போக்கினால் பழனிக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லை.

அவர்களின் ஒரே பெண் கூட அம்மாவின் போக்குப் பிடிக்காமல் வெளியூரில் ஹாஸ்டலில் தங்கிப் படித்து விட்டு வெளியூரிலேயே வேலை செய்கிறாள். கல்யாணத்தைப் பற்றிப் பிடி கொடுத்துப் பேசுவதில்லை.

தன் பையன் கல்யாண விஷயத்தில் தம்பியின் அணுகுமுறை சரிதான் என்று தோன்றியது பழனிக்கு. தம்பி கேட்ட விவரங்களை ஒரு காகிதத்தில் குறித்துக் கொடுத்தான்.

சண்முகம் விடை பெறும் சமயம்தான் அரை மணி நேரம் ஆகியும் இன்னும் மனைவி காப்பி கொண்டு வரவில்லை என்பது பழனிக்கு நினைவு வந்தது!

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?

பொருள்:
மனைவி உயர்ந்த பண்புகளைக் கொண்டவளாக இருந்தால் ஒருவனுக்கு வாழ்க்கையில் இல்லாதது எது? (எல்லாமே இருப்பது போல்தான்.) மனைவி பண்புள்ளவளாக இல்லாவிட்டால், வாழ்க்கையில் இருப்பது எது? (எதுவுமே இல்லாதது போல்தான்.)

இந்தக் கதைக்கான காணொளி இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













Tuesday, January 26, 2016

52. வெற்றி மீது வெற்றி வந்தும்...

பரத் அலுவலகத்துக்கு வந்து தன் அறைக்குள் சென்று அமர்ந்தபோது தொலைபேசி அடித்தது. அவரது உதவியாளர் வந்தனாதான் பேசினாள்.

"சார், டில்லியிலிருந்து தொழில்துறைச் செயலர் மூன்று முறை ஃபோன் செய்து விட்டார். மறுபடியும் அவரிடமிருந்து அழைப்பு வரக் கூடும்...இதோ வந்தே விட்டது!" என்றாள் அவசரமாக.

"கொடுங்கள்" என்றார் பரத்.

தொழில்துறைச் செயலர் பேசினார். பிரதமருக்குத் தொழில்துறைப்  பிரச்னைகள் பற்றி ஆலோசனை கூற ஒரு குழு அமைக்கப் பட்டிருக்கிறதாம். அதில் உறுப்பினர் ஆக பரத்துக்கு விருப்பமா என்று கேட்டார். மாதம் ஒரு நாள் டில்லி சென்று வர வேண்டி இருக்குமாம் - அரசு செலவில்!

"சார், இது ஒரு பெரிய கௌரவம். நான் ஒரு சாதாரணத் தொழில் அதிபர். என்னை மதித்து..."

"இந்தக் குழுவில் புகழ் பெற்ற தொழில் அதிபர்களைச் சேர்ப்பதை விட சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களே இடம் பெற வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம்!"

தொழில்துறைச் செயலர் சத்தம் இல்லாமல் ஒரு புகழ் மாலையைச் சூட்டி விட்டார்!

"இது பெரிய கௌரவம், அதிர்ஷ்டம், வாய்ப்பு எல்லாம்!"

"நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் நேரடியாக பதில் சொல்லவில்லை. குழுவின் உறுப்பினராக உங்களுக்கு சம்மதம்தானே?" என்றார்  செயலர், அரசாங்க தோரணையில்.

"சம்மதம்தான்" என்று பரத் சொன்னதும் இதற்காகவே காத்திருந்தது போல்  தொலைபேசியை வைத்து விட்டார் அரசுச் செயலர்.

"என் சம்மத்தத்தைக் கேட்டவர் அவர் முடிவைச் சொல்லவில்லையே?" என்ற பரத்தின் கேள்விக்கு சில நிமிடங்களிலேயே ஈ-மெயில் மூலம் பதில் வந்தது - அவரது உறுப்பினர் பதவியை உறுதி செய்து.

அவர் ஈ-மெயிலைப் படித்து முடித்தபோது அவரது கைபேசியில் அழைப்பு வந்தது. மனைவி!

இந்த மகிழ்ச்சியான செய்தியை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் உற்சாகம் அவரிடம் இல்லை. மாறாக, 'என்ன தலைவலியோ?' என்று நினைத்துக்கொண்டேதான் "ஹலோ, சொல்லு" என்றார்.

"என்னத்தைச் சொல்ல? உங்க அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னேனே, செய்தீர்களா?"

"இதோ பார், காலையில் ஆஃபீஸ் கிளம்பும்போது ஏதோ சொன்னாய். பேசினால் தகராறு வரும் என்றுதான் பேசாமல் வந்து விட்டேன். இப்போது ஏன் ஆஃபீசுக்கு ஃபோன் செய்கிறாய்?"

"நம்மகிட்டதான் பணம் இருக்கே! நல்ல வசதியான இல்லத்தில உங்கம்மாவைச் சேர்க்க வேண்டியதுதானே?"

"நம்மகிட்டதான் பணம் இருக்கே! நர்ஸ் வச்சு அம்மாவைப் பாத்துக்க நம்மால முடியும். அதைத்தானே செஞ்சுக்கிட்டிருக்கோம்?"

"இங்க பாருங்க, வீட்டில எப்பவும் நர்ஸ் நடமாடிக்கிட்டு! இது ஆஸ்பத்திரி மாதிரி இருக்கு. என்னால இதைச் சகிச்சுக்க முடியல."

"முடியலேன்னா நீ போயிடு முதியோர் விடுதிக்கு. உனக்கும் நாப்பது வயசுக்கு மேலே ஆயிடுச்சு இல்லே!"

பரத் கோபமாக ஃபோனை வைத்து விட்டார்.

கைபேசியில் நிறைய அழைப்புகள் வந்திருந்தன. யார், யார் என்று பார்ப்பதற்குள் மேசை மீதிருந்த தொலைபேசி சிணுங்கியது. அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் வாழ்த்துச் சொன்னார். இதற்குள் எப்படியோ விஷயம் பரவி விட்டது. கைபேசிக்கு வந்திருந்த அழைப்புகளும் இது பற்றியதாகத்தான் இருக்கும்.

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு அவரை அழைத்து வாழ்த்திய பலர்!

1 மணிக்கு உள்ளே வந்த அவரது செயலர் வந்தனா, "சார். நீங்கள் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். அதனால் இன்னும் அரை மணி நேரத்துக்கு நான் எந்த அழைப்பையும் உங்களுக்கு அனுப்பப் போவதில்லை. உங்கள் கைபேசியையும் என்னிடம் கொடுங்கள்" என்று அவர் மேசை மீதிருந்த கைபேசியை உரிமையுடன் எடுத்துக்கொண்டு வெளியே செல்ல முற்பட்டவள் திரும்பி, "வாழ்த்துக்கள் சார், நீங்கள் பிஸியாக இருந்தததால் இத்தனை நேரம் உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை" என்றாள்.

"உங்களுக்கு எப்படித் தெரியும்? ஓ, உங்களைத்தான் என் ஈ-மெயிலைப்  பார்க்கச் சொல்லியிருக்கிறேனே! அலுவலகத்தில் எல்லோருக்கும் தெரியுமா?" என்றார் பரத்.

"இன்னும் சொல்லவில்லை சார். நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்."

"சொல்லி விடுங்கள்" என்றார் பரத்.

அப்போதுதான் அவருக்கு விஷயத்தை மனைவியிடம் சொல்லவில்லை என்று நினைவு வந்தது.

சொல்லி என்ன ஆகப் போகிறது? "அப்படியா?" என்று ஒரு வார்த்தையில் உற்சாகம் இல்லாமல் பதில் சொல்லி விட்டுத் தனக்கு வேண்டிய விஷயங்களைப் பேசத் தொடங்கி விடுவாள் மனைவி என்று நினைத்துக் கொண்டார்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

பொருள்:
மனைவியிடம் குடும்பத்துக்குத் தேவையான பண்புகள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் வேறு எத்தனை சிறப்புகள் இருந்தும் பயனில்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













Tuesday, January 19, 2016

51. துணையிருப்பாள் பார்கவி!

"என்னங்க மறக்காம டிஃபன் காரியரை எடுத்துக்கங்க" என்றாள் பார்கவி.

"உனக்கு உடம்பு சரியில்லே. நீ சமைக்க வேண்டாம். நான்  வெளியிலே சாப்பிட்டுக்கறேன்னு சொன்னேனே! எதுக்குக்  காலையிலேயே எழுந்து இதெல்லாம் செய்யறே?" என்றான் கதிரேசன்.

"ஓட்டல்ல ஏதாவது சாப்பிட்டுட்டு உங்களுக்கும் உடம்பு சரியில்லாம போகணுமா? அதோட குழந்தைகளுக்கு எப்படியும் சாப்பாடு கொடுத்து அனுப்பணுமே!"

"உண்மையான காரணம் அது இல்லை. நான் ஓட்டலில் சாப்பிட்டால் காசு செலவழிஞ்சுடுமேன்னுதானே?"

"நீங்களா ஓட்டல்ல சாப்பிடறவரு? நான் டிஃபன் கொடுத்தனுப்பாட்டா நீங்க வெறும் டீயையும் பன்னையும் சாப்பிட்டுட்டு வயித்தை நிரப்பிப்பீங்கன்னு எனக்குத் தெரியாதா?"

கண்களில் ததும்பிய கண்ணீரை மனைவி பார்த்து விடக் கூடாதே என்று கதிரேசன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அதனால் பார்கவியின் கண்களுக்குள் பொங்கி எழுந்த கண்ணீரை அவனால் பார்க்க முடியவில்லை.

ரு வருடம் முன்பு வரை கதிரேசன் ஒரு சிறிய தொழிற்சாலையை நடத்திக் கொண்டிருந்தான். தொழிற்பேட்டையில் ஒரு சிறிய ஷெட், அதில் நான்கைந்து இயந்திரங்கள், ஏழெட்டு ஊழியர்கள் என்று ஒரு சிறிய அரசாங்கத்தை நடத்தி வந்தான்.

ஒரு பெரிய தொழில் நிறுவனத்துக்கு சில உதிரி பாகங்களைச் செய்து கொடுத்து வந்தான். தொடர்ந்து ஆர்டர்கள் கிடைத்து வந்தன. ஆனால் ஒரு பில்லுக்குப் பணம் வர ஆறு மாதம் ஆகி விடும். மூன்று மாதம் கழித்துத்தான் பணம் கொடுப்போம் என்று ஆரம்பத்தில் அவர்கள் சொன்னபோது தொடர்ந்து ஆர்டர் கொடுப்பார்கள் என்பதால் அவன் அதற்கு ஒப்புக்கொண்டான்.

ஆனால் நாளடைவில் மூன்று மாதம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக நீண்டு ஆறு மாதம் ஆகி விட்டது. வங்கிக் கடன் கொஞ்சம், வேறு கடன்கள் கொஞ்சம் என்று வாங்கி, கதிரேசன் சமாளித்து வந்தான்.

பழைய பில்களுக்குப் பணம் வந்து கொண்டிருந்ததால் பணப் புழக்கம் இருந்து கொண்டே இருந்தது. வீட்டுச் செலவுக்கு தாரளமாகப் பணம் கொடுத்து வந்தான். காரும் வைத்திருந்தான். ஓரளவுக்கு வசதியான வாழ்க்கை என்றே சொல்ல வேண்டும். பார்கவி வசதியான குடும்பத்திலிருந்து வந்தவள். அதனால் அவள் வசதியாக வாழ வேண்டும் என்ற அக்கறை கதிரேசனிடம் இருந்தது.

எதிர்பாராமல் நிலைமை மாறி விட்டது. அவனுக்கு ஆர்டர் கொடுத்து வந்த பெரிய நிறுவனம் தொடர்ச்சியான பொருளாதார இழப்புகளால் திடீரென்று மூடப்பட்டது. கதிரேசனுக்கு வர வேண்டிய ஆறு மாத பில் பணம் முடங்கிப் போனது.

நிறுவனத் தலைவரை நேரே சந்தித்துக் கதிரேசன் மன்றாடியபோது, நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு விட்டதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டார். கதிரேசன் போல் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருப்பதாகவும் சொன்னார். ஊழியர்களுக்கே மூன்று மாத சம்பள பாக்கியாம்!

கடன் கொடுத்த வங்கியும், மற்றவர்களும் நெருக்கடி கொடுத்ததால் வேறு நிறுவனங்களிலிருந்து ஆர்டர் வாங்கித் தொழில் நடத்தும் முயற்சியை அவனால் மேற்கொள்ள முடியவில்லை. சொந்த வீடு, கார், மனைவியின் நகைகள் எல்லாவற்றையும் விற்றுக் கடன்களை அடைத்த பிறகு அவன் கையில் எதுவும் மிஞ்சவில்லை.

வேறு வழி இல்லாமல் ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலைக்குச் சேர்ந்தான் கதிரேசன். குழந்தைகள், உயர் கல்வி கொடுப்பதாகச் சொல்லி உயர் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்த தனியார் பள்ளியிலிருந்து கட்டணம் இல்லாத அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்கள். சிறிதாக ஒரு வாடகை வீடு, குறைந்த பட்ஜெட்டில் வாழ்க்கை என்று மிகக் குறுகிய காலத்திலேயே அவர்கள் வாழ்க்கை திசை மாறியது.

பார்கவியின் தந்தை தங்கள் வீட்டில் வந்து தங்கிக் கொள்ளும்படி அழைத்தார். வருமானத்துக்கு வழி செய்து தரவும் முன் வந்தார். கதிரேசன் பதில் சொல்லும் முன்பே பார்கவி மறுத்து விட்டாள். "ஒவ்வொருத்தர் வாழ்க்கையை அவங்களேதான் வாழ்ந்துக்கணும் அப்பா" என்று சுருக்கமாக பதில் சொல்லி அவரை அனுப்பி விட்டாள். அவர் போகும்போது அவர் மனம் புண்படக் கூடாதே என்பதற்காக "ஸ்கூல் லீவு விட்டதும் குழந்தைங்களை அனுப்பி வைக்கிறேன்" என்றாள், உறவுச் சங்கிலி அறுந்து விடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக.

அதன் பிறகு பார்கவி தன்னை அடியோடு மாற்றிக்கொண்டாள். வீட்டு வேலைக்கு ஆள், கடைக்குப் போகக் கார் என்று வாழ்ந்து வந்தவள், தன் கையையும் காலையும் அதிகம் நம்ப ஆரம்பித்தாள்.

குழந்தைகளிடம் அவள் அடிக்கடி சிக்கனத்தைப் பற்றிப் பேசியது மறைமுகமாகத் தனக்கும் ஒரு பாடமோ என்று கதிரேசன் நினைத்துக் கொள்வான். 'இவள் மட்டும் நிதி மந்திரியாக இருந்தால் பற்றாக்குறை இல்லாமல் பட்ஜெட் போட்டு நாட்டின் பொருளாதாரத்தை  முன்னேற்றி விடுவாள்' என்று கூடக் கதிரேசன் நினைத்திருக்கிறான்.

எல்லாவற்றையும் விட, வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திருமணத்துக்குப் பிறகும் வசதியாக வாழ்ந்தவளால் தன்னை எப்படி இப்படி மாற்றிக்கொள்ள முடிந்தது என்ற வியப்பு அவனை விட்டு நீங்க வில்லை.

திரேசன் வேலைக்குக் கிளம்பிய பிறகு பார்கவிக்கு வீட்டு வேலை கொஞ்சம் இருந்ததது. அதை விரைவாக முடித்து விட்டு, முகம் கழுவி, புடவை மாற்றிக்கொண்டு கைப்பையை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினாள்.

பகல் வேலைகளில் அவள் என்ன செய்கிறாள் என்பது கதிரேசனுக்குத் தெரியாது.  கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த பணத்தில் அவள் ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்திருக்கிறாள். பயிற்சி முடிந்ததும் மிகக் குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே பெண்கள் அழகுக் கலை நிலையம் ஒன்றைத் துவக்கி அதில் கிடைக்கும் வருவாயில் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்பது அவளது திட்டம்.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 51
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.


பொருள்: 
தனது குடும்பத்துக்குப் பொருத்தமான நற்பண்புகளைக் கடைப்பிடித்துத் தன் கணவனின் பொருளாதார நிலைக்கு ஏற்ப வாழ்க்கை நடத்துபவளே வாழ்க்கைத் துணை என்று கருதப்படுவாள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


Sunday, January 17, 2016

50. மனிதனும் தெய்வமாகலாம்

"அப்பா! அமரர் என்றால் யார்?"

"அமரர் என்றால் தேவர்."

"தேவர் என்றால்?"

"தேவர் என்றால் தேவலோகத்தில் அல்லது சொர்க்கத்தில் இருப்பவர். ஒருவர் இந்த உலகத்தில் இருக்கும்போது நல்ல காரியங்களைச் செய்தால், இறந்த பின் அவர் சொர்க்கத்துக்குச் செல்வார். அங்கே தேவர் போல் வாழ்வார். அதனால்தான் இறந்து போனவர்களை 'அமரர்' என்று சொல்கிறோம். இறந்த பின் அவர் சொர்க்கத்துக்குச் சென்றிருப்பார் என்ற விருப்பத்திலும் நம்பிக்கையிலும் சொல்லப்படுவது இந்த வார்த்தை."

"அப்படியானால் இந்த உலகத்தில் இருப்பவர்கள் யாரும் அமரர் இல்லையா?"

"உயிரோடு இருப்பவர்களைக் குறிக்க அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை" என்றார் குணசீலன் எச்சரிக்கை உணர்வுடன்.

பள்ளியில் படிக்கும் பத்து வயது மகனின் கேள்வி குணசீலனின் மனதில் திரும்பத் திரும்ப மேலெழும்பிக்கொண்டே இருந்தது. தனக்குத் தெரிந்த மனிதர்கள் பலரை நினைத்துப் பார்த்தார். அவர்களில் யாரையாவது கடவுளுக்கு நிகரானவர்களாகச் சொல்ல முடியுமா? தெரியவில்லை.

அவருக்கு மிகவும் விருப்பமான பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது.

'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.'

எப்படி?

அந்தப் பாடலிலேயே சில குறிப்புகள் இருந்தன. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் தெய்வம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு எவராலாவது வாழ முடியுமா?

அன்று மாலை ஒரு ஆன்மீகச் சொற்பொழிவுக்குச் சென்றார் குணசீலன். சொற்பொழிவாற்றிய அறிஞர் சொன்ன ஒரு விஷயம் குணசீலனின் சிந்தனையைத் தூண்டியது. "விண்ணுலகம் சென்றால் அங்கே அமிர்தம் குடிக்கலாம். அமிர்தம் என்பது என்ன? அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு பானம். இந்த மண்ணுலகத்திலேயே நமக்கு அமிர்தம் கிடைத்தால் இங்கேயே நாம் தேவ வாழ்க்கை வாழலாமே! மரணத்துக்குப் பின் கிடைக்கப் போகும் அமர வாழ்க்கையை எதிர்பார்த்து இருக்க வேண்டாமே! சரி. அந்த அமிர்தம் எங்கே கிடைக்கும்? குளிர்பானங்கள் விற்கும் கடைகளிலோ, மதுபானம் விற்கும் இடங்களிலோ கிடைக்குமா? கிடைக்காது. வாழ்க்கையை ஒரு இனிமையான அனுபவமாகக் கருதி, வாழ்க்கை தரும் சவால்களை எதிர்கொண்டு தன்னால் இயன்ற வரை வாழ்ந்து மற்றவர்களுக்கும் உதவியாக இருப்பவன் குடிக்கும் தண்ணீர் கூட அமிர்தம்தான். அத்தகைய மனிதர்கள்தான் தேவர்கள் அல்லது அமரர்கள்."

இந்தப் பேச்சு குணசீலனின் சிந்தனையைக் கிளறியது.

சொற்பொழிவாற்றிய பெரியவர் அவர் சொன்னது போன்ற தேவ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பாரா? தெரியவில்லை. ஆனால் அவர் மனைவியை அவர் ஒதுக்கி வைத்திருப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மையாக இருந்தால் அவர் வாழும் வாழ்க்கையை தெய்வீகமான வாழ்க்கை என்று சொல்ல முடியுமா? தனது ஆன்மீகப் பணிக்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக அப்படிச் செய்ததாக அவர் காரணம் சொல்லலாம், ஆனாலும் அது ஒரு களங்கம்தானே?

இதைப் பற்றி யாரிடமாவது பேச வேண்டும் என்று அவருக்குத்தோன்றியது.

தன் நண்பர் பூபதியின் வீட்டிற்குச் சென்றார் குணசீலன். பூபதி ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர். அதனால் அவரிடம் அந்த ஆன்மீகச் சொற்பொழிவைப் பற்றிப் பேசி விட்டு மண்ணுலகிலேயே தேவ வாழ்க்கை வாழ்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற தன் ஐயத்தையும் வெளிப்படுத்தினார்.

பூபதிக்கும் இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை. குணசீலன் தன் கேள்விக்கு விடை கிடைக்காத நிலையில்,யோசனையுடன் விடை பெற்றார்.

குணசீலன் சென்றதும், பூபதியிடம் அவர் மனைவி கேட்டாள். "என்ன உங்க நண்பர் இந்த மாதிரி சந்தேகம் எல்லாம் கேட்கறாரு? சந்நியாசி ஆயிடுவார் போல இருக்கே!"

"அப்படி இல்லை. சிறப்பான இல்லற வாழ்க்கை நடத்தறதனாலதான் அவருக்கு இப்படிப்பட்ட சிந்தனையே வந்திருக்கு" என்றார் பூபதி.

"எப்படிச் சொல்றீங்க?"

"இப்ப நான் என்னோட கம்பெனியிலே மானேஜரா இருக்கேன். அதனால இதற்கு அடுத்தபடியான ஜெனரல் மானேஜர் பதவிக்கு உயர முடியுமான்னு யோசிக்கிறேன். நான் ஒரு கிளர்க்கா இருந்தா இப்படிப்பட்ட சிந்தனை எனக்கு வருமா? மனுஷ  வாழ்க்கையைச் சிறப்பா வாழறதாலதான் தேவ வாழ்க்கையைப் பற்றி அவரால யோசிக்க முடியுது!"

"அவர் நல்ல மனுஷர்னு தெரியும். ஆனா இல்லற வாழ்க்கையைச் சிறப்பா வாழறாருன்னு எப்படிச் சொல்றீங்க?"

"அரசாங்க வேலையில இருந்தாலும் நேர்மையா இருக்கறதினால மத்த சிலர் மாதிரி அவரால ரொம்ப வசதியான வாழ்க்கை வாழ முடியல. இதனால அவர் மனைவிக்கு அவர் மேல கோபம். தன்னோட கோபத்தை அவங்க தினசரி வாழ்க்கையில பல விதத்திலும் வெளிப்படுத்தறாங்க. ஆனா குணசீலன் அதைப்பத்திக் கொஞ்சம் கூடக் கவலைப்படாம, தன் மனைவிக்கும் மகனுக்கும் தான் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாச் செஞ்சுக்கிட்டிருக்காரு. அதோட இல்லாம மத்தவங்களுக்குத் தன்னால முடிஞ்ச உதவிகளையும் செஞ்சுக்கிட்டிருக்காரு. அவர் மனைவியோட சொந்தக்காரங்க பலருக்கே அவரு நிறைய உதவி செஞ்சிருக்காரு. அது அவர் மனைவிக்கும் தெரியும். ஆனாலும்  அவங்க தன் மனசை மாத்திக்கல! மத்தவங்க மாதிரி தன்னால வசதியா, ஆடம்பரமா வாழ முடியலியேங்கற கோபம் அவங்களுக்கு நிறைய இருக்கு. ஆனா குணசீலன் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாம, மனுஷனா இருந்துக்கிட்டே தேவ வாழ்க்கை வாழ முடியுமான்னு சிந்திச்சுக்கிட்டிருக்காருன்னா எப்படிப்பட்ட மனசு அவரோடதுன்னு பாரு!"

அவர் மனைவி மௌனமாக இருந்தாள்.

"அவர் கேட்ட கேள்விக்கு பதில் ரொம்ப சுலபம். மனுஷனா இருந்துக்கிட்டே தெய்வ வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்கிறது அவரேதான்! ஆனா நான் இதைச் சொன்னா அவரு ஒத்துக்க மாட்டாரு. அதனாலதான் நான் இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாதுன்னு சொன்னேன்!" என்றார் பூபதி.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்.

பொருள்:
இந்த உலகத்தில் வாழும் (இல்)வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன் வானில் இருக்கும் தெய்வத்துக்குச் சமமாகக் கருதப்படுவான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

















Saturday, January 16, 2016

49. வெள்ளி விழாவில் வெளிப்பட்ட உணர்வுகள்

"இருபத்தைந்தாவது திருமண விழாவைக் கொண்டாடணுமா என்ன?" என்றான் மாதவன்.

"நான் கொண்டாடச் சொல்லலே! உங்க பொண்ணுதான் சொல்றா!" என்றாள் ரமா.

மாதவனுக்குப் பொதுவாக இது போன்ற கொண்டாட்டங்கள் பிடிப்பதில்லை. மகள் சுகன்யாவின் விருப்பத்துக்காக ஒப்புக் கொண்டான்.

நெருங்கிய உறவினர்களை மட்டும் கூப்பிட்டு ஒரு ஓட்டலில் கொண்டாடினார்கள்.

வந்த உறவினர்கள் பரிசுகள் கொடுத்து வாழ்த்தினார்கள். சிலர் வாழ்த்திப் பேசினார்கள். பிறகு மாதவனையும், ரமாவையும் பேசச் சொன்னார்கள்.

"என்னுடைய கல்யாணம் என் அப்பா அம்மா பார்த்துச் செய்து வைத்தது. என்னைப் பொறுத்தவரை ரமா எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். என்னைப் பத்தி அவள் என்ன  நினைக்கிறாளோ தெரியாது! எனக்கு அவ்வளவா வசதி கிடையாது. ரமாவுக்குப் புடவை, நகைன்னு நான் அதிகமா வாங்கிக் கொடுத்ததில்லை. அவளும் கேட்டதில்லை. எங்களால முடிஞ்ச அளவுக்கு சுகன்யாவை வளர்த்திருக்கோம். அவ நல்லா படிச்சு ஒரு வேலையையும் தேடிக்கிட்டா. இது எனக்குத் திருப்தியா இருக்கு. இருபத்தைந்து வருஷத் திருமண வாழ்க்கை ஒரு சாதனையாங்கறது எனக்குத் தெரியாது. ஆனா நீங்க எல்லாரும் வந்து எங்களை வாழ்த்தியது ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று மாதவன் சுருக்கமாகப் பேசி பலத்த கைதட்டல் பெற்றான்.

பேச மறுத்த ரமாவை வற்புறுத்திப் பேச வைத்தார்கள். அவள் தயக்கத்துடன் பேசினாள். "என்னை அவர் தனக்கு கிடைச்ச அதிர்ஷ்டம்னு சொன்னதும் என் கண்ணில தண்ணி வந்துடுச்சு. எங்களுக்குள்ள அப்பப்ப சண்டை வரும். ஒரு வேளை  அவருக்கு என்னைப் பிடிக்கலையோ, வேண்டா வெறுப்பாத்தான் குடித்தனம் நடத்தறாரோன்னு நான் சில சமயம் நினைச்சிருக்கேன். நான்தான் அவரைச் சரியாப்  புரிஞ்சுக்கலையோன்னு இப்ப நினைக்கிறேன். ஆனா அவர் எப்பவுமே என்கிட்டே கோபமா இருந்தது கிடையாது. சண்டை போட்டா கூட கொஞ்ச  நேரம் கழிச்சு இன்னைக்கு என்ன சமையல்னு கேட்டுக்கிட்டே சமையல்கட்டுக்கு வந்துடுவார்."

பிறகு சுகன்யா பேசினாள். "எங்க அம்மா அப்பா சண்டை போட்டுக்கிட்டது என்னைப் பத்தித்தான். ஆரம்பத்தில நான் சரியாப் படிக்கலை. அதனால என்னை டியூஷனுக்கு அனுப்பணும்னு அம்மா சொல்லுவாங்க. 'டியூஷன் எதுக்கு? நீதான் படிச்சிருக்கியே! நீயே சொல்லிக் கொடுக்கலாமே' ன்னு அப்பா சொல்லுவாரு. 'நீங்களும்தான் படிச்சிருக்கீங்க. நீங்க சொல்லித் தரலாமே'ன்னு அம்மா சொல்லுவாங்க. 'எனக்கு சொல்லித் தரத் தெரியாது'ம்பாரு அப்பா. 'அது மாதிரிதான் எனக்கும். அதனாலதான் டியூஷனுக்கு அனுப்பச் சொல்றேன்'ன்னு அம்மா சொல்லுவாங்க. இது மாதிரி பல சமயங்களில என்னாலதான் அவங்களுக்குள்ள சண்டை வரும். கொஞ்சம் பெரிய கிளாசுக்கு வந்ததும் நல்லாப் படிக்கறது ரொம்ப முக்கியம்னு தெரிஞ்சுக்கிட்டு நானே கஷ்டப்பட்டுப் படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்பறமும் என்னை எந்த கோர்ஸில சேக்கலாம்னு சண்டை போட்டுப்பாங்க. ஆனா நான் எனக்கு இஷ்டப்பட்ட கோர்ஸிலதான் சேர்ந்தேன். இப்ப படிப்பை முடிச்சு வேலையிலும் சேர்ந்தாச்சு. இனிமே அவங்க என்னைப் பத்தி சண்டை போட வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன்."

"ஏன் இருக்காது? உன் கல்யாண விஷயமா சண்டை போடுவோமே!" என்றாள் ரமா சிரித்தபடி.

"நீங்க ரெண்டு பேரும் எப்படிப்பட்ட மாப்பிளை பார்க்கறதுன்னு சண்டை போட்டுப்பீங்க. ஆனா உங்க பொண்ணு அவளுக்கு இஷ்டமான படிப்பில சேந்த மாதிரி அவளுக்கு ஏத்த பையனை அவளே தேர்ந்தெடுக்கப் போறா!" என்று யாரோ சொல்ல அங்கே பெரிதாக ஒரு சிரிப்பலை  எழுந்தது.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 49
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

பொருள்:
அறம் என்று கருதப்படுவது இல்வாழ்க்கையே ஆகும். அந்த இல்வாழ்க்கை பிறர் பழித்துப் பேச இடம் கொடுக்காமல் சிறப்பாக இருந்தால் நல்லது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Friday, January 15, 2016

48. குடியும் குடித்தனமும்

"உங்களுக்குக் குடிப்பழக்கம் இருக்குன்னு கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லலையே!" என்றாள் ரம்யா.

"அப்படியா? அப்படின்னா இந்தப் பழக்கம் எனக்கு நம்ம கல்யாணத்துக்கு மறுநாளிலேருந்துதான் ஆரம்பிச்சதுன்னு வச்சுக்கோ!" என்றான் நடராஜ்.

இவனிடம் பேசுவதில் பயன் இருக்காது என்று ரம்யா புரிந்து கொண்டாள். மௌனமாக அவன் குடிப் பழக்கத்தைச் சகித்துக் கொண்டாள். வாழ்க்கை நரகமாகியது. சிறிது காலத்துக்குப் பிறகு இந்த வாழ்க்கையைத் தன்னால் சகித்துக்கொள்ள முடியாது என்று தோன்றியதும் விவாகரத்துக்காக ஒரு பெண் வக்கீலை அணுகினாள்.

வக்கீல் வீட்டுக்கு இரண்டு மூன்று வரை போய் வந்தபோது ஒருமுறை வக்கீல் நளினியின் கணவன் விசுவைச் சந்தித்தாள். விசுவிடம் பேசிக் கொண்டிருந்ததில் நடராஜ் விசுவின் பள்ளி நண்பன் என்றும் ஆனால் பள்ளிப் படிப்பு முடிந்ததும் இருவருக்கும் தொடர்பு விட்டுப் போய் விட்டது என்றும் தெரிந்தது.

தற்செயலாக நடராஜைச் சந்திப்பது போல் விசு அவனைச் சந்தித்தான். பிறகு இரண்டு குடும்பங்களும் சந்தித்துக் கொண்டன. ரம்யாவை முன்பே தெரிந்தது போல் விசுவோ நளினியோ காட்டிக் கொள்ளவில்லை.

பின்பு ஒரு முறை ரம்யா நளினியைத் தனியாகச் சந்தித்தபோது விவாகரத்துக்கு அவசரப்பட வேண்டாம் என்று யோசனை சொன்னாள் நளினி.

இரு குடும்பங்களும் அடிக்கடி சந்தித்துக் கொண்டன. விசு தங்கள் இள வயது நட்பைப் புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டியவனாக நடராஜுடன் அதிக நேரம் செலவழித்தான். நளினியின் ஆலோசனைப்படி ரம்யா நடராஜிடம் அவன் குடிப்பதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தாள்.

ஏழெட்டு மாதங்களில் நடராஜிடம் நிறைய மாறுதல்கள் தெரிந்தன. அவன் குடிப்பழக்கம் வெகுவாகக் குறைந்திருந்தது. குடியை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் தோன்றி இருந்தது. முன்பு போல் இல்லாமல் ரம்யாவிடம் அன்பாகவும், கனிவாகவும் பேச ஆரம்பித்தான். தன் நண்பன் விசுவின் குணத்தைப் பற்றியும் அவன் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் உயர்வாகப் பேசினான்.

ரம்யாவுக்குத் தன் விவாகரத்து எண்ணத்தைக் கை விட வேண்டி இருக்கும் என்று தோன்றியது.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 
நோற்பாரின் நோன்மை உடைத்து.

பொருள்:
மற்றவர்களை அறவழியில் நடக்க வைத்துத் தானும் அறவழியில் நடப்பவரின் இல்வாழ்க்கை தவம் செய்பவர்களின் வாழ்க்கை முறையை விட மேன்மை உடையதாகும்.

இந்தக்கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















Wednesday, January 13, 2016

47. மணியின் மனக்குழப்பம்

பாலுவும் மணியும் பள்ளி நாட்களிலிருந்தே மற்ற சிறுவர்களிடமிருந்து மாறுபட்டிருந்தனர். ஒழுக்கம், அடக்கம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் மரியாதை, படிப்பில் நாட்டம் என்ற சிறப்பு இயல்புகளால் அவர்கள் இருவரும் மற்ற மாணவர்களால் கிட்டத்தட்ட ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்.

இருவரும் வேறு கல்லூரிகளில் படித்து வெவ்வேறு வேலைகளுக்குப் போனாலும் அவர்கள் நட்பு தொடர்ந்தது. இருவரையும் இணைத்தது ஆன்மீகச் சிந்தனை.

பாலுவுக்குத் திருமணம் நிச்சயம் ஆனது. தாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆன்மீகத் தேடலிலேயே வாழ்க்கையைக் கழித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த மணிக்கு பாலுவின் திருமணம் ஒரு அதிர்ச்சிதான்.

ஆயினும்  மணி பாலுவிடம் இது பற்றிப் பேசவில்லை. பாலுவின் மனைவி எப்படி இருப்பாளோ, பாலு தன்னிடம் நட்பு வைத்திருப்பதை விரும்புவாளோ என்ற கவலைகள் மணியிடம் இருந்தன.

ஆனால் பாலுவின் மனைவி மல்லிகாவைப் பார்த்ததும் அவனது ஐயங்கள் மறைந்து விட்டன.

"உங்க நண்பர் உங்களைப் பத்திச் சொல்லி இருக்காரு. நீங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னால எப்படி இருந்தீங்களோ அப்படியே  இருங்க. உங்க நட்புக்கு என்னால எந்தப் பிரச்னையும் வராது" என்று முதல் சந்திப்பிலேயே அவனிடம் சொன்னாள்.

ஆயினும் திருமணத்துக்குப் பிறகு பாலுவிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டன. எப்போதும் குடும்பம், மனைவி என்றே பேசிக் கொண்டிருந்தான். மணியோடு செலவிட்ட நேரம் மிகவும் குறைந்து விட்டது. மணி எங்காவது அழைத்தால் கூட வருவதில்லை. பல சமயங்களில் மல்லிகாவே அவனைப் போகச் சொல்லி அனுப்பினாள். இந்த மாற்றங்களைப் பற்றி பாலுவிடம் மணியால் கேட்க முடியவில்லை.

நாளடைவில் மணி தானாகவே பாலுவை அழைப்பதைக் குறைத்துக் கொண்டான். கோவில்கள், ஆன்மீக நிகழ்ச்சிகள் என்று அடிக்கடி வெளியூர் செல்ல ஆரம்பித்தான். ஆயினும் மனதுக்குள் எதையோ இழந்து விட்டது போல் தோன்றிக்கொண்டே இருந்தது.

தன் மனதில் ஓடும் எண்ணங்களை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள  வேண்டும் என்று தோன்றியது. அப்போது  அவன் மாமா ரகுபதியின் நினைவு வந்தது. ஒரு விதத்தில் ரகுபதிதான் மணிக்கு வழிகாட்டி. திருமணம் செய்து கொள்ளாமல் கோவில், ஆன்மிகச் சொற்பொழிவுகள், திருத்தல யாத்திரை என்று வாழ்க்கையைக் கழித்து வந்தவர் அவர். ஐம்பது வயதை நெருங்கிய நிலையில் இருந்தார்.

அரசு அலுவலகத்தில் பணி புரிந்து வந்த அவர் தனது விடுமுறை நாட்களையும் வருமானத்தையும் ஆன்மீகத்துக்காகவே செலவழித்துக் கொண்டிருந்தார். அவருக்கு பாலுவையும் தெரியும். அதனால் அவரிடம் தன் மனதில் உள்ள எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்து ஒரு விடுமுறை நாளன்று அவர் வீட்டுக்குப் போனான்.

அவரை ஒரு நண்பராக நினைத்துத் தன் எண்ணங்களை அவரிடம் கொட்டினான்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு விட்டு, "பாலு என்ன செய்யணும்னு நீ எதிர்பாக்கறே?" என்றார் ரகுபதி.

"தெரியல. ஆனா அவனை இழந்துட்ட மாதிரி இருக்கு."

"பாலு இப்ப கோவிலுக்கெல்லாம் வரதில்லையா?"

"என்னோட வரதில்லை. அவன் மனைவியோட போவான்."

"அப்படித்தானே அவனால செய்ய முடியும்? மனைவயை வீட்டில விட்டுட்டு உன்னோட சுத்தணும்னு எப்படி எதிர்பார்க்க முடியும்?"

"நான் அப்படிச் சொல்லலே!"

"எனக்குப் புரியுது. உனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலே. எதையோ இழந்துட்ட மாதிரி இருக்கு."

"ஆமாம்."

"நீ பாலுவை இழந்துட்டது ஓரளவுக்கு உண்மைதான். அந்த இழப்பை மறக்கறதுக்கு உனக்கு ஒரு வழி இருக்கு."

"என்ன அது?"

"நீயும் கல்யாணம் பண்ணிக்க!"

"இல்லை. நான் கல்யாணமே பண்ணிக்காம கடவுள் பக்தி, சமூக சேவை இதிலெல்லாம் ஈடுபடலாம்னு பாக்கறேன்!"

"அப்படியே செய்யி. ஏன் பாலு உன்னோட அதிகம் வரதில்லேன்னு கவலைப்படற?"

"இல்லை. பாலுவும் என்னை மாதிரியே கல்யாணம் பண்ணிக்காம இருப்பான்னு எதிர்பாத்தேன்."

"நீ சொல்றதிலேருந்து உனக்கு ஒரு துணை தேவைப்படுதுன்னு தெரியுது. இத்தனை நாளா பாலு உனக்குத் துணையா இருந்தான். இனிமே ஒரு பொண்ணைத்  துணையா வச்சுக்க வேண்டியதுதான்!"

"இல்லை."

"நீ என்ன சொல்ல வரேன்னு எனக்குப் புரியுது. சின்ன வயசில பல பேருக்கு இது மாதிரி எண்ணங்கள்ளாம் வரும். 'நாம கல்யாணமே பண்ணிக்காம நம்மளைப் பெத்தவங்களையும், கூடப் பிறந்தவங்களையும் காப்பாத்தணும், கல்யாணமே பண்ணிக்காம சமூக சேவை செய்யணும், கல்யாணமே பண்ணிக்காம பக்தி நெறியில ஈடுபடணும், கல்யாணமே பண்ணிக்காம அரசியல்ல சேந்து இந்த நாட்டைத் திருத்தணும், கல்யாணமே பண்ணிக்காம உல்லாசமா வாழணும்' இது மாதிரியெல்லாம்.

"இந்த எல்லா எண்ணங்களுக்கும் பொதுவான ஒரு விஷயம் கல்யாணம் பண்ணிக்காம இருக்கணும்கறதுதான். கல்யாணம் பண்ணிக்கிட்டா பல பொறுப்புகள் வந்துடும். அதோட மனைவியோட விருப்பத்தையும் அனுசரிச்சு நடக்கணும். இதனால நம்ம லட்சிய வாழ்க்கையை வாழ முடியாது என்கிற சிந்தனை சரியானதுதான்.

"ஆனா நடைமுறையில, ஒரு துணை இல்லாம தனியா இருக்கறது எல்லாராலும் முடியாது. கல்யாணம் பண்ணிக்கிட்டே ஓரளவுக்கு நம்ம லட்சியங்களைப் பின்பற்றுவதுதான் பிராக்டிகலா இருக்கும். கல்யாணம் பண்ணிக்காம நூறு சதவீதம் லட்சியவாதியா இருக்கறதை விடக் கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்து சதவீதம் லட்சியவாதியா இருக்கறதுதான் சிறப்பு. அதில கிடைக்கிற மன நிறைவும் சந்தோஷமும் தனியா வாழறதில கிடைக்காது.

"மனசில ஒரு வெறுமையோட இருந்துக்கிட்டு ஆன்மீகத்திலேயோ சமூக சேவையிலோ ஈடுபடறதில ஒரு பயனும் இல்லை. பிரம்மச்சரியம், சன்யாசம் இதெல்லாம் தப்புன்னு நான் சொல்லலே. இதெல்லாம் ஒரு சில பேருக்குத்தான் ஒத்து வரும்."

"உங்களை மாதிரி ஒரு சில பேரா?"

"இல்லேப்பா. நானும் ஒரு வெறுமையை உணர்ந்துக்கிட்டுத்தான் இருக்கேன். இத்தனை நாளா மனசுக்குள்ளேயே புழுங்கிக்கிட்டு இயந்திரம் மாதிரி இருந்துக்கிட்டிருந்தேன். இப்பதான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்."

"என்ன முடிவு?"

"என் ஆஃபீசில கணவனை இழந்த ஒரு பொண்ணு வேலை செய்யறாங்க. நானும் அவங்களும் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கோம். அடுத்த மாசம் எளிமையா எங்க கல்யாணம் நடக்கும். உன்னை நிச்சயமாக் கூப்பிடுவேன்."

மணி சற்று நேரம் மௌனமாக  இருந்தான்.

"உன்னோட எண்ணங்களைப் புரிஞ்சுக்கிட்டு ஒத்து வாழக்கூடிய ஒரு பொண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்க. ஏன், உன்னைப்பத்தி நல்லாத் தெரிஞ்ச பாலுவோட மனிவியே உனக்கு ஏத்த ஒரு பொண்ணாப் பாத்துக் கொடுப்பா. யோசனை செஞ்சு பாரு."

மணி யோசிக்க ஆரம்பித்தான்.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை.

பொருள்:
இல்லறத்துக்கு உரிய இயல்போடு இல்லற வாழ்க்கை வாழ்பவன், (துறவறம் போன்ற) பிற வழிகளைக் கடைப்பிடித்து இறைவனை அடைய முயற்சி செய்பவர்களை விட உயர்ந்தவன். (வாழ்க்கையில் கடைப்பிடிக்கக் கூடிய எல்லா வழிகளிலும் தலை சிறந்தது இல்லறமே)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















Tuesday, January 12, 2016

46. தொலைபேசிச் செய்தி

அதிகாலையில் அழைப்பு மணி கேட்டபோது பால் போடும் பெண்ணாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கதவைத் திறந்தாள் உமா. வாசலில் கிரிஜாவைப் பார்த்ததும் வியப்பு ஏற்பட்டது. கிரிஜாவிடம் தெரிந்த படபடப்பைக் கவனித்து அவளை உள்ளே அழைத்து வந்தாள்.

"உன் வீட்டுக்காரரை எழுப்ப முடியுமா? அவசரம்!" என்றாள் கிரிஜா உள்ளே வரும்போதே. அவள் குரல் உடைந்து போயிருந்தது. ஏதாவது கேட்டால் அழுது விடுவாள் போல இருந்தது, அதனால்  அவளை உட்கார வைத்து விட்டு சேகரை அழைத்து வந்தாள் உமா.

சேகரைப் பார்த்ததுமே "என்னைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டார் சார் உங்க நண்பர்!" என்று சொல்லி விட்டுப் பெரிதாக அழத் தொடங்கினாள் கிரிஜா.

அவள் கணவன் ராஜு இரவில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டான் என்பதை அழுகைக்கிடையே சொல்லி முடித்தாள் கிரிஜா.

"கவலைப்படாதீங்க. ராஜு உங்களை விட்டுட்டுப் போயிட மாட்டான்..." என்று சேகர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கிரிஜா ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினாள்.

தனக்கு இல்லறத்தில் பற்று இல்லாததால் வேறு ஊருக்குப் போய்த் துறவறம் மேற்கொள்ளப் போவதாகக் கடிதம் எழுதி வைத்து விட்டுப் போயிருந்தான் ராஜு.

சேகருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கிரிஜாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பள்ளியில் படிக்கும் தன் பெண்ணையும், பையனையும் எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்று நினைத்து நடுங்கினாள்.

ஒரு வாரம் கழிந்ததும், தன் உறவினர்களிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காது என்பதை கிரிஜா புரிந்து கொண்டாள். சேகரும், உமாவும் அவளுக்கு உறுதுணையாகத்தான் இருந்தார்கள். ஆனால் அவர்களால் எவ்வளவுதான் உதவ முடியும்? 

கிரிஜாவுக்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று பார்ப்பதாக சேகர் சொல்லி இருந்தான். ஆனால் அவனுக்குத் தெரிந்த ஒரு சில இடங்களிலிருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை.

யாரோ ஒருவர் இன்ஷ்யூரன்ஸ் ஏஜன்ட்டாகத் தொழில் புரியலாம் என்று யோசனை சொல்ல, கிரிஜா அவர் குறிப்பிட்ட இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் ஏஜண்ட்டாகச் சேர்ந்தாள். அதற்கு முன் அப்படி ஒரு நிறுவனம் இருப்பது கூட அவளுக்குத் தெரியாது.

ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களைப் பிடிப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. வெட்கத்தை விட்டுத் தன் எல்லா உறவினர்களிடமும் போய்த் தனக்கு உதவி செய்வதற்காகவாவது ஏதாவது பாலிசி எடுத்துக்கொள்ளும்படி கெஞ்சினாள். பெரும்பாலோர் முடியாது என்று சொல்லி விட்டார்கள் - சிலர் வருத்தத்துடனும், சிலர் பணிவுடனும், சிலர் நிர்தாட்சண்யமாகவும். 

ஆயினும், அவள் மீது  இரக்கப்பட்டோ, அவளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனோ அல்லது வேண்டா வெறுப்பாகவோ சிலர் எடுத்துக்கொண்ட பாலிசிகள் அவளது சுய தொழிலுக்கு ஒரு நல்ல துவக்கமாக அமைந்தன.

உறவினர்கள், நண்பர்கள் வட்டம் முடிந்ததும், அறிமுகம் இல்லாதவர்களை அணுகினால் என்ன என்று கிரிஜாவுக்குத் தோன்றியது. தெரிந்தவர்களிடம் போய்ப் பிச்சை கேட்பது போல் கேட்பதை விடத் தெரியாதவர்களிடம் போய் ஒரு  விற்பனையாளராகப் பேசுவது எளிதாக இருக்கும் என்று தோன்றியது.

அலுவலகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பூங்காக்கள், கோவில்கள்  என்று தினமும் சில இடங்களுக்குச் சென்றாள். ஆரம்பத்தில் அவளுக்கு ஏமாற்றமே கிடைத்தாலும், சில நாட்கள் கழித்து சிலர் பாலிசி எடுத்துக் கொள்ளத் தொடங்கினர்.

சில மாதங்கள் கழித்து அவளுக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது. அவளிடம் பாலிசி எடுத்துக்கொண்ட நபர்கள் சொல்லி, அவர்களின்  நண்பர்கள், உறவினர்கள் என்று சிலர் தாங்களாகவே இவளை அணுகினர்.

அவளது கடின உழைப்பும், விடாமுயற்சியும், வாடிக்கையாளர்களிடம் அவள் ஏற்படுத்திக் கொண்ட நல்லெண்ணமும்  சேர்ந்து அவளுக்குப் புதிய வாடிக்கையாளர்களும், பழைய வாடிக்கையாளர்களிடம் புதிய பாலிசிகளும் கிடைக்க வழி வகுத்தன. இரண்டு வருட முடிவில் அவளுக்குக் கணிசமான வருமானம் வரத் தொடங்கியது.

சேகர்-உமா குடும்பத்துடனான அவளது நட்பு தொடர்ந்தது. தன் பொருளாதார நிலை உயர்ந்த பிறகும் அவர்களைக் கலந்தாலோசிக்காமல் கிரிஜா எதையும் செய்வதில்லை. சேகர்-உமாவின் பையனும் பெண்ணும் படித்த அதே பள்ளியில்தான் தன் குழந்தைகளையும் படிக்க வைத்தாள்.

சேகர் குடும்பத்தை விடப் பொருளாதார நிலையில் உயர்ந்த பிறகும், கிரிஜா அவர்கள் குடும்பத்துக்குக் கடமைப்பட்டவள் போலவே நடந்து கொண்டாள். அவர்கள் சுயகௌரவம் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்குச் சிறிய உதவிகளை அவ்வப்போது செய்து வந்தாள்.

ராஜு கிரிஜாவை விட்டுப் போய் சுமார் ஐந்து வருடங்கள் ஆகி விட்டன. சேகர் ஒரு நாள் பரபரப்பாக கிரிஜாவைத் தேடி வந்தான். "கிரிஜா, ராஜுவைப் பார்த்தேன்" என்றான்.

"அப்படியா?" என்றாள் கிரிஜா ஆர்வம் இல்லாமல்.

"ஆஃபீஸ் விஷயமா விஜயவாடாவுக்குப் போனபோது அவனைப் பாத்தேன். லெட்டர்ல எழுதிட்டுப் போன மாதிரி அவன் சன்யாசியாகத்தான் இருக்கான். சாரி. இனிமே இருக்கார்னுதான் சொல்லணும். ஏன்னா இப்ப அவர் ஒரு மடத்துக்குத் தலைவரா இருக்கார். அவரைச் சுத்திப் பல சிஷ்யங்க, இன்னும் பல மனுஷங்க!"

"ம்ம்..."

"தற்செயலா ஒரு போஸ்டர்ல அவரோட ஃபோட்டோவைப் பாத்தேன். என்னதான் தாடி மீசையெல்லாம் இருந்தாலும் அவரோட மூஞ்சி எனக்கு அடையாளம்  தெரிஞ்சது. மடத்துல ஏதோ ஒரு மீட்டிங். அதுக்குத்தான் போஸ்டர் போட்டிருந்தாங்க. மீட்டிங்குக்குப் போனேன். நல்லாவே பேசினார். நம்ம ராஜுவுக்கு இவ்வளவு ஆன்மீக ஞானம் எப்படி வந்ததுன்னு எனக்கு ஆச்சரியமா இருந்தது.

"மீட்டிங் முடிஞ்சதும் அவரைப் பாத்துப் பேசினேன். எங்கிட்ட பழைய  மாதிரிதான் பேசினார். எனக்குத்தான் அவரை 'வா போ'ன்னு பேசறது சங்கடமா இருந்தது. நல்லவேளையா கூட யாரும் இல்லை. மத்தவங்களை வெளியில போகச் சொல்லிட்டுத்தான் எங்கிட்ட பேசினார். உங்களைப் பத்தியெல்லாம் விசாரிச்சார்."

"விசாரிக்காம இருப்பாரா என்ன?"

"சொன்னேன். உங்களோட முன்னேற்றத்தைப் பத்திக் கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். தன்னோட பிரார்த்தனை வீண் போகலேன்னு  சந்தோஷப்பட்டார்."

"அப்புறம்?"

"அடுத்த மாசம் நம் ஊருக்கு வராராம். நீங்களும் குழந்தைகளும் அவரை அவர் தங்கப் போற மடத்தில சந்திச்சு ஆசீர்வாதம் வாங்கிக்கலாம்னு சொல்லச் சொன்னார்."

"எவ்வளவு பெரிய மனசு அவருக்கு! ஆமாம். உங்க கிட்ட அவரோட ஃபோன் நம்பர் இருக்கா?'

"இருக்கு. பேசறீங்களா?"

"நான் பேசப் போறதில்லை. நீங்க பேசணும், எனக்காக."

"என்ன பேசணும்? சொல்லுங்க."

"நீங்களும் அவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பொருளாதார நிலை, குடும்பச்  சூழ்நிலை உள்ளவங்க. நீங்க உங்க மனைவி குழந்தைகளோட அழகா இல்லறம் நடத்திக்கிட்டிருக்கீங்க. அவர் என்னை விட்டுப் போனதும் நானும் ஒரு மாதிரி சமாளிச்சு கணவர் இல்லாமலேயே இல்லறம் நடத்திக்கிட்டிருக்கேன். நீங்க உங்க குடும்பத்தோடயும், நான் என் குடும்பத்தோடயும் சந்தோஷமா இருக்கோம். துறவறத்தைத் தேடிப் போன உங்க நண்பரும் நம்மளை மாதிரி சந்தோஷமா இருக்காரான்னு முதல்லே கேளுங்க."

"கிரிஜா! அவசரப்படாதீங்க!"

"நீங்க இப்பவே அவருக்கு ஃபோன் பண்ணி இதைக் கேளுங்க. நான் கேக்கச் சொல்றேன்னு சொல்லிக் கேளுங்க."

"நீங்க பக்கத்தில இருக்கீங்கன்னு அவர்கிட்ட சொல்லலாம் இல்லே?"

"அதை அவரே தெரிஞ்சுப்பாரு."

"எப்படி? ஃபோனை நீங்க வாங்கிப் பேசப் போறீங்களா?"

"நீங்க பேசும்போது உங்களுக்கே தெரியும்!"

சேகர் ராஜுவுக்கு ஃபோன் செய்து தயக்கத்துடன் கிரிஜா கேட்கச் சொன்னதை அப்படியே கேட்டான்.

சேகர் பேசி முடித்ததும், மறுமுனையிலிருந்து பதில் வருவதற்கு முன்பே, கிரிஜா சற்றே உரத்த குரலில் பேசினாள்.

"சேகர் சார்! கொஞ்சம் இருங்க. இந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டியதில்லை. அவரோட மனச்சாட்சியைத் தட்டி எழுப்பத்தான் இந்தக் கேள்வி. எங்களை ஆதரிக்க வேண்டிய சமயத்தில அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டு இப்ப எங்களை வந்து ஆசீர்வாதம் வாங்கிக்கச் சொல்றாரு!

"நாங்க யாரும் ராஜு சுவாமிகள் கிட்ட போய் ஆசீர்வாதம் வாங்கிக்கப் போறதில்லை. அவர் விரும்பினா, சன்யாசத்தை விட்டுட்டு மறுபடி எங்களோட வந்து சேந்தா எங்களுக்கு சந்தோஷம்தான். எனக்குக் கணவரா எங்க குழந்தைகளுக்கு அப்பாவா அவரு  திரும்பக் கெடச்சா அதை விடப் பெரிய சந்தோஷம்  வேறே என்ன இருக்க முடியும்?

"பழசையெல்லாம் நான் கிளற மாட்டேன். அவர் வேலைக்குப் போனாலும் சரி, சொந்தத் தொழில் ஏதாவது செஞ்சாலும் சரி அல்லது வேலைக்குப் போகாம சும்மா இருந்தாலும் சரி. அவர் எப்படி வேணும்னா இருந்துக்கட்டும்.

"கடவுளோட அருளாலயும், உங்களை மாதிரி நல்ல நண்பர்களோட உதவியாலேயும்  நானே என் குடும்பத்துக்குத் தேவையான அளவு சம்பாதிக்கிறேன். கடைசி வரையிலேயும் எங்க எல்லாரையும் என்னால காப்பாத்த முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

"உங்க நண்பருக்கு இல்லறத்தில விருப்பம் இருந்தா அவரைத் திரும்பி வரச் சொல்லுங்க. இல்லை துறவியா இருக்கறதுதான் அவருக்கு சந்தோஷம்னா அப்படியே இருந்துட்டுப் போகட்டும். நாங்க ஆசீர்வாதம் வாங்கிக்கணும்னா அதுக்கு இந்த ஊரிலேயே நிறைய சாமியாருங்க இருக்காங்க!"

மறுமுனையிலிருந்து நீண்ட நேரத்துக்கு பதில் வரவில்லை.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் 
போஒய்ப் பெறுவ எவன்.

பொருள்:
ஒருவன் அற வழியில் இல்வாழ்க்கை நடத்தினால், (துறவறம் போன்ற)  வேறு வழியில் போய் அவன் பெறுவதற்கு என்ன இருக்கிறது?

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்












Sunday, January 10, 2016

45. நல்ல மனம் வாழ்க

"சம்பளப் பணத்தைப் பங்கீடு செய்து விட்டாயா?" என்றான் தாமோதரன்.

"ஆமாம் நீங்கள் கொண்டு வந்து கொடுத்த ஒரு லட்சம் ரூபாயில் பங்கீடு செய்தது போக 80,000 ரூபாய் மீதி இருக்கிறது. இதை எங்கே முதலீடு செய்யலாம்?" என்றாள் வாணி.

தாமோதரன் சிரித்தான், மனைவி விளையாட்டாகப் பேசுகிறாள் என்பதை உணர்ந்ததால். கல்யாணம் ஆன புதிதில் இதே கேள்வியை எகத்தாளமாகக் கேட்டு அவன் மனதைப் புண் படுத்தியவள்தான் வாணி. இன்று பத்து வருடக் குடும்ப வாழ்க்கையில் தாமோதரனையும், வாழ்க்கையின் உண்மைகளையும் புரிந்து கொண்டபின் அவள் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட்டது.

"கலாவுக்குப் பள்ளிக்கட்டணம் கட்ட வேண்டும் என்று சொன்னாயே?"

"கடைசித் தேதியை நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்."

"கவலைப்படாதே! பணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டேன்"

"நீங்கள் பணத்துக்கு ஏற்பாடு செய்திருப்பீர்கள் என்றும் எனக்குத் தெரியும். பணத்தை என்னிடம் கொடுங்கள். இன்றே பள்ளிக்குப் போய்க் கட்டி விடுகிறேன். கையில் இருந்தால் செலவாகி விடும்."

"இன்றுதான் பணம் கைக்கு வரும். என் கைக்கு வந்தவுடன் உன் கைக்கு மாற்றி விடுகிறேன். பணத்தைப் பாதுகாப்பதில் நீதான் கைகாரியாயிற்றே!"

"நேற்று முரசு தொலைக்காட்சியில் 'கை கை மலர்க்கை' என்று ஒரு பழைய பாட்டு போட்டார்கள். பாடல் முழுவதும் 'கை' 'கை' என்று வரும். அந்தப் பாட்டை எழுதியது நீங்கள்தானா?"

"ஆமாம் என்று சொல்லி விடுவேன். அப்புறம் அந்தப் பாட்டுக்கு வந்த பணத்தை என்ன செய்தீர்கள் என்று கேட்பாய்! எதற்கு வம்பு? அந்தப் பாட்டை எழுதிய பெருமை வாலிக்கே இருக்கட்டும்!"

மாலையில் தாமோதரன் அலுவலகத்திலிருந்து வந்ததுமே "பணம் கைக்கு வந்ததா?" என்று கேட்கவில்லை வாணி. அவன் சாப்பிட்டு முடிக்கும் வரையிலும் கூடக் கேட்கவில்லை.

சாப்பிட்டு முடித்ததும், அவர்கள் பெண் கலா திடீரென்று நினைவு வந்தவளாக, "அப்பா! எங்கள் பள்ளியில் உல்லாசப் பயணம் போகிறோம். ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமாம். ஆனால் போக வேண்டும் என்று கட்டாயம் இல்லை" என்றாள்.

"கட்டாயம் இல்லையாம்! நம் பொருளாதார நிலையை உணர்ந்து பேசுகிறாள் பாருங்கள் உங்கள் பெண்" என்றாள் வாணி.

"பொதுவாகக் குழந்தைகளைக் குறை சொல்லும்போதுதான் கணவனோ மனைவியோ 'உன் பிள்ளை,' 'உன் பெண்' என்று சொல்வார்கள். நீ நம் குழந்தையைப் புகழும்போதே 'உங்கள் பெண்' என்கிறாயே! உனக்குப் பெரிய மனது" என்றான் தாமோதரன்.

"நான் இப்படிச் சொல்லாவிட்டால் எனக்குப் பெரிய மனது என்று நீங்கள் ஒப்புக்கொண்டிருக்க மாட்டீர்களே!" என்றாள் வாணி. "அது இருக்கட்டும். கட்டாயம் இல்லை என்றால் கலா உல்லாசப் பயணம் போக வேண்டாம் இல்லையா?" என்றாள் தொடர்ந்து.

தாமோதரன் சற்று  நேரம் மௌனமாக இருந்து விட்டு "இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நாம் மகாபலிபுரம் போகலாம்" என்றான்.

"அய்யா ஜாலி!" என்று குதித்தாள் கலா.

"பிக்னிக்கா? புளியோதரை, தயிர்சாதம் எல்லாம் தயார் செய்து விடட்டுமா?" என்றாள் வாணி.

"எதற்கு? நாம்தான் உயர்தர ஓட்டலில் விருந்து சாப்பிடப் போகிறோமே!" என்றான் தாமோதரன்.

கலா உறங்கியதும் வாணி கேட்டாள் "என்ன, பணம் கைக்கு வந்ததா?"

"வந்தது. ஆனால் உடனே கை மாறி விட்டது."

"என் கைக்கல்லவா மாறி இருக்க வேண்டும்?"

"ஆமாம். ஆனால் உன் தங்கைக்குப் போய் விட்டது."

"என்ன சொல்கிறீர்கள்?"

"இன்று என் அலுவலகத்துக்கு  சரவணன் வந்திருந்தார்."

"யார்? சாந்தி வீட்டுக்காரரா?"

"சாட்சாத் உன் தங்கை சாந்தியின் கணவர் சரவணன்தான். பின்னே சிவபெருமானின் பிள்ளை சரவணனா என்னிடம் வந்து கடன் கேட்கப் போகிறார்?"

"கடன் கேட்டாரா?"

"அவர்கள் பையனுக்கும் பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டி இருக்கிறதே! அவனுடைய பள்ளியில் இன்றுதான் கடைசி நாளாம். கலாவுக்குப் பணம் கட்டத்தான் இன்னும் ஒரு வாரம் அவகாசம் இருக்கிறதே?"

"உடனே கடன் வாங்கிய பணத்தை நீங்கள் அவரிடம் தூக்கிக் கொடுத்து விட்டீர்களாக்கும்?"

"தூக்கிக் கொடுக்கிற அளவுக்கு அவ்வளவு ஒன்றும் கனமான தொகை இல்லையே அது!"

வாணி மௌனமாக இருந்தாள்.

"தன் கைக்கு வர வேண்டிய பணம் தங்கைக்குப் போய் விட்டதே என்று யோசிக்கிறாயா?"

"இல்லை. இதையே நீங்கள் உங்கள் தங்கைக்குக் கொடுத்திருந்தால் என்னால் இதை இவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொண்டிருக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!"

தாமோதரன் வியப்புடன் வாணியைப் பார்த்தான்.

வாணி இலேசாகச் சிரித்து விட்டு, "சரி கலாவுக்குப் பணம் கட்ட என்ன ஏற்பாடு செய்யப் போகிறீர்கள்?" என்றாள்.

"அதுதான் நீயே சொல்லி விட்டாயே! ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்!"

ஞாயிறன்று மகாபலிபுரத்தில் கலா மிகவும் உற்சாகமாக இருந்தாள். 'கண்ணனின் வெண்ணெய் உருண்டை' என்று அழைக்கப்படும் மெல்லிய அடித்தளத்தின் மீது பல நூறு ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கும் பெரிய பாறையைப் பார்த்து வியந்தாள்.

"எப்படி அப்பா! ஏதோ ஒட்ட வைத்த மாதிரி இவ்வளவு சிறிய அடித்தளத்தின் மீது எப்படி இந்த கனமான பாறை நிற்கிறது? அதிசயமாக இருக்கிறதே!" என்றாள்.

"இது என்ன அதிசயம்? ஒல்லிப் பிச்சானாக  இருக்கும் உன் அப்பா எவ்வளவு கனமான பாறையையும் தன் சுண்டு விரலில் தாங்குவார்!" என்றாள் வாணி.

"அதற்குக் காரணம் இந்த ஒல்லிப்பிச்சானை ஒரு கனமான குண்டுப் பிச்சான் தாங்கிக் கொண்டிருப்பதுதான்!" என்றான் தாமோதரன்.

"என்னையா குண்டுப்பிச்சான் என்கிறீர்கள்? அந்தப் பாறையைத் தூக்கி உங்கள் மேல் போட்டு விடுவேன்!" என்றாள் வாணி.

ஆனால் தாமோதரன் மேல் வந்து விழுந்தது அவள் வீசிய சிறு கூழாங்கல்தான்!

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

பொருள்:
இல்வாழ்க்கை அன்பு நிறைந்ததாகவும், அறத்தின் வழியில் செல்வதாகவும் இருக்குமானால், அதுதான் அதன் பண்பு. இல்வாழ்க்கையின் பயனும் அதுதான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்