About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, January 16, 2016

49. வெள்ளி விழாவில் வெளிப்பட்ட உணர்வுகள்

"இருபத்தைந்தாவது திருமண விழாவைக் கொண்டாடணுமா என்ன?" என்றான் மாதவன்.

"நான் கொண்டாடச் சொல்லலே! உங்க பொண்ணுதான் சொல்றா!" என்றாள் ரமா.

மாதவனுக்குப் பொதுவாக இது போன்ற கொண்டாட்டங்கள் பிடிப்பதில்லை. மகள் சுகன்யாவின் விருப்பத்துக்காக ஒப்புக் கொண்டான்.

நெருங்கிய உறவினர்களை மட்டும் கூப்பிட்டு ஒரு ஓட்டலில் கொண்டாடினார்கள்.

வந்த உறவினர்கள் பரிசுகள் கொடுத்து வாழ்த்தினார்கள். சிலர் வாழ்த்திப் பேசினார்கள். பிறகு மாதவனையும், ரமாவையும் பேசச் சொன்னார்கள்.

"என்னுடைய கல்யாணம் என் அப்பா அம்மா பார்த்துச் செய்து வைத்தது. என்னைப் பொறுத்தவரை ரமா எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். என்னைப் பத்தி அவள் என்ன  நினைக்கிறாளோ தெரியாது! எனக்கு அவ்வளவா வசதி கிடையாது. ரமாவுக்குப் புடவை, நகைன்னு நான் அதிகமா வாங்கிக் கொடுத்ததில்லை. அவளும் கேட்டதில்லை. எங்களால முடிஞ்ச அளவுக்கு சுகன்யாவை வளர்த்திருக்கோம். அவ நல்லா படிச்சு ஒரு வேலையையும் தேடிக்கிட்டா. இது எனக்குத் திருப்தியா இருக்கு. இருபத்தைந்து வருஷத் திருமண வாழ்க்கை ஒரு சாதனையாங்கறது எனக்குத் தெரியாது. ஆனா நீங்க எல்லாரும் வந்து எங்களை வாழ்த்தியது ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று மாதவன் சுருக்கமாகப் பேசி பலத்த கைதட்டல் பெற்றான்.

பேச மறுத்த ரமாவை வற்புறுத்திப் பேச வைத்தார்கள். அவள் தயக்கத்துடன் பேசினாள். "என்னை அவர் தனக்கு கிடைச்ச அதிர்ஷ்டம்னு சொன்னதும் என் கண்ணில தண்ணி வந்துடுச்சு. எங்களுக்குள்ள அப்பப்ப சண்டை வரும். ஒரு வேளை  அவருக்கு என்னைப் பிடிக்கலையோ, வேண்டா வெறுப்பாத்தான் குடித்தனம் நடத்தறாரோன்னு நான் சில சமயம் நினைச்சிருக்கேன். நான்தான் அவரைச் சரியாப்  புரிஞ்சுக்கலையோன்னு இப்ப நினைக்கிறேன். ஆனா அவர் எப்பவுமே என்கிட்டே கோபமா இருந்தது கிடையாது. சண்டை போட்டா கூட கொஞ்ச  நேரம் கழிச்சு இன்னைக்கு என்ன சமையல்னு கேட்டுக்கிட்டே சமையல்கட்டுக்கு வந்துடுவார்."

பிறகு சுகன்யா பேசினாள். "எங்க அம்மா அப்பா சண்டை போட்டுக்கிட்டது என்னைப் பத்தித்தான். ஆரம்பத்தில நான் சரியாப் படிக்கலை. அதனால என்னை டியூஷனுக்கு அனுப்பணும்னு அம்மா சொல்லுவாங்க. 'டியூஷன் எதுக்கு? நீதான் படிச்சிருக்கியே! நீயே சொல்லிக் கொடுக்கலாமே' ன்னு அப்பா சொல்லுவாரு. 'நீங்களும்தான் படிச்சிருக்கீங்க. நீங்க சொல்லித் தரலாமே'ன்னு அம்மா சொல்லுவாங்க. 'எனக்கு சொல்லித் தரத் தெரியாது'ம்பாரு அப்பா. 'அது மாதிரிதான் எனக்கும். அதனாலதான் டியூஷனுக்கு அனுப்பச் சொல்றேன்'ன்னு அம்மா சொல்லுவாங்க. இது மாதிரி பல சமயங்களில என்னாலதான் அவங்களுக்குள்ள சண்டை வரும். கொஞ்சம் பெரிய கிளாசுக்கு வந்ததும் நல்லாப் படிக்கறது ரொம்ப முக்கியம்னு தெரிஞ்சுக்கிட்டு நானே கஷ்டப்பட்டுப் படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்பறமும் என்னை எந்த கோர்ஸில சேக்கலாம்னு சண்டை போட்டுப்பாங்க. ஆனா நான் எனக்கு இஷ்டப்பட்ட கோர்ஸிலதான் சேர்ந்தேன். இப்ப படிப்பை முடிச்சு வேலையிலும் சேர்ந்தாச்சு. இனிமே அவங்க என்னைப் பத்தி சண்டை போட வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன்."

"ஏன் இருக்காது? உன் கல்யாண விஷயமா சண்டை போடுவோமே!" என்றாள் ரமா சிரித்தபடி.

"நீங்க ரெண்டு பேரும் எப்படிப்பட்ட மாப்பிளை பார்க்கறதுன்னு சண்டை போட்டுப்பீங்க. ஆனா உங்க பொண்ணு அவளுக்கு இஷ்டமான படிப்பில சேந்த மாதிரி அவளுக்கு ஏத்த பையனை அவளே தேர்ந்தெடுக்கப் போறா!" என்று யாரோ சொல்ல அங்கே பெரிதாக ஒரு சிரிப்பலை  எழுந்தது.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 5
இல்வாழ்க்கை
குறள் 49
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

பொருள்:
அறம் என்று கருதப்படுவது இல்வாழ்க்கையே ஆகும். அந்த இல்வாழ்க்கை பிறர் பழித்துப் பேச இடம் கொடுக்காமல் சிறப்பாக இருந்தால் நல்லது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















No comments:

Post a Comment