About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, January 19, 2016

51. துணையிருப்பாள் பார்கவி!

"என்னங்க மறக்காம டிஃபன் காரியரை எடுத்துக்கங்க" என்றாள் பார்கவி.

"உனக்கு உடம்பு சரியில்லே. நீ சமைக்க வேண்டாம். நான்  வெளியிலே சாப்பிட்டுக்கறேன்னு சொன்னேனே! எதுக்குக்  காலையிலேயே எழுந்து இதெல்லாம் செய்யறே?" என்றான் கதிரேசன்.

"ஓட்டல்ல ஏதாவது சாப்பிட்டுட்டு உங்களுக்கும் உடம்பு சரியில்லாம போகணுமா? அதோட குழந்தைகளுக்கு எப்படியும் சாப்பாடு கொடுத்து அனுப்பணுமே!"

"உண்மையான காரணம் அது இல்லை. நான் ஓட்டலில் சாப்பிட்டால் காசு செலவழிஞ்சுடுமேன்னுதானே?"

"நீங்களா ஓட்டல்ல சாப்பிடறவரு? நான் டிஃபன் கொடுத்தனுப்பாட்டா நீங்க வெறும் டீயையும் பன்னையும் சாப்பிட்டுட்டு வயித்தை நிரப்பிப்பீங்கன்னு எனக்குத் தெரியாதா?"

கண்களில் ததும்பிய கண்ணீரை மனைவி பார்த்து விடக் கூடாதே என்று கதிரேசன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அதனால் பார்கவியின் கண்களுக்குள் பொங்கி எழுந்த கண்ணீரை அவனால் பார்க்க முடியவில்லை.

ரு வருடம் முன்பு வரை கதிரேசன் ஒரு சிறிய தொழிற்சாலையை நடத்திக் கொண்டிருந்தான். தொழிற்பேட்டையில் ஒரு சிறிய ஷெட், அதில் நான்கைந்து இயந்திரங்கள், ஏழெட்டு ஊழியர்கள் என்று ஒரு சிறிய அரசாங்கத்தை நடத்தி வந்தான்.

ஒரு பெரிய தொழில் நிறுவனத்துக்கு சில உதிரி பாகங்களைச் செய்து கொடுத்து வந்தான். தொடர்ந்து ஆர்டர்கள் கிடைத்து வந்தன. ஆனால் ஒரு பில்லுக்குப் பணம் வர ஆறு மாதம் ஆகி விடும். மூன்று மாதம் கழித்துத்தான் பணம் கொடுப்போம் என்று ஆரம்பத்தில் அவர்கள் சொன்னபோது தொடர்ந்து ஆர்டர் கொடுப்பார்கள் என்பதால் அவன் அதற்கு ஒப்புக்கொண்டான்.

ஆனால் நாளடைவில் மூன்று மாதம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக நீண்டு ஆறு மாதம் ஆகி விட்டது. வங்கிக் கடன் கொஞ்சம், வேறு கடன்கள் கொஞ்சம் என்று வாங்கி, கதிரேசன் சமாளித்து வந்தான்.

பழைய பில்களுக்குப் பணம் வந்து கொண்டிருந்ததால் பணப் புழக்கம் இருந்து கொண்டே இருந்தது. வீட்டுச் செலவுக்கு தாரளமாகப் பணம் கொடுத்து வந்தான். காரும் வைத்திருந்தான். ஓரளவுக்கு வசதியான வாழ்க்கை என்றே சொல்ல வேண்டும். பார்கவி வசதியான குடும்பத்திலிருந்து வந்தவள். அதனால் அவள் வசதியாக வாழ வேண்டும் என்ற அக்கறை கதிரேசனிடம் இருந்தது.

எதிர்பாராமல் நிலைமை மாறி விட்டது. அவனுக்கு ஆர்டர் கொடுத்து வந்த பெரிய நிறுவனம் தொடர்ச்சியான பொருளாதார இழப்புகளால் திடீரென்று மூடப்பட்டது. கதிரேசனுக்கு வர வேண்டிய ஆறு மாத பில் பணம் முடங்கிப் போனது.

நிறுவனத் தலைவரை நேரே சந்தித்துக் கதிரேசன் மன்றாடியபோது, நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு விட்டதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டார். கதிரேசன் போல் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருப்பதாகவும் சொன்னார். ஊழியர்களுக்கே மூன்று மாத சம்பள பாக்கியாம்!

கடன் கொடுத்த வங்கியும், மற்றவர்களும் நெருக்கடி கொடுத்ததால் வேறு நிறுவனங்களிலிருந்து ஆர்டர் வாங்கித் தொழில் நடத்தும் முயற்சியை அவனால் மேற்கொள்ள முடியவில்லை. சொந்த வீடு, கார், மனைவியின் நகைகள் எல்லாவற்றையும் விற்றுக் கடன்களை அடைத்த பிறகு அவன் கையில் எதுவும் மிஞ்சவில்லை.

வேறு வழி இல்லாமல் ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலைக்குச் சேர்ந்தான் கதிரேசன். குழந்தைகள், உயர் கல்வி கொடுப்பதாகச் சொல்லி உயர் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்த தனியார் பள்ளியிலிருந்து கட்டணம் இல்லாத அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்கள். சிறிதாக ஒரு வாடகை வீடு, குறைந்த பட்ஜெட்டில் வாழ்க்கை என்று மிகக் குறுகிய காலத்திலேயே அவர்கள் வாழ்க்கை திசை மாறியது.

பார்கவியின் தந்தை தங்கள் வீட்டில் வந்து தங்கிக் கொள்ளும்படி அழைத்தார். வருமானத்துக்கு வழி செய்து தரவும் முன் வந்தார். கதிரேசன் பதில் சொல்லும் முன்பே பார்கவி மறுத்து விட்டாள். "ஒவ்வொருத்தர் வாழ்க்கையை அவங்களேதான் வாழ்ந்துக்கணும் அப்பா" என்று சுருக்கமாக பதில் சொல்லி அவரை அனுப்பி விட்டாள். அவர் போகும்போது அவர் மனம் புண்படக் கூடாதே என்பதற்காக "ஸ்கூல் லீவு விட்டதும் குழந்தைங்களை அனுப்பி வைக்கிறேன்" என்றாள், உறவுச் சங்கிலி அறுந்து விடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக.

அதன் பிறகு பார்கவி தன்னை அடியோடு மாற்றிக்கொண்டாள். வீட்டு வேலைக்கு ஆள், கடைக்குப் போகக் கார் என்று வாழ்ந்து வந்தவள், தன் கையையும் காலையும் அதிகம் நம்ப ஆரம்பித்தாள்.

குழந்தைகளிடம் அவள் அடிக்கடி சிக்கனத்தைப் பற்றிப் பேசியது மறைமுகமாகத் தனக்கும் ஒரு பாடமோ என்று கதிரேசன் நினைத்துக் கொள்வான். 'இவள் மட்டும் நிதி மந்திரியாக இருந்தால் பற்றாக்குறை இல்லாமல் பட்ஜெட் போட்டு நாட்டின் பொருளாதாரத்தை  முன்னேற்றி விடுவாள்' என்று கூடக் கதிரேசன் நினைத்திருக்கிறான்.

எல்லாவற்றையும் விட, வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திருமணத்துக்குப் பிறகும் வசதியாக வாழ்ந்தவளால் தன்னை எப்படி இப்படி மாற்றிக்கொள்ள முடிந்தது என்ற வியப்பு அவனை விட்டு நீங்க வில்லை.

திரேசன் வேலைக்குக் கிளம்பிய பிறகு பார்கவிக்கு வீட்டு வேலை கொஞ்சம் இருந்ததது. அதை விரைவாக முடித்து விட்டு, முகம் கழுவி, புடவை மாற்றிக்கொண்டு கைப்பையை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினாள்.

பகல் வேலைகளில் அவள் என்ன செய்கிறாள் என்பது கதிரேசனுக்குத் தெரியாது.  கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த பணத்தில் அவள் ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்திருக்கிறாள். பயிற்சி முடிந்ததும் மிகக் குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே பெண்கள் அழகுக் கலை நிலையம் ஒன்றைத் துவக்கி அதில் கிடைக்கும் வருவாயில் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்பது அவளது திட்டம்.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 51
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.


பொருள்: 
தனது குடும்பத்துக்குப் பொருத்தமான நற்பண்புகளைக் கடைப்பிடித்துத் தன் கணவனின் பொருளாதார நிலைக்கு ஏற்ப வாழ்க்கை நடத்துபவளே வாழ்க்கைத் துணை என்று கருதப்படுவாள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


No comments:

Post a Comment