About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, April 26, 2020

325. முதல் மரியாதை


மேல்வளைவு நாட்டின் மன்னன் சிங்கவர்மன் தனக்கு வயதாகி விட்டதால் தன் மூத்த மகன் சூரியவர்மனுக்கு முடிசூடத் தீர்மானித்து, அண்மையிலிருந்த நாடுகள், தொலைவிலிருந்த நாடுகள் என்று பல்வேறு நாடுகளின் அரசர்களையும் முடிசூட்டு விழாவுக்கு அழைத்திருந்தான். 

அத்துடன் பல முனிவர்களையும் அழைத்திருந்தான். 

முடிசூட்டு விழா அரங்கம் முழுவதும் ஒரு புறம் அரசர்கள் மறுபுறம் முனிவர்கள் என்று நிறைந்திருக்க, நாட்டு மக்கள் சற்றுப் பின்னே நின்று விழாவைக் கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.  

முடிசூட்டு விழா முடிந்ததும், விழாவை நடத்திக் கொடுத்த புரோகிதர், "அரசே! இப்போது விழாவுக்கு வந்திருக்கும் விருந்தினர்களை கௌரவிக்க வேண்டும். முதலில் யாரை கௌரவிப்பது என்பதைத் தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

"இதில் முடிவு செய்வதற்கு என்ன இருக்கிறது? முதலில் கௌரவிக்கப்பட வேண்டியவர் இங்கு வந்திருக்கும் முனிவர்களுக்குள் மிக உயர்ந்தவர் என்று அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கௌதம முனிவர்தான்!" என்று சொன்ன சிங்கவர்மன் கௌதம முனிவர் இருக்கும் இடத்துக்கு நடந்து சென்றான். 

அவனைத் தொடர்ந்து அரசியும், அரசியைத் தொடர்ந்து மாலை, மற்ற பரிசுகள் கொண்ட பெரிய தங்கத் தட்டுக்களை ஏந்தியபடி சில ஊழியர்களும் சென்றனர்.

அரசன் கௌதம முனிவர் அருகில் சென்று அவரை வணங்க முற்பட்டபோது அவனைத் தடுத்த முனிவர், "சிங்கவர்மா! ஒரு நிமிடம் இரு! என்னை விடத்  தகுதி வாய்ந்த ஒருவர் இந்த அரங்கில் இருக்கிறார். அவருக்குத்தான் நீ முதல் மரியாதை செய்ய வேண்டும்!" என்றார்.

"தங்களை விடத் தகுதி வாய்ந்தவர்  யார் இருக்க முடியும் முனிவரே!" என்றான் சிங்கவர்மன் வியப்புடன்.

அமர்ந்திருந்த மன்னர்களில் ஒருவரைக் காட்டி, "அதோ அமர்ந்திருக்கிறானே ஆதித்ய வர்மன் அவன்தான் இந்த முதல் மரியாதை பெறத்  தகுதி உடையவன். என்னை விட உயர்ந்தவன்!" என்றார் கௌதமர்.

"மன்னிக்க வேண்டும், முனிவரே!  ஆதித்ய வர்மர் ஒரு சிறிய நாட்டின் மன்னர். நீங்களோ உலகம் போற்றும் ஒரு மாமுனிவர். அவர் எப்படி உங்களை விடச் சிறந்தவராக இருக்க முடியும்?" என்றான் சிங்கவர்மன்.

"சிங்கவர்மா! என் போன்ற முனிவர்கள் இந்த உலக வாழ்வை விரும்பாமல் துறவற வாழ்க்கை மேற்கொண்டிருக்கிறோம். ஆனால் ஆதித்ய வர்மன் உயிர்களைக் கொல்லக் கூடாது என்ற விரதத்தை மேற்கொண்டிருக்கிறான். கொல்லாமை என்னும் அறத்தைப் பின்பற்றுவதால்தான் அவன் போரை விரும்பாமல் தன்னைப் பகைத்த நாடுகளுடன் கூடப் போரிடாமல் சமாதானம் செய்து கொண்டு ஒரு சிறிய நாட்டுக்கு அரசனாக இருப்பதில் திருப்தி அடைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். போரில் மனிதர்களைக் கொல்வது க்ஷத்திரிய தர்மம் என்ற சமாதானத்தைக் கூட ஏற்காமல் மிகக்  கடினமான விதத்தில் கொல்லாமை அறத்தைக் கடைப்பிடித்து வரும் ஆதித்ய வர்மன்தான் துறவு வாழ்க்கை வாழும் என்னை விட மேலானவன்!" என்றார் கௌதமர்.

சிங்கவர்மன் மௌனமாக ஆதித்ய வர்மன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி நடக்க, அரசியும், பரிசுத்தட்டுகள் ஏந்திய ஊழியர்களும் அரசனைப் பின் தொடர்ந்தனர். 

குறள் 325
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

பொருள்:
இவ்வுலக வாழ்க்கை என்னும் நிலையைக் கண்டு அஞ்சிப் பிறவாமை வேண்டித் துறவு பூண்டவர்கள் எல்லோரையும் விட, உயிர்களைக் கொல்வதற்கு அஞ்சி, கொல்லாமை என்ற அறத்தைக் கடைப்பிடிப்பவனே உயர்ந்தவன்.
     பொருட்பால்                                                                                       காமத்துப்பால்












Thursday, April 9, 2020

324. புதியதோர் உலகம் செய்வோம்

"நண்பர்களே! உலக வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியை நாம் உருவாக்க இருக்கிறோம். 

"பல நூறு ஆண்டுகளுக்கு வெறும் காடுகளாக இருந்த இந்தத் தீவு சில மேற்கத்திய நாடுகளால் ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையாகப்  பயன்படுத்தப்பட்டது.

"சிறைச்சாலை என்பதை விட ஒரு கொலைக்களமாகப் பயன்படுத்தப்பட்டது என்று கூறலாம்.

"சாதாரணக் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டனர் அல்லது தூக்கிலிடப்பட்டனர். ஆனால் அரசியல் காரணங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் இந்தத் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.

"அடர்ந்த காடுகள் மிகுந்த இந்தத் தீவில் உணவு கிடைக்காமல் அலைந்து திரிந்தோ, காட்டு விலங்குகளால் கொல்லப்பட்டோ அவர்கள் வலியும், வேதனையும் நிறைந்த சாவைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்படாமல், கப்பல்கள் மூலம் இந்தத் தீவுகளுக்குக் கொண்டு வந்து  விடப்பட்டனர். 

"பல சமயம் குற்றம் சாட்டப்பட்ட அரசியல் கைதிகளுடன் எந்தக் குற்றமும் சாட்டப்படாத அவர்கள் குடும்பத்தினரும் இங்கு கொண்டு வந்து விடப்பட்டனர். இந்தக் கொடுமைக்கு ஆளான சிறு குழந்தைகள் எத்தனையோ பேர்.

"இங்கு கொண்டு வந்து விடப்பட்டோரில் பலர் பட்டினியாலும், காட்டு விலங்குகளால் கொல்லப்பட்டும் இறந்து போனாலும், இன்னும் பலர் தங்கள் மன உறுதியாலும், விடா முயற்சியாலும், கடின உழைப்பினாலும் எப்படியோ உயிர் பிழைத்துத் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கையையும் உருவாக்கிக் கொண்டனர்.  துவக்கத்திலிருந்தே அவர்கள் போராளிகள் அல்லவா? அதனால்தானே அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்? மக்கள் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடியர்களால் தங்கள் உயிருக்காகப் போராட முடியாதா என்ன?

"அவ்வாறெல்லாம் போராடிப் பல இன்னல்களை வென்று இந்தத் தீவில் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டவர்களின் சந்ததிகளாக, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்று நாம் ஒரு லட்சம் பேர் இந்த தீவில் வாழ்கிறோம். இந்த ஒரு லட்சம் பேரும் இந்தத் தீவைத் தங்கள் நாடாக உருவாக்கத் தீர்மானித்து, நாட்டுக்கான ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க ஒரு அரசியல் அமைப்பு சபையை உருவாக்கி, அதற்கு நம் நூறு பேரையும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த சபைக்குத் தலைவராக நீங்கள் அனைவரும் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். அதற்கு என் நன்றி.

"அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட குழு சில பரிந்துரைகளை செய்திருக்கிறது. அவற்றில் ஒரு பரிந்துரை அனைவராலும் ஒருமுகமாக ஏற்கப்பட்டிருக்கிறது.

"நாகரீகம் அடைந்ததாகச் சொல்லிக் கொள்ளும் நாடுகளின் சட்டங்கள் சில குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கின்றன. நம் முன்னோர்களின் அனுபவங்களை அறிந்த நாம் உயிரின் மதிப்பை உணர்ந்திருக்கிறோம். உயிர் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை நம் முன்னோர்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள். ஒரு உயிரைக் கொல்வதைப் போன்ற கொடிய செயல் எதுவுமில்லை. ஒருவர் எத்தகைய கொடிய குற்றத்தைச் செய்திருந்தாலும், அவர் உயிரைப் பறிக்க வேறு எவருக்கோ, இந்தச் சமுதாயத்துக்கோ உரிமை இல்லை. எனவே நம் நாட்டில் எந்தக் குற்றத்துக்கும் மரண தண்டனை கிடையாது. அரசியல் அமைப்புக் குழுவின் இந்த ஒருமனதான பரிந்துரையை இந்த அவை ஒருமனதாக ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

தலைவரின் வேண்டுகோளை ஏற்று 'யெஸ், யெஸ்' என்ற பெரும் கோஷத்துடன் அனைவரும் தங்கள் கரங்களை உயர்த்தினர்.

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 33     
  கொல்லாமை  
குறள் 324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

பொருள்:
அற நூல்களால் நல்ல வழி என்று கூறப்படுவது எது என்றால் எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற அறத்தைப் போற்றும் நெறியாகும்.
 பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

323. இரண்டு பேர், இரண்டு குற்றங்கள்!

"வாருங்கள் அமைச்சரே!" என்றான் அரசன் சாரநாதன்.

அமைச்சர் அநிருத்தர் சற்றுப் பதட்டத்துடன் அரசனின் முன் நின்றார். 'மன்னர் எதற்கு என்னிடம் தனியாகப் பேச விரும்புகிறார்?'

"அமைச்சரே! நம் நாடு தனித்தன்மை வாய்ந்த நாடு என்பது உங்களுக்குத் தெரியும்."

"ஆம் அரசே! தங்கள் ஆட்சியில் நம் நாடு பல விஷயங்களில் தனித்தன்மையுடன் சிறந்து விளங்குகிறது."

"நான் சொல்வது நாம் கடைப்பிடித்து வரும் கொல்லாமை என்ற அறத்தைப் பற்றி. நம் முன்னோர்கள் வகுத்த வழிப்படி நம் நாட்டு மக்கள் அனைவரும் மரக்கறி உணவையே உண்கிறார்கள். நம் நாட்டில் கொலைகள் நடப்பதில்லை. அது போல் எந்தப் பெரிய குற்றத்துக்கும் நாம் மரண தண்டனை விதிப்பதில்லை. ஆயுள் தண்டனை அல்லது நாடு கடத்துதல் என்பதுதான் நாம் விதிக்கும் அதிக பட்ச தண்டனை. இவ்வாறு கொல்லாமையைக் கடைப்பிடிக்கும் நாடு உலகிலேயே நம் நாடு மட்டும்தானே?"என்றான் அரசன்.

"ஆமாம் அரசே! இவற்றை நாம் பல தலைமுறைகளாகக் கடைப்பிடிக்கிறோமே!" என்றார் அமைச்சர்.

"ஆயினும் நம் நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கும் காடுகளில் சில விலங்குகள் வேட்டையாடிக் கொல்லப்படுவது என்பது எப்போதாவது நிகழ்கிறது அல்லவா?"

"ஆமாம் அரசே! காட்டில் வாழும் சில ஆதிவாசிகள் இந்தச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் நம் நாட்டு எல்லைக்கு வெளியே வசிப்பவர்கள். அந்தக் காட்டில் ஒரு பகுதிதான் நம் நாட்டுக்குள் வருகிறது என்பதால் நம்மால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை" என்றார் அமைச்சர். 

அரசர் என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தது போல் அவரிடம் ஒரு பதட்டம் இருந்தது.

" உண்மைதான். ஆனால் சமீபத்தில் நம் நாட்டுக் குடிமகன் ஒருவன் அந்தக் காட்டுக்குச் சென்று அங்கே ஒரு புலியை வேட்டையாடி இருக்கிறானாமே, உண்மையா?" என்றான் அரசன், அமைச்சரின் கண்களை நேராகப் பார்த்து.

"எனக்கு அத்தகைய தகவல் எதுவும் வரவில்லை அரசே!" என்றார் அமைச்சர் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு. 

"இளவரசனைக் காப்பாற்ற நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம் அமைச்சரே! எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நான் இளவரசனை விசாரித்து விட்டேன். அவனே என்னிடம் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டான்!" என்றான் அரசன்.

"என்னை மன்னித்து விடுங்கள் அரசே! எனக்கும் இந்தத் தகவல் வந்தது. எல்லைப்புறப் பகுதிகளுக்கு ஒரு வேலையாகச் சென்றபோது, வேட்டையாட வேண்டும் என்ற ஆர்வத்தால் தான் ஒரு புலியின் மீது  அம்பு எய்ததாகவும், இறந்து விட்ட புலியின் உடலைச் சில ஆதிவாசிகள் எடுத்துச் சென்று விட்டதாகவும் இளவரசரே என்னிடம் சொன்னார். தங்களுக்குத் தெரிந்தால் கோபிப்பீர்கள் என்பதால் தங்களுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்றும் அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனால்தான் நீங்கள் கேட்டபோது முதலில் உண்மையைச் சொல்லவில்லை!" என்றார் அமைச்சர்.

"நல்லது அமைச்சரே! நம் நாட்டில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கொல்லாமை என்ற அறத்தை மீறியதற்காக இளவரசன் ஓராண்டு விவசாயத் தொழிலாளியாகப் பணி புரிய வேண்டும் என்று அவனுக்கு தண்டனை விதித்திருக்கிறேன். அவன் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்று அங்கே விவசாயத் தொழிலாளியாகப் பணி செய்ய ஏற்பாடு செய்யுங்கள். இதைச் சொல்லத்தான் உங்களை வரச் சொன்னேன்!" என்று சொல்லி விட்டு  எழுந்தான் அரசன்.

இது பற்றி மேலே பேச அரசன் தயாராயில்லை என்று புரிந்து கொண்ட அமைச்சர், "சரி மன்னா!" என்றார், சுரம் இறங்கிய குரலில். 

அவர் திரும்பி நடக்கத் தொடங்கியபோது, "இன்னொரு விஷயம், அமைச்சரே!" என்றான் அரசன்.

அமைச்சர் திரும்பினார்.  

"கொல்லாமைக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்பட வேண்டியது பொய்யாமை. முதல் அறத்தை இளவரசன் மீறி விட்டான் என்றால், இரண்டாவது அறத்தை நீங்கள் மீறி விட்டீர்கள். இளவரசன் செய்த குற்றத்தை என்னிடம் சொல்லாமல் மறைத்தது மட்டுமின்றி, உண்மை அறிந்து நான் கேட்டபோதும், நீங்கள் உண்மையை மறைத்துப் பொய் கூறினீர்கள். எனவே உங்களுக்கும் தண்டனை உண்டு! ஒரு மாதம் நீங்கள் ஊதியம் பெறாமல் பணியாற்ற வேண்டும். இதைச் சொல்ல எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆயினும் நீதி வழங்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது அல்லவா?"

அமைச்சரின் முகத்தைப் பார்க்க சங்கடப்பட்டு அரசன் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொள்ள, அமைச்சர் அரசன் முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டுத் தன்  தலையைத் தாழ்த்திக் கொண்டார். 

அறத்துப்பால் '
  துறவறவியல் 
  அதிகாரம் 33     
  கொல்லாமை  
குறள் 323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

பொருள்:
அறங்களில் முதன்மையானது பிற உயிர்களைக் கொல்லாமல் இருத்தல். அதற்கு அடுத்ததாக பொய்யாமையைக் கொண்டால் நன்று.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்











Monday, April 6, 2020

322. துறவி கேட்ட கேள்வி

வயலிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய மாணிக்கம் வாசலில் இருந்த வாளியிலிருந்து தண்ணீரை எடுத்துக் கைகால்களைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

"வாங்க. சாப்பிட வரீங்களா?" என்றாள் அவன் மனைவி தங்கம். 

"அஞ்சு நிமிஷம் படுத்துகிட்டு அப்புறம் வரேன். வெய்யில்ல நடந்து வந்தது களைப்பா இருக்கு" என்ற மாணிக்கம், ஆமாம், "பசங்க வந்து சாப்பிட்டுட்டுப் போயிட்டாங்களா?" என்றான். 

பசங்க என்று அவன் குறிப்பிட்டது அவன் வயலில் வேலை செய்த இரண்டு இளைஞர்களை. 

"இப்பதான் போறாங்க" என்ற தங்கம், "ஏன் நீங்க வரதுக்கு மட்டும் இவ்வளவு நேரமாச்சு?" என்றாள்.

"நம்ப தோட்டத்தில அடிபட்டு விழுந்து கிடந்த புறாவை சிகிச்சைக்காக வைத்தியர் வீட்டில விட்டிருந்தேன் இல்ல, அது எப்படி இருக்குன்னு பாத்துட்டு வந்தேன்."

"எப்படி இருக்கு? கால் குணமாயிடுச்சா? சிகிச்சை முடியறதுக்குள்ள பறந்து கிறந்து போயிடப் போகுது!"

"வைத்தியர் பச்சிலை மருந்து போட்டிருக்காரு. ரெண்டு நாள்ள குணமாயிடும்னு சொன்னாரு. அது அங்கேயே பக்கத்துலதான் சுத்திக்கிட்டிருக்கு. அவரு சாப்பாடு போடறதால திரும்ப வது. இன்னிக்குக் காலில மறுபடி மருந்து தடவினாராம். நேத்து முதல்ல மருந்து போடச்சே, பயந்து ஓடப் பாத்துது. நான்தான் புடிச்சுக்கிட்டிருந்தேன். ஆனா இன்னிக்கு மருந்து போடச்சே அழகா காலைக் காட்டிச்சுன்னு வைத்தியர் சொன்னாரு!"

"ஆச்சரியமா இருக்கே!"

"நாம அன்பு காட்டினா பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் புரியும். நம்மைப் பாத்து பயப்படாது!"

"ஆமாம், வயல் வேலை இன்னியோட முடிஞ்சுட்டுதாமே, பையங்க நாளைக்கும் இங்க சாப்பிட வருவாங்களா?" என்றாள் தங்கம்.

"இல்ல. வேற வேலைக்குப் போறாங்களாம். அப்ப கூட மதியம் இங்க வந்து சாப்பிட்டுட்டுப் போங்கன்னு சொன்னேன். அவங்க வேலைக்குப் போகப் போற இடம் ரொம்ப தூரமாம். அதனால வரலைன்னுட்டாங்க" என்றான் மாணிக்கம். 

"தினம் ரெண்டு பேருக்கு சாப்பாடு போடறதுன்னு வச்சிருக்கமே, நாளையிலேந்து வேற யாரு சாப்பிட வருவாங்க?" என்றாள் தங்கம்.

"கோவிலுக்கு வர வெளியூர்க்காரங்க யாரையாவது அழைச்சுக்கிட்டு வரேன்" என்றான் மாணிக்கம். 

சொன்னது போலவே, மறுநாள் கோவிலுக்கு வந்திருந்த வெளியூர்க்காரர்கள் இருவரைத் தன் வீட்டுக்கு சாப்பிட அழைத்து வந்தான் மாணிக்கம். 

இருவரில் ஒருவர் ஒரு துறவி. ஊர் ஊராகச் சுற்றுபவர். அதனால் அவரை மட்டும் அன்று முழுவதும் தன் வீட்டில் தங்கி விட்டு மறுநாள் போகும்படி கேட்டுக் கொண்டான் மாணிக்கம். அவரும் சம்மதித்துத் தங்கினார். மற்றவர் சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விட்டார். 

மாலையில் மாணிக்கத்தின் வீட்டுக்குப் பின்னிருந்த தோட்டத்தைச் சுற்றிப் பார்த்த துறவி, "ஆடு, கோழி எல்லாம் வளக்கற போலருக்கே!" என்றார்.

"ஆமாம் சாமி!" என்றான் மாணிக்கம். 

துறவி சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு, "கேக்கறேன்னு தப்பா நினைக்காதே. தினமும் ரெண்டு பேருக்கு சாப்பாடு போடறதுன்னு ஒரு வழக்கம் வச்சிருக்கே. பறவைகளுக்கு உணவு போடறே, அடிபட்ட பறவைகளுக்கு வைத்தியம் பாக்கற. ஆனா, ஆடு கோழியெல்லாம் வளக்கறியே, இதையெல்லாம் நீ யாருக்கு விப்ப? அதுகளை வெட்டிக் கறிக்கடைகளுக்கு அனுப்பறவங்களுக்குத்தானே? இது பாவம் இல்லையா? இவ்வளவு நல்லது செய்யற நீ இந்தப் பாவத்தைச் செய்யலாமா?"என்றார்.

"சாமி! நீங்க நினைக்கிற மாதிரி இதையெல்லாம் நான் யாருக்கும் விக்கறதில்ல. எங்கேயோ காயம் பட்டுக்கிட்ட அல்லது வியாதி வந்த ஆடு, கோழிகளை அவற்றை வளக்கறவங்க வச்சுக்க விரும்பாம சில சமயம் வெளியில விட்டுடுங்க. அதுகளை எடுத்து வந்துதான் நான் வளர்க்கறேன். அதுகளுக்கு வைத்தியம் பண்ணுவேன். சிலது பிழைக்காது. ஆனா சிலது குணமாகி நல்லாயிடும். குணமானப்பறம் சில சமயம் அதை வளர்த்தவங்க எங்கிட்டேந்து திரும்ப வாங்கிட்டுப் போயிடுவாங்க. அப்படி வாங்கிக்கிட்டுப் போகலேன்னா அதெல்லாம் இங்கேயே வளரும். அதுங்க சாகற வரையிலும் அதுங்களைக் காப்பாத்துவேன். ஒரு ஆடு, கோழியைக் கூட வித்ததில்ல!" என்றான் மாணிக்கம். 

"நான் எத்தனையோ அறநூல்களைப் படிச்சிருக்கேன். நீ செய்யறதை விட உயர்ந்த அறம் எதுவும் இல்லை!" என்றார் துறவி.  

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 33     
  கொல்லாமை  
குறள் 322
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

பொருள்:
கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்து, தானும் உண்டு, வேறு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அற நூல்களை எழுதியவர்கள் தொகுத்து அளித்துள்ள அறங்கள் எல்லாவற்றிலும் தலையானது ஆகும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்














Sunday, April 5, 2020

321. ஆராய்ச்சி மணி

"என்ன இந்த இரவு நேரத்தில் ஆராய்ச்சி மணி அடிக்கிறது?" என்று வியந்தபடியே அரசன் திரிவிக்கிரமன் அரசவைக்கு வந்தான்.

அரசன் அவைக்குள் வருவதற்குள் இன்னும் தங்கள் வீடுகளுக்குச் செல்லாமல் அரண்மனையில் பணிகளில் ஈடுபட்டிருந்த சில அமைச்சர்களும் வேறு சில அரசவைப் பிரதானிகளும் அவைக்குள் வந்து குழுமி விட்டனர்.

அரசன் வந்து தன் அரியணையில் அமர்ந்த சில வினாடிகளில், ஆராய்ச்சி மணியை அடித்த பெண்மணியை அழைத்துக் கொண்டு இரண்டு காவலர்கள் அரசவைக்குள் நுழைந்தார்கள்.

அந்தப் பெண்மணி அரசனை வணங்கியதும், "இரவு துவங்கிய இந்த முதல் ஜாமத்தில் ஆராய்ச்சி மணியை அடித்திருக்கிறீர்களே, அவ்வளவு முக்கிய பிரச்னை என்னம்மா உங்களுக்கு?" என்றான் அரசன் திரிவிக்கிரமன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! அவசரம் என்பதால்தான் இந்த நேரத்தில் மணி அடித்தேன்" என்றாள் அந்தப் பெண்.

'சொல்லுங்கள்!" என்றான் அரசன். 

"அரசே! என் பெயர் சாவித்திரி. சில நாட்களுக்கு முன் எங்கள் வீட்டில் ஒரு திருடன் நுழைந்தான். எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு போக விலையுயர்ந்த பொருட்களோ, பொற்காசுகளோ இல்லை. திருட வந்தவன் ஏற்படுத்திய ஓசையால் என் கணவர் விழித்துக் கொண்டு கூச்சல் போட்டார். ஆத்திரப்பட்டு திருடன் என் கணவர் தலையில் கட்டையால் அடித்து விட்டு ஓடப்  பார்த்தான். ஆனால் அதற்குள் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவனைப் பிடித்துக் காவலர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். ஆனால் தலையில் அடிபட்ட என் கணவர் வைத்தியரின் சிகிச்சைக்குப் பலனின்றி அடுத்த நாளே இறந்து விட்டார்."

பேச்சைத் தொடர முடியாமல் சாவித்திரியிடமிருந்து ஒரு விம்மல் வெளிப்பட்டது.

"உங்களுக்கு நேர்ந்த துயரத்துக்கு மிகவும் வருந்துகிறேன் அம்மா. உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா? அதற்கு ஏன் இவ்வளவு அவசரமாக இரவில் ஆராய்ச்சி மணி அடித்தீர்கள்?" என்றான் திரிவிக்கிரமன்.

"அரசே! என் கணவர் அடிக்கடி சொல்லுவார், பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பதுதான் சிறந்த அறம் என்று. ஒரு உயிரைக் கொல்வதைப் போன்ற பாவச்செயல் வேறு எதுவும் இல்லை என்பார் அவர். ஒரு ஈ எறும்புக்குக்கு கூடத் தீங்கு செய்யாமல் வாழ்ந்தவர் அவர்."

"அப்படிப்பட்ட ஒருவரைக் கொன்றிருக்கிறானே ஒருவன்! அவனைப் பிடித்து விட்டார்கள் என்று சொல்கிறீர்கள். அவனுக்குத் தக்க தண்டனை கிடைக்க வகை செய்கிறேன்!" என்றான் அரசன்.

"அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது என்று கேள்விப்பட்டுதான் இங்கே வந்திருக்கிறேன், அரசே!" என்றாள் அந்தப் பெண்.

"அப்படியா? ஏன் கடுமையான தண்டனை வழங்கப்படவில்லையா அவனுக்கு?  இன்னும் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கேட்க வந்திருக்கிறீர்களா?"

"இல்லை அரசே! அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அறிகிறேன்."

"அப்புறம் என்ன? வேறு என்ன குறை உங்களுக்கு?" என்றான் அரசன் சற்றே எரிச்சலுடன்.

"அரசே! கொல்லாமை என்ற அறத்தைக் கடைப்பிடித்து வந்த என் கணவரின் மரணம் ஒரு மனிதன் கொல்லப்படுவதற்கு காரணமாக அமைந்து விடக் கூடாது என்ற பதைபதைப்பில்தான் ஓடி வந்திருக்கிறேன்."

"நீங்கள் சொல்வது விந்தையாக இருக்கிறது. கொலை செய்தவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது இந்த நாட்டின் சட்டம். அந்தச் சட்டத்தின்படி ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், கொலை செய்யப்பட்ட உங்கள் கணவர் எப்படி அதற்குப் பொறுப்பாவார்?" என்றான் அரசன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! என் கணவர் இதற்குப் பொறுப்பில்லை என்றாலும் அவர் மரணம் ஒரு மனிதன் கொல்லப்படுவதற்கு மறைமுகமாகக் கூடக் காரணமாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று தங்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்வதற்காக ஓடி வந்திருக்கிறேன்."

"சரி. அதற்கு ஏன் இந்த இரவு நேரத்தில் வந்து ஆராய்ச்சி மணியை அடிக்க வேண்டும்?"

"அரசே நாளை அதிகாலை அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படப் போவதாக இன்று மாலைதான் எனக்குத் தெரிந்தது. எனவேதான் இந்த இரவு நேரத்தில் வந்து தங்களைத் தொந்தரவு கொடுக்க வேண்டியதாகி விட்டது. இந்த இரவு நேரத்தில் ஆராய்ச்சி மணியை அடித்து உங்களுக்குத் தொந்தரவு கொடுத்ததற்காக எனக்கு ஏதானும் தண்டனை கொடுப்பதானாலும் கொடுங்கள். ஆனால் தயவு செய்து என் கணவரைக் கொன்றவனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனையை சிறை தண்டனையாகக் குறைத்து விடுங்கள்" என்றாள் சாவித்திரி கையைக் கூப்பியபடி.

திரிவிக்கிரமன் இப்போது சாவித்திரியைப் பார்த்த பார்வையில் ஒரு மரியாதை இருந்தது.

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 33     
  கொல்லாமை  
குறள் 321
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்

பொருள்:
ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பதுதான் அறம். கொல்லுதல் எல்லாப் பாவங்களையும் விளைவிக்கும்.
  பொருட்பால்                                                                                       காமத்துப்பால்














Wednesday, April 1, 2020

320. வாடகை பாக்கி

"அஞ்சு மாசமா வாடகை கொடுக்கல சார். காலி பண்ணவும் மாட்டேங்கறாரு. மூணு மாச அட்வான்ஸ் போனா கூட இன்னும் ரெண்டு மாச வாடகை பாக்கி. அவரு கொடுப்பாருன்னு தோணல. ரொம்ப அடாவடியாப் பேசறாரு. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல!" என்று புலம்பினார் நாகராஜன். 

"அப்படியா? சங்கர் எனக்குத் தெரிஞ்சவன்தான்னாலும் என்கிட்டயும் திமிராத்தான் பேசுவான். எதுக்கும் நான் சொல்லிப் பாக்கறேன்" என்றார் பசுபதி.

ரண்டு நாட்கள் கழித்து நாகராஜனைச் சந்தித்த பசுபதி, "சங்கர் கிட்டப் பேசினேன். எதோ சாக்குச் சொன்னான். ஆனா ஒரு வாரத்தில அவன் வேற வேலைக்குப் போகப் போறானாம். அவன் வேலைக்குப் போகப் போற கம்பெனி பூந்தமல்லியில் இருக்கறதால, பூந்தமல்லியில வீடு பாத்துக்கிட்டிருக்கானாம். ஒரு மாசத்துல போயிடுவான். ஆனா உங்க வாடகை பாக்கியைக் கொடுப்பானான்னு தெரியல. அவன் இதுக்கு முன்னால குடி இருந்த வீடுகள்ளேயும் இப்படித்தான் வாடகையை ஒழுங்கா கொடுக்காம தாமதப்படுத்தறது, அஞ்சாறு மாச வாடகையை பாக்கி வச்சுட்டுக் காலி பண்றது இந்த மாதிரியெல்லாம் செஞ்சிருக்கானாம். அவனைப் பத்தி விசாரிச்சதில இப்பதான் எனக்குத் தெரிஞ்சுது" என்றார் பசுபதி. 

"காலி பண்ணினா போதும் சார்!" என்றார் நாகராஜன்.

ரண்டு வாரங்களுக்குப் பிறகு வீட்டைக் காலி செய்தான் சங்கர். இரண்டரை மாத வாடகை பாக்கியை அப்புறம் கொடுப்பதாகச் சொல்லி விட்டுப் போனான். ஆயினும் நாகராஜனுக்கு அந்தப் பணம் வரும் என்ற நம்பிக்கையில்லை. 'ஏதோ, இந்த மட்டும் காலி செய்தானே!' என்று நினைத்துக் கொண்டார். 

பசுபதியின் வீட்டுக்குச் சென்று சங்கர் காலி செய்ததைச் சொல்லி அவருக்கு நன்றி தெரிவித்த நாகராஜன், "சார்! நான் கூட வாடகை வீட்டில குடியிருந்திருக்கேன். அப்பல்லாம் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், வாடகையை ஓழுங்காக் கொடுத்துடுவேன். எப்பவாவது ஒருநாள் தாமதமானாக் கூட வீட்டுக்காரர் ஏதாவது நினைச்சுப்பாரோன்னு பயமா இருக்கும். ஆனா இப்ப எனக்கு வர வேண்டிய வாடகை முழுசா வரல. குடியிருந்தவரு ரெண்டு மூணு மாச வாடகை கொடுக்காம ஏமாத்திட்டுப் போயிட்டாரு. இதை நினைச்சாதான் எனக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கு!" என்றார் வருத்தத்துடன்.

"வருத்தப்படாதீங்க நாகராஜன். இந்த மூணு மாச வாடகை இழப்பு உங்களுக்குப்பெரிய விஷயம் இல்ல. புதுசா ஒருத்தருக்கு வாடகைக்கு விடறப்ப வாடகை அதிகமாக கூடக்  கிடைக்கும். ஆனா உங்களுக்கு கஷ்டம் கொடுத்த சங்கர்தான் இப்ப கஷ்டப்படப் போறான்!'" என்றார் பசுபதி.

"எப்படிச் சொல்றீங்க?'   

"இப்ப அவன் வாடகைக்குப் போயிருக்கிற வீடு ஒரு அரசியல்வாதியோடது. வீட்டுச் சொந்தக்காரர் ஒரு பினாமிதான். அந்த அரசியல்வாதி பண்ற கெடுபிடியில எத்தனையோ பேரு அந்த வீட்டில ரொம்ப நாள் குடியிருக்க முடியாம ஓடி இருக்காங்க. ஒழுங்கா வாடகை கொடுத்தவங்களுக்கே இந்த கதின்னா, இவனை மாதிரி ஒழுங்கா வாடகை கொடுக்காதவங்களை வறுத்து எடுத்துட்டு மாட்டாரா அந்த அரசியல்வாதி?" என்றார் பசுபதி.  

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 320
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

பொருள்:
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சாரும். எனவே துன்பம் இல்லாமல் வாழ விரும்புபவர்கள் பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருக்க வேண்டும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்