About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, February 25, 2019

240. ஓய்வுக்குப் பின்...

"முப்பத்திரண்டு வருஷம் அரசாங்க உத்தியோகம் பாத்துட்டு ரிடயர் ஆயிட்ட. இனிமே என்ன செய்யப் போற?" என்றார் மணி, தன் நண்பர் பாண்டுவிடம்.

"தெரியல. வீட்டில உக்காந்து பொழுதைக் கழிக்க வேண்டியதுதான்" என்றார் பாண்டு.

"உன்னைப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்" என்றார் மணி.

"என்ன கேள்விப்பட்ட? தப்பா எதுவும் இல்லியே!" 

"நீ தப்பு எதுவுமே செய்யலேன்னுதான் கேள்விப்பட்டேன்!"

"புரியலையே?"

"என்ன புரியல? நீ வேலை பாத்தது லஞ்சத்துக்குப் பெயர் போன ஒரு டிபார்ட்மென்ட். பணம் கொடுக்காம அங்கே எந்த வேலையும் நடக்காதுன்னு உலகத்தில எல்லாருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு இலாகாவில் வேலை செஞ்சுக்கிட்டு, ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காம முப்பத்திரண்டு வருஷம் ஓட்டியிருக்கியே, அதைச் சொன்னேன்."

"நீ சொல்ற. ஆனா அந்த ஆஃபீஸ்ல வேலை செஞ்சதால நானும்  லஞ்சம் வாங்கியிருப்பேன்னுதானே வெளியில எல்லாரும் நினைப்பாங்க?" என்றார் பாண்டு சற்று வருத்தத்துடன்.

"அப்படி இல்ல. நீ எப்படி எளிமையா வாழறேன்னு எல்லாரும் பாத்துக்கிட்டிருக்காங்க. உன் ஆபீஸ்ல எல்லாரும் உன்னைப் பத்தி 'இவரு பணம் வாங்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கறது எங்களையும் இல்ல பாதிக்குது?'ன்னு பேசிக்கிறாங்க. அதோட நீ நேர்மையா இருந்ததால உன்னை எத்தனை தடவை டிரான்ஸ்ஃபர் பண்ணி ஊர் ஊராப் போக வச்சு உன்னை அலைக்கழிச்சிருக்காங்கன்னு எல்லாரும் பாத்திருக்காங்களே! அப்படி இருக்கறப்ப நீ தப்பு பண்ணாதவன்னு எல்லாருக்கும் தெரியாதா?" என்றார் மணி.

"அப்படியா சொல்ற? அப்படி இருந்தா எனக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்!" என்றார் பாண்டு.

"ஏங்க, ரிடயர் ஆகி ஒரு மாசம்தான் ஆச்சு. அதுக்குள்ளே வேற வேலைக்குப் போறேன்னு கிளம்பிட்டீங்களே?" என்றாள் பாண்டுவின் மனைவி கிரிஜா.

"நான் வேலைக்குப் போகல. ஒரு தொண்டு நிறுவனத்தில் வாலன்ட்டியர்கள் வேணும்னு கேட்டிருந்தாங்க. அங்கே போய் தினம் கொஞ்ச நேரம் வேலை செஞ்சுட்டு வரலாம்னு பாக்கறேன். இது சம்பளத்துக்கு வேலை பாக்கறது இல்ல. அந்தத் தொண்டு நிறுவனத்தின் மூலமா என்னால முடிஞ்ச உதவியை மத்தவங்களுக்குச் செய்யறது" என்றார் பாண்டு.

"ஏங்க, முப்பத்திரண்டு வருஷமா அரசாங்கத்தில் நேர்மையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்களைப் பத்தி எல்லாரும் நல்லபடியாப் பேசறதா உங்க நண்பர் மணி கூட சொன்னாரு. இது சேவை இல்லையா? இப்ப எதுக்கு ஓய்வா இருக்க வேண்டிய காலத்தில மறுபடி சேவைன்னு கிளம்பறீங்க?" என்றாள்  கிரிஜா.

"அரசாங்க வேலையில என் கடமையைச் செஞ்சதுக்குப் பேரு சேவை இல்லை. வாங்கின சம்பளத்துக்கு என் கடமையை ஒழுங்கா செஞ்சேன். நான் நேர்மையா இருக்கேன்னு எல்லாரும் சொல்றது நான் தப்பு பண்ணாம இருந்தேங்கறதைத்தான். தப்பு பண்ணாம, கெட்ட பேர் வாங்காம வாழ்ந்தது நல்ல விஷயம்தான். அது நாம இயல்பா எப்படி இருக்கணுமோ அப்படி இருக்கறதுதான். அது பாதி வாழ்க்கைதான். மனுஷனாப் பிறந்ததுக்கு நாம ஏதாவது நல்லது செஞ்சாதான் வாழ்க்கை நிறைவா இருக்கும். நான் தப்பு பண்ணலேன்னு மத்தவங்க சொல்றது சரி. ஆனா நான் நல்லது பண்ணியிருக்கேன்னும் சொன்னாதான் எனக்குத் திருப்தியா இருக்கும்!" என்றார் பாண்டு.

இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

பொருள்:  
தன் மீது பழி இல்லாமல் வாழ்பவர்தான் வாழ்பவராகக் கருதப்படுவார். புகழ் இல்லாமல் வாழ்பவர் வாழாதவராகத்தான் கருதப்படுவார்.
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்




















Saturday, February 23, 2019

239. நல்லசிவம் விட்டுச் சென்ற சொத்து

"பேருதான் நல்லசிவம். ஒரு நல்ல காரியம் கூட செஞ்சதில்ல மனுஷன்!"

"செத்தவரைப் பத்தித் தப்பாப் பேச வேண்டாமே!"

"தப்பா எதுவும் சொல்லல. அவரைப் பத்தி சொல்றதுக்கு நல்லதா எதுவும் இல்லேன்னு சொன்னேன்!"

"ஏன் இல்ல? ஊர்ல பெரிய மனுஷன். அரசாங்க அதிகாரிங்க யாராவது இந்த ஊருக்கு வந்தா முதல்ல அவர் வீட்டுக்குத்தான் போவாங்க. ஒரு தடவை கலெக்டர் கூட வந்திருக்காரே!"

"வந்திருக்காங்க. மனுஷன் அவங்க யார்கிட்டயாவது சொல்லி ஊருக்கு ஏதாவது நல்லது செஞ்சிருக்காரா? தனக்கு வேணுங்கறதை மட்டும்தானே கேட்டு வாங்கியிருக்காரு?"

அப்பாவின் சடலத்துக்கருகே அமர்ந்திருந்த சேகரின் காதில் ஊர்க்காரர்கள் பேசிக் கொண்டது அரையும் குறையுமாக விழுந்தது. 

அப்பா சுயநலமானவர்தான் என்பது அவனுக்கும் தெரியும். ஆயினும் ஒருவர் இறந்த பிறகு அவரைப் பற்றி சம்பிரதாயமாகச் சொல்லப்படக் கூடிய நல்ல வார்த்தைகளைக் கூடவா அப்பா சம்பாதிக்கவில்லை?

ல்லசிவத்தின் காரியங்கள் முடிந்த பிறகு அப்பாவின் நிலங்களையும், வீட்டையும் விற்று விட முடிவு செய்து, ஒருவரிடம் அதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னான் சேகர். எல்லாம் விற்று முடியும் வரை ஊரிலேயே இருக்க முடிவு செய்தான்.

சில நாட்கள் கழித்து நிலங்களையும், வீட்டையும் வாங்கிக் கொள்ள சிலர் முன்வந்தனர். ஆனால் அவர்கள் கேட்ட விலை குறைவாக இருந்ததாக சேகருக்குத் தோன்றியது.

"அவசரத்துக்கு விக்கறேன்னு நினைச்சு அடிமாட்டு விலைக்குக் கேக்கறாங்க போலருக்கு. இவ்வளவு குறைஞ்ச விலைக்கு நான் விக்கறதா இல்ல. நான் மெதுவா வித்துக்கறேன்" என்றான் சேகர் விற்பனைக்கு ஏற்பாடு செய்தவரிடம்.

"சொல்றேன்னு தப்பா நினைக்காதே தம்பி. உங்க நிலத்துக்குப் பக்கத்தில இருக்கற நிலத்திலெல்லாம் விளைச்சல் அதிகம். ஆனா உங்க நிலத்தில விளைச்சல் கம்மி. அதான் விலை குறைவாப் போகுது" என்றார் அவர்.

"அது எப்படி எங்க நிலத்தில மட்டும் விளைச்சல் கம்மியா இருக்கும்?"

"தம்பி. நிலத்துக்குப் பராமரிப்பு அவசியம். மண் வளத்தை நல்லா வச்சுக்கணும்னா நல்லா உழணும். உரங்கள் போடணும். இன்னும் பல விஷயங்கள் இருக்கு. விவசாயிங்க இதையெல்லாம் பாத்துப் பாத்து செய்வாங்க. பெத்த குழந்தையைப் பாத்துக்கற மாதிரி நிலத்தைப் பாத்துப்பாங்க. ஆனா உன் அப்பா இதிலெல்லாம் அக்கறை காட்டினதில்ல. நான் கூட அவர்கிட்ட சொல்லி இருக்கேன். 'எல்லாம் விளைஞ்சது போதும். மண்ல போய்க் காசைக் கொட்ட முடியாது'ன்னு சொல்லிட்டாரு. அவரோட இந்த மனப்பான்மையாலதான் உங்க நிலம் வளம் குறைஞ்சு போய் இன்னிக்கு மதிப்பும் குறைஞ்சு போயிருக்கு" என்றார் அவர்.

"இந்த ஊர்ல எல்லாரும் என் அப்பா மேல குத்தம் கண்டு பிடிக்கறதிலேயே குறியா இருக்கீங்க. சரி. நிலம்தான் அப்படி. ஏன் வீட்டைக் கூடக் குறைச்ச விலைக்குக் கேக்கறாங்க?" என்றான் சேகர் சற்றுக் கோபத்துடன்.

"நீயே பாருப்பா வீடு எப்படி இருக்குன்னு. உன் அப்பா நிலத்தைப் பராமரிக்கலேன்னு சொன்னா, உனக்குக் கோபம் வருதே. வீட்டை எப்படி வச்சிருக்காருன்னு பாரு. சுவரெல்லாம் காரை போயிருக்கு. தரையெல்லாம் உடைஞ்சிருக்கு. உத்தரம் எல்லாம் அங்கங்கே உடைஞ்சு விழற மாதிரி இருக்கு."

"வீடு மோசமா இருந்தா என்ன? பூமிக்கு மதிப்பு இருக்கு இல்ல?"

"தம்பி, இது கிராமம், டவுன் இல்ல. டவுன்ல எல்லாம் பழைய வீட்டை வாங்கறவங்கள்ள பல பேரு அதை இடிச்சுட்டுப் புது வீடோ ஃபிளாட்டோ கட்டணும்னு நினைப்பாங்க. அதனால அங்க நிலத்தோட மதிப்பைத்தான் முக்கியமாப் பாப்பாங்க. ஆனா கிராமத்தில பழைய வீடு வாங்கறவங்க அந்த வீட்டில குடியிருக்கணும்னு நினைச்சுத்தான் வாங்குவாங்க. அதனால இங்கே பூமி மதிப்போடு, வீட்டு மதிப்பையும் கணக்குப் போட்டுத்தான் விலை சொல்லுவாங்க. வீட்டில ரிப்பேர் வேலை நிறைய இருக்கும்னா அதுக்குத் தகுந்தாப்பல விலை குறையத்தான் செய்யும். ஒண்ணு சொல்றேன். தப்பா நினைச்சுக்காதே. உங்கப்பா தன்னைப் பத்தி மட்டும்தான் கவலைப்பட்டார். மத்தவங்களைப் பத்தி, அண்டை அசலைப் பத்தி,  தான் இருக்கற வீட்டைப் பத்திக் கூட அக்கறை இல்லாம இருந்தாரு. அதனாலதான் இப்படி..."

அறத்துப்பால்
இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

பொருள்:  
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவரைச் சுமந்த நிலம் நல்ல விளைச்சல் இல்லாத நிலமாகக் கருதப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்












Thursday, February 14, 2019

238. குமாரின் தந்தை

"ரொம்ப வருஷம் கழிச்சு சொந்த ஊருக்குப்  போறது சந்தோஷமா இருக்கு" என்றான் குமார்.

"ஆமாம். உன்னைத் சந்திக்கலேன்னா எனக்கு இந்த எண்ணமே வந்திருக்காது" என்றான் ரவி.

"சின்ன வயசில ஒரே தெருவில வளர்ந்து, ஒரே பள்ளிக்கூடத்துல படிச்சு, ஒண்ணா விளையாடி, கொட்டமடிச்சு ஜாலியா இருந்துட்டு, அப்புறம் கல்லூரிப் படிப்புக்கு வெவ்வேற இடத்துக்குப் போனதும் நமக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா தொடர்பு விட்டுப் போனதை நினைச்சா ஆச்சரியமாவும் இருக்கு, வருத்தமாவும் இருக்கு."

"என்ன செய்யறது? நம்ம ரெண்டு பேர் அப்பாக்களும் ஒத்தர் பின்னால ஒத்தர்னு சீக்கிரமே காலமாயிட்டாங்க. நம்ம குடும்பங்களும் ஊர்ல எல்லாத்தையும் வித்துட்டு, வேற எங்கேயோ போய் செட்டில் ஆயிட்டாங்க. நாமும் வேலைன்னு எங்கெங்கேயோ போய்க்கிட்டிருந்தோம். நாம தற்செயலா மறுபடி சந்திச்சதே ஆச்சரியம்தான்னு நினைக்கிறேன்" என்றான் ரவி.

"நீ சொல்றது சரிதான்" என்ற குமார், தொடர்ந்து, "ஆமாம், ஊர்ல நம்மை யாருக்காவது அடையாளம் தெரியுமா?" என்ற கேள்வியை எழுப்பினான்.

"நம்மைத் தெரியாட்டா என்ன? நம்ம பெற்றோர்களை ஞாபகம் வச்சுக்கிட்டிருப்பாங்களே!" என்றான் ரவி நம்பிக்கையுடன்,

"அதுவும் அந்தக் காலத்தில உங்கப்பா ஊரிலே பெரிய பணக்காரர். அவரை எப்படி மறப்பாங்க?" என்றான் குமார்.

ரவி பெருமையுடன் சிரித்தான்.

வி சொன்னது போல், ஊரில் அனைவரும் இருவருடைய குடும்பங்களை ஞாபகம் வைத்திருந்தார்கள். இவர்களுடன் பள்ளியில் படித்து அந்த ஊரிலேயே வசித்து வந்த சிலரும் ஊரில் இருந்தனர்.

ரவியையும், குமாரையும் தங்கள் வீட்டில் தங்கவும், உணவருந்தவும் பலரும் அழைத்தனர். ஒரு சிலரின் விருந்தோம்பலை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு, மற்றவர்களிடம் அவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.

இருவரும் இரண்டு நாட்களில் ஊரில் பலரையும் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் படித்த பள்ளி இருந்த இடத்தைப் பார்த்து விட்டு வந்தார்கள். அது இடிக்கப்பட்டு அங்கு வேறு ஏதோ கட்டிடம் வந்திருந்தது. பள்ளி வேறொரு இடத்தில் பெரிய கட்டிடத்துக்கு இடம் மாறி இருந்தது.

ரவியின் வீட்டை வாங்கியவர் அதை வேறு விதமாக மாற்றிக் காட்டியிருந்தார். குமாரின் வீடு இடிக்கப்பட்டுக் காலி மனையாக இருந்தது.

கோவில்கள் மட்டும்தான் உள்ளே வௌவால்களும், கோபுரத்தில் புறாக்களும் என்று அதே போல் இருட்டு குகைகளாக இருந்தன. கோவில்களுக்குள் மங்கலாக எரிந்து கொண்டிருந்த குறைந்த வாட் பல்புகளைக் கொண்ட மின் விளக்குகளைத் தவிர அதிக மாறுதல்கள் இல்லை.

 கோவில்களுக்கு வந்து போகும் பக்தர்களின் எண்ணிக்கையைப் போல் அங்கே வசித்து வந்த வௌவால்கள், புறாக்கள் இவற்றின் எண்ணிக்கையும் குறைந்து விட்டதாகத் தோன்றியது.

ஆற்றில் புதிய பாலம். ஆனால் பாலத்துக்குக் கீழே நீரோட்டம் இல்லை.

இரண்டு நாட்கள் ஊரைச் சுற்றியதில் மகிழ்ச்சி, ஏக்கம், வருத்தம் எல்லாம் கலந்த உணர்வு இருவருக்கும் ஏற்பட்டது.

ரிலிருந்து பஸ்ஸில் கிளம்பி இருவரும் அருகில் இருந்த ரயில் நிலையத்துக்கு வந்தனர். ரயிலுக்குக் காத்திருந்தபோது, குமார் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் ரவி ஏதோ சிந்தனையில் இருந்தான்.

"என்னடா, ஒரு மாதிரி இருக்கே?" என்றான் குமார்.

"போகும்போது நீ என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்கா? என் அப்பா பெரிய பணக்காரர்ங்கறதால அவரை எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்னு சொன்னே."

"ஆமாம். அதுக்கென்ன? உன் அப்பாவைப் பத்தித்தான் எல்லாரும் பேசினாங்களே!"

"பேசினாங்க. ஒரு மரியாதைக்காகப் பேசினாங்க. ஊர்ல எல்லாரும் நம்மகிட்ட அன்பாதான் நடந்துக்கிட்டாங்க. ஆனா நான் ஒண்ணு கவனிச்சேன். எல்லாரும் உன் மேல காட்டின அளவுக்கு உற்சாகத்தை எங்கிட்ட காட்டல" என்றான் ரவி.

"நீ கற்பனை பண்ணிக்கற. அப்படி எதுவும் இல்ல" என்றான் குமார்.

"இல்ல, இருந்தது. அதை நீயும் கவனிச்சிருப்ப. வெளியே சொல்லிக்காம இருக்க. என் அப்பாவைப் பத்தி அதிகமா யாரும் பேசல. ஆனா உன் அப்பாவைப் பத்தி எல்லாரும் எவ்வளவு பெருமையாப் பேசினாங்க!"

"டேய் ரவி! உன் அப்பா பணக்காரர். அதனால அவர்கிட்ட நிறைய பேரு நெருங்கிப் பழகி இருக்க மாட்டாங்க. என் அப்பா சாதாரண மனுஷர். அதனால அவர்கிட்ட எல்லாரும் அதிகமாப் பழகி இருப்பாங்க. அதான் விஷயம்" என்றான் குமார்.

"அது மட்டும் காரணம் இல்லடா. என் அப்பா பெரிய மனுஷன் என்கிற அந்தஸ்தோட இருந்தார். அவ்வளவுதான். ஆனா உன் அப்பா ஊர்ல எல்லாருக்கும் உதவியா இருந்திருக்காரு. எல்லாரோட நல்லது கெட்டதுகளிலேயும் பங்கேத்துக்கிட்டு, எல்லாருக்கும் தன்னால முடிஞ்ச உதவியைச் செஞ்சுக்கிட்டு இருந்திருக்காரு. அதனால்தான் அவர் மேல எல்லாரும் இவ்வளவு நல்லெண்ணம் வச்சிருக்காங்க. நீ அவர் மகன் என்கிறதால உன் மேலயும் அந்த நல்லெண்ணத்தைத் தங்களை அறியாமலேயே வெளிப்படுத்தினாங்க. உன் அப்பா வாழ்ந்த வீடு இடிஞ்சு போயிடுச்சு. ஆனா அவர் விட்டுட்டுப் போன நல்ல பேரு அப்படியே இருக்கு, பரம்பரை சொத்து மாதிரி. இப்ப அந்த நல்ல பேரோட பலன் உனக்கும் கிடைக்குது. நீ அதிர்ஷ்டம் பண்ணியிருக்கடா!" என்றான் ரவி.

குமாருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 
அறத்துப்பால்
இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 238
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

பொருள்:  
தமக்குப் பின் நிலைத்து நிற்கும் புகழை விட்டுச் செல்லாவிட்டால், அந்த வாழ்க்கையை உலகம் பழி என்று சொல்லும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்