About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, November 18, 2016

69. உதவித்தொகை

கணவனை இழந்தபின் அம்முலுவுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவள் மகன் கண்ணன்தான். 

கண்ணனுக்கு மூன்று வயது ஆகியிருந்தபோதே அவள் கணவன் வேலுச்சாமி தண்ணீர் லாரியில் அடிபட்டு இறந்து விட்டான்.

அரசாங்கத்தில் இழப்பீடு என்று ஏதோ ஒரு சிறு தொகை கொடுத்தார்கள். அதை வங்கியில் போட்டு அதிலிருந்து வந்த வட்டியிலும் வீட்டு வேலை செய்து கிடைத்த வருமானத்திலும் மகனை வளர்த்து வந்தாள் அம்முலு.

ஒரு வழியாகக் கண்ணனின் பள்ளிப்படிப்பு முடிந்து அவனைப் பொறியியல் கல்லூரியிலும் சேர்த்து விட்டாள். கண்ணன் பெற்ற நல்ல மதிப்பெண்களால் அவனுக்கு அரசுக் கல்லூரியிலேயே இடம் கிடைத்தது. அரசுக்கல்லூரி என்பதால் கட்டணம் குறைவுதான்.

எப்படியும் நான்கு வருடங்கள் சமாளித்து விடுவாள். அப்புறம் அவன் படிப்பு முடிந்து ஒரு நல்ல வேலையும் கிடைத்து விட்டால் அவள் பட்ட கஷ்டங்களுக்குப் பலன் கிடைத்து விடும்.

கண்ணன் இரண்டாவது ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு செய்தி சொன்னான். ஒரு அறக்கட்டளையில் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறார்களாம். முதல் ஆண்டுப் பரிட்சையில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவன் கல்லூரியிலிருந்து எட்டு பேருக்கு அந்த உதவித்தொகை கிடைக்குமாம்.

கண்ணன் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், அவன் எட்டாவது இடத்தில் இருப்பதால், அவனுக்கு அந்த உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகச் சொன்னான். அந்த உதவித்தொகை கிடைத்து விட்டால், கல்லூரிக்குக் கட்ட வேண்டிய கல்விக் கட்டணத்தை அந்த அறக்கட்டளையே செலுத்தி விடும்.

இதைக் கேட்டதும் அம்முலுவுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்பட்டன. என்னதான் குறைவான கட்டணம் என்றாலும், அதைக் கட்டுவதும் அவளுக்கு சிரமம்தான். தான் வேலை செய்கிற இடங்களில் முன்பணம் கேட்டு வாங்கிக் கல்லூரிக் கட்டணத்தைக் கட்டி வந்தாள். பிறகு மாதாமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்வார்கள்.

முதல் செமிஸ்டர் கட்டணம் கட்டுவதற்காகக் கடன் வாங்கி அந்தக் கடன் தீரும் சமயத்தில் இரண்டாவது செமிஸ்டருக்கான கட்டணம் கட்டும் நேரம் வந்து விட்டது. இனி இந்த சிரமம் இருக்காது. வீட்டுச் செலவுக்குப் பணம் சற்று தாராளமாகவே இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள்.

"சீக்கிரமே அதற்கு மனுப் போட்டு விடு" என்றாள் அம்முலு. "இன்றைக்கே அப்ளை பண்ணி விடுகிறேன்" என்றான் கண்ணன்.

ஆனால் ஒரு மாதம் கழித்து கண்ணன் "அம்மா, அந்த ஸ்காலர்ஷிப் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு ரேங்க் தள்ளிப் போய் விட்டது. எட்டு பேருக்குத்தான் கொடுத்தார்கள். நான் ஒன்பதாவது இடத்தில்தான் இருக்கிறேனாம்" என்றான்.

அம்முலுவுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், "பரவாயில்லை விடு. இதை எதிர்பார்த்தா உன்னை நான் கல்லூரியில் சேர்த்தேன்? நீ கிடைக்கும் என்று சொன்னதால் கொஞ்சம் எதிர்பார்த்தேன். இல்லாவிட்டால் இந்த ஏமாற்றம் கூட இருந்திருக்காது" என்றாள்.

தாய் இந்த ஏமாற்றத்தை இயல்பாக எடுத்துக் கொண்டதைப் பார்த்த கண்ணனின் கண்களில் நீர் முட்டியது.

சில நாட்கள் கழித்து, கண்ணன் தன் தாயிடம் வந்து "அம்மா உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்" என்றான்.

"சொல்லு" என்றாள் அம்முலு, பையன் யாரையாவது காதலிப்பதாகச் சொல்லப் போகிறானோ என்ற கவலையுடன்.

"நான் உன்னிடம் பொய் சொல்லி விட்டேன்."

"பொய்யா? என்ன அது?"

"எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை என்று சொன்னேனே அது பொய். நான் அப்ளை பண்ணவே இல்லை."

"ஏன்? நம் குடும்பம் இருக்கும் நிலை உனக்குத் தெரியாதா? அது கிடைத்திருந்தால் நமக்குப் பெரிய உதவியாக இருந்திருக்குமே!"

"எனக்குத் தெரியும் அம்மா. நான் எட்டாவது இடத்தில்தான் இருந்தேன். நான் அப்ளை பண்ணியிருந்தால் எனக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். எனக்கு அடுத்தபடியாக ஒன்பதாவது இடத்தில் இருந்த பையனுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் விண்ணப்பம் போடாமல் இருந்து விட்டேன்.

"அவன் அப்பா ஒரு குடிகாரர். அவனுக்கு ஃபீஸ் கட்டுவதற்காக அவன் அம்மா யாரிடமாவது கடன் வாங்கி வைத்திருந்த பணத்தைக் கூட எடுத்துக் குடித்து விடுவார். நம்மை விட அவன் மிகவும் கஷ்டப்படுகிறவன். இப்போது இந்த ஸ்காலர்ஷிப் அவனுக்குக் கிடைத்து விட்டதால், ட்ரஸ்டே ஃபீஸ்  கட்டி விடும். அவன் அப்பாவின் தொல்லையால் அவன் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கும். உனக்கும் கஷ்டம்தான். நான் கல்லூரி விட்டு வந்ததும் ஏதாவது கடையில் வேலை செய்து கொஞ்சம் பணம் சம்பாதிக்கப் பார்க்கிறேன்" என்றான் கண்ணன்.

அம்முலு கோபமாகக் கத்துவாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவள் கண்களில் கண்ணீர் மல்க நின்றாள். சற்று நேரம் பேச்சு வரவில்லை.

விசும்பிக்கொண்டே, "ராஜா! ஒன்னை நெனச்சா எனக்குப் பெருமையா இருக்குடா. நாம கஷ்டத்துல இருக்கும்போதும் நம்மளை விட அதிகமா கஷ்டப்படறவங்களுக்காக விட்டுக் கொடுத்திருக்கியே, இந்த மனசு யாருக்குடா வரும்? எத்தனை படிப்புப் படிச்சாலும் இப்படிப்பட்ட சிந்தனை அந்தப் படிப்பினால் வராதுடா.

"நீ வேலையெல்லாம் ஒண்ணும் செய்ய வேண்டாம். இத்தனை நாள் பாத்துக்கிட்ட மாதிரி, இனிமேயும் நான் பாத்துக்கறேன். இன்னும் மூணு வருஷந்தானே? ஓடிடும்! நீ செஞ்சிருக்கிற காரியத்தை மனசில நெனச்சுக்கிட்டிருந்தாலே எனக்குப் பெரிய தெம்பு வந்துடும்" என்று சொல்லித் தன் மகனின் கன்னத்தை அழுந்தக் கிள்ளினாள் அம்முலு.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 69
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய்.

பொருள்:
ஒரு தாய் தன் மகன் ஒரு உயர்ந்த மனிதன் என்று அறியும்போது, அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விட மிக அதிகமான மகிழ்ச்சியை அடைவாள்.  

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்





















Thursday, November 17, 2016

68. மாதவனின் எதிர்காலம்

"நான் பள்ளிக்கூடத்துல படிச்சப்ப நான்தான்  வகுப்பிலேயே முதல் மாணவனா இருந்தேன். ஆனா நம்ப பையன் ஒரு மக்கா இருக்கானே!" என்றான் சங்கரன்.

"ஏங்க, நம்ப பையன் எண்பது மார்க்குக்கு மேலே வாங்கறான். அவனைப் போய் மக்குங்கறீங்களே!" என்றாள் அவன் மனைவி சாந்தா.

"தொண்ணூற்றெட்டு மார்க்கு, நூறு மார்க்கெல்லாம் சாதாரணமாயிட்ட இந்தக்காலத்தில, எண்பது மார்க்குக்கெல்லாம் என்ன மதிப்பு இருக்கு?"

"டியூஷன் வச்சுப் பாக்கலாமா?"

டியூஷன் வைத்தார்கள். பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. டியூஷன் ஆசிரியரிடம் கேட்டபோது "பையன் கொஞ்சம் டல்தான் சார்!" என்றார் அவர். பள்ளி ஆசிரியர்களும் இதே கருத்தைத்தான் தெரிவித்தார்கள்.

'சரி. அவ்வளவுதான். அவன் விதிப்படி நடக்கட்டும்' என்று சங்கரன் விட்டு விட்டான்.

சங்கரன் பொறியியல் படிப்புப் படித்து விட்டு, தானே ஒரு தொழிற்சாலையை உருவாக்கி நடத்திக் கொண்டிருந்தான். தனக்குப் பிறகு தன் பையன் அதை நடத்த வேண்டும் என்ற விருப்பம் அவனுக்கு இருந்தது.

எனவே மாதவனின் பள்ளிப்படிப்பு முடிந்ததும் அவனைப் பொறியியல் படிப்பில் சேர்த்தான். மாதவன் வாங்கிய எண்பது சதவீத மதிப்பெண்களுக்கு அவனுக்கு சுமாரான ஒரு கல்லூரியில்தான் இடம் கிடைத்தது, அதுவும் நன்கொடை கொடுத்து!

பையன் எப்படியோ  பொறியியல் பட்டதாரி ஆகி,ஒரு நல்ல தொழில் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்து விட்டால், அங்கே ஓரளவுக்கு அனுபவம் பெற்ற பிறகு தன்னுடைய நிறுவனத்தை நிர்வகிக்கும் திறமை பெற்று விடுவான் என்பது சங்கரனின் நம்பிக்கை.

முதல் இரண்டு ஆண்டுகளில் மாதவன் சுமாரான மதிப்பெண்கள்தான் வாங்கி வந்தான். ஆனால் மூன்றாம் ஆண்டில் பொறியியல் பாடங்களைக் கற்கத் தொடங்கியபின் அவனுக்குப் படிப்பில் அதிக ஆர்வம் வந்து விட்டதாகத் தோன்றியது. குறிப்பாக பிராஜக்ட் ஒர்க், செமினார் போன்றவற்றில் அவனுக்கு ஈடுபாடு அதிகம் இருந்தது. தன் தந்தையின் தொழிற்சாலைக்கு நான்கைந்து முறை சென்று அதன் நடைமுறைகளை கவனித்து அறிந்து கொண்டான்.

மாதவன் இறுதி ஆண்டுக்கு வந்தபோது அவன் செய்ய வேண்டிய பிராஜக்ட் ஒர்க்குக்குத் தன் தந்தையின் தொழில் நிறுவனத்தையே எடுத்துக் கொள்ள நினைத்தான் மாதவன். இதைப்பற்றி அவன் தன் தந்தையிடம் பேசியபோது, "உன் பிராஜக்டுக்கு எடுத்துக் கொள்ளப் போகும் விஷயம் என்ன?" என்று கேட்டான் சங்கரன்.

"சில தொழில் நுட்ப மாறுதல்களைச் செய்து, செயல்பாடுகளை எளிமையாக்கி, உற்பத்தித் திறனை அதிகமாக்குவது பற்றித்தான்" என்றான் மாதவன்.

"நான் வெளிநாட்டுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி என் தொழிற்சாலையை உருவாக்கியிருக்கிறேன். இப்போது வெளிநாட்டு நிறுவனத்துடனான என்னுடைய ஒப்பந்தம் முடிந்து விட்டது. ஆனாலும் அதே தொழில் நுட்பத்தை நான் தொடர்ந்து பயன்படுத்தலாம். இதில் பெரிய மாறுதல்கள் எதையும் உன்னால் செய்ய முடியாது."

"நீங்களே சொன்னபடி, இது பழைய தொழில்  நுட்பம். அதனாலதான் வெளிநாட்டு நிறுவனம் இதே தொழில் நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்த உங்களை அனுமதித்திருக்கிறது. அவர்கள் வேறு தொழில் நுட்பத்துக்கு மாறியிருப்பார்கள்!"

"அதைப் பற்றி நமக்கென்ன? இந்தத் தொழில் நுட்பம் நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு என்னால் நிற்க முடிகிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்?"

"இதற்கு மேலும் செய்யலாம் அப்பா. எனக்குச் சில யோசனைகளை இருக்கின்றன. அவற்றைச் செயல் படுத்தினால், அதிக முதலீடு செய்யாமல் நம் தொழிற்சாலையை இன்னும் நவீனமாக்கலாம். இதனால் உற்பத்தித்திறன் அதிகரித்து, தயாரிப்புச் செலவு குறையும்."

"உன் பிராஜக்டுக்காக என்ன மாறுதல்களை வேண்டுமானாலும் உன் ரிப்போர்ட்டில் சிபாரிசு செய். ஆனால் அதையெல்லாம் நடைமுறைப் படுத்த முடியும் என்று எதிர்பார்க்காதே!" என்றான் சங்கரன்.

தன் பிராஜக்டுக்காக மாதவன் தன் சகமாணவர்களுடன் பல நாட்கள் தொழிற்சாலைக்கு வந்து, தொழில் நடைமுறைகளை கவனித்து ஆராய்ந்தான். தொழிற்சாலையில் பணிபுரிந்த உயர் அதிகாரிகளிடமும், தொழிலாளர்களிடமும் பல நுணுக்கங்களைக் கேட்டறிந்தான். ஆனால் சங்கரன் இதில் எதிலும் கலந்து கொள்ளவில்லை.

மாதவனின் பிராஜக்ட் தயாரானதும், அதைக் கல்லூரியில் சமர்ப்பித்தான். அப்போதும் சங்கரன் அதைப் படித்துப் பார்க்கவில்லை.

சில வாரங்களுக்குப் பிறகு, மாதவனின் பிராஜக்ட் பல்கலைக்கழக அளவில் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்ததும் சங்கரனுக்கு வியப்பு ஏற்பட்டது.

மாதவனிடம் பிராஜக்ட் ரிப்போர்ட் நகலை வாங்கிப் படித்துப் பார்த்தான். அதில் தெரிவிக்கப்பட்டிருந்த யோசனைகள் சங்கரனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அவை நடைமுறைக்கு ஏற்றதாகவும், லாபகரமானதாகவும்தான் தோன்றின.

மாதவனின் பிராஜக்ட் ரிப்போர்ட்டை ஒரு தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனத்திடம் கொடுத்து ஆராயச் சொன்னான். அவர்கள் அதற்குச் சில மாதங்கள் ஆகும் என்று சொன்னார்கள்.

இதற்கிடையில், மாதவனுக்கு காம்பஸ் இன்டர்வியூவில் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அவனுடைய படிப்பு முடிந்ததும், வெளியூரிலிருந்த அந்த நிறுவனத்துக்கு அவன் வேலைக்குச் சென்று விட்டான்.

ங்கரன் அணுகியிருந்த தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனம் அவன் தொழிற்சாலைக்குப் பொறியியல் வல்லுநர்களை அனுப்பி, மாதவனின் பிராஜக்ட் ரிப்போர்ட் பற்றி ஆய்வு செய்து தனது கருத்தைத் தெரிவிக்க ஆறு மாதங்கள் ஆகி விட்டன.

மாதவனின் பிராஜக்டை நிச்சயம் அமல் படுத்தலாம் என்று கருத்துத் தெரிவித்திருந்த அந்த நிறுவனம், அதை எப்படிச் செயல் படுத்தலாம் என்று சில ஆலோசனைகளையும் கூறியிருந்தது. சில லட்சங்களும், பல மாதங்களும் செலவழிந்திருந்தாலும், நம்பிக்கையுடன் செயல்பட, அந்த ரிப்போர்ட் சங்கரனுக்கு உதவியாக இருந்தது.

சங்கரன் ஒரு முடிவுக்கு வந்தான். மாதவனிடம் தொலைபேசியில் பேசினான். "டேய் மாதவா! ஒன்னோட பிராஜக்ட் பிரமாதமா இருக்குன்னு நம்ப கன்சல்டன்ட் சொல்லிட்டாங்க. அதை நான் உடனே செயல்படுத்தலாம்னு இருக்கேன்"

"ரொம்ப சந்தோஷம் அப்பா. எனக்கு முதலிலிருந்தே நம்பிக்கை இருந்தது."

"கரெக்ட். ஆனா ஒரு பெரிய மாறுதலைப் பண்றதுக்கு முன்னால நிபுணர்கள்கிட்ட ஆலோசனை கேக்கறது அவசியம் இல்லையா? சரி. இப்ப நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். நீ தயாரிச்ச பிராஜக்டை நீயே செயல் படுத்தணும்னு நினைக்கிறேன். நீ வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துடு."

"இல்லைப்பா. இங்கே கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. இப்பதான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். நீங்க முன்னால சொன்னபடி நான் ஒரு பெரிய கம்பெனில நாலைஞ்சு வருஷமாவது வேலை செஞ்சுட்டு அதுக்கப்பறம் நம்ப கம்பெனிக்கு வந்தா என்னோட அனுபவம் நமக்கு உதவியா  இருக்கும்.

"நான் அப்பப்ப லீவுல அங்கே வரும்போது, சும்மா ஃபேக்டரிக்கு வந்து எல்லாம் எப்படி இருக்குன்னு பாத்துட்டுப் போறேன். எப்ப எனக்கு ஓரளவுக்காவது அனுபவம் கெடைச்சிருக்குன்னு எனக்குத் தோணுதோ, அப்ப வந்து நம்ப கம்பெனியில சேந்துக்கறேன்!" என்றான் மாதவன்.

தொலைபேசியை வைத்து விட்டு சங்கரன் சற்று நேரம் யோசனையில் இருந்தான்.

"என்ன யோசிக்கிறீங்க?" என்றாள் மனைவி.

"நான் சொந்தமாத் தொழில் ஆரம்பிச்சு வெற்றிகரமா நடத்திக்கிட்டு வரதால என்னை ஒரு புத்திசாலின்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். ஆனா நம்ப புள்ள என்னை விட ரொம்ப புத்திசாலியா இருக்கான்!" என்றான் சங்கரன்.

"முன்னேயெல்லாம் அவனை மக்குன்னு சொல்லுவீ ங்களே?" என்று குத்திக் காட்டினாள் மனைவி.

"அவன் மக்கு இல்லை. நான்தான் மக்கு" என்றான் சங்கரன் பெருமிதத்துடன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

பொருள்:
தாம் பெற்ற பிள்ளைகள் தங்களை விட அறிவுள்ளவர்களாக இருப்பது இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இனிமை பயக்கக் கூடியது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்