About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 27 - தவம்

திருக்குறள் 
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 27 
தவம்

261. சுந்தரத்தின் விருப்பம்

"எப்படிய்யா இருக்கீங்க?" என்றான் வேலன் 

சுந்தரம் பலவீனமாகச் சிரித்தார். 

"எங்களுக்காகப் போராடினத்துக்காக உங்களை குண்டர் சட்டத்தில் உள்ள வச்சுட்டாங்களே! கடவுளுக்கே அடுக்குமா?"

"இருக்கட்டும். நீங்கல்லாம் கவனமா இருங்க. நான் ஒத்தன் கைதானது போதும்."

"அது எப்படிங்க? ரோடு போடறதுக்காக விவசாய நிலத்தை எடுத்துக்கறேன்னு சொன்னா சும்மா இருக்க முடியுமா?"

"முடியாது. அதனாலதான் போராடினோம். என்னை குண்டர் சட்டத்தில கைது செஞ்சுட்டாங்க. மத்தவங்க யாருக்கும் இது மாதிரி நடக்கக் கூடாது. அதனாலதான் கொஞ்சம் அடக்கி வாசிங்கன்னு சொல்றேன்."

"அப்ப, இதை அப்படியே விட்டுட முடியுமா?'

"அதான் கோர்ட்ல ஸ்டே வாங்கிட்டமே! அந்த ஆத்திரத்திலதான் என் மேல குண்டர் சட்டம் பாஞ்சிருக்கு. கொஞ்ச நாளைக்கு எதுவும் நடக்காது."

"அவங்க ஸ்டேயை வெகேட் பண்ண வச்சுட்டாங்கன்னா?"

"அதுக்கு ரெண்டு மூணு மாசம் ஆகும். அப்புறம் தேர்தல் வருது. அநேகமா இந்த ஆட்சி போயிடும். புது அரசுல நமக்கு நியாயம் கிடைக்குமான்னு பாப்போம். அதுக்குள்ளே நானும் விடுதலை ஆயிடலாம்."

"அப்ப நான் வரேன்யா?" என்று விடைபெற எத்தனித்த வேலன், அப்போதுதான் கவனித்தவனாக, "என்னய்யா இது? உடம்பில காயங்கள் இருக்கு. உங்களை அடிச்சாங்களா?" என்றான் அதிர்ச்சியுடன். 

சுந்தரம் பதில் சொல்லாமல் மீண்டும் சிரித்தார்,

சில மாதங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பினார் சுந்தரம். அவர் வீட்டுக்கு வந்த பிறகுதான் சிறையில் அவர் மீது பட்ட அடிகள் விளைவித்த காயங்களின் தீவிரம் வேலனுக்கும் மற்றவர்களுக்கும் புரிந்தது. 

"நல்லா இருந்த மனுஷரை இப்படி ஆக்கிட்டாங்களே!" என்று புலம்பினாள் சுந்தரத்தின் மனைவி. 

"ஐயா! மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்கலாம்யா!" என்றான் வேலன் .

"அதெல்லாம் வேண்டாம்" என்று மறுத்து விட்டார் சுந்தரம். 

சி மாதங்கள் கழித்து நடந்த தேர்தலில் வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தது. 

புதிய எம் எல் ஏ சுந்தரத்தைப் பார்க்க வந்தார்.

"ஐயா! விவசாய நிலங்களைக் கையகப்படுத்தற திட்டத்தைக் கைவிடறதா முதல்வர் அறிவிச்சுட்டாரு" என்றார் எம் எல் ஏ.

"ஆமாம். செய்தி பார்த்தேன். முயற்சி எடுத்த உங்களுக்கும், நல்ல முடிவை எடுத்த முதல்வருக்கும் நன்றி" என்றார் சுந்தரம்.

"உங்களுக்குச் சிறையிலே நடந்த கொடுமையைப் பத்திக் கேள்விப்பட்டேன். முதல்வர் கூட ரொம்ப வருத்தப்பட்டார். நீங்க ஒரு புகார் கொடுத்தீங்கன்னா ஜெயில் சூப்பிரண்டன்ட்டை உடனே சஸ்பெண்ட் பண்ணி அவர் மேல விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை கொடுக்கலாம்னு முதல்வர் சொல்லிட்டாரு. உங்க கிட்டேந்து ஒரு புகார் வாங்கிக்கிட்டுப் போகத்தான் வந்திருக்கேன்." 

"அதெல்லாம் வேண்டாம்."

"ஏங்க? உங்களுக்குக் கொடுமை செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டாமா?" 

"ஜெயில் சூப்பிரென்டென்ட் சஸ்பெண்ட ஆகி, அவர் மேல விசாரணை நடந்து அவருக்கு தண்டனை கிடைக்கறதில எனக்கென்ன சந்தோஷம் இருக்க முடியும்? அவரைக் கூப்பிட்டு எச்சரிக்கை பண்ணி இனிமே யார்கிட்டயும் இப்படி நடந்துக்கக் கூடாதுன்னு சொல்லிடுங்க. எல்லாச் சிறை அதிகாரிகள் கிட்டேயும் சொல்லிடுங்க. இனிமேலாவது கைதிகள் இது மாதிரிக் கொடுமைகளுக்கு ஆளாகாம இருக்கட்டும்."

எம் எல் ஏ க்கு சுந்தரத்தின் காலில் விழுந்து வணங்க வேண்டும் போல் இருந்தது. 

குறள் 261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

பொருள்:
தனக்கு நேரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதும்தான் தவம் எனப்படும்.

262. ஏகாதசி விரதம்

காலை மணி  எட்டுதான் ஆகியிருந்தது. அதற்குள் குமாருக்குப் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது. 

'காலையில் சீக்கிரம் எழுந்து அவசரமாகக் குளித்திருக்க வேண்டாம்! குளித்தவுடன் பழக்கத்தினால் வயிறு உணவு கேட்கிறது.'

"என்னங்க, கொஞ்சம் காப்பி குடிக்கிறீங்களா?" என்றாள் லதா சமையலறையிலிருந்து, உரத்த குரலில்.  

"காப்பி குடிக்கறதா இருந்தா காலையில எழுந்தவுடனேயே குடிச்சிருக்க மாட்டேனா? நானே விரதம் இருக்கறதுக்காகக் கஷ்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கேன். நீ எதுக்கு இப்படி ஞாபகப்படுத்தறே?" என்றான் குமார் எரிச்சலுடன்.

"உங்களை யாரு ஏகாதசி விரதம் இருக்கச் சொன்னது?" என்று லதா முணுமுணுத்தது அவன் காதில் விழுந்தது. 

ல்லாம் அந்த வாட்ஸ் ஆப் செய்தியால் வந்தது. ஏகாதசி விரதத்தின் மகிமைகளைப் பற்றி விளக்கிய அந்தச் செய்தி, ஒரு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒரு விரிவான ஆராய்ச்சிக்குப் பின் ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு உடல்நலப் பிரச்னைகள் வருவதில்லை என்றும் அவர்கள் நீண்ட நாள் வாழ்கிறாரகள் என்றும் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

அதைப் படித்ததுமே ஏகாதசி விரதம் இருந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் குமாரின் மனதில் எழுந்தது. இந்தச் செய்தி வந்தது வெள்ளிக்கிழமை. அடுத்த நாளான சனியன்றே ஏகாதசி. அன்று அவனுக்கு அலுவலக விடுமுறை. அதனால் அன்றே ஏகாதசி விரதம் இருக்கலாம் என்று தீர்மானித்து விட்டான். 

வழக்கமாக விடுமுறை நாளன்று காலை 8 மணிக்கு மேல் எழுந்திருப்பவன் அன்று காலை 6 மணிக்கே எழுந்து குளித்து விட்டான். லதா காப்பி போடும் மணம் வந்தபோதும் தன் காப்பி ஆசையை அடக்கிக் கொண்டான்.

"காப்பி சாப்பிட்டா தப்பு இல்லேங்க" என்று லதா சொன்னபோதும் மறுத்து விட்டான். 

இப்போது 8 மணிக்கு மறுபடியும் காப்பி வேண்டுமா என்று கேட்டு அவனுக்கு சபலம் ஏற்படுத்துகிறாள்!

9 மணிக்கு "கோவிலுக்குப் போயிட்டு வரேன்" என்று கிளம்பினான் குமார். 

தெருவில் நடந்து செல்லும்போது ஹோட்டல்கள், டீக்கடைகள், நடமாடும் சிற்றுண்டிச் சாலைகள் இவற்றிலிருந்து வந்த மணம் அவன் பசியை அதிகமாக்கியது.

கோவிலுக்குள் நுழைந்ததும் ஒரு எண்ணம் தோன்றியது. கோவிலில் ஏதாவது பிரசாதம் கிடைத்தால் அதை உண்ணலாம், அதனால் விரதத்துக்கு பங்கம் வராது என்று நினைத்தான். ஆனால் ஏகாதசியன்று பெருமாளுக்கே உணவு படைப்பதில்லையாம்! அதனால் கோவிலில் பிரசாதம் எதுவும் கிடைக்கவில்லை. 

கோவிலிலிருந்து திரும்பும்போது மிகவும் அலுப்பாக இருந்தது. சட்டென்று ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து விட்டான்.

சர்வரிடம் "ஒரு காப்பி" என்றான். "இட்லி, பொங்கல் எல்லாம் சூடா இருக்கு சார்!" என்றான் சர்வர். "காப்பி மட்டும் கொண்டு வா, போதும்" என்றான் குமார் எரிந்து விழாத குறையாக. 

'ஒரு காப்பி சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. வீட்டில் காப்பி சாப்பிட்டால் லதா கொஞ்சம் ஏளனமாக நினைப்பாள். அதனால் ஹோட்டலில் சாப்பிட்டது சரிதான்' என்று நினைத்துக் கொண்டான்.

தினோரு மணிக்கு அவனைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். லதா அவருக்கு மட்டும் காப்பி கொண்டு வந்து வைத்தாள்.

"நீங்க சாப்பிடலியா?" என்று நண்பர் கேட்டதும், "உங்களுக்கும் காப்பி கொடுக்கட்டுமா?" என்றாள் லதா. 

"சரி" என்று தலையாட்டினான் குமார். தன்னை அறியாமலேயே சரி என்று சொல்லி விட்டோமா என்று நினைத்தவன், 'ஏற்கெனவே ஹோட்டலில் ஒரு காப்பி சாப்பிட்டாகி விட்டது. இன்னொரு காப்பி சாப்பிட்டால் தவறில்லை' என்று சமாதானப்படுத்திக் கொண்டான். 

1 மணிக்கு, சமைத்த உணவுகளைச் சாப்பாட்டு மேஜையில் வைத்து விட்டு லதா சாப்பிட உட்கார்ந்தாள். குமாரைப் பார்த்து, "நீங்களும் சாப்பிடறீங்களா?" என்றாள்.

"உனக்கு மட்டும்தானே சமைச்சிருப்பே?" என்றான் குமார்.

"அப்படி கரெக்டா சமைக்க முடியுமா? நான் சமைச்ச சாப்பாடு ரெண்டு பேருக்குக் காணும். உங்களுக்கும் தட்டு எடுத்து வைக்கட்டுமா?"

"நான்தான் இன்னிக்கு விரதம்னு சொன்னேனே!" என்றான் குமார் எரிச்சலுடன்.

"எனக்குத் தெரிஞ்சு ஏகாதசி விரதம் இருக்கறவங்க நிறைய பேரு ஒருவேளை மட்டும் சாப்பிடுவாங்க. நீங்க கூட இப்ப சாப்பிட்டுட்டு ராத்திரி சாப்பிடாம இருக்கலாம்."

பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்த நிலையில், "சரி" என்றான் குமார் அவசரமாக. "முதல்ல ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுட்டு விரதம் இருக்கேன். இது பழகிடுச்சுன்னா, நாள் முழுக்க  விரதம் இருக்கறது சுலபமா இருக்கும்" என்றான்.

"ஒரு வேளைதானே சாப்பிடப் போறீங்க? கொஞ்சம் தாராளமாவே சாப்பிடுங்க. எல்லாம் நிறையவே செஞ்சிருக்கேன். எனக்கு இல்லாம போயிடுமோன்னு கவலைப்படாதீங்க" என்றாள் லதா.

தன் மீது எவ்வளவு அக்கறை இவளுக்கு என்று நினைத்தபடியே வயிறு முட்டச் சாப்பிட்டான் குமார்.

பிற்பகலில் காப்பி போடும்போது, "என்னங்க உங்களுக்கும் காப்பி கலக்கட்டுமா? ராத்திரி மட்டும்தானே விரதம் இருக்கப் போறீங்க? இப்ப காப்பி சாப்பிடலாம் இல்ல?" என்றாள் லதா.

குமார் எதுவும் சொல்லவில்லை.

சற்று நேரத்தில் லதா காப்பி கொண்டு வைத்தாள். "பிஸ்கட் ஏதாவது வேணுமா?" என்றாள்.

இவள் தன்னைக் கிண்டல் செய்கிறாளோ என்று நினைத்தபடி அவளை முறைத்த குமார், "வேண்டாம்" என்றான். 

மாலை லதா கடைக்குப் போய் விட்டாள். மத்தியானம் வயிறு நிறையச் சாப்பிட்டும் சீக்கிரமே ஜீரணம் ஆகி விட்டது போல் வயிறு பசிக்க ஆரம்பித்தது. 'பிஸ்கட் வேணுமா?' என்று மனைவி கேட்டது நினைவு வந்தது.

சமையலறை ஷெல்ஃபில் தேடினான். இரண்டு மூன்று வகை பிஸ்கட்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் இரண்டு எடுத்துக் கொண்டான். பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு அருகிலேயே கடையில் வாங்கிய ஒரு மிக்சர் பாக்கெட் மற்றும் ஒரு வேர்க்கடலை பாக்கெட் ஆகியவை இருந்தன. அவற்றையும் எடுத்துக் கொண்டான்.

டிவி பார்த்தபடியே பிஸ்கட், மிக்ஸர், வேர்க்கடலை எல்லாவற்றையும் சுவைத்தான்.

கடைக்குப் போன லதா ஆறு மணிக்குத் திரும்பி வந்தவுடன், "ராத்திரி உங்களுக்காக வாழைப்பழம் வாங்கிக்கிட்டு வந்தேன். வெறும் வயத்தோட படுக்க வேண்டாம். பழமும் பாலும் சாப்பிட்டா தப்பு இல்லை" என்றாள்.

உள்ளே சென்று கடையில் வாங்கியவற்றை வைத்து விட்டு வந்தவள் கையில் ஒரு பொட்டலத்துடன் வந்தாள். "போளி ஸ்டால்ல சூடா பஜ்ஜி போட்டுக்கிட்டிருந்தாங்க. சூடா இருக்கு. சாப்பிட்டுப் பாருங்க" என்று பாக்கெட்டை அவனிடம் கொடுத்தாள்.

இரவில்தான் விரதம். மணி ஆறுதான் ஆகிறது. 7 மணிக்குத்தான் இரவு வரும். 7 மணிக்கு மேல் எதுவும் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தபடி பஜ்ஜியை உண்டு முடித்தான் குமார். பஜ்ஜி சூடாகவும் சுவையாகவும் இருந்தது. 

"வாழைப்பழம் வாங்கிக்கிட்டு வந்தியே அதைக் கொடு. இப்பவே சாப்பிட்டுடறேன். ராத்திரி சாப்பிட வேண்டாம்" என்றான்.

மனைவி கொடுத்த நான்கு வாழைப்பழங்களைத் தின்றபின் வயிறு முழுமையாக நிறைந்திருந்தது.

ரவு 9 மணிக்கு "என்னங்க பால் கொடுக்கட்டுமா?" என்றாள் லதா. "சரி" என்றான் குமார் பலவீனமாக. சாயந்திரம் நிறைந்திருந்த வயிற்றில் இப்போது மீண்டும் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது.

"இல்லை, கொஞ்சம் உப்மா சாப்பிட்டுட்டு பால் குடிக்கிறீங்களா?"

"உப்மா செஞ்சிருக்கியா என்ன?"

"எனக்கு ரவா உப்மா பண்ணப் போறேன். வேணும்னா உங்களுக்கும் சேர்த்து செய்யறேன்" என்றாள் லதா.

உப்மாவை நினைத்ததும் நாவில் நீர் ஊறியது. "சரி" என்றான்.

சூடான உப்மாவை உண்டு விட்டுப் பால் குடித்தான்.

இரவு படுக்கப்போகும்போது, விரதம் இருக்க முயன்ற இன்று எப்போதும் சாப்பிடுவதை விட அதிகமாகச் சாப்பிட்டு விட்டதாகத் தோன்றியது. 

குறள் 262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.

பொருள்:  
ஒழுக்கமும், கட்டுப்பாடும் உள்ளவர்க்கே தவம் கூடும். தவத்துக்கே உரித்தான இந்த குணங்கள் இல்லாதவர் தவம் மேற்கொள்ள முயல்வது வீண்.

263. வேண்டாம் தவ வாழ்க்கை!

என்னங்க? அரிசி இன்னும் ரெண்டு நாளைக்குத்தான் வரும்" என்றாள் பொன்னம்மாள். 

"சரி" என்றான் அழகேசன். "நாளைக்கு வியாபாரத்துக்குப் போயிட்டு வரேன். பணம் வசூலிச்சுட்டு அரிசி, மத்த சாமான்கள் எல்லாம் வாங்கிக்கிட்டு வரேன்."

"இன்னிக்கே போயிருக்கலாமே!"

"இன்னிக்குக் காலையிலதானே ராமலிங்க சாமி போனாரு? அப்புறம் உடனே கிளம்ப முடியல. ரெண்டு மூணு நாள்ள வேற யாராவது வருவாங்க. அதுக்குள்ளே அரிசி மத்த சாமான்களை வாங்கி வச்சுக்கணும்."

அழகேசன் எதிர்பார்த்தது போல் நான்கு நாட்களில் இன்னொரு துறவி அவனைத் தேடி வந்தார்.

"இந்த ஊருக்குள்ள நுழைஞ்சதுமே, எல்லாரும் உன் வீட்டைத்தான் காட்டறாங்க. துறவிகளை வரவேற்று உபசரிக்கிற வேலையைப் பல காலமாகச் செஞ்சுக்கிட்டிருக்கியாமே!" என்றார் துறவி.

"ஆமாம் சாமி. ஏதோ என்னால முடிஞ்சது!" என்றான் அழகேசன்.

"பெரிய சேவைப்பா இது. உன்னைப் போன்றவர்கள் இருக்கறதாலதான் எங்களைப் போன்றவர்கள் தவம், துறவு இதிலெல்லாம் ஈடுபட முடிகிறது. சரி. உன்னைப் பத்திச் சொல்லு."

"என்னைப் பத்திச் சொல்றதுக்கு என்னங்க இருக்கு?  நான் ரொம்ப நாளா துணி வியாபாரம் பண்ணிக்கிட்டிருக்கேன். காஞ்சிபுரத்திலேந்து மொத்தமா துணி வாங்கிக்கிட்டு வந்து சுத்தி இருக்கிற கிராமத்துக்குக்கெல்லாம் போய் வித்துட்டு வருவேன். எல்லாரையும் நம்பிக் கடன் கொடுத்து, தவணை முறையில பணம் வாங்கிக்கறதால எங்கிட்ட நிறைய பேரு வாங்கறாங்க. ஓரளவுக்கு நல்ல வருமானம் வருது."

"நல்லது. ஆனால், துறவிகளுக்கும், தவம் செய்பவர்களுக்கும் உதவி செய்யணுங்கற எண்ணம் உனக்கு எப்படி வந்தது?"

"இந்த ஊருக்கு வெளியில பெரிய சாலை இருக்கு. யாத்திரை போறவங்க நிறைய பேர் அதில போவாங்க. நீங்களும் அப்படித்தான் வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். துறவிகள் சில பேர் பல நாள் சாப்பிடாம சோர்வோட நடந்து போறதைப் பாத்து அவங்களை என் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்து அவங்களுக்கு உணவு கொடுத்து ஓய்வு எடுத்துக்கிட்டுப் போகச் சொன்னேன். அதுக்கப்புறம் இந்தப் பக்கமாப் போற துறவிங்க நிறைய பேரு அவங்களாவே என் வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க. கடவுள் புண்ணியத்தில என்னால முடிஞ்ச சேவையை அவங்களுக்கு செஞ்சுக்கிட்டிருக்கேன்."

"துறவிகளைப் பாத்துக்கிட்டு வியாபாரத்தையும் எப்படிப்பா கவனிக்கற?"

"மாசத்துல இருபது நாள் வியாபாரம், பத்து நாள் வீட்டில இருந்துக்கிட்டு துறவிகளுக்கு சேவைன்னு வச்சுக்கிட்டிருக்கேன். நான் இல்லாதப்ப என் மனைவி துறவிகளை கவனிச்சுப்பா."

மாலையில் துறவி அவனிடம் விடை பெற்றுக் கிளம்பினார். கிளம்பும்போது, "ஆமாம், கேக்க மறந்துட்டேன். உன் குழந்தைங்க என்ன செய்யறாங்க?" என்றார். 

"எனக்கு ரெண்டு பிள்ளைங்க. ரெண்டு பேருக்கும் காஞ்சிபுரத்திலேயே கடை வச்சுக் கொடுத்துக் கல்யாணமும் பண்ணி வச்சுட்டேன்."

"அப்ப உங்க இல்லறக் கடமைகள் முடிஞ்சு போச்சு. நீயும் உன் மனைவியும் இல்லறத்தை விட்டுட்டுத் துறவறம் மேற்கொள்ளலாமே!"

"அதுக்கு என்ன செய்யணும் சாமி? காட்டில போய்த் தவம் செய்யணுமா?"

"தவம்னா காட்டுக்குப் போகணும்னு இல்ல. உணவு, உடை மற்ற சௌகரியங்களைக் குறைச்சுக்கிட்டு, திருத்தலங்களுக்குப் போறது, ஏதாவது ஆசிரமத்தில் சேர்ந்து தவ வாழ்க்கை வாழப் பழகிக்கறது இது மாதிரி செயல்கள்ள ஈடுபடலாம்."

"வேண்டாம் சாமி. உங்களை மாதிரி தவம் பண்றவங்களுக்கு சேவை செய்யறதே எங்களுக்குத் திருப்தியா இருக்கு. எங்களுக்கு இதுவே போதும்" என்றான் அழகேசன். 

"நீ சொல்றதும் சரிதான். உன்னை மாதிரி இருக்கறவங்க இல்லறத்தை விட்டுட்டுத் தவம் பண்ணப் போயிட்டா, என்னை மாதிரித் துறவிகளுக்கு உதவி செய்ய யாரும் இருக்க மாட்டாங்க!" என்றார் துறவி சிரித்தபடியே.

துறவி உண்மையாகச் சொல்கிறாரா இல்லை விளையாட்டாகப் பேசுகிறாரா என்று அழகேசனுக்குப் புரியவில்லை.  

குறள் 263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

பொருள்:  
துறவிகளுக்கு உணவு வழங்குதல் போன்ற சேவைகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே சிலர் தவம் செய்ய நினைக்காமல் இல்லறத்திலேயே இருக்கிறார்களோ?

264. பிரச்னைகள் திருமா?
''அந்தக் காலத்தில முனிவர்கள் தவம் செஞ்சு, தங்களோட தவ வலிமையினால பல விஷயங்களைச் சாதிப்பாங்களாமே, உண்மையா சுவாமி?'' என்று கேட்டார் குழந்தைவேலு.  

''புராணங்கள்ள அப்படித்தான் சொல்லியிருக்கு. எதுக்குக் கேக்கற?'' என்றார் சுவாமிஜி.

''இந்தக் காலத்திலேயும் அப்படியெல்லாம் தவம் செஞ்சு தவ வலிமை பெற முடியுமான்னு யோசிச்சுப் பாத்தேன்.''

''முடியும். இப்ப அதெல்லாம் இன்னும் சுலபம் கூட!''

''சுலபமா? ஆச்சரியமா இருக்கே!'

''இப்ப தவம் செய்யக் காட்டுக்குப் போக வேண்டாம். சுயக் கட்டுப்பாடோட, எளிமையா வாழ்ந்துக்கிட்டு மத்தவங்களுக்குத் தன்னால முடிஞ்ச உதவியை செஞ்சுக்கிட்டு வாழ்ந்தா, அதுவே தவம்தான்!'' என்றார் சுவாமிஜி.

''அப்படி வாழறவங்க யாராவது இருக்காங்களா?'' என்றார் குழந்தைவேலு.

'நீ அப்படி வாழறவன்தான்! ஆனா நீ வாழறது ஓரு தவ வாழ்க்கைன்னு உனக்குத் தெரியாம இருக்கறது உன்னோட அடக்கம். இந்த அடக்கம் உன் தவ வலிமையை இன்னும் அதிகமாக்கும்! உன் தவ வலிமை உனக்கு எப்படியெல்லாம் உதவும்னு உனக்குத் தெரியாது!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சுவாமிஜி, ''நிச்சயம் இருப்பாங்க'' என்று மட்டும் சொன்னார்.

''சுவாமிஜி என்ன சொன்னார்?'' என்றாள் குழந்தைவேலுவின் மனைவி அலமேலு.

''சுவாமிஜி கிட்ட என் பிரச்னைகளைச் சொல்லல. ஏதோ ஒரு தயக்கம், தப்பா நினைச்சுப்பாரோன்னு.''

''தப்பா நினைச்சுக்கறதுக்கு என்ன இருக்கு? நீங்க எப்பவோ உங்க ஆஃபீஸ் நண்பர் நடராஜனுக்கு ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டீங்க. அவரு பணம் கட்டாம இறந்து போயிட்டாரு. இப்ப அவர் வாங்கின கடன் பாக்கியை வட்டியோட சேத்து ஒரு லட்ச ரூபா கட்டச் சொல்லி உங்களுக்கு நோட்டீஸ் வந்திருக்கு. இது அநியாயம் இல்லையா? இதை உங்க குருகிட்ட முறையிடறதில உங்களுக்கு என்ன தயக்கம்? இந்த லட்சணத்தில உங்க நண்பர் கணேசன் பொண்ணு கல்யாணத்துக்கு வேற ஒரு லட்சம் ரூபா கடன் கொடுக்கறதா சொல்லியிருக்கீங்க!''

''நடராஜன் எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கான். அவனுக்கு உதவி தேவைப்படறச்சே நான் செய்யத்தான் வேணும். அதனாலதான் அவனோட கடனுக்கு ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டேன். அவன் உயிரோட இருந்திருந்தா கடனை அடைச்சிருப்பான். கணேசனுக்கு க் கொடுக்கறதா சொன்ன பணத்தைத்தான் சீட்டுப் பணத்திலேந்து கொடுக்கறதா சொல்லியிருக்கேனே! நாம ரெண்டு தவணைதான் கட்டியிருக்கோம். நாம கட்டின பணத்தை கணேசன் நமக்குக் கொடுத்துடுவான். இனிமே வரப்போற மாசத் தவணைகளை அவனே கட்டிடுவான். அதில ஒண்ணும் பிரச்னை இல்ல.''

''ஆனா சீட்டு உங்களுக்கு விழணுமே? அதுதானே பிரச்னை! அப்படி விழுந்தா கூட அதை வச்சுக் கடனைக் கட்டுவீங்களா, இல்ல, உங்க நண்பருக்குக் கொடுப்பீங்களா?''

''குருவைப் பாத்துட்டு வந்திருக்கேன்ல? ஏதாவது வழி பிறக்கும்.''

''அதான் குருகிட்ட உங்க பிரச்னையைச் சொல்லாம வந்துட்டீங்களே, அவரு எப்படி உதவுவாரு?'' என்று முணுமுணுத்தாள் அலமேலு.

ரண்டு தினங்களுக்குப் பிறகு குழந்தைவேலு வெளியே சென்று விட்டு வீடு திரும்பியதும், ''என்னங்க, சிட்ஃபண்ட்லேந்து ஃபோன் பண்ணினாங்க. இந்த மாசம் குலுக்கல்ல சீட்டு உங்களுக்கு விழுந்திருக்காம்'' என்றாள் அலமேலு உற்சாகத்துடன்.

''ஆச்சரியமா இருக்கே! சீட்டு எனக்கு விழணும்னு ஆசைப்பட்டேன். விழுந்துடுச்சே! .நல்லவேளை, கணேசனுக்கு உதவ முடிஞ்சுது.''

''இந்தாங்க! ஒரு லெட்டர் வந்திருக்கு'' என்று ஒரு கடிதத்தைக் கொடுத்தாள் அலமேலு.

ஷ்யூரிட்டி போட்டதால் குழந்தைவேலு பணம் கட்ட வேண்டும் என்று முன்பு கேட்டிருந்த நிதி நிறுவனத்திலிருந்து வந்திருந்த அந்தக் கடிதம் இறந்து போன நடராஜனின் மகன் தன் தந்தையின் கடன் பற்றி அறிந்து அதை முழுவதுமாகக் கட்டி விட்டதால், குழந்தைவேலு கடன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. 

''பாத்தியா அலமேலு? சுவாமிஜியைப் போய் சும்மா பாத்துட்டுத்தான் வந்தேன். அவர் கிட்ட என் பிரச்னைகளைப் பத்தி சொல்லக் கூட இல்ல. சுவாமிஜி என் பிரச்னைகளைத் தீர்த்து வச்சுட்டாரு பாரு!'' என்றார் குழந்தைவேலு உற்சாகத்துடன்.

குறள் 264
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

பொருள்:  
தீமை செய்யும் பகைவரை வீழ்த்துவதும், நன்மை செய்யும் நண்பர்களை உயர்த்துவதும் நினைத்த மாத்திரத்தில் தவ வலிமையால் நிறைவேறும்.

265. குருவும் சீடனும்
''குருவே! ஐந்தாண்டுகளாகத் தங்களிடம் வேதங்கள், இதிகாசங்கள் மற்ற பல விஷயங்களைக் கற்று வருகிறேன். சில சந்தேகங்களை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்''  

''கேள், அருட்செல்வம்!'' என்றார் குரு.

''தவம் ஏன் செய்ய வேண்டும்? யார் செய்ய வேண்டும்?"

''அதற்கு முன்னால் தவம் என்றால் என்னவென்று சொல்.''

அருட்செல்வம் கொஞ்சம் யோசித்து விட்டு, ''புலன்களை அடக்கி மனதை ஒருமுகப்படுத்தி இறைவனைப் பிரார்த்திப்பது'' என்றான். 

''என்னவென்று பிரார்த்திக்க வேண்டும்?''

''எதற்காகத் தவம் இருக்கிறோமோ அது நிறைவேற வேண்டுமென்று.''

"உன் கேள்விக்கு நீயே பதில் சொல்லி விட்டாயே! யாரும் எதற்காகவும் தவம் செய்யலாம்!"

''அப்படியானால் சுயநல நோக்கத்துக்காகத் தவம் செய்யலாமா?''

''அசுரர்கள் தீய நோக்கங்களுக்காகத் தவம் செய்திருக்கிறார்களே!''

''தவம் என்ற உயர்ந்த செயல் தீய நோக்கங்களுக்கு உதவும் என்றால், அது எப்படி ஒரு உயர்ந்த செயலாக இருக்க முடியும்?''

''தவம் என்பது ஒரு பயிற்சி. தவம் செய்பவர்கள் தாங்கள் விரும்புவதைப் பெற அது வழி வகுக்கிறது. தவம் செய்பவர்கள் தவறான நோக்கத்துக்காக அதைப் பயன்படுத்தினால் அது அவர்கள் தவறு. நெருப்பு  ஒரு சக்தி. அதை ஒருவன் எதையாவது கொளுத்தப் பயன்படுத்தினால், அதற்கு நெருப்பு என்ன செய்யும்?''

''அப்படியானால், தவம் என்பது தெய்வீகத் தன்மை வாய்ந்தது இல்லையா?''

குரு சிரித்து விட்டு, ''இதற்கு பதில் சொல்வதற்கு முன்னால் தெய்வீகம் என்றால் என்ன என்று நான் விளக்க வேண்டும்! இப்படிச் சொல்லலாம். தவம் நமக்கு அசாதாரண சக்தியைக் கொடுக்கிறது. அசாதாராணமான எதையும் தெய்வீகம் என்று நினைப்பது நம் இயல்பு!'' என்றார்.

அருட்செல்வம் சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு, ''குருவே! தவம் என்பது ஒரு பயிற்சி என்று சொன்னீர்கள். அது எப்படிச் செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா?'' என்றான்.

''தவம் என்பது மனத்தை ஒருமுகப்படுத்துவது என்று சொன்னேன். நம் மனத்தை ஒருமுகப்படுத்தி நாம் ஒரு நோக்கத்தை விரும்பும்போது அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான சூழ்நிலைகள் வலுப்படுகின்றன.''

''அப்படியானால் தவம் செய்யும்போது உண்ணாமலும் வேறு வகைகளிலும் உடலை வருத்திக் கொள்கிறோமே, அது ஏன்? மனத்தை ஒருமுகப்படுத்தினால் மட்டும் போதாதா? உடலை வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?''

''நாம் ஒன்றை வேண்டும்போது அதற்கு ஒரு விலை கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும். உடலை வருத்திக் கொள்வது போன்ற சிறு துன்பங்கள் நாம் விரும்புவதைப் பெற நாம் கொடுக்க முயலும் விலைதான்.''

''நன்றி குருவே! தவம் என்பது சொர்க்கத்துக்குப் போக நினைப்பவர்கள் மட்டுமே செய்ய வேண்டிய செயல் என்று இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன்.''

''சரி. இப்போது எதற்காகாகவாவது தவம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயா?'' 

''நான் துறவியாயிற்றே குரு? நான் எதற்கும் ஆசைப்படக் கூடாதே?''

''உனக்காக வேண்டாம். வேறு யாருக்காவது ஏதாவது வேண்டி நீ தவம் செய்யலாமே?''

சற்று நேர மௌனத்துக்குப் பின், ''குருவே! நான் துறவறம் பூண்ட பிறகு என் பெற்றோருக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடியவில்லை. எனவே அவர்களுக்கு நிறையச் செல்வம் கிடைக்க வேண்டும் என்று வேண்டித் தவம் செய்யப் போகிறேன். செய்யலாம் அல்லவா?'' என்றான் அருட்செல்வம்.

''நிச்சயம் செய்யலாம். அவசியம் செய்யவும் வேண்டும். துறவறம் பூண்டாலும் பெற்றோர் உறவு விட்டுப் போகாது. விரைவிலேயே உன் பெற்றோரிடமிருந்து உனக்கு நல்ல செய்தி வரும். உன் தவத்துக்குப் பலன் ஏற்பட்டிருப்பதை அப்போது நீ புரிந்து கொள்வாய்!'' என்றார் குரு.

''நன்றி குருவே!'' என்றான் அருட்செல்வம்.

''நான்தான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும்'' என்றார் குரு சிரித்தபடியே.

''என்ன சொல்கிறீர்கள் குருவே?''

''உன்னிடம் பேசிய பிறகுதான் எனக்கும் ஒரு கடமை இருக்கிறது என்பது எனக்குப் புரிந்தது. இப்போது நம் நாட்டில் கடும் வறட்சி நிலவுகிறது. நாட்டில் மழை பெய்து சுபீட்சம் நிலவ வேண்டும் என்று வேண்டி நான் தவம் செய்யப் போகிறேன்'' என்றார் குரு.

குறள் 265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

பொருள்:  
தவம் செய்வதால் விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியும் என்பதால், இவ்வுலகிலேயே தவம் செய்ய வேண்டும்.

266. ஓய்வுக்குப் பின்...
''ரிடயர் ஆயாச்சு. இனிமே என்ன செய்யப்  போறீங்க?'' என்றாள் விமலா.

''என்ன செய்யறது? இத்தனை வருஷமா ஒடியாடி வேலை செஞ்சாச்சு. வீட்டில உக்காந்துக்கிட்டிருக்கறது கஷ்டமாத்தான் இருக்கும். பாக்கலாம்'' என்றார் பரமசிவம். 

''நம்ம ஏரியால 'சேவை இன்பம்'னு ஒரு சமூக சேவை அமைப்பு இருக்கில்ல?''

"ஆமாம். நீ கூட அங்கே போய் ஏதோ உதவி செஞ்சுக்கிட்டிருக்கியே?''

''ஆமாம். எனக்குப் படிப்பு அதிகம் இல்ல. நான் ஏதோ என்னால முடிஞ்சதை செஞ்சுக்கிட்டிருக்கேன். உங்களை மாதிரி படிச்சவங்களால இன்னும் நல்லபடியா உதவ முடியும்.''

''சரியாப் போச்சு! ரிடயர் ஆனப்பறம் இன்னொரு வேலையா? அதுவும் சம்பளமில்லாம! நான் பணம் வர மாதிரி ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்.''

"இனிமே நீங்க எதுக்குப் பணம் சம்பாதிக்கணும்? நம்மகிட்ட இருக்கற பணம் போதாதா? மத்தவங்களுக்கு உதவி செய்யற மாதிரி ஏதாவது செய்யலாமே!''

''நீ செய்!'' என்றார் பரமசிவம் சுருக்கமாக.

'ய்வு பெற்றவர்கள் வீட்டில் இருந்தபடியே சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம்' என்ற விளம்பரத்தைப் பார்த்து விட்டு, அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்துக்குப் போன பரமசிவம், அது ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் விளம்பரம் என்று அறிந்து சற்று ஏமாற்றம் அடைந்தாலும், அவர்கள் பேச்சால் ஈர்க்கப்பட்டு இன்ஷ்யூரன்ஸ் ஏஜன்டாகத் தன்னைப் பதிவு செய்து கொண்டார்.

''உங்களுக்கு எதுக்குங்க இது? உங்களால இது முடியுமா? பொழுதுபோக்கா ஏதாவது செஞ்சாலும் பரவாயில்ல!" என்றாள் விமலா.

''நம்ப சொந்தக்காரங்க தெரிஞ்சவங்க கிட்ட கேட்டாலே போதும். கொஞ்சம் பேர் பாலிசி எடுத்துக்கிட்டாக் கூட நல்ல வருமானம் வரும்!'' என்றார் பரமசிவம்.

''அதான் எதுக்குன்னு கேக்கறேன்.''

''நீ 'சேவை இன்ப'த்துக்குப் போறியே, அது எதுக்கு?''

''மத்தவங்களுக்கு உதவி செய்யறதில எனக்கு திருப்தி கிடைக்குது.''

''பணம் சம்பாதிக்கறதில எனக்குத் திருப்தி!'' என்றார் பரமசிவம்.

ரமசிவம் இன்ஷ்யூரன்ஸில் இறங்கி ஆறு மாதம் ஆகி விட்டது. அவர் எதிர்பார்த்தபடி அவருடைய உறவினர்களும் நண்பர்களும் அவர் மூலம் இன்ஷ்யூரன்ஷ் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. தேவையில்லாமல் இதில் இறங்கி விட்டோமோ என்று அவர் நினைக்க ஆரம்பித்தார்.

''உங்க கஸின் வீட்டுக்குப் போகப் போறதா சொன்னீங்களே!'' என்றாள் விமலா.

''போகல. அவன் எங்கேயோ வெளியில போறானாம்'' என்ற பரமசிவம், சற்றுத் தயங்கி விட்டு, ''சும்மாதான் அவனைப் பாத்துட்டு வரலாம்னு நெனச்சேன். நான் இன்ஷ்யூரன்ஸ் எடுத்துக்கச் சொல்வேன்னு அவன் பயந்துட்டான் போலருக்கு! அதனாலதான் என்னைத் தவிர்க்கிறான்'' என்றார் சற்று வருத்தத்துடன். 

சற்று மௌனமாக இருந்த விமலா, ''நீங்க வருத்தப்படுவீங்கன்னு நான் உங்ககிட்ட சொல்லல. என் சொந்தக்காரங்க சில பேரு கூட எங்கிட்ட, 'உங்களுக்கு ஏதாவது பணக் கஷ்டமா என்ன? நல்லா சம்பாதிச்சு ரிடயர் ஆனப்பறம் உன் புருஷன் எதுக்கு  பணம் சம்பாதிக்கறதில குறியா இருக்காரு?'ன்னு கேட்டாங்க'' என்றவள், 'யார் அப்படிச் சொன்னது?' என்று பரமசிவம் கோபமாகக் கேட்பாரோ என்று பார்த்தாள். 

ஆனால் பரமசிவம் எதுவும் சொல்லவில்லை.

விமலாவின் கைபேசி அடித்தது. எடுத்துப் பேசினாள். 

பேசி  முடித்ததும் பரமசிவத்திடம், ''என்னங்க, சேவை இன்பத்தில என்னைக் கூப்பிடறாங்க. போயிட்டு வந்துடறேன்" என்றாள்.

பரமசிவம் சிரித்தபடி, ''உன்னை ஃபோன் பண்ணிக் கூப்பிடறாங்க. எனக்கு ஃபோன் பண்ணி வர வேண்டாம்னு சொல்றாங்க!'' என்றார்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று விமலா யோசித்துக் கொண்டிருந்தபோது பரமசிவம், ''நானும் உன்னோட வரேன்'' என்றார்.

குறள் 266
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

பொருள்:  
தவம் செய்பவரே தங்கள் கடமையைச் செய்பவர். மற்றவர்கள் ஆசை வலையில் அகப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவரே ஆவார்.

267. அறிக்கையை மாற்று!

"ஏம்ப்பா உனக்குச் சின்ன வயசு. வேலையில நல்லா முன்னுக்கு வர வேண்டியவன். உனக்கு ஏன் இந்தப் பிடிவாதம்?" என்றார் கிருஷ்ணசாமி.

"இது பிடிவாதம் இல்லை சார். விதிகளைப்  பின்பற்றுவது" என்றான் சங்கர்.

"அரசாங்கத்தில மேலதிகாரிகள் சொல்றதுதான் விதி. அவங்க சொன்னதைக் கேக்கலேன்னா அதுதான் விதி மீறல். அதுக்கு தண்டனை கிடைக்கும்!"

சங்கர் இதற்கு பதில் சொல்வதற்குள் அங்கு வந்த பியூன், சங்கரிடம், "சார் உங்களை ஏ.டி.கூப்பிடறாரு" என்றான்.

அசிஸ்டன்ட் டைரக்டர் அறைக்கு சங்கர் சென்றதும், அவனை அமரச் சொன்ன அசிஸ்டன்ட் டைரக்டர் குருமூர்த்தி, "நீங்க இன்ஸ்பெக்‌ஷன் போயிட்டு வந்துட்டு தொழிற்சாலையை மூடணும்னு ரிப்போர்ட் கொடுத்திருக்கீங்களே, அரவிந்த் இண்டஸ்ட்ரீஸ், அவங்களுக்கு மேலிடத்தில நிறைய செல்வாக்கு உண்டு. டைரக்டர் என்னை ஃபோன்ல கூப்பிட்டு சத்தம் போடறாரு. அவருக்கு மேலேயிருந்து அழுத்தம், புரியும்னு நினைக்கிறேன்" என்றார்.

சங்கர் மௌனமாக இருந்தான்.

"சுற்றுச்சூழல் கட்டுப்பாடு நிபந்தனைகளை அவங்க நிறைவேத்தலேங்கற உங்க அறிக்கையை, அம்பது சதவீதம் நிறைவேத்திட்டாங்கன்னு மாத்தி எழுதிக் கொடுங்க. மீதியை இன்னும் ஆறு மாசத்துல நிறைவேத்திடுவோம்னு சொல்லி கம்பெனிகிட்ட லெட்டர் வாங்கிக்கிட்டு தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்த நான் மேலேந்து அனுமதி வாங்கிடறேன். உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது" என்றார் குருமூர்த்தி.

"அஞ்சு சதவீதம் கூட நிறைவேத்தலங்கறதுதானே சார் உண்மை? அதைத்தானே நான் அறிக்கையில எழுதியிருக்கேன்? பொய் அறிக்கை கொடுக்கச் சொல்றிங்களா?"

"கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கங்கன்னு சொல்றேன். இல்லாட்டா உங்களுக்குத்தான் நஷ்டம்" என்றார் குருமூர்த்தி. 

தாங்கள் பெரும்பாலான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருந்தும், 50,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் தன் ரிப்போர்ட்டில் அதைச் சரியாக எழுதுவேனென்றும், இல்லாவிட்டால் எதையுமே செய்யவில்லை என்று எழுதி விடுவேனென்றும் இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்தபோது சங்கர் மிரட்டியதாக அரவிந்த் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டான். 

வேறொரு அதிகாரி மீண்டும் இன்ஸ்பெக்‌ஷனுக்குச் சென்று வந்து ஐம்பது சதவீதப் பணிகள் பூர்த்தி அடைந்து விட்டதாக அறிக்கை கொடுக்க, அரவிந்த் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது.

சங்கர் மீது விசாரணை நடத்தப்பட்டு அவன் லஞ்சம் கேட்டதற்கு ஆதாரம் இல்லையென்றாலும், அவன் தவறான அறிக்கை கொடுத்ததற்காக அவனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவன் மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டான். சங்கருக்கு வேறு பணி ஒதுக்கப்பட வேண்டும் என்ற விசாரணை அதிகாரியின் முடிவை ஏற்று அவனை அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு மாற்றினார்கள் .

ங்கர் மீண்டும் வேலையில் சேர்ந்த பிறகு அவன் சீட்டுக்கு கிருஷ்ணசாமி வந்தார்.

"வருத்தமா இருக்கு சங்கர். அதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். இங்கே மேலதிகாரிகள் சொல்றதுதான் விதின்னு. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கிட்டிருக்கலாம்" என்றார் கிருஷ்ணசாமி..

சங்கர் பேசாமல் சிரித்தான்.

அவனை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்த கிருஷ்ணசாமி, "ஆனா, நீ இப்படித்தான் இருப்பேன்னு நினைக்கறேன். இங்க மோசமானவங்க கொஞ்சம் பேரு. பெரும்பாலானவங்க நமக்கேன் வம்புன்னு பணிஞ்சு போயிடுவாங்க - என்னை மாதிரி! உன்னை மாதிரி நேர்மையா இருந்து எல்லாத்தையும் எதிர் கொள்றவங்க ஒண்ணு ரெண்டு பேருதான்.

"நேர்மையா இருக்கறது ஒரு தவம். அந்தக் காலத்தில் யாராவது தவம் பண்ணினா, ஒரு பக்கம் அசுரர்கள் வந்து அவங்க தவத்தைக் கலைப்பாங்க.     
இன்னொரு பக்கம் இந்திரன் மாதிரி தேவர்கள் ஊர்வசி, மேனகை மாதிரி யாரையாவது அனுப்பி வலை விரிச்சுத் தவத்தைக் கலைப்பாங்க.

"அதுக்கு வசப்படலேன்னா, அவங்க சக்தியைப் பயன்படுத்தி புயல், மழை இதையெல்லாம் உருவாக்கித் தவம் பண்றவங்களைக் கஷ்டப்படுத்துவாங்க. இந்தக் காலத்தில நேர்மையா இருக்கறதை ஒரு தவமா நினைச்சுச் செயல்படறவங்களுக்கு இது மாதிரிதான் நடக்குது. 

"பண ஆசை காட்டறது, பயமுறுத்தறது, காயப்படுத்தறது, அழிக்க முயற்சி செய்யறது எல்லாம் நடக்கும். இதையெல்லாம் எதிர் கொள்ற தைரியம் உனக்கு இருக்குன்னு நினைக்கறேன். ஆனா இப்ப உன்னை அக்கவுண்ட்ஸ்ல போட்டுட்டாங்களே!"

"இங்கேயும் விதிமீ றல்கள் நடந்திருக்கு சார். சில பணப்பட்டுவாடாக்கள் முறைகேடா நடந்திருக்கு. இதையெல்லாம் தோண்டி எடுத்து ஒரு ரிப்போர்ட் எழுதலாம்னு இருக்கேன்" என்றான் சங்கர்.

"அப்ப சீக்கிரமே உன் மேல நடக்கப் போற தாக்குதல்களைச் சமாளிக்க நீ தயாரா இருக்கணும்!" என்றார் கிருஷ்ணசாமி.  

குறள் 267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

பொருள்: 
பொன்னைச் சுடச் சுட, அது அதிக ஒளியுடன் விளங்குவது போல், தவம் செய்பவரைத் துன்பம் வருத்த வருத்த அவருடைய உள்ளத்தின் ஒளி அதிகமாகும்.

268. சேதுவின் உண்ணாவிரதம்

சேது உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஐந்து நாட்கள் ஆகி விட்டன.

அமைச்சர் ஒருவர் சேதுவைப் பார்க்க வந்தார். அவனிடம் சற்று நேரம் பேசி விட்டு, கிளம்பும்போது, பத்திரிகையாளர்களிடம், ''யாருக்கும் பாதிப்பில்லாமல் இந்த நெடுஞ்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் உறுதியளித்திருப்பதை சேது அவர்களிடம் சொல்லி, அவர் தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற முதல்வரின் வேண்டுகோளையும் அவரிடம் தெரிவித்திருக்கிறேன். அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வார் என்று நம்புகிறேன்'' என்று சொல்லி விட்டுப் போனார்.

ஆனால் சேது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவில்லை.

அமைச்சர் சொன்னதைப் பற்றி நிருபர்கள் சேதுவிடம் கேட்டபோது, ''இந்தத் திட்டம் கைவிடப்படும் வரை உண்ணாவிரதம் என்றுதான் இதை ஆரம்பித்தேன். திட்டம் கைவிடப்படும் என்று அமைச்சர் சொல்லவில்லையே!" என்றான் சேது சுருக்கமாக.

பதினைந்தாம் நாளில் முதலமைச்சரே சேதுவைப் பார்க்க வந்தார். சேதுவிடம் தனியாகப் பேச வேண்டும் என்று அவர் கேட்டபோது, சேது ஒப்புக் கொள்ளவில்லை. அவன் அருகில் மேடையில் அமர்ந்திருந்த போராட்டக் குழு உறுப்பினர்கள் அவனை வற்புறுத்தி ஒப்புக் கொள்ளச் செய்தனர்.

பத்து நிமிடம் உண்ணாவிரத மேடையிலேயே திரை மறைவில் சேதுவிடம் பேசி விட்டு, முதல்வர் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் கிளம்பி விட்டார். 

முதலமைச்சர் அவனிடம் பேசியதைப் பற்றிப் பத்திரிகையாளர்கள் சேதுவிடம் கேட்டபோது, ''அன்னிக்கு அமைச்சர் சொன்னதைத்தான் முதல்வரும் சொன்னாரு. உண்ணாவிரதத்தைக் கைவிடச் சொன்னாரு. அரசு நல்ல முடிவை எடுக்கும்னு சொன்னாரு'' என்றான் சேது.

''உங்க முடிவு?''

''திட்டத்தைக் கைவிடறதா அரசு அறிவிச்சதும் உண்ணாவிரதம் முடியும்'' என்றான் சேது. சொல்லும்போதே அவன் குரலில் 15 நாட்கள் உண்ணாமல் இருந்ததன் சோர்வு தெரிந்தது.

பத்திரிகையாளர்கள் சென்றதும், போராட்டக் குழு உறுப்பினர்கள் மூன்று பேரிடம், முதல்வர் தன்னிடம் சொன்ன வேறு சில விஷயங்களை சேது பகிர்ந்து கொண்டான். 

''இதுக்குத்தான் அவர்கிட்ட தனியாப் பேச மாட்டேன்னு சொன்னேன்'' என்றான் சேது. 

''எங்களுக்கு உங்களைப் பத்தித் தெரியுமே! நாங்க இருந்திருந்தா அவரு வெளிப்படையாப் பேசி இருக்க மாட்டாரு. இப்ப உங்ககிட்ட அவர் ஆசை காட்டிப் பேசினதிலேந்து அவர் மனசில என்ன இருக்குன்னு தெரிஞ்சுடுச்சில்ல?'' என்றார் ஒரு உறுப்பினர்.

''தம்பி! தவம் பண்ணினா கடவுள் வேணும்னா வரம் கொடுக்கலாம். ஆனா, உண்ணாவிரதத்தை மதிச்சு அரசாங்கம் தன்னோட முடிவை மாத்திக்காது. உங்களுக்கு சின்ன வயசு. நீங்க இன்னும் ரொம்ப நாள் நல்லா வாழணும். உங்க உடம்பு மோசமாய்க்கிட்டிருக்கு. நீங்க உண்ணாவிரதத்தை முடிச்சுடுங்க. நாம மறியல், ஊர்வலம்னு வேற மாதிரி போராடிப் பாக்கலாம்'' என்றார் வயதில் மூத்த ஒரு உறுப்பினர்.

''உங்க அக்கறையும், வாழ்த்துமே பெரிய வரம்தான் ஐயா!'' என்று சொல்லிப் பணிவாக அவர் கோரிக்கையை மறுத்து விட்டான் சேது.

சேதுவின் உண்ணாவிரதம் இருபத்தைந்தாவது நாளை எட்டியபோது, அவன் உடல்நிலை மோசமாகி வருவதாக அவனைப் பரிசோதித்த மருத்துவர் அறிவித்தார்.

சேதுவுக்கு ஏதாவது ஆகி விட்டால் மக்களின் கோபத்தைச் சமாளிக்க முடியாமல் போய் விடும் என்று பயந்த அரசு நெடுஞ்சாலைத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.

சேதுவின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

சில நாட்கள் கழித்து, நெடுஞ்சாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் சேதுவுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினர்.

விழாவுக்குத் தலைமை ஏற்றவர் சொன்னார்.

''இந்த விழாவை நாங்க நடத்தறதுக்கு ஒரு காரணம் இருக்கு. இந்த நெடுஞ்சாலைத் திட்டத்தால பாதிப்புக்கு உள்ளானவங்க இந்தப் போராட்டத்தை நடத்தினோம். ஆனா இதுக்காக தன் உயிரைப் பணயம் வச்சு உண்ணாவிரதம் இருந்த நண்பர் சேதுவுக்கு ஒரு சதுர அடி நிலம் கூடக் கிடையாது. மத்தவங்களுக்காக, இந்த ஊருக்காக, இந்தப் பகுதி மக்களுக்காக அவரு இதைச் செஞ்சாரு. 

"அந்தக் காலத்தில தவம் பண்ணினவங்கள்ள நிறையப் பேரு தங்களுக்கு ஏதோ ஒரு நன்மை கிடைக்கணும்னுதான் தவம் பண்ணியிருக்காங்க. ஆனா சேது மத்தவங்களுக்காக இந்தப் பெரிய செயலைச் செஞ்சிருக்காருங்கறதை இந்த உலகத்துக்கு உரக்கச் சொல்லத்தான் இந்தப் பாராட்டு விழா. இந்த ஊர்க்காரங்களுக்கு மட்டும் இல்ல, இந்தப் பகுதியில இருக்கற எல்லாருக்குமே அவர் ஒரு தெய்வம்."

குறள் 268
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.

பொருள்:  
தவ வலிமையால் தன் உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம்  கைகூப்பி வணங்கும்.

269. ஆயிரம் நாமங்கள் 

சிவகாமி கோயிலுக்குச் சென்றபோது அர்ச்சகர் சன்னிதியைப் பூட்டத் தயாராக இருந்தார். 

சிவகாமியைப் பார்த்ததும்,''சேவிச்சுக்கோங்கோ!'' என்று சொல்லி விட்டு வெளியே வந்து நின்றார் அர்ச்சகர். 

சிவகாமி பெருமாளை தரிசனம் செய்து விட்டுத் திரும்பியதும், அர்ச்சகர் சற்றுத் தயக்கத்துடன், ''தப்பா நினைச்சுக்காதீங்கோ! உங்களுக்கு ஏதாவது பிரச்னையா? தினமும் கோவிலுக்கு வந்து வேண்டிண்டு போறேளேன்னு கேக்கறேன்'' என்றார்.

சிவகாமி அழுகையை அடக்கிக் கொண்டு, 'ஆமாம்' என்பது போல் தலையை ஆட்டினாள்.

''யாருக்காவது உடம்பு  சரியில்லையா?''

''என் வீட்டுக்காரர் ஆஸ்பத்திரில படுத்த படுக்கையாக் கிடக்காரு. ஏதோ விஷ ஜுரமாம். டாக்டருங்க எதுவும் சரியா சொல்ல மாட்டேங்கறாங்க. உயிர் பிழைப்பாரான்னே தெரியல...''

சிவகாமிக்குத் தொண்டை அடைத்தது.

''கவலைப்படாதீங்கோ! தினம் கோவிலுக்கு வந்து வேண்டிக்கறதுக்குப் பலன் இல்லாம போகாது. நான் ஒண்ணு சொல்றேன். செய்யறீங்களா?''

''சொல்லுங்கய்யா!''

''108 தடவை விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லுங்கோ. உங்க வீட்டுக்காரர் எழுந்து உக்காந்துடுவார்!'' என்றார் அர்ச்சகர்.

''எனக்கு அதெல்லாம் தெரியாதுய்யா!'' என்றாள் சிவகாமி.

''அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. எம் எஸ் அம்மா பாடின விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நாலஞ்சு தடவை கேளுங்கோ. அப்புறம் அவாளோட சேந்து ரெண்டு மூணு தடவை சொல்லிப் பாருங்கோ. அப்புறம் நீங்களே புஸ்தகத்தைப் பாத்து சொல்ல ஆரம்பிச்சுடலாம்.''

''சரி. நான் சொல்ல ஆரம்பிச்சா, சொல்லி முடிக்க எவ்வளவு நாள் ஆகும்?''

''ஒரு தடவை சொல்ல இருபது இருபத்தஞ்சு நிமிஷம் ஆகும். அரை மணின்னு வச்சுண்டா கூட, தினமும் காலையில ரெண்டு மணி நேரம், சாயந்திரம் ரெண்டு மணி நேரம் சொன்னேள்னா, ஒரு நாளைக்கு எட்டு ஆறது. 13,14 நாள்ள முடிச்சுடலாம். ஒரு பட்சத்தில, அதாவது பதினஞ்சு நாள்ள சொல்லி முடிக்கறது ரொம்ப விசேஷம். நீங்க சொல்ல ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே பலன் தெரியும்.''

''நல்லதுய்யா! என்னால முடியுதான்னு பாக்கறேன்'' என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் சிவகாமி.

அடுத்த சில தினங்களில், ஆஸ்பத்திரியில் இல்லாத நேரங்களில் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அறிந்து கொள்வதில் செலவிட்டாள் சிவகாமி.

முதலில் தன் அண்ணனின் உதவியுடன் எம் எஸ் பாடிய சஹஸ்ரநாமத்தின் ஒலி வடிவத்தைத் தன் மொபைலில் பதிவு செய்து கொண்டாள். பிறகு ஒரு இயர் ஃபோன் வாங்கி அதை எப்போதும் காதில் செருகிக் கொண்டு முடிந்தபோதெல்லாம் திரும்பத் திரும்ப அந்த ஒலிப்பதிவைக் கேட்டுக் கொண்டிருந்தாள். தனியே இருக்கும்போது, புத்தகத்தை வைத்துக் கொண்டு, ஒலிப்பதிவைக் கேட்டு, வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முயன்றாள்.

அர்ச்சகர் சொன்னபடியே இரண்டு நாட்களில் சிவகாமியால் புத்தகத்தைப் பார்த்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தைப் படிக்க முடிந்தது. 

அதற்குப் பிறகு இயர்ஃபோனைக் கழற்றி வைத்து விட்டு புத்தகத்தைப் பார்த்து ஒருமுறை படித்தாள். தடங்கலின்றிப் படிக்க முடிந்தது. 

அதன் பிறகு 108 முறை படிக்கும் பணியைத் துவங்கினாள். காலையில் சீக்கிரம் எழுந்து நான்கு முறை படித்தாள். மாலையிலோ இரவிலோ நேரம் கிடைத்ததைப் பொருத்து, எப்படியும் உறங்கப் போகும் முன்பு நான்கு முறை படிப்பதென்று வழக்கப்படுத்திக் கொண்டாள்.

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு சிவகாமியைக் கோயிலில் பார்த்த அர்ச்சகர், ''என்னம்மா சஹஸ்ரநாமம் படிக்க ஆரம்பிச்சுட்டீங்க போலருக்கே!'' என்றார்.

''எப்படிச் சொல்றீங்க ஐயா?'' என்றாள் சிவகாமி.

''உங்க முகத்தில ஒரு தெளிவு தெரியறதே!''

''என் வீட்டுக்காரர் முகத்தில கூடக் கொஞ்சம் தெளிவு வந்திருக்கற மாதிரி இருக்கு. நீங்க சொன்ன மாதிரி சஹஸ்ரநாமம் படிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே அவர் உடம்பு குணமாக ஆரம்பிச்சுடுச்சுன்னு நினைக்கிறேன்'' என்றாள் சிவகாமி.

''நன்னாவே குணமாயிடுவார். நீங்க சொல்லிண்டே வாங்கோ" என்றார் அர்ச்சகர்.

த்து நாட்களுக்குப் பிறகு கோயிலுக்கு வந்த சிவகாமி, அர்ச்சகரிடம், ''108 தடவை சொல்லி முடிச்சுட்டேன்யா. அவருக்கு ஜுரம் இறங்கிடுச்சு. நாலஞ்சு நாள்ள வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போகலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு. உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்!' என்றாள்.

''என்னம்மா இது! எனக்கு நன்றி சொல்றதாவது! அந்தக் காலத்தில ரிஷிகள்ளாம் தவம் பண்ணி கடவுள் கிட்ட வரம் வாங்குவா. நீங்க என்னன்னா நான் சொன்ன யோசனையை ஏத்துண்டு, உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை சீக்கிரமே கத்துண்டு, உங்க வேலைகள், பொறுப்புகளுக்கு மத்தியில, கஷ்டப்பட்டு 108 தடவை சஹஸ்ரநாமம் சொல்லி, உங்க புருஷன் உயிரை எமன்கிட்டேந்து மீட்டுண்டு வந்திருக்கேள். உங்களோட தவத்துக்குப் பெருமாள் வரம் கொடுத்திருக்கார். கோவிலுக்குள்ள பகவானைத் தவிர வேற யாரையும் சேவிக்கக் கூடாது. இல்லேன்னா நானே உங்க கால்ல விழுந்திருப்பேன்!'' என்றார் அர்ச்சகர்.

''என்னங்கய்யா இது!'' என்றாள் சிவகாமி சங்கடத்துடன்.

குறள் 269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

பொருள்:  
தவம் செய்வதால் வரும் ஆற்றலைப் பெற்றவர்களால் எமனையும் வெல்ல முடியும்.

270. வெற்றியின் ரகசியம்!
''கடந்த 10 வருஷத்தில மொத்தம் 57 பயிற்சிகள் நடத்தியிருக்கேன். ஒவ்வொரு பாட்ச்லேயும் சராசரியா 50 பேர்னு கணக்குப் பாத்தா கிட்டத்தட்ட 3000 பேருக்குப் பயிற்சி கொடுத்திருக்கேன். அதாவது 3000 பேர் வாழ்க்கையில வெற்றி பெற நான் உதவியிருக்கேன்!'' என்றார் சிவம், பெருமையுடன்.

''பாராட்டப்பட வேண்டிய சாதனைதான். ஆனா ஒருவர் வாழ்க்கையில வெற்றி பெற உங்க பயிற்சி எப்படி உதவுதுன்னு நம் நேயர்களுக்குப் புரியற மாதிரி சொல்ல முடியுமா?'' என்றார் தொலைக்காட்சியில் அவரைப் பேட்டி கண்டவர்.

"எல்லா மனிதர்களுக்குள்ளேயும் பெரிய ஆற்றல் இருக்கு. ஆனா சில பேர்தான் அதை உணர்ந்திருக்காங்க. அதிலேயும் ஒரு சிலர்தான் அதைப் பயன்படுத்தறாங்க. ஒத்தருக்குள்ள இருக்கற மாபெரும் சக்தியைப் புரிஞ்சுக்கிட்டு அதைப் பயன்படுத்தி அவர் தன் வாழ்க்கையில வெற்றி பெற இந்தப் பயிற்சி உதவும்'' என்றார் சிவம்.

இந்தப் பேட்டி வெளியான சில நாட்களுக்குப் பிறகு சிவத்தைப் பேட்டி காண அவரிடம் நேரம் வாங்கி அவரைப் பார்க்கச் சென்றேன். நான் ஒரு பத்திரிகையாளன்தான். ஆனால் நான் அவரைப் பேட்டி காணச் சென்றது என் சந்தேகத்துக்கு விளக்கம் கேட்க.

''கிட்டத் தட்ட மூவாயிரம் பேருக்குப் பயிற்சி கொடுத்திருப்பதா சொன்னீங்களே, அவங்க எல்லாரும் வாழ்க்கையில வெற்றி அடைச்சுட்டாங்கன்னு உங்களால சொல்ல முடியுமா?'' என்றேன்.

''பயிற்சிக்கு அப்புறம் எல்லாரையும் நான் சந்திக்கல. ஆனா பல பேர் எங்கிட்ட தொடர்பு கொண்டு, பயிற்சியில நான் சொல்லிக் கொடுத்த விஷயங்களைப் பயன்படுத்தி வாழ்க்கையில வெற்றி பெற்றதா சொல்லி இருக்காங்க'' என்றார் சிவம்.

"சுமாரா எத்தனை பேர் அப்படிச் சொல்லியிருப்பாங்க?''

சிவம் என்னை முறைத்துப் பார்த்து விட்டு, ''அதுக்கெல்லாம் நான் கணக்கு வச்சுக்கல!'' என்றார்.

''சார்! நான் உங்க பயிற்சியைப் பத்திக் குறை சொல்றதுக்காக இதைக் கேக்கல. உங்க பயிற்சியில கலந்துக்கிட்டவங்க சில பேர் எங்கிட்ட உங்க பயிற்சி பற்றி உயர்வா சொல்லி இருக்காங்க. சில மாசங்களுக்கு முன்னே, இதை எங்க பத்திரிகையிலயும் வெளியிட்டிருக்கோம். நான் இப்ப உங்ககிட்ட கேக்கறது என்னோட தனிப்பட்ட ஆர்வத்துக்காக. இது பத்தி பத்திரிகையில எதுவும் வராது'' என்றேன்.

சிவம் சற்று யோசித்து விட்டு, ''சரியா சொல்ல முடியாது. ஆனா நீங்க தனிப்பட்ட முறையில கேக்கறதால சொல்றேன். பயிற்சியில கலந்துக்கிட்டவங்கள்ள பத்து சதவீதம் பேர்தான் பயிற்சியோட பலனை முழுசா அனுபவிச்சு வாழ்க்கையில வெற்றி பெற்றாங்கங்கறது என்னோட ஊகம்'' என்றவர் சற்றுத் தயங்கி விட்டு, ''எனக்கே இதில கொஞ்சம் வருத்தம் உண்டு'' என்றார்.

"மீதி 90 சதவீதம் பேர் ஏன் வெற்றி பெறுவதில்லன்னு யோசிச்சிருக்கீங்களா? அவங்க முயற்சி செய்யறதில்லையா?''

''ஒரு சிலர் முயற்சி செய்யாம இருக்கலாம். ஆனா முயற்சி செய்யறவங்கள்ள பல பேர் ஏனோதானோன்னுதான் முயற்சி செய்யறாங்கன்னு நினைக்கறேன்.''

''ஏன் அப்படி?''

''ஏன் அப்படின்னு நான் யோசிச்சப்ப எனக்குக் கிடைச்ச விடை இது மனித இயற்கைங்கறதுதான்!''

''மனித இயற்கைன்னு எப்படிச் சொல்ல முடியும்?''

''ஏன்னா, எல்லாத் துறையிலுமே இப்படித்தானே இருக்கு? பள்ளிக்கூடங்களிலேயும் கல்லூரிகளிலேயும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைச்சாலும் சில பேர்தானே நல்லாக் கத்துக்கறாங்க? இது சிலருக்கு இயற்கையாவே அதிக அறிவு இருக்கறதனாலன்னு சிலபேர் சொல்லலாம். ஆனா அது மட்டும் காரணம் இல்ல. புத்திசாலியா இருக்கற பையங்க பலபேர் படிப்பில சோபிக்காம இருக்காங்க. சராசரியான மாணவர்கள் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டுப் படிச்சு நல்லா முன்னுக்கு வராங்க, இதுக்குக் காரணம் படிப்பில அக்கறை காட்டறதுதான். அது மாதிரி என் பயிற்சியில கலந்துக்கிட்டவங்கள்ளேயும் தாங்க கத்துக்கிட்ட விஷயத்தை அக்கறையோட பின்பற்றுகிறவங்க வெற்றி அடையறாங்க.''

''அவங்க பயிற்சியில கத்துக்கிட்ட விஷயங்களைப் பின்பற்றணும்னு நீங்க அவங்களை மோடிவேட் பண்ண முடியாதா?''

''மோடிவேட் பண்றேன். ஆனா செய்ய வேண்டியது அவங்க கையிலதானே இருக்கு?'' என்ற சிவம் ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்து விட்டு, ''எனக்கு என்ன தோணுதுன்னா, எந்த விஷயத்தையும் தவம் செய்யற மாதிரி மன ஒருமைப்பாட்டோடயும், ஈடுபாட்டோடயும் செஞ்சாதான் அதில வெற்றி அடைய முடியும். இது மாதிரி ஈடுபாட்டோட இருக்கறவங்க உலகத்தில ரொம்ப சில பேர்தான். என் பயிற்சியில பங்கேற்றவங்களும் இந்த உலகத்தைப் பிரதிபலிக்கறவங்கதானே?'' என்றார்.

''நீங்க சொன்னது சரியாத்தான் இருக்கணும். ஏன்னா தவம் பண்ற மாதிரி கண்ணை மூடி மனசை ஒருமுகப்படுத்தி யோசிச்சுத்தானே இந்த பதிலைச் சொன்னீங்க!'' என்றேன் நான்.

குறள் 270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

பொருள்:  
உலகில் பெரும்பாலோர் ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பதற்குக் காரணம் தவம் செய்பவர்கள் சிலராகவும், செய்யாதவர்கள் பலராகவும் இருப்பதுதான்.
          பொருட்பால்                                                                                   காமத்துப்பால்

No comments:

Post a Comment