About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, October 26, 2018

217. குழந்தைகள் காப்பகம்

"என்னங்க, கீழே குடியிருக்கறவங்க இந்த மாசம் வீட்டைக் காலி பண்றாங்க. வேற யாருக்காவது வாடகைக்கு விட ஏற்பாடு பண்ணுங்க" என்றாள்  சரஸ்வதி.

"கீழே ஒரு குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்" என்றார் நல்லசிவம்.

"பரவாயில்லையே! வேலையில இருந்தப்ப சம்பளப் பணம், வாடகைப் பணம் எல்லாத்தையும் எடுத்து யார் யாருக்கோ தர்மம் பண்ணிக்கிட்டிருந்தீங்க. இப்ப ரிடயர் ஆனப்பறம் பிசினஸ் பண்ணலாம்னு எண்ணம் வந்திருக்கே! ஆச்சரியம்தான்."

நல்லசிவம் சிரித்தபடி, "இது பிசினஸ் இல்ல. பணம் கொடுத்துக் குழந்தையைக் காப்பகத்தில சேர்க்க முடியாத பெற்றோர் எவ்வளவோ பேர் இருக்காங்க. அவங்களுக்காக இலவசமா ஒரு காப்பகம் ஆரம்பிக்கப் போறேன்."

"அதானே பாத்தேன்! திடீர்னு வேதாளம் முருங்கை மரத்திலேந்து கீழே இறங்கிடுச்சேன்னு ஆச்சரியப்பட்டேன். வேலையில இருந்தப்பவே, வந்த பணத்தையெல்லாம் வாரிக் கொடுத்துக்கிட்டு, ஊருக்கு உழைக்கிறேன்னு ஓய்வில்லாம ஓடிக்கிட்டு இருந்தவராச்சே நீங்க? ஆமாம். வீட்டு வாடகை போச்சு. காப்பகம் நடத்த ஆட்களை வேலைக்கு வைக்கணும், வேற செலவெல்லாம் இருக்கு. அதுக்கெல்லாம் வேற பணம் வேணும். என்ன செய்யப் போறீங்க?"

"இத்தனை நாளா நம்ப பையங்க பணம் அனுப்பறேன்னு சொல்லச்சே வேண்டாம்னுட்டேன். இப்ப நான் ரிடயர் ஆனப்பறம் ரெண்டு பேரும் ஆளுக்கு இருபதாயிரம் ரூபா அனுப்பறேன்னாங்க. நானும் சரின்னுட்டேன். அந்தப் பணம், என் பென்ஷன்ல நம்ப செலவு போக மீதி உள்ள பணம் இதையெல்லாம் வச்சு சமாளிக்க வேண்டியதுதான். கணக்குப் போட்டுப் பாத்தேன். சமாளிக்கலாம்னு தோணுது"

"ஏங்க, உங்களுக்கென்ன தலையெழுத்தா?" என்றாள் சரஸ்வதி, ஆற்றாமையுடன்.

நல்லசிவம் வெறுமனே சிரித்தார். "உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்" என்றார்.

"என்ன?"

"அது முக்கியமில்லை. நான் இறந்து போனப்பறம் செய்ய வேண்டிய ஏற்பாடு பத்தி..."

"ஏங்க, உங்களுக்கு வயசு இப்பதான் அறுபது ஆகியிருக்கு. இந்தக் காலத்தில நிறைய பேரு தொண்ணூறு வயசுக்கு மேல இருக்காங்க, இப்ப ஏன் இந்தப் பேச்சு?"

"இல்லை..."

"இப்படியெல்லாம் பேசி என்னை வருத்தப்பட வைக்காதீங்க. நீங்க செய்யற காரியங்கள் எதுக்கும் நான் தடை சொல்றதில்ல. அதுக்குக் கைம்மாறாகவாவது இப்படியெல்லாம் பேசாம இருங்க" என்றாள் சரஸ்வதி கோபத்துடன்.

ஒரு மாதத்தில் குழந்தைகள் காப்பகம் துவக்கப்பட்டுச் சிறப்பாக நடந்து வந்தது.

ல்லசிவத்துக்கு அறுபத்தைந்து வயதானபோது, ஒருநாள் அவர் தூக்கத்திலேயே இறந்து விட்டார்.

ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, அவர்கள் மூத்த மகன் சங்கர் உள்ளே அமர்ந்து அழுது கொண்டிருந்த சரஸ்வதியிடம் வந்தான். "அம்மா! ஒரு நிமிஷம் இப்படி வரியா?" என்று அவளை இன்னொரு அறைக்குள் அழைத்துச் சென்றான்.

அறையில் அமர்ந்திருந்தவரைக் காட்டி, "அம்மா, இவர் ஒரு ஆஸ்பத்திரியிலேந்து வராரு. அப்பா தன் உடல் உறுப்புகளை தானம் செஞ்சிருக்காராம்  ஆனா நாம சம்மதிச்சாதான் உடலை எடுத்துப் போவாங்களாம். எடுக்கக் கூடிய உடல் உறுப்புகளை எடுத்துக்கிட்டு, அப்புறம் உடலை அனுப்புவாங்க. அதுக்கு சில மணி நேரம் ஆகலாம். நீ சரின்னு சொன்னாதான். உனக்கு இஷ்டம் இல்லேன்னா அப்படியே அடக்கம் பண்ணிடலாம்" என்றான்.

சரஸ்வதி கண்ணை மூடிக் கொண்டு ஒரு நிமிடம் யோசித்தாள். தான் இறந்த பிறகு செய்ய வேண்டிய ஏற்பாடு என்று தன் கணவர் தன்னிடம் ஒருமுறை பேச முயன்றதை நினைவு கூர்ந்தாள். 'இதைப் பத்தித்தான் சொல்ல முயற்சி செஞ்சிருப்பாரு போலருக்கு.'

"சங்கர்! உங்கப்பா மத்தவங்களுக்கு உதவி செய்யறதையே முக்கியமா நினைச்சு வாழ்ந்தாரு. உயிரோடு இருந்தப்ப, தன் பணத்தையும், உழைப்பையும் மத்தவங்களுக்காகச் செலவழிச்சாரு. இறந்தப்பறம், தன் உடல் மத்தவங்களுக்குப் பயன்படணும்னு நினைச்சிருக்காரு. அவரு விருப்பப்படி நடந்துக்கறதுதான் அவருக்கு நாம காட்டற மரியாதை. நமக்குப் பெருமையும் கூட" என்றாள் சரஸ்வதி, ஒரு நிமிடம் தன் துக்கத்தை மறந்தவளாக.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

பொருள்:  
பிறருக்கு உதவும் குணம் உள்ளவரிடம் உள்ள செல்வம் தன் எல்லா உறுப்புகளும் பயன்படும் மரம் போன்றது.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
























1 comment:

  1. உங்கள் பதிவை TamilBMதிரட்டியில் இணைக்க
    https://bookmarking.tamilbm.com/member/myurl

    ReplyDelete