About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, October 15, 2018

211. உதவிக்கு வரலாமா?

தன் சொந்த ஊரில் இருந்த கோவிலுக்குப் போக வேண்டும் என்று என் மனைவி விரும்பியதால் அந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டோம்.

"கோவிலுக்குப் போறதைத் தவிர சுந்தரம் மாமாவையும் பாக்கணும்!" என்றாள் மனைவி.

"97"

"அப்படின்னா?"

"97ஆவது தடவையா இதை நீ சொல்ற!"

"நீங்க அவரைப் பாத்தீங்கன்னா நீங்களும் அவரைப் பத்திப் பேசிக்கிட்டே இருப்பீங்க."

"உலகத்தில மத்தவங்களுக்கு உதவி செய்யறவங்க எத்தனையோ பேரு இருக்காங்க."

"இருக்காங்க. ஆனா தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு வித்தியாசம் பாக்காம, பதில் உதவி எதிர்பாக்காம உதவி செய்யறவங்க எத்தனை பேரு இருக்காங்க?" என்றாள் மனைவி.

சுந்தரம் என்ற அவள் ஊர்க்காரர் அவள் குடும்பத்துக்கும் மற்ற பலருக்கும் செய்த உதவிகளைப் பற்றிப் பலமுறை என்னிடம் சொல்லி இருக்கிறாள் என் மனைவி.

"அவரைப் பற்றி நீ 'சுந்தர காண்டம்' னு ஒரு காவியம் எழுதலாம்!" என்று நான் அவளைக் கிண்டல் செய்வதுண்டு. என் மனைவிக்குக் கதைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. அதனால் அவள் எதையும் மிகைப்படுத்துவாள் என்று எனக்கு ஒரு கருத்து உண்டு.

என் நல்ல குணங்களைப்(!) பற்றியும் மிகைப்படுத்தி அவள் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறாளோ என்னவோ! அப்படி இருந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்.

நேரே கோவிலுக்குத்தான் போனோம். கோவில் பூட்டி இருந்தது. குருக்கள் வீடு அருகில்தான் இருந்தது. போய் விசாரித்தோம். குருக்கள் அப்போதுதான் கோவிலைப் பூட்டி விட்டுப் பக்கத்து ஊருக்கு பஸ்ஸில் போயிருப்பதாகவும் மாலைதான் வருவார் என்றும் சொன்னார்கள்.

மாலை இன்னொரு இடத்துக்குப் போகலாம் என்று திட்டமிட்டிருந்ததால் என்ன செய்வதென்று யோசித்தோம். முதலில் சுந்தரத்தைப் பார்த்து விட்டு அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்து அவர் வீட்டுக்குப் போனோம்.

"தோப்புக்குப் போயிருக்காரு, இப்ப வந்துடுவாரு. இப்படி உட்காருங்க" என்று பாயை விரித்தாள் அவர் மனைவி. என் மனைவிக்கு அவளை அவ்வளவு பரிச்சயமில்லை போல் தோன்றியது.

"பரவாயில்லை. திண்ணையிலேயே உக்காந்துக்கறோம்" என்று திண்ணையில் உட்கார்ந்தோம். ஐந்து நிமிடத்தில் சுந்தரம் வந்து விட்டார்.

"அடாடா! கலாவா? இதுதாம்மா நீ பொறந்த ஊர்! ஞாபகம் இருக்கா?" என்றார்.

"என்ன மாமா நீங்க!" என்றாள் என் மனைவி.

"உன் அப்பா அம்மா இங்கே இல்லேன்னா நீ ஊருக்கே வரக்கூடாதா? நாங்கள்ளாம் இல்லை?" என்று உரிமையோடு கோபித்துக் கொண்டவர், "நீங்க நம்ம வீட்டுலதான் சாப்பிடணும். கௌரி கிட்ட சொல்லிட்டு வரேன்" என்று சொல்லி விட்டு உள்ளே போக யத்தனித்தவரைத் தடுத்து, "வேண்டாம் சார். நாங்க டவுன்ல சாப்பாட்டுக்கு ஏற்பாடு செஞ்சுட்டோம். அவங்க ரெடி பண்ணி இருப்பாங்க" என்றேன் நான்.

"ஏன் அவ்வளவு அவசரம்?" என்று அவர் சொன்னபோதே ஒரு ஆள் இளநீர்க் குலைகளுடன் வந்தான். அவற்றை வெட்ட ஆரம்பித்தான்.

"உங்களுக்குத்தான். தெரு முனையிலேயே உங்களைப் பாத்துட்டேன். அதான் மறுபடி தோப்புக்குப் போய் இளநீர் வெட்டி எடுத்துக்கிட்டு வரச் சொன்னேன்" என்றார்.

நாங்கள் ஒரு இளநீர் குடித்து முடித்ததும், அந்த ஆள் இன்னொரு இளநீரை வெட்ட ஆரம்பித்தான்.

"போதும்! போதும்!" என்றேன்.

"பரவாயில்ல, குடிங்க! இந்த வெயிலுக்கு அஞ்சாறு இளநீர் குடிச்சா கூட தாகம் அடங்காது. இன்னும் ஒரு இளநீராவது குடிங்க!" என்றவர்,"கோயிலுக்குப் போயிட்டு வந்துட்டீங்க இல்ல?" என்றார்.

"கோவில் பூட்டியிருக்கு. குருக்கள் வெளியே போயிட்டாராம்" என்றாள் என் மனைவி.

"அப்படியா?" என்றவர், "சரி. இங்கேயே இருங்க. இதோ வந்துடறேன்" என்று குருக்கள் வீட்டை நோக்கி நடந்தார். 

ஐந்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தவர், "குருக்கள் பையன் இருக்கான். சின்னப் பையன். குருக்கள் இல்லாதப்ப கோயிலைத் திறந்து விளக்கேத்தி நைவேத்தியம் எல்லாம் பண்ணுவான். அர்ச்சனை எல்லாம் பண்ணத் தெரியாது. ஆனா மந்திரம் சொல்லி தீபாராதனை காட்டுவான். நீங்க அவசரமாப் போகணுங்கறதால அவன்கிட்ட சொல்லி சாமிக்கு பூ சாத்தி பழம் நைவேத்தியம் பண்ணி தீபாராதனை காட்டச் சொல்லி இருக்கேன். அர்ச்சனை பண்ணனும்னா நீங்க சாயந்திரம் வரை இருந்து குருக்கள் வந்தப்பறம் அர்ச்சனை பண்ணிக்கிட்டுப் போகலாம்" என்றார்.

கோவிலுக்குப் போகும்போது "பாத்தீங்களா? நமக்கு என்ன வந்ததுன்னு போகாம எப்படி ஓடியாடி உதவி செய்யறார் பாருங்க!" என்றாள் மனைவி.

"உதவி செய்யற குணம் இருக்குதான். ஆனா நீ அவருக்குத் தெரிஞ்சவ. வேற யாராவதுன்னா இந்த அளவுக்கு உதவுவார்னு சொல்ல முடியுமா?" என்றேன் நான்.

மனைவி பதில் சொல்லவில்லை.

கோவிலுக்குப் போனபோது கோவில் திறந்திருந்தது, குருக்களின் பையன் இருந்தான். இன்னொரு வெளியூர்க்காரரும் அப்போது கோவிலுக்கு வந்திருந்தார்.

கோவிலில் தரிசனம் முடிந்து சுந்தரத்தின் வீட்டுக்கு வந்தபோது சுந்தரத்தின் ஆள் என் காரைத் துடைத்துக் கொண்டிருந்தான்.

"உனக்கு ஏம்ப்பா இந்த வேலையெல்லாம்? ஐயா துடைக்கச் சொன்னாரா?" என்றேன்.

"இல்லீங்க. ஐயா எப்பவும் யாருக்காவது ஏதாவது உதவி செஞ்சுக்கிட்டே இருப்பாரு. அவரைப் பாத்துப் பாத்து எனக்கும் நம்மால முடிஞ்ச உதவியைச் செய்யலாம்னு தோணும். தோப்பில வேலை முடிஞ்சுடுச்சு. சும்மாதான் இருந்தேன். இந்த மண் ரோட்ல வந்ததில கார்ல தூசி படிஞ்சிருந்தது. அதான் துடைச்சேன். எனக்கு காரெல்லாம் துடைச்சுப் பழக்கமில்லை. நைஸ் துணியால மேலாகத்தான் துடைச்சேன்" என்றான் அந்த ஆள்.

"உன் முதலாளிக்கு ஏத்த ஆளா இருக்கியே!" என்றபடி அவனிடம் ஒரு ஐம்பது ரூபாய்த் தாளை நீட்டினேன்.

"வேண்டாங்க. காசுக்காக செய்யல. சும்மா நின்னுக்கிட்டிருந்த நேரத்தில கொஞ்சம் துடைச்சேன். அவ்வளவுதான்" என்றான் அவன்.

இதற்குள் சுந்தரம் உள்ளிருந்து வந்தார். "என்ன, தரிசனம் கிடைச்சுதா? வீட்டில உப்புமா பண்ணியிருக்கா. கொஞ்சம் சாப்பிட்டுட்டுப் போங்க. டவுன் போற வரையில தாங்கணுமே!" என்றார்.

"வேண்டாம் சார்!" என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, எங்களுடன் கோவிலுக்கு வந்தவர் தெருவில் வந்து கொண்டிருந்தார்.

"வெளியூரா?" என்றார் சுந்தரம் அவரைப் பார்த்து."கோவிலுக்கு வந்தீங்களா?" என்றார் தொடர்ந்து.

"ஆமாம்" என்றார் அவர்.

"நல்ல வெய்யில். நம்ம வீட்டில சாப்பிட்டுட்டு ஓய்வெடுத்துட்டு அப்புறம் போகலாமே!" என்றார் சுந்தரம்.

"இல்ல, நான் போகணும்" என்றார் அவர் நெளிந்தபடி.

"ஒரு இளநீராவது குடிச்சுட்டுப் போங்க" என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, திண்ணையில் இருந்த இளநீர்களில் ஒன்றை எடுத்து வெட்ட ஆரம்பித்தான் அவருடைய ஆள்.

"என்னங்க இது? நான் முன்ன பின்ன தெரியாதவன்!" என்றார் அவர்.

அவர் இளநீர் குடித்து முடித்ததும், "பஸ்லயா போகப் போறீங்க?" என்றார் சுந்தரம்.

"ஆமாம்."

"பஸ் ஸ்டாப் கொஞ்ச தூரம். அதுக்கு முன்னால இங்க ஒரு ஸ்டாப்பிங் இருக்கு. ஆனா அங்கே தெரிஞ்ச ஆளுங்க நின்னாதான் பஸ்ஸை நிறுத்துவாங்க. நான் அங்கே வந்து உங்களை ஏத்தி விடறேன்" என்றார் சுந்தரம்.

"நான் போய் ஏத்தி விடறேங்க" என்றான் அவர் ஆள்.

"உன்னைப் பாத்தா நிறுத்துவாங்களோ என்னவோ? என்னை இந்த ரூட்ல போற எல்லா பஸ் டிரைவர்களுக்கும் தெரியும்" என்றவர் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு செருப்பை மாட்டிக் கொள்ளப் போனார்.

"உங்களுக்கு ஏங்க சிரமம்?  நான் பஸ் ஸ்டாப்புக்கே போய்க்கறேன்" என்றார் வெளியூர்க்காரர்.

"நானே என் கார்ல அவரை அழைச்சுக்கிட்டு போயிடறன்" என்றேன் நான் சுந்தரத்திடம். 

வெளியூர்க்காரரிடம் திரும்பி "டவுனுக்குத்தானே போகணும்? நாங்களும் அங்கதான் போறோம்" என்றேன்.

அவர் மௌனமாகத் தலையாட்டினார்.

என் மனைவி என்னைப் பார்த்துப் பெருமையுடன் சிரித்தாள்.

சுந்தரத்தின் உதவும் குணம் எனக்கும் கொஞ்சம் வந்து விட்டதாக நினைத்தாளோ என்னவோ!

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 22       
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்ஆற்றுங் கொல்லோ உலகு.

பொருள்:  
மழை கைம்மாற்றை எதிர்பார்த்துப் பெய்வதில்லை. அந்த மழை போன்ற இயல்புடையவர்களும் பதில் உதவி எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவுவார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


















No comments:

Post a Comment