About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, October 13, 2018

208. சாமிக்கண்ணுவின் வருத்தம்

"ஏங்க, நியாயமாத் தொழில் பண்றீங்க. ஆனா, வருமானம் வர மாட்டேங்குதே!" என்றாள் சொர்ணம்.

"என்ன செய்யறது? பாக்கலாம்" என்றான் சாமிக்கண்ணு.

மளிகைக்கடை வியாபாரம் சரியாக வராததால், சிறிது காலத்துக்குப் பிறகு, கடையை மூடி  விட்டு, கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான் சாமிக்கண்ணு.

கூலி வேலையில் வந்த வருமானம் போதவில்லை. வியாபாரத்துக்காக வாங்கிய கடன்கள் கொஞ்சம் இருந்தன. அவற்றுக்கு வட்டியும், அசலும் கட்ட வேண்டி இருந்தது.

சில நாட்கள் வேலை இருக்காது. வேலை இருந்த நாட்களிலும் கூலி என்று பெரிதாகக் கிடைக்கவில்லை.

"நானும் வேலைக்குப் போகலாம். ஆனா எனக்கு உடம்பில பலம் இல்லையே!" என்றாள் சொர்ணம்.

"ஒண்ணும் வேண்டாம். நீ வீட்டு வேலை பாக்கறதே பெரிய விஷயம். நான் பாத்துக்கறேன். கொஞ்ச நாள்ள எல்லாம்  சரியாயிடும்" என்றான் சாமிக்கண்ணு.

"எங்கே? கொஞ்ச நாள் கொஞ்ச நாள்னு பத்து வருஷமா இப்படியேதான் சொல்லிக்கிட்டிருக்கோம்!"

"பரவாயில்லை. நாம ரெண்டு பேர்தானே? சமாளிச்சுக்கலாம்" என்றான் சாமிக்கண்ணு.

"அதாங்க எனக்கு இன்னும் வருத்தமா இருக்கு. என் உடம்பு பலவீனமா இருக்கறதால நமக்குக் குழந்தை பிறக்காதுன்னு ஆஸ்பத்திரியில சொல்லிட்டாங்க. கடைசி காலத்தில நம்மளைக் காப்பாத்தக் கூடப் பிள்ளைங்க இருக்க மாட்டாங்களே!" என்றாள் சொர்ணம். சொல்லும்போதே, துக்கத்தில் தொண்டை அடைத்தது.

"ஏங்க நமக்கு மட்டும் இப்படி எல்லாம் கஷ்டமாவே நடந்துக்கிட்டிருக்கு?" என்றாள் சொர்ணம்.

சாமிக்கண்ணுக்கு இந்தக் கேள்விக்கு விடை தெரியும், ஆனால் அவளிடம் சொல்லவில்லை. பத்து ஆண்டுகள் முன்பு வரை ஒரு பணக்காரனுக்கு அடியாளாக இருந்து, எத்தனையோ பேரை மிரட்டி, அடித்து, கை கால்களை ஒடித்து, எத்தனையோ தீங்குகளைச் செய்து விட்டு, சொர்ணத்தைக் கல்யாணம் செய்து கொண்டதும், அவள் பேச்சைக் கேட்டு அடியாள் வேலையை விட்டு விட்டு நல்லவனாக வாழ்ந்தாலும், முன்பு பலருக்கும் தான் செய்த கெடுதல்களின் பலனைத் தான் அனுபவிக்கத்தானே வேண்டும்?

ஆனாலும் ஒரு தவறும் செய்யாத சொர்ணமும் தன்னுடன் சேர்ந்து கஷ்டப்படுவதுதான் அவனுக்கு வருத்தமாயிருந்தது.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 21       
தீவினையச்சம் 
குறள் 208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை 
வீயாது அடி உறைந் தற்று.

பொருள்:  
ஒருவருடைய நிழல் அவரை விடாது அவர் காலடியிலேயே இருப்பது போல், ஒருவர் செய்த தீவினையால் அவருக்கு நேரும் கெடுதல்களும் அவரைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

No comments:

Post a Comment