About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, November 5, 2018

222. கோதானம்

குரு தன் அம்மாவின் இறப்புக்குப் பின் செய்ய வேண்டிய இறுதி நாள் சடங்குகளைச் செய்து கொண்டிருந்தான்.

"இப்ப நீங்க சில தானங்கள் செய்யணும். அந்தக் காலத்தில பசு, பொன் மாதிரி பொருட்களை தானம் பண்ணுவா. இப்ப அதெல்லாம் சரியா வராது. அதனால பணமாவே கொடுக்கலாம். ஒவ்வொரு தானமா பேரு சொல்றேன். அதுக்குத் தகுந்தாப்பல நூறு, ஐநூறு, ஆயிரம், ரெண்டாயிரம்னு நீங்க கொடுக்கலாம்" என்றார் புரோகிதர்.

குரு தலையாட்டினான். தானமாகக் கொடுக்க வேண்டிய பொருட்களின் பெயர்களை புரோகிதர் ஒவ்வொன்றாகச் சொல்ல, சடங்குக்கு வந்திருந்தவர்களில் ஒவ்வொருவராக அழைத்து, கொடுக்கப்பட வேண்டிய பொருளின் மதிப்புக்கேற்ப ஐம்பது ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டு வந்தான் குரு.

"இப்ப கோதானம், அதாவது பசு தானம். உங்க சொந்தக்காரங்களிலேயே யாராவது ஏழையா இருக்கறவாளுக்குக் கொடுக்கலாம். எவ்வளவு கொடுக்கப் போறேள்?" என்றார் புரோகிதர், குருவுக்கு மட்டும் கேட்கும்படி.

"என் மனைவியோட தம்பிக்குக் கொடுக்கலாமா?" என்றான் குரு புரோகிதரின் காதில்.

"பேஷாக் குடுக்கலாம். உங்க தம்பிக்குத்தான் கொடுக்கக் கூடாது! வேற யாராவது ஏழைகளுக்குக் கொடுக்கறதுன்னாலும் கொடுக்கலாம்" என்றார் புரோகிதர்.

"என் மைத்துனன் ரொம்பக் கஷ்டப்படறான். கோதானம்கறதால ஐயாயிரம் ரூபா கொடுக்கலாம்னு இருக்கேன். அவனுக்குக் கொடுத்தா உதவியா இருக்கும்."

"சரி. உங்க விருப்பப்படியே செய்யுங்கோ. அவரைக் கூப்பிடுங்கோ."

"பாலு!" என்று அழைத்தான் குரு.

முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் எழுந்து வந்தான்.

குரு அருகிலிருந்த பணப்பையிலிருந்து ஐயாயிரம் ரூபாயை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டான்.

"கோதானத்தை உங்களுக்குக் கொடுக்கணும்னு பிரியப்படறார். வாங்கிக்கோங்கோ" என்றார் புரோகிதர்.

"மன்னிச்சுக்கங்க. நான் தானம் வாங்கறதில்ல" என்றான் பாலு, புரோகிதர், குரு இருவரையும் பார்த்தபடி.

"வாங்கிக்கோப்பா. இது என் அம்மாவுக்காக செய்யறதுதானே?" என்றான் குரு.

"உங்க அம்மாவுக்காக நான் வேற ஏதாவது செய்யணும்னா சொல்லுங்க, சந்தோஷமா செய்யறேன். தானம் எதுவும் வாங்கக் கூடாதுங்கறது என்னோட கொள்கை" என்றான் பாலு.

"இது மாதிரி யாராவது தானம் கொடுத்தா, அதை வாங்கிக்க மாட்டேன்னு சொல்றது பாவம்ப்பா" என்றார் புரோகிதர்.

"பரவாயில்ல. அந்தப் பாவத்தை நான் ஏத்துக்கறேன்" என்றான் பாலு பிடிவாதமாக.

"வேண்டாம்னா விட்டுடுங்க. அவனை ஏன் வற்புறுத்தறீங்க?" என்றாள் குருவின் மனைவி மாலா.

"சரி. வேற யாருக்காவது கொடுத்துடுங்கோ" என்றார் புரோகிதர். உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவரை அவர் கைகாட்ட அவர் எழுந்து வந்தார்.

"வேற யாராவதுன்னா ஐநூறு, ஆயிரம்தான் கொடுத்திருப்பேன்" என்று முணுமுணுத்தபடியே, கையில் வைத்திருந்த ஐயாயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்தான் குரு.

சற்று நேரம் கழித்து, சுமங்கலிகளுக்குப் புடவை தானம் நடந்தது. பத்து பேருக்கு விலை உயர்ந்த புடவைகளை தானமாகக் கொடுத்துக் கொண்டிருந்தாள் மாலா.

கடைசியாக வந்த பெண்மணியைப் பார்த்து, புரோகிதர், "இருங்கோ! நீங்க சுமங்கலியா?" என்றார் அவள் வெறும் கழுத்தையும் நெற்றியையும் பார்த்து விட்டு.

அந்தப் பெண் இல்லையென்று தலையாட்டினாள். பிறகு, "எங்கிட்ட கட்டிக்க நல்ல புடவை இல்ல. அதான் வந்தேன்" என்றாள்.

மாலா அவளிடம் ஒரு புடவையைக் கொடுக்க வந்தாள்.

"இருங்கோ. சுமங்கலி அல்லாதவாளுக்குக் கொடுக்கக் கூடாது. கொடுத்தா, உங்களுக்குப் பாவம்தான் வந்து சேரும்" என்றார் புரோகிதர்.

"பரவாயில்லை" என்றபடியே புடவையைக் கொடுத்தாள் மாலா.

"வந்து வாய்ச்சிருக்கீங்க பாருங்க அக்காவும் தம்பியும் ஒரே மாதிரியா!" என்று முணுமுணுத்தான் குரு.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 23      
ஈகை 
குறள் 222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

பொருள்:  
பிறர் கொடுக்கும் பொருளைப் பெற்றுக் கொள்வது (மேலுலகம் செல்ல) நல்வழி என்ற நிலையிலும் கொடையைப் பெற்றுக் கொள்வது தீயது. கொடை அளிப்பதால் ஒருவர் மேலுலகத்தை இழக்க நேரிடும் என்ற நிலையிலும் கொடை வழங்குவதே சிறந்தது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















No comments:

Post a Comment