About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, May 20, 2016

64. அமுதினும் இனியது!

"நாமும் கோவில் கோவிலாப் போய்க்கிட்டிருக்கோம். கடவுள் இன்னும் நமக்குக் கருணை காட்டலியே!" என்றாள் சுகன்யா.

"கோவிலுக்குள்ள நுழையும்போதே இப்படி அலுத்துக்கிட்டா எப்படி நம்மால அமைதியாக் கடவுள்கிட்ட வேண்டிக்க முடியும்?" என்றான் அவள் கணவன் பலராமன்.

"நான் ஏன் இப்படி அலுத்துக்கறேன்னு கடவுளுக்குத் தெரியாதா? அமைதியா வேண்டிக்கறதை விட, இப்படி மனசு வருத்தப்பட்டு அங்கலாய்க்கும்போதாவது நம்ம வருத்தம் எவ்வளவு ஆழமானதுன்னு கடவுளுக்குப் புரியட்டுமே!"

"சரி வா. சன்னதி கிட்ட வந்துட்டோம். கூட்டம் அதிகமா இல்லை. உள்ள போய் சாமி தரிசனம் பண்ணிட்டு வந்துடலாம்."

கடவுளிடம் இருவருமே மனம் உருகி வேண்டிக் கொண்டார்கள்.

வெளியே வந்து பிரகாரத்தைச் சுற்றும்போது, பலராமன் பிரசாதங்கள் விற்கும் இடத்தை நோக்கிப் போனான்.

"ஒவ்வொரு கோவில்லேயும் தவறாம பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டுடறீங்க. உங்களுக்கு பலராமன் என்பதற்கு பதிலா, சாப்பாட்டு ராமன்னு பேர் வச்சிருக்கலாம்!"

"நான் மட்டுமா சாப்பிடறேன்? உனக்கும்தானே வாங்கிக் கொடுக்கறேன்? நான் தனியாக் கோவிலுக்குப் போனாக் கூட உனக்குப் பிரசாதம் வாங்கிக்கிட்டு வந்து கொடுப்பேனே! இந்தக் கோவில்ல அதிரசம் ரொம்ப நல்லா இருக்கும். அதுதான்."

"எந்தக் கோவில்ல எந்தப் பிரசாதம் விசேஷம்கறது உங்களுக்கு அத்துப்படியாச்சே! நீங்க கோவிலுக்கு வரதே பிரசாதம் வாங்கிச் சாப்பிடத்தானோன்னு தோணுது!"

அவள் பேச்சைப் பொருட்படுத்தாமல் பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்த பலராமன் கோவில் பிரகாரத்தை ஒட்டி இருந்த குளக்கரைக்கு வந்தான். மனைவிக்கு ஒரு அதிரசத்தைக் கொடுத்து விட்டு இன்னொன்றை விண்டு வாயில் போட்டுக் கொள்ளப் போனவன் அப்படியே நின்று விட்டான்.

குளக்கரையில் ஒரு இளம் தம்பதி ஒரு இட்லிப் பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பெண்ணின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை கீழே தாவி மண்ணில் கை வைத்துத் தவழ்ந்து போய், தந்தையின் கையிலிருந்த ஒரு இட்லியைத் தன் கையால் அழுத்திப் பிசைந்து, அதைக் கூழாக்கியது.

குழந்தையின் கையிலிருந்த மண் படிந்த அந்தக் கூழை, குழந்தையின் தந்தை ஆவலுடன் எடுத்து வாயில் போட்டுச் சுவைத்ததைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் பலராமன்.

'என்னங்க, உங்களுக்குப் பிடிச்ச அதிரசத்தைக் கூடச் சாப்பிடாமல் அந்தக் குழந்தையையே பாத்துக்கிட்டிருக்கீங்க?"

"அந்தக் குழந்தையோட அப்பா இடத்தில நான் இருந்தா, இந்த அதிரசத்தை விட அந்தக் குழந்தையோட அழுக்குக் கை பட்ட அந்த இட்லிக்கூழ்தான் எனக்கு அதிக ருசியா இருந்திருக்கும்!" என்றான் பலராமன் ஏக்கத்துடன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் 
சிறுகை அளாவிய கூழ்.

பொருள்:
தன் குழந்தையின் சிறு கையால் அளாவப்பட்ட கூழ்தான் ஒருவருக்கு அமிர்தத்தை விட இனிப்பதாக இருக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















No comments:

Post a Comment