About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, March 19, 2016

58. கேள்வி வரும்போது பதில் ஒன்று வேண்டும்!

சுகுணாவுக்குப் பொதுவாக சாமியார்களிடம் அதிக ஈடுபாடு கிடையாது. அவள் கணவன் கார்த்திக், இதற்கு நேர்மாறாக, காவி உடையைக் கண்டாலே வணங்கி உபதேசம் கேட்பவன்.

ஆயினும் அவளுடைய பகுதிக்கு மெய்யானந்தர் என்ற சாமியார் வந்தபோது அவரைச் சந்திக்க சுகுணா ஆர்வம் காட்டினாள். இதற்குக் காரணம் மெய்யானந்தர் யார் என்ன கேள்வி கேட்டாலும் பொறுமையாகப் பதில் சொல்பவர் என்று பெயர் பெற்றிருந்ததுதான்.

மெய்யானந்தரின் பேச்சு முடிந்ததும், கேள்விகளுக்கு அவர் பதில் சொன்னார். சுகுணாவின் முறை வந்தபோது, அவள் எழுந்து, "சுவாமி, ஆண்களுக்கு பிரம்மச்சரியம், இல்லறம், வனவாசம், துறவறம் என்று நான்கு நிலைகள் வகுக்கப்பட்டிருப்பது போல் பெண்களுக்கு ஏன் வகுக்கப்படவில்லை?" என்று கேட்டாள்.

"இதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் ஆண், பெண் இருவருக்கும் இந்த நிலைகளை வகுத்தால், இருவரும் தனி தனிப் பாதையில் போக விரும்பலாம். கணவன் வனவாசம் போக விரும்பும்போது, மனைவி இல்லறத்தில் தொடர விரும்பலாம்.

"இரண்டாவது காரணம் ஆண்கள் இந்த நான்கு நிலைகளைப் பின்பற்றுவதை எப்போதோ விட்டு விட்டார்கள். பெண்களுக்கு இவை வகுக்கப்பட்டிருந்தால் ,அவர்கள் இதைத் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருப்பார்கள், விரதம் போன்ற விஷயங்களைப் பின்பற்றிக் கொண்டிருப்பது போல். இதை நம் முன்னோர்கள் விரும்பவில்லையோ என்னவோ!

"முன்றாவது காரணம் நம் சமுதாயம் ஒரு ஆண் ஆதிக்க சமுதாயம்! நான் சொன்ன மூன்று காரணங்களில் மூன்றாவது காரணம்தான் முக்கியமானது!"

சாமியாரின் சிரிப்பில் பக்தர்களும் பங்கு கொண்டனர்.

"அப்படியானால் என் போன்ற பெண்களுக்கு வீடுபேறு என்பதே கிடையாதா?" என்றாள்  சுகுணா விடாமல்.

"பெண்களுக்கு மகப்பேறு என்ற பெரிய பேறு இருக்கிறதே, அதை விடவா வீடுபேறு பெரியது?"

கூட்டம் மீண்டும் சிரித்தது.

"இதை நான் சிரிப்பதற்காகச் சொல்லவில்லை" என்றார் மெய்யானந்தர், புன்னகை மாறாமல். "உண்மையிலேயே, பெண்களுக்கு மகப்பேற்றை விடப் பெரிய பேறு எதுவும் இல்லை."

சுகுணா சற்றே ஏமாற்றத்துடன் அமர்ந்தாள்.

"என்னம்மா, நான் சொன்ன பதில் உனக்கு ஏமாற்றம் அளிக்கிறதா?" என்றார் மெய்யானந்தர் அவளைப் பார்த்து.

"ஆமாம்" என்றாள் சுகுணா.

கூட்டம் அதிர்ச்சியான முகபாவத்துடன் அவளை நோக்கியது.

"பெண்களுக்கு மகப்பேறு என்ற பெரும்பேறு இருக்கிறது என்பதற்காக வீடுபேறு அவர்களுக்கு மறுக்கப்படவில்லை. ஆண்களைப் போன்று ஆசிரம நியதிகள் எதுவும் பெண்களுக்கு வகுக்கப்படாததால் பெண்கள் வீடுபேறு அடைவதற்காக எதுவுமே செய்ய வேண்டியதில்லை."

"எதுவுமே செய்ய வேண்டாமா?" என்றாள் சுகுணா வியப்புடன்.

"வேண்டாம். கணவனையும் குடும்பத்தையும் அக்கறையோடு பார்த்துக்கொண்டால் போதும்! என்ன, இதுவே பெரும்பாடு ஆயிற்றே, இதை விடக் காட்டுக்குப் போய்த் தவம் செய்வதே சுலபமாக இருக்குமே என்று சொல்லப் போகிறாயா?"

இதற்குச் சிரிப்பதா வேண்டாமா என்று கூட்டம் யோசித்துக் கொண்டிருந்தபோது, சுகுணா மட்டும் வாய்விட்டுச் சிரித்தாள். அவள் சிரிப்பில் சாமியாரும் சேர்ந்து கொண்டார்.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 6
வாழ்க்கைத் துணைநலம்
குறள் 58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

பொருள்:
ஒரு பெண் தன் கணவனையும் குடும்பத்தையும் முறையாகப் பேணி வந்தால், அவள் தேவர்கள் வாழும் உலகை அடையும் பெரும் பேற்றைப் பெறுவாள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














No comments:

Post a Comment