ராஜசேகரனுக்கு 60 வயது வரை உடல்நலப் பிரச்னை இருந்ததில்லை. அவர் தன் உடல்நலம் குறித்துச் சற்றுப் பெருமிதம் கூடக் கொண்டிருந்தார்.
ஆனால் அவர் காடராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டி வந்தபோது, அறுவை சிகிச்சைக்கு முன் அவருக்குச் செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்த பிறகுதான் காடராக்ட் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.
ராஜசேகரன் சர்க்கரை வியாதிக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவருக்குக் கல்லீரலில் பழுது இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கும் மருந்து சாப்பிடத் தொடங்கினார்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் உடல்நலக் கோளாறுகளுக்கு ஒரு பட்டியலே போட வேண்டும் போல் சிறிதும் பெரிதுமாக வேறு சில தொந்தரவுகளும் சேர்ந்து கொண்டன.
60 வருடங்கள் வரை சீராக இருந்த தன் உடல்நிலையில் இரண்டு வருடங்களில் எப்படி இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டன என்பது ராஜசேகருக்கே மலைப்பாக இருந்தது.
அவரும், அவர் மனைவியும் தங்கள் மகனுடனும், மருமகளுடனும் வசித்து வந்தனர். அவருடைய மகளும், மாப்பிள்ளையும் அடிக்கடி அவரை வந்து பார்த்து விட்டுப் போவார்கள்.
மனைவி, மகன், மருமகள், மகள், மாப்பிள்ளை அனைவரும் தனக்கு ஆதரவாக இருந்து தன்னை உற்சாகப்படுத்தியது அவருக்கு ஆறுதலாக இருந்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று அவர் மகளும், மாப்பிள்ளையும் அவரைப் பார்க்க வந்திருந்தபோது ராஜசேகர் எல்லோரையும் தன் அறைக்கு அழைத்தார். தன் மகனிடம் ஒரு சிறிய அட்டையைக் கொடுத்தார்.
"என்னப்பா இது?" என்றான் அவர் மகன்.
"இது ஆர்கன் டொனேஷன் கார்டு. என் உடல் உறுப்புகளை தானம் கொடுப்பதற்காக நான் பதிவு செஞ்சுக்கிட்டிருக்கேன். நான் இறந்தப்பறம் இதில இருக்கற நம்பருக்கு ஃபோன் பண்ணினா அவங்க என் உடம்பை ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போய் பயன்படக் கூடிய உறுப்புகளை எடுத்துப்பாங்க. உங்க எல்லாருக்கும் இது தெரியணும்னுதான் எல்லார் முன்னாலயும் இந்த கார்டை உ ன்கிட்ட கொடுக்கறேன்" என்றார் ராஜசேகர்.
"இப்ப எதுக்குங்க இதெல்லாம்? மருந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கீங்க. உடம்பு குணமாகி ரொம்ப நாள் இருக்கப்போறீங்க, இப்படியெல்லாம் பேசாதீங்க" என்றாள் அவர் மனைவி.
"ஆமாம்ப்பா. இப்பல்லாம் எவ்வளவோ பேரு உடம்பில எவ்வளவோ பிரச்னை இருந்தாலும் மருந்து சாப்பிட்டுக்கிட்டு ரொம்ப நாள் இருக்காங்க, உங்களுக்கு எதுவும் ஆகாது" என்றான் அவர் மகன்.
"நீங்க சொல்றபடியே நடக்கலாம். ஆனா இவ்வளவு வியாதிக்கு மத்தியில என் உடம்பில உயிர் எப்படி ஒட்டிக்கிட்டிருக்குன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஓட்டை உடைசலா இருக்கற வீட்டில நாம ரொம்ப நாள் குடி இருப்போமா? அதனாலதான் நான் தயாரா இருக்கணும்னு நினைக்கறேன். நாம நம்பிக்கையோடயே இருப்போம். ஆனா தயாராகவும் இருக்கணும்ல?" என்றார் ராஜசேகர் சிரித்தபடி.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 34
நிலையாமை
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
பொருள்:
நோய்களுக்கு இடமாகிய உடம்பில் ஒரு மூலையில் குடியிருக்கும் உயிருக்கு நிலையாக இருப்பதற்கான வீடு இதுவரை கிடைக்கவில்லையோ?
No comments:
Post a Comment