About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, July 27, 2020

351. குருபிரசாதின் கடைசி தினங்கள்

ராமமூர்த்திக்கு அன்றைய பொழுது மகிழ்ச்சியானதாக விடியவில்லை.

அவர் வழக்கம்போல் காலையில் எழுந்து சுறுசுறுப்பாகத் தன் பணிகளைத் துவக்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அவரது கைபேசி ஒலித்தது. 

குருபிரசாத் மாரடைப்பால் இறந்து விட்டாராம்.   

குருபிரசாத் ஒரு வங்கியின் தலைவராக இருந்து ஒய்வு பெற்றவர். அவருடைய வங்கியில் ராமமூர்த்தியின் நிறுவனத்துக்குக் கணக்கு இருந்ததால்தான் அவருடன் ராமமூர்த்திக்கு அறிமுகம் ஏற்பட்டது என்றாலும் இருவருக்கும் இடையே தனிப்பட்ட நெருக்கம் ஏற்பட்டு விட்டது.  

குருபிரசாதை நேர்மையானவர் என்று சொல்ல முடியாது. நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டுதான் அவர் தன் வங்கியில் கடன் வழங்குவார் என்று அவரைப் பற்றி ஒரு பிம்பம் உண்டு. 

ராமமூர்த்தியே தன் நிறுவனத்துக்குக் கடன் பெற குருபிரசாதுக்குப் பணம் கொடுத்திருக்கிறார். 'நட்பு வேறு, பிசினஸ் வேறு' என்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்தவர் குருபிரசாத்!

ஆயினும் எல்லோரிடமும் நன்கு பழகக் கூடியவர் என்பதால் அவருடன் நிறுவன ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும்  ஒரு நெருக்கம் இருந்தது. எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். 

குருபிரசாத் ஒய்வு பெற்றுச் சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் குருபிரசாத் ராமமூர்த்திக்கு ஃபோன் செய்து, "என்ன ராமமூர்த்தி? நான் ரிடயர் ஆனதும் என்னை மறந்துட்டீங்களா? வீட்டுப் பக்கமே வரலியே?" என்று கேட்டார்.

அவர் சொன்னதற்காக ராமமூர்த்தி அவர் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார்.

குருபிரசாத் அவரிடம் புலம்பித் தள்ளி விட்டார்.

"சொன்னா நம்ப மாட்டீங்க. நான் ரிடயர் ஆனா அடுத்த நாள்ளேந்து என் வாழ்க்கையே தலைகீழா மாறிடுச்சு. எப்பவும் என்னைச் சுத்தி பத்து பேராவது இருந்துக்கிட்டிருப்பாங்க. உங்களுக்கு பிரைவசியே இல்லையேன்னு என் மனைவி கூட சில சமயம் சொல்லி இருக்கா. ஆனா அது எனக்குப் பிடிச்சிருந்தது.

"ஆனா இப்ப ஒத்தர் கூட என்னைப் பாக்க வரதில்ல. ஃபோன் பண்றதும் இல்ல. நானா யாருக்காவது ஃபோன் பண்ணிப் பேசினாக் கூட பட்டும் படாம பேசிட்டு டக்னு கட் பண்ணிடறாங்க. வெளியில எங்கேயாவது பாத்தா கூட கண்டும் காணாம போறாங்க. நானா வலுவில போய்ப் பேசினாக் கூட ஒப்புக்கு ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசிட்டு விலகிடறாங்க. ஏன், நீங்க கூட என்னை மறந்துட்டீங்களே! நான் ஃபோன் பண்ணினப்புறம்தான் வந்தீங்க. ஆனா அதுக்கே நான் உங்களுக்கு நான் நன்றி சொல்லணும்"

"அப்படி இல்ல. வேலை அதிகமா இருந்ததால..."

"இல்ல, ராமமூர்த்தி. பணம், பதவி, அதிகாரம் இதையெல்லாம் சம்பாதிக்கறதிலயே என் வாழ்க்கையைக் கழிச்சுட்டேன். நல்ல நண்பர்களை சம்பாதிக்க நான் முயற்சி செய்யவே இல்ல. என் சொந்தக்காரங்க கிட்ட கூட அலட்சியமாத்தான் நடந்துக்கிட்டேன். இப்ப அவங்களும் என்னை மதிக்கறதில்ல."

"எல்லாம் சரியாயிடும் சார். நான் முடிஞ்சப்பல்லாம் உங்களை வந்து பாக்கறேன். நீங்களும் உங்க மனைவியை அழைச்சுக்கிட்டு என் வீட்டுக்கு வாங்க" என்று சொல்லி வீட்டுக் கிளம்பினார் ராமமூர்த்தி.

அதற்குப் பிறகு இரண்டு மூன்று முறை ராமமூர்த்தி குருபிரசாதின் வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்தார். குருபிரசாத் மனதளவில் மிகவும் சோர்வடைந்து மன வருத்தத்துடனேயே காட்சி அளித்தார். 

வேலையிலிருந்து ஒய்வு பெற்ற பின் எல்லா வசதிகளுடனும், ஒரு பிரச்னையும் இன்றி நிம்மதியாக வாழக் கூடிய சூழ்நிலை அவருக்கு அமைந்திருந்தாலும், அதை அனுபவிக்கும் மனநிலையை அவரால் பெற முடிய வில்லை என்று ராமமூர்த்திக்குத் தோன்றியது.

குருபிரசாதின் இறுதித் சடங்கு மாலை 4 மணிக்கு நடக்க இருப்பதை அறிந்து சுமார் மூன்றரை மணிக்கு அவர் வீட்டுக்குச் சென்றார் ராமமூர்த்தி. 

தெரு நிறைய கார்கள் நிற்கும், தன் காரை நிறுத்த இடம் இருக்குமோ என்னவோ என்று நினைத்துக் கொண்டே சென்றார் ராமமூர்த்தி. 

ஆனால் குருபிரசாதின் வீட்டு வாசலில் ஒரே ஒரு காரும், சில இரு சக்கர வாகனங்களும்தான் நின்றிருந்தன. 

உள்ளே சென்றபோது இறுதிச் சடங்குகள் துவங்கி நடந்து கொண்டிருந்தன. அவர் மனைவி மகன்களைத் தவிர ஒரு சில உறவினர்களும், இன்னும் நான்கைந்து பேரும்தான் இருந்தனர்.  நிறைய பேர் இனிமேல்தான் வருவார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டார் ராமமூர்த்தி.

ஆனால் நான்கரை மணிக்கு குருபிரசாதின் சடலம் மயானத்துக்கு எடுத்துச் செல்லத் தயாராக இருந்தபோதும் மொத்தம் பதினைந்து பேர்தான் வந்திருந்தனர்.

"தோளில் தூக்கிட்டுப் போக நாலு பேர் வரணும். யார் வரீங்க?" என்றார் சாஸ்திரி.

இரண்டு பேர்தான் முன் வந்தார்கள். வேறு யாரும் வராததைக் கண்டு ராமமூர்த்தியும் முன் வந்தார்.

"இன்னும் ஒத்தர் வேணுமே!" என்றார் சாஸ்திரி.

அதற்குப் பிறகு, தயக்கத்துடன் இன்னொருவர் முன் வந்தார். 

குருபிரசாதின் இறுதிச் சடங்குகள் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும் நீண்ட நேரம் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார் ராமமூர்த்தி. 

எப்போதும் குருபிரசாதைச் சுற்றிப் பல பேர் நின்றிருப்பார்களே, இன்று ஏன் யாருமே வரவில்லை? 

வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், வங்கியில் கடன் பெற்றவர்கள், அவருடைய பிற நண்பர்கள் என்று நூற்றுக் கணக்கானோர் இருப்பார்களே, அவர்களில் பத்து பேர் கூட வரவில்லையே! அவருடைய உறவினர்கள் கூட ஐந்தாறு பேர்தான் வந்திருந்தனர். ஏன் இப்படி?

குறு பிரசாத் தன்னிடம் சொன்னது ராமமூர்த்திக்கு நினைவு வந்தது. 

குருபிரசாத் தன் வாழ்நாள் முழுவதும் பதவி, அதிகாரம், பணம் போன்றவற்றைச் சம்பாதிப்பதில்தான் கவனம் செலுத்தினார்.

அவருடைய  இறுதிக் காலத்தில் அவர் மீது அன்பும் அக்கறையும் காட்டி, இறந்த பிறகு அவரை வழியனுப்ப வரும் அளவுக்கு அவர் மீது அன்பு செலுத்தக் கூடியவர்களை அவர் சம்பாதிக்கவில்லை! 

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 36    
  மெய்யுணர்தல்   
குறள் 351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு..

பொருள்:
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

பொருட்பால்                                                                                       காமத்துப்பால்










No comments:

Post a Comment