About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, July 20, 2020

348. பூர்வாசிரமம்

"குருவே! என் பூர்வாசிரம மனைவியும், மகனும் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள். நான் அவர்களைப்  பார்த்துப் பேசத் தங்கள் அனுமதி வேண்டும்" என்றார் தர்மானந்தர்.  

"பார்த்துப் பேசி விட்டு வா!" என்றார் பிரம்மானந்தர் சிரித்தபடி. 

சற்று நேரம் கழித்துத் திரும்பி வந்த தர்மானந்தர், "சுவாமி! என் மகனுக்குத் திருமணம் நிச்சயமாகி இருக்கிறதாம். இந்த மகிழ்ச்சியான விஷயத்தை என்னிடம் தெரிவித்து, கல்யாணப் பத்திரிகையை என்னிடம் கொடுத்து ஆசி பெறவே என் மனைவியும், மகனும் வந்திருக்கிறார்கள். தாங்களும் அவர்களை ஆசீர்வதித்துக் கல்யாணப் பத்திரிகையையும் தங்கள் கையால் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு அருள வேண்டும்" என்றார்.

"அருள வேண்டியது ஆண்டவன்தான் அப்பா, நான் இல்லை" என்ற பிரம்மானந்தர், "அவர்களை வரச் சொல். எல்லோரும் வாழ்த்துவது போல் நானும் வாழ்த்துகிறேன்" என்றார்.

தர்மானந்தரின் மனைவியும், மகனும் பிரம்மானந்தரின் காலடிக்குக் கீழ் திருமண அழைப்பிதழை வைத்து அவர் காலில் விழுந்து வணங்கினர். 

திருமண அழைப்பிதழை எடுத்துப் போய் தான் ஆராதிக்கும் விக்கிரகத்தின் திருவடிகளில் வைத்து வணங்கி விட்டு அதை அவர்களிடம் கொடுத்து, "இறைவன் அருளால் திருமணம் சிறப்பாக நடக்கும். மணமக்கள் எல்லா நலன்களும் பெற்று நீண்ட நாட்கள் சிறப்பாக வாழ்வார்கள்" என்று வாழ்த்தினார் பிரம்மானந்தர்.

"சுவாமி! தாங்கள் திருமணத்துக்கு வந்து மணமக்களை வாழ்த்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாள் தர்மானந்தரின் மனைவி. 

"என் போன்ற சந்நியாசிகள் திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம் இல்லையே!" என்று சொல்லி தர்மானந்தரைப் பார்த்துச் சிரித்தார் தர்மானந்தர்.

தர்மானந்தரின் மனைவி தன் முன்னாள் கணவரின் முகத்தைப் பார்த்தாள். அவர் மௌனமாக இருந்தார்..

"அவர்களை வழி அனுப்பி விட்டு வா, தர்மானந்தா!" என்றார் பிரம்மானந்தர்.

மனைவியும், மகனையும் வழியனுப்பி வைத்து விட்டுத் திரும்பி வந்தார் தர்மானந்தர். 

"என்ன தர்மானந்தா?" என்றார் பிரம்மானந்தா.  

"இல்லை... என் மகனின் திருமணத்துக்கு நான் சென்று அவனை ஆசீர்வதித்து விட்டு வரலாமா?" என்றார் தர்மானந்தர்.

"அது உன் விருப்பம்" என்றார் பிரம்மானந்தர்.

தர்மானந்தர் மௌனமாக இருந்தார்.

"ஆளவந்தார் என்று ஒரு வைணவத் துறவி இருந்தார். ராமானுஜரின் குருக்களுக்கும் குருவாக இருந்தவர்."

"கேள்விப் பட்டிருக்கிறேன் சுவாமி. ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை மீட்டு இந்த உலகுக்கு அளித்த மகான் நாதமுனிகள் பேரன்."

"ஆமாம். நீ நன்கு கற்றறிந்தவன் என்பது எனக்குத் தெரியும். அதனால்தானே எனக்குப் பின் இந்த மடத்தின் தலைமைப் பீடத்தை ஏற்க உன்னைத் தேர்ந்தெடுத்து  நீ உடனே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து அடுத்த மாதம் நாளும் குறித்திருக்கிறேன்! 

"ஆளவந்தார் துறவியாவதற்குமுன் ஒரு சிறிய நாட்டின் அரசராக இருந்தவர். தன் ராஜ்யம், குடும்பம் எல்லாவற்றையும் விட்டு விட்டுத் துறவியானவர். அவர் துறவி ஆனதும் அவருடைய மகன் அவர் மடத்தில் சேர்ந்து சேவை செய்ய விரும்பினார். ஆளவந்தார் அவரை அண்டவே விடவில்லை. 

"அவர் சீடர்கள் வற்புறுத்திய பிறகு அவரைத் தன் பார்வையில் வராதபடி வேறொரு இடத்தில் பணி புரிய அனுமதித்தார். வயதான காலத்தில் அவர் மனைவி அவரைச் சந்திக்க வந்தபோதும் அவர் மறுத்து விட்டார்."

"என் தவறு எனக்குப் புரிகிறது சுவாமி. என் பூர்வாசிரம உறவுகளை நான் பார்த்திருக்கக் கூடாது!" என்றார் தர்மானந்தர். 

"பலர் நம்மிடம் வந்து தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழைக் கொடுத்து ஆசி கேட்கிறார்கள். நாமும் அவர்கள் மனத் திருப்திக்காக அவர்களுக்கு ஆசி கூறுகிறோம், ஆனால் பற்றுதல் எதுவும் இல்லாமல். துறவு ஒரு கடினமான நிலை. துறவு ஏற்றபின் பற்று தொடர்ந்தால், அது நம்மைப் பற்றிக் கொள்ளும்! முதலில் 'என் பூர்வாசிரம மனைவியும் மகனும் வந்திருக்கிறார்கள்' என்று சொன்ன நீ அவர்களைப்  பார்த்து விட்டு வந்ததும், 'என் மனைவி, என் மகன்' என்று சொல்ல ஆரம்பித்து விட்டாய்! இது உன்னை அறியாமலேயே நிகழ்ந்தது. பூர்வாசிரமும் சந்நியாச ஆசிரமம் கலந்து விட்டன. அதுதான் பற்றின் வலிமை!"

"நான் தவறு செய்து விட்டேன் குருவே! நான் இந்த மடத்தின் தலைமைப் பொறுப்பேற்கத் தகுதியற்றவன். அந்தப் பொறுப்புக்கு வேறு யாராவது தகுதி உடையவர்களை நியமித்து விடுங்கள் குருவே!" என்றார் தர்மானந்தர்.

"இல்லை தர்மானந்தா! உன் தவறை உடனே உணர்ந்து உன் தகுதியையும் குறைத்துக் கொள்கிறாய்! இது உன் பண்பட்ட மனத்தைக் காட்டுகிறது. தலைமைப் பொறுப்பை ஏற்க உனக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. ஆயினும் நீ பொறுப்பேற்றுக் கொள்வதை ஒரு வருடம் தள்ளிப் போடுவது உகந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

"பூரியில் இருக்கும் நம் மடத்துக்குப் பொறுப்பேற்று நடத்தியவர் இறைவனடி அடைந்து விட்டாரே, அதனால் அந்த மடத்தைத் தலைமையேற்று நடத்த யாரையாவது நியமிக்க வேண்டும். நீ ஒரு வருடம் நம் பூரி மடத்துக்குப் பொறுப்பேற்று நடத்து. அடுத்த ஆண்டு உன்னை இங்கே திரும்ப அழைத்து வந்து உன்னிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கிறேன்" என்றார் பிரம்மானந்தர்.  

"அப்படியே செய்கிறேன் குருவே!"

"நீ உடனே பூரிக்குச் செல்ல வேண்டும் என்பதில்லை. நீ எப்போது கிளம்ப விரும்புகிறாயோ அப்போது கிளம்பலாம்" என்றார் பிரம்மானந்தர்.

"இல்லை குருவே! நான் உடனே கிளம்புகிறேன். என் பூர்வாசிரமாக் குடும்பத்தில் நடக்கும் திருமணத்தின்போது நான் இங்கே இருக்க விரும்பவில்லை." 

பிரம்மானந்தர் புன்சிரிப்புடன் தர்மானந்தரைப் பார்த்தார். 

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 35    
  துறவு  
குறள் 348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

பொருள்:
முற்றும் துறந்தவர்களே உயர்ந்த நிலையில் உள்ளவர்கள். அவ்வாறு துறக்காத மற்றவர்கள் அறியாமை என்னும் வலையில் சிக்கியவர்கள் ஆவார்கள்.
 பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

2 comments:

  1. Hello Mr. Parthasarathy Sir,

    I am teaching to small kids in USA thirukkurals on cost of free. I am taking and telling your wonderful related stories, then and there. Really your experiences of all kind of stories explains beautifully with the relative Thirukkurals. Thanking you for your wonderful guidance, and tamil world will never forget your services. kamakshiswaminathan.

    ReplyDelete
    Replies
    1. Pardon me for my delayed reply. Delighted to read your mail. Thank you for making use of my stories and your kind words.

      Delete