About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, July 22, 2020

349. அர்ஜுனனின் கேள்விகள்

"கண்ணா! இவ்வளவு நேரம்  உடல், ஆத்மா ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்புகள் பற்றி நீ விரிவாக விளக்கிய பிறகு எனக்கு ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது. ஆயினும் இன்னும் சில ஐயங்கள் உள்ளன" என்றான் அர்ஜுனன்.

"கேள், ஆனால் விரைவாகக் கேள். போரைத் துவக்கத் தயாராகி விட்டார் பீஷ்மர்" என்றார் கண்ணன்.

"நீயும் சரி, நானும் சரி, இதற்கு முன் பல பிறவிகள் எடுத்திருக்கிறோம் என்று சொன்னாயே?"

"ஆமாம்."

"எதற்கு இத்தனை பிறவிகள்? ஒரு பிறவி போதாதா?"

"போதும் என்பதை முடிவு செய்வது உன் கையில்தான் இருக்கிறது!"

"எப்படி?"

" 'நான்', 'எனது' என்ற எண்ணங்கள் இருக்கும் வரை பிறவிகள் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கும். அவற்றைக் கைவிட்டு விட்டால் இனி பிறவி இருக்காது."

" 'நான்', 'எனது' என்ற எண்ணங்கள் இயல்பானவைதானே? அவற்றில் என்ன தவறு?"

" 'நான்' என்ற எண்ணம் அகந்தையை வளர்க்கும். உன்னை முக்கியமானவன் என்று உணர வைக்கும். அந்த முக்கியத்துவத்துக்கு ஏதாவது பங்கம் வந்தால் கோபத்தைத் தூண்டும். கோபம் தவறான செயல்களில் உன்னை ஈடுபட வைக்கும். 'எனது' என்ற எண்ணம் பொருட்களின் மீதான ஆசையை வளர்க்கும். என்னுடையது என்று நான் நினைக்கும் பொருள் கையை விட்டுப் போகக் கூடாது என்ற எண்ணமும், வேறு பொருட்களை என்னுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் உன்னைத் தவறான செயல்களில் ஈடுபட வைக்கும்."

"அப்படிப் பார்த்தால், இந்த ராஜ்யம் வேண்டும் என்பதற்காகப் போர் செய்வது கூடத் தவறுதானே?"

"உன்னிடம் ஒருவர் ஒரு பொருளை ஒப்படைத்திருக்கிறார் என்றால் அதைப் பாதுகாப்பது உன் கடமை. அதை உன்னிடமிருந்து வேறொருவர் பறிக்க முயற்சி செய்தால் போரிட்டாவது அதைக் காக்க வேண்டியது உன் கடமை. 

"இந்த ராஜ்யம் உங்களுக்குத் சொந்தம் இல்லை. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட ராஜ்யத்தை நீங்கள் ஆண்டு வந்திர்கள். அவ்வளவுதான். உங்களிடம் ராஜ்யத்தை ஒப்படைத்த திருதராஷ்டிரர் உங்களிடம் அதைத் திருப்பிக் கேட்டிருந்தால் உன் அண்ணன் யுதிஷ்டிரன் மகிழ்ச்சியுடன் அதைத் திருப்பிக் கொடுத்திருப்பான். 

"ஆனால் வஞ்சகமாகப் பறிக்கப்பட்ட ராஜ்யத்தைப் போர் செய்து மீட்கும் பணிக்கு நீங்கள் தள்ளப்பட்டிருக்கிறீர்கள். எனவே போர் உன் கடமை ஆகிறது. போரில் வென்று ராஜ்யத்தைத் திரும்பப் பெற்றவுடன், அதை என்னுடையது என்ற எண்ணம் இன்றி நீங்கள் ஆட்சி புரிய வேண்டும்." 

" 'நான்', 'எனது' என்பவை ஒருவருக்கு அடிப்படையான விஷயங்கள் அல்லவா? அவற்றை எப்படிக் கை விட முடியும்?"

"இவற்றைக் கைவிட வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் காலப் போக்கில் பொருட்களின் மீதான பற்று குறைந்து 'நான்', 'எனது' என்ற மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்."

" 'நான்', 'எனது' என்ற எண்ணத்தை முழுமையாக விட்டவர்கள் முனிவர்களைத் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா?"

"சென்ற பிறவியில் என் மாமனாராக இருந்த ஜனகர் அப்படி இருந்தவர்தான். ஒரு அரசராக இருந்தும் அவர் எதையுமே தனதென்று நினைக்காமல் ஒரு அரசருக்கான கடமைகளைச் செய்து வந்தார். தனது ராஜ்யத்தைப் பாதுகாக்க அவர் எதிரிகளுடன் போர் செய்திருக்கக் கூடும். ஆனால் என்னுடைய ராஜ்யம் என்ற எண்ணம் அவரிடம் சிறிதும் இருந்ததில்லை."

"ஆமாம். நீ கூடப் பல பிறவிகள் எடுத்திருக்கிறாயே, உனக்குக் கூட'நான்', 'எனது' என்ற எண்ணம் இருந்ததா என்ன?"

"நான் பிறவிகள் எடுத்தது என் விருப்பத்தினால். நான் விரும்பினால் இன்னொரு பிறவி கூட எடுப்பேன், அல்லது இதுவே நான் எடுக்கும் கடைசிப் பிறவியாக இருக்கவும் கூடும். சரி. பீஷ்மர் சங்கைக் கையில் எடுத்து விட்டார். அவர் சங்கை ஊதியதும், நானும் ஊதுவேன். உடனே போர் துவங்கி விடும். நான் சொன்னவற்றை மனதில் கொண்டு 'நான்', 'எனது' என்னும் எண்ணம் இல்லாமல் போர் செய்வதை ஒரு கடமையாக நினைத்துச் செய். உனக்கு வெற்றி உண்டாகட்டும்!" என்று அர்ஜுனனை வாழ்த்தி விட்டு சங்கைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஊதுவதற்குத் தயாராக நின்றார் கண்ணன்.

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 35    
  துறவு  
குறள் 349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

பொருள்:
இருவகைப் பற்றையும் அறுத்த பிறகுதான் ஒருவருக்குப் பிறவி இல்லாத நிலைமை ஏற்படும். இல்லாவிடில், பிறப்பும், இறப்பும் மாறி மாறி வரும் நிலையாமைதான் ஏற்படும்.
 பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment