About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, July 24, 2020

350. கட்டிட மேஸ்திரி

வீட்டின் மேல் தளத்துக்கு கான்கிரீட் போட்டு முடித்தபோது மாலை 7 மணி ஆகி விட்டது. நல்லவேளை, இருட்ட ஆரம்பித்ததுமே வேலை முடிந்து விட்டது. இல்லாவிட்டால், விளக்குகளுக்கு ஏற்பாடு செய்து, இருட்டிய பின் வேலையைத் தொடர்வது கடினமாக இருந்திருக்கும். கான்கிரீட் போட ஆரம்பித்தால், முழுவதும் போட்டு முடிக்க வேண்டுமே! 

வேலை செய்த ஆட்கள் அனைவரும் கிளம்பிச் சென்ற பின், பொருட்கள் வைத்திருக்கும் அறையைப் பூட்டி விட்டு, வாட்ச்மேனிடம் சொல்லி விட்டுக் கிளம்பினான் கஜேந்திரன். கான்கிரீட் போட்டு முடிக்கும் வரை படபடப்புதான். இனி சில நாட்களுக்கு அவ்வளவு மன அழுத்தம் இருக்காது.  

ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, வழியில் அம்மன் கோவிலில் ஏதோ சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. 

"வீடு கட்டும்போது கான்கிரீட் போடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?" என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுந்ததும், ஆர்வத்துடன் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு கவனித்தான் கஜேந்திரன். 'நம் வேலையைப் பற்றிப் பேசுகிறாரே!'

சற்று நேரம் அவர் பேச்சைக் கேட்கலாம் என்று நினைத்த கஜேந்திரன், ஸ்கூட்டரை நிறுத்த இடம் தேடினான். அங்கே பல வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால், ஸ்கூட்டரை நிறுத்த இடமில்லை. சற்று தூரம் ஸ்கூட்டரைத் தள்ளிக் கொண்டு போய், ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு வந்தான்.

சொற்பொழிவாளர் பேசியது காதில் விழுந்து கொண்டிருந்தது. ஆனால், ஸ்கூட்டரை நிறுத்த இடம் பார்த்துக் கொண்டிருந்ததில், அவர் பேச்சை அவன் சரியாக கவனிக்கவில்லை.

அவன் உள்ளே போய் உட்கார்ந்தபோது, அவர் இறைவனிடம் பக்தி செலுத்துவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அவர் கான்கிரீட் போடுவது பற்றிப் பேசியதைக் கேட்டுத்தான், கஜேந்திரன் அவருடைய சொற்பொழிவைக் கேட்க வந்தான். ஆனால், தான் அதைத்  தவற விட்டு விட்டோம் என்று அவனுக்குத் தோன்றியது.

ஆயினும், அவருடைய பேச்சு சுவாரசியமாக இருந்ததால், ஒரு மணி நேரம் அங்கே அமர்ந்து,  அவர் பேச்சை இறுதிவரை கேட்டுக் கொண்டிருந்தான் கஜேந்திரன்.   

சொற்பொழிவு முடிந்ததும் கஜேந்திரன் எழுந்து வந்தபோது, தன்னை யாரோ பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டுத் திரும்பினான்.

அவனுடைய காண்டிராக்டர் முத்தையா!

"நீ எங்கேப்பா இங்கே? நீ இது மாதிரி பக்திப் பேச்சுக்கெல்லாம் வருவியா என்ன?" என்றார் அவர்.

"இல்ல சார், சும்மாதான்!" என்று தயங்கியபடியே சொன்ன கஜேந்திரன், "ஸ்கூட்டரில் வந்துக்கிட்டிருந்தப்ப, ஏதோ கான்கிரீட் போடறதைப் பத்திப் பேசினது காதில விழுந்தது. அதான் வந்தேன். ஆனா, அப்புறம் அவர் வேற விஷயங்களுக்குப் போயிட்டாரு. கான்கிரீட் போடறதைப் பத்தி எதுக்கு சொன்னாருன்னு புரியல. நீங்க முழுக்கக் கேட்டீங்களா?"  என்றான்.

"கேட்டேன். ஆனா, என்னால உனக்கு விளக்க முடியுமான்னு தெரியல. பேச்சாளர் எனக்குத் தெரிஞ்சவர்தான். வா, அவர் கிட்டயே போய்க் கேட்டுடலாம்" என்றார் முத்தையா.

"பரவாயில்ல, சார்!" என்று கஜேந்திரன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, முத்தையா அவன் கையைப் பற்றி, மேடைக்குப் பின்னே இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

அறையில் இன்னொருவருடன் பேசிக் கொண்டிருந்த சொற்பொழிவாளர், முத்தையாவைப் பார்த்ததும் "வாங்க, முத்தையா!" என்று அழைத்து விட்டு, "இவர்தான் என் வீட்டைக் கட்டிக் கொடுத்த காண்டிராக்டர்" என்று மற்றவரிடம் முத்தையாவை அறிமுகப்படுத்தினார்.

"நீங்க பேசிக்கிட்டிருங்க, நான் இப்ப வரேன்" என்று சொல்லி விட்டு, மற்றவர் எழுந்து வெளியே சென்றார்.

இருவரையும் அமரச் சொன்ன பின், "சொல்லுங்க, முத்தையா! பேச்சைக் கேட்டீங்களா? கூட்டத்தில் நீங்க இருந்ததை  நான் கவனிக்கவே இல்லையே!" என்றார் சொற்பொழிவாளர்.

"கேட்டேன் சார். இவரு கஜேந்திரன். நம்ம கிட்ட மேஸ்திரியா இருக்காரு. இவர் எங்கிட்ட வந்து சேர்ந்தப்பறம், நான் கட்டிடம் கட்டறதைப் பார்க்கப் போக வேண்டியதே இல்லை. எல்லாத்தையும் இவரே நல்லாப் பாத்துப்பாரு.  நீங்க பேச ஆரம்பிச்சுக் கொஞ்ச நேரம் கழிச்சுதான் இவர் வந்திருக்காரு. நீங்க கான்கிரீட் போடறதைப் பத்தி ஏதோ சொன்னீங்க இல்ல? அதைப் பத்தி என்ன சொன்னீங்கன்னு தெரிஞ்சுக்க விரும்பறாரு. நீங்க என்ன சொன்னீங்கன்னு நான் சொல்றதை விட. நீங்களே சொன்னா நல்லா இருக்கும்னுதான் உங்ககிட்ட அழைச்சுக்கிட்டு வந்தேன். நீங்க விளக்கறதைக் கேட்டா, எனக்கும் இன்னும் தெளிவாப் புரிஞ்சுக்கிட்ட மாதிரி இருக்கும்" என்றார் முத்தையா.

"அப்படியா? உங்க ஆர்வத்தைப் பாராட்டறேன். நான் பேசினது நமக்கு இருக்கிற பற்றுக்களை விடறதைப் பத்தி. பற்றுக்களை விடறது சுலபம் இல்ல. ஆனா, கடவுள்கிட்ட பற்று வச்சா, மற்ற பற்றுக்கள் விலகிடும்னு சொல்லிட்டு, அதுக்கு உதாரணமா கான்கிரீட் போடறதைச் சொன்னேன்" என்று சொல்லி விட்டு, கஜேந்திரனைப் பார்த்தார் சொற்பொழிவாளர்.

கஜேந்திரன் மௌனமாகத் தலையாட்டினான்.

"கான்கிரீட் எப்படிப் போடுவீங்க?" என்றார் பேச்சாளர், கஜேந்திரனைப் பார்த்து.

கஜேந்திரன் ஒரு நிமிடம் திகைத்து விட்டு, முத்தையாவைப் பார்த்தான். பிறகு தயக்கத்துடன், "முதல்ல கம்பி கட்டுவோம். அப்புறம் கம்பிகளுக்கு அடியில பலகைகளை வச்சு, பலகைகளை மரக் கம்புகளால முட்டுக் கொடுத்து நிக்க வச்சுட்டு, அப்புறம் கம்பிகளுக்கு மேல கான்கிரீட் போடுவோம்" என்றான்.

"கீழே பலகை, அதுக்கு முட்டுக் கொடுக்க மரக்கம்புகள் இதெல்லாம் எதுக்கு?"

"கீழே பலகை இல்லேன்னா கான்கிரீட் எப்படி நிக்கும்?" என்றான் கஜேந்திரன், இவர் என்ன இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் கேட்கிறார் என்று நினைத்துக் கொண்டே.

"பலகையோட சப்போர்ட்லதான் கான்கிரீட் நிக்குது. பலகைகளே மரக்கம்புகளோட சப்போர்ட்லதான் நிக்குது! ஆனா, பத்துப் பதினஞ்சு நாள் கழிச்சுப் பலகைகளை எடுத்துடுவீங்க இல்ல?"

"ஆமாம்."

"அப்ப கான்கிரீட் எப்படி அந்தரத்தில நிக்குது?"

"அந்தப் பத்து பதினஞ்சு நாள்ள, கான்கிரீட் இறுக்கமானதும், இரும்போட பிடிச்சுக்குமே, அதனாலதான்!" என்று விளக்கினான் கஜேந்திரன்.

"அதனால, அதுக்கு வேற சப்போர்ட் தேவையில்லை, அப்படித்தானே?"

"ஆமாம்."

"நம்ம ஒவ்வொத்தருக்கும் நிறையப் பற்றுக்கள் இருக்கு. நாம இந்தப் பற்றுக்களை விட முடியாம இருக்கோம். நாம இந்தப் பற்றுக்களை விடணும்னா, நமக்கு இன்னொரு வலுவான பற்று வேணும். ஆரம்பத்தில, கான்கிரீட் பலகைகள் மேலதான் நிக்குது. ஆனா, கான்கிரீட் இரும்போட ஒட்டினப்புறம், அதுக்குப் பலகைகளோ, மரக் கம்புகளோ தேவை இல்லை இல்லையா? அதனாலதானே கான்கிரீட் செட் ஆனதும், பலகைகளையும், பலகைகளைத் தாங்கி நிக்கிற மரக்கம்புகளையும் எடுத்துடறோம்? அது மாதிரி, நாம கடவுள்கிட்ட பற்று வச்சோம்னா, அப்புறம் நம்மோட மற்ற பற்றுக்களை நம்மால விட்டுட முடியும். நாம கடவுள்கிட்ட வைக்கற பற்று கான்கிரீட் இரும்போட ஒட்டிக்கற மாதிரி வலுவா இருக்கும். கடவுள்கிட்ட பற்று வைக்கறதன் மூலமாத்தான் மற்ற பற்றுக்களை நாம விட முடியுங்கறதை விளக்கத்தான் இந்த உதாரணத்தைச் சொன்னேன். ஓரளவாவது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!" என்றார் சொற்பொழிவாளர்.

"நல்லாவே புரிஞ்சதுங்க" என்று சொல்லிக் கை கூப்பினான் கஜேந்திரன்.

"சொற்பொழிவில நீங்க சொன்னதை மறுபடியும் விளக்கமாக் கேட்டதில, எனக்கும் இன்னும் நல்லாப்  புரிஞ்சுது. என் மேஸ்திரிக்குத்தான் நான் நன்றி சொல்லணும்" என்று சொல்லி விட்டுச் சொற்பொழிவாளரிடம் விடை பெற்றார் முத்தையா. 

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 35    
  துறவு  
குறள் 350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

பொருள்:
பற்று எதுவும் இல்லாத கடவுளின் மீது பற்று வைக்க வேண்டும். நம் பற்றுக்களிலிருந்து விடுபட, அந்தப் பற்றைப் பற்றிக் கொள்ள வேண்டும்.
 பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment