About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, August 29, 2017

97. அரவிந்தனின் அனுபவம்

அரவிந்தன் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் ஒரு பியூன் அவனை நந்தி போல் இடைமறித்தான்.

"என்ன வேணும்?"

"டைரக்டரைப் பாக்கணும்."

"அதெல்லாம் பார்க்க முடியாது."

இதற்கு என்ன பதில் சொல்வதென்று அரவிந்தனுக்குத்  தெரியவில்லை. ஒரு நிமிடம் பேசாமல் நின்றான்.

"எஸ் ஓவைப் போய்ப் பாரு" என்றான் பியூன் 'போனால் போகிறது' என்பது போல்.

"தாங்க்ஸ்" என்று சொல்லி விட்டு அரவிந்தன் உள்ளே போனான்.

செக்‌ஷன் ஆஃபிஸர் என்ற செவ்வகப் பலகை வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய மேஜைக்குப் பின்னால் ஒருவர் அதிகார தோரணையுடன் அமர்ந்திருந்தார். மேஜைக்குப் பக்கத்தில் இரண்டு மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர்.

பணிவுடனும், கவலையுடனும் நின்று கொண்டிருந்தவர்கள் அந்த அலுவலகத்துக்கு ஏதோ ஒரு நோக்கத்துக்காக வந்தவர்கள் என்றும், அலட்சியமாகக் கையில் ஒரு பேப்பருடன் நின்றிருந்தவர் அலுவலக ஊழியர் என்றும் அரவிந்தன் ஊகித்தான்.

இரண்டு மூன்று நிமிடங்கள் நின்ற பிறகும் செக்‌ஷன் ஆஃபிஸர் அவனை கவனித்ததாகத் தெரியவில்லை.

அவன் "சார்" என்றதும் அவனைப் பார்க்காமலேயே 'கொஞ்சம் இரு' என்பது போல் கையால் சைகை காட்டி விட்டு, எதிரில்  இருந்தவர்களிடம் கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தார். அருகில் நின்ற ஊழியர் அதை ரசிப்பது போல் புன்னகை செய்து கொண்டிருந்தார்.

இன்னும் இரண்டு நிமிடங்கள் ஆனதும் அரவிந்தன் மீண்டும் "சார்!" என்றான்.

எஸ் ஓ இப்போது முகத்தை இன்னும் கடுமையாக்கிக் கொண்டு அவனிடம் திரும்பினார். "ஏம்ப்பா பேசிக்கிட்டிருக்கேனே தெரியல? நீயெல்லாம் படிச்சவன்தானே? அறிவு வேண்டாம்?" என்று எரிந்து விழுந்தார்.

அரவிந்தன் மௌனமாகத் தன் கையிலிருந்த கடிதத்தை அவர் முன் நீட்டினான்.

அவர் அதைப் பார்க்காமலேயே, பியூனிடம் "ஏம்ப்பா தண்டபாணி! இவரையெல்லாம் ஏன் எங்கிட்ட அனுப்பற? எனக்கு ஆயிரம் வேலை இருக்கு" என்றார்.

"இல்லை சார். டைரக்டரைப் பாக்கணும்னாரு..."

"அப்ப டைரக்டர் கிட்ட அனுப்ப வேண்டியதுதானே! அவரோட தலைவலியையும் நான்தான் அனுபவிக்கணுமா?"

பியூன் அரவிந்தனிடம் சற்று உள்ளே தள்ளியிருந்த அறையைக் காட்டி "அந்த ரூம்தான் போ!" என்றான்.

ந்து நிமிடங்கள் கழித்து அரவிந்தன் டைரக்டரின் அறையிலிருந்து வெளியே வந்தபோது அவனுடன் டைரக்டரும் வந்தார்.

ஆஃபிஸரின் அருகில் அவர்கள் வந்தபோது செக்‌ஷன் ஆஃபீஸர் எழுந்து நின்றார்.

"மிஸ்டர் சண்முகநாதன்! இவர் அரவிந்தன். நம்ப ஆபீஸ்ல அசிஸ்டண்ட் டைரக்டரா ஜாயின் பண்ணி இருக்காரு. யூ பி எஸ் சி பரீட்சை எழுதி செலக்ட் ஆயிருக்காரு" என்றார்.

"சாரி சார்! வெல்கம் சார்!" என்றார் சண்முகநாதன்.

அரவிந்தன் சிரித்துக்கொண்டே அவருடன் கை குலுக்கினான்.

"வாங்க சார். உங்க ரூமைக் காட்டறேன்" என்றார் சண்முகநாதன்.

டைரக்டர் தன் அறைக்குச் செல்ல, சண்முகநாதன் அரவிந்தனை அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.

அரவிந்தன் சீட்டில் உட்கார்ந்ததும், சண்முகநாதன் "சாரி சார். நீங்க என்னோட மேலதிகாரி. நீங்க யார்னு தெரியாம உங்ககிட்ட தப்பாப் பேசிட்டேன்" என்றார்.

"முதல்ல உக்காருங்க" என்றான் அரவிந்தன்.

அவரிடம் சற்று நேரம் அந்த அலுவலக நடைமுறைகளைப் பற்றிக் கேட்டறிந்தான்.

அவர் எழுந்து செல்லும்போது மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கேட்டார்.

"சார்! நீங்க என்னை விட வயசுல பெரியவரு. அதிக அனுபவம் உள்ளவரு. நான் யார்னு தெரியாமத்தான் பேசினீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியும். ஆனா நம்ம ஆஃபீசுக்கு வரவங்க எல்லார்கிட்டயும் நீங்க சுமுகமாப் பேசினா, இந்த மாதிரி எப்பவுமே நடக்காதே!"

சண்முகநாதன் எதுவும் சொல்லாமல் வெளியே போனார். 'இந்தச் சின்னப்பய எனக்கு புத்தி சொல்ல வந்துட்டான்' என்று நினைத்துக் கொண்டாரோ அல்லது அவன் சொன்னதைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பாரோ தெரியாது!

அவர் வெளியே சென்றதும் பியூன் தண்டபாணி உள்ளே வந்தான்.

"வாங்க தண்டபாணி!" என்றான் அரவிந்தன்.

"சார்! நீங்க யார்னு தெரியாம..." என்று ஆரம்பித்தான்.

"விட்டுத் தள்ளுங்க" என்ற அரவிந்தன் "நம்ம ஸ்டாஃப் எல்லாரையும் ஒவ்வொத்தரா வரச் சொல்லுங்க. அவங்களை நான் அறிமுகம் செஞ்சுக்கணும்" என்றான்.

"சரி சார்!" என்று சொல்லி விட்டு வெளியே போகத் திரும்பிய தண்டபாணி, திரும்பி வந்து "சார்! இந்த ஆஃபீஸ்ல என்னை வாங்க போங்கன்னு கூப்பிட்டவரு நீங்க ஒத்தர்தான்" என்றான்.

"எல்லார்கிட்டயும் - இந்த ஆஃபீஸ்ல வேலை செய்யறவங்க, இந்த ஆஃபீசுக்கு வரவங்க எல்லார்கிட்டயும் - மரியாதையா, இனிமையா, பண்பாப் பேசிப் பாருங்க. எல்லாருமே உங்களுக்கு மரியாதை கொடுப்பாங்க" என்றான் அரவிந்தன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 10             
இனியவை கூறல்   
குறள் 97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பொருள்:  
பிறருக்குப் பயன்படக் கூடிய விதத்தில் பண்போடு பேசப்படும் வார்த்தைகள் நன்மையை விளைவித்து நன்றி உணர்வை ஏற்படுத்தும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
பொருட்பால்                                                                                                    காமத்துப்பால்


































No comments:

Post a Comment