About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, August 10, 2017

87. அனுபவம் புதுமை

ஜகந்நாதன் எப்போதுமே தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் பழக்கம் உடையவன்.

அதனால்தான் அந்தக் கோயில் வாசலில் நின்று கொண்டிருந்த அந்த நடுத்தர வயது ஆசாமியை அவன் கவனிக்க நேர்ந்தது.

ஜகந்நாதன் கோயிலிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, அந்த ஆள் கோயில் வாசலுக்குச் சில அடிகள் தள்ளி நின்று கொண்டு கோயிலிலிருந்து வெளியில் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒருவேளை அவனுடன் வந்தவர்கள் கோயிலிலிருந்து வெளியே வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறானோ என்று ஜகந்நாதன் முதலில் நினைத்தான். ஆனால் அவன் குறிப்பாகச் சிலரை உற்றுக் கவனித்ததைப் பார்த்தபோது, ஏதோ நோட்டம் பார்க்கிறான் என்று ஜகந்நாதனுக்குத் தோன்றியது.

என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று நினைத்து ஜகந்நாதன் வேறொரு பக்கமாகப் போய் நின்று கொண்டான்.

கோயிலில் அப்படி ஒன்றும் கூட்டமில்லை. ஆயினும் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் வெளியூரிலிருந்து யாத்திரிகர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். சற்று இடைவெளி விட்டாவது சிலர் கோயிலிலிருந்து வெளியே வந்து கொண்டுதான் இருந்தார்கள்.

நாலைந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் வெளியே வந்தது. அப்போது அந்த ஆள் அவர்கள் பின்னால் போனான். ஆனால் அவர்கள் அருகில் செல்லாமல் சற்றுப் பின்னாலேயே நின்றான். சில நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்து பழைய இடத்திலேயே நின்று கொண்டான்.

இது போல் இரண்டு மூன்று முறை நடந்தது.

அதன் பிறகு ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் வெளியே வந்தது. அவன் அவர்களைப் பின்தொடர்ந்து போனான். பிறகு அவர்களுக்கு முன்னால் போய் நின்று ஏதோ சொன்னான். அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர். பிறகு அவனிடம் ஏதோ கேட்க அவனும் பதில் சொல்ல அவர்களுக்கிடையே ஒரு சுருக்கமான உரையாடல் நடந்தது.

பிறகு அவர்கள் அவன் பின்னால் சென்றனர்.

அவன்  அவர்களிடம் ஏதோ சொல்லி அவர்களை ஏமாற்றி எங்கோ அழைத்துச் செல்கிறானோ என்ற சந்தேகம் ஜகந்நாதனுக்கு ஏற்பட்டது. எங்கே அழைத்துப் போகிறான் என்று பார்க்கலாம் என்று கருதி ஜகந்நாதன் அவர்கள் பின்னால் சென்றான்.

சற்றுத் தள்ளியிருந்த ஒரு ஓட்டலுக்குள் அவர்கள் நுழைந்தனர். அவர்களைப் பார்த்ததும் கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் செலுத்தி விட்டு "வாங்க" என்றார். பிறகு அவர் உள்ளே போகும்படி கைகாட்டியதும், அவர்களை அழைத்து வந்த ஆள் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றேன்.

ஜகந்நாதன் ஓட்டலுக்குள் போனான். எங்கே உட்காரலாம் என்று பார்ப்பது போல் சுற்று முற்றும் பார்த்தான். அந்த ஐந்து பேரையும் அந்த ஆள் ஃபேமிலி ரூமுக்குள் அழைத்துச் சென்று அவர்களை அங்கே உட்கார வைப்பதைப் பார்த்தான்.

ஜகந்நாதன் அந்த அறையைப் பார்த்தபடி ஒரு மேஜையில் உட்கார்ந்தான். தன்னை விசாரித்த சர்வரிடம் காப்பி கொண்டு வரச் சொல்லி விட்டு அறையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களுக்கு இலை போடப்பட்டு உணவு பரிமாறப்பட்டது.

ஜகந்நாதன் காப்பி குடித்து விட்டு வெளியே வந்தான். கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம் பில்லுக்குப் பணம் கொடுத்து விட்டு "உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா? நீங்கதானே முதலாளி? என்றான்.

"ஆமாம். இதைத்தான் கேக்க வந்தீங்களா?" என்றார் அவர் சிரித்தபடி.

"இல்லை. உங்க கடை ஆளு ஒருத்தர் கோயிலிலிருந்து ஒரு குடும்பத்தை அழைச்சுக்கிட்டு வந்து உள்ள சாப்பிட அழைச்சுட்டுப் போறதைப் பாத்தேன்."

"ஓ! அதுவா? ஓட்டல் தொழிலை இங்கிலீஷிலே ஹாஸ்பிடாலிட்டி இண்டஸ்ட்ரின்னு சொல்லுவாங்க. தமிழ்ல விருந்தோம்பல் தொழில்னு சொல்லலாம். ஆனா விருந்தோம்பல்னா, நாம யாரையாவது கூப்பிட்டு வந்து சாப்பாடு போடணும் இல்ல? அதுதான் தினமும் கோயிலுக்கு வரவங்கள்ள ஒரு குடும்பத்தை அழைச்சுக்கிட்டு வந்து அவங்களுக்கு சாப்பாடு போடறதுன்னு ஒரு வழக்கத்தை வச்சுக்கிட்டிருக்கேன்."

"ஓ  அதுதான் உங்க ஆள் கோயிலிலிருந்து வெளியில வரவங்களைப் பாத்துக்கிட்டிருந்தாரா? ஆமாம், எப்படி நீங்க ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கிறீங்க?"

"யாரை வேணா கூப்பிட்டு வந்து சாப்பாடு போடலாம் சார். ஆனா, கோயிலுக்கு வரவங்கள்ள கொஞ்சம் வசதிக் குறைவானவங்களாப் பார்த்துத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு சாப்பாடு போட்டா நாம செய்யற காரியம் இன்னும் பயனுள்ளதா இருக்கும்னு நெனைக்கிறேன். அதனால என்னோட ஆளை கோயிலிலிருந்து வெளியே வர குடும்பங்களைக் கவனிக்கச் சொல்லுவேன்.

"சில பேரு எங்க சாப்பிடலாம்கிறதைப் பத்தித் தங்களுக்குள்ள பேசிப்பாங்க. அவங்க பேசிக்கிறதிலேருந்து அவங்க வசதியானவங்களா, வசதிக் குறைவானவங்களான்னு தெரியும். வசதிக் குறைவானங்களாத் தெரிஞ்சா, எங்க ஆளு அவங்ககிட்ட போயி, கோயிலுக்குப் போயிட்டு வரவங்கள்ள ஒரு குடும்பத்துக்கு எங்க ஓட்டல்ல சாப்பாடு போடறது வழக்கம்னு சொல்லி அவங்களைக் கூப்பிடுவார். சில பேரு ஒத்துப்பாங்க. சில பேரு தயங்குவாங்க. அவங்களுக்கு விருப்பம் இல்லேன்னா வேற ஒரு குடும்பத்தைக் கேப்பாரு."

"ரொம்ப நல்ல காரியம் செய்யறீங்க சார். பாராட்டுக்கள்!" என்று சொல்லி விடைபெற்றான் ஜகந்நாதன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 87
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் 
துணைத்துணை வேள்விப் பயன்.

பொருள்:
விருந்தோம்பல் என்ற வேள்வியின் பயன் எவ்வளவு என்று கூற முடியாது. அது விருந்தினரின் தகுதியின் அளவைப் பொறுத்தது. 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

























No comments:

Post a Comment