About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, August 15, 2017

90. பெரியம்மா பெண்

ராஜுவுக்கு அவன் பிசினஸ் விஷயமாக பெங்களூர் போக வேண்டி இருந்தது. ஒரு வாடிக்கையாளரைப் பார்த்துப் பேச வேண்டும். வேலை சில மணி நேரங்கள்தான்.

மனைவியையும் அழைத்துப் போய் இரண்டு மூன்று நாட்கள் தங்கி, அவளுக்கு பெங்களூரைச் சுற்றிக் காட்டி விட்டு வரலாம் என்று நினைத்தான். அவன் மனைவி கிரிஜாவும் உற்சாகமாக ஒப்புக்கொண்டாள்.

பெங்களூரில் இருக்கும் அவன் நண்பன் கோபால் பெங்களூர் வந்து தன் வீட்டில் சில நாட்கள் தங்கி விட்டுப் போகும்படி அவனை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். அதனால் இருவரும் கோபால் வீட்டில் தங்கலாம் என்று ராஜு சொன்னபோது, கிரிஜா கொஞ்சம் தயங்கினாள்.

"நீங்க ரெண்டு பேரும் நண்பர்கள்தான். ஆனா நான் உங்க நண்பரோட மனைவியைப் பார்த்தது கூட இல்லியே! நான் எப்படி அங்கே வந்து தங்க முடியும்?" என்றாள் கிரிஜா.

"நான் கூட அவன் மனைவியைக் கல்யாணத்துல பார்த்ததுதான். எனக்கும் அவங்களைத் தெரியாது. இப்ப போய்ப் பார்த்துப் பழகிக்கப் போறோம்!" என்றான் ராஜு. 

"எனக்கென்னவோ தயக்கமா இருக்கு."

"இங்க பாரு. நாம அங்கே போய் இறங்கப் போறோம். அதுக்கப்புறம் ஊரைச் சுத்திப் பார்க்க வெளியில போகப் போறோம். அவங்க வீட்டில இருக்கப் போறது கொஞ்ச நேரம்தானே? நாம வேற எங்கேயாவது தங்கினா அவன் தப்பா நினைச்சுப்பான்."

கிரிஜா அரை மனதாகச் சம்மதித்தாள்.

பெங்களூரில் கோபால் வீட்டில் வந்து இறங்கிச் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு விட்டுக் குளித்து டிஃபன் சாப்பிட்டு விட்டு இருவரும் வெளியே கிளம்பத் தயாரானார்கள்.

"என்னங்க? நாம பெட்டியை எடுத்துட்டுப் போயிடலாம். பாக்க வேண்டிய இடங்களைப் பாத்துட்டு, அப்படியே என் பெரியம்மா பொண்ணு வீட்டுக்குப் போயிடலாம்" என்றாள்  கிரிஜா.

"ஏன், நீங்க இங்கியே தங்கலாமே? இங்க ரெண்டு மூணு நாள் இருக்கப் போறதாத்தானே ராஜு சொன்னான்? என்னடா?" என்றான் கோபால்.

ராஜு பதில் சொல்வதற்குள், கிரிஜா "ரெண்டு நாள் பெங்களூர்ல இருக்கறதாத்தான் பிளான். ஆனா சாயந்திரம் என் பெரியம்மா பொண்ணு வீட்டுக்கு வராதா சொல்லியிருக்கேன். அவளும் நானும் சின்ன வயசிலிருந்தே ரொம்ப க்ளோஸ்" என்றாள்.

"சரி. அதுக்கு ஏன் பெட்டியைத்  தூக்கிக்கிட்டுச் சுத்தணும்? சாயந்திரம் இங்கே வந்துட்டு, சாப்பிட்டுட்டு, அப்புறம் பெட்டியை எடுத்துக்கிட்டுப் போகலாமே?" என்றான் கோபால்.

"இல்லை. சாயந்திரம் இவ்வளவு தூரம் வரணும்..அவ வீடு லால் பாக் பக்கத்துலதான் இருக்கு. மொதல்ல அவ வீட்டுக்குப் போய்ப் பெட்டியை வச்சுட்டு, அப்புறம் லால் பாக் போயிட்டு, அப்புறம் வேற எடங்களுக்குப் போறோம்" என்றாள் கிரிஜா.

கோபால் ராஜூவைப் பார்க்க, அவன் பதில் சொல்லாமல் கிரிஜாவைப் பார்த்தான். "ஏங்க இதுதானே நம்ப பிளான்? நீங்க உங்க ஃபிரண்டுகிட்ட சரியா சொல்லலியா?" என்றாள் கிரிஜா.

விடை பெற்றுப் பெட்டியை எடுத்துக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.

வெளியே வந்ததும், "உன் பெரியம்மா பெண் நாக்பூர்ல இல்ல இருக்கறதாச் சொல்லியிருக்க? இப்ப அவ பெங்களூருக்கு வந்துட்டாளா என்ன? எங்கிட்ட இதுக்கு முன்னால சொல்லவே இல்லையே! கோபால் முன்னால கேக்க வேண்டாம்னு பேசாம இருந்துட்டேன்" என்றான் ராஜு.

"அவ நாக்பூர்லதான் இருக்கா!"

"பின்னே? இப்ப எங்கே போகப் போறோம்?"

"ஏதாவது நல்ல ஹோட்டல் இருந்தா பாருங்க. அங்கே தங்கிக்கலாம்."

"ஏன்? கோபால் வீட்டில எல்லாம் வசதியாத்தானே இருந்தது?அவங்களும் நம்மளை நல்லாத்தானே கவனிச்சுக்கிட்டாங்க?"

"நல்லாத்தான் கவனிச்சுக்கிட்டாங்க. இல்லைன்னு சொல்லலே. ஆனா நாம வீட்டுக்குள்ள நுழைஞ்சப்ப, உங்க ஃபிரண்டோட மனைவி முகத்தில சந்தோஷம் இல்ல. வாங்கன்னு கூப்பிட்டாங்களே தவிர, நாம அங்கே வந்து தங்கறதை அவங்க அசௌகரியமான நினைச்சாங்கன்னு தோணிச்சு."

"சே! சே! எவ்வளவு நல்ல பொண்ணு அவங்க! நமக்கு டிஃபன் எல்லாம் நல்லாப் பண்ணிக் குடுத்து உபசரிக்கல?"

"உபசரிச்சாங்க. அவங்க நல்லவங்கதான். அவங்களை நான் குறை சொல்லல. ஆனா நாம அவங்க வீட்டில வந்து தங்கறதில அவங்களுக்கு ஏதாவது அசௌகரியம் இருந்திருக்கலாம். அது அவங்களை அறியாம அவங்க முகத்தில வெளிப்பட்டிருக்கும்."

"நீ ஏதோ கற்பனை பண்ணிக்கறேன்னு நினைக்கிறேன்."

"கற்பனை இல்லீங்க. அவங்களோட அதிருப்தி அவங்க முகத்தில தெரிஞ்சது. நாம மூணு நாள் அங்கே தங்கினாலும் நம்மளை நல்லபடியாதான் கவனிச்சுப்பாங்க. ஆனா அவங்க முகத்தில அந்த அதிருப்தியைப் பாத்தப்பறம், எனக்கு அங்கே தங்கப் புடிக்கல. அதனாலதான் பெரியம்மா பொண்ணு வீட்டுக்குப் போறதாப் பொய் சொல்லிட்டு வந்துட்டேன்."

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து 
நோக்கக் குழையும்  விருந்து.

பொருள்:
அனிச்சம்பூவை முகர்ந்து பார்த்தாலே அது வாடி விடும். அதுபோல் விருந்தினர்களைச் சற்று முகமாற்றத்துடன் பார்த்தாலே அவர்கள் மனம் வருந்துவர். 

இந்தக் கதையின் காணொளியின் வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



















.





4 comments:

  1. தெரிந்த திருக்குறள்.. ஆனாலும் எளிமையாய் புரிய வைக்கும் முயற்சி அருமை. வாழ்த்துகள். நன்றிப்பா

    ReplyDelete
  2. எளிமையான, அதே நேரத்தில் மிகப் பொருத்தமான கதை. நன்றி !

    ReplyDelete