About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, August 8, 2017

86. கேட்காத கேள்விக்கு பதில்!

"ஏம்ப்பா சென்னைக்குப் போகப் போறியா?"

"ஆமாண்ணே."

"எங்கே தங்கப் போறே? செந்தில் வீட்டிலியா?"

"இல்லை. ஒரு நண்பர் வீட்ல தங்கப் போறேன். ஆனா செந்தில் வீட்டுக்குப் போவேன். ஏதாச்சும் சொல்லணுமா?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நம்ம ஊர்லேயிருந்து யார் சென்னைக்குப் போனாலும் செந்தில் வீட்டுக்குப் போய் ஒரு காப்பியாவது குடிக்காம வர மாட்டாங்களே! அதுதான் கேட்டேன்."

"ஆமாண்ணே! அதனாலதான் நானும் வேற இடத்தில தங்கினாலும், அவன் வீட்டுக்குப் போயிட்டு வராதா இருக்கேன்."

"எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. செந்தில் நம்ம ஊர்க்காரன்தான்னாலும், நிலபுலன்களை வித்துட்டு ஒரேயடியா சென்னைக்குப் போயிட்டான். அவங்க அப்பா அம்மா எல்லாம் எப்பவோ போய்ச் சேர்ந்துட்டாங்க. அவனுக்குச் சொந்தம்னு கூட இந்த ஊர்ல யாரும் இல்லை.

"அப்படி இருக்கறச்சே நம் ஊர்லேயிருந்து யார் சென்னைக்குப் போனாலும் அவன் வீட்டுலதான் தங்கணும், அப்படி வேற இடத்தில தங்கினாலும் அவன் வீட்டுக்கு வந்து ஒருவேளையாவது சாப்பிட்டுட்டுப் போகணும்னு அவன் பிடிவாதம் பிடிக்கிறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு!"

"ஆரம்பத்தில நம்ம ஊர்லேருந்து சென்னைக்குப் போனவன் அவன் ஒருத்தன்தான். அதுக்கப்பறம் இங்கேயிருந்து சென்னைக்குப் போன நம்ம ஊர்க்காரங்க ஒண்ணு ரெண்டு பேரு அவன் வீட்டில போய் இறங்கி இருக்காங்க. அதிலிருந்து நம்ம ஊர்லேயிருந்து யாரு சென்னைக்குப் போனாலும் அவனோட வீட்டுலதான் தங்கணும்னு அவன் ஒரு சட்டமே போட்டுட்டான்!"

செந்தில் சென்னையில் போய் செட்டில் ஆகி இந்தப் பத்து வருஷத்திலே நம்ம ஊர்லேருந்து இன்னும் நாலஞ்சு பேரு சென்னைக்குப் போய் செட்டில் ஆயிட்டாங்க. ஆனா நம்ம ஊர்க்காரங்க எல்லாம் இப்பவும் செந்தில் வீட்டுக்குத்தான் போறாங்க."

"நல்ல வேளையா, நம்ம ஊர்லேருந்து மாசத்துக்கு நாலஞ்சு பேருதான் சென்னைக்குப் போறாங்க. இல்லேன்னா அவனால தாக்குப் பிடிக்க முடியுமா?"

"எத்தனை பேரு போறாங்கன்னு நீங்கதான் கணக்குப் பாக்கறீங்க. செந்தில் இதையெல்லாம் பாக்கற மாதிரி தெரியலை. நான் எப்ப போனாலும், 'மறுபடி எப்ப வருவீங்க மாமா?'ன்னுதான் கேப்பான்.

"அவன் பொண்டாட்டி அதுக்கு மேல. 'ஒவ்வொரு தடவையும் நீங்க மட்டும்தானே வரீங்க? அடுத்த தடவை வரச்சே அம்மாவையும் கூட்டிக்கிட்டு வாங்க'ன்னு சொல்றா. சும்மா வாய் வார்த்தைக்குச் சொல்றதில்ல இது, மனசார சொல்றான்னு அவ சொல்றதைக் கேக்கும்போது நமக்கே தோணும்!"

"அவனுக்கேத்த மாதிரி ஒரு பொண்டாட்டி வந்து வாச்சாளே அதைச் சொல்லுங்க. எங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தா, என் சம்சாரம் உடம்பு முடியலைன்னு படுத்துடுவா!"

செந்தில் அலுவலகத்திலிருந்து வந்ததும், "ருக்கு. இன்னிக்கு ரத்தினவேல் மாமா வரதா சொல்லியிருக்காரு. சாப்பாடு தயார் பண்ணிடு" என்றான்.

"அவரு போன தடவை வந்தபோதே அவரு சுத்த சைவம்னு சொல்லி இருக்கீங்களே. அதனால சைவச் சமையல் செய்யத்தான் தயார் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"ருக்கு, ஒண்ணு கேட்டா தப்பா நெனச்சுக்க மாட்டியே"

"நீங்க என்ன கேக்கப் போறீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் கேளுங்க" என்றாள் ருக்மிணி சிரித்துக்கொண்டே.

"உனக்குத்தான் கேள்வி என்னன்னு தெரியுமே, பதில் சொல்லிடு" என்றான் செந்தில்.

"உண்மையைச் சொல்லட்டுமா? உங்க ஊர்க்காரங்க இங்கே சாப்பிட வரும்போது எனக்கு மனசுக்கு நிறைவா இருக்கு. நான் சொன்னா நீங்க நம்புவீங்களான்னு தெரியாது. ஒவ்வொரு தடவையும் யாராவது வந்துட்டுப் போகும்போது, அடுத்தாப்பல யாரும் வர மாட்டாங்களான்னுதான் எதிர்பாத்துக்கிட்டிருப்பேன்."

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்வருந்து வானத் தவர்க்கு.

பொருள்:
வந்த விருந்தினரை நன்கு உபசரித்து அடுத்த விருந்தினருக்காகக் காத்திருப்பவனை விண்ணுலகில் உள்ள தேவர்கள் சிறப்பாக வரவேற்று உபசரிப்பார்கள்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















2 comments:

  1. திருக்குறளை பசங்க மனதில் ஈசியா பதிய வச்சுடலாம். நானும் ட்ரை பண்றேன். பகிர்வுக்கு நன்றிப்பா

    ReplyDelete