About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, August 5, 2017

83. தினமும் ஒரு விருந்தினர்

நான் ஒருமுறை ஈரோட்டுக்குச் சென்றபோது, என் நண்பனின் அலுவலகத்தில்தான் முத்துசாமியைச் சந்தித்தேன்.

என் நண்பன் ஒரு வங்கியில் மேலாளராக இருந்தான். வங்கியில் அவன் அறையில் அமர்ந்து அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவனைப் பார்க்க வந்த முத்துசாமியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். அந்த வங்கியின் வாடிக்கையாளரான அவர் சிறிய அளவில் ஜவுளித் தொழில் செய்து வருவதாக அறிந்து கொண்டேன்.

நான் சென்னையில் பணி புரிவதையும், அலுவலக வேலையாக ஈரோட்டுக்கு வந்திருப்பதையும், அங்கே ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதையும் அவரிடம் சொன்னான் என் நண்பன்.

சற்று நேரம் பொதுவாகப் பேசியபின் முத்துசாமி என்னிடம் "சார், நீங்கள் இன்று மதியம் என் வீட்டுக்குச் சாப்பிட வாருங்களேன்" என்றார்.

சில நிமிடங்களுக்கு முன்பே அறிமுகமான என்னை அவர் தன் வீட்டுக்குச் சாப்பிட அழைத்தது எனக்கு வியப்பாக இருந்தது. அவர் அழைப்பை ஏற்று அவர் வீட்டுக்குச் செல்லவும் தயக்கமாக இருந்தது.

"இல்லை சார். இன்னொரு சமயம் பார்க்கலாம்" என்றேன்.

"போயிட்டு வாடா. அவரைப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும்" என்றான் நண்பன்.

"சார், உங்க மனைவிதான் ஊர்ல இல்லியே, நீங்களும் வாங்க" என்று என் நண்பனையும் அழைத்தார் முத்துசாமி.

"இல்லை சார். எனக்கு ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு. என் நண்பன் மிஸ்டர் தண்டச்சோறு வருவான்" என்று என்னை மாட்டி விட்டான் நண்பன்.

"இல்லை சார்" என்று நான் மறுக்க முயன்றேன்.

"டேய்! மிஸ்டர் முத்துசாமி பல வருஷங்களாக ஒரு பழக்கம் வச்சிருக்காரு. தினமும் யாராவது ஒத்தரை அழைத்துச் சாப்பாடு போடணும்கறதுதான் அது. என்னிக்காவது ஒருநாள் விருந்தினர் யாரும் கிடைக்காட்டா, தானும் சாப்பிடக்கூடாது என்பது அவரோட கொள்கை. ஆனா இதுவரை அப்படி நேரவில்லை. என்ன சார், சரிதானே?" என்றான் நண்பன்.

"நல்ல கொள்கைதான். எத்தனையோ ஏழைகள் இருக்காங்க. அவங்க யாருக்காவது சாப்பாடு போடலாமே! என்னை மாதிரி ஆளுங்களுக்கு எதுக்குச் சாப்பாடு போடணும்?" என்றேன் நான்.

"சார்! நான் செய்யறது அன்னதானம் இல்லை. அதுக்கு எனக்கு வசதியும் இல்லை. நான் செய்யறதெல்லாம் நான் சாப்பிடற எளிய உணவை தினமும் யாராவது ஒத்தரோட பகிர்ந்துக்கறதுதான்."

"இருக்கட்டுமே சார்! யாருக்குத் தேவையோ அவங்களுக்குச் சாப்பாடு போடலாமே? அதை விட்டுட்டு..."

"டேய் முட்டாள்! அவர் செய்யறது  அன்னதானம் இல்லை, அதிதிக்கு உணவு படைக்கிறது" என்றான் நண்பன்.

"சார்! நான் அதிகம் படிச்சவன் இல்லை. நாம சாப்பிடற சாப்பாட்டை தினமும்  யாராவது ஒத்தரோட பகிர்ந்துக்கணும்னு ஒரு வழக்கம் வச்சுக்கிட்டிருக்கேன். நீங்க சொல்ற மாதிரி ஒரு ஏழைக்குச் சாப்பாடு போடறது நல்லதுதான். ஆனா எத்தனையோ ஏழைகள்ள தினமும் ஒத்தரை நான் எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?

"ஏழைகளுக்குச் சாப்பாடு போடறதுன்னா நிறைய பேருக்குப் போடணும். ஒரு தனி மனுஷனால அதுவும் என்னை மாதிரி அதிக வசதி இல்லாதவனால இதைச் செய்ய முடியாது. ஒரு ஏழைக்கு நான் சாப்பாடு போட்டா அது நான் அவனுக்குச் செய்யற உதவி. ஆனா உங்களை மாதிரி ஒருத்தர் என் வீட்டுக்கு விருந்தாளியா வந்து சாப்பிட்டீங்கன்னா அது நீங்க எனக்குச் செய்யற உதவி" என்றார் முத்துசாமி.

"அது எப்படி?" என்றேன்.

"நீங்க ஒரு நல்ல ஓட்டல்ல போய் உங்களுக்கு விருப்பமானத்தைச் சாப்பிடலாம். ஆனா நீங்க அதை விட்டுட்டு என் வீட்டுக்கு வந்து நான் சாப்பிடற எளிய உணவைப் பகிர்ந்துக்கிட்டீங்கன்னா அது எனக்குச் செய்யற உதவிதானே!" என்றார்.

அதற்குப் பிறகு அவர் வீட்டுக்குச் சென்று உணவருந்தினேன். அவர் சொன்னபடி உணவு எளிமையாகத்தான் இருந்தது. தினமும் சாதாரணமாக அவர்கள் வீட்டுக்குச் சமைக்கும் உணவை யாராவது ஒருவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதானே அவர் கொள்கை?

"தினமும் யாராவது ஒருவரைத் தேடி அழைச்சிக்கிட்டு வரது உங்களுக்கு சிரமமாக இல்லையா?" என்றேன்.

"அது கஷ்டமான வேலைதான். ஆனால் இதுவரை தினமும் எனக்கு யாராவது கிடைச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. இன்னிக்கு பாங்க்குக்குப் போனபோது அங்கே உங்களைச் சந்திப்பேன்னு எதிர்பார்த்திருப்பேனா?" என்றார் முத்துசாமி.

"எங்களுக்கெல்லாம் எப்பவாவது விருந்தாளிகள் வந்து ரெண்டு மூணு நாள் தங்கினாலே முழி பிதுங்கி விடுகிறதே, நீங்கள் எப்படி தினமும் ஒரு விருந்தாளியைச் சமாளிக்கிறீர்கள்?" என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. ஆனால் நான் அதைக் கேட்கவில்லை!

தற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு என் நண்பனைச் சென்னையில் சந்தித்தபோது முத்துசாமியைப் பற்றி விசாரித்தேன்.

"அவர் இன்னும் தன்னோட யாகத்தைத் தொடர்ந்து பண்ணிக்கிட்டிருக்காரா?" என்றேன் பாதி விளையாட்டாகவும், பாதி சீரியஸாகவும்.

"அவர் செய்யறதை யாகம்னுதான் சொல்லணும். போன வருஷம் ஒரு பொருளாதாரப் பிரச்னையால ஜவுளித் தொழில் செய்யறவங்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுச்சு. உனக்குத் தெரிஞ்சிருக்குமே! முத்துசாமி மாதிரியான சிறிய வியாபாரிகளுக்கு பலமான அடி. நிறைய பேரு வியாபாரத்தையே நிறுத்திட்டு வேலை ஏதாவது கிடைக்குமான்னு பாக்க ஆரம்பிச்சுட்டாங்க."

"முத்துசாமி?"

"அவரு மாதிரி ஒண்ணு ரெண்டு பேருதான் இந்த அடியிலிருந்து மீண்டு எழுந்து வந்தாங்க. நடுவில சில காலம் ரொம்பக் கஷ்டப்பட்டாரு. அப்பவும் தினமும் யாருக்காவது சாப்பாடு போடணும்கிற தன்னோட கொள்கையை அவர் விடல."

"எப்படி சமாளிச்சாரு?"

"நான் கேட்டதுக்கு அவரு என்ன சொன்னாரு தெரியுமா? 'சார் எங்க வீட்டில நாலு பேரு இருக்கோம். இந்தக் கஷ்டத்திலேயும் நாங்க நாலு பேரும் ஒரு நாள் கூட சாப்பிடாம இருந்தது இல்லை. நாலு பேருக்கு பதிலா அஞ்சு பேரு இருந்தாலும் அப்படியேதானே இருந்திருப்போம்? அஞ்சாவது நபரா விருந்தாளி இருக்காரு, அவ்வளவுதானே?' அப்படின்னாரு. அதிர்ஷ்ட வசமா நிலைமை முன்னேறி இப்ப மறுபடி கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைக்கு வந்துக்கிட்டிருக்காரு."

"இன்னொருத்தருக்குச் சாப்பாடு போட்டுட்டுத்தான் தான் சாப்பிடணும்கிற உறுதி இருக்கிறவரைக்கும் எந்தப் பிரச்னையும் அவரை பாதிக்காதுன்னு நினைக்கிறேன்."

ஒரு நல்லெண்ணத்தில் நான் இப்படிச் சொன்னாலும் அப்படித்தான் நடக்கும் என்ற நம்பிக்கை என் மனதில் ஆழமாக நிலைபெற்றிருந்தது.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 9             
விருந்தோம்பல்  
குறள் 83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
பருவந்து பாழ்படுதல் இன்று.

பொருள்:
விருந்தினரை நாள்தோறும் உபசரித்து வருபவன் வாழ்க்கையில் துன்பம் வந்து அதனால் அவன் வாழ்வு சிதைந்து விடும் நிலை ஏற்படாது.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













4 comments:

  1. சவால்கள் வந்த போதும் கொண்ட கொள்கையை விடாது பின்பற்றுவது பாராட்டுக்குரியது .

    ReplyDelete
  2. இது உண்மையா நடந்ததா? எந்தக் கொள்கைனாலும் சரி, ஒன்றை அப்படியே பின்பற்றினால் அவர்கள் வாழ்வு வளம் பெறும். அந்தக் கொள்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் (நல்லதான கொள்கையா இருக்கணும்). அதைப் பின்பற்றமுடியாதபடி சிக்கல்களை இயற்கை அவ்வப்போது கொண்டுவந்து சோதிக்கும். ஆனாலும் கொண்ட கொள்கையிலிருந்து தவறக்கூடாது.

    நல்ல லிங்க் செய்து சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. இது கற்பனைக் கதைதான். நன்றி.

      Delete