About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, May 25, 2020

331. நண்பனின் வீடு

"அப்பா! ரமேஷ் அவன் கம்பெனி வேலையா ஆறு மாசம் அமெரிக்கா போயிட்டான். அவன் அப்பா அம்மா டெல்லியில இருக்காங்க. அவங்க இங்க வர மாட்டாங்க. அவன் திரும்பி வர வரை நான்தான் அவன் வீட்டைப் பாத்துக்கணும்னு சொல்லி சாவியை எங்கிட்ட கொடுத்திருக்கான்" என்றான் மூர்த்தி.

"சரி, வீட்டைப் பூட்டிட்டு சாவியை பத்திரமா வச்சுக்க. மாசம் ஒரு தடவை நம்ம வீட்டு வேலைக்காரியை அழைச்சுக்கிட்டுப் போய் வீட்டை சுத்தம் பண்ணச் சொல்லு" என்றார் சபேசன்.

"அப்பா! என் டியூஷன் வகுப்பையெல்லாம் அவன் வீட்டில வச்சுக்கலாம்னு பாக்கறேன். நம்ம வீட்டில இடம் போறல'' என்றான் மூர்த்தி.

'அதெல்லாம் வேண்டாண்டா, நமக்கு இருக்கற இடத்தில அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு நடத்தறதுதான் நல்லது" என்றார் சபேசன்.

"இல்லப்பா! உனக்கு வேணும்னா என் வீட்டைப் பயன்படுத்திக்கன்னு அவன் எங்கிட்ட சொல்லி இருக்கான்."

"ஒரு பேச்சுக்கு சொல்லி இருப்பான். நீ வகுப்பையெல்லாம் அங்க நடத்த ஆரம்பிச்சுட்டா, அப்புறம் அவன் திரும்பி வந்தப்பறம் என்ன செய்வ?"

"அப்ப பாத்துக்கலாம். ஆறு மாசம்கறது ஒரு வருஷம் ரெண்டு வருஷம்னு கூட நீண்டுகிட்டே போகும்" என்றான் மூர்த்தி.

ண்பன் வீட்டில் தன் டியூஷன் வகுப்புகளை நடத்த ஆரம்பித்த மூர்த்தி அங்கே அதிக இடம் இருந்ததால் அதிக மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தான்.

"உன் நண்பன் கிட்ட சொல்லிட்டு வாடகை ஏதாவது கொடுத்துடு" என்றார் சபேசன்.

"அதெல்லாம் வேண்டாம்னுடுவான்.'' 

''நீ டியூஷன் வகுப்பு நடத்தறேன்னு அவன் கிட்ட சொல்லி இருக்கியா இல்லையா?''

''சொன்னேன். அவன் ரெண்டு மூணு பேர்னு நினைச்சுக்கிட்டிருப்பான். 20 பேர் வராங்கன்னு அவனுக்குத் தெரியாது. எத்தனை பேர்னு அவன் கேக்கல, நானும் சொல்லல.''

மூர்த்தி எதிர்பார்த்தபடியே, ரமேஷின் அமெரிக்கப் பணிக்காலம் ஆறு மாதத்துக்கு மேலும் நீடிக்கப்படலாம் என்று தெரிந்தது..

''புதுசா ஒரு ப்ராஜக்ட் கொடுத்திருக்காங்களாம். அதனால இப்போதைக்குத் திரும்பி வர மாட்டானாம். ரெண்டு வருஷம் கூட ஆகலாம்'' என்றான் மூர்த்தி.

''வாடகைன்னு ஒரு சிறிய தொகையாவது கொடுக்கறேன்னு சொல்லிப் பாரு. அதுதான் உனக்கு நல்லது'' என்றார் சபேசன்.

''அதெல்லாம் வேண்டாம்ப்பா. அப்படி நான் சொன்னா நான் டியூஷன்ல நிறைய சம்பாதிக்கறதா நினைச்சுப்பான்'' என்றான் மூர்த்தி.

''அப்பா! ரமேஷ் ஃபோன் பண்ணினான். அடுத்த வாரம் வரானாம்!' என்றான் மூர்த்தி.

''இப்போதைக்கு வர மாட்டான்னு சொன்ன?''

'விசா எக்ஸ்டெண்ட் ஆகலியாம். அதனால திரும்பி வரானாம். அவன் வரத்துக்குள்ள டியூஷனை வேற எங்கேயாவது மாத்தணும்.''

''என்ன செய்யப் போற?'' என்றார் சபேசன்.

''இப்ப டியூஷன்ல 20 பேரு இருக்காங்க. அவங்களை நம்ம வீட்டுல வச்சு டியூஷன் நடத்த நம்ம வீட்டில இடம் போதாது. வெளியில வாடகைக்கு இடம் எடுத்து நடத்தலாம்னா இந்த வருமானத்தில அது கட்டுப்படியாகாது. நான் இதை பார்ட் டைமா செய்யறதால அதிகமா மாணவர்களை சேர்த்து நடத்தவும் முடியாது. அப்படியே செய்ய நினைச்சாலும் நிறைய மாணவர்களை சேர்க்க டைம் ஆகும். அதுவரையிலேயும் நம்ம கையிலேந்து காசு போட்டுத்தான் நடத்தணும். இப்ப இருக்கற 20 பேருக்கும் அவங்க பரீட்சை முடியறவரை வகுப்பு நடத்தியாகணும். என்ன செய்யறதுன்னே தெரியல'' என்றான் மூர்த்தி.

'உன் நண்பன் வீட்டை நிரந்தரமாப் பயன்படுத்தலாம்னு நினைச்சது உன்னோட முட்டாள்தனம். இதெல்லாம் வேண்டாம்னு நான் அப்பவே சொன்னேன்' என்று சபேசன் மனதில் நினைத்துக் கொண்டார். மனதில் தோன்றியதை வெளியே சொல்லி ஏற்கெனவே நொந்திருக்கும் மகனின் வலியை அவர் அதிகப்படுத்த விரும்பவில்லை.  

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 34    
  நிலையாமை  
குறள் 331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

பொருள்:
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்









No comments:

Post a Comment