About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, May 7, 2020

328. எட்டு வழிச் சாலை!


மக்கள் புரட்சி மையம் என்ற அமைப்பு பல வருடங்களாக இருந்து வந்தாலும், அதன் நடவடிக்கைகள் தீவிரமாகியது கடந்த ஐந்து வருடங்களாகத்தான்.

தேர்தலில் நம்பிக்கை இல்லாமல் மக்கள் புரட்சி மூலம்தான் அரசியல், சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கொள்கையுடன் சுமார் இருபது வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட மக்கள் புரட்சி மையம் ஒரு தலைமறைவு இயக்கமாக இயங்கி வந்தது.

அவ்வப்போது காவல் நிலையங்களைத் தாக்கி துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு போவது, ஏழை மக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதப்பட்ட சில அரசியல் தலைவர்களையும், அதிகாரிகளையும் சுட்டுக் கொல்வது போன்ற செயல்களில் அந்த இயக்கம் ஈடுபட்டு வந்தது.

அவ்வப்போது மக்கள் புரட்சி மையத்தின் ஆதரவாளர்கள் என்று சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டாலும், முக்கியத் தலைவர்களின் பெயர்கள் மட்டுமே தெரிந்த நிலையில், அரசு இயந்திரத்தால் அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்களைக் கைது செய்ய முடியவில்லை.  

மக்கள் ஆதரவுடன் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் தலைமறைவாக இருந்த முக்கியத் தலைவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் எப்படியோ தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டு அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

ந்து ஆண்டுகளுக்கு முன் அந்த இயக்கத்தின் தலைவராக சதீஷ் சந்திரா பொறுப்பேற்றதும், இயக்கத்தின் அணுகுமுறையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. தனி மனிதர்கள் தாக்கப்படுவது அடியோடு நிறுத்தப்பட்டது. 

நாட்டின் சில பகுதிகளில் மக்களிடையே ரகசியமாகப் பிரசாரம் செய்து மக்களைத் தேர்தல்களைப் புறக்கணிக்க வைப்பது, அரசாங்கத்தின் சில சட்டங்களுக்குக் கட்டுப்பட மறுத்து அவற்றை வெளிப்படையாக மீறும்படி மக்களைத் தூண்டுவது, விவசாய நிலங்களில் தொழிற்சாலைகள் துவங்க அனுமதி கொடுத்தால் மக்களைப் போராட்டம் செய்ய வைத்து தொழிற்சாலை வேலைகளைத் துவங்க விடாமல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு தங்கள் உத்தியை மாற்றிக் கொண்டது மக்கள் புரட்சி மையம்.

இந்தப் புதிய அணுகுமுறையால் மக்கள் புரட்சி மையத்துக்கு முன்பு இருந்த வன்முறை இயக்கம் என்ற பெயர் மாறியதுடன், மக்களிடையே நன்மதிப்பு ஏற்படவும் தொடங்கியது. 

க்கள் புரட்சி மையத்தின் முக்கிய நிர்வாகிகளின் ரகசியக் கூட்டம் நடைபெற்றது.

செயல்படுத்த வேண்டிய திட்டங்களைப் பற்றி விரிவாகப் பேசி முடித்ததும், கூட்டம் நிறைவேறும் தருவாயில், "வேறு ஏதாவது விஷயம் உண்டா?" என்றார் சதீஷ்சந்திரா. 

"இருக்கிறது தோழர் சதீஷ்!" என்றார் சோமா என்ற மூத்த உறுப்பினர். துவக்கத்திலிருந்தே இந்த இயக்கத்தில் இருந்தவர் என்ற முறையிலும், முந்தைய தலைவருக்கு நெருக்கமாக இருந்தவர் என்ற முறையிலும், அவர் சதீஷ் சந்திராவைப் பெயர் சொல்லி அழைத்துப் பேசக் கூடியவர்.  

"சொல்லுங்க தோழரே!" என்றார் சதீஷ் சந்திரா. 

"எங்க ஏரியாவில அரசாங்கம் எட்டு வழிச் சாலை போடப் போறேன்னு சொல்லி பல ஊர்ல இருக்கற விவசாய நிலங்களை அழிக்கப் பாக்குது. எல்லா எதிர்ப்பையும் மீறி டெண்டர் விட்டு கான்ட்ராக்ட் கொடுத்துட்டாங்க. கான்ட்ராக்ட் எடுத்திருக்கறவன் பெரிய ரவுடி. மந்திரிக்கு வேண்டியவன். அவனை நாம போட்டுத் தள்ளிட்டா அப்புறம் அந்த வேலைக்கு கான்ட்ராக்ட் எடுக்க யாரும் முன் வர மாட்டாங்க. நிலத்தை இழக்கப் போறமேன்னு கதறிக்கிட்டிருக்கிற விவசாயிகளுக்கு நிம்மதி கிடைக்கும்!" என்றார் சோமா.

"தோழரே! நான் இந்த இயக்கத்துக்குத் தலைமை ஏத்ததிலேந்து யாரையும் கொல்லக் கூடாதுங்கற கொள்கையைப் பின்பற்றிக்கிட்டிருக்கோம். எவ்வளவு மோசமான ஆளா இருந்தாலும் வேற வழிகள்ள போராடி அவனைத் தோக்கடிக்கணுமே தவிர, அவனைக் கொல்லக் கூடாது. வேற வழியில முயற்சி செஞ்சு அந்த நிலங்களை அரசாங்கம் எடுக்க முடியாம பண்ணுவோம்!" என்றார் சதீஷ் சந்திரா.

"இல்லை. தோழர் சதீஷ்! நீங்க அனுமதிக்காட்டாலும் நான் இதைத்தான் செய்யப் போறேன். ஏழை விவசாயிகளைக் காப்பாத்த வேற வழி எனக்குத் தெரியல!" என்றார் சோமா பிடிவாதமாக.

மற்ற தலைவர்கள் அதிர்ச்சியுடன் சதீஷ் சந்திராவைப் பார்க்க, அவர் மௌனமாக இருந்தார்.

"அப்படி செஞ்சா என்ன பண்ணுவீங்க? என்னைக் கொன்னுடுவீங்களா? ஆனா யாரையும் கொல்லக் கூடாதுங்கறது உங்க கொள்கையுமாச்சே!" என்றார் சோமா எகத்தாளமாக.

"தோழர் சோமா! நிச்சயமா உங்களை நான் கொல்ல மாட்டேன். உங்க முடிவைச் செயல்படுத்த நான் அனுமதிக்கவும் மாட்டேன். இந்தப் பிரச்னையை அமைதியான போராட்டங்கள் மூலம் நானே தீர்க்கறேன். அதுவரையில் நீங்க என் விருந்தாளியா இங்கேயே இருங்க!" என்ற சதீஷ் சந்திரா அங்கிருந்த இருவரைப் பார்த்துக் கண்ணசைக்க, அவர்கள் சோமாவைப் பிடித்து அருகில் இருந்த அறைக்குள் தள்ளிக் கதவைப் பூட்டினார்கள்.   

                                                                   அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 33     
  கொல்லாமை  
குறள் 328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

பொருள்:
கொலையால் பெரிய நன்மை கிடைக்கும் என்றாலும், சான்றோர்கள், கொல்லும் செயலை இழிவானதாகவே கருதுவார்கள்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்










No comments:

Post a Comment