About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, April 22, 2018

156. முத்துமாலை

"நந்தினி! உன் முத்துமாலை கிடைத்து விட்டது!" என்றான் மன்னன் மதிசூடன்.

"எப்படிக் கிடைத்தது?"

"நம் அரண்மனைச் சேவகன் ஒருவன்தான் திருடியிருக்கிறான். காவலர்கள் அவன் மீது சந்தேகப்பட்டு அவன் வீட்டைச் சோதனை போட்டபோது, நகை கிடைத்து விட்டது. இதோ உன் நகை" என்று அரசியிடம் மீட்கப்பட்ட முத்துமாலையைக் கொடுத்தான் அரசன்.

நகையைப் பெற்றுக்கொண்ட நந்தினி அதை உற்றுப் பார்த்தும், தொட்டுப் பார்த்தும் அது தன் நகைதான் என்று உறுதி செய்து கொண்டாள்.

"நகையைத் திருடியவனை என்ன செய்யப் போகிறீர்கள்?"

"காவலர்கள் அவனைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். நாளை அவனை நீதிபதியிடம் கொண்டு செல்வார்கள். அவர் விசாரித்து அவனுக்குத் தகுந்த தண்டனை அளிப்பார்."

"அவனை நீங்களே விசாரிக்க முடியாதா?"

"பொதுவாக இது போன்ற குற்றங்களை நீதிபதிதான் விசாரிப்பார்."

"பாண்டிய நாட்டு அரசியின் சிலம்பைத் திருடியதாகக் கைது செய்யப்பட்ட கோவலனைப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் விசாரிக்கவில்லையா?"

"நீ விரும்பினால் நானே அவனை விசாரிக்கிறேன்!" என்றான் அரசன்.

"ஒரு வேண்டுகோள். அவனுக்கு தண்டனை அளிக்கும் முன்பு என்னிடம் சொல்லி விட்டுச் செய்யுங்கள்" என்றாள் நந்தினி.

"ஏன், அவனுக்குக் கொடுக்கப்படும் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாயா?" என்று கேட்டான் அரசன்.

நந்தினி பதில் சொல்லாமல் சிரித்தாள்.

"நந்தினி! உன் விருப்பப்படி உன் முத்துமாலையைத் திருடியவனை அரச சபைக்கு அழைத்து வரச்சொல்லி நானே விசாரித்தேன். திருட்டை அவன் ஒப்புக்கொண்டு விட்டான். தண்டனையை நாளை அறிவிப்பதாகச் சொல்லியிருக்கிறேன். என்ன தண்டனை என்பதை நீதான் சொல்ல வேண்டும்!" என்றான் மதிசூடன்.

"வேறு நீதிபதி விசாரித்திருந்தால் என்ன தண்டனை கொடுத்திருப்பார்?" என்றாள் நந்தினி.

"பத்து ஆண்டுகள் சிறைவாசம் என்று விதித்திருப்பார். அரசியின் நகையைத் திருடினான் என்பதால் மரண தண்டனை வழங்கியிருந்தாலும் ஆச்சரியமில்லை!" என்றான் அரசன்.

"ஒருவேளை நீதிபதி அவனை மன்னிக்க நினைத்திருந்தால், அவரால் அவனை மன்னித்திருக்க முடியுமா?"

"நிச்சயம் முடியாது. நீதிபதிக்கு அதற்கு அதிகாரம் இல்லையே! சட்டப்படி தண்டனை வழங்க மட்டும்தான் அவருக்கு அதிகாரம் இருக்கிறது. மன்னிக்கும் அதிகாரம் மன்னனுக்கு மட்டும்தான் உண்டு."

"அதனால்தான் இந்த வழக்கை நீங்களே விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்!"

"என்ன சொல்கிறாய் ராணி? அரசியின் முத்துமாலையைத் திருடியது பெரிய குற்றம். அவனை ஏன் மன்னிக்க வேண்டும்?"

"மன்னரே! அரசரிடம் திருடினாலும், ஆண்டியிடம் திருடினாலும் திருட்டு என்பது ஒரே மாதிரியான குற்றம்தான். அவன் அரசியின் நகையைத் திருடினான் என்று நினைக்காமல், இதை அவன் செய்த முதல் குற்றம் என்று கருதி, ஏன் அவனை மன்னிக்கக் கூடாது? ஒருமுறை மன்னிக்கப்பட்டால்ர அவன் திருந்தலாம் அல்லவா?"

"நந்தினி! குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் முறை."

"குற்றம் செய்தவரை தண்டிப்பதன் மூலம் சட்டத்தை நிலைநாட்டுவது உங்கள் கடமைதான். ஆனால் யாருடைய பொருள் திருடப்பட்டதோ அவரே திருடியவனை மன்னித்து அவனுக்கு தண்டனை வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டால், அவருடையே வேண்டுகோளை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா?"

"நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறேன் தேவி! உன் கருணை உள்ளம் எனக்குப் புரிகிறது. குற்றத்தை மன்னித்த உன் செயலைக் கல்வெட்டில் பொறிக்கச் செய்கிறேன். அதன் மூலம் உன் புகழ் காலம் காலமாக நிலைத்து நிற்கும்!" என்றான் மதிசூடன்.

இல்லறவியல் 
             அதிகாரம் 16             
பொறையுடைமை      
குறள் 156
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் 
பொன்றுந் துணையும் புகழ்.

பொருள்:  
தனக்குத் தீங்கு செய்தவரை தண்டிப்பவருக்கு அன்று ஒருநாள் மட்டுமே இன்பம் (திருப்தி) கிடைக்கும். ஆனால் தனக்குத் தீங்கு செய்தவரின் குற்றத்தைப் பொறுத்து, அவரை தண்டிக்காமல் விட்டவரின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.
  பொருட்பால்                                                                                                காமத்துப்பால்



















7 comments:

  1. நண்பரே,

    தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ்US இல் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
    https://www.tamilus.com

    – தமிழ்US

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நிச்சயம் பகிர்கிறேன்.

      Delete
  2. உங்களின் கதை வாசித்தேன்.. அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Brilliant, as usual. I have started looking forward to new stories every day.

    ReplyDelete
    Replies
    1. Thanks RR. I feel inadequate in my ability to thank you for your encouraging comments.

      Delete