About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, April 4, 2018

146. எத்தனை காலம்தான்...

"அண்ணன் தன் பொண்ணோட கல்யாணத்தை வேற ஊர்ல வச்சுக்கிட்டிருந்திருக்கக் கூடாது?" என்றான் சிவமணி.

"ஏன் அப்படிச் சொல்றீங்க? கிராமத்தில அவரு பெரிய மனுஷர். பெரிய வீடு இருக்கு. ஆள், படை எல்லாம் இருக்கு. அங்க வச்சுக்காம எதுக்கு வெளியூர்ல போய் வச்சுக்கணும்?" என்றாள் அவன் மனைவி சாந்தா.

"பதினஞ்சு வருஷமா ஊர்ப் பக்கமே போவல. இப்ப நான் போனா ஊர்ல எனக்குத் தெரிஞ்சவங்கள்ளாம் இதையே ஒரு குத்தமா சொல்லிப் பேசுவாங்க."

"இது ஒரு விஷயமா? நம்ம கல்யாணத்துக்கப்பறம் எங்கப்பா போயிட்டதனால அவரோட வியாபாரத்தைப் பாத்துக்கிட்டு நீங்க இந்த ஊரிலே தங்கிட்டீங்கங்கறது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே!"

"அது சரிதான். ஆனா இந்தப் பதினஞ்சு வருஷத்தில ஒரு தடவை கூடவா ஊருக்கு வர முடியாம போயிடுச்சுன்னு எல்லோரும் கேப்பாங்களே?"

"எனக்குக் கூட அந்தக் கேள்வி உண்டு! நீங்க ஊருக்குப் போறதையே தவிர்க்கிற மாதிரியில்ல நடந்துக்கிட்டீங்க?"

"அப்படி ஒண்ணும் இல்ல. வியாபாரத்தில இறங்கினப்பறம் ஒரு நிமிஷம் கூட அங்க இங்க நகர முடியல. உனக்கே இது புரியலன்னா ஊர்க்காரங்களுக்கு எங்கே புரியப் போவுது?" என்று அலுத்துக் கொண்டான் சிவமணி.

உண்மையான காரணம் அவனுக்கு மட்டும்தானே தெரியும்!

வனுக்குத் திருமணம் நடப்பதற்கு ஒரு வருடம் முன்பு நடந்த விஷயம் அது. ஊரில் அண்ணன் பெரிய மனிதர். நிறைய நிலங்கள், பெரிய வீடு, ஊருக்குள் செல்வாக்கு எல்லாம் உண்டு.

சிவமணி வாலிப முறுக்கில் கவலையில்லாமல் நண்பர்களுடன் ஊரில் சுற்றிக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் உத்ராபதி என்பவரிடம் அண்ணன் தெரிவிக்கச் சொன்ன செய்தியைத் தெரிவிக்க உத்திராபதியின் வீட்டுக்குச் சிவமணி சென்றபோது உத்ராபதி வீட்டில் இல்லை. உத்திராபதியின் மனைவி சுசீலா மட்டும் தனியே இருந்தாள். ஏதோ ஒரு மயக்கத்தில் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு விட்டது. 

அதன் பிறகும், பலமுறை இருவரும் சந்தித்து உறவாடினர். உத்ராபதிக்கும் ஊரில் மற்றவர்களுக்கும் தெரிந்து விடுமோ என்ற பயம் இருவருக்கும் இருந்தபோதும் இருவரும் தொடர்பை முறித்துக் கொள்ளவில்லை.

விஷயம் யாருக்கோ தெரிந்து ஊரில் பரவ ஆரம்பித்து விட்டது. சிவமணியின் அண்ணனிடம் இதைச் சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை.

 ஊரில் இந்தப் பேச்சு எழுந்த விஷயம் சிவமணிக்குத் தெரிந்ததும், அவன்  சுசீலாவைப் பார்ப்பதை நிறுத்திக் கொண்டான்.

ஆயினும் எந்த நேரமும் இது அண்ணனுக்குத் தெரிந்து விடுமோ, உத்ராபதிக்குத் தெரிந்து விடுமோ என்ற பயம் அவனுக்கு இருந்து கொண்டே இருந்தது.

ஒருமுறை சிவமணி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரில் உத்ராபதி கையில் ஒரு அரிவாளுடன் வருவதைப் பார்த்ததும் சிவமணிக்குக் குலை நடுங்கி விட்டது. 

அருகில் வந்ததும் உத்ராபதி அவனைப் பார்த்துச் சிரித்து விட்டுப் போனதும்தான் சிவமணிக்கு உயிர் வந்தது. 

கிராமத்தில் கையில் அரிவாளுடன் யாராவது நடந்து செல்வது ஒரு இயல்பான விஷயம். அது கூடத் தனக்கு ஒரு கிலியை ஏற்படுத்தி விட்டதை நினைத்து ஏன் இப்படி ஒரு தவறைச் செய்தோம் என்று அவன் தன்னை நொந்து கொண்டே இருந்தான்.

ஒருநாள் உத்ராபதி தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து விட்டான். கடன் தொல்லைதான் காரணம் என்று சொன்னார்கள். 

ஆயினும் அவன் மனைவி தன்னிடம் தொடர்பு வைத்திருப்பது தெரிந்துதான் உத்ராபதி தற்கொலை செய்து கொண்டு விட்டானோ என்ற சந்தேகம் சிவமணிக்கு இருந்து கொண்டே இருந்தது.

சில மாதங்களில் சிவமணிக்கு சாந்தாவுடன் கல்யாணம் நடந்தது. கல்யாணம் நடந்த ஒரு மாதத்திலேயே சாந்தாவின் தந்தை காலமாகி விட்டதால் அவருடைய வியாபாரத்தை சிவமணியே கவனித்துக் கொள்வது என்று முடிவானது. அதன் பிறகு சிவமணி ஊருக்குத் திரும்பி வரவே இல்லை.

சாந்தா சொன்னது போல் அவன் ஊருக்குப் போவதைத் தவிர்த்துக்கொண்டுதான் வந்திருக்கிறான். இப்போது அண்ணன் பெண் கல்யாணத்துக்காக ஊருக்குப் போக வேண்டிய கட்டாயம்!

ரில் பலர் அவனை விசாரித்தார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு அவனுக்கும் சுசீலாவுக்கும் இருந்த தொடர்பு பற்றித் தெரியும் என்று தெரியவில்லை.

சிறு வயதில் தன் நெருங்கிய நண்பனாக இருந்த முத்துவிடம் தனிமையில் பேசச் சந்தர்ப்பம் கிடைத்தபோது "உத்ராபதி சம்சாரம் எப்படி இருக்காங்க?" என்று அவனிடம் கேட்டான் சிவமணி.

"புருஷன் போனப்பறம் அவங்க வீட்டை விட்டே வெளியில வரதில்ல. நிலத்தையெல்லாம் குத்தகைக்கு விட்டுட்டு வர வருமானத்தில் குடித்தனம் நடத்திக்கிட்டிருக்காங்க. ஆமாம். நீ ஏன் அவங்களைப் பத்திக் கேக்கறே?" என்றான் முத்து.

"இல்லை. ஊர்ல சில பேரு என்னையும் அவங்களையும் தொடர்பு படுத்திப் பேசிக்கிட்டிருந்தாங்க. அதான்..."

"ஆமாம். எனக்கும் அது காதுல விழுந்தது."

"இப்பவும் பேசிக்கிட்டிருக்காங்களா?"

"கிராமத்தில இந்த மாதிரிப் பேச்செல்லாம் அடங்கவே அடங்காது. தலைமுறை தலைமுறையாத் தொடர்ந்துகிட்டே இருக்கும்!"

"நீ அதை நம்பறியா?"

"ஒன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?" என்றான் முத்து.

இதற்கு என்ன பொருள் என்று சிவமணிக்கு விளங்கவில்லை.

"அதைப் பத்தி இப்ப என்ன?" என்ற முத்து பேச்சை மாற்ற விரும்பியவனாக, "உத்ராபதிக்கு ஒரு பையன் இருந்தான்ல, அவன் இப்ப பெரிய ஆளாயிட்டான். டவுன் காலேஜில் பி ஏ படிச்சு முடிச்சுட்டான். அவன் கூட ஒன்னைப் பாக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தான்" என்றான்.

"அவன் எதுக்கு என்னைப் பாக்கணும்?" என்றான் சிவமணி திடுக்கிட்டவனாக. 'ஒரு வேளை அவனுக்கு உண்மை தெரிந்து சினிமாவில் வருவது போல் என்னைப் பழி வாங்க நினைக்கிறானோ?'

"ஏதோ சின்னதா வியாபாரம் பண்ணலாம்னு பாக்கறானாம். 'வியாபார விஷயம்னா சிவமணிட்ட யோசனை கேட்டுக்க. அவனுக்குத்தான் நிறைய அனுபவம் இருக்கு'ன்னு யாரோ அவன்கிட்ட சொல்லி இருக்காங்க."

அவ்வளவுதானா? சிவமணிக்கு நின்று போன மூச்சு மீண்டும் வந்தது போல் இருந்தது.

'எப்போதோ செய்த தவறின் விளைவாக இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படிப் பழிக்கும், பாவத்துக்கும் ஆளாகி, ஏதாவது கெடுதல் நடந்து விடுமோ என்று அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கப் போகிறேன்?'

இந்தக் கேள்விக்கு அவனுக்கு விடை தெரியவில்லை.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும் 
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பொருள்:  
இன்னொருவர் மனைவியை நாடுபவனிடமிருந்து பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு துன்பங்களும் நீங்க மாட்டா.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



















No comments:

Post a Comment