About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, April 25, 2019

251. முத்துவின் ஆடுகள்

முத்து பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் முதலில் செய்வது தன் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளைச் சென்று பார்ப்பதுதான். 

பெரும்பாலும் அவை வீட்டின் பின்னே வெட்ட வெளியில் நின்று கொண்டிருக்கும், அல்லது அருகில் எங்காவது புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும்.

சிறு வயதிலிருந்தே முத்து ஆடுகளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறான். குட்டிகள், பெரிய ஆடுகள் என்று அவன் வீட்டில் ஐந்தாறு ஆடுகளுக்குக் குறையாமல் இருக்கும். சில சமயம் பெரிய ஆடுகளில் ஒன்று காணாமல் போகும். அவன் அம்மாவிடம் கேட்கும்போது அதை விற்று விட்டதாகச் சொல்லுவாள்.

"எதுக்கும்மா ஆட்டை விக்கணும்?" என்று முத்து ஒருமுறை கேட்டான்.

"நம்மளால அஞ்சாறு ஆட்டுக்கு மேல வச்சுப் பராமரிக்க முடியாது. ஆடு குட்டி போட்டா நமக்குத் புதுசா ஆடு கிடைக்குதுல்ல? அதனால பெரிய ஆடு எதையாவது அப்பப்ப வித்துடுவோம்" என்றாள் அவன் அம்மா.

முத்துவுக்கு இந்த விளக்கம் புரிந்தும் புரியாமலும் இருந்தது. ஆனால் அதைப் பற்றி மேலே கேட்க அவனுக்குத் தெரியவில்லை. பழகிய ஆடுகளில் ஒன்று வீட்டை விட்டுப் போவது வருத்தமாக இருந்தாலும், மற்ற ஆடுகளிடம், குறிப்பாகக் குட்டி ஆடுகளிடம் தன் அன்பைக் காட்டிக் கொண்டு இருந்தான்.

முத்து ஆட்டின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தபோது அவன் அம்மா வந்தாள்.

"ம்...இன்னும் ஒருநாள்தான் இந்த ஆடு உனக்கு!" என்றாள்.

"ஏம்மா, இதை விக்கப் போறமா?" என்றான் முத்து.

"விக்கப் போறதில்லடா. உன் அக்கா சமைஞ்சிருக்கால்ல? அவளுக்கு சடங்கு செஞ்சு விருந்து போட இந்த ஆட்டை வெட்டித்தான் கறிச்சோறு வைக்கணும்."

முத்து அதிர்ச்சியுடன், "என்னது? இதை வெட்டி, கறிச்சோறு செய்யப் போறியா? ஏன் கடையிலேந்து கறி வாங்கலாம் இல்ல?" என்றான்.

"அத்தனை பேருக்கு கறி சமைக்கக் கடையில வாங்கிக் கட்டுப்படி ஆகாது."

"இந்த ஆட்டை வித்துட்டு அந்தப் பணத்தில வாங்கலாமே?" என்றான் முத்து.

"இதை வித்தா கடையில இதை வெட்டி, கறியா விப்பாங்க. அதை நாம வாங்கறதுக்கு நாமளே வெட்டிக் கறி செஞ்சா செலவு கம்மியா இருக்கும்."

"நாம விக்கற ஆட்டையெல்லாம் வெட்டி, கறி ஆக்கிடுவாங்களா?"

"பின்ன எதுக்கு நம்மகிட்ட பணம் கொடுத்து ஆடு வாங்கிட்டுப் போறாங்க?"

"அவங்க வளக்கறதுக்குத்தான் நம்மகிட்டேந்து வாங்கிக்கிட்டுப் போறாங்கன்னில்ல நெனச்சேன்!"

"நாம விக்கறதெல்லாம் இனிமே குட்டி போட முடியாத வயசான ஆடு இல்லேன்னா கடா ஆடு. கறிக்குத்தான் அதையெல்லாம் வாங்கிட்டுப் போறாங்க."

"நாம சாப்பிடற கறியெல்லாம் இப்படித்தான் வருதா?"

"பின்ன? ஆட்டுக்கறி என்ன வெண்டைக்காயா செடியில காய்க்கறதுக்கு? நம்மள மாதிரி ஆளுங்க விக்கற ஆடுகளை வெட்டி அந்தக் கறியைத்தான் கடையில விக்கறாங்க. அதை வாங்கித்தான் எத்தனையோ நாள் நம்ம வீட்டில கறி சமைச்சிருக்கோம்!"

முத்து அதிர்ச்சியுடன் ஆடுகளைப் பார்த்தான். 'ஆட்டுக்கறி இப்படித்தான் வருகிறதா? இத்தனை நாள் இது ஏன் எனக்குப் புரியவில்லை? ஏதோ அம்மா கடையிலிருந்து வாங்கி வருகிறாள் என்று நினைத்தேனே தவிர, கடைக்கு அது எப்படி வருகிறது என்று யோசிக்கவில்லையே! அன்போடு வளர்க்கும் இந்த எல்லா ஆடுகளும் ஒரு நாள் நமக்கு உணவாகத்தானா?'

அவன் அக்காவின் சடங்கின்போது போடப்பட்ட கறிச்சோற்றை முத்து உண்ணவில்லை.
துறவறவியல் 
     அதிகாரம் 26      
புலால் மறுத்தல்  
குறள் 251
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

பொருள்:  
தன் உடலை வளர்ப்பதற்கு இன்னொரு உயிரின் உடலை உண்பவன் எப்படி அருள் உள்ளவனாக இருக்க முடியும்?
பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்















No comments:

Post a Comment