About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, January 17, 2019

234. இந்திரன் அளித்த விருந்து

அந்த ஊர் எல்லையில் ஓடும் ஆறு அதன் திடீர் வெள்ளப் பெருக்குக்குப் பெயர் போனது.

கடந்த காலங்களில், பின்னிரவில் ஊரே உறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஆற்றில் வெள்ளம் வந்து நிறைய பொருட்சேதத்தையும், உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த ஆறு அந்த ஊரிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த ஒரு சிறிய மலையிலிருந்து உற்பத்தி ஆகிறது. மலையில் சிறிதளவு மழை பெய்தால் கூட அத்தனை நீரும் ஆற்றில் வழிந்து ஓடி விடும். 

இதனால் அந்தப் பகுதிக்கு தண்ணீர் அதிகம் கிடைத்து வந்த நன்மை இருந்தாலும், திடீரென்று ஏற்படும் வெள்ளப் பெருக்கின் பிரச்னையும் இருந்தது.

அந்த ஊரில் மட்டும் ஆற்றின் கரை சற்றுத் தாழ்வாக இருந்ததால், இந்தப் பிரச்னை. 

அதனால் ஆற்றின் கரையில் நீண்ட மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. அதற்குப் பிறகு, திடீர் வெள்ளம் வந்த சமயங்களில், வெள்ளம் ஊருக்குள் வந்து விடாமல் மதில் சுவர் காத்து வந்தது. 

டு மேய்க்கும் பொன்னன் அன்று மாலை ஆடுகளை அவற்றின் வீடுகளுக்கு ஓட்டிச் செல்லுமுன், ஒரு ஆட்டைக் காணோம் என்பதை கவனித்தான். 

மற்ற ஆடுகளை அவற்றின் சொந்தக்காரர்கள் வீடுகளில் விட்டு விட்டு, காணாமல் போன ஆட்டைத் தேடிக் கண்டு பிடித்து, அதன் சொந்தக்காரர் வீட்டில் கொண்டு விடுவதற்குள் பொழுது சாய்ந்து இருள் கவ்வத் தொடங்கி விட்டது 

அப்போதுதான் காணாமல் போன ஆட்டைத் தேடும் பதட்டத்தில் தன் அலக்கை எங்கோ தவற விட்டு விட்டதைப் பொன்னன் கவனித்தான். 

ஒரு முனையில் ஒரு சிறிய அரிவாள் கட்டப்பட்டிருந்த அந்த நீண்ட மூங்கில் கம்பை மரங்களிலிருந்து இலைகளை அறுத்து ஆடுகளுக்குப் போட அவன் பயன்படுத்துவான். 

அலக்கை ஆற்றங்கரை ஓரத்தில்தான் எங்கேயோ விட்டிருக்க வேண்டும் என்று நினைத்து அங்கே போய்த் தேடினான் பொன்னன். இருட்டில் தேடுவது சற்றுக் கடினமாக இருந்தாலும், சிறிது நேரத் தேடலுக்குப் பின், அவன் அதைக் கண்டெடுத்து விட்டான். 

அங்கிருந்து திரும்ப யத்தனித்தபோதுதான், அந்தச் சத்தத்தை அவன் கவனித்தான். டப் டப் என்று நீர் சொட்டும் சத்தம். 

திரும்பிப் பார்த்தான். இருட்டில் எதுவும் தெரியவில்லை. சத்தத்தை வைத்து நீர் சொட்டும் இடத்துக்கு வந்தான் பொன்னன். அவன் மீது ஒரு சொட்டு விழுந்தது. அண்ணாந்து மேலே பார்த்தான். ஆற்று நீர் உள்ளே வந்து விடக் கூடாது என்பதற்காகப் போடப்பட்டிருந்த தடுப்புச் சுவரிலிருந்துதான் நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

நீர் கசிந்து வந்த இடத்தின் உயரத்தைப் பார்த்தபோது ஆற்றில் நீர்ப்பெருக்கு அதிகம் ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

நீர் சொட்டும் வேகம் திடீரென்று அதிகரித்து விட்டதாகத் தோன்றியது. பிரமையாக இருக்குமோ என்று நினைத்தான். இல்லை, பிரமை இல்லை. கொஞ்சம் வேகமாகத்தான் சொட்டுகிறது. அப்படியானால் ஓட்டை சற்றுப் பெரிதாகி இருக்கலாம்.

என்ன செய்வது என்று யோசித்தான் பொன்னன். ஊருக்குள் போய் யாரிடமாவது சொல்லி ஆட்களை அழைத்து வரலாம். ஆனால் அதற்குள் நீர்க்கசிவு அதிகமாகி சுவர் உடைந்து விட்டால்?

தானே ஏதாவது செய்து பார்க்கலாம் என்று நினைத்து, சிறிது மண்ணை எடுத்துக் கசியும் இடத்தில் வைக்க முயன்றான் அவன். அந்த இடம் அவனுக்கு எட்டவில்லை.

அருகில் ஒரு பூவரச மரம் இருந்தது. அதன் மீது ஏறி, ஒரு கிளையில் அமர்ந்து கொண்டு, கையை நீட்டி நீர் கசிந்த இடத்தில் மண்ணை அப்பினான். 

சட்டென்று நீர்க்கசிவு நின்று விட்டது!

பொன்னனுக்கு நிம்மதியாக இருந்தது. நல்ல வேளை! கசிவு கொஞ்சம் நின்றிருக்கிறது. மறுபடி கசிவு அதிகமாவதற்குள், ஊருக்குள் போய் யாரையாவது அழைத்து வரலாம் என்று நினைத்துக் கீழே இறங்கினான்.

ஆனால் அவன் கீழே இறங்கியதுமே மீண்டும் நீர் கசிய ஆரம்பித்து விட்டது. 

சற்று நேரம் யோசித்த பிறகு அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

ஊருக்குப் போய் யாரையும் அழைத்து வருவதற்குள் நீர்க்கசிவு அதிகமாகி சுவர் விரிசல் கண்டு தண்ணீர் ஊருக்குள் வந்து விடலாம். 

நிறைய மண்ணை எடுத்துப் போய் மரத்தில் அமர்ந்தபடி கொஞ்சம் கொஞ்சமாக மண்ணை அப்பி, கசிவைக் குறைக்க வேண்டியதுதான். இடையில் யாராவது இந்தப் பக்கம் வந்தால் தகவல் சொல்லி அனுப்பலாம் என்று நினைத்துக் கொண்டான் அவன்.

பொன்னன் ஒரு அநாதை. ஒரு இடிந்த வீட்டின் வாசல் திண்ணையில்தான் அவன் குடியிருப்பு.  

வன் ஆடு மேய்க்கும் வீடுகளில், முறை வைத்துக்கொண்டு அவனுக்குக் காலையில பழைய சோறு, கையில் கட்டுச்சோறு, இரவு சாப்பாடு என்று போட்டு விடுவார்கள். 

இரவு அவன் சாப்பிட வராததை அந்த வீட்டுக்காரர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சினிமாவுக்கோ, அல்லது வேறு எங்கேயோ போயிருப்பான் என்று நினைத்துக் கொள்வார்கள். அதனால் யாரும் அவனைத் தேடி வரப் போவதில்லை.

தன் மேல்துண்டில் நிறைய மண்ணை எடுத்து மூட்டையாகக் கட்டிக் கொண்டு மரக்கிளையில் போய் உட்கார்ந்தான் பொன்னன். 

சிறிது மண்ணை அப்பியதும் கசிவு நின்றது. ஒரு சில நிமிடங்களில் மீண்டும் கசிய ஆரம்பித்தது. மீண்டும் மண்ணை அப்பினான். இதுபோல் சிலமுறை செய்ததும், மண் தீர்ந்து விட்டது.

மீண்டும் கீழே இறங்கி துண்டில் மண்ணை நிரப்பிக் கட்டி எடுத்து வந்தான் பொன்னன். எவ்வளவு நேரம் ஆயிற்று என்று தெரியவில்லை.ஒரு மணி நேரம் ஆகியிருக்கலாம் என்று தோன்றியது. 

இது போல் ஐந்தாறு முறை கீழே இறங்கிப் போய் மண் எடுத்து வந்து விட்டான். மணி என்ன இருக்கும் என்று தெரியவில்லை. சாப்பிடாததாலும், தொடர்ந்து மரத்தில் ஏறி இறங்கி, மண்ணை எடுத்து வந்து அப்பிக் கொண்டிருந்ததாலும் உடல் சோர்வடைந்திருந்தது. 

மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது உடலில் வலி ஏற்படுத்தியதுடன், கிளை உடைந்து விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது. தூக்கம் வேறு கண்ணைச் சுழற்றியது.

திகாலை ஊர்க்காரர் ஒருவர் அங்கே வந்து பார்த்தபோது பொன்னன் மயங்கிய நிலையில் கீழே கிடந்ததையும், தடுப்புச் சுவரிலிருந்து சிறிய அளவில் நீர் ஒழுகி  பொன்னன் மீது பட்டுக் கொண்டே கீழே கோடு போல் ஓடிக் கொண்டிருப்பதையும் பார்த்தார்.

அவர் உடனே ஓடிப் போய் ஊரிலிருந்து ஆட்களை அழைத்து வந்தார். சூழ்நிலையைப் பார்த்ததும், நடந்ததை அனைவரும் புரிந்து கொண்டனர். 

"ராத்திரி பூரா ஒத்தை ஆளா தானே கசிவை நிறுத்தப் பாத்திருக்கான். கீழேயிருந்து மண்ணை எடுத்துக்கிட்டுப் போய், மரக்கிளையில உக்காந்துக்கிட்டு ஓட்டையை அடைக்கப் பாத்திருக்கான். கடைசியில களைப்பில் மயங்கி விழுந்துட்டான். ஊருக்குள்ள வந்து யாரையாவது கூப்பிட்டுக்கிட்டுப் போறதுக்குள்ளே சுவர் உடைஞ்சுடுமோன்னு நினைச்சுத் தனி ஆளாப் போராடி இருக்கான். இவனுக்கு நம்ம ஊர்ல கோவில் கட்டணும்யா!" என்றார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

இதற்குள் பொன்னனின் நாடியைப் பார்த்த நாட்டு வைத்தியர் தலையைப் பக்கவாட்டில் ஆட்டினார்.

"இன்றைக்கு நம் சிறப்பு விருந்துக்கு நாம் அழைத்திருந்தவர்களில் ஒரு சிலர் மட்டும்தானே வந்திருக்கிறார்கள்? மற்றவர்கள் எங்கே?" என்றான் இந்திரன்.

"மண்ணுலகிலிருந்து இன்று ஒரு புதிய பையன் வந்திருக்கிறானாம். அவனைப் பார்க்க எல்லோரும் போய் விட்டார்கள்."

"பையனா? அல்ப ஆயுசா? அது சரி. அவனைப் பார்க்க ஏன் எல்லோரும் போயிருக்கிறார்கள்?"

"அவன் வெள்ளத்திலிருந்து தன் ஊரைக் காப்பாற்ற தன் உயிரையே பணயமாக வைத்துச் செயல்பட்டிருக்கிறானாம்."

"இந்திரலோகத்து விருந்தை விடவா அது முக்கியம்?" என்றான் இந்திரன் திகைப்புடன். 

"அப்படி நினைத்துத்தானே எல்லோரும் அங்கே போயிருக்கிறார்கள்?"

"அப்படியானால் ஒன்று செய்யுங்கள். அந்தப் பையனை நம் விருந்துக்கு அழைத்து வாருங்கள். அவனே இன்று நமது முக்கிய விருந்தினராக இருக்கட்டும்" என்றான் இந்திரன்.   

இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

பொருள்:  
இவ்வுலகம் இருக்கும் வரை நீடித்து நிற்கக் கூடிய புகழை அளிக்கும் செயல்களைச் செய்பவர்களைத்தான் வானுலகம் போற்றுமே தவிர, அங்குள்ள தேவர்களைப் போற்றாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்





















No comments:

Post a Comment