About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, January 5, 2019

233. சிகாமணி வீடு

"ஒவ்வொத்தரும் தங்களுக்கு முந்தைய ஏழு பரம்பரைகளைத் தெரிஞ்சுக்கணும்."

ஒரு தொலைக்காட்சி சொற்பொழிவில் கேட்ட இந்த வாசகம் சுகுமாரின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

சுகுமார் சிறிய வயதிலேயே தன் தந்தையை இழந்தவன். அவனுக்கு அவன் தந்தையின் பெயரும், தாத்தாவின் பெயரும் தெரியும். ஆனால் அவர்களைப் பற்றி அதிக விவரங்கள் தெரியாது. தாத்தாவுக்கு முந்தையவர்களின் பெயர் கூடத் தெரியாது.

தன் முந்தைய ஏழு தலைமுறையினர் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது?

அவன் அம்மாவிடம் போய்க் கேட்டான். "உங்கப்பாவைப் பத்தி எனக்குத் தெரிஞ்சதையெல்லாம் உனக்கு அப்பப்ப சொல்லியிருக்கேன். அவரைப் பத்தி சொல்றதுக்கு அதிகமா இல்ல. நல்ல மனுஷன். வாழ்க்கையில சுகமே இல்ல அவருக்கு. நல்ல வேலை கூடக் கிடைக்காம கஷ்டப்பட்டாரு. சீக்கிரமே போய்ச் சேர்ந்துட்டாரு" என்றாள் அவன் தாய் கனகம்.

"சரி. தாத்தா பத்தி?"

"உன் தாத்தா இருந்தது ஒரு ஊர்ல. நானும் உங்கப்பாவும் இருந்தது வேற ஊர்ல. அதனால உங்க தாத்தாவைப் பத்தி எனக்கு அதிகம் தெரியாதே!" என்றாள் கனகம்.

"யார் கிட்ட கேட்டாத் தெரியும்?"

"உன் பெரியப்பாதான் உன் தாத்தாவோட ஒரே வீட்டில இருந்தார். உன் பெரியப்பா பையன் ராமுவைக் கேளு. அவனுக்குத் தெரிஞ்சிருக்கலாம்."

சுகுமார் ராமுவிடம் சென்று கேட்டபோது, தன் தாத்தாவுக்கு ஊரில் கொஞ்சம் சொத்து இருந்ததால், அவர் ஓரளவு வசதியாக வாழ்ந்ததாகவும் மற்றபடி அவரைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை என்றும் ராமு சொன்னான்.

அவன் தாத்தாவின் அப்பா, தாத்தா பெயர்கள் மட்டும் கிடைத்தன. ஆனால் அவர்களைப் பற்றிய விவரம் எதுவும் கிடைக்கவில்லை. தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விசாரித்தால் விவரம் கிடைக்கலாம் என்று ராமு சொன்னதைக் கேட்டு, தன் சொந்த ஊருக்குச் சென்றான் சுகுமார்.

"இந்த கிராமத்தில கண்ணாயிரம்னு ஒரு பெரியவர் இருக்காரு. அவருக்கு இந்த ஊர்ல இருக்கறவங்க எல்லார் குடும்பத்தைப் பத்தியும் தெரியும்" என்று சுகுமாரிடம் அந்த ஊர்க்காரர்கள் சிலர் சொன்னார்கள்.

சுகுமார் கண்ணாயிரத்தைப் போய்ப் பார்த்தான். அவன் தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறியதும், "ஓ! சேதுபதி மகனா நீ?" என்றார் கண்ணாயிரம்.

"ஆமாம் தாத்தா!"

"சேதுபதிக்கு சீதாராமன்னு ஒரு அண்ணன் இருந்தானே?"

"ஆமாம் தாத்தா. எங்க பெரியப்பா பேரு சீதாராமன்தான்."

"ஓ! அப்ப, நீ சிகாமணி பரம்பரை!"

"சிகாமணிங்கறது யாரு?  எங்க பரம்பரையை ஆரம்பிச்சு வைச்சவர் அவர்தானா?" என்றான் சுகுமார்.

கண்ணாயிரம் வயிறு குலுங்கச் சிரித்து விட்டு, "நாமெல்லாம் என்ன மொகலாயர் பரம்பரையா,ஆரம்பிச்சு வச்சவர்னு பாபர் மாதிரி ஒத்தரைச் சொல்றதுக்கு? பரம்பரைக்கு ஆரம்பம் எது? கடவுள் மாதிரி பரம்பரையும் ஆதி அந்தம் இல்லாததுதான்!" என்றார்.

"சிகாமணின்னு சொன்னீங்களே!"

"ஆமாம்.கொஞ்சம் இரு. உங்கப்பா சேதுபதி. அவர் அப்பா பேரு ...எனக்கு ஞாபகம் வல்ல. அப்ப நான் பொறந்திருக்கவே மாட்டேன். நான் சொல்ற பழைய விஷயம்லாம் நான் கேட்டதை நினைவில் வச்சுக்கிட்டு சொல்றதுதான்" என்றார் கண்ணாயிரம்.

"இல்ல தாத்தா. எங்க பரம்பரையில் அஞ்சு பேரு எனக்குத் தெரியும். அதில சிகாமணிங்கற பேரு இல்ல."

"அப்ப, அவரு அஞ்சு தலைமுறைக்கும் முந்தினவரா இருக்கணும்."

"உங்களுக்குத் தெரியாதா?" என்றான் சுகுமார் ஏமாற்றத்துடன்.

"ஏம்ப்பா, உங்க பரம்பரையில வந்தவங்க பேரு உங்க குடும்பத்தில இருக்கறவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். எனக்கு எப்படித் தெரிஞ்சிருக்கும்? அப்படியே தெரிய வந்திருந்தாலும், நான் எதுக்கு அதையெல்லாம் ஞாபகம் வச்சுக்கப் போறேன்?"

"அப்ப சிகாமணின்னு சொன்னீங்களே!"

"ஆமாம். அவர் உன் முன்னோர்கள்ள ஒத்தர்னு தெரியும். உனக்கு முன்னாலே எத்தனையாவது பரம்பரையில் வந்தவர்னு எனக்குத் தெரியாது."

"பின்ன அவர் பேரு மட்டும் உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"ஆ! அப்படிக் கேளு. அவரு நிறையப் படிச்சவரு. படிப்புன்னா ஸ்கூல் காலேஜுக்குப் போய்ப் படிச்சவர் இல்ல. நிறைய இலக்கியங்கள் எல்லாம் படிச்சவரு. அவர்கிட்ட இலக்கியங்கள் பத்திப் பேசவும், விளக்கம் கேட்கவும் எந்தெந்த ஊர்லேந்தெல்லாமோ அறிஞர்கள் வருவாங்களாம். இவரையும் வண்டி அனுப்பி அவங்க ஊருக்கு கூட்டிக்கிட்டுப் போய் அங்கே இவரைப் பேசச் சொல்லிக் கேட்பாங்களாம்.  

"பக்கத்தில இருந்த சமஸ்தான மன்னர்கள் சில பேர் கூட அவரைத் தங்கள் சபைக்கு வரவழைச்சு அவருக்கு மரியாதை பண்ணியிருக்காங்க. அதனால உங்க பரம்பரை வீட்டுக்கே சிகாமணி வீடுன்னுதான் பேரு. உங்க தாத்தா உங்க பரம்பரை வீட்டை வித்துட்டாரு. இப்ப அது வேற ஒருத்தர் வீடு. ஆனா இப்பவும் அதை சிகாமணி வீடுன்னுதான் இந்த ஊர்ல பல பேர் சொல்லுவாங்கன்னா பாத்துக்கயேன்."

"அவரைப் பத்தி வேற விவரம் எதுவும் தெரியாதா?"

"அவர் அப்பா யாரு, அவர் யாரோட அப்பா இதையெல்லாம் கேக்கறியா? தெரியாது."

தன் பரம்பரையில் ஏழு பேரின் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், ஒரு புகழ் பெற்ற மனிதரின் பரம்பரையில் தான் வந்திருக்கிறோம் என்ற பெருமையுடன் கண்ணாயிரத்திடமிருந்து விடைபெற்றான் சுகுமார்.

இல்லறவியல் 
     அதிகாரம் 24      
புகழ்  
குறள் 233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.

பொருள்:  
இவ்வுலகில் ஒப்பற்றதாகவும், உயர்ந்ததாகவும் அழிவில்லாமல் நிலைத்து நிற்பது புகழைத் தவிர வேறு எதுவும் இல்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                     காமத்துப்பால்


























No comments:

Post a Comment